“நீ கவலைப்படாத சுஜா…எதுவா இருந்தாலும் ஒன்னும் பிரச்சனையில்லை. இன்னிக்கு முக்கியமான மீட்டீங்...இல்லன்னா உங்கூடவே வந்துடுவேன். நீ போய் டெஸ்ட் எடுக்கிறதுக்குள்ள வந்துடுவேன்மா. பார்த்து போய்ட்டு வா.” என்றபடி, மனைவியிடமிருந்து விடைப்பெற்றான் ஆனந்தன்.
ஆனந்தனின் மனைவி சுஜாதா. சுஜாதா ஏதோ ஐ.ஏ.எஸ் டெஸ்ட் எல்லாம் எழுத போகவில்லை. மகப்பெறு மருத்துவமனைக்குத்தான் போகிறாள். இருவராய் இருக்கும் அவர்களது உலகத்தில் மூன்றாவதாய் ஒரு குழந்தை வராதா என்று ஏக்கம் இருவருக்குமே உண்டு. அதுவும் திருமணமாகி பத்து வருடங்கள் ஆகிவிட்டன.
தினம் தினம் மாமியாரிடம் சுஜாதாவிற்கு மண்டகபடி உண்டு. எம்.காம் படித்த சுஜாவுக்கு படிக்காமலேயே ‘மலடி’ பட்டமும் கூடுதலாக உண்டு.
எத்தனையோ டெஸ்ட்குகள் , கோவில்கள் என்று போய் பார்த்தும் ஒன்றும் ப்ரோயோஜனமில்லை.
சிறுவயதில் க்ளாஸ் டெஸ்ட் என்றாலே பயப்படுவாள் சுஜா. காலேஜ் ஃபைனல் செமஸ்டர் எழுதி முடிச்ச பின் ‘அப்பாடா! இனி லைஃப்ல பரீட்சையே கிடையாது.’ என்று, தோழிகளும் அவளுமாக மகிழ்ந்த காலமெல்லாம் உண்டு.
ஆனால், வாழ்வே ஒரு பரீட்சை தானே? அதுவும் ரிசல்டை முதலில் சொல்லி விட்டு அதன் பின் தான் பாடமே கற்க முடியும், வாழ்க்கை எனும் பரீட்சையில்.
எம்மதமும் சம்மதம் என்று எல்லாம் மதத்துக் கடவுளையும் கும்பிட்டுக் கொண்டே ஆட்டோவில் வந்தாள்.
மருத்துவமனையில் ஒவ்வொரு அடியை எடுத்து வைக்கும் போது அவளது இதயத்தின் ஓசை அவளுக்கே கேட்டது.
இரண்டு மாதம் முழுக்க ட்ரீட்மெண்ட் எடுத்து இந்த மாதம் செக்கப்புக்கு வந்திருக்கிறாள். இந்த ட்ரீட்மெண்டிலாவது கரு உருவாகிறதா பார்க்கலாம் என்று டாக்டர் சொல்லியிருக்கிறார்.
அவளது மாமியார் வேறு , “இந்த தடவ மட்டும் எனக்குப் பேரப்பிள்ளை உருவாகலன்னா, உன்னை வெட்டி விட்டுட்டு என் புள்ளைக்கு வேற கல்யாணம் செஞ்சு வைச்சிடுவேன்.” என்று மிரட்டி இருந்தார். கடந்த ஐந்து ஆண்டுகளாக நடக்கும் மிரட்டல் தான் இது. அவளது மாமியார் சுந்தராம்பா 24*7 என்னேரமும் அவளைத் திட்டிக் கொண்டே இருப்பார்.
அவளது தாய் வீட்டுக்குப் போகிறேன் என்றால் கூட , “உன் அம்மா கொடுத்து வைச்சவ….அவளுக்கு லட்டு லட்டா ரெண்டு பேரப்பிள்ளைகளை உன் அண்ணி பெத்துக் கொடுத்துட்டா. உனக்கு அப்புறம் கல்யாணம் ஆன உன் தங்கச்சி ரெண்டு பிள்ளை பெத்துட்டா…உனக்கும் ஒன்னுத்துக்கும் கொடுத்து வைக்கல.” என்று ஏசுவார்.
சுஜாவின் தோழிகள் யாராவது இவளைப் பார்க்க வந்தாலோ அவர்கள் போன பின்பு ,”உங்க அப்பாரு உனக்கு….ஊருக்கு முன்னாடி கல்யாணம் பண்ணி வைச்சாரு; உனக்குப் பின்னாடி கல்யாணம் செஞ்ச உன் ப்ரண்டுங்கலாம் புள்ள பெத்து பொறந்த நாளுக்கு அழைக்க வராளுங்க; வெறும் கட்டாந்தரையில கூட புல்லு முளைக்கும்; இங்க …..ஒரு புல்லு கூட முளைக்கல; என்ன பாவம் செஞ்சியோ…ஒரு வாரிசு இல்ல; என்ன பொறப்போ!” என்று திட்டி அவளைக் காயப்படுத்துவார்.
அதனால், அவள் பிறந்த வீட்டுக்கோ இல்லை தோழிகளைப் பார்க்கவோ போக மாட்டாள். வீட்டிலேயே இருந்தாலும் அவரின் பேச்சைக் கேட்டு அவளுக்கு மனம் தான் கசக்கும். வேறு வழியின்றி மன அமைதிக்காக கோவிலுக்குத் தான் போவாள்.
ஆனால் அதற்கும் அவர் , “கோவில் கோவிலா சுத்தி என்ன ப்ரோயஜனம்? போயிட்டு வர செலவுதான் தண்டம். இங்க ஒரு மாற்றமும் காணும். ஹாஸ்பிட்டலுக்கும் கோவிலுக்கும் அள்ளிக் கொடுக்கவே என் மகன் சம்பாரிக்கறதெல்லாம் சரியாப் போகுது!” என்பார்.
அதனால் சுஜாதா பக்கத்துத் தெருவில் இருக்கும் கோவிலுக்குக் கூட போக மாட்டாள். கணவன் ஷாப்பிங் கூப்பிட்டாலும் அவளுக்காக எதுவும் வாங்க மாட்டாள். புதிதாக ஒரு புடவை வாங்கினால் கூட ,”புடவை புதுசு புதுசா வாங்கி என்ன செய்றது? புடவையில தொட்டில் கட்ட ஒரு புள்ளை இல்லையே!” என்று அதற்கும் குதர்க்கமாய்ப் பேசுவார்.
சுஜாதாவுக்கும் குழந்தை மீது ஆசை இருக்கத்தான் செய்தது. திருமணமாகி ஒரு மூன்று ஆண்டுகள் வரையில் அவளுக்கும் குழந்தை வேண்டும் என்ற எண்ணம் அதிகமாய் இருந்தது. ஆனால், அவளது மாமியாரின் நச்சரிப்புக்கும் குத்திக்காட்டலுக்கும் பிறகு அவர்களுக்கு ஒரு குழந்தை வேண்டும் என்பதை விட மாமியாருக்கு ஒரு பேரப்பிள்ளை வேண்டும் என்பதுதான் அவளது எண்ணம்.
அவளது தனிப்பட்ட ஆசை, குழந்தை இல்லாத ஏக்கம், கவலை, கஷ்டம், வலி, வேதனை எதையுமே அவளது மாமியார் கண்டுகொள்ளவே மாட்டார். ஏதோ குழந்தை இல்லாமல் அவள் மகிழ்ச்சியாக இருப்பதைப் போலவே அவளை வார்த்தையால் கடித்துக் குதறுவார்.
இந்த விசயத்தில் அவளது கணவன் ஆனந்த் தங்கமானவன். இரண்டாம் முறை அவளுக்கு டெஸ்ட் எடுக்க சென்றபோதே அவனும் தன்னை சோதனைக்கு உட்படுத்திக் கொண்டான்.
சுஜாதாவுக்குக் கணவனை நினைத்துப் பெருமையாக இருந்தது. தன் மீது குறை இருந்தாலும் மனைவி மீது பழி போட்டு தப்பித்துக் கொள்ளும் ஆண்கள் இருக்கும் உலகில் அவன் தனித்து நின்றது அவளுக்குப் பலம் தந்தது. ஆனால் சோதனையில் முடிவில் ஆனந்திற்கு எந்த பிரச்சனையும் இல்லை என்றுதான் வந்தது. சுஜாதாவிற்கும் எந்த குறையும் இல்லைதான். ஆனால், அவள் வயிற்றில் ஏன் கரு தங்கவில்லை என்பது அந்த ஆண்டவருக்கே வெளிச்சம்.
மிகுந்த எதிர்ப்பார்ப்போடு முகமெல்லாம் வேர்த்து விறுவிறுக்க டாக்டரின் அறைக்குள் சென்றாள் சுஜாதா.
அலுவலகத்தில் முக்கியமான மீட்டீங்கை முடித்துவிட்டு கார் பார்க்கிங்கில் காரை எடுக்க போகும்போது ஆனந்தின் மொபைல் ஒலிக்க , அவன் தாயார் தான் அழைத்திருந்தார். ஆன் செய்து பேசியவனுக்கு அடுத்த பக்கம் சொன்ன செய்தியில் உயிர் ஒரு நொடி உறைந்து போனது.
சுஜாதாவுக்கு அடிப்பட்டிருப்பதாகவும் அவளை அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்திருப்பதாகவும் சொல்ல , அப்படியே துடித்துப் போய் விட்டான். அவனது நிலைக்கண்ட அவனது தோழன் சஞ்சய் அவனை மருத்துவமனைக்கு அழைத்துக் கொண்டு வந்தான்.
மருத்துவமனைக்குச் சென்று பார்த்தால் அங்கு சுஜாவின் குடும்பம், அவனது குடும்பம் எல்லாம் கூடியிருந்தனர்.
வேகமாகத் தன் தாயிடம் சென்ற ஆனந்த், “அம்மா…என்னாச்சு அவளுக்கு? சொல்லுங்க…” என அவரைப் போட்டு உலுக்க,
“தெரியலடா...ஹாஸ்பிட்டலுக்குத் தானேடா போனா? இவளை இங்க அட்மிட் செஞ்சவர் தான் எனக்குப் போன் பண்ணினார்; அவர் கார்ல விழுந்திருக்கா!” என்று அழுது கொண்டே சொல்ல,
அவளை அட்மிட் செய்த ஆகாஷ் வந்து , “சார்…உங்க மிஸஸ் மேல தான் தப்பு;. அவங்க தான் பார்க்காம வந்துட்டாங்க; ஷி வாஸ் நாட் இன் ஹேர் ஸ்டேட்.” என்று, தன் மீது தவறில்லை என்பதை உணர்த்த ,
சஞ்சய் வந்து “ தாங்க்ஸ் சார்.. நோ இஷியுஸ்….அவங்களைகொண்டு வந்து அட்மிட் செஞ்சீங்களே அதுவே பெருசு சார். இப்போ அவனை டிஸ்டர்ப் செய்யாதீங்க! ப்ளீஸ்…உங்களுக்கு வேணும்னா யூ மே லீவ்!” என்று சொல்ல
“I understand sir...its ok…i will stay sir…….அவங்க கண்முழிச்ச பின்னாடியே நான் போறேன்...நோ ப்ராப்ளம்…” என்றபடி அந்த ஆகாஷ் அமர,
“என் சுஜிக்கு மட்டும் ஏதாவது ஆச்சு…உன்னை நான் சும்மா விடமாட்டேன்மா…” என ஆக்ரோஷமாக ஆனந்தன் கத்த ,
“டேய்..ஆனந்த! என்னடா இது அம்மாக்கிட்ட போய்? அவளுக்கு ஒன்னுமாகாது…வந்து உட்காரு வா…” என்று அவன் தந்தை அதட்ட,
“நீங்க பேசாதீங்க! என் பொண்டாட்டியை இவங்க பேசினப்போ ஒரு வார்த்தையாவது பேசியிருப்பீங்களா? நான் அம்மான்னு மரியாதைக்காக இத்தனை நாள் பேசாம இருந்தேன். இப்போ, எப்போ அவ இப்படி ஒரு நிலைமைக்கு வந்தாளோ இனிமே நான் அமைதியா இருக்கப் போறதில்லை.” என்று அவரிடமும் எகிற,
“என்னடா..நீ? நான் என்ன செஞ்சேன் அவளை? அவளா போய் வண்டியில விழுந்திருக்கா…நான் என்ன செய்ய? உனக்கு ஒரு வாரிசு வேணும்னுதானே அவளைக் கேட்டேன். அவளை வேற என்னடா நான் கொடுமை செஞ்சேன்?” என்று சுந்தராம்பா அழுதுகொண்டே சொல்ல,