தேவையான பொருட்கள்:
-பச்சை அரிசி 1 cup (சிவத்த அல்லது வெள்ளைப்பச்சை பாவிக்கலாம் . பசுமதி கூட பாவிக்கலாம் )
-சீனி 3/4 cup
-1/2 தேக்கரண்டி சின்ன சீரகம்( தூள் என்றாலும் சரிதான் )
- 1/2 தேக்கரண்டி மிளகுத்தூள்
-பொரிக்க எண்ணெய்
செய்முறை:
-பச்சை அரிசியை இரண்டு மணிநேரம் ஊறவிட்டு, நன்றாக நீர் வடியவிட்டு அரைத்து எடுங்கள். அரைத்த மாவை,
மேலேயுள்ளது போன்றதொரு கண் பெரிதான அரிதட்டில் அரித்தால் சின்ன ரவையின் குருநல் கலந்தது போல மா வரும். அதுவே பணியாரத்துக்கு வேண்டும்.
இல்லையேல், அரைவாசி அரிசியை அப்படி சிறு ரவையின் குருநல் போல் அரைத்தும் மறுபாதியை நல்ல மாவாகவும் அரைத்தெடுக்கலாம்.
- சீனியையும் அரைத்தெடுங்கள் .
- அரைத்த மா, சீனி , சீரகம், மிளகுத்தூள் மூன்றையும் கலந்து நன்றாகப் பிசையுங்கள் . மாவிலிருக்கும் ஈரலிப்போடு சீனி சேர சிறிது நேரத்தில் ரொட்டி மாவைப் போல் வரும்.
இதை உடனேயும் சுடலாம் . ஒருமணித்தியாலம் வைத்துவிட்டுச் சுட்டால் சற்றே தளதளப்பாகி இருக்கும்.இன்னும் சுவையான அரியதரம் கிடைக்கும்.
எண்ணையை நன்றாகச் சூடுபண்ணிவிட்டு மீடியம் பிளெமில் வைத்துக்கொள்ளுங்கள். அப்போதுதான் அரியதரம் கருகாது எடுக்கலாம்.
கையில் எண்ணெய் தடவி விட்டு, சிறு பாக்கு அளவுக்கு உருட்டி அதைத் தட்டி எண்ணையில் போட்டுவிட்டு அது மேலே வரும் வரை கரண்டியால் எண்ணையை எற்றி விட்டுக்கொண்டே இருக்கவேண்டும்.
மெல்லிய பொன்னிறம் வர, மறுபுறம் திருப்பிவிட்டு முழுமையாக மெல்லிய பொன்னிறத்தில் இருக்கையிலேயே இறக்கிவிடுங்கள். அதிலுள்ள சூடு ஆறிவர, பணியாரம் வெந்து பொன்னிறமாக வந்துவிடும்.
செய்ய முதல் சிறு சிறு உருண்டைகளைப் பிடித்துவைத்துக்கொள்ளாம்.
அல்லது ஒருவர் தட்டிப் போட இன்னொருவர் பொரித்து எடுக்கலாம்.