அவள் ஆரணி - 1

நிதனிபிரபு

Administrator
Staff member
அவள் ஆரணி


அத்தியாயம்-1



சீறிக்கொண்டு வந்த காரின் உறுமலிலேயே வருவது யார் என்று காவலாளிக்குத் தெரிந்துபோயிற்று. அப்போதுதான் தீமூட்டிய சிகரெட்டினைக் காலில் போட்டு மிதித்துவிட்டு ஓடிவந்து, அகன்ற பெரிய கேட்டினைத் திறந்துவிட்டான்.

வேகம் சற்றும் குறையாமலேயே நுழைந்த கார், வாசலின் முன்னே அவசரமாகக் கிறீச்சிட்டபடி நின்றது. சினத்துடன் கதவைத் திறந்துகொண்டு இறங்கினாள் ஆரணி. அவளின் பாதங்கள் விடுவிடு என்று வீட்டுக்குள் நுழைந்து, பரந்து விரிந்திருந்த நீள் சதுர ஹோலின் நட்ட நடுவில் சென்று நின்றது.

பளிங்குபோல் பளபளத்த வெள்ளை நிற மார்பில் நிலத்தில், ரெட் வைனின் நிறத்திலான சோபாவின் கைப்பிடியில் ஒற்றைக் கையை வைத்தபடி, நளினமாக அமர்ந்திருந்தார் யசோதா. கோபத்தில் சிவந்திருந்த மகளின் முகத்தை நிதானமாக ஏறிட்டார்.

ஆக, அவளின் வருகைக்காகக் காத்திருந்திருக்கிறார். புரிந்துவிட்டதில் நிதானமாக நடந்துசென்று தாயின் முன்னிருந்த சோபாவில் அமர்ந்துகொண்டாள் ஆரணி.

“உங்களுக்கும் தெரிஞ்சுதான் எல்லாம் நடந்திருக்கு!” வந்தபோது அவளிடமிருந்த கொந்தளிப்புக்குச் சற்றும் சம்மந்தமேயில்லாத அமைதியான குரலில் அன்னையைக் குற்றம் சாட்டினாள்.

அவளின் மனக்கட்டுப்பாட்டை எண்ணித் தனக்குள் மெச்சிக்கொண்டார் யசோதா. “ஒரேயொரு மகளின்ர திருமணத்தை அம்மாவும் அப்பாவும் சேர்ந்து ஏற்பாடு செய்றதுதானே வழமை.” உதட்டினில் உறைந்தே கிடக்கும் சின்னச் சிரிப்புடன் எடுத்துரைத்தார்.

“அந்த ஒரேயொரு மகளின்ர விருப்பம் என்ன எண்டு தெரிஞ்சும் வேற ஏற்பாடு செய்றது சரி இல்ல! அவளை அவமானப்படுத்தி இருக்கிறீங்க!” அடக்கப்பட்ட சினத்துடன் வந்தன அவள் வார்த்தைகள்.

“இது அவமானம் இல்ல ஆரா! அக்கறை. அவள் காலத்துக்கும் நல்லா இருக்கவேணும் எண்டுற பாசம்.”

“அக்கறை இருந்திருந்தா அவளின்ர விருப்பம் பெருசாத் தெரிஞ்சிருக்கும். அவளின்ர சந்தோசம் முக்கியமாப் பட்டிருக்கும்.” அவளும் விடுவதாயில்லை.

“உனக்குப் பிடிச்சிருக்கு எண்டுறதுக்காக வாங்கித் தாறதுக்கு வாசல்ல நிக்கிற கார் இல்ல இது, வாழ்க்கை. பிழைச்சிட்டுது எண்டா மாத்தி அமைக்கவே ஏலாது!” எத்தனை தடவை எடுத்துச் சொன்னாலும் கேட்கிறாள் இல்லையே என்கிற கவலை தொனித்தது அவர் குரலில்.

“இப்ப என்ன சொல்ல வாறீங்க? இந்த இருபத்திமூண்டு வயசிலையும் எனக்கு ஆட்களை எடைபோடத் தெரியாது. அதால வாயை மூடிக்கொண்டு நீங்க சொல்லுறதுக்கு தலையை ஆட்டவேணும். அப்பிடியா?” அவளின் கேள்விகள் சீறிக்கொண்டு வந்தது.

சட்டென்று நிதானித்தார் யசோதா. அவர்களின் பேச்சு அபாயகரமான பாதையை நோக்கி நகர்வதாய்ப் பட்டது. இனி இடையில் விடமுடியாது; ஆரணி அதற்கு விடமாட்டாள். எனவே மகளுக்கு நிதானமாக விளங்கப்படுத்த முனைந்தார்.

“வளந்த பிள்ளைகளும் பிழையான முடிவை எடுக்கச் சாத்தியங்கள் இருக்கு ஆரணி.” அன்னையின் நிதானம் அவளின் பொறுமையைச் சீண்டிப் பார்த்தது!

“சரியா சொன்னீங்க! அதைச் செய்தது நீங்களும் அப்பாவும்தான். நானில்ல!”

மற்றவர்களைப் போலக் காதலித்ததும் என் வாழ்க்கை என் விருப்பம் என்று போகாமல், பெற்றவர்களிடம் அவளின் விருப்பத்தைச் சொன்னபோது, அதை அவர்கள் ஏற்கவில்லை. அதை அவளால் புரிந்துகொள்ள முடிந்தது. தன்னையும் தன் மனதையும் புரிந்துகொள்ளட்டும் என்று காத்திருந்தாள். அப்படியிருக்கையில்தான் இன்னொருவனை அவளுக்கானவன் என்று நிச்சயித்துவிட்ட அவர்களின் செயல், அவளை மிகுந்த ஆத்திரத்திற்கு உள்ளாக்கிற்று!

யசோதாவின் விழிகளிலும் மெல்லிய கோபம் வந்தமர்ந்தது.

“படிச்ச, நல்ல பதவில இருக்கிற, எங்கட வசதிக்குக் கொஞ்சமும் குறையாத, லட்சணமான, ஒரு குறை சொல்ல முடியாத ஒருத்தனை தெரிவு செய்திருக்கிறம். அவனிட்ட ஏதாவது ஒரு குறை இருக்கா சொல்லு பாப்பம்?” என்று சவால் விட்டார். ஒற்றைப் பெண்ணுக்காக என்று பார்த்துப் பார்த்துத் தேர்ந்து எடுத்ததையே பிழை என்கிறாளே!

இப்போது ஆரணி நிதானமாகத் தன் செவ்விதழ்களில் புன்னகையைத் தவழவிட்டாள். “உங்கள மாதிரி அடுத்தவனிட்ட குறை தேடுற பழக்கம் எனக்கில்ல அம்மா.” என்றாள் தைரியமாக.

தாயின் விழிகளில் தெறித்த முறைப்பை லட்சியமே செய்யவில்லை அவள்.

“நீங்க சொன்ன அத்தனை தகுதிகளும் நிகேதனுக்கும் இருக்கு. பிறகும் ஏன் வேண்டாம் எண்டு சொல்லுறீங்க? காசு! அது இல்ல அவனிட்ட. அதுதானே?” என்றவளின் இதழ்கள் ஏளனமாக வளைந்தது. “இங்க கலக்கப்போறது காசு; மனங்கள் இல்ல!” என்றாள் எள்ளலாக.

“எங்களிட்ட இல்லாத காசா!” கையினை அலட்சியமாக விசுக்கினார் யசோதா.

“அப்ப அவனுக்கு என்ன குறை எண்டு அவனை வேணாம் எண்டு சொல்லுறீங்க?” வெகுண்டுபோய்க் கேட்டாள் பெண்.

“அவனிட்ட குறையே இல்லையா?”

தாயின் கேள்வியில் தொனித்த ஏளனத்தில் ஆரணியின் விழிகளில் பெரும் சீற்றம் வந்தமர்ந்தது! அதைப் பொருட்படுத்தவில்லை யசோதா.

“சொந்தக் காலில நிக்க வக்கில்லாம, தமையன்ர காசுல சாப்பிடுறவனுக்குக் குறையில்லையா? காலத்துக்கும் வசதியா வாழ பணக்கார ஒருத்தியா பாத்து பிடிச்சிருக்கிறானே அது நல்ல குணமா?” அழுத்தம் திருத்தமாக அவர் கேட்டபோது, “அம்மா!” என்று, துள்ளிக்கொண்டு எழுந்தாள் ஆரணி!

“நிகேதனைப் பற்றி ஒரு வார்த்தை.. ஒரு வார்த்தை தவறக்கூடாது!” விரல் நீட்டி எச்சரித்தாள்.
“காசை வச்சு மனிசரை அளக்கிற உங்களுக்குக் காதலைப்பற்றித் தெரியப்போறதே இல்லை!”

“யாரையும் கேவலப்படுத்த வேண்டிய அவசியம் எனக்கில்லை ஆரா! உனக்கு காதல் கண்ணை மறைக்குது! அதுதான் உண்மையைச் சொல்லி விளங்கப்படுத்துறன்!” அவளைப்போன்று உணர்ச்சிவசப்படாமல் இன்னுமே நிதானமாகப் பேசினார் அவர்.

“என்னம்மா உண்மை? அவன் ஒரு பட்டதாரி எண்டுறது உண்மை. படிச்ச படிப்புக்கேத்த வேலை தேடுறான் எண்டுறதும் உண்மை. அதேபோல அவன்ர குடும்பம் ஏழ்மைல இருக்கு எண்டுறதும் உண்மைதான். இது எல்லாத்தையும் விடப் பெரிய உண்மை என்ன தெரியுமா? அந்த ஏழ்மை எண்டைக்கும் நிரந்தரம் இல்லை எண்டுறது! அவன் அதைத் தாண்டி முன்னுக்கு வருவான் எண்டுறது.”

இதற்குச் சட்டென்று பதிலிறுக்க முடியாமல் நின்றார் யசோதா. அவள் சொன்ன விடயத்தில் இருந்த நியாயமும் அவளின் இந்த ஆக்ரோசமும் அவரின் வாயை அடைத்தது. முதன் முதலில் அவரிடம் தான் அவள் தன் காதலைப் பற்றிச் சொன்னது. அன்றிலிருந்து மாறாமல் தன் பிடியிலேயே நின்றாளே தவிர, இப்படியொரு கோபத்தைக் காட்டவில்லை.

அதனால் தான் தைரியமாக அவர்கள் அவளுக்கான வரனைத் தேடியதும். அனைத்திலும் சிறந்தவனாக ஒருவனைக் கொண்டுவந்து நிறுத்திவிட்டு எடுத்துச் சொன்னால் விளங்கிக்கொள்வாள் என்று எதிர்பார்க்க விசயமோ அப்படியே தலைகீழாக மாறிப்போயிற்று!

அதேநேரம் அடுத்த காரும் சீறிக்கொண்டு வந்து நின்ற நொடியே விடுவிடு என்று வீட்டுக்குள் நுழைந்தார் சத்தியநாதன்! ஆரணி இண்டஸ்ட்ரீஸின் அதிபர்!

“விபாகரனை என்னத்துக்கு அவமானப்படுத்தி அனுப்பி வச்சனி ஆரணி?” அவரின் சீற்றத்தைத் தைரியமாகவே எதிர்கொண்டாள் ஆரணி.
 

நிதனிபிரபு

Administrator
Staff member
“அவமானப்படுத்தி அனுப்பேல்ல, அனுமதி வாங்கிக்கொண்டு வா எண்டு அனுப்பி வச்சனான்!” நிமிர்ந்து சொன்னாள். “ஓபீஸ்ல வேலை நேரத்தில அப்போயின்மென்ட் இல்லாம யாரையும் பாக்கிறேல்ல எண்டுறது பொது விதிதானேப்பா. அதை எப்பிடி மீறுறது?” தந்தைக்கே பாடம் கற்பித்தாள் மகள்.

“அனுப்பி வச்சது நான்! பிறகு என்னத்துக்கு அனுமதி?”

“பாக்க வந்தது என்னைத்தானே?”

“ஆரா!” மகளின் பதிலில் கொந்தளித்தார் சத்தியநாதன்.

“அவனை என்ன வேலை வெட்டி இல்லாம சும்மா ஊரைச் சுத்துறவன் எண்டு நினைச்சியா? ஒவ்வொரு செக்கனையும் காசாக்குறவன்! என்ன மதிச்சு உன்னைப் பாக்க வந்தவனைக் கேவலப்படுத்தி அனுப்பி இருக்கிறாய்!”

அலட்சியமாகத் தலையைச் சிலுப்பினாள் ஆரணி. “அவ்வளவு பிஸியானவன் தன்ர வேலைய மட்டும் பாத்திருக்க வேணும்! தேவையில்லாம என்னைப் பாக்க வந்திருக்கக் கூடாது.”

சத்தியநாதனுக்கு இரத்த அழுத்தம் ஏறிக்கொண்டு போயிற்று!

“தேவையில்லாத கதை என்னத்துக்கு? நீ என்ன சொன்னாலும் அவனோடதான் உனக்குத் திருமணம். அது மாறாது!” முடிவாகச் சொன்னார்.

“அது நடக்காது அப்பா! நான் விரும்புறது நிகேதனை. அவனைத்தான் கட்டுவன். ஒருத்தனை மனதில வச்சுக்கொண்டு இன்னொருத்தனை கட்டுற கேவலமான பழக்கத்தை நீங்க எனக்குச் சொல்லித் தரேல்ல!” அவளும் தெளிவாகச் சொன்னாள்.

இறுகிய தாடையும் கண்களில் ஏறிய சிவப்பும் அவர் கோபத்தை அடக்குவதைக் காட்டியது. வேறு யாராகவும் இருந்திருக்கப் பயத்தில் அடங்கிப் போயிருப்பர். அவள் ஆரணி! நிமிர்வும் தைரியமும் பிறப்பிலேயே கொண்டவள். தடுமாறவே இல்லை.

“நான் ஒருத்தனை விரும்புறன் எண்டு சொன்னபிறகும் இன்னொருத்தனைப் பாக்க அனுப்பி வச்சது அசிங்கம்! அதைச் செய்தது நீங்க!” அவரையே குற்றம் சாட்டினாள்.

“விரும்புறன் எண்டு சொல்லிக்கொண்டு கண்டவனையும் கண்ணுக்கு முன்னால கொண்டுவந்து நிப்பாட்டினதும் எதைப்பற்றியும் யோசிக்காம கட்டிவைக்க, உன்னை மாதிரி நானும் சின்னப்பிள்ளை இல்ல. அவன் உனக்குத் தகுதியானவனா, நாளைக்கு என்ர தொழிலையும் கொண்டு நடத்துறவனா, என்னையே தொழில்ல வெண்டு(வென்று) காட்டுறவனா இருக்கவேணும்! அதுக்குப் பிறப்பில இருந்தே சில தகுதிகள் வேணும். காச கையாளத் தெரியவேணும். நாலுபேரை தனக்குக்கீழ வச்சு வேலை வாங்கத் தெரியவேணும். எங்கட ஸ்டேட்டஸ்ல சரிக்குச் சமனா நிக்கத் தெரியவேணும். கூலி வேலைக்குக் கூடப் போகத் துப்பில்லாதவனுக்கு இதெல்லாம் எப்பிடித் தெரியும்? நீ சொன்னவன எனக்கு மருமகனா கொண்டுவந்தா எண்ணி ஒரு வருசத்துல நடுரோட்டுல வந்து நிண்டு, என்ர மானம் மரியாதையையும் சேர்த்து வாங்குவான்!” என்றவரின் பேச்சில் ஆரணியின் முகம் அவமானத்தில் சிவந்து போயிற்று!

சத்தியநாதனோ இப்போது யசோதாவை முறைத்தார். “நல்ல வளப்பு வளத்து வச்சிருக்கிறாய்! படி எண்டு அனுப்பிவச்சா காதல் எண்டு வந்து நிக்கிறாள்! அந்த அன்னக்காவடி எனக்கு மருமகனாம்! எந்தக் காலத்திலையும் நடக்காது, சொல்லிவை!”

யசோதாவுக்கு யார் பாக்கம் நிற்பது, யாரைச் சமாளிப்பது என்று தெரியாத நிலை. மனம் படபடவென்று அடித்துக்கொண்டது. அச்சத்துடன் மகளை நோக்கினார். அவள் விழிகளில் அனல் பறந்தது.

“நீங்க நினைக்கிறதும் நடக்காது அப்பா! இனி அவன்.. அந்த விபாகரன் என்னைப் பாக்க வரக்கூடாது! மீறி வந்தான்.. பிறகு நடக்கிற எதுக்கும் நான் பொறுப்பில்லை!” என்றாள் உறுதியான குரலில்.

“ஹா!” அலட்சியச் சிரிப்பைச் சிந்தியவரின் விழிகளில் ஒருவிதமான மினுமினுப்பு! “அவனுக்கு என்ன பெயர்.. நிக்.. நிகேதன் என்ன? அவன் இருக்கிற வரைக்கும் தானே நீ மாட்டன் எண்டு சொல்லுவாய்? இல்லாம போய்ட்டா?” அவர் கேட்டு முடிக்க முதலே, “அப்பா!” என்று குரல் உயர்த்தியிருந்தாள் ஆரணி!

யசோதாவே ஆடித்தான் போனார். “சத்யா, என்ன இது? கோபத்தில் என்ன கதைக்கிறது எண்டு இல்லையா?” என்று பதறினார். எவனாக இருந்தாலும் யாரோ ஒரு தாய் பெற்ற பிள்ளை தானே அவனும்!

சத்யநாதன் அசையவே இல்லை. இப்படி எத்தனைபேரை ஆட்டிவைத்திருப்பார். இல்லாமல், இந்த நிலைக்கு வந்திருப்பாரா என்ன? அவருக்கு இதெல்லாம் சுண்டைக்காய் விடயம்! அலட்சியப் புன்னகை ஒன்றை உதட்டினில் நெளியவிட்டார். “அதை உன்ர மகளுக்குச் சொல்லு! செல்லமா வளத்தா என்னவும் செய்யலாம் எண்டு நினைச்சிட்டாள் போல! பாசமா வளக்கத் தெரிஞ்ச எனக்கு அவளை வழிக்குக் கொண்டுவரவும் தெரியும் எண்டு சொல்லு!” என்றார் அதே சிரிப்புடன்.

“செல்லம் குடுத்தது நீங்க. கேட்டதெல்லாம் வாங்கிக் குடுத்ததும் நீங்க. இப்ப, ஒரு பிரச்சனை எண்டு வந்ததும், ‘என்ர மகளா?’ சும்மா கோவத்துல குதிக்கிறதை விட்டுட்டு உங்கட மகளுக்கு எடுத்துச் சொல்லுங்கோ! அடுத்த வீட்டுப் பிள்ளையில கைவைக்க எங்களுக்கு உரிமையில்லை!” யசோதாவுக்கு என்னவோ நடக்கக் கூடாதது நடக்கப் போவதுபோல உள்ளம் பதறியது. அப்பாவும் மகளும் பிடிவாதத்துக்குப் பெயர் போனவர்கள். எப்படிச் சமாளிக்கப் போகிறார்? வழியின்றித் தடுமாறினார்.

“என்ர வீட்டுல கைவச்சா அதுதான் நடக்கும்!”

அதுவரை தகப்பனையே அசையாமல் பார்த்திருந்த ஆரணி
அவரின் முன்னே வந்து நின்றாள். “செல்லமாத்தான் வளத்தனீங்க அப்பா. நான் கேட்டதெல்லாம் வாங்கித் தந்தனீங்க. படிச்ச படிப்பில இருந்து ஓடுற கார் வரைக்கும் நான் எடுத்த முடிவு எல்லாம் சரி எண்டு சொல்லிச் சந்தோசமா கொண்டாடுனீங்க. அந்தத் தைரியத்திலதான் மனத்துக்குப் பிடிச்சவனையும் காதலிச்சனான். அதுவும், காதலிக்கவேணும் எண்டு திட்டம் போட்டுக் காதலிக்க இல்ல. இவனைத்தான் காதலிக்கவேணும் எண்டு நினைக்கவும் இல்ல. என்ர மனம் அவனைத்தான் விரும்பினது அப்பா. அவன் நல்லவனா எண்டுதான் பாத்தேனே தவிர ஏழையா பணக்காரனா எண்டு பாக்கேல்லை. வாழ்க்கைக்கு நல்ல மனதுதான் தேவை எண்டு நினைச்சன். அப்பிடித்தான் நீங்களும் நினைப்பீங்க எண்டு நம்பினன். ஆனா நீங்களும் காசை வச்சுத்தான் ஆளை எடைபோடுற ஆள் எண்டு இப்பதான் தெரியவந்திருக்கு. தெரிஞ்சபிறகும் மனத்தப்பற்றி உங்களிட்டக் கதைக்கிறதுல அர்த்தமில்ல!” என்றவள் மிகுந்த நிதானத்தோடு கடைசி வார்த்தைகளை உதிர்த்தாள்.

“என்ன சொன்னீங்க? அவன் இருக்கிற வரைக்குமா? அவன் இல்லாட்டியும் நான் அவனுக்குத்தான் சொந்தம்! இப்பவே இந்த வீட்டை விட்டுப் போகப்போறன்! அவனைத்தான் திருமணமும் செய்யப்போறன்! உங்களால் என்ன செய்ய ஏலுமோ அதைச் செய்ங்க! நடக்கிறதைச் சந்திக்க எனக்குத் தைரியமிருக்கு!” என்றவள், அதிர்ந்து சிலையாகி நின்ற அன்னையை ஒரு பார்வை பார்த்துவிட்டு, வீட்டை விட்டு நடக்கத் தொடங்கினாள்.

ஒருநொடி திகைத்து நின்றுவிட்டு, “ஆரா நில்லு!” என்றபடி ஓடிவந்தார் யசோதா.

அவள் இந்தளவு தூரத்துக்குப் போவாள் என்று எதிர்பார்க்கவில்லை அவர்.

“அப்பாதான் கோவத்துல கதைக்கிறார் எண்டா நீயும் அவசரப்படாத ஆரா! என்ன பழக்கம் வீட்டை விட்டுப் போறது? நாலு சனத்துக்குத் தெரிஞ்சா என்ன கதைக்கும்? எவ்வளவு கேவலம்?” பதறிக்கொண்டு மகளுக்கு எடுத்துரைக்க முனைந்தார் அன்னை.

“இந்தளவுக்குக் கொண்டுவந்து விட்டது நீங்க ரெண்டுபேரும்தான் அம்மா. விருப்பமில்லை, கட்டித்தரமாட்டோம் எண்டு நீங்க சொல்லியும் வெளில போனேனா? இல்லையே! பொறுமையா இருந்து என்ர விருப்பம் என்ன எண்டு காட்டோணும் எண்டுதான் நினைச்சனான். ஆனா நீங்க? இன்னொருத்தனைக் கொண்டுவந்து மாப்பிள்ளையா நிப்பாட்டுறீங்க. தன்ர மகளைப் பாதுகாத்துக்கொண்டு யாரோ பெத்த மகனை ஆளே இல்லாம அழிக்கப்போறாராமே அப்பா. அதுக்கு விடமாட்டன் நான்! அவனுக்கு என்ன செய்றதா இருந்தாலும் என்னைத் தாண்டித்தான் நடக்கும்!” யசோதா தடுக்க தடுக்க விலகி நடந்தவளை இடைமறித்தது சத்தியநாதனின் குரல்.

“போறதுக்கு முதல் ஒண்ட நல்லா கேட்டுட்டுப் போ!”

வீட்டு வாயிலில் நின்றவரைத் திரும்பிப் பார்த்தாள் ஆரணி! அவரின் முகம் இறுகி கல்லைப்போன்று காட்சியளித்தது.

“இந்த வீட்டைத் தாண்டிப் போனா திரும்பி வரக்கூடாது. எனக்கு மகள் எண்டு ஒருத்தி இல்லவே இல்லை எண்டு தலை முழுகிடுவன்! இப்ப போயிற்று பிள்ளை குட்டியோட வந்து நிண்டா சேர்ப்பம் எண்டு மட்டும் நினைச்சிடாத!” என்று அவர் சொல்லும்போதே இதழோரம் வளையப் புன்னகைத்தாள் அவரின் மகள்.

“பயப்படாதீங்க அப்பா. கடைசி வந்தாலும் வரமாட்டன். ஒரு ரூபாய்க்குக் கூட உங்களிட்ட வந்து நிக்கமாட்டன். இவ்வளவு சொத்தும் எனக்குத்தான் வரும் எண்டு தெரிஞ்சும் எதுவுமே வேண்டாம் எண்டு உதறிப்போட்டுப் போறவளா திரும்ப வருவாள் எண்டு நினைக்கிறீங்க? என்ர நிகேதன் நாணயமானவன். அவனுக்கு நம்பிக்கைத் துரோகம் செய்யத் தெரியாது! அவன் என்னைக் கைவிடமாட்டான். நானும் ஏமாந்துபோய் வந்து நிக்கமாட்டன்! வாழ்ந்து காட்டுவன்! நீங்களும் பாக்கத்தானே போறீங்க.” என்றவள் அதன்பிறகு அங்கே நிற்கவில்லை.
 

Jeeona

New member
நிகேதன் உண்மையாவே நல்லவனா?

ஆரணி போல்ட் ❤
 
Ayyo.... nithama mikka natri.... love you soooo much....I m always love this novel..... I like aarani very much..... one of my favorite 😍 ❤ ♥ 💛 💙 💕 😍
 

Goms

Member
முதல் எபியே சவாலா?🥰
ஆரணி, தைரியமா முடிவு எடுத்திட்டாள்.

எங்க ஹீரோயின் எடுக்கிற எந்த முடிவுக்கும் நாங்க துணை நிற்போம் 😍😍🤩🤩💞💖💖💞
 

Google Typing

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.

Top Bottom