நேசம் கொண்ட நெஞ்சமிது 15 – 2

“அப்படி என்றால் மாதவி அக்காவுக்கும் காதல் திருமணம் தானா..” என்றாள் மகிழ்ச்சி பொங்க.

“உன்னிடம் ஒரு விடயம் பேசவேண்டும் என்றேனே வது….”

“சொல்லுங்கள் அத்தான். என்ன பேசவேண்டும்?” என்றாள் சிரித்த முகமாய்..

வதனிக்கு இளாவை கண்டதிலேயே அவளின் மனதில் இருந்த அத்தனை அழுத்தங்களும் அழிந்திருந்தது. அதனால் உற்சாகமாகவே கேட்டாள்.

இளவழகனோ ஒருவித யோசனையிலேயே இருந்தான்.

“அத்தான் சொல்லுங்கள். என்ன சொல்ல வேண்டும்?” அவனின் யோசனை நிறைந்த முகத்தை பார்த்து மென்மையாக கேட்டாள் அவள்.

“எவ்வளவு முடியுமோ அவ்வளவு விரைவாக நம் திருமணம் நடந்தாக வேண்டும்…” என்றான் தன் விழிகளை அவள் முகத்திலேயே இருத்தி.

வதனிக்கு ஒன்றுமே விளங்கவில்லை.

‘ஒருவேளை எதையும் மாற்றிச் சொல்கிறானோ…’

“என்ன சொல்கிறீர்கள் அத்தான். யாருடைய திருமணம் விரைவாக நடக்கவேண்டும் என்கிறீர்கள்?”

தன் கூர் பார்வையை விலக்காது, “நம்முடைய திருமணம் தான்!” என்றான் இளா மறுபடியும்.

திகைப்பாக இருந்தது அவளுக்கு. என்ன சொல்கிறான் இவன்… திருமணம் செய்யும் வயதா நமக்கு… அவனின் கடமைகள் என்ன ஆனது? என் படிப்பு என்ன ஆவது? என்று ஓடிய மனதின் எண்ணங்களை அடக்கி,

“நடந்ததை சொல்லுங்கள் முதலில். மேலே என்ன செய்வது என்பதை யோசிப்போம்” என்று அப்போதும் தன்மையாகவே கேட்டாள்.

அவனின் வீட்டில் ஏதோ நடந்திருக்கிறது என்பதை வதனி புரிந்துகொண்டாள். ஆனால் என்ன நடந்தது என்பதைத்தான் அவளால் புரிந்துகொள்ள முடியவில்லை.

“அதுதான் சொன்னேனே வது. நான் லண்டன் சென்றதும் எனக்கும் ராதிகாவுக்கும் திருமணத்தை நடத்த அம்மாவும் மாமாவும் திட்டம் போடுவதாய் என் உள் மனம் சொல்கிறது. அதைத் தடுக்க வேண்டுமென்றால் நம் பதிவுத் திருமணம் நடக்கவேண்டும். பிறகு அவர்களால் எதுவுமே செய்யமுடியாது.” என்றான் இளவழகன்.

“நான் இல்லாதபோது உன் வீட்டார்கள் உனக்குத் திருமணம் செய்ய நினைத்தாலும் முடியாது. என் வீட்டினருக்கும் எனக்குத் திருமணம் செய்ய முடியாது.” என்று இரவிரவாக தான் யோசித்ததைச் சொன்னான் அவன்.

இவன் யோசித்துதான் பேசுகிறானா என்று நினைத்தாள் வதனி.

ஆனாலும் அவனுக்கு புரியவைக்கும் முகமாக, “அத்தான். முதலில் உங்கள் தங்கையின் திருமணத்தை முடியுங்கள். நமக்கு திருமணம் முடிக்கும் வயதும் இல்லை இப்போது அது தேவையும் இல்லை.” என்றாள் கனிவோடு.

“மாதவி அக்காவின் திருமணத்தை முடித்துவிட்டு நீங்கள் லண்டன் சென்று வாருங்கள். நான் காத்திருப்பேன்.” என்றாள் குரல் அடைக்க.

அவளால் அவனின் பிரிவை நினைக்கவே முடியவில்லை. அவனைப் பாராத இந்த மூன்று நாட்களும் அவள் பட்ட பாடே பெரும்பாடு. இதில் வருடக்கணக்காய் அவனை பிரிவது என்பது…..

“இல்லை வது. உனக்கு புரியவில்லை. நான் பதிவுத் திருமணம் மட்டும்தான் செய்ய போகிறோம் என்கிறேன். நீ உன் வீட்டில் இரு நான் லண்டன் செல்கிறேன். நான் திரும்பி வந்ததும் நம் திருமணம் நடக்கும். நான் திரும்பி வருவதற்குள் நம்மை யாரும் பிரிக்காது இருக்கவே இந்த திருமணம்.” என்றான் மீண்டும் அவன் தன் முடிவில் மாறாது.

வதனிக்கு கோபம் கூட வந்துவிடுமோ என்றிருந்தது.

அதைக் காட்டாது, “நாம் பிரியக்கூடாது என்பதற்கு திருமணம் தான் செய்ய வேண்டுமா அத்தான். அப்படி ஏதாவது பிரச்சினை வந்தாலும் நான் என் வீட்டில் சொல்வேன் உங்களை விரும்புவதாக. அப்பா நிச்சயம் என்னுடைய விருப்பத்தை தட்ட மாட்டார்…” என்றவளை பேசிமுடிக்க விடாது,

“அப்படி என்றால் என் வீட்டில் என் விருப்பத்தை மதிக்க மாட்டார்கள் என்கிறாயா?” என்றான் இளா கோபமாக.

“நான் எப்போது அப்படி சொன்னேன்…”

“நீ சொல்வதற்கு அப்படியும் ஒரு அர்த்தம் உண்டு….”

“முதலில் என்னைச் சொல்லி முடிக்க விடுங்கள் அத்தான்.”

“நான் சொல்வதை நீ கேள் வது! நம் இருவரினதும் நல்லதுக்குத்தான் சொல்கிறேன்.” என்றான் மிக உறுதியான குரலில்.

“நம் பெற்றவர்கள் அதற்கு சம்மதிக்க வேண்டுமே அத்தான். அதை முதலில் யோசித்தீர்களா? திருமணம் செய்யும் வயதா நமக்கு. அதுவும் எனக்கு?” அவனுக்கு புரியவேண்டுமே என்கிற கவலையோடு சொன்னாள்.

“என்ன சொல்கிறாய் நீ? நம் பெற்றவர்கள் இதற்கு சம்மதிப்பார்களா? யோசியாமல் பேசாதே. அவர்களுக்கு தெரியாமல்தான் நம் திருமணம் நடக்கவேண்டும்.” என்றான் அப்போதும் உறுதியுடனே.

வதனிக்கோ அதிர்ச்சியிலும் அதிர்ச்சி!

அவளுடைய அத்தானா இது? பொறுப்பு மிக்கவன் என்று தான் பெருமை கொள்ளும் தன்னவனா இப்படிச் சொல்வது? பெற்றவர்களுக்குத் தெரியாமல் காதலிக்கிறேன் என்பதே அவளை தினம்தினம் வருத்துகிறது. இதில் திருமணமுமா?

இப்படி மனதில் ஆயிரம் எண்ணங்கள் ஓடியபோதும் அவனின் கண்களோடு தன் கண்களை உறுதியாக உறவாட விட்டு பார்வையை தளர்த்தாது, “நிச்சயமாக இந்த பதிவுத் திருமணத்திற்கு என்னால் சம்மதம் சொல்ல முடியாது அத்தான்.” என்றாள் உறுதியான குரலில்.

இப்போது அதிர்ந்து போனது இளா. அவனின் வதுவா திருமணத்திற்கு மறுப்பது? எப்போது என்றாலும் நம் திருமணம் நடக்கத்தானே போகிறது. அதன் பதிவு முதலே நடப்பதில் என்ன பிழை கண்டாள்?

தன் சொல்லை அவள் மீறுகிறாள் என்பதையே ஜீரணிக்க முடியாது நின்றவனின் புத்தியை ஆத்திரம் வெகு வேகமாக ஆக்கிரமித்தது!

“அப்படியென்றால் பொழுது போக்கிற்காகவா என்னுடன் பழகினாய்?” அம்பென பாய்ந்து வந்தது அவனின் கேள்வி வதனியை நோக்கி!

error: Alert: Content selection is disabled!!
Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.

Powered By
Best Wordpress Adblock Detecting Plugin | CHP Adblock