"வர்ஷா என்ன நேரமாவே கிளம்பிட்ட மாதிரி இருக்கே. நேரமா போவேன்னு சொல்லவே இல்லை."
"எனக்கு மட்டும் தெரியுமா?" மனதிற்குள் எண்ணியபடி, "இல்லைடி ஒரு சின்ன வேலை அதான். அதோட மணி 6:30 ஆச்சு. இதையவே நேரம்ன்னு சொன்னா எப்படி?" மம்தாவிடம் சொல்லிவிட்டு வேகமாக கிளம்பினாள்.
"என்ன எப்பொழுதும் 7 மணிக்கு தானே கிளம்புவாள். இன்னைக்கு என்ன நேரமா போகிறாள்?" மனதினில் சிந்தித்தபடியே வேக வேகமாக நடந்தாள் வர்ஷா.
வர்ஷா பிரபலமான நிறுவனத்தில் வேலை செய்கிறாள். அவளுக்கு இங்கே வேலை கிடைத்தவுடன் அவள் தாய் வள்ளியுடனும், தங்கை தனுஜாவுடனும் அலுவலகம் அருகினிலேயே ஒரு வீடு எடுத்துத் தங்கி இருந்தனர். அவர்கள் வீடு இருக்கும் பகுதி சற்றே உள்புறமாக ஒதுங்கி இருக்கும். அவள் வீடு செல்லும் முன்பு சில தெருக்களைக் கடப்பது மிகவும் பயமாகவும், பாதுகாப்பின்மை உணர்வையும், ஆள் நடமாட்டமின்றியும், இருள் அடர்ந்தும் இருக்கும்.
வேலைக்குச் சேர்ந்த பொழுதில் வீடு போய் சேர்வதற்குள் பெரிய சாதனை போன்று இருக்கும். அப்பொழுதுதான் அவள் அலுவலகத்தில் பணி புரியும் முகிலன் அங்கே அருகினிலேயே அதே தெருவினில் தங்கி இருப்பது தெரிந்து கொண்டாள்.
ஆனால், அவனுடன் பேசிப் பழக்கம் இல்லாததாலும் இவளாகப் பேசவும் தயக்கம் இருந்ததாலும், அவன் அலுவலகம் விட்டுக் கிளம்பும் பொழுது இவளும் கிளம்பி விடுவாள்.
இவளால் செல்ல முடியும் தொலைவு வரை வேகமாக அவனுக்கு முன்னால் சென்று விடுவாள். அவள் கடக்க முடியா இடங்களின் முன்பு தனது வேகத்தைக் குறைத்துக் கொள்வாள். அவன் இவளைக் கடந்ததும், அவனையே பின் தொடர்ந்து இல்லம் சேர்ந்து விடுவாள். இதுவே கடந்த 3 மாதங்களாக அவளுடைய வாடிக்கை.
எங்கே அலுவலகத்திலிருந்தே பின் தொடர்ந்தால், சந்தேகம் வந்துவிடுமோ? என்ற ஐயம் அவளை அவனுக்கு முன்னர் சென்று காத்திருக்க வைத்தது. இன்றும் அதே போல வேக வேகமாக நடந்தாள்.
செல்லும் பொழுது அவள் மனமும் முகிலனைப் பற்றிச் சிந்தனையை தொடங்கி இருந்தது. "இதே இடத்தில் வேறு ஒருவர் இருந்தால், நாம் அவரையும் நம்பிப் பின்னால் செல்வோமோ?" என்ற கேள்விக்கு "இல்லை" என்பதே அவளுடைய பதிலாய் இருந்தது.
வர்ஷா முகிலனைத் தொடர, முகிலன் இவளது அலுவலகம், இவளுடைய தெரு என்பதனையும் தாண்டி அவன் மேல் அவளுக்கு ஏற்பட்டிருந்த நல்ல அபிப்பிராயமும் காரணம். தன் தெருவினிலே நமது அலுவலகத்தில் பணி புரிபவர் ஒருவர் இருக்கிறார் என்று அறிந்ததுமே, அவனைப் பற்றி தெரிந்து கொண்டாள். அது நல்ல விதமாக இருந்ததாலேயே அவனை நம்பிப் பின் தொடர்ந்தாள்.
பெண்களே தங்கள் பின்னால் வரும் ஆண் பிள்ளைகளை இனம் கண்டு கொள்ளும் பொழுது, முகிலனால் இதனை உணராமல் இருக்க முடியுமா? அவனுக்கும் அனாவசியமாய் பெண்களிடம் பேசும் பழக்கம் இருக்கவில்லை. ஆகவே, அவள் பின் தொடர்கிறாள் என்பதை உணர்ந்த சில நாட்களிலே அலுவலகத்தில் அவளைக் கண்காணிக்க ஆரம்பித்தான்.
அலுவலகத்தில் தான் உண்டு தன் வேலை உண்டு என்று மட்டுமே இருந்தாள். இவனைப் பார்ப்பதோ, இவனிடம் பேச முயற்சிப்பதோ, பின் தொடர்வதோ என எதுவுமே இல்லை. ஏன் இவனைக் கடந்தால் கூட அப்படி ஒருவன் இருப்பது போலக் கண்டுகொண்டதே இல்லை. மற்றவர்களிடமும் கண்ணியத்தோடு இருந்தாள். அதுவே வர்ஷாவின் மீது நன்மதிப்பை உருவாக்கியது.
முகிலன் இதுவரை எந்தப் பெண்ணையும் கண்டு கொண்டதோ கண் காணித்ததோ இல்லை. முதல் முறை வர்ஷாவைப் பற்றித் தெரிந்து கொள்ள ஆர்வம் எழுந்து கொண்டே இருந்தது. அவள் தன்னைப் பின் தொடரவில்லை ஏதோ உதவிக்காக அப்படிச் செய்கிறாள் என்ற எண்ணம் வலுப்பெற்றது. பிறகு நன்கு ஆராய்ந்ததில் அவள் பின் தொடரும் தெருக்களின் அபாயமும் அவனுக்குக் காரணத்தைத் தெளிவுற விளக்கியது.
காரணம் தெரிந்த பின்பும் அவளைப் பற்றித் தெரிந்து கொள்வதில் ஆர்வம் துளியும் குறைவதாய் இல்லை. அவனையும் அறியாமல் அவளைக் கண்காணித்தான். இப்பொழுது அவள் அணியும் உடை, வளையல்கள், கொலுசு என அனைத்தையும் ரசிக்கத் தொடங்கிவிட்டான். அவன் மனதில் அவள் நுழையத் தொடங்கி இருந்தாள் என்பதே மறுக்க முடியாத உண்மை.
நாட்கள் அழகாக நகர்ந்து வந்தன . அவன் விடுப்பு எடுக்கும் நாட்களில் பெரிதும் திணறி விட்டாள் வர்ஷா. ஒரு நாள் அவன் வெளியில் ஏதோ வேலை விஷயமாகச் செல்வதால் விடுப்பு எடுக்கவே, அன்று மாலை விரைவிலேயே (அது அவளுக்கு 6 மணி தான்) கிளம்பி விட்டிருந்தாள். இருப்பினும் அவள் அத்தெருக்களை அடைந்த பொழுது இருள் சூழத் தொடங்கி இருந்தது. தாயை வர சொல்லலாம் என்றால் பிறகு அவர் பழைய புராணங்களைத் தொடங்கி விடுவாரே.
ஆம்! அவளுடைய தாயார் வள்ளிக்கு இங்கே வந்து, சொந்தங்களைப் பிரிந்து தனித்து இருப்பதில் துளியும் விருப்பம் இல்லை.
"இதற்குத் தான் நம்ம ஊருக்கே போய்டலாம். நம்ம கிட்டே இல்லாத பணமா? நீ ஏன் சம்பாரிக்கணும்" அடுக்கிக் கொண்டே போறவரைச் சமாளிக்கவே முடியாது.
ஆகவே அவரையும் அழைக்க முடியாமல் திக்கித் திணறி ஒரு வழியாகச் சிரமப்பட்டு ஒரு தெருவைக் கடந்து விட்டாள்.
முகிலன் தனது தோழனைச் சந்தித்துவிட்டு வரும் பொழுது மிகத் தயக்கத்தோடு அவள் செல்வதைக் காண நேர்ந்தது. "என்ன தான் செய்கிறாள் என்று பார்ப்போமே!" என, அவளைப் பின் தொடர்ந்து சென்று கொண்டிருந்தான்.
அவளின் அன்ன நடை அவனுக்குச் சிரிப்பை வரவழைக்க, அவள் அடுத்தத் தெருவைக் கடக்கும் பொழுது வீடுகள் மிக மிகக் குறைவாக இருக்கும் அந்தத் தெருவில், நாய்கள் இரண்டு சண்டை போட்டுக் கொண்டிருக்க அத்தனை நேரம் இருந்த தைரியமும் வற்றி நகர கூட முடியாமல் அசையாது நின்றுவிட்டாள் வர்ஷா.
"இது எப்ப சண்டை போட்டு முடிக்கிறது. நாம எப்ப வீடு போறது? இந்த நாய்களைத் தாண்டிப் போகவும் பயமா இருக்கே" என்று எண்ணமிட்டவாறே, தனது கயல் விழிகளைச் சுற்றிலும் சுழற்றினாள் வர்ஷா.
இவளுக்குப் பின்னால் முகிலன் சிறு கேலிப் புன்னகையோடு நின்று கொண்டிருந்தான். அவளுக்கு மிகுந்த வெட்கமாய் போய்விட, அவன் கேலி தந்த கடுப்பில் அவளே அந்த நாய்களை தாண்ட முடிவெடுத்து முன்னால் நடக்கத் தொடங்கினாள்.
சட்டென அருகினில் வந்தவன், "ஏய்! அதுங்க சண்டையைச் சமாதானம் பண்ண உன்னை யாரு பஞ்சாயத்துக்குக் கூப்பிட்டது. பேசாம இங்கேயே நில்லு!" என, அவள் கை பிடித்து இழுத்துக் கொண்டு ஓரமாய் வந்தான்.
அவன் செய்கையில் விரிந்த விழிகள், கைகளை உதற எத்தனிக்க அவனே விடுவித்து, "சாரி.." என்றதோடு மொபைலில் கண்களைப் பதித்து ஏதோ தீவிரமாய் ஆராய்ந்தான். அவள் என்ன சொல்வாளோ என்ற எண்ணம் வேறு அவனைப் படுத்தியது.
வர்ஷாவுக்கு அவன் பேசியதே ஆச்சர்யம். அவனுடன் அவனுடைய டீம்-ல் வேலை செய்யும் இவளுடைய தோழிகள் கூட, அவன் பேசியதே இல்லை எனக் குறைப்படுவது, அவனைப் பற்றி வர்ணிப்பது, அவனது அறிவைச் சிலாகிப்பது என இருப்பார்கள்.