• நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.
    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

அழகென்ற சொல்லுக்கு அவளே - 9

நிதனிபிரபு

Administrator
Staff member
அத்தியாயம் 9

ஒளியால் ஈர்க்கப்படுகிற விட்டில் பூச்சி போன்று உல்லாச வாழ்வின் மீது ஈர்ப்பும் மோகமும் கொண்ட ஒருத்தியாகத்தான் சுவாதி அதுவரை இருந்திருக்கிறாள். ஆனாலும் அன்னையும் தமக்கையும் சொல்லித் தந்து வளர்த்த நல் நெறிகளும் அவளுக்குள் இல்லாமல் இல்லை.

அதனாலேயே செய்த தப்புகள் அத்தனையும் அவளைக் குன்ற வைத்தன. அதுவும், ‘அவளும்தானே என்னோடு பழகினாள்’ என்று மிதுன் கேட்டதும், தான் முறையற்று வயிற்றில் குழந்தையைச் சுமந்து நிற்கிற அசிங்கமும் அவளை முற்றிலுமாக ஒடுக்கியிருந்தன.

அப்போதுதான் எந்த நிலையிலும் நமக்கான எல்லை தாண்டாமல், கட்டுப்பாட்டோடு இருக்க வேண்டியதன் முக்கியம் புரிவதுபோல் இருந்தது. கட்டற்ற சுதந்திரத்திற்கு ஆசைப்பட்டவள் இன்று யாரும் கட்டிப்போடாமலேயே அறைக்குள் அடைந்து கிடக்கிறாள்.

அதுவும் அன்றைக்குப் பிறகு ஒரு வார்த்தை அவள் முகம் பார்த்துப் பேசாத தந்தையின் ஒதுக்கம் இன்னுமே அவளை முடக்கியது.

அவரிடம் மன்னிப்பை வேண்ட எண்ணினாலும் அவர் முகம் பார்க்கும் தைரியம் இல்லாமல் ஓடி ஒளிந்துகொண்டிருக்கிறாள்.

மிதுன் இரண்டொருமுறை பேச அழைத்தபோதும் சரி, குறுந்தகவல்கள் அனுப்பியபோதும் சரி அவள் பதில் சொல்லப் போகவில்லை.

‘கலியாணம் முடியட்டும் மிதுன்.’ என்று மட்டும் அனுப்பிவிட்டாள்.

சுதாகருக்கு வீட்டில் நடக்கும் எதுவும் புரிவதாக இல்லை. ஆளுக்கு ஒரு மூலையில் என்று முடங்கிக்கிடந்தனர். காரணம் கேட்டால் யாரும் எதையும் அவனிடம் பகிரத் தயாராயில்லை. படிக்கிற வேலையை மட்டும் பார் என்று விரட்டினர்.

கடைசியில் சுவாதியைப் பிடிவாதமாகப் பிடித்துவைத்துக் கேட்டான். அப்போதுதான் மூத்த தமக்கை தம் சொந்தத் தமக்கை இல்லையாம் என்கிற விடயம் அவனுக்குத் தெரிய வந்தது. அதிர்ந்துபோனவன் நேராகத் தந்தையிடம் ஓடி வந்திருந்தான்.

இனியும் எதையும் மறைப்பதில் அர்த்தமில்லை என்பதில், “நல்ல மனம் இல்லாத உங்கட அம்மாக்கு அவாவச் சுமக்கிற பாக்கியத்தக் கடவுள் எப்பிடி அப்பு குடுப்பார்?” என்று கேட்டார் அவர்.

“என்னப்பா சொல்லுறீங்க? அப்ப அக்கா உண்மையாவே என்ர அக்கா இல்லையா?” இன்னும் அதிர்ச்சி நீங்காமல் வினவினான் சுதாகர்.

“கூடப்பிறந்தா மட்டும்தான் அக்காவா தம்பி? இல்ல, ஒருத்தி அக்காவா இருக்க அந்தத் தகுதி மட்டுமே போதுமா?” என்று திருப்பிக் கேட்டார் தகப்பன்.

சுதாகர் பதினெட்டு வயது நிறைந்தவன்தான். என்றாலும் அந்த வீட்டின் கடைக்குட்டி என்பதாலும், எந்தவிதமான துன்ப துயரங்களையும் இதுவரையில் அனுபவித்தறியாதவன் என்பதாலும் தந்தையின் பேச்சில் மறைந்து கிடந்த சூட்சுமத்தை அவனால் கண்டறிய முடியவில்லை. அவரின் கேள்வி புரியாத பாவத்துடன் பார்த்தான்.

“அப்பா இன்னும் எவ்வளவு காலத்துக்கு இருப்பன் எண்டு தெரியாப்பு. ஆனா, எண்டைக்கும் அவாதான் உனக்கு மூத்த அக்கா. நீயாவது அக்காட்ட வேற்றுமை காட்டிராத.” என்று அவனிடம் கண்ணீருடன் வாக்குப் பெற்றுக்கொண்டார் குணாளன்.

அதற்கு மேலும் வெளியே நிற்க முடியாமல் உள்ளே வந்தார் ஜெயந்தி. “ஏன் இப்பிடி எல்லாம் கதைக்கிறீங்க குணா? அவளை வயித்தில சுமக்கக் கூடாத அளவுக்குப் பொல்லாதவளா நான்? அப்பிடித்தான் இத்தின வருசமும் நடந்தேனா? கிட்டத்தட்ட இருவத்தி ஏழு வருச வாழ்க்கை. அதில ஒரு நாள் அவசரப்பட்டுட்டன். அதுக்காக இப்பிடி எல்லாம் கதைப்பீங்களா?” என்றார் கண்ணீரும் ஆதங்கமுமாக.

“எனக்கு ஆரின்ர முகம் பாக்கவும் விருப்பம் இல்ல. வெளில போகச் சொல்லு சுதா!” மிகக் கடுமையான குரலில் மகனிடம் சொன்னார் குணாளன்.

அறிந்துகொண்ட விடயம் தந்த அதிர்விலிருந்தே இன்னும் வெளிவராத சுதாகர், செய்வதறியாது அவர்களை மாறி மாறிப் பார்த்தான்.

“அந்தளவுக்கு வெறுத்திட்டீங்களா குணா? செய்தது பிழைதான். உங்களிட்டயும் உங்கட மகளிட்டயும் இன்னும் எத்தின தரம்தான் நான் மன்னிப்புக் கேக்கிறது?”

அப்போதும் அவர் பேசவில்லை. அவரைக் கவனித்துக்கொள்ளும் பாலனை அழைத்துத் தன்னை வெளியில் கூட்டிக்கொண்டு போகச் சொன்னார்.

பாலனும் என்ன செய்வது என்று தெரியாது பார்க்க, “இல்ல. நானே போறன். ஆனா, நீங்க எனக்குத் தாறது பெரிய தண்டனை குணா.” என்றுவிட்டு வெளியேறினார் ஜெயந்தி.

அவருக்கு மனம் நைந்துபோயிற்று. அவர் விட்டது பெரிய தவறுதான். அதற்கென்று அவளைக் கருவில் சுமக்கக் கூடத் தகுதியற்றவர் என்று சொல்லி, இந்தளவு தூரத்திற்குத் தண்டிக்க வேண்டாம் என்றே நினைத்தார்.

மனைவியின் வார்த்தைகளோ கண்ணீரோ குணாளனின் மனத்தைத் தொடவேயில்லை. அவ்வளவில் கசப்பும் வெறுப்பும் நெஞ்சில் மண்டிப் போயிற்று.

அவர்களின் திருமணத்தின்போது அவர் ஜெயந்தியிடம் வைத்த ஒரேயொரு வேண்டுதல் இது மட்டும்தான். இதில் விருப்பம் இல்லையென்றால் உனக்குப் பிடித்ததுபோல் ஒரு வாழ்க்கையை அமைத்துக்கொள் என்றும் சொன்னார்.

திருமணத்தின் பிறகும் இளவஞ்சி மட்டுமே போதுமென்றுதான் இருந்தார். அன்னையின் வற்புறுத்தலும் ஜெயந்தியின் ஏக்கமும்தான் அவர் முடிவை மாற்றியவை. இன்று அதற்காகத் தன்னையும் நொந்துகொண்டார்.

சுவாதிக்குத் திருமணம் நடந்துவிடும். சுதாகருக்கு வயது இருக்கிறது. இல்லாவிட்டாலும் இளவஞ்சி அவனை விடப்போவதில்லை. ஆனால் இளவஞ்சி?

மனம் பாரமாக விழிகளை மூடிய கணம் அன்னை வந்துநின்றார்.

உன்னை நம்பித்தானே அவளை விட்டுவிட்டுப் போனேன் என்று கேட்டார். அவளைச் சுற்றி நீங்கள் எல்லோரும் இருந்தும் இப்படித் தனியாக நிற்க வைத்துவிட்டீர்களே என்று கோபப்பட்டார். குணாளனுக்கு நெஞ்சுக்குள் ஒருமுறை சுருக்கென்றது. நீவி விட்டுக்கொண்டார்.

அப்போது அவர் அறையின் கதவு தட்டுப்பட்டது. இப்போது யார் என்று திரும்பிப் பார்த்தார்.

இளவஞ்சி நின்றிருந்தாள்.

சற்று முன்னர் அலுவலகம் கிளம்பிப்போன அவள் திரும்பவும் வந்து நிற்கிறாள் என்றால், தான் திடமாக நிற்க வேண்டிய நேரம் வந்துவிட்டதை உணர்ந்தார் குணாளன்.

எப்போதும் அவர் கரத்தைப் பற்றிக்கொண்டு அவர் அருகில் அமர்கிறவள் இப்போதெல்லாம் அமர்வதே இல்லை. வருவாள், அவர் நலன் விசாரிப்பாள், தேவைகள் ஏதும் உண்டா என்று கேட்பாள், போய்விடுவாள். இப்போதும் அவர் முன்னால் ஒரு இருக்கையைப் போட்டுக்கொண்டு அமர்ந்தாள்.

அவர் அவள் முகத்தையே பார்த்திருக்க, “எனக்கு என்னைப் பற்றித் தெரியோணும்.” என்றாள் சுருக்கமாக.

அவர் நெஞ்சு அடித்துக்கொள்ள ஆரம்பித்தது.

“நான் ஆர்?”

“இந்தக் குணாளன்ர மூத்த மகள்.” குரலும் பார்வையும் நெகிழச் சொன்னார் குணாளன்.

ஒரு வினாடி அமைதியாக இருந்தாலும், “நான் கேக்கிறது என்னைப் பெத்த அம்மா அப்பாவைப் பற்றி.” என்றாள்.

“அப்ப நான் உங்கட அப்பா இல்லையாம்மா?” கண்ணோரம் கசியக் கேட்டார்.

இல்லை என்று எப்படிச் சொல்லுவாள்? அவள் அவர் மகள் இல்லை என்று தெரிந்துகொண்ட அந்தக் கணம் வரைக்கும் அவள் அப்படி உணர்ந்ததே இல்லையே. ஜெயந்தி கூட அப்படித்தானே பார்த்துக்கொண்டார். இன்னுமே சொல்லப்போனால் அவள் முடிவின் கீழ்தானே அந்த வீடே இயங்கியது. இப்போதும் அவள்தான் விலகி நிற்கிறாள். அல்லது அப்படி நிற்க முயல்கிறாள்.

அவரையே சில கணங்களுக்குப் பார்த்தவள் அந்த விழிகளில் தெரிந்த பாசத்திலும் பரிதவிப்பிலும் தன் பார்வையை அகற்றிக்கொண்டாள். இதனால்தான் இத்தனை நாள்களும் இதைப் பற்றிப் பேசாமல் தள்ளிப்போட்டுக்கொண்டிருந்தாள்.

காரணம் சொல்லாமல் திருமணத்திற்குச் சம்மதி என்கிற நிலனின் பிடிவாதம்தான் சந்தேகத்தைக் கிளப்பி, அலுவலகத்துக்குப் புறப்பட்டவளைப் பாதையை மாற்றி இங்கே வரவைத்தது.

அவரானால் அவரின் பாசத்தாலேயே அவளை முடக்கப் பார்க்கிறார்.

அதற்கு விட்டுவிடக் கூடாது என்று முடிவுகட்டி, “நான் அநாதையா, என்னை எங்கயாவது இருந்து எடுத்து வளத்தீங்களா?” என்று கேட்டு முடிக்க முதலே துடித்துப்போனார் மனிதர்.

“நான் உயிரோட இருக்கிற வரைக்கும் நீங்க அந்த வார்த்தையைச் சொல்லக் கூடாது அம்மாச்சி. இந்த வீட்டுப் பிள்ளையம்மா நீங்க. இந்த அப்பான்ர மகள். இப்பிடி எல்லாம் கதைச்சு என்னை நோகடிக்காதீங்கோ.” என்றார் உடைந்துபோய்.

இளவஞ்சியால் அவரைப் பார்க்க முடியவில்லை. பெரும் வேதனை ஒன்று அடிவயிற்றிலிருந்து உருண்டு வந்து தொண்டைக்குழியை அடைத்தது. அழுது பழக்கமில்லாதவள் அழுதுவிடுவோமோ என்று பயந்தாள். ஆனால், மண்ணுக்குள் மறைந்துகிடக்கும் வேரை மரம் தேடிக்கொண்டிருக்கிறதே!

மெல்லத் தன்னைச் சமாளித்துக்கொண்டு, “வளத்த பாசம் உங்களை இப்பிடிக் கதைக்க வைக்குது. ஆனா எனக்கு என்னைப் பற்றித் தெரியோணும். நான் எப்பிடி உங்களிட்ட வந்தனான்? நான் அநாதையா?” என்று வினவினாள்.

மீண்டும் அநாதை என்கிறாள். கண்ணில் நீரோடு மறுத்துத் தலையசைத்தார்.

“என்னைப் பெத்தவே ஆர்?”

அதற்கு மட்டும் பதில் சொல்ல மறுத்தார் அவர்.
“ஆக நான் அநாதை இல்லை. என்னைப் பெத்தது ஆர் எண்டு உங்களுக்குத் தெரியும். ஆனாலும் சொல்லுறீங்க இல்ல.” மெல்லிய கோபம் தொனிக்கப் படபடத்தாள் அவள்.

தன் பார்வையில் கூடச் சிறு மாற்றத்தையும் காட்டிவிடக் கூடாது என்கிற பிடிவாதத்துடன் அமர்ந்திருந்தார் மனிதர்.

“எனக்கும் சக்திவேலர் குடும்பத்துக்கும் ஏதும் சம்மந்தம் இருக்கா?”

உள்ளே உள்ளம் பகீர் என்றாலும் அவர் அசையவேயில்லை. தானும் தையல்நாயகியின் மகன்தான் என்று காட்டினார்.

“அதான் என்னைக் கட்டியே ஆகோணும் எண்டு நிலன் நிக்கிறாரா?”

“...”

அவளுக்குக் கோபம் வந்தது. “வாயத் திறந்து சொல்லுங்க அப்பா! இப்பிடி எந்தக் கேள்விக்கும் பதில் சொல்லாம இருந்தா என்ன அர்த்தம்? எனக்கு உண்மை தெரியோணும்!” என்று சினத்தில் இரைந்தாள்.

“இப்ப அப்பா எண்டு சொன்னீங்களேம்மா. அதுதான் உண்மை. நான்தான் உங்கட அப்பா.” என்றவரை கோபத்துடன் முறைத்தவள் எழுந்து விறுவிறு என்று நடந்தாள்.

ஜெயந்தி எதிர்ப்படவும் நின்று, “நீங்களாவது சொல்லுங்க. நான் ஆர்? என்னைப் பெத்தவே ஆர்?” என்றாள் அவரிடமும்.
 
Last edited:

நிதனிபிரபு

Administrator
Staff member
கண்களில் கண்ணீர் திரள, “சத்தியமா எனக்குத் தெரியாதம்மா. நான் இந்த வீட்டுக்கு வந்த நேரம் நீ கைக்குழந்தை. கலியாணத்துக்கு முதல், ‘எனக்குப் பிறந்த பிள்ளை இல்லை. ஆனா இவா என்ர பிள்ளைதான்’ எண்டு சொல்லித்தான் என்னை உங்கட அப்பா கட்டினவர். அதுக்குப் பிறகும் உன்னைப் பற்றி ஒரு வார்த்த அவர் சொன்னதே இல்லை.” என்றவருக்கும் மிகுந்த வேதனையே.

அவளுக்கு யோசிக்க யோசிக்கப் பைத்தியம் பிடிக்கும் போலிருந்தது. இந்த உண்மை தெரியாமலேயே இருந்திருக்கலாம். நிம்மதியாக இருந்திருப்பாள்.

இது ஒரு நொடி தவறாது நான் யார், என்னைப் பெற்றவர்கள் என்னை ஏன் கைவிட்டார்கள், நான் எப்படி இவர்களிடம் வந்தேன், இப்போது அவர்கள் எங்கே, எத்தனையோ சொல்லித் தந்த அப்பம்மா இதை ஏன் சொல்லாமல் விட்டார் என்று ஓராயிரம் கேள்விகள் அவள் கட்டுப்பாட்டையும் மீறி அவளைப் போட்டுத் துரத்திக்கொண்டிருந்தன.

இதையெல்லாம் யாரிடம் கேட்டுத் தெளிவாள்? அனைத்தும் அறிந்தவர் வாயைத் திறக்கிறார் இல்லையே. ஒரு கோபம் நெஞ்சுக்குள் கனன்றாலும் அதை யாரிடமும் காட்ட முடியாமல் நடமாடிக்கொண்டிருந்தாள்.

குணாளன் மொத்தமாகத் துவண்டுபோனார். இதை அவள் இதோடு விடுவாள் என்கிற நம்பிக்கை இல்லை. அப்படியிருக்க இன்னும் எத்தனை முறை அவரால் திடமாக இருக்க முடியும்?

நெஞ்சை ஒரு பயம் கவ்விக்கொண்டது. விடயம் அவர் கையை மீறுவதற்குள் எப்படியாவது அவளுக்கு ஒரு நல்லதைச் செய்துவிட நினைத்தார்.

இப்போதெல்லாம் மனம் முற்றிலுமாகத் தளர்ந்து போயிற்று. இன்னும் எவ்வளவு காலத்திற்கு இருப்போமோ என்கிற பயம் அவரைப் பற்றிக்கொண்டது.

இளவஞ்சியும் அவரைக் கவனிக்காமல் இல்லை. இன்னொரு முறை பேசிப் பார்க்கலாமா என்று யோசிக்கக் கூட முடியாத அளவில் அவர் முகத்தில் தெரியும் சோர்வும், இயலாமையும் அவள் வாயை அடைத்தன.

அன்று அலுவலகம் முடிந்து வீடு வந்தபோது பிரபாகரன், சந்திரமதி, நிலன் மூவரும் அமர்ந்திருந்தார்கள்.

சம்பிரதாயத்திற்கு வரவேற்றுவிட்டு ஒதுங்க முயன்றாள். குணாளன் விடவில்லை. அவளையும் அழைத்து அங்கேயே நிறுத்திக்கொண்டார்.

“எப்பிடி இருக்கிறீங்கம்மா?” சந்திரமதி வாஞ்சையுடன் வினவினார்.

“நல்லாருக்கிறன் அன்ட்ரி. நீங்க?” இயல்பாக அவரை எதிர்கொண்டு பேச மிகவுமே சிரமப்பட்டாள். இதுவரையில் தையல்நாயகியின் பேத்தி நான் என்று அவர்களை நிமிர்ந்து நின்றே எதிர்கொண்டவள் இன்று விலாசமில்லாதவள் என்கிற உணர்வில் ஒருவிதமாகத் தனக்குள் கூசினாள்.

“கலியாணப் பரபரப்பில நாள் போகுதம்மா. உங்களுக்கும் நானே சாறி எடுத்தனான். பாருங்கோ.” என்று அவளை அழைத்துக் காட்டினார்.

எதற்கு வீணாக என்று கேட்க வந்தவள், அவர் முகத்தில் தெரிந்த உண்மையான மகிழ்ச்சியில் ஒன்றும் சொல்லாமல் பார்த்தாள். மிக நன்றாகவே இருந்தது.

“நல்லாருக்காம்மா? சுவாதிக்குக் கூட இவ்வளவு தேடேல்ல. பகட்டாவும் இல்லாம அதே நேரம் பாக்கப் பளிச்செண்டு இருக்கிற மாதிரி தேடி தேடி எடுத்தனான். பிடிக்காட்டிச் சொல்லுங்கோ மாத்தலாம்.”

“நல்ல வடிவா இருக்கு அன்ட்ரி. இதே போதும்.” இவ்வளவு பேச்சுக்கிடையிலும் அவள் நிலன் புறம் திரும்பவே இல்லை.

ஆனால் நிலன் அவளையேதான் கவனித்துக்கொண்டிருந்தான். அவள் வந்தது, தம்மை எதிர்பாராமல் ஒருகணம் புருவங்களைச் சுருக்கியது, பின் அங்கிருந்து போக முயன்றது என்று எதுவும் அவன் பார்வையிலிருந்து தப்பவில்லை.

இதே இவள்தான் கொஞ்ச நாள்களுக்கு முதல் இதே வீட்டில் அதிகாரமாக நின்று கேள்விகளால் அவர்களை விளாசியவள். இன்றைக்குச் சொந்த வீட்டிலேயே உரிமை இல்லாதவள் போல் நிற்கிறாள்.

ஒரு நொடி தன்னை நிதானப்படுத்திக்கொண்டு, “அங்கிள் முக்கியமான விசயம் ஒண்டு உங்களோட கதைக்கோணும்.” என்றான் குணாளனிடம்.

“சொல்லுங்கோ தம்பி.” இதமாய்ச் சொன்னார் குணாளன்.

“மிதுன் சுவாதி கலியாணத்தோட எனக்கும் வஞ்சிக்கும் சேர்த்தே கலியாணம் நடக்கட்டும்.” என்று அவன் சொல்லி முடிக்க முதலே, “என்ன, சுவாதின்ர வாழ்க்கைய நடுவுக்க வச்சு என்னை பிளாக்மெயில் பண்ணுறீங்களா?” என்று சீறினாள் இளவஞ்சி.

திட்டமிட்டே வந்தவன் திட்டமாகவே அவளை எதிர்கொண்டான்.

“எனக்கும் இப்பிடிக் கதைக்கிறதில விருப்பம் இல்ல வஞ்சி. அதாலதான் உன்னோட கதைச்சு, உன்னை எப்பிடியாவது ஓம் எண்டு சொல்ல வைக்க நினைச்சனான். ஆனா நீ உன்ர முடிவில இருந்து மாறுறதாவே இல்ல. பிறகும் என்னோட கோவப்பட்டா நான் என்ன செய்ய?” என்று திருப்பிக் கேட்டான்.

“நான் இதுக்கு மாட்டன் எண்டு சொன்னா?”

“மிதுன் சுவாதி கலியாணம் தள்ளிப்போகும்.”

பயந்துபோனார் ஜெயந்தி. “அம்மாச்சி, என்னம்மா இது? உன்ர தங்கச்சின்ர வாழ்க்கைய யோசியம்மா. அவரும் ஒண்டும் மோசமான பிள்ளை இல்லையே. நல்லவர்தானே. உங்களுக்க நல்ல பொருத்தமும் இருக்காம்.” என்று கெஞ்சினார்.

என்னதான் எல்லாம் சுமூகமாக நடந்துகொண்டிருந்தாலும் சுவாதியின் கழுத்தில் தாலி ஏறுகிற வரைக்கும் வயிற்றில் நெருப்பைக் கட்டிக்கொண்டு திரியும் நிலையில்தான் இருந்தார் ஜெயந்தி. இப்போது அவர் பயந்தது சரிதான் என்பதுபோல் குழப்பம் வரவும் அவருக்குச் சுவாதியின் மானம் சந்தி சிரித்துவிடுமோ என்று நடுங்கிப் போயிற்று.

சுவாதிக்கும் இந்தத் திருமணம் நடக்கிற வரையில் நிம்மதி இல்லையே. அதில் அவளும் அழ, “தம்பி, என்னய்யா இது? என்ன இருந்தாலும் இப்பிடி வற்புறுத்திறது கூடாதப்பு.” என்றார் சந்திரமதி.

பிரபாகரன் நடுவில் போகவில்லை. அவரும் சந்திரமதியும்தான் இன்று இங்கு வருவதாக இருந்தது. நிலன் தானாகவே நானும் வருகிறேன் என்று சொல்லிச் சேர்ந்துகொள்ளும்போதே இப்படி ஏதோ ஒன்றை எதிர்பார்த்தார்.

மகன் பேச்சில் பெரிதளவில் ஒப்புதல் இல்லாவிட்டாலும் நடப்பதைக் காணும் பொருட்டில் அமைதியாகவே இருந்தார்.

“அவள் ஓம் எண்டு சொன்னா நான் ஏனம்மா இப்பிடி எல்லாம் கதைக்கப்போறன்? என்னில என்ன குறை எண்டு இவளுக்கு நான் வேண்டாமாம்?” என்று கேட்டான் நிலன்.

“குறை இருந்தாத்தான் வேண்டாம் எண்டு சொல்லோணுமா? உங்களை எனக்குப் பிடிக்க வேண்டாமா?” என்று ஆத்திரப்பட்டாள் இளவஞ்சி.

“உனக்கு என்னைப் பிடிக்காது?”

“இல்ல! பிடிக்காது!”

“பச்சப் பொய் அங்கிள். உங்கட மகள் கம்பஸ்ல படிக்கிற காலத்தில எனக்குப் பின்னால சுத்தினவள். இப்ப வளந்திட்டாளாம். அதால அதையெல்லாம் மறந்திட்டாளாம்.” என்று அவள் இரகசியத்தை எல்லோர் முன்னும் போட்டுடைத்தான் நிலன்.

“நிலன்!” என்று அவள் பல்லைக் கடிக்க, அவ்வளவு நேரமாக உண்மையிலேயே அவளுக்கு அவனைப் பிடிக்கவில்லையோ என்று கவலைப்பட்டுக்கொண்டிருந்த குணாளன், சட்டென்று உசாரானார். அவர் கவலைகள் எல்லாம் அந்த நொடியே பறந்தோடின. எப்படியாவது இந்தத் திருமணத்தை முடித்தே தீருவது என்கிற முடிவுக்கே வந்திருந்தார்.

“பிறகு என்னம்மா? ஓம் எண்டு சொல்லுங்கோவன்.” என்றார் கெஞ்சலாக.

“ஓம் எண்டு சொல்லு இளா.” ஜெயந்தியும் சொன்னார்.

“அக்கா ப்ளீஸ்!” என்று சுவாதி அழுதாள்.

ஆனால், அவளுக்குத் துணைபோல் அவளருகில் வந்து நின்றுகொண்டான் சுதாகர். அவனை உணரும் நிலையில் அவள் இல்லை. என்னை என்ன நிலையில் நிறுத்தியிருக்கிறாய் என்று கேட்பதுபோல் நிலனையே பார்த்தாள்.

அந்தப் பார்வை நிலனைத் தாக்காமல் இல்லை. ஆனால், சுவாதிதான் அவனுக்கான ட்ரம் கார்ட். அவள் திருமணம் நடந்துவிட்டால் அவனால் என்றுமே இளவஞ்சியின் மனத்தை மாற்றவே முடியாது.

அன்று இருபது வயதில் அவனை அவளுக்குப் பிடித்திருந்துமே அவன் வேண்டாம் என்று முடிவு செய்து, இன்றுவரை உறுதியாக அதில் நிற்கிறவள். அப்படியானவள் இன்றைய முடிவிலிருந்தா மாறுவாள்? இந்தச் சந்தர்ப்பத்தை விட்டால் அவனால் அவளை அவனிடம் கொண்டுவரவே முடியாது.

அதுதான் தவறு என்று தெரிந்தும் துணிந்து இறங்கிவிட்டான்.

ஜெயந்திக்கு அவளின் தொடர் அமைதி இன்னுமின்னும் அச்சத்தைத்தான் உண்டாக்கிற்று. அதில், “நீ என்ன நினைச்சாலும் சரி. ஆனா நான் உன்னைப் பெத்த பிள்ளையாத்தான் வளத்தனான். அந்த உரிமைல உன்னட்ட மடிப்பிச்சை கேக்கிறன். என்ர பிள்ளையின்ர மானத்தக் காப்பாத்தித் தாம்மா. ஆறு மாதம், இல்ல ஒரு வருசம் கழிச்சு எண்டாலும் நடக்கட்டும் எண்டு தள்ளிப்போடுற நிலமைல அவள் இல்லையம்மா.” என்று அழுதார்.

அன்னைக்கு ஒப்பாகத் தன்னை வளர்த்தவர் தன்னிடம் மடிப்பிச்சை ஏந்தி நிற்கிறார். அவள் இதயம் வெடித்துவிடுமோ என்னுமளவுக்குத் துடித்தது. ஒருமுறை விழிகளை இறுக்கி மூடித் திறந்தாள். அவளால் அவளைச் சமாளிக்கவே முடியவில்லை.

ஜெயந்திக்கு நேரம் போகப் போகப் பயத்தில் பதற்றம் கூடியது. கணவரிடம் ஓடிப்போய், “உங்கட மகளிட்டச் சொல்லுங்கோ குணா. அவளுக்கு நாங்க ஒண்டும் கெட்டது செய்ய நினைக்கேல்லையே. அவளுக்கும் அவரைப் பிடிச்சு இருக்காமே. இன்னும் என்ன வேணும் உங்களுக்கு? ஓம் எண்டு சொல்லச் சொல்லுங்கோ.” என்று அவரை உலுக்கினார்.

மனைவியின் கைப்பிடியிலேயே எழுந்து அவளிடம் வந்தார் குணாளன். “உங்கள நான் பெறாததாலதான் இவ்வளவு பிடிவாதமா நிக்கிறீங்களா? இதுவே உங்களப் பெத்த அப்பாவா இருந்திருந்தா ஓம் எண்டு சொல்லி இருப்பீங்கதானே? இத்தின வருசம் பாசமா வளத்தனேம்மா, அதுக்காகக் கூடவா ஓம் எண்டு சொல்லக் கூடாது?” என்றவரை வேதனையில் விழிகள் அகல நோக்கினாள் இளவஞ்சி.

யார் என்ன சொன்னாலும் நான்தான் உன் தந்தை என்று சொன்னவர் இன்று வளர்த்த கடனைத் தீர்க்கச் சொல்கிறார். செல் துண்டுகளாக இதயத்தைக் கீறிக்கொண்டு போயின அவர் வார்த்தைகள். எப்படி மறுப்பாள்? அதற்கு அவளுக்கு உரிமை உண்டா என்ன? இரண்டாம் முறையாக அந்த வீட்டின் பெரிய விறாந்தையில் பேச்சற்று நிற்கிறாள்.

“அம்மாச்சி…”

“உங்கட விருப்பப்படியே செய்ங்கோ.” என்று கமறிய குரலில் சொல்லிவிட்டு அங்கிருந்து அகன்றாள் இளவஞ்சி.
 
Last edited:

priya srikanth

New member
நிலன் நல்லவனா இருக்கலாம்... அவன் இப்படி செய்ய காரணமும் இருக்கலாம்.. ஜெயந்தியை பற்றி சொல்ல ஒண்ணுமே இல்ல.. ஆனா குணா வளர்த்த கடனை திருப்பி அடை என்ற மாதிரி சொன்னது சரியில்லை
 
Top Bottom