நீ தந்த கனவு 12(1)

அந்த வீடு, மழையடித்து ஓய்ந்ததுபோல் ஓய்ந்துபோயிருந்தது. அகரனுக்குத் தந்தையை நிமிர்ந்து பார்க்கவே முடியவில்லை. அருகில் நின்றவள் மீது ஆத்திரமும் சினமும் பொங்கிற்று. அதைக் காட்ட வழியற்று இறுகிப்போய் நின்றான்.

இளந்திரையனுக்கு மகன், வருங்கால மருமகள் இருவர் மீதும் மிகுந்த கோபம். அவசரப்பட்டோ ஆத்திரப்பட்டோ வார்த்தைகளை விட அவர் ஒன்றும் அவர்கள் அல்ல. அதில், “சியாமளாவைக் கூட்டிக்கொண்டுபோய் வீட்டுல விட்டுட்டு வா!” என்று அகரனிடம் சொல்லிவிட்டு, ஆதினியைத் தேடி மாடி ஏறினார்.

எப்போதும், அன்பும் பரிவுமாக அரவணைத்துப் போகிறவர், இன்றைக்கு, அவளைத் திரும்பியும் பாராமல் சொல்லிவிட்டுப் போனதில், சியாமளாவுக்கு மளுக்கென்று கண்ணீர் இறங்கிற்று. அகரனைத் திரும்பிப் பார்த்தாள். அவன் முகம் இன்னுமே கோபத்தில் கடுத்திருந்தது. வண்டியின் திறப்பை எடுத்துக்கொண்டு விருட்டென்று வெளியே நடந்தான். அவளை வா என்று அழைக்கவுமில்லை, வருகிறாளா என்று திரும்பிப் பார்க்கவுமில்லை.

திகைத்து நின்றாள் சியாமளா. அவளுக்கு, ஆதினியின் மீதும், அவளின் செய்கைகள் மீதும் கோபம் இருப்பது மெய். இருந்தாலும் கூடக் கெட்ட எண்ணத்தில் எதையும் செய்யவில்லை. அவளைத் திருத்தி, அண்ணனுக்கு ஏற்றவளாக மாற்றவேண்டும் என்றுதான் நினைத்தாள். அது, இப்படியாகிப்போனது. அகரன் இப்படி வார்த்தைகளை விட்டு, ஆதினியை அடிப்பான் என்பது அவளே எதிர்பாராதது. செய்தது அவன். குணம் கெட்டவள் போன்ற விம்பம் உருவாகியிருப்பது அவளுக்கு. இதில், அவனும் கோபப்பட்டால் என்ன செய்வாள்?

அவனது பைக் அவன் மனத்தைச் சொல்வதுபோல் உறுமிக்கேட்டது. நெஞ்சு நடுங்க ஓடிப்போய் ஏறிக்கொண்டாள். விருட்டென்று அவன் எடுத்த வேகத்தில், ஒருமுறை பின்னே சென்று வந்தவள் இறுக்கமாக அவன் தோளைப் பற்றிக்கொண்டாள்.

ஆதினியின் அறை இருளில் மூழ்கியிருந்தது. அவள் கட்டிலில் சுருண்டிருப்பது வரி வடிவமாகத் தெரிந்தது. கனத்துப்போன மனதோடு அறை வாசலில் நின்று அவளையே பார்த்தார், இளந்திரையன்.

அவர் வந்திருப்பதை ஆதினியும் உணர்ந்துதான் இருந்தாள். அவர் மீது அவளுக்கு மிகுந்த வருத்தம் உண்டு. மனத்தாங்கலும் உண்டு. ஆனபோதிலும், தனக்காக மாடியேறி வந்த தந்தையை, அலட்சியம் செய்ய முடியாமல் எழுந்து, கட்டிலில் சம்மணம் கட்டிக்கொண்டு அமர்ந்தாள். அவளின் அருகில் வந்து அமர்ந்தார் இளந்திரையன். அப்போதும், அவள் நிமிரவில்லை. அவளின் தலையை மெல்ல வருடிக்கொடுத்தார். ஆதினியின் விழிகள் உடைப்பெடுக்க ஆயத்தமாகியது.

“அப்பாவோட கோவமாமா?” கனிந்தொலித்த அவரின் குரல் அழக்கூடாது என்கிற அவளின் கட்டுப்பாட்டைத் தகர்த்து எறிந்தது. உடைந்து விம்மியபடி அவரின் தோளில் சாய்ந்தாள்.

“அம்மா இல்லாம போயிட்டா எண்டு கவலைப்படுறியாமா?”

“சொறி அப்பா!” தன்னுடைய அந்த வார்த்தைகள், அவரை எந்தளவில் காயப்படுத்தியிருக்கும் என்று தெரிந்ததில், இன்னுமே உடைந்தாள் ஆதினி.

அதற்கு அவர் ஒன்றும் சொல்லவில்லை. அவரின் கரம் அவள் தலையை வருடிக்கொடுப்பதை மட்டும் நிறுத்தவில்லை. சும்மா இருந்த பெண்ணின் மனதில் தேவையில்லாத எண்ணங்களைப் புகுத்தி, இப்படிக் கண்ணீர் வடிக்க விட்டுவிட்டோமே என்று மிகுந்த கவலையாயிற்று. மெல்ல அவளைத் தேற்றினார். அழுகை நின்றதும் அருந்தத் தண்ணீர் கொடுத்துவிட்டு, நடந்தவற்றை முழுமையாகக் கேட்டுத் தெரிந்துகொண்டார்.

எல்லாளன் சியாமளா இருவரையும் அவரால் புரிந்துகொள்ள முடிந்தது. வாழ்வில் ஏதாவது ஒன்று நடந்துவிட்டால் தாங்கிப்பிடிக்க யாருமற்ற அநாதரவான நிலை அவர்களது. அதனாலேயே, வயதுக்கு மீறிய பக்குவமும் பொறுப்பும் கவனமும் அவர்கள் இருவரிடமும் உண்டு. எப்போதுமே வாழ்க்கையைத் தீவிரமாக நோக்குபவர்கள். ஆனால், ஆதினி அப்படியல்ல. தந்தையும் தமையனும் மட்டும்தான் என்றாலும் பிறந்ததில் இருந்தே செல்வாக்கும் செல்லமுமாக வளர்ந்த பெண். வாழ்க்கையை விளையாட்டாகப் பார்ப்பவள். இப்படி, வாழ்க்கை மீதான கண்ணோட்டம் இரு தரப்புக்கும் வேறு வேறு. அப்படியானவர்களை இணைக்க முயன்றது அவரின் தவறோ?

ஒரு நெடிய மூச்சு ஒன்று அவரிடம் இருந்து வெளியேறியது. தன் வார்த்தைகளினாலோ என்று தவித்துப்போனாள் ஆதினி. நேற்று வரையில் அம்மா இல்லை என்பதை ஒரு குறையாக அவள் உணர்ந்ததில்லை. ஆனால், இன்றைக்கு உணர்ந்தாள். இதோ, இந்த நிமிடத்தில் கூட, அவளை அப்படியே ஏற்றுக்கொள்ளும் ஒரு உறவுக்காக, அவள் மனது அலைபாய்ந்துகொண்டுதான் இருந்தது. அதைத் தந்தையிடம் சொல்ல மனமில்லை. இன்னும் உடைந்துபோவார். அதில், தன் மனதை மறைத்து, “சொறி அப்பா!” என்றாள் மீண்டும்.

அவர் முகத்தில் கண்களை எட்டாத மெல்லிய முறுவல். “அதெல்லாம் ஒண்டும் இல்ல. என்ன எண்டாலும் அப்பா உனக்காக இருப்பன். உனக்குப் பிடிக்காத எதையும் செய்யவும் மாட்டன், சரியா? மிச்சத்தை நாளைக்குக் கதைப்பம். எதையும் யோசிக்காமப் படு!” என்றுவிட்டு எழுந்துபோனார்.

போகிறவரையே பார்த்திருந்தவளுக்குக் கண்கள் கரித்துக்கொண்டு வந்தது. காரணமே இல்லாமல் காண்டீபனின் நினைவு வந்தது. அன்று, தான் ஏதோ சரியில்லை என்று உணர்ந்தும், தன் கண்ணீரைப் பார்த்தும் எதுவும் விசாரிக்காமல், தலையைப் பிடித்து ஆட்டிவிட்டவனின் அருகண்மை வேண்டும் போலிருந்தது.

அவனோடு பேச நினைத்தாள். நம்பர் இல்லை. அவன் பெயரைப்போட்டுக் கூகுளில் தேடினாள். கைபேசி இலக்கம் கிடைக்கவில்லை. ஆனால், மின்னஞ்சல் முகவரி இருந்தது. அவனுடையதுதானா, அனுப்பினாலும் பார்ப்பானா என்று கேள்விகள் பல குடைந்தாலும், ஒரு முயற்சியாக, ‘அண்ணா, நான் ஆதினி. எனக்கு உங்களைப் பாக்கோணும். எங்க நிக்கிறீங்க?’ என்று எழுதி அனுப்பிவிட்டாள்.

இங்கே, எல்லாளனின் வீட்டு வாசலில் பைக்கை கொண்டுவந்து நிறுத்தினான் அகரன். அதுவரையில், இருவரும் ஒரு வார்த்தை பேசிக்கொள்ளவில்லை. சியாமளாவினால் இந்தக் கனம் மிகுந்த மௌனத்தைத் தாங்கிக்கொள்ள முடியவில்லை. ஏதாவது கேட்டு, பேசி, திட்டி என்று அவன் தன் கோபத்தைக் காட்டிவிட்டால் பரவாயில்லை என்றெண்ணினாள். அந்தளவில் வதைத்தது அவனின் பேச்சற்ற ஒதுக்கம். “அகரன்…” பைக்கிலிருந்து இறங்கி, அவன் முன் வந்து நின்று, கெஞ்சும் குரலில் அழைத்தாள். “நீங்களா ஒரு முடிவை எடுக்காம நான் சொல்லுறதக் கொஞ்சம் கேளுங்க, பிளீஸ்..”

“ஓகே! நான் கேக்கிறதுக்கு மட்டும் சொல்லு. ஆதி சொன்னதெல்லாம் உண்மையா?” அவனின் குரலில் தென்பட்ட கடினமே கண்ணீரை வரவழைக்க, அவளின் தலை மிகுந்த பயத்துடன் மேலும் கீழுமாக அசைந்தது.

அவன் விழிகள் அவளை எரித்தன. கோபத்தை அடக்குகிறான் என்று அவன் தாடை இறுகியதிலேயே புரிந்தது. “அகரன்..” என்றவளிடம், “உன்ர கொண்ணனுக்கு அவளைக் கட்ட விருப்பம் இல்லையா? உனக்காகவா ஓம் எண்டு சொன்னவன்?” என்று அடுத்த வினாவைப் பல்லைக் கடித்தபடி வீசினான்.

இதுவரையில், இப்படியொரு கோப முகத்தை அவனிடம் அவள் கண்டதில்லை. நெஞ்சு நடுங்க, தன் நிலை மிக மிக மோசமாகப் போய்க்கொண்டிருப்பதை உணர்ந்தபடி, அப்போதும் தலையை ஆமென்று அசைத்தாள்.

error: Alert: Content selection is disabled!!
Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.

Powered By
Best Wordpress Adblock Detecting Plugin | CHP Adblock