நேசம் கொண்ட நெஞ்சமிது 18 – 2

சற்றே அதிகப்படிதான்! ஆனாலும் அப்படித்தான் உணர்ந்தாள்.

அவளே ஏற்றுக்கொண்ட தண்டனைதான். ஆமாம்! தண்டனைதான்!

ஆனால், அவனுக்கு நான் மனைவியா….. இந்த இரண்டு நாட்களில் ஏதாவது நடந்து இயற்கையாய் என் மரணம் அமைந்துவிடாதா என்று துடித்தாள் வதனி.

நாட்கள் மின்னல் வேகத்தில் நகர்ந்தது. புதனும் விடிந்தது. அவளின் அறைக்கு அழகிய சேலை முதல் நகைகள் வரை வந்து குவிந்தது. சிறைக்குள் இருக்கும் கைதிக்கு கம்பிகளின் கீழாக தள்ளப்படும் உணவைப்போல வேண்டா வெறுப்பாக அவளுக்கு தேவையானவைகள் வந்தன.

அசையாது அதிர்ச்சியுடன் இருந்தவளை எட்டிப் பார்த்த கலைமகளுக்கு கண்கள் கரித்தது. ஆனாலும், “எழுந்திரு வதனி. தலைக்கு குளித்துவிட்டு வா…..” கரகரத்த அவரின் குரலில் வெறுமை, வேதனை, பாசம் எல்லாமே கலந்துகிடந்தது.

துக்கம் தொண்டையை அடைத்தாலும், எதுவும் பேசாது குளிக்க சென்றாள்.

குளித்து வந்தவளுக்கு சேலையை அணிவித்து நகைகளை அணிந்து தலையினை வாரிவிட்டு பார்த்தவருக்கு கண்கள் கலங்கியது. கட்டுபடுத்த நினைத்தும் முடியாது மகளின் முகத்தை வாரி அணைத்து நெற்றியில் அழுந்த முத்தமிட்டு, “என்றும் நீ நன்றாக சந்தோசமாக இருக்கவேண்டும் கண்ணா…..” என்றார் அந்த அன்புத்தாயார்.

அவரின் அன்பில் உடைந்தவள் அவரைக் கட்டி அணைத்தபடி கதறி அழுதாள். அவர் விழிகளிலும் கண்ணீர்.

“நல்லது நடக்கபோகும் நேரத்தில் எதற்கு அழுகிறாய் வனிம்மா. அழாதே….! சந்தோசமாக இரு. நல்லதே நடக்கும்.” என்றவருக்கு அந்த நம்பிக்கை கேள்விக்குறியாய் இருந்தது. ஆனாலும் மகளை ஆறுதல் படுத்தினார்.

வதனியை அழைத்துக்கொண்டு வெளியே வந்தார் கலைமகள். மகளின் அழகில் மலர்ந்த சங்கரனின் மனமோ, ‘ஆண்டவா! என் குழந்தையை என்றும் சந்தோசமாக வைத்திரு…” என்று வேண்டிக்கொண்டது.

மூவரும் தேவையான பொருட்களுடன் திருமண பதிவாளர் அலுவலகத்துக்கு சென்றனர். அங்கே இளவழகனின் மொத்த குடும்பமே நின்றது. ஆனாலும் மருந்துக்கும் யாரின் முகத்திலும் சிரிப்பில்லை.

அவர்கள் அருகில் சென்றது சங்கரன் குடும்பம். எதுவும் பேசாது இளவழகனை சங்கரன் கேள்வியாகப் பார்க்கவும், “உங்களுக்காகத்தான் காத்திருக்கிறோம். இப்போதே பதிந்துவிடலாம் வாருங்கள்.” என்றார் கதிரவன் பதிலாக.

வேறு யாரும் எதுவும் பேசிக்கொள்ளவில்லை. சம்மதமா என்று யாரும் யாரையும் கேட்கவில்லை. உள்ளே நுழைந்தவர்கள் அலுவலரின் கேள்விகளுக்கு பதில்களையும் தேவையான ஆவணங்களையும் சமர்ப்பித்தனர்.

கையொப்பமிடும் நேரமும் வந்தது. இருமனங்களின் இணைவில், அவை இணைந்ததை சட்ட ரீதியாகக் காட்டுவதே பதிவுத்திருமணம். இங்கோ இணைந்த மனங்கள் இரு கூறாகப் பிரிந்துகிடக்க சுற்றி இருந்தவர்களின் மனமோ அதிருப்தியை காட்ட நடக்கவேண்டும் என்கிற கட்டாயத்தில் நடந்தது அந்த பதிவுத்திருமணம்.

வதனி கையொப்பம் இடும்போது அவளின் கைகள் நடுங்கியது. படங்களில் வருமே.. கடைசி நேரத்தில் ஏதாவது நடந்து நடக்கவிருக்கும் திருமணம் நிற்குமே.. அப்படி ஏதாவது நடந்துவிடாதா என்று ஏங்கினாள். அதிலும் ஏமாற்றமே மிஞ்சியது.

இதிலும் ஏமாந்து போனேனே என்று நினைத்தவளின் கண்கள் கண்ணீரை கொட்டியது. கைக்குட்டையால் கண்களை துடைத்துவிட்டு தன் தலைவிதியினை நொந்தபடி கையெழுத்தினை இட்டாள்.

அவள் கையெழுத்தை இடும்வரை மூச்சை விடாது தவித்திருந்த இளா அதனை சந்தோஷ பெருமூச்சாய் வெளியேற்றி ஆவலுடன் அவளின் முகத்தைப் பார்த்தான். அவனின் வது அவனுக்கே சொந்தமாகிவிட்டாளே!

ஆனால், வதனி அவனை மறந்தும் திரும்பி பார்க்கவில்லை. கண்கள் மட்டும் கலங்கிச்சிவந்து, இந்தா விழுகிறேன் என்று சொல்லும் கண்ணீரை விழ விடாது தாங்கி இருந்தது.

அதைப் பார்த்தவனின் முகமும் இறுகியது. ஏன் இந்தக் கலக்கம்…. என்னைப் பிடிக்கவில்லையாமா? பிடித்துதானே பழகினாள். பிறகு எதற்கு அழுகை?

தயாராக வைத்திருந்த மாலைகளை எடுத்த கதிரவன், “மாற்றிக்கொள்ளுங்கள்..” என்றபடி இளாவிடம் நீட்டினார்.

“வேண்டாம்…! தேவை இல்லை!” என்று கைநீட்டித்த தடுத்தாள் வதனி.

“திருமணம் தான் முடிந்தாயிற்றே. பிறகு எதற்கு மாலை மாற்றல் எல்லாம்? நான் படிக்கவேண்டும்! அதனால் என் வீட்டுலேயே இருந்துகொள்கிறேன்.” என்று அழுத்தமாக சொன்னவள் தந்தையின் புறம் திரும்பி, “போவோமா…” என்று கேட்டாள்.

மாலைகளை வாங்கக் கை நீட்டிய இளவழகனுக்கு கண் மண் தெரியாத கோபம் வந்தது.

அவளுடன் குடும்பம் நடத்தும் எண்ணமோ அல்லது அவளை தன் வீட்டுக்கு அழைத்துச் செல்லும் எண்ணமோ அவனுக்கும் இல்லைதான். அவனுக்கு தேவையானது அவள் சட்டப்படி அவன் மனைவி ஆகவேண்டும். அவ்வளவுதான்!

அவள் தொடர்ந்து படிக்க வேண்டும் என்பது அவனின் விருப்பமும் கூட. ஆனால் ஒரு மாலை மாற்றுவதால் என்ன வந்துவிடப் போகிறது என்று இப்படி வார்த்தைகளை வீசுகிறாள்? மனதின் ஒரு மூலையில் முணுக் என்று வலித்தது.

இந்தத் திருமணத்தை நடத்துவதற்கும் அவன் பட்ட கஷ்டம் அவள் அறியவில்லை. தாயாரை சம்மதிக்க எவ்வளவு பாடுபட்டான். சகோதரர்களை சம்மதிக்க எவ்வளவு கஷ்டப்பட்டான். இவளானால் இப்படிச் சொல்லிவிட்டாளே! மனதில் வருந்தினான் இளா.

எல்லோரையும் ஒரு தடவை பார்த்த சங்கரன், “அப்போ நாங்கள் புறப்படுகிறோம்… வேறு ஒன்றும் இல்லையே…” என்றார் விடைபெறும் முகமாக.

அவருக்கும் அதற்க்கு மேல் என்ன செய்வது என்று தெரியவில்லை.

தனது தம்பியை ஒருதடவை பார்த்த கதிரவன், “வேறு…… ஒன்றுமில்லை….” என்று இழுத்தார்.

“சரி.. நாங்கள் வருகிறோம்.” என்றவர் தலையசைப்பால் மனைவியை அழைக்க, கலைமகள் இளா குடும்பத்தினருக்கு பொதுவான ஒரு தலை அசைப்பைக் கொடுத்திவிட்டு நகர்ந்தார்.

தாயை தொடர்ந்த வதனியை, “ஒரு நிமிடம் வது. உன்னிடம் கொஞ்சம் பேச வேண்டும்.” என்றான் இளா.

மனம் முழுதும் கொதித்தது வதனிக்கு. வதுவா…. எப்படி முடிகிறது இவனால். எதுவும் பேசாது அந்த இடத்திலேயே நின்றாள்.

“பேசிவிட்டு வா இளா. நாங்கள் வாசலில் நிற்கிறோம்.” என்ற கதிரவன் மற்றவர்களை அழைத்துக்கொண்டு முன்னே சென்றார்.

“நாங்களும் அங்கே நிற்கிறோம்.” என்ற சங்கரனுடன் கலைமகளும் கூடச் சென்றார். திருமணம் தான் முடிந்துவிட்டதே. மகள் நன்றாக இருந்தால் போதும் என்பது அவருக்கு.

வதனியின் அருகே வந்தவனின் மனதில், ‘என்னவளை எனக்கு சொந்தமாக்கி கொண்டேன்’ என்கிற உரிமையுடன் பேசும் ஆவல் நிறைந்திருந்தது. ஆனாலும் மனதில் இருந்த கோபம் அதைத் தடுத்தது.

“ஏன் மாலை மாற்றவேண்டாம் என்றாய்?” என்று கொஞ்சம் கோபமாகக் கேட்டான்.

பதில் சொல்லும் எண்ணம் வதனிக்கு இல்லை. அமைதியாக இருந்தாள்.

கோபம் கூடிய இளவழகன், “திருமணத்துக்கு சம்மதிக்க மறுத்தாயே. பார்த்தாயா… சொன்னதுபோல செய்து காட்டிவிட்டேன்…” என்றான் சொன்னதை செய்துவிட்டேன் என்கிற சந்தோசத்துடன்.

நின்ற நிலையில் இருந்து அவனை திரும்பிப் பார்த்தாள் வதனி.

அந்த பெரிய விழிகளில் எப்போதும் அவனை பார்க்கும்போது தோன்றும் குறும்பு இல்லை, காதல் இல்லை, ஆசை இல்லை, அன்பு இல்லை ஏன் கோபம் இல்லை, ஆத்திரம் இல்லை அழுகை கூட இல்லை.

வெறுமை மட்டுமே நிறைந்திருந்தது.

அவனை சில நொடிகள் வெறித்தவளின் கண்களில் மெல்ல மெல்ல நீர் அரும்பியது. அதை அவனுக்கு காட்ட விரும்பாது முகத்தை திருப்பியவள் விறு விறு என்று நடந்து சென்றுவிட்டாள்.

விக்கித்து நின்றான் இளவழகன். ஏன் அந்த வெறுமை… எதற்கு அந்த வெறித்த பார்வை….. புரியவில்லை அவனுக்கு!

error: Alert: Content selection is disabled!!
Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.

Powered By
Best Wordpress Adblock Detecting Plugin | CHP Adblock