இனிய காலைப் பொழுதில், திறந்திருந்த ஜன்னல் வழியாக சில்லென்று வீசிய காற்று முகத்தில் மோத மெல்லக் கண்விழித்தாள் சித்ரா. விழித்ததும் அவள் விழிகளில் தெரிந்தது நன்றாக உறங்கும் கணவனின் கம்பீரமான முகமே! அதுவும் வெகு அருகாமையில்!
தன்னை மறந்து அவன் முகத்தையே பார்த்து ரசித்தவளின் இதழ்கள் புன்னகையில் விரிய, தேகம் முழுவதும் பரவியிருந்த இனிமையோடு சில்லிட்ட காற்றின் இதமும் சேர்ந்துகொள்ள, கணவனின் தேகத்தின் சூடு கதகதப்பாக இருக்கவே இன்னும் அவனை அண்டிப் படுத்தாள்.
நல்ல உறக்கத்தில் இருந்தபோதும் மனைவியின் நெருக்கத்தை உணர்ந்து அவளை இன்னும் தன்னோடு இறுக்கிக்கொண்டான் ரஞ்சன்.
அவனின் அணைப்புக்குள் இப்படிக் கிடப்பது எவ்வளவு இதம் என்று எண்ணியவளுக்கு, இந்தச் சுகத்தையும் இதத்தையும் இவ்வளவு நாட்களாக இழந்துவிட்டோமே என்று நினைக்கையிலேயே, அதை இழந்ததற்கான காரணங்கள் மெல்ல மெல்ல நினைவலைகளில் மிதந்தன.
அவை மிதக்க மிதக்க அதுவரை அவள் மனதிலும் உடலிலும் இருந்த பரவசம் வடியத் துவங்க, துக்கப் பந்து தொண்டையை அடைக்க அவள் உடலோ இறுகியது.
என்ன காரியம் செய்துவிட்டாள்?
அன்றே அவளாகத்தான் அவனைத் தேடி வந்தாள் என்று சொன்னவன், இன்று நான் அணைத்ததும் மயங்கிவிட்டாயோ என்று கேட்பானோ என்று நினைத்ததுமே அவள் உடல் தூக்கிப்போட்டது.
அதிலே அவன் தூக்கம் கலைய, அவளை அணைத்திருந்த கையால் கன்னம் வருடி, “தூங்கு யாழி..” என்றான், உறக்கம் கலையாத குரலில்.
அவளும்தான் அவன் அணைத்ததும் இணங்கிவிட்டாளே என்று எண்ணியவளின் விழிகளில் இருந்து வழிந்த சூடான கண்ணீர் மிக வேகமாக இறங்கிக் காதுகளை நனைத்தது.
அவளது கன்னத்தை வருடிக்கொண்டிருந்த ரஞ்சன், விரல்களில் ஈரத்தை உணர்ந்து சட்டென விழித்துப் பார்த்தான்.
“யாழி..? என்னமா? ஏன் அழுகிறாய்?”
என்னவென்று சொல்வாள்?
மனதில் நினைப்பதைச் சொல்லவும் முடியாமல், தான் அழுவதை அவனுக்குக் காட்டவும் பிடிக்காமல், அதை மறைக்கவும் தெரியாமல் தடுமாறியவள், அவன் நெஞ்சிலேயே தன் முகத்தைப் புதைத்துக் கொண்டாள். உடலோ அழுகையில் குலுங்கியது.
ரஞ்சனுக்கு ஒன்றுமே புரியவில்லை. அவள் காதோரமாய் வழியும் கண்ணீரைத் துடைத்துவிட்டபடி, “யாழி! இங்கே பார். அழாமல் என்னவென்று சொல்லு. சொன்னால் தானே எனக்குப் புரியும். ஏன் அழுகிறாய்?” என்றவனின் பேச்சு அவள் காதில் விழுந்ததாகவே தெரியவில்லை.
அவளை அணைத்து, முதுகைத் தடவிக்கொடுத்து ஆறுதலாகப் பேசியும் பார்த்தான். அனைத்துக்கும் பலனின்றிப் போகவே, அடுத்து என்ன செய்வது என்று தெரியாது திகைத்தான் ரஞ்சன்.
சில வினாடிகளை சிந்தனையில் கழித்துவிட்டு, “ஏன் யாழி, இரவு..” என்று ஆர்ம்பித்தவனுக்கு அவன் கொண்ட உறவு அவளுக்குப் பிடிக்கவில்லையோ என்று நினைத்த மாத்திரத்தில் வார்த்தைகள் தொண்டைக் குழியிலேயே சிக்கிக் கொண்டன.
நெஞ்சம் முழுவதும் கசந்துவழிய தொண்டையைச் செருமி, “..என்னுடன் வாழ உனக்குப் பிடிக்கவில்லையா?” என்று வறண்ட குரலில் கேட்டான்.
கன்னங்களில் வழிந்த கண்ணீரோடு உடனேயே தலையை மறுப்பாக அசைத்தவளின் கரங்கள் மிக வேகமாக அவனை அணைத்துக் கொண்டன.
இனி எல்லாம் சுகமே என்று அவன் நினைத்திருக்க, திடீரென அவள் வடித்த கண்ணீரில் எதையெதையோ நினைத்துக் கலங்கியவனுக்கு அவளின் அணைப்புப் பெரும் இதமாக இருந்தது.
மனம் உருக, “பிறகு என்னமா?” என்று கேட்டவனின் குரலும் உருகிக் குழைந்தது.
“அ..அன்றும் நானாகத்தான் கடைக்கு வந்தேன். நேற்றும் நீங்கள் அணைத்ததும் நா..நான் வந்தேனே.. நீயாகத்தான் என்னிடம் வந்தாய், உனக்கு இதெல்லாம் சாதாரணம் என்று அன்று சொன்னீர்களே. திரும்பவும் அப்படிச் சொல்லிவிடாதீர்கள். என்னால் அதைத் தாங்க முடியாது.” என்று முகத்தை மூடிக்கொண்டு அழுகையில் விம்மியவளின் பேச்சில் ரஞ்சன் அதிர்ந்து அசைவற்றுப் போனான்.
தாய் தங்கையரின் பிரச்சினைகளை முடித்தாயிற்று, மனைவியுடனும் சேர்ந்து வாழ ஆரம்பித்தாயிற்று. எல்லாமே சரியாகிவிட்டது என்று அவன் நினைக்க, அவளின் அழுகையும் பேச்சும் இன்னும் ஒன்றும் முழுதாகச் சரியாகவில்லை என்பதை உணர்த்தியது.
“உங்கள் மேல் வைத்த அன்பில்தான் அப்படி நடந்தேன். என்னைக் கைவிட மாட்டீர்கள் என்று நம்பித்தான்.. திரும்பவும் என் அன்பைக் கேவலப் படுத்தி விடாதீர்கள்!” மீண்டும் எதையாவது வலிக்கச் சொல்லிவிடுவானோ என்கிற பயத்தில் அவள் கதற அவன் உள்ளே நொருங்கிக் கொண்டிருந்தான்.
தன் சுயநலத்தால், தன் பேச்சால், தன் குடும்பத்துக்காக என்று அவன் எடுத்த முடிவால் அவள் எவ்வளவு தூரத்துக்குக் காயப் பட்டிருக்கிறாள் என்பதும், தான் காயப் படுத்தியிருக்கிறோம் என்பதும் மிக நன்றாகவே புரிந்தது.
“நீங்கள் என் கணவர். இன்று மட்டுமல்ல அன்றுமே நான் அப்படித்தான் நினைத்தேன். அதனால்தான்.. அன்று.. அப்படி.. நீங்கள் கூப்பிட்டதும் வந்தேன். நீங்களானால் என்னை, என் அன்பை அசிங்கப் படுத்திவிட்டீர்களே…” என்று அழுகையோடு தொடர்ந்தவளின் பேச்சில் உள்ளம் குன்றிப் போனான் ரஞ்சன்.
அவன் செய்த பிழைக்கு அவள் இப்படி வேதனைப் படுகிறாளே என்று துடித்தவன், “லூசாடி நீ? நான் தான் ஏதோ விசரன் மாதிரி உளறினேன் என்றால் நீயும் அதையே பிடித்துக்கொண்டு தொங்குவாயா? போடா நீயும் உன் பேச்சும் என்று சொல்லிவிட்டுப் போகவேண்டாமா?” என்றான் எரிச்சலுடன், தன் மீது இருக்கும் கோபத்தை அவள் மீது காட்டி.
திடீரென அவன் காட்டிய சினத்தில் கண்களில் நிறைந்திருந்த கண்ணீரோடு அவள் திகைத்து விழிக்க, “அன்று நடந்ததற்கும், நேற்று நடந்ததற்கும் நான் மட்டுமே பொறுப்பு யாழி. அது எனக்கு மிக நன்றாகவே தெரியும்.” என்றான் அழுத்தமான குரலில், அவள் மனதில் பதியும் விதமாக.
“பின்னே அன்று அப்படிச் சொன்னீர்களே..” அதைச் சொல்லும்போதே அவள் இதழ்கள் அழுகையிலும் கோபத்திலும் பிதுங்கியது.
“என் யாழி..!” என்றபடி அவளை இழுத்து அணைத்துக்கொண்டான் ரஞ்சன்.
“உன் புருஷன் ஒரு மடையன் என்று நினைத்து அதையெல்லாம் மறந்துவிட மாட்டாயா?” என்று தணிவாக அவன் கேட்டபோது, அழுகையில் துடித்த அவள் இதழ்கள் இப்போது புன்னகையில் துடித்தன.
நெஞ்சுக்குள் இருந்த வலியை அவளுக்குக் காட்டாமல், “என்னை மடையன் என்று சொன்னதும் உனக்குச் சிரிப்பு வருகிறதா..” என்று பொய்யாக அதட்டியவன், அவள் நெற்றியில் தன் உதடுகளை நேசத்தோடு பதித்தான்.
அவள் கன்னங்களையும் கண்களையும் இதமாகத் துடைத்துவிட்டான்.
“இதென்ன தொட்டதற்கும் அழுகை. என் யாழி எதையும் எதிர்த்துப் போராடும் வீராங்கனை இல்லையா? ஏனடா அப்படிச் சொன்னாய் என்று என் சட்டையைப் பிடித்துச் சண்டை போடவேண்டாமா?” என்று செல்லமாகக் கடிந்துகொண்டான்.
வியப்போடு அவனைப் பார்த்தாள் சித்ரா. பின்னே, காதல் கணவனாக அவளைக் கொஞ்சுகிறானே! கடிந்துகொள்கிறானே!! காதலித்த.. அதாவது அவனும் அவளைக் காதலிக்கிறான் என்று அவள் நம்பிய காலத்தில் கூட அவன் இப்படி நடந்து கொண்டதில்லையே!
மனதில் குழப்பங்களும், கேள்விகளும் அப்படியே இருந்தபோதும் அதையெல்லாம் வாய்விட்டுக் கேட்கும் தெம்போ தைரியமோ அவளிடம் இல்லை.
அதைக் கேட்டு அவனிடம் இருந்து கிடைக்கும் இந்தப் பரிவையும், பாசத்தையும், நேசத்தையும் இழக்க இனியும் அவள் தயாராக இல்லை! அவை போலியாக இருந்தாலும் கூட!
அவன் அவளை மறுத்தபோது தைரியமாக எதிர்த்து நின்று போராடியவள் இன்று அவன் அன்பையும் நேசத்தையும் காட்டிய போது கோழையாகி நின்றாள்.
அவளை அணைத்தபடி படுத்திருந்த ரஞ்சனின் புருவங்கள் சுளித்திருந்தன.
அவன் மனதில் புதைந்து கிடக்கும் அனைத்தையும் அவளிடம் சொல்லிவிட வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தபோதும், தயக்கமாகவும் இருந்தது.
அவன் சொல்லப் போகும் எதுவுமே அவளுக்கு உவப்பானதாய் இராதே! அவளைக் கௌரவப் படுத்தாதே! அதனால் தான் அவள் கேட்டதற்கு எதையோ சொல்லிச் சமாளித்தான்.
ஆயினும் தகுந்த நேரம் பார்த்து சொல்லிவிடவேண்டும் என்று நினைத்தவன் அவளை அணைத்தபடியே கிடந்தான்.
அவளும் எதையும் சிந்திக்காமல் சிந்திக்கத் தோன்றாமல் அவன் கைவளைவுக்குள் கிடப்பதே சொர்க்கம் என்றெண்ணி அப்படியே கிடந்தாள்.
விடியல் பொழுது மிக நன்றாகவே புலர்ந்துவிட்டதை ஜன்னல் வழியே கண்ட ரஞ்சன், மனமே இன்றித் தன் கரங்களைத் தளர்த்த எழுந்துகொண்ட சித்ரா குளியலறைக்குள் புகுந்துகொண்டாள்.
பச்சை நிறக்கரையுடன் கூடிய சிவப்பு நிறச் சேலையில், அதே பச்சையில் ப்ளவுஸ் அணிந்து தலைக்குக் குளித்ததன் அடையாளமாக சின்னத் துவாலையால் கூந்தலைச் சுற்றியபடி வெளியே வந்தவளை, கட்டிலில் படுத்திருந்த ரஞ்சனின் விழிகள் ரசனையுடன் தழுவின.
அவன் பார்ப்பது அவளது பார்வை வட்டத்தில் விழுந்தாலும், அவன் விழிகளைச் சந்திக்க வெட்கி கண்ணாடியின் முன் சென்று நின்றவள் தலையைத் துவட்டத் தொடங்கினாள்.
கைகளோ காரணமின்றி நடுங்கின. மனதில் ஒருவிதப் படபடப்பும் எதிர்பார்ப்பும்! அவளின் நடுக்கம் சரியே என்பதுபோல் பின்னால் இருந்து அவளைக் கட்டிக்கொண்டான் ரஞ்சன்.
அவளின் பின்கழுத்தில் தன் இதழ்களைப் பொருத்தியபடி, “குளித்துவிட்டாயா?” என்று கிசுகிசுப்பாகக் கேட்டான்.
வெற்றிடையில் பதிந்த கரமும், பின்கழுத்தில் ஊர்வலம் நடத்தத் தொடங்கிய இதழ்களும் அவளை வேறு உலகத்துக்கு அழைத்துச் செல்ல முயல, “அ..ப்பா அம்மா நமக்காகக் காத்திருப்பார்கள்..” என்றாள் திக்கித் திணறி.
“ஓ..! ஆமாமில்லை.” என்று மனமின்றிச் சொன்னவன், பின்னிருந்தபடியே அவள் முகத்தைத் திருப்பி இதழ் முத்தம் ஒன்றை வழங்கிவிட்டே குளியல் அறைக்குள் புகுந்தான்.
முகம் சிவக்க அப்படியே நின்றவள், சற்று நேரம் கழித்தே அவன் பதித்த முத்தத்தின் தாக்கத்தில் இருந்து தன்னை மீட்டுக்கொண்டாள்.
குளித்துவிட்டு சாரமும் மேலே வெற்றுடம்புமாக வந்தவனை நிமிர்ந்து பார்க்கமுடியாமல் வெட்கம் தடுக்க, குனிந்த தலையுடன் அவன் கொண்டுவந்திருந்த பையிலிருந்து அவனுக்கான உடைகளை எடுத்து நீட்டினாள் சித்ரா.
அவனைக் கவனித்துக்கொள்ளவும் ஒருத்தி! அவனுக்கே அவனுக்காய்..! ரஞ்சனின் மனம் கர்வம் கொண்டது!
சில வினாடிகள் கழிந்தும் அவள் நீட்டிய உடைகளை அவன் வாங்காததில் ‘என்ன செய்கிறான்?’ என்று எண்ணியபடி நிமிர்ந்து பார்த்தாள் சித்ரா.
அவள் பார்க்கும்வரைக் காத்திருந்தவன், “போட்டுவிடுகிறாயா?” என்று விசமக் குரலில் கண்களைச் சிமிட்டியபடி குறும்போடு கேட்டான்.
செங்கொழுந்தெனச் சிவந்துவிட்ட முகத்தை அவனுக்குக் காட்டாது தலையைக் குனிந்துகொண்டவளை அவன் விழிகள் ஆசையோடு விழுங்கின.
அவள் கையிலிருந்த உடைகளை வாங்கியவன், அவளைப் பார்த்தபடியே மாற்றத் தொடங்கவும் வேகமாகத் திரும்பிக் கொண்டாள் சித்ரா.
உரக்க நகைத்தான் ரஞ்சன். உடைகளை அணிந்துகொண்டு, “இப்போது திரும்பலாம்..” என்றான் அப்போதும் குரலில் நகை இலங்க.
அவன் செயற்பாடுகள் ஒவ்வொன்றும் அவளை எப்படி வெட்க வைத்ததோ அதேபோல் ஆச்சர்யப்படவும் வைத்தது.
அதுநாள் வரை சிடுமூஞ்சியாக இருந்தவன் எப்படி இப்படி சிரிப்பு மன்னனாக மாறினான் என்கிற அதிசயம் அவளுக்குப் புரியவே இல்லை.
ஆனாலும், இந்த ரஞ்சனை அவளுக்கு இன்னமுமே பிடித்திருந்தது.
ஒருவழியாக தம்பதியர் வெளியே செல்லத் தயாராகி கீழே இறங்கினர்.
சாப்பாட்டு மேசையில் அமர்ந்திருந்து பத்திரிக்கை படித்துக் கொண்டிருந்த சந்தானமும் அவருக்குக் காபியைக் கலந்து கொடுத்தபடி நின்ற லக்ஷ்மியும் மகளும் மருமகனும் வருவதைக் கண்டுவிட்டு நிமிர்ந்து பார்த்தனர்.
கண்களில் கனிவும் மலர்ந்த முகமுமாக படியிறங்கிய ரஞ்சனோடு, விழிகளில் நாணமும், கன்னங்களில் சிவப்பும், இதழ்களில் புன்னகையுமாக இறங்கிவந்த மகளைப் பார்த்த பெற்றவர்களின் மனமும் வயிறும் ஒருங்கே குளிர்ந்தது.
மகளும் மருமகனும் இணைந்துவிட்டது புரிய அதுநாள் வரை அவர்களது மனதை அழுத்திய பாரம் மாயமாய் மறைந்தது.
அவர்களின் வாழ்க்கைத் தவமே மகளை இப்படி ஒரு கோலத்தில் காணவேண்டும் என்பதுதானே!
சந்தானத்தின் முகம் பெருமிதத்தில் மின்னியது என்றால் லக்ஷ்மியின் விழிகள் சந்தோசத்தில் கலங்கின.
“வா ரஞ்சன். வாடா சித்து..” என்று பாசத்தோடு அவர்களை வரவேற்ற சந்தானம், “ரஞ்சனுக்கும் சித்துக்கும் டீயைக் கொடு லக்ஷ்மி.” என்று மனைவியையும் ஏவினார்.
லக்ஷ்மியோ, கணவன் சொன்னதைச் செய்யாது, “சித்து வாம்மா..” என்றபடி சுவாமி அறைக்கு விரைந்தார்.
அங்கே சுவாமிப் படங்களின் முன்னால் நின்று ஆனந்தத்தோடு கைகூப்பி வணங்கியவர், ‘என் மகளின் வாழ்க்கையை மலரச் செய்ததற்கு நன்றி ஆண்டவா..’ என்று அந்தக் கோணேஸ்வரப் பெருமானுக்கு மனமுருகி நன்றியைச் சொல்லி விளக்கை ஏற்றினார்.
தாயைப் பின்பற்றி சித்ராவும் கைகூப்ப, தாரத்தைப் பின்பற்றி வந்த ரஞ்சனும் கரங்களைக் கூப்பி மனமாரக் கும்பிட்டான்.
மகளினதும் மருமகனினதும் நெற்றியில் திருநீறு, சந்தானம், குங்குமம் பூசிவிட்ட லக்ஷ்மிக்கு உள்ளம் நெகிழ்ந்து நிறைந்து கிடந்தது.
சித்ராவுக்கும் அந்த நொடி மனம் நிறைந்திருந்ததில் உணர்ச்சி வசப்பட்டவள் தாயின் காலில் விழப் போகவும், “பொறு பொறு அப்பாவும் வரட்டும்..” என்று தடுத்தவர், கணவரையும் அருகழைத்துக்கொள்ள, இப்போது கணவனும் மனைவியுமாக அவர்களது பாதம் பணிந்து எழுந்தனர்.
மனம் முழுவதும் வியாப்பித்த பரவசத்துடன், அவர்கள் இருவரினதும் தோள்களைப் பற்றி எழுப்பி விட்ட பெற்றவர்களின் விழிகள் ஆனந்தத்தில் மெலிதாகக் கலங்கியிருந்தன.
“எல்லா சுகமும் பெற்று தீர்க்க ஆயுசுடன் நலமாக வாழவேண்டும்!” என்று வாழ்த்தினர் நிறைந்துவிட்ட மனதோடு.
“உன்னை இப்படிப் பார்க்கத்தான் ஆசைப்பட்டோம் கண்ணம்மா..” என்று மகளை உச்சிமுகந்தார் சந்தானம்.
அவளும் சலுகையுடன் தந்தையின் தோளில் சாய்ந்துகொள்ள, “இனி யாழியை நினைத்து நீங்கள் எதற்கும் கவலைப்பட வேண்டாம் மாமா. அவளை நிச்சயம் நான் நன்றாகப் பார்த்துக்கொள்வேன்!” என்று, அவனுக்கே உரிய ஆழ்ந்த குரலில் ரஞ்சன் சொன்னபோது, அங்கிருந்த மூவருமே கலங்கிவிட்ட விழிகளோடு அவனைப் பார்த்தனர்.
லக்ஷ்மியின் விழிகளில் கண்ணீர் ஆறாகவே பெருகி வழிந்தது.
“என்ன மாமி, அவளை நன்றாகப் பார்த்துக் கொள்கிறேன் என்று சொன்னதற்கா இந்த அழுகை?” வேண்டுமென்றே கேட்டான் ரஞ்சன்.
மருமகன் முன் இப்படி அழுதுவிட்டோமே என்று வெட்கி, சட்டெனப் பூத்த புன்னகையுடன் சேலை முந்தானையால் கண்களைத் துடைத்தபடி, “இல்லை.. இது ஆனந்தக் கண்ணீர்..” என்றார் அவன் மாமியார்.
அதன்பிறகான அந்தக் குடும்பத்தின் நேரம் மிக மிக மகிழ்ச்சியோடு கடந்தது.
உணவு வேளை முடிந்ததும் அவர்களிடம் சொல்லிக்கொண்டு ரஞ்சனின் வண்டியில் தங்கள் கடைக்குப் புறப்பட்டனர் இருவரும்.
அங்கே கடையில் மேல் தளத்துக்கு அழைத்துச் சென்று காட்டினான் ரஞ்சன். அங்கிருந்த வீட்டு உபயோகப் பொருட்களைப் பார்த்துவிட்டு வியப்போடு புருவங்களை உயர்த்தினாள் சித்ரா.
அவளின் தோள் மேல் கையைப் போட்டபடி, “எப்படி இருக்கிறது நம் வீடு?” என்று ரஞ்சன் கேட்டபோது, “நம் வீடா? இனி நாம் இங்கேயா இருக்கப் போகிறோம்?” என்று வியப்போடு கேட்டாள் மனையாள்.
“ஏன் பிடிக்கவில்லையா?”
“இல்லை, அப்படியில்லை. எனக்குத் தெரியாதே. அதுதான் கேட்டேன்.”
“ம்ம்.. இரவுதான் எல்லாம் ஒழுங்கு செய்தேன். அதுதான் அங்கு வரவும் பிந்திவிட்டது..” என்றவனின் விழிகள், அவளைச் சீண்டிச் சிரித்தன.
அவன் பார்வையின் வேகம் தாங்கமுடியாமல் முகத்தைத் திருப்பிக் கொண்டவள், அவர்களின் வீடாகிப்போன அந்த இடத்தைச் சுற்றிப் பார்த்தாள்.
இரண்டு அறைகளைப் போன்று இருந்த அந்தத் தளத்தில் ‘ஹால்’ ஆகப் பயன்படுத்தப் போகும் அறையில் மூன்று பிரிவுகளாக இருந்த சோபா செட் வீற்றிருந்தது.
“இன்று போய் டிவி வாங்குவோம்..” என்றான் அவன்.
அடுத்ததாக இருந்த அறையைப் எட்டிப் பார்த்தவளுக்கு மெல்லிய குறுகுறுப்புடன் வெட்கமும் வந்தது.
அது படுக்கை அறை.
அங்கே மட்டும் எந்தக் குறையும் இன்றி, இருவர் மட்டுமே படுக்கக் கூடிய அளவிலான ஒரு கட்டிலும், அதன் ஒருபக்கத்தில் கப்போர்ட்டும் மற்றப் பக்கத்தில் முகம் பார்க்கும் கண்ணாடியும் வீற்றிருந்தது.
ஏன், கட்டிலுக்குத் தலையணை முதல் போர்வை வரை அத்தனையுமே கச்சிதமாக இருந்தது.
“உள்ளே போய்ப் பார்க்கவில்லையா?” என்று கன அக்கறையுடன் விசாரித்தான் கணவன்.
அவன் கேள்வியில் வந்த சிரிப்பை அடக்கியபடி, “இல்லையில்லை பரவாயில்லை! இங்கிருந்தே எல்லாவற்றையும் பார்க்க முடிகிறது..” என்று அவசரமாகச் சொன்னாள் சித்ரா.
கண்களில் கேலியுடன் அவன் பார்க்க, “எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது..” என்றாள் கணவனிடம்.
“எது? அந்த அறையா?”
கன்னங்களில் கதகதப்பு ஏற, “இந்த வீடு.” என்றாள் சித்ரா.
“ம்ம்.. கொஞ்ச நாட்களுக்கு இங்கே இருப்போம் யாழி. மிகுதியைப் பிறகு பார்க்கலாம். அதில் உனக்குக் கவலை இல்லையே?”
இப்படியான இடத்தில் வாழ்ந்து பழகாதவள் ஆயிற்றே அவள்.
“எனக்குத்தான் இந்த இடம் மிகவும் பிடித்திருக்கிறதே..” அவன் கேட்ட கேள்வியே அர்த்தமற்றது என்பதுபோல் சொன்னாள் சித்ரா.