• நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.
    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

அழகென்ற சொல்லுக்கு அவளே - 18

நிதனிபிரபு

Administrator
Staff member
அத்தியாயம் 18


சற்று முன்னர் அவன் எதற்கு ஏங்கினானோ அது நடந்துகொண்டிருப்பதைக் கண்டு இனிமையாக அதிர்ந்தான் நிலன். அவள் தன்னிடம் அழுவதும் உடைவதும் அவன் நெஞ்சினுள் தித்திப்பாய் இறங்கிற்று. இதன் அர்த்தம் அவள் அவனை நெருக்கமாக உணர்கிறாள் என்பதுதானே?

அவளின் தந்தையிடம் அவனைப் பிடிக்கும் என்று சொன்னதை விடவும், அவன் கேட்டபோது ஆம் என்று தலையசைத்ததை விடவும், இந்தக் கண்ணீரின் மூலம் அழுத்தமாகவும் ஆழமாகவும் அவள் நெஞ்சில் அவன் இருப்பதை அவள் சொன்னது போல் உணர்ந்தான் நிலன்.

அதற்கென்று எப்போதும் கம்பீரமாகவே பார்த்துப் பழகியவளை அப்படி அழ விட்டுவிட்டு நிற்கவும் முடியவில்லை.

“வஞ்சி! என்னைப் பார். இதென்ன அழுகை? உனக்கு நல்லாவா இருக்கு?” என்று அவள் முகத்தை வலுக்கட்டாயமாக நிமிர்த்தி, கண்களைத் துடைத்துவிட்டான்.

அப்போதுதான் அவளுக்கும் என்ன செய்துகொண்டிருக்கிறோம் என்று புரிந்தது போலும். வேகமாக அவனிடமிருந்து விலகித் தானும் கண்களையும் முகத்தையும் துடைத்துக்கொண்டாள். “ஒரு நிமிசம் இருங்க வாறன்.” என்று அவனைப் பாராமல் சொல்லிவிட்டு, அங்கிருந்த குளியலறைக்குள் வேகமாக நுழைந்தாள்.

கைகளைக் கட்டிக்கொண்டு அவள் மேசையின் மீதே சாய்ந்தபடி நின்றிருந்தான் நிலன்.

சில நிமிடங்களில் அவள் திரும்பி வந்தபோது முகத்தைக் கழுவித் துடைத்திருந்தாள். பழைய இறுக்கம் மீண்டிருந்தது.

“ஏன் நிக்கிறீங்க. இருங்க.” என்றுவிட்டு ஆனந்தியை அழைத்து அவன் அருந்துவதற்கு ஏதாவது கொண்டு வரச் சொன்னாள்.

என்ன வேண்டும் என்று கேட்டுக்கொண்டு புறப்பட்டவளிடம், “கொஞ்ச நேரத்துக்க தையல்நாயகியப் பழைய மாதிரியே மாத்தித் தந்தத்துக்கு நன்றி ஆனந்தி!” என்றாள் இளவஞ்சி மனத்திலிருந்து.

விசாகனை முழுமையாக நம்பியவள் இந்த ஆனந்தியைச் சந்தேகப்பட்டிருக்கிறாள். ஆனால் அந்த ஆனந்திதான் அவளாகவே இங்கே நடப்பதை எல்லாம் உடனுக்குடன் அவளுக்குத் தெரியப்படுத்தியிருந்தாள். அப்படித் தெரியப்படுத்தியதால்தான் இத்தனை விரைவாக அவள் திரும்பவும் தையல்நாயகிக்குள் வந்திருக்கிறாள். அந்த நன்றிப் பெருக்கு அவள் வார்த்தைகளில் இருந்தது.

முகம் முழுக்க மலர்ந்த சிரிப்புடன், “அது என்ர கடமை மேம். நீங்க திரும்பி வரப்போறீங்க எண்டுற ஒரு விசயமே எங்களுக்குப் போதும். பம்பரமாச் சுழண்டு எல்லாத்தையும் முடிச்சிட்டம்.” என்றுவிட்டுப் போனாள் அவள்.

“ஃபேக்டரிய சுத்திப் பாக்கப் போறீங்களா? கூட்டிக்கொண்டு போய்க் காட்டவா?” அவனை நேராக நோக்கிச் சம்பிரதாயமாக வினவினாள் இளவஞ்சி.

பழைய வஞ்சி. தன் உணர்வுகளை யாரிடமும் காட்டிவிடாத, இறுக்கமான, தொழில்துறையினருக்கு மிகவுமே பழக்கமான அந்த வஞ்சி.

அவனுக்கு இந்த வஞ்சியா தேவை?

அவளையே சில கணங்களுக்குப் பார்த்துவிட்டு, “எனக்கு என்ர வஞ்சி வேணும். இந்த முகமூடி எதுவுமே இல்லாத, இப்ப கொஞ்சத்துக்கு முதல் என்னட்ட அழுதாளே, அந்த வஞ்சி.” என்றான் நிலன்.

“அதுக்கு நீங்க என்னட்ட உண்மையா இருக்கோணும்.” என்றாள் அவனைப் பாராமல்.

இனியும் மறைப்பதில் அர்த்தமில்லை என்றே அவனுக்கும் தோன்றிற்று. அதை விடவும் தன் வீட்டினர் மீதான கசப்பும் வெறுப்பும் அவனையும் அழுத்திக்கொண்டிருந்ததில் அவளிடம் சொல்லிவிடவே விரும்பினான்.

அப்போது கதவைத் தட்டிவிட்டு ஆனந்தி வந்தாள். சிற்றுண்டியும் தேநீரும் கொண்டுவந்திருந்தாள். பணிவும் மரியாதையோடும் இருவருக்கும் பரிமாறிவிட்டு அவள் புறப்பட, “வஞ்சி திரும்பக் கூப்பிடுற வரைக்கும் ஆரையும் இஞ்ச வர விடாதீங்கம்மா.” என்றான் நிலன்.

இளவஞ்சியிடம் பார்வை ஒருமுறை சென்று வர, “ஓகே சேர்!” என்றுவிட்டுக் கதவைச் சாற்றிக்கொண்டு வெளியேறினாள் அவள்.

“தேத்தண்ணியை எடுத்துக் குடி. என்னைவிட உனக்குத்தான் இப்ப இது வேணும்.” என்றான் இளவஞ்சியிடம்.

“நீங்களும் எடுங்க.” என்றபடி எடுத்துப் பருகினாள். உண்மையில் அவளுக்கு அது தேவையாகத்தான் இருந்தது.

அந்தத் தேநீர்ப் பொழுதை நிலன் தொந்தரவு செய்யப் போகவில்லை. அது முடிந்ததும், “இந்தத் தையல்நாயகி இருக்கிற நிலத்தின்ர மூண்டில ஒரு பங்கு உரிமை என்னட்ட இருக்கு வஞ்சி.” என்றான் அவளையே பார்த்து.

“என்ன?” நீ என்ன லூசா என்பதுபோல் பார்த்தவள் முகத்தில் அதிர்ச்சி. அவன் மாமனைக் குறித்து ஏதாவது சொல்லப் போகிறான், நன்றாகக் கொடுக்க வேண்டும் என்று காத்திருந்தவள் நிச்சயம் இதை எதிர்பார்க்கவில்லை.

“அது எப்பிடி இருக்கும்? மூண்டில ரெண்டு பங்கு என்ர பெயர்லயும் அடுத்த பங்கு வாசவி அத்…” என்று சொல்லிக்கொண்டு வந்தவள் சட்டென்று பேச்சை நிறுத்திவிட்டு அதிர்ச்சியோடு அவனைப் பார்த்தாள்.

அவன் ஆம் என்பதுபோல் தலையசைக்கவும் சற்று நேரத்திற்கு அவளால் பேசவே முடியவில்லை.

எப்படி இது அவளுக்குத் தெரியாமல் போனது என்று யோசிக்கையிலேயே அதை எல்லாம் அவள் ஏன் ஆராயப் போகிறாள் என்று தோன்றிற்று. நம்முடையது என்று உறுதியாகத் தெரிந்த ஒன்றை நம்முடையதுதானா என்று சும்மா சும்மா ஆராய்வோமா என்ன?

ஏன், அவளின் அப்பம்மா கூட இருக்கும் வரையில் அதை ஆராயவில்லையே என்று யோசனை ஓடுகையில்தான் அப்பம்மாவிற்கு இது தெரியுமோ என்கிற கேள்வி உண்டாயிற்று.

அவளைப் பெற்றவர் இறந்த பிறகு, அவர் பெயரில் இருந்ததை இன்னொருவர் பெயருக்கு மாற்ற முயலாமல் அவளின் அப்பம்மா இருந்திருக்கப் போவதில்லை. அப்படிப் போகையில் இப்படி ஒன்று நடந்திருப்பது தெரிய வராமல் இருந்திருக்காது.

ஆனால், இதை ஏன் அவர் யாரிடமும் சொல்லவில்லை? அல்லது அந்தக் கொப்பியில் எழுதி இருக்கிறாரோ? அவள்தான் அவளைப் பற்றி அறிந்த அதிர்ச்சி தாங்காமல் மூடி வைத்துவிட்டாளே.

நிச்சயம் இது பற்றி அந்தக் கொப்பியில் இருக்கும் என்று மனம் சொன்னாலும், “எப்பிடி இது நடந்தது? அதுவும் உங்களிட்ட எப்பிடி வந்தது?” என்றாள் பல்லைக் கடித்தபடி.

வாசவி மூலம் பாலகுமாரனிடம் போய், அவர் மூலம் இவனிடம் வந்திருக்கும் என்று புரிந்தாலும் அந்தப் பாதை அவளுக்குத் தெளிவாக இல்லை.

“எனக்கும் எப்பிடி அது எங்களிட்ட வந்தது எண்டு இப்ப வரை தெரியாது வஞ்சி. ஆனா, நாளைக்கே இதுக்கான பதில உனக்கு நான் சொல்லுறன். அதுக்கு முதல், எனக்கு நான் நல்லவன் வல்லனவன் எண்டு உன்னட்டக் காட்டுறதில விருப்பம் இல்ல வஞ்சி. ரெண்டு ரெண்டரை வருசத்துக்கு முதல் மாமாக்கு…” என்று சொல்லிக்கொண்டு வந்தவன் சட்டென்று பேச்சை நிறுத்திவிட்டு அவளைப் பார்த்தான்.

சினத்திலும் சீற்றத்திலும் கொதித்துச் சிவந்துவிட்ட முகத்துடன், “சொல்லுங்க. உங்கட மாமாக்கு…” என்றாள் பற்களுக்குள் வார்த்தைகளை அரைத்து.

“அவருக்கு ஹார்ட்ல பிரச்சினை வந்து, சீரியஸா ஆஸ்பத்திரில இருந்தவர். தான் தப்ப மாட்டன் எண்டு நினைச்சிட்டார் போல. என்னத் தனியா கூப்பிட்டு உன்னக் கட்டச் சொல்லிச் சொன்னவர். எனக்குக் கோவமும் அதிர்ச்சியும். சம்மந்தமே இல்லாம திடீரெண்டு உன்னை ஏன் கட்டச் சொல்லோணும்? எவ்வளவு கேட்டும் காரணம் சொல்லேல்ல. ‘இந்த மாமாக்கு ஏதாவது செய்ய நினைச்சா அத மட்டும் செய் தம்பி’ எண்டு நிண்டவர். அந்த நேரம் அவர் இருந்த நிலைக்கு எனக்கு என்ன சொல்லுறது எண்டு தெரியாமயே இருந்தது. அது எப்பிடிக் காரணமும் தெரியாம, பிடிக்காத ஒருத்தியக் கட்டுறது எண்டு இருந்தது.” என்றுவிட்டு அவளைப் பார்த்தான்.

சினச் சிவப்பைத் தவிர்த்து வேறு எதையும் அவனால் அங்கே காண முடியவில்லை.
 
Last edited:

நிதனிபிரபு

Administrator
Staff member
“அவர் எவ்வளவோ கேட்டும் நான் அசையவே இல்லை எண்டதும் சக்திவேல்ல அவரின்ர ஒபீஸ் ரூம்ல இருந்து சில டொக்கியூமெண்ட்ஸை எடுத்துக்கொண்டு வரச் சொன்னார். அப்பிடி ஒரு லொக்கர் அவரிட்ட இருக்கு எண்டு எனக்கு அண்டைக்குத்தான் தெரியும். அதுக்கயும் சீல் வச்ச மாதிரி மூடிக்கட்டின ஒரு கவர். அதைக் கொண்டுபோய்க் குடுத்தனான். அதைத் திரும்ப என்னட்டையே தந்து, அது உனக்குச் சேர வேண்டியதாம், எங்கட வீட்டில வேற ஆருக்கும் தெரியக்கூடாதாம் எண்டு சொல்லிப்போட்டு, ‘இதையாவது கட்டாயமாக் குடுத்துவிடு தம்பி, செய்த பாவமே போதும்’ எண்டு சொன்னார்.” என்றுவிட்டு நிறுத்தினான்.

உண்மையில் இன்றைக்கு இதையெல்லாம் ஜீரணித்துக்கொள்ள அவனுக்கே இடைவெளி தேவையாய் இருந்தது.

“அந்த நேரம் அது பிழையா வந்திருக்கும் எண்டு நான் நினைக்கேல்ல. தொழில்ல சில வளைவு நெளிவு இருக்கிறதுதானே எண்டுதான் நினைச்சனான். அதவிட, எங்கட நிலம் எண்டு தெரியாம ஆரிட்டயோ ஏமாந்து அந்த நிலத்த வாங்கி, அதுல தையல்நாயகியக் கட்டி எழுப்பி இருக்கிறா உன்ர அப்பம்மா எண்டுதான் நினைச்சனான். அதோட எண்டைக்காவது எங்களை மீறி நீ வளந்து வந்தா, அத வச்சே உன்னை ஒரு ஆட்டு ஆட்டோணும் எண்டெல்லாம் நினைச்சிருக்கிறன்.” என்றவனைப் பார்வையாலேயே சுட்டுப் பொசுக்கினாள் அவள்.

“சும்மா சும்மா முறைக்கிறேல்ல. அண்டைக்கு எனக்கு நீ எதிரி. சோ அப்பிடி யோசிச்சன். பிஸினஸ்ல அது ஒண்டும் பிழை இல்லையே. அதைவிட அப்ப நான் நினைச்சது அது எங்கட சொந்த நிலம் எண்டுதான்.” என்றுவிட்டு,

“ஆனா, நானும் கொஞ்சம் நியாயவான்தான். என்னதான் போட்டி எண்டாலும் ஒரு தொழிலை வளக்கிறது எவ்வளவு பெரிய சவால் எண்டு தெரியும். அப்பிடி வளந்துகொண்டு வாறவளை நான் தட்ட நினைக்கிறது சரியா எண்டும் அப்பப்ப நினைப்பன். அதாலயே அதுக்குப் பிறகு என்னை அறியாம உன்னைக் கவனிக்க ஆரம்பிச்சிட்டன். பாக்க பாக்க அவ்வளவு பிரமிப்பா தெரிஞ்சாய் நீ. அதுவே நாளாக நாளாக ஒரு தாக்கம். உன்னைக் கட்டினா என்ன எண்டு. அந்தத் தாக்கத்தில ஒரு நாள் போய் அவளை நான் கட்டுறன் மாமா எண்டு சொல்லவும் அழுதிட்டார்.” என்றதும் அவள் உதட்டோரம் வெறுப்புடன் வளைந்தது.

அதைக் கவனித்தாலும் அதற்கு ஒன்றும் சொல்லாமல், “அந்த அழுகைதான் எனக்குச் சந்தேகத்த விதைச்சது. அந்த உறுதிப் பத்திரத்தப் பற்றி விசாரிச்சுக்கொண்டு போனா, அத மாமாக்குக் குடுத்தது உன்ர அம்மா…” என்றவனை வேகமாக இடைமறித்து, “அத்த!” என்றாள் அவள் அழுத்தம் திருத்தமாய்.

அவளையே பார்த்தான் நிலன். அவளும் பார்வையைத் தளர்த்தவில்லை.

“ஓகே! உன்ர அத்த எண்டதும் ஒரு சந்தேகம். என்ன மாமா காதலா, இல்ல காதலிக்கிறன் எண்டு சொல்லிச் சொத்தை வாங்கிட்டீங்களா எண்டு கேக்க வாயையே திறக்கேல்ல அவர். சரி, எப்பவோ நடந்தத மருமகனிட்ட சொல்ல விருப்பம் இல்லை போல எண்டு விட்டுட்டன். ஆனா அதுக்குப் பிறகு மனதில ஒரு உறுத்தல். மாமா செய்தது பிழை, என்ன இருந்தாலும் அப்பிடி நடந்திருக்கக் கூடாது எண்டு. அதே நேரம் அதை எப்பிடி உன்னட்டக் கொண்டு வந்து சேர்க்கிறது எண்டும் தெரியேல்ல. அவர் வெளில சொல்ல வேண்டாம் எண்டதை நான் காக்கலாம். உன்னட்டச் சொன்னா நீ காக்கவே மாட்டாய். முதல் வேலையா சக்திவேல் குடும்பம் ஏமாற்று குடும்பம் எண்டு வெளில சொல்லிப்போட்டுத்தான் இருப்பாய் எண்டு தெரியும். அதே நேரம் நானே வந்து கேட்டாலும் என்னைக் கட்டுவாய் எண்டுற நம்பிக்கையும் எனக்கு இல்ல.” என்றுவிட்டு அங்கிருந்த தண்ணீரை எடுத்துப் பருகினான்.

அவளிடமும் நீட்ட, “சொல்ல வேண்டியது எல்லாத்தையும் சொல்லி முடிங்க முதல்!” என்று வார்த்தைகளைக் கடித்துத் துப்பினாள் அவள்.

“கலியாணத்தை முறையா கொண்டு போவம் எண்டு அப்பாட்டச் சொன்னா அவரும் இது நடக்காது, வேண்டாம் எண்டுதான் நிண்டார். சோ, அவருக்கும் மாமான்ர காதல் கத தெரிஞ்சிருக்கு எண்டு நினைச்சாலும், அது எனக்கும் தெரியும் எண்டு நான் காட்டிக்கொள்ள இல்ல. எப்பவோ நடந்துகளைப் பற்றிக் கதைச்சு என்னாகப் போகுது எண்டு நினைச்சன். அம்மாக்கு உன்னப் பிடிக்கும். அதால அம்மாவை வச்சே அப்பாவைச் சமாளிச்சிட்டன். அப்பப்பாதான் பெரும் பிரச்சினை தந்தவர். முதல் ரெண்டு தரம் அவருக்குத் தெரியாமத்தான் கலியாணத்துக்கு கேட்டு விட்டனான். நீ ஓம் எண்டு சொல்லேல்ல.” என்றுவிட்டு தலையைப் பற்றிக்கொண்டு கொஞ்ச நேரம் பேசாமல் இருந்தான்.

பிறகு நிமிர்ந்து அவளைப் பார்த்து, “அந்த இருவது வயதிலேயே வேணாம் எண்டு நினைச்ச என்னை வேணவே வேணாம் எண்டு உறுதியா நிண்டு மொத்தமா ஒதுக்கினவள் நீ. நில விசயம் தெரிஞ்சா கடைசி வந்தாலும் என்னைக் கட்ட மாட்டாய் எண்டு தெரியும். அதே நேரம் இந்தத் தையல்நாயகிக்காக என்னவும் செய்வாய் எண்டும் தெரியும். கடைசி வரைக்கும் முயற்சி செய்து பாப்பன். நீ மாட்டனே மாட்டன் எண்டு நிண்டா, அந்த நிலத்தைக் காட்டியாவது உன்னைக் கட்டியே தீருறது எண்டுற முடிவில இருந்தனான்.” என்றான் அவளையே பார்த்து.

“ஆக, நீங்க கூட எல்லாத்தையும் மூடி மறச்சிட்டீங்க!” கசப்பும் வெறுப்புமாகச் சொன்னவளைப் பார்த்து வேகமாக இல்லை என்று தலையை அசைத்தான் நிலன்.

“எனக்கும் எந்த உண்மையும் தெரியாது வஞ்சி. எல்லாமே என்ர ஊகங்கள்தான். அண்டைக்கு நீ மாமான்ர மகள் இல்லை எண்டுற உண்மை தெரிஞ்ச நேரம், எங்கட வீட்டு ஆம்பிளைகள் மூண்டு பேரின்ர முகங்களும் சரியே இல்ல. அதே நேரம் உனக்கு, மாமாக்கு, வாசவி அம்மாக்கு ஏதும் தொடர்பு இருக்குமோ எண்டுற சந்தேகம் எனக்கு வந்தது உண்மை. ஆனா அது சந்தேகம்தான். திரும்பவும் மாமாவைப் பிடிச்சுக் கேக்க, அப்பவும் அவர் வாயத் திறக்கேல்ல. எரிச்சல் வந்தாலும் வருத்தக்கார மனுசனை ஒரு அளவுக்கு மேல என்னால நெருக்கவும் முடியேல்ல. அதே நேரம் எதுவும் உறுதியாத் தெரியாம உன்னட்ட வந்து சொல்லவும் முடியேல்ல.” என்றவன்,

“ஆனா இது எல்லாத்துக்கும் பின்னால அப்பப்பா இருப்பார் எண்டு கனவிலயும் நினைக்கேல்ல வஞ்சி. அதுதான் ஆர் உனக்கு இருந்தாலும் இல்லாட்டியும் நான் உனக்காக இருக்கோணும் எண்டு நினைச்சன்.” என்று முடித்தான்.

“என்ன பரிதாபமா?” என்றாள் மனம் கொந்தளிக்க.

“அடிதான் வாங்கப் போறாய். என்னைப் பாத்தா பரிதாபத்தில உன்னைக் கட்டினவன் மாதிரியா இருக்கு?” என்று அதட்டினான்.

அவள் முகத்தைத் திருப்பிக்கொண்டாள். என்னவோ மனமெல்லாம் மரத்துவிட்ட ஒரு உணர்வு. இன்னும் எத்தனை இரகசியங்கள் அவளுக்குப் பின்னால் இருக்கிறதோ தெரியாது.

மனத்தில் கசப்பும் வெறுப்பும் மண்ட அவனிடம் எதுவும் பேசத் தோன்றாமல் பேசாமல் அமர்ந்திருந்தாள் அவள்.

அவளையே பார்த்திருந்தவன் எழுந்து அவளிடம் வந்தான். ஒரு கால் நிலத்தில் இருக்க, இலேசாய் மேசையில் அமர்ந்து, அவள் முகத்தைப் பற்றித் தன்னை நோக்கி நிமிர்த்தினான்.

“எனக்கு உன்னை என்னை நினைக்க வைக்கோணும். பேசிப் பழகிக் காதலிக்க வைக்கிற ரகம் இல்ல நீ. உன்னோட நான் பேசின மொழிதான் தொழில்ல உனக்கு நான் தந்த தொந்தரவுகள். ஆரம்பம் போட்டில செய்தாலும் பிறகு செய்தது எல்லாம் உன்னைச் சீண்டுறதுக்குத்தான். முத்துமாணிக்கத்த நான் வாங்கினாலும் உனக்குத்தான் வந்து சேரும் எண்டு ஒரு நம்பிக்கை. செஞ்ச எல்லாத்துக்கும் பின்னால இருந்தது, கோவமா சண்டை பிடிக்கிறதுக்கு எண்டாலும் நீ என்னட்ட வரோணும் எண்டுற எண்ணம் மட்டும்தான். உனக்கு என்னை விளங்குதா?” என்றான் தன் ஆழ்ந்த குரலில்.

அவள் அவனையே பார்த்திருக்கக் குனிந்து அவள் நெற்றியில் தன் உதடுகளை ஒற்றி எடுத்துவிட்டு, “எப்பவோ நடந்துகளை எங்களால மாத்தேலாது வஞ்சி. அதே மாதிரி இப்ப நடந்தது எல்லாம் நல்லதுக்கு எண்டே நினை. இல்லாட்டி இதெல்லாம் உனக்குத் தெரிய வந்திருக்காதுதானே? போதும் வஞ்சி. எல்லாரும் பட்ட துன்ப துயரங்கள் போதும். உன்ர அம்மாக்கு… சொறி அத்தைக்கு இதெல்லாம் நடந்திருக்க வேண்டாம்தான். என்ர குடும்ப ஆக்களில எனக்கே அவ்வளவு கோவம் வருது. ஆனாலும் விடு. இனியாவது நிம்மதியா இருப்பம்.” என்று இதமான குரலில் சொன்னான்.

அவனை ஒரு மாதிரிப் பார்த்து, “இதையெல்லாம் கதைக்கிறது சக்திவேலரின்ர பேரன் நிலன் பிரபாகரனா?” என்றாள் இதழோரம் வளைய.

“வஞ்சி!”

“இளவஞ்சி குணாளனுக்கு எல்லா உண்மையும் தெரிஞ்சிட்டுதாம் எண்டு சக்திவேலரிட்டயும் பாலகுமாரனிட்டயும் போய்ச் சொல்லிவிடுங்க. போங்க!” என்றாள் சினத்துடன்.
 
Last edited:

Google Typing

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.

NithaniPrabu Audio Novels

Top Bottom