• நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.
    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

அழகென்ற சொல்லுக்கு அவளே - 8

நிதனிபிரபு

Administrator
Staff member
அத்தியாயம் 7ன் மிகுதி :

இப்போது அவரையும் அவர் தவறு நிம்மதியாக இருக்க விடாமல் உறுத்தியது. எப்படியாவது அவளிடம் மன்னிப்பைக் கேட்டுத் தன்னை விளக்கிவிட முயன்றார்.

ஆனால் அவளோ, “நீங்க ஒண்டும் பொய் சொல்லேல்லையே. இன்னுமே சொல்லப்போனா இத்தனை காலமும் நான் வாழ்ந்த வாழ்க்கைதான் பொய். நீங்க சொன்னதாலதான் நான் ஆர் எண்டுற உண்மை எனக்குத் தெரிய வந்ததும்.” என்றுவிட்டாள்.

கூடவே, “கார்மெண்ட்ஸ் கணக்குவழக்கெல்லாம் எப்ப வேணுமெண்டாலும் நீங்க செக் பண்ணலாம். இல்ல, உங்கள்ள ஆருக்காவது கார்மெண்ட்ஸ மொத்தமா உங்கட பொறுப்பில எடுக்க விருப்பம் எண்டாலும் சொல்லுங்க, எல்லாத்துக்கும் நான் ரெடியாத்தான் இருக்கிறன். அப்பம்… அது தையல்நாயகி அம்மா கடைசி நேரத்தில கூட நீதான் பொறுப்பா இருக்கோணும், கார்மெண்ட்ஸ உடைய விடாமப் பாக்கோணும் எண்டு திரும்ப திரும்பச் சொன்னவா. அதால மட்டும்தான் இன்னும் அங்க போய் வாறன்.” என்றும் சொல்லிவிட்டுப் போகவும் கண்ணீருடன் பார்த்து நின்றார் ஜெயந்தி.

இங்கே ஒரு பக்கம் மிதுன் சுவாதி திருமண வேலைகள் மிக வேகமாக நடக்க ஆரம்பித்தன. நிலனுக்கு இந்தச் சந்தர்ப்பத்தை விட்டுவிட விருப்பமில்லை. அதைவிட, இதை விட்டால் அவளைப் பிறகு தன்னிடம் கொண்டுவர முடியாமலேயே போய்விடுமோ என்கிற பயமும் அவனைத் தொற்றிக்கொண்டது.

அதற்கு முதல் அவளோடு பேச வேண்டும். என்ன முயன்றும் அது மட்டும் நடப்பதாக இல்லை.

பொறுத்து பொறுத்துப் பார்த்தவன் கடைசியில் காரியத்தில் இறங்கினான்.

அன்று காலை, வழமை போன்று விசாகனோடு தொழிற்சாலைக்குப் பயணித்துக்கொண்டிருந்தாள் இளவஞ்சி. அப்போது அவர்களை முந்திய நிலனின் கார், வேகத்தைக் குறைத்து, இருபக்கத்து சிக்னல் லைட்டுகளையும் ஒரே நேரத்தில் ஒளிர விட்டு சமிக்ஜை செய்தது.

தன்னைப் பின்தொடர்ந்து வரச் சொல்கிறான். எத்தனை முறை தவிர்த்தாலும் விடாமல் துரத்துகிறவன் மீது கோபம் உண்டாக, “நீங்க நேரா தையல்நாயகிக்கு விடுங்க விசாகன்.” என்றுவிட்டு வீதியோரத்தில் பார்வையைப் பதித்துக்கொண்டாள் இளவஞ்சி.

ஆனால், அவளின் கார் நிலனின் காரைப் பின்தொடர்ந்தது.

“விசாகன், நீங்க தையல்நாயகிக்கு விடுங்க.” தான் சொன்னதைச் செய்யாமல் என்ன செய்கிறான் இவன் என்கிற சினம் மெலிதாகத் தெறிக்கச் சொன்னாள் இளவஞ்சி.

அவன் ஒன்றுமே சொல்லவில்லை. ஆனால், நிலனின் கார் ஒரு வீட்டின் முன்னே சென்று நிற்க, அதன் பின்னால் கொண்டுபோய் இந்தக் காரையும் நிறுத்தினான்.

நம்ப முடியாமல் விசாகனையே பார்த்தாள் இளவஞ்சி. கடந்த சில நாள்களில் நிறையப் பார்த்துவிட்டதாலோ என்னவோ அளவுக்கதிகமாக அதிரவெல்லாம் இல்லை. ஆனாலும் உள்ளே ஒரு வலி குடைந்தது.

அவன் இப்படிப் பொய்த்துப் போயிருக்க வேண்டாம் என்றே நினைத்தாள். அவனோடு அவனை நம்பி எங்குப் பயணிக்கவும் அவள் யோசித்ததேயில்லை. அவன் அவன் எல்லையில் நின்றாலும் அவள் அவனை ஒரு நண்பனாகத்தான் பாவித்திருக்கிறாள். அவ்வளவு நம்பிக்கை.

‘என் குடும்பம்’ என்று நினைத்தவர்கள் அவள் குடும்பத்தினர் இல்லையாம். நம்பிக்கையானவன் என்று நம்பிய ஒருவன் அவளை முற்றிலும் ஏமாற்றியிருக்கிறான். பிறகு என்ன அவள் பெரிய வெற்றிகரமாகத் தொழிலை நடத்துகிறவள்? விரக்தி நெஞ்சைச் சூழ்ந்தது.

இதற்குள் தன் காரிலிருந்து இறங்கி அவர்களிடம் வந்த நிலன், அவள் பக்கத்துக் கதவைத் திறந்து, “இறங்கு வஞ்சி!” என்றான்.

ஒருமுறை நிதானமாக அவன் முகத்தையே பார்த்துவிட்டு இறங்கினாள் இளவஞ்சி.

விசாகனுக்கு உள்ளே உள்ளம் உதறாமல் இல்லை. கூடவே ஒரு குற்றவுணர்ச்சியும். கோபப்படுவாள், ஏதாவது சொல்வாள் என்று அவளையே பார்க்க, “இது எத்தின நாளா?” என்றாள் அவள் நிலனிடம்.

சிறிதாய்த் தயங்கினாலும், “நாலு வருசமா.” என்றான் நிலன்.

“சோ, என்ர கைய விட்டுப் போன பல டீலுகளுக்குப் பின்னால இருந்தது விசாகன்?”

ஆம் என்பதுபோல் தலையை அசைத்தான் நிலன்.

“முத்துமாணிக்கம் அங்கிள் கார்மெண்ட்ஸ விக்கப்போறார் எண்டுற விசயம் தெரிய வந்ததும் இப்பிடித்தான்.”

பதிலெதுவும் சொல்லாமல் இறுக்கமாக நின்றான் நிலன்.

ஒரு நொடி யோசித்துவிட்டு, “அண்டைக்கு சுவாதி எனக்குத்தான் ஃபோன் பண்ணிச் சொன்னவள். அங்க போறவரைக்கும் நான் அவளோட கதைச்சுக்கொண்டேதான் இருந்தனான். ஆனா எனக்குப் பின்னால நீங்களும் வந்திட்டீங்க. சோ, நியூஸ் தந்தது விசாகன்?” என்றாள் அவன் மீதே பார்வையைப் பதித்து.

உதடுகள் கோடாக அழுந்த அதற்கும் ஆம் என்பதுபோல் தலையை அசைத்தான் நிலன்.

அவனையே இமைக்காது ஒரு கணம் பார்த்தவள் விசாகனின் புறமாகத் திரும்பிக் கையை நீட்டினாள்.

காரின் திறப்பைக் கேட்கிறாள். என்ன செய்யட்டும் என்பதுபோல் நிலனைப் பார்த்தான் விசாகன்.

“அவன் இருக்கட்டும் வஞ்சி.” என்றான் நிலன்.

அவள் நீட்டிய கையை இறக்கவும் இல்லை, அவன் சொன்னது காதில் விழுந்ததுபோல் காட்டிக்கொள்ளவும் இல்லை.

“வஞ்சி!”

அவள் அசையவில்லை.

“அவன் நம்பிக்கையானவன்தான். இருக்கட்டும் விடு.”

அப்போதும் அவளிடம் மாற்றமில்லை.

கடைசியில் நிலன்தான் இறங்கி வந்தான். தற்போதைய முக்கிய விடயம் விசாகன் இல்லை என்பதில், கொடு என்பதாக விசாகனிடம் தலையசைத்தாள்.

அதன் பிறகே கொடுத்தான் விசாகன்.

“சம்பளம் வாங்கிறது என்னட்ட. விசுவாசம் அங்க!” உதட்டோரம் ஒரு விதமாய் வளையச் சொன்னாள் இளவஞ்சி.

விசாகனின் முகம் கறுத்தது. அவள் பார்வையை நேரடியாகச் சந்திக்க முடியாமல் தடுமாறினான். அதுவும் இந்தக் கொஞ்ச நாள்களாக அவள் எப்படி உடைந்திருந்தாள் என்று அவனுக்கு நன்றாகவே தெரியும். அப்படியிருக்கத் தானும் அவளுக்குத் துரோகமிழைத்தது குத்தியது.

“அடுத்தது என்ன?” என்றாள் நிலனை நோக்கி.

இந்த நேரத்திலும் நிதானமாகச் சூழ்நிலையைக் கையாள்கிறவளை அவனால் மெச்சாமல் இருக்க முடியவில்லை. தனக்கு என்று வருகிறபோதெல்லாம் அவள் இப்படித்தான் இருக்கிறாள். தன்னுடையவர்கள் என்று வருகையில்தான் பதறிவிடுகிறாள்.

“உன்னோட கதைக்கோணும், வா!” என்று அந்த வீட்டினுள் அழைத்துப்போனான்.

அத்தியாயம் 8


அது சக்திவேலரின் பெற்றோர் வாழ்ந்த வீடு என்று அங்கே தொங்கிக்கொண்டிருந்த புகைப்படங்களையும், அதில் தோற்றம், மறைவு என்று இருந்ததன் கீழ் இருந்த ஆண்டுகளையும் வைத்துக் கணித்தாள் இளவஞ்சி. அதே நேரம் நல்ல பராமரிப்பிலும் இருந்தது.

“கிழமைக்கு ஒருக்கா ஒரு அக்கா வந்து கிளீன் பண்ணிப்போட்டு போவா. இஞ்ச ஒருத்தரும் தங்கிறேல்ல. நான் மட்டும் அப்பப்ப வந்திட்டுப் போவன்.” அவளிடம் சொன்னபடி சமையற்கட்டில் நின்று தேநீர் தயாரித்துக்கொண்டிருந்தான் நிலன்.

அவளிடமிருந்து சத்தமே இல்லை என்றதும் அங்கிருந்தே திரும்பிப் பார்த்தான். அங்கிருந்த சின்ன சாப்பாட்டு மேசையில் அமர்ந்திருந்து, ஐபாடில் கவனமாக இருந்தாள் அவள்.

எதுவுமே நடக்கவில்லை என்று காட்ட முயல்கிறாளா, இல்லை நடந்த எதுவும் தன்னைப் பாதிக்கவில்லை என்று காட்ட நினைக்கிறாளா? எதுவாயினும் அது பொய். அவளுக்குள் நடக்கும் ஆழிப்பேரலையை வெளியே காட்டிவிடக் கூடாது என்று கவனமாயிருக்கிறாள்.

இருவருக்குமான தேநீர்க் கோப்பைகளை இரண்டு கைகளிலும் சுமந்து வந்தவன், அவள் முன்னே ஒரு கோப்பையை வைத்துவிட்டு, “சாப்பிடுறதுக்கு ஒண்டும் இல்ல. தேத்தண்ணி மட்டும்தான்.” என்றபடி தன்னுடையதோடு அவள் எதிரில் அமர்ந்தான்.

அதற்காகவே காத்துக்கொண்டிருந்தாள் போலும். செய்யவேண்டிய ஏதோ ஒன்றைச் செய்து முடித்துவிட்டு, ஐபாடை மூடி வைத்துவிட்டு நிமிர்ந்து, “சொல்லுங்க, என்ன கதைக்கோணும்?” என்றாள்

அவளையே பார்த்தபடி தேநீர் பருகினான் நிலன். அவளும் தன் பார்வையை அகற்றிக்கொள்வதாக இல்லை.

தன்னுடைய கோப்பையை மேசையில் வைத்துவிட்டு, “தேத்தண்ணி நல்லாருக்கிற மாதிரித்தான் இருக்கு. நீயும் குடிச்சுப் பார்.” என்றான் அவளுடையதைக் கண்ணால் காட்டி.

“உங்களோட இருந்து தேத்தண்ணி குடிக்க எனக்கு நேரமில்லை நிலன். வேலை நிறைய இருக்கு.”

“நீ இப்பிடி இவ்வளவு இறுக்கமா இருந்தா நான் எப்பிடிக் கதைக்க?”

“இதுதான் நான்.”

இல்லை என்பதுபோல் குறுக்காகத் தலையை அசைத்துவிட்டு, “இந்தக் கதையைப் போய் வேற ஆரிட்டயும் சொல்லு. இந்த வஞ்சி எப்பிடி இருப்பாள் எண்டு எனக்குத் தெரியும்.” என்றான் அவன்.

“சரி அப்பிடியே இருக்கட்டும். ஆனா அது இருவது வயது வஞ்சி. இது இருபத்தி எட்டு வயது வஞ்சி.”

இவளோடு வாதாடி ஆகாது என்று புரிந்துவிட, “மிதுன் சுவாதி கலியாணத்தோட எங்கட கலியாணத்தையும் வைப்பமா?” என்று நயமாய் வினவினான்.

“நான் சுவாதிக்கு அக்காவா வளந்தவள்.”

“ஆனா அக்கா இல்லையே!” என்றான் அவன் உடனேயே.

“சரி அப்பிடியே இருக்கட்டும். ஆனா, இன்னும் ஏன் இதையே பிடிச்சுக்கொண்டு தொங்குறீங்க? அந்த வீடோ, அந்தத் தொழிலோ, அந்த வசதி வாய்ப்போ என்ர இல்ல நிலன். இன்னுமே சொல்லப்போனா இப்ப நான் உங்கள விடப் பல படி கீழ. அட்ரஸே இல்லாத ஒருத்தி. அவேன்ர தொழிலப் பாத்துக் குடுக்கிறவள் மட்டும்தான். அப்பிடியான என்னைக் கட்டி என்ன செய்யப் போறீங்க?”

அப்படிக் கேட்டவளை உள்ளம் மருகப் பார்த்தான்.

விலாசமற்றவளா அவள்? தொழிலைப் பார்த்துக் குடுக்கிறவளாம். கோபம் கூட வரும்போலிருந்தது அவனுக்கு.

ஆனாலும் ஆரம்பித்துவிட்ட பேச்சைத் திசை திருப்ப விரும்பாமல்,
“இதெல்லாம் தெரிஞ்ச பிறகும் கேக்கிறதிலேயே உனக்குத் தெரியேல்லையா, உன்னை நான் உனக்காக மட்டும்தான் கேக்கிறன் எண்டு.” என்றான்.

“அதுதான் தொழில்ல கால வாரி விடுற வேலைய எல்லாம் நல்லா பாத்தீங்க போல.” என்று உதட்டை வளைத்தாள் அவள்.

அவன் ஏதோ சொல்ல வரவும் தடுத்து, “தொழில் வேற வாழ்க்கை வேற எண்டு சொல்லாதீங்க. அது தொழில்துறை ஆக்கள் வேறயாவும் சொந்த வாழ்க்கைல இருக்கிற ஆக்கள் வேறயாவும் இருக்கேக்க மட்டும்தான் பொருந்தும். அப்பவும் பொருந்துமா எண்டுறது எனக்கு டவுட்தான். சும்மா ஒரு பேச்சுக்குக் கேக்கிறன், நாளைக்கு உங்கட தம்பியும் தனியா ஒரு கார்மெண்ட்ஸ ஆரம்பிக்கிறான் எண்டு வைங்க. அப்ப அவனுக்கும் அவனுக்குத் தெரியாம ஆள் வச்சு, அவன்ர தொழில் ரகசியங்களை அறிஞ்சு, அவனை எழும்ப விடாமச் செய்ற மாதிரியான வேலைகளப் பாப்பீங்களா? சொல்லுங்க, நீங்கதான் தொழில் வேற வாழ்க்கை வேற எண்டு பாக்கிற ஆளாச்சே!” என்று கேட்டாள் அவள்.

அவன் அமைதியாய் இருக்க, “சோ, இந்த உன்னப் பிடிச்சிருக்கு, உனக்காகத்தான் உன்னக் கேக்கிறன் எண்டு படங்கள்ல வாற டயலாக்ஸ விட்டுட்டு உண்மைக் காரணம் என்ன எண்டு சொல்லுங்க.” என்றாள் அவள்.

“விசாகனை என்ர ஆளா மாத்தினது நாலு வருசத்துக்கு முதல். உன்னைப் பிடிக்க ஆரம்பிச்சது இப்ப ரெண்டு வருசத்துக்கு முதல்.”

ஆக, இப்போதும் அவன் வெளிப்படையாகப் பேசத் தயாராயில்லை. அவளைப் பிடித்திருக்கிறது என்பதிலேயே நிற்கிறான்.

அலுப்புடன் அவனைப் பார்த்துவிட்டு அவள் எழுந்து புறப்பட, இருக்கையை விட்டு எழாமலேயே அவள் கரம் பற்றி இழுத்துத் தன்னிடம் கொண்டுவந்தான் நிலன்.

அதிர்ந்து பார்த்தாள் இளவஞ்சி. அவள் அதிர்ச்சியை உள்வாங்கினாலும் தயங்காது அவளைத் தன்னுடன் சேர்த்துப் பிடித்தபடி, “எனக்கும் உனக்குமான கலியாணம் நடந்தே ஆகோணும் வஞ்சி. எனக்கு உன்னட்டப் பொல்லாதவனா நடக்க விருப்பம் இல்ல. நீயும் என்னை அப்பிடி நடக்க வைக்காத ப்ளீஸ்.” என்று சொன்னான்.

இமைக்காது அவனையே பார்த்துவிட்டு, “அப்பம்மா… தையல்நாயகி அம்மா அடிக்கடி ஒண்டு சொல்லுவா. ராணியா வாழ ஆசைப்பட்டா ராஜாவத் தேடாத, ராஜாங்கத்தத் தேடு எண்டு. அதுல நான் அண்டைக்குச் சறுக்கினது இண்டைக்கு வரைக்கும் என்னைத் துரத்துது என்ன?” என்றாள், என்னவென்று இனம் பிரிக்க முடியா ஒரு வகைக் குரலில்.

மெல்லிய அதிர்வுடன் அவன் கைகள் தானாய் விலகின.

“ஆனா பாருங்க, நான் தேடின ராஜாங்கமும் எனக்குச் சொந்தமில்ல. நான் இஞ்ச ராணியும் இல்ல. சோ ப்ளீஸ், என்னை விட்டுடுங்க.”

 
Last edited:

நிதனிபிரபு

Administrator
Staff member
அதற்கு அவன் பதில் சொல்வதற்கிடையில் நிலனுக்கு விசாகன் அழைத்தான்.

அழைப்பை ஏற்றுப் பேசிவிட்டு வைத்தவன், “உன்னை என்ன செய்றது?” என்றான் அவளிடமே.

புறப்படப்போனவள் நின்று அவனைக் கேள்வியாக ஏறிட்டாள்.

“விசாகன விட்டுடு வஞ்சி.”

உதட்டோரம் சிறு சிரிப்பொன்று தவழ, “நான் நல்லவளா எனக்குத் தெரியாது நிலன். ஆனா எனக்குத் துரோகம் செய்தவேய சும்மா விடுற அளவுக்கு நல்லவளே இல்ல.” என்றாள்.

விசாகன் எந்த செக்கியூரிட்டி நிறுவனத்திலிருந்து வேலைக்கு அமர்த்தப்பட்டானோ அந்த நிறுவனத்திற்குப் புகாரளித்து, அவன் வேலையைத் தாற்காலிகமாகப் பறித்திருந்தாள் இளவஞ்சி. அது மட்டுமல்லாது அவளின் தொழில் இரகசியங்களை விற்றிருக்கிறான் என்கிற பெயரில் காவல்துறையில் புகாரானதில் அவனாகவே காவல்நிலையம் செல்ல வேண்டும், இல்லையானால் தேடி வந்து கைது செய்வார்கள் என்கிற நிலைக்கு இருந்த இடத்திலிருந்தே அவனைக் கொண்டுவந்திருந்தாள்.

ஆனந்திக்கு அனுப்பிய ஒற்றை மெயில் அத்தனையையும் முடித்திருந்தது.

“வஞ்சி, இது நடந்தா அவன்ர மொத்த எதிர்காலமும் பாழாகிடும்.”

“அத அவர் யோசிச்சிருக்கோணும்.”

ஒரு நொடி அவளைப் பார்த்துவிட்டு, “இன்னும் கொஞ்ச நேரம் இரு. சிலது உன்னட்டச் சொல்லோணும்.” என்றான் அவன்.

சரி என்று அவளும் சென்று பழையபடி அமர்ந்துகொண்டாள்.

“தையல்நாயகி எண்டுற பிராண்ட எங்கட இண்டஸ்ட்ரில இருக்கிற எல்லாருக்கும் தெரியிற அளவுக்குக் கொண்டுவந்தது தையல்நாயகி அம்மா எண்டா, அதைப் பாத்துக்கொண்டிருக்க வளத்துக்கொண்டு போனது நீ. ஒண்டுக்கு நாலு ஆம்பிளைகள் முயற்சி செய்தும் உன்ர வளர்ச்சியைத் தடுக்கேலாம இருந்தது. தரம், சரியான விலைய நிர்ணயிக்கிறது, சொன்ன திகதில டெலிவரி பண்ணுறது, நல்ல நல்ல ஆர்டர்ஸ பிடிக்கிறது எண்டு நீ வளந்துகொண்டே போனாய்.” என்றுவிட்டு நிறுத்தினான்.

தான் சொல்வதைச் சரியான விதத்தில் புரிந்துகொள்வாளா என்று பார்க்க, அவள் முகத்திலிருந்து அவனால் எதையும் படிக்க முடியவில்லை.

“உனக்கு விளங்குமா தெரியாது, காலம் காலமா இந்தத் துறையில நம்பர் வன் நாங்கதான் எண்டு இருந்த ஆக்களால அத அவ்வளவு ஈஸியா ஏற்றுக்கொள்ளவே ஏலாது வஞ்சி. அதுதான் எங்களுக்கும் நடந்தது. நாங்க என்ன பிழை விடுறம் எண்டும் தெரியேல்ல, நீ அப்பிடி என்ன எங்களை விட எக்ஸ்ட்ராவா செய்றாய் எண்டும் தெரியேல்ல. அதுவும் எனக்கு…” என்றவன் திரும்பவும் அவளைப் பார்த்தான்.

சொல்லி முடி என்பதுபோல் அமர்ந்திருந்தாள் அவள்.

“எனக்குப் பின்னால சுத்திக்கொண்டு திரிஞ்ச ஒருத்தி, நான் திரும்பியே பாக்காத ஒருத்தி என்னால அசைக்கவே ஏலாத அளவுக்கு வளந்து நிக்கிறாளே எண்டு ஒரு ஈகோ. உன்னை எப்பிடி விழுத்திறது எண்டு யோசிச்சிட்டுத்தான் விசாகனைப் பிடிச்சனான். போட்டியா நினைக்கிற நிறுவனத்தில ஒரு ஸ்பை வைக்கிறது எங்கயும் நடக்கிறதுதான். ஏன், நீ கூட எங்கட ஒபீஸ்ல ஆரையும் வச்சிருக்கலாம். அதத்தான் நானும் செய்தனான். அதுவும் நாலு வருசத்துக்கு முதல். அப்ப உண்மையாவே உன்னக் கட்டுற பிளான் இல்ல. அதே மாதிரி அவனை என்ர ஆளா மாத்தினதுக்கும், இப்ப உன்னை நான் கட்ட நினைக்கிறதுக்கும் எந்தச் சம்மந்தமும் இல்ல வஞ்சி.”

அவன் சொல்வது சரிதான். அவர்களின் அலுவலகத்தில் அவளுக்கும் ஆள்கள் உண்டுதான். அதெல்லாம் தொழிலில் சாதாரணம்தான்.

ஆனால், விசாகனை அவள் ஒரு வேலைக்காரனாகப் பார்த்ததும் இல்லை, நடத்தியதும் இல்லை. அதுதான் இங்கே அவள் ஏமாற்றத்துக்குக் காரணமாயிற்று.

அவன் ஒரு ஆண், அவள் ஒரு பெண். யாராவது தவறாக ஒரு வார்த்தை சொல்லும் இடத்தில் தன்னையோ அவனையோ நிறுத்திவிடக் கூடாது என்கிற தூரத்தில் அவனை வைத்திருந்தாளே தவிர மிகவுமே நம்பினாள்.

அதுவும் தையல்நாயகி அம்மாவால் வேலைக்கு அமர்த்தப்பட்டு, அவர் இருந்த காலத்திலிருந்தே தன்னோடு இருப்பவன் என்பதாலோ என்னவோ அவனைச் சந்தேகத்திற்கு அப்பாற்பட்டவனாகத்தான் நினைத்திருந்தாள்.

ஆனால், எதிரில் இருப்பவர்களை விடவும் கூடவே இருப்பவர்கள்தான் துரோகமிழைப்பார்கள் என்பதை மறந்துதான் போனாள்.

அந்தவகையில் இதில் அவள் தவறும் உண்டு என்பதில் விசாகன் குறித்து அவள் எதுவும் சொல்லப்போகவில்லை.

“அவனை விட்டுடன் வஞ்சி. என்னால அவன்ர வாழ்க்கை மோசமாக வேண்டாம்.”

“என்ர முடிவுகள்ல இன்னொருத்தர் தலையிடுறத நான் விரும்பிறேல்ல.” என்று சொன்னவளைத் தன்னை மீறிய ரசனையுடன் பார்த்தான் நிலன்.

அவள் போட்ட கேஸை ஒன்றுமில்லாமல் ஆக்க அவனால் முடியும். அப்படிச் செய்து அவள் கோபத்தை இன்னும் சம்பாதிக்க விருப்பமில்லை. அதனால்தான் அவளிடமே கேட்டுக்கொண்டிருக்கிறான்.

அதற்கு அவள் பதில் சொன்ன பாங்கு?

“எவன் சொன்னவன் ராணியா இருக்க ராஜாவோ ராஜாங்கமோ வேணுமெண்டு? அது எதுவும் இல்லாமயே நீ ராணிதான்!” என்றான் அவள் நிமிர்வை ரசித்தபடி.

அவனையே பார்த்துவிட்டு, “இன்னும் ஏதாவது கதைக்க இருக்கா?” என்றாள் அவள்.

அதற்குப் பதில் சொல்லாமல் சில நொடிகளுக்கு அவள் விழிகளோடு தன் பார்வையைக் கலந்து, “நீ இப்ப ஓகேயா?” என்று இதமாய் வினவினான்.

அவளிடத்தில் மெல்லிய திடுக்கிடல். ஆனாலும் வேகமாகச் சமாளித்துக்கொண்டாள். “எனக்கு என்ன?” என்றாள் தன் கைப்பேசியில் மெயில் ஏதாவது வந்திருக்கிறதா என்று கவனிப்பதுபோல் பாவனை காட்டி.

சில நொடிகளுக்கு அமைதியாக இருந்தவன் மெல்ல மேசையில் இருந்த அவள் கரம் பற்றி, “உனக்கு நான் இருக்கிறன் வஞ்சி. நான் உயிரோட இருக்கிற வரைக்கும் உனக்காக இருப்பன். நீ தனி இல்ல.” என்றான் தன் ஆழ்ந்த குரலில்.

ஒரு நொடி அப்படியே உறைந்தாலும் அவனிடமிருந்து தன் கையை விடுவித்துக்கொண்டு, “எனக்கு நானே போதும்!” என்றாள் கண்ணை எட்டாத ஒரு முறுவலோடு.

இல்லை என்பதுபோல் தலையை அசைத்துவிட்டு, “உள்ளுக்க என்ன பாடு படுவாய் எண்டு எனக்குத் தெரியும். பக்கத்தில வந்து உனக்கு நான் இருக்கிறனடி எண்டு சொல்லத்தான் ஆசையா இருக்கு. நீ விடமாட்டாய் எண்டுதான் தள்ளி நிக்கிறன்.” என்றவன், “அண்டைக்கும் இதைச் சொல்லத்தான் ஓடி வந்தனான். ஆனா நீ, உன்னைப் பாக்க விடவே இல்ல.” என்றான் சின்ன முறைப்போடு.

சொந்தம் என்று இருந்தவர்களே இல்லை என்றானபிறகு யாரையும் புதிதாகச் சொந்தமாய்ச் சேர்த்துக்கொள்ள அவள் தயாராய் இல்லை. அதை அவனிடம் சொல்லப் பிடிக்காமல் அமைதி காத்தாள்.

“எங்கட கலியாணம்?” திரும்பவும் அவன் அந்தப் பேச்சை எடுக்கவும் அவளுக்குச் சினம் வந்தது.

“உங்களுக்கு என்ன கலியாண விசர் பிடிச்சிருக்கா? போய் எவளையாவது கட்டுங்க போங்க!” என்றுவிட்டு அவள் எழுந்துகொள்ள,

“எனக்கு இப்ப கொஞ்ச நாளா இந்த வஞ்சி விசர்தான் பிடிச்சிருக்கு. அதுவும் இத்தனைக்குப் பிறகும் உடையாம நிக்கிறாள் பார். அவளை இன்னுமின்னும் பிடிச்சிருக்கு.” என்றான் அவனும் எழுந்து.

“விசாகனக் கூப்பிடவா?”

“...”

“நான் வரட்டா?”

அவன் கேள்விகளுக்குப் பதில்போல் அவளே அவள் காரை எடுத்துக்கொண்டு கிளம்பினாள்.


 
Last edited:

priya srikanth

New member
ஆக இவளும் நிலன் கம்பெனியில் spy வச்சியிருக்கா.. அப்போ நிலன் செய்தது மட்டும் எப்படி தப்பாகும்.. நிலன் இவளை கல்யாணம் பண்ண நினைக்கிற உண்மையான காரணத்தை சொல்ல மறுக்கிறான்
 
Top Bottom