ஆதார சுதி 3

நெதர்லாந்தின் தலைநகரிலிருந்து புறப்பட்ட இராட்சசப் பறவை ஒன்று கொழும்பு கட்டுநாயக்கா சர்வதேச விமான நிலையத்தில் சஹானாவைத் தரையிறக்கியது. விமானத்தின் மெல்லிய குளிருக்கு சுகமாய் அவளைத் தழுவியிருந்த டெனிம் கோர்ட், லங்காபுரியின் தலைநகரில் வீசிய வெம்மைக்கு வியர்வைச் சுரப்பிகளைத் திறந்துவிடுவது போலிருக்க அதனைக் கழற்றி ட்ரொல்லியின் மீது போட்டுக்கொண்டாள்.

மேலே வெண்ணை நிறத்திலான முழுக்கை புல்லோவர் அணிந்து, கருப்புநிற ‘பொடி பிட்’ காற்சட்டைக்கு வெண்ணை நிறத்திலேயே அளவான ஹீல் கொண்ட ஷூவுடன், ஒற்றைக்கையில் பற்றியிருந்த ட்ரொல்லி அவளின் பின்னே துள்ளிவர, ஆர்வமாய் விழிகளைச் சுழற்றியபடி வெளி வாசலை நோக்கி நடக்கத் தொடங்கினாள்.

அங்கிருந்த அத்தனை இளவட்டங்களின் பார்வையும் அந்த மெழுகுப் பொம்மையின் மீது பிரமிப்புடன் படிந்தது. அப்படியான நிறம் அவளுக்கு. கரிய கூந்தலை குதிரைவாலாக உயர்த்திவிட்டிருக்க, அளவான முக அலங்காரத்துடன் ஹீல் கொடுத்த நளின நடைக்கு ஏற்ப குதிரைவால் அங்குமிங்கும் ஆடி, இளமனங்களையும் அசைத்துப்பார்க்க, அதையெல்லாம் கவனிக்காமல், வெளிவாசலை எட்டினாள்.

விழிகளைச் சுழற்றமுதலே, “சஹி! மாமா இங்க நிக்கிறன்!” என்றபடி விரைந்து வந்தார் அரவிந்தன்.

“மாமா..! அத்தை! நான் வந்திட்டேன்.” கொண்டுவந்த ட்ரொல்லியையும் விட்டுவிட்டு ஓடிவந்து
இருவரையும் சந்தோசமாகக் கட்டிக்கொண்டாள் சஹானா.

உயிர்த்தோழியின் மகளை முதன் முதலாகப் பார்க்கும் பரவசத்தில், “வாடா செல்லம்! வாவாவா!” என்று, பாசம் பொங்க அணைத்து உச்சி முகர்ந்தார் ராகவி.

அரவிந்தனின் கண்கள் பனித்துப் போயிற்று. கிட்டத்தட்ட இந்தப் பருவத்தில் தான் தங்கையைக் கொண்டவனோடு வழியனுப்பி வைத்தார். அந்த நினைவுகள் மனதில் சூழ பாசமாய்த் தலையைத் தடவிக்கொடுத்தார்.

“அப்பா மாதிரியே செய்றீங்க மாமா!” தன்னிலும் கூடத் தகப்பனின் சாயலைத் தேடியவளின் உள்ளம் கண்டு நெகிழ்ந்து போனார் அரவிந்தன்.

ராகவியின் விழிகள் தன் தோழியின் சாயலை பூரிப்புடன் மருமகளில் தேடித் தேடி அலைந்தது. “பயப்படாம வந்தியாம்மா?” அரவிந்தன் வரச் சொல்லிவிட்டாலும், அவள் வந்து சேர்கிற வரைக்கும் ராகவிக்குப் பெரும் பதைபதைப்பாகவே இருந்தது.

“என்ன அத்தை பயம்? அங்க அம்மா ஏத்திவிட்டவா. இங்க உங்களிட்ட வந்து இறங்கி இருக்கிறன். அவ்வளவுதானே?” கைகளை விரித்துச் சிரித்தவளைப் பார்த்து அவருக்கும் சிரிப்புப் பொங்கியது.

“கதைக்க மாட்டீங்களா அகிலன் மச்சான்?” என்று அவர்களின் மகனையும் பேச்சுக்குள் இழுத்தாள் சஹானா.

அவனோ அவளின் ட்ரொல்லியைப் பிடித்துக்கொண்டு சின்னச் சிரிப்போடு நின்றிருந்தான்.

அதற்குள் அழைத்த அன்னையிடமும் சுகமாக வந்து சேர்ந்துவிட்டதைத் தெரிவித்து அவரது பதட்டத்தை அகற்றி, அப்பாவின் நலனைப்பற்றி விசாரித்துவிட்டு, யாழ்ப்பாணம் நோக்கி நால்வருமாகப் புறப்பட்டார்கள்.

நெதர்லாந்தின் தூய்மையான காற்று, துப்பரவு, ஒழுங்குமுறைகளுக்கு முற்றிலும் மாறாக, ஒரே பேச்சுச் சத்தத்தோடு மனிதத் தலைகள் நிறைந்து வழிந்த பரபரப்பான அந்த நகரம் அவளுக்குள் ஒருவிதப் பரவசத்தை மட்டுமே விதைத்துக் கொண்டிருந்தது.

வீதியை ஊடறுத்துப் போய்க்கொண்டிருந்த வாகனத்துக்கு எதிராக வீசிய காற்று, புழுதியைக் கொண்டுவந்து தேகம் முழுக்க அப்பிவிட்டுப் போனபோதிலும், ஆசையோடு பார்த்துக்கொண்டு வந்தாள்.

‘இங்கேதான் அப்பாவின் நிம்மதியும் சந்தோசமும் புதைந்து கிடக்கிறது!’

வீதிகளில் இருந்த சின்னச் சின்னத் தேநீர் கடைகள், அங்கே வெறும் சாரத்தோடு வேலைகளைப் பார்த்துக்கொண்டிருந்த மனிதர்கள், கீழே லுங்கி மாதிரி அணிந்து மேலே சாரி பிளவுஸ் போன்ற ஒன்றை மட்டுமே போட்டு இடை அசைய நடை பயின்ற சிங்களப் பெண்கள், சைக்கிளில் மனைவி நான்கைந்து பிள்ளைகளை அடக்கியபடி கம்பீரமாக ஆரோகணிக்கும் ஆண்கள், வீதியோரங்களில் பாய்களை மட்டுமே விரித்துப் பழங்கள் விற்றுக்கொண்டிருந்த பெண்கள் என்று எல்லாமே அவளுக்குள் ஆச்சரியத்தைப் பரப்பின.

A9 வீதியினூடாக அனுராதபுரத்தை எட்டி, மதவாச்சி கடந்து வவுனியாவைத் தொட்டு ஓமந்தையூடாகப் பயணித்து முறிகண்டிப் பிள்ளையார் கோவிலில் சென்று நிறுத்தினார்கள்.

A9 வீதியினூடு வரும் எந்தப் பயணிகளும், எந்த வாகனமும் முறிகண்டிப் பிள்ளையார் கோவிலில் நின்று, வழிபட்டே செல்வார்கள். இது காலம் காலமாக நடக்கும் பாரம்பரியம். தம் பயணத்துக்கோ தமக்கோ எந்த ஆபத்தும் வராது என்கிற நம்பிக்கை. அதேபோல அங்கு விற்கும் கச்சானின்(நிலக்கடலை) சுவையும் தனியே! சாதாரண நாட்களில் கூடப் பத்துக்கும் மேற்பட்ட கச்சான் கடைகள் அங்கிருக்கும்.

சுவாமி கும்பிட்டுவிட்டு, கச்சாணும் வாங்கிக்கொண்டு ஒருவழியாகச் சாவகச்சேரியை வந்து அடைந்தார்கள்.

நீண்ட பயணத்தில் முற்றிலுமாகக் களைத்துப் போயிருந்தாலும் அவளின் கண்களில் இருந்த உயிர்ப்பு வற்றவேயில்லை. ஒரு மாடியும் அதற்கு மேலே மொட்டை மாடியுடனும் சுற்றிலும் சோலையாய்க் காட்சி தந்த அவர்களின் வீட்டை மிகவுமே பிடித்துப் போயிற்று.

“என்ர அப்பாட வீடு இங்க இருந்து தூரமா மாமா?” வீட்டுக்கு வந்ததுமே அவள் கேட்ட முதல் கேள்வி அதுதான்.

“பெரிய தூரமில்லை. கிட்டத்தான்.” கனிவாய்ச் சொன்னவருக்கு அவளின் ஏக்கம் புரிந்தது.

அடிக்கடி ராகவியைச் சந்தோசத்தில் அணைத்துக்கொள்வதும், ஆண்பிள்ளைக் கூச்சத்துடன் ஒதுங்கிப்போகும் அகிலனைக்கூட விட்டுவைக்காமல் கதைக்குள் இழுப்பதும், மாமா, அத்தை, மச்சான் என்று வார்த்தைக்கு வார்த்தை உறவை சொல்லிச் சொந்தம் கொண்டாடிக்கொள்வதும் என்று சொந்தங்களைக் கொண்டாடி மகிழ ஆசைப்படுகிறாள் என்று விளங்கிற்று!

ஆனால் அவர்கள்? எழுந்த பெருமூச்சை அடக்கிக்கொண்டார்.

மத்தியான உணவை முடித்துவிட்டு நன்றாக உறங்கி எழுந்தாள் சஹானா. உற்சாகத்துடன் கீழே இறங்கப்போனவள், அங்கே யாரோ வந்திருந்து மாமா அத்தையுடன் பேசிக்கொண்டு இருப்பதைக் கண்டுவிட்டு, ஃபோனை எடுத்துக்கொண்டு திரும்பி மொட்டை மாடிக்கு இரண்டிரண்டு படிகளாகத் தாவினாள்.

அங்கே நின்றிருந்தான் அகிலன்.

எதிர்பாராமல் இவளைக் கண்டதும் உண்டான அதிர்ச்சியை வேகமாக மறைத்துக்கொண்டான். ஒரு சின்னப் புன்னகையைக் கொடுத்துவிட்டு ஒதுங்கிக் கீழே இறங்கப் போகவும், “உங்களுக்குச் சிரிக்க மட்டும் தான் தெரியுமா அகில் மச்சான்?” என்று கண்களில் குறும்பு மின்னக் கேட்டாள் சஹானா.

“இல்ல.. அப்பிடி இல்ல..” சின்னச் சங்கடச் சிரிப்புடன் அவன் தேங்க, “எப்ப பாத்தாலும் ஒரு சிரிப்போட ஓடிப்போறீங்க. கதைக்கிறீங்களே இல்ல. வெக்கமோ?” என்று, தலையைச் சரித்துக் கேலியாய் கேட்டுவிடவும் உதட்டில் மலர்ந்துவிட்ட சிரிப்புடன் முறைத்தான் அவன்.

“நான் என்ன பெட்டையே வெக்கப்பட? இங்க கேர்ள்ஸ்ஸோட போய்ஸ் பெருசா கதைக்க மாட்டீனம்.”

“நான் உங்கட மச்சாள். சந்தோசமா சைட் அடிப்பீங்க எண்டு பாத்தா கதைக்கவே மாட்டோம் எண்டு சொல்லுறீங்க?” அவளின் கேள்வியில் ஒருகணம் அதிர்ந்தாலும் சட்டென்று சிரித்துவிட்டான் அகிலன்.

“சும்மா ஃபிரியா விடுங்க பொஸ்! அதுசரி, என்ன களவு செய்ய மேல வந்தீங்க?” தரையிலிருந்து பார்த்தபோது ஓங்கி உயர்ந்து தெரிந்த முருங்கைமரம் மொட்டை மாடியில் அவளின் உயரத்துக்கு நிற்க, அதன் இலைகளைத் தன் முகத்தில் தடவியபடி கேட்டாள்.

“களவா? என்ன கள..வு?” அவனது தடுமாற்றத்திலேயே அவனைப் பிடித்துவிட்டாள் சஹானா.

“பொய் சொல்லாதீங்க அகில். இதா இல்ல இதா?” என்று குடிப்பது போலவும் புகைப்பது போலவும் அவள் செய்துகாட்ட, மாட்டிக்கொண்டதில் சமாளிப்பாய்ச் சிரித்தான் அவன்.

“இதெல்லாம் இல்ல.” அவளைப்போலவே குடிப்பதைச் சைகையில் காட்டிவிட்டு, பொக்கெட்டில் மறைத்து வைத்திருந்த சிகரெட்டை எடுத்துக் காட்டினான். “இது மட்டும் தான். அதுவும் ஒரு நாளைக்கு ஒண்டு இல்லாட்டி ரெண்டுதான். இல்லாட்டி அப்பா பிடிச்சிடுவார். இண்டைக்கு முழுக்கப் பத்தவே இல்ல எண்டு மேல இப்பதான் வந்தன். அதுக்குள்ள நீங்க..”

“நீ எண்டே சொல்லுங்கோ.”

“நீ வந்திட்டாய். இந்தா..!” என்று அவள் புறமும் ஒன்றைப் பெட்டியிலிருந்து தள்ளியபடி நீட்டினான் அவன்.

“நோ! நோ! எனக்கு இந்தப் பழக்கமெல்லாம் இல்லை!” என்று மறுத்தாள் அவள்.

கண்களால் சிரித்தான் அவன்.

“பாத்தியா, நீ என்னை விசாரிச்சுக் கண்டு பிடிச்சதை நான் விசாரிக்காமையே பிடிச்சிட்டன்.”

“அடப்பாவி!” என்று சிரித்தவளுக்கு, அவனும் தங்களின் செட் தான் என்று கண்டதில் சந்தோசமாய்ப் போயிற்று.

“அங்க நித்தி எண்டு ஒரு தடிமாடு இருக்கிறான். எப்பயாவது பியர் அடிப்பான். ஒருநாளைக்கு ஒரு சிகரெட் மட்டும் தான். அதுவும் என்னட்டத்தான் இருக்கும். நான் தான் குடுப்பன். அவன்ர பொக்கெட்டுல இருந்தா மாமி செக் பண்ணி பிடிச்சிடுவா எண்டு நான் தான் வாங்குறது. என்ர ஹாண்ட்பாக்ல இன்னும் இருக்கு. தரவா?” நண்பனின் நினைவுகளைச் சுகமான சோகத்துடன் இரைமீட்டபடி வினவினாள்.

“வெளிநாட்டுச் சரக்க வேணாம் எண்டு சொல்லுவனா, யாருக்கும் தெரியாம கொண்டுவா.” ஆவலாகச் சொன்னான் அவன்.

பெட்டியோடு கொண்டுவந்து கொடுத்தாள். “பத்திப்போட்டு பெட்டியை மட்டும் தாங்கோ. அவன்ர நினைவா இதுதான் இருக்கு!” சொல்லும்போதே குரல் தேய்ந்துபோயிற்று!

“கவலைப்படாத. திரும்பி வருவான். நான் நினைக்கிறன், ரட்ணம் அங்கிளுக்கு என்னவோ பிரச்சனை போல. இவன் உதவிக்குப் போயிருப்பான் எண்டு.”

அவனுடைய ஊகத்தைக் கேட்டு அவள் முகம் பூவாய் மலர்ந்தது. “அதேதான் நானும் நினைச்சன். முக்கியமான காரணமில்லாம இப்பிடி நடக்கமாட்டான். மாமாவும் அப்பிடித்தான்.”

அப்படியே வீட்டு நினைவு வந்துவிட்டதில் யாதவிக்கு அழைக்கப் பார்க்க, அவளது நெதர்லாந்து சிம் இலங்கையில் வேலைசெய்ய மறுத்தது. அகிலனின் ஃபோனில் பேசினாள்.

“அப்பா உன்னைக் கேட்டவரம்மா. ‘நீங்க நித்திரையா இருக்கேக்க வந்திட்டுப் போய்ட்டாள்’ எண்டு சொன்னனான். முகம் வாடிப்போனார். இனி நீ வந்தா நித்திரையா இருந்தாலும் எழுப்பட்டாம் எண்டு சொன்னவர். நான் ஓம் எண்டு சொல்லிச் சமாளிச்சு விட்டிருக்கிறன்.” சொல்லும்போதே யாதவிக்குக் குரல் அடைத்துக்கொண்டது. கணவரும் முடியாமல் படுத்திருக்க, மகளும் அருகில் இல்லாமல் தனிமையில் வெந்துகொண்டிருந்தார்.

“தனிய இருக்கக் கவலையா இருக்காம்மா?” தாயின் நிலையை உணர்ந்து ஆதரவாகக் கேட்டாள் மகள்.

“பரவாயில்ல செல்லம்! அப்பாக்காகத்தானே. அங்கயும் சின்னப்பிள்ளை மாதிரி நடக்காம எல்லாரையும் சமாதானமாக்கி அப்பாவோட கதைக்க வைக்கவேணும் சஹி.” குருவியின் தலையில் பனங்காயை வைத்ததுபோலச் செல்ல மகளுக்குப் பெரும் பொறுப்பைக் கொடுக்கிறோம் என்று எண்ணினாலும், வேறு வழியும் இருக்கவில்லை.

“நீங்க ஒண்டுக்கும் கவலைப்படாதீங்கோ அம்மா. எல்லாரையும் அப்பாவோட கதைக்க வைக்காம வரமாட்டன்.” ஆறுதலாகப் பேசிவிட்டு வைத்தாள்.

“அகில், எனக்கு சிம் மாத்தவேணும். அப்பிடியே இந்த ஊரையும் ஒரு சுத்துச் சுத்திக்கொண்டு வருவமா?” ஆர்வமாகக் கேட்டாள் அவள்.

“ஓ..! வா போவம்!” என்று உற்சாகமாய் இரண்டடி எடுத்து வைத்தவன் நின்று, “ஆனா, தனித்தனி சைக்கிள்ல போவம்!” என்றான் சின்னச் சங்கடச் சிரிப்போடு.

அவனுடைய பைக் என்று கீழே ஒரு யமகாவைப் பார்த்திருந்தாள். பிறகு எதற்கு சைக்கிள்? அவள் கேள்வியாக ஏறிட, “என்ர பிரெண்ட்ஸ் யாராவது உன்ன ஏத்திக்கொண்டு போறதை பாத்தா என்னை ஓட்டித் தள்ளுவாங்கள். அதுதான்..” என்று அவன் இழுக்கவும், கிளுக் என்று சிரித்துவிட்டாள் சஹானா.

“அச்சோ…! என்ர மச்சான்ர வெக்கம் வடிவா இருக்கே!” என்றவளின் நகைப்பு அடங்குவதாயில்லை.

அவனுக்கு உண்மையிலேயே வெட்கம் வந்துவிடும் போலாயிற்று! “சிரிக்காதயடி!” என்று, மண்டையில் எட்டிக் குட்டிவிட்டுச் சொன்னான் அவன். அந்தச் செய்கை நித்திலனை நினைவூட்டியதில் அகிலனை இன்னுமே மனதுக்கு நெருக்கமாக உணர்ந்தவள் கட்டுப்பாடே இல்லாமல் அவனை வம்புக்கு இழுக்க கீழே இறங்கி ஓடிவிட்டான் அகிலன்.

“நான் போறதுக்கிடையில உங்கட பைக்லை வந்து எல்லாரிட்டையும் மாட்டி விடுறனா இல்லையா பாருங்கோ!”

“ஹா! நடக்கவே நடக்காது! ஊருக்க ஐயா பேரோடையும் புகழோடையும் வாழுறன்!” என்று ஷேர்ட் கொலரைத் தூக்கிவிட்டான் அகிலன்.

“அந்தப் பேரையும் புகழையும் நானும் ஒருக்கா பாக்கிறன்!”

வாயாடிக்கொண்டு வந்த இருவரும் சிம் மாற்றிக்கொண்டு வருவதாகச் சொல்லிவிட்டு, அவன் அரவிந்தனின் பழைய சைக்கிளிலும் அவள் ராகவியின் சைக்கிளிலும் புறப்பட்டனர்.

புதிதாகப் போடப்பட்ட தார் வீதியில் கரையோரமாக ஓங்கி வளர்ந்த மரங்களும், சுகமாய் வீசிய காற்றும், மதில்களோடு கூடிய அழகழகான வீடுகளும், அதற்குள் இருந்து எட்டி வெளியே வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த மரங்களும், பறவைகளின் கத்தல்களும் என்று எல்லாமே அவளுக்குள் உற்சாகத்தைக் கிளப்பின.

சிம் மாற்றியதும் தாய்க்கு புது நம்பரை அனுப்பிவிட்டாள். திரும்பி வரும்போது, தகப்பனின் வீட்டைப் பார்க்கும் ஆவல் எழ, “அப்பம்மா வீட்டுக்கு எந்தப்பக்கம் போகவேணும் அகில் மச்சான்?” என்று விசாரித்தாள்.

“சும்மா பாத்துக்கொண்டு வருவமா? அடுத்ததா வாற ரோட்டுல திரும்பினா சரி.” என்று அவன் கேட்கவும், “ஓம் ஓம் வாங்கோ!” என்று பெரும் ஆர்வமாகப் புறப்பட்டாள்.

அது சற்றே உள் பாதை என்பதில் ஒருவரை மற்றவர் முந்துகிறோம் என்று போட்டி வைத்தபடி, அவன் முந்த பார்த்தால் இடிப்பது போல் கொண்டுபோய் இவள் தடுத்துக்கொண்டே இருக்க, “நெதர்லாந்துல பிறந்து வளந்திட்டு உள்ளூர் ரவுடி மாதிரி என்னெண்டு சைக்கிள் ஓடுறாய்?” என்று வியப்புடன் விசாரித்தான் அவன்.

“நெதர்லாந்திலையும் நாங்கள் சைக்கிள் ஓடுறது கூட மச்சான். இங்க மாதிரி இல்ல, சைக்கிளுக்கு என்றே ரோட்டுக்கு பக்கத்தில பாதை இருக்கும். பயமே இல்லாம ஓடலாம். நாங்க மூண்டுபேரும் எப்பவும் போவோம்! அந்த நாட்டு மக்களுமே காரை விடச் சைக்கிளைத்தான் கூட விரும்புறது. பாவிக்கிறது.” என்றவளுக்குத் தாய் தந்தையின் நினைவில் முகம் வாடிப்போயிற்று!

அந்த வினாடியைப் பயன்படுத்தி அவன் முந்திவிட்டு, திரும்பிப் பார்த்துக் கட்டை விரலை ஆட்டிக்காட்டவும், “விடமாட்டன்!” என்றபடி வேகமாய் மிதிக்கத் தொடங்கினாள் சஹானா.

error: Alert: Content selection is disabled!!
Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.

Powered By
Best Wordpress Adblock Detecting Plugin | CHP Adblock