அவள் ஆரணி - 2

நிதனிபிரபு

Administrator
Staff member
அத்தியாயம் 2


அந்தத் தனியார் நிறுவனத்தை விட்டு வெளியே வந்த நிகேதனுக்கு மனம் கொதித்துக் கொண்டிருந்தது. சுழல் நாற்காலியில் அமர்ந்திருந்தவனின் கழுத்தை நெரிக்குமளவுக்கு ஆத்திரம் வந்தபோதிலும் அடக்கிக்கொண்டு வந்துவிட்டான்.

எலக்ட்ரிக்கல் இன்ஜினியர் தேவை என்கிற அவர்களின் விளம்பரம் பார்த்துத்தான் விண்ணப்பித்தான். நேர்முகத் தேர்வுக்கு அழைத்திருந்தார்கள். பெரிய மீனைப்போட்டு இருக்கிற அத்தனை மீன்களையும் பிடிக்கிற கதையாக, அவனுடைய தகுதிக்குச் சம்மந்தமே இல்லாத வேலை பார்க்கிறாயா என்கிறார்கள்! பிறகு எதற்கு மாடாகப் படித்து, என் தகுதி இதுதான் என்று வளர்த்துக்கொள்ள வேண்டும்? எதையாவது படித்துவிட்டு எதையாவது வேலையாகப் பார்த்துவிட்டுப் போகலாமே.

பட்டம் வாங்கிவிட்டால் போதும், நல்ல வேலை கிடைக்கும், முன்னேறிவிடலாம் என்று ஆழமாய் நம்பினானே. அதனால் தானே அண்ணா வீட்டில் அத்தனை அநியாயங்களையும் தாங்கிக்கொண்டு பொறுமையாக இருந்து படித்து முடித்தான்.

இப்போதோ எந்தப் பக்கம் திரும்பினாலும் ஏமாற்றம் ஏமாற்றம் ஏமாற்றம் மட்டுமே. இதற்குப் படிப்பு வராமலேயே இருந்திருக்கலாம். படிப்பு வரவில்லை, அதனால் நல்ல வேலையும் அமையவில்லை என்றாவது மனத்தைத் தேற்றியிருப்பான். தகுதி இருந்தும் வாய்ப்பு மறுக்கப் படுகிறது என்றால் இனியும் என்ன செய்வது? செய்வதறியாது மன்னார் கடற்கரையில் வந்து விழுந்தான்.

இனி வரிசையாக அழைப்புகள் வரும். அறிவுரைகள் மூட்டை மூட்டையாக வரும். நினைத்து முடிக்க முதலே கொழும்பிலிருந்து அழைத்தார் அவனுடைய அண்ணா, சகாதேவன். எடுக்காமல் இருந்துவிடத்தான் ஆசை. பிறகு அதற்கும் ஆயிரத்தெட்டுக் கேள்விகள் வருமே.

“இந்த வேலையாவது கிடச்சதோ?” கேட்ட தொனியிலேயே கிடைத்திருக்காது என்கிற நம்பிக்கை தெரிந்தது.

ஒன்றும் சொல்லவில்லை நிகேதன். அவருக்கு ஏற்கனவே தெரிந்த பதிலை எதற்கு அவனும் ஒருமுறை சொல்வான்?

“இதுக்குத்தான் சொன்னனான், பேசாம கொழும்புக்கே வா எண்டு. கேட்டாத்தானே? இன்னும் எத்தினை நாளைக்கு உன்னையும் சேர்த்து நானே பாக்கோணும் எண்டு நினைக்கிறாய்? கிடைக்கிற வேலைல நீ நிலைக்கமாட்ட. நீ தேடுற வேலை உனக்குக் கிடைக்கவே கிடைக்காது. என்ன மனுசனடா நீ. ஒரு தங்கச்சி இருக்கே, அவளுக்குத் திருமணம் செய்து வைக்கவேணும் எண்டுற யோசனை இல்ல. வயசான அம்மா இருக்கிறாவே அவவப் பாக்கோணும் எண்டுற நினைப்பு இல்ல. கொஞ்சமாவது பொறுப்பா நடக்க மாட்டியா?” தன் சொல்வன்மையைக் காட்டி அவனைச் சில்லு சில்லாகச் சிதைத்தார் கூடப்பிறந்தவர்.

“அவர் ஏன் பொறுப்பா இருக்கவேணும்? அதுதான் எல்லாம் செய்ய நீங்க இருக்கிறீங்களே. பிறகென்ன?” அண்ணி மாலினியின் குரலும் கேட்டது. மிகுதிக் காலத்துக்கான தாய் தங்கையின் பொறுப்பும் தன் கணவரின் தலையில்தான் விழப்போகிறது என்று காய்கிறார் என்று நிகேதனுக்குப் புரியாமல் இல்லை. இருந்தும் வாயை இறுக்கி மூடிக்கொண்டு அமர்ந்திருந்தான். ‘நான் பாப்பன். நீங்க யோசிக்காதீங்க!’ என்று ரோசப்பட்டுச் சொல்லுகிற வாய்ச்சொல்லுக்கு மதிப்பில்லையே!

“இங்க வந்தா வேலையெல்லே செய்யவேணும். பிறகு எப்பிடி வருவார் உங்கட தம்பி? உழைச்சுப்போட நீங்க இருக்கிறீங்க. சமைச்சுப்போட மாமி இருக்கிறா. தோய்ச்சுப்போட தங்கச்சி இருக்கிறாள். அந்தச் சுகத்தையெல்லாம் விட்டுட்டு மாடா உழைக்க அவர் என்ன உங்களை மாதிரி மூளை இல்லாதவரே. நீங்கதான், இன்னும் அம்மா, தம்பி, தங்கச்சி எண்டு சாகுறீங்க!” எரிகிற அடுப்பில் நன்றாகவே எண்ணெயையை ஊற்றிக்கொண்டிருந்தார், மாலினி.

‘ஏன், உங்களுக்கு வீட்டு வேலைக்கு ஆள் தேவைப்படுதா?’ சூடாகக் கேட்டுவிடத் துடித்த நாவை அதைவிட வேகமாக அடக்கிக்கொண்டான். அப்படி எதையாவது கேட்டுவிட்டால் அவனுடைய இன்றைய நாள் அல்ல இந்த மாதமே பாழாகிப் போய்விடும். சொல்லிச் சொல்லியே ஏனடா வாயைத் திறந்தோம் என்று நினைக்க வைத்துவிடுவார்.

“கொஞ்ச நேரம் பேசாம இரு மாலினி!” என்று அவரை அடக்கிவிட்டு, “என்னடா வாறியா? மாமாவோட கதைக்கவா?” என்று பொறுமையை இழுத்துப் பிடித்துக்கொண்டு கேட்டார், சகாதேவன்.

“இன்னும் ரெண்டுமூண்டு இன்டர்வியூ இருக்கு. முடியட்டும் சொல்லுறன்!” பிடிகொடுக்காமல் சொன்னான் நிகேதன்.

“பிறகு என்ன, அடுத்த ஒரு மாதத்துக்குச் சாட்டுச் சொல்லியாச்சு. இப்பிடியே போகட்டும்! எனக்கு விடிவு சாவிலும் இல்ல. நல்ல குடும்பத்துக்க வந்து விழுந்திருக்கிறன்!” மாலினியின் வார்த்தைகளோடு அந்தத் தொலைத்தொடர்பு அறுந்துபோயிற்று!

மிகுந்த அவமானம் நெஞ்சைக் கொல்ல, அப்படியே கண்களை மூடிக்கொண்டு கடற்கரை மணலில் சாய்ந்துகொண்டான். கொழும்பில் வேலை கிடைத்திருக்கிறது என்று போன சகாதேவன், கம்பனி முதலாளியின் மகளைக் காதலித்துத் திருமணமும் செய்துகொண்டார். குடும்பப் பொறுப்பு அவர் கையில் என்பதில் அவரின் விருப்பமே முடிவானது.

மாலினிக்கும் தன்னால் தான் அவர்களின் குடும்பமே வாழ்கிறது என்கிற எண்ணம் நிறையவே உண்டு. சகாதேவனும் மனைவியின் முன்னே வாயில்லாப் பூச்சிதான். வீட்டின் எஜமானி மனைவி என்றால் வேலைக்கு எஜமானன் மாமனாராயிற்றே! அவரின் முழுக்குடுமியும் அவர்களின் கையிலிருந்தது.

அடுத்த அழைப்பு அன்னையிடம் இருந்து வந்தது.

“போனவிசயம் என்னவாம் தம்பி?”

“என்ன என்னவாம்? அவேன்ர பாக்டரில பத்தோட பதினோராவது ஆளா வேலைக்கு வரட்டாம். மாதம் பதினெட்டாயிரம் சம்பளம் தருவீனமாம். இதுக்கு எதுக்கு நான் படிக்க? பட்டம் வாங்கியிருக்க? வேணாம் எண்டுபோட்டு வந்திட்டன்!”

சற்றுநேரம் அந்தப்பக்கம் சத்தமேயில்லை.

“ஓம் எண்டு சொல்லியிருக்கலாமே? வேலையே இல்லாம இருக்கிறதுக்கு இது எவ்வளவோ பரவாயில்லையே நிகேதா. இந்த வேலையைச் செய்துகொண்டே நீ ஆசைப்படுற மாதிரி வேலை தேடியிருக்கலாம்.”

“ஏன், உங்கட மகனுக்கு வேலைக்குப் போக, சம்பாதிக்க விருப்பமில்லை எண்டு நீங்களும் நினைக்கிறீங்களோ?” குரலில் கூர்மையுடன் கேட்டான் அவன்.

“நான் என்ன நினைக்கிறன் எண்டுறது முக்கியமில்லை. உனக்கு ஒரு வேலை வேணும். அதுதான் முக்கியம். உன்ர அண்ணி எடுத்துக் கத்திப்போட்டு வச்சவள். அதுதான் சொன்னனான். அவனும் பாவம். எவ்வளவு நாளைக்குத்தான் தன்ர குடும்பத்தையும் பாத்து எங்களையும் பாப்பான். நீ தலையெடுத்த பிறகும் அவனுக்குச் சுமை எண்டால் அவளும் கத்துவாள் தானே. என்னவோ யோசிச்சு நட!” மனம் விட்டுப்போன குரலில் சொல்லிவிட்டு வைத்துவிட்டார், அமராவதி.

மறைமுகமாக அவர் சொல்ல வந்ததும் பொறுப்பில்லாதவன் என்றுதான். வந்த ஆத்திரத்துக்கு ஓங்கி நிலத்தில் குத்தினான்! எல்லோரினதும் வாயை அடைக்கமுடியாத இயலாமை ஆத்திரமாக வெடித்தது!

அண்ணா பக்கபலமாக இருக்கிறார் என்பதில் தகுதியான வேலையிலேயே சேர்ந்துவிட வேண்டுமென்கிற எண்ணம் அவனுக்கு உண்டுதான். அது சுயநலமில்லை. வேலை கிடைத்துவிட்டால், அவர் செய்த உதவிகளுக்குப் பிரதி உபகாரம் செய்துவிடுவான்! அதிலும் உறுதியாகத்தான் இருக்கிறான்!

அப்பா இல்லை. அண்ணாதான் எல்லாம். உயர்தரம் முடித்தபோது கொழும்புப் பல்கலையில் தான் இடம் கிடைத்தது. எல்லோருக்கும் மிகுந்த மகிழ்ச்சி! அவனுக்கும்தான்! அண்ணா வீட்டிலேயே தங்கிப் படிக்கலாமே. ஆரம்பம் நன்றாகத்தான் போய்க்கொண்டிருந்தது. நாளாக நாளாக, எல்லாம் மாறிப்போயிற்று!

மாலினிக்கு ஒருமுறை உடல் சரியில்லாமல் போனபோது, பாவம் அண்ணி என்று வீட்டினை மொப் பண்ணிக் கொடுத்தான் நிகேதன். அன்றிலிருந்து அது அவன் வேலையாகிப் போயிற்று! காலையில் காய்கறி வாங்குவது, வீட்டுச் சாமான்கள் வாங்கிப் போடுவது, பிள்ளைகளைப் பார்த்துக்கொள்வது, பரீட்சை நேரங்களில் கூட அவர்களைக் கவனிக்கவேண்டி வருவது, அவன் அயர்ன் செய்துகொண்டு இருக்கையில் தமையனின், பிள்ளைகளின் உடைகளையும் கொண்டுவந்து கொடுப்பது என்று அந்த வீட்டுக்குச் சம்பளமில்லா வேலையாளாகிப்போனான்.

நானும் ஒரு முழுமையான ஆண்பிள்ளை என்று தன்னம்பிக்கை தழைத்தோங்கும் அந்த இருபது இருபத்தியொரு வயதில் மனதளவில் குறுகிப்போவான். மிகுந்த வெட்கமாயிருக்கும். ஒரு பெண்ணின் ஏவலைச் செய்கிறோமே என்றிருக்கும். என்னவோ முதுகெலும்பே அற்றவனாகிவிட்டதுபோல அந்த வீட்டுக்கே அடிமையாகிவிட்டதுபோல குமைந்துபோவான். ஒரு பிடி சோற்றைப் பசியறிந்து ருசியுணர்ந்து உண்ண முடிந்ததில்லை. இந்தச் சோற்றுக்காகத்தானே இந்தப் பாடெல்லாம் என்று மனம் துடிக்கும். என்ன செய்தாலும் இவன் இங்கிருந்து போகமாட்டான் என்று அறிந்துதான் அண்ணி நடந்துகொள்கிறார் என்று உணருகிற வேளைகளில் எல்லாமே வெறுத்துப் போகும்!

ஆனால், இந்த இயலாமைகளை எல்லாம் திறமைகளாக அவன் வெளிக்காட்டுமிடம் பல்கலைக்கழகம். அங்கே அவன் மிகச் சிறந்த மாணவன். விளையாட்டு வீரன். மாணவ ஒன்றியத் தலைவன்! இப்படி அவன் வகித்த பதவிகள் பல! பல்கலைக்கழகத்தின் நினைவு வந்ததுமே அவன் உதடுகளில் அழகிய புன்னகை ஒன்று முளைத்துக் கொண்டது. கண்களை மூடிக்கொண்டான். இமைகள் முட்டும் தூரத்தில் வந்து நின்று கண்ணைச் சிமிட்டினாள் ஒருத்தி.

அவள் ஆரணி.

அவன் சிரிப்புப் பெரிதாயிற்று!

அவனுடைய ரவுடி ரங்கம்மா அவள்! அவன் செய்யவேண்டிய அத்தனை காரியங்களையும் அவள் செய்வாள்! காதலைச் சொன்னதும் அவள்தான். அவனிடமிருந்து சம்மதத்தைப் பெற்றுக்கொண்டதும் அவள்தான்!
 

நிதனிபிரபு

Administrator
Staff member
எத்தனை துன்பங்கள் வரட்டும். அவளின் ஒற்றை நினைவு போதும் அத்தனையிலிருந்தும் அவனைத் தூரமாய்க் கொண்டுபோய்விட!

‘ஆரா…’ ஆத்மார்த்தமாய் அவனுள்ளம் அவளைத் தேடியபோது, “அடேய்! தனியா இருந்து சிரிக்காதயடா! எங்கயாவது தூக்கிக்கொண்டு போகப்போறாங்கள்!” என்றபடி, அவனை இடித்துக்கொண்டு வந்து அமர்ந்தாள் ஆரணி.

மழைச்சாரல்கள் பட்டதும் சடசடவென்று பூத்துவிடும் பூக்களைப்போல அவனுள்ளம் மலர்ந்துவிட வேகமாக விழிகளைத் திறந்தான்.

கண்முன்னே நின்றவளின் நெற்றியிலும் உதட்டின் மேலேயும் வியர்வைத் துளிகள். களைத்துச் சோர்ந்திருந்தாள். இழையிழையாகத் தோள்களைத் தொட்டு நிற்கும் முடி கலைந்திருந்தது. அவள் முகத்தைப் பார்த்ததும் அவன் புருவங்கள் சுருங்கிற்று!

“ஏன் களைச்சுத் தெரியிறாய்?”

“நடந்து வந்தனான்!”

மல்லாந்து படுத்திருந்தவன் எழுந்து அமர்ந்து கைகளில் பட்டிருந்த மணல் துகள்களைத் தட்டிவிட்டான்.

“உன்ர காருக்கு என்ன நடந்தது?” கேட்டபடி தன் பாக்கெட்டில் இருந்த கர்சீபை எடுத்து அவளின் வியர்வைத் துளிகளை ஒற்றி எடுத்தான்.

காயப்பட்டு வந்திருந்த ஆரணியின் இதயத்துக்கே ஒத்தடம் கொடுப்பது போலிருந்தது. “என்னை உனக்குப் பிடிக்குமாடா?”

ஒற்றிக்கொண்டிருந்த அவன் கை ஒருமுறை நின்றது. அவள் முகத்தைப் பார்த்தான். அதில் ஏதோ ஒரு அலைப்புறுதல். அவனிடம் ஆறுதலைத் தேடும் கண்கள். மெல்ல நெருங்கி அமர்ந்து அவளைத் தன் தோளில் சாய்த்துக்கொண்டான்.

“வீட்டுல ஏதாவது சண்டை பிடிச்சியா?”

“நான் கேட்டத்துக்குப் பதிலைச் சொல்லு நிக்ஸ்!” அவனிடமிருந்து விலகி, பிடிவாதத்துடன் கேட்டாள்.

‘வேண்டாம் போ!’ என்று அலைகளைக் கரையோரமாகத் தள்ளிவிட்டுக் கொண்டிருந்த கடலின் மீது விழிகளை அலையவிட்டான். “என்ன வாழ்க்கையடா இது எண்டு கசந்துபோற ஒவ்வொரு முறையும் உன்ர ஒரு நினைவு போதும் வாழ்ந்து காட்டவேணும் எண்டுற வைராக்கியத்தை எனக்குள்ள உருவாக்க. விளங்குதா உனக்கு?” என்றான் தீவிரம் மிகுந்த குரலில்.

முகம் மலர அவன் தோளில் சாய்ந்துகொண்டாள் ஆரணி. அவளுடைய திடம், தைரியம், திமிர் எல்லாம் கரைந்துபோகுமிடம் அவனது காலடிதான்!

“அப்ப வா, இப்ப இருந்தே வாழ்ந்து பாப்பம்!” என்றாள் அவள். அதிர்ந்தான் நிகேதன். பதில் சொல்லவில்லை. திரும்பி அவள் முகத்தை ஆராய்ந்தான்.

“முதல் என்ன நடந்தது எண்டு சொல்லு?”

“வீட்டை விட்டு வெளில வந்திட்டன் நிக்ஸ்.” நடந்ததைச் சொன்னாள் ஆரணி.

நிகேதனுக்குக் கோபம் வந்துவிட்டது. அதைவிட எவ்வளவு சாதாரணமாகச் சொல்லுகிறாள். “இதுக்குத் தானேடி, இப்ப சொல்லாத, முதல் நான் ஒரு வேலைல சேருறன், பிறகு கதைப்பம் எண்டு சொன்னனான். சொல்ல சொல்லக் கேக்காம சொல்லிப்போட்டு இப்ப வீட்டை விட்டு வெளில வந்திட்டன் எண்டு சர்வ சாதாரணமா சொல்லுறாய். இனி என்ன செய்யிறது?”

அவனுக்கு வேலை கிடைத்தபாடாய் இல்லை என்றுதான் வேண்டாம் என்று அவன் சொன்னதையும் கேட்காமல் வீட்டில் சொன்னதே! வீட்டில் சம்மதித்தால் வெளியில் வேலை தேடவேண்டிய அவசியமே அவனுக்கு வராது. அவர்களின் தொழிலே போதும். இதை அவனிடம் அவளால் பகிர்ந்துகொள்ள முடியாது. சுயகௌரவம் நிறையப் பார்க்கிறவன் கொதித்துவிடுவான். அவனுக்கே தெரியாமல் அனைத்தையும் சுபமாக முடிப்போம் என்று நினைக்க, அது இப்படியாகும் என்று அவளே எதிர்பார்க்கவில்லை!

“எங்கயாவது ஒரு கோயில்ல கல்யாணத்தைக் கட்டுவம்.” என்றாள் அவள்.

“அறைஞ்சன் எண்டா! எல்லாத்தையும் எவ்வளவு ஈஸியா சொல்லுறாய். கையில ஒரு ரூபா காசு இல்ல. ஒரு வேலை இல்ல. கல்யாணமாம் கல்யாணம். நானே என்ர வீட்டுக்குச் சுமை. இதுல நீயும் வரப்போறியா? கொஞ்சமாவது பொறுமையா நடக்க மாட்டியா ஆரா!”

அவனுக்கு இந்தச் சூழ்நிலையை எப்படிக் கையாள்வது என்றே தெரியவில்லை. அவன் கோபப்படுவான் என்று ஆரணியும் எதிர்பார்த்தாள் தான். ஆயினும், இந்தளவில் இல்லை.

“என்ன நடந்தாலும் நீ இருக்கிறாய் எண்டுற நம்பிக்கைலதான் வந்தனான் நிக்கி. ஆனா நீ இப்பிடிச் சொல்லுறாய். உன்னட்ட இத எதிர்பாக்கேல்ல.”

“விளையாடாத ஆரா! இதென்ன படமா? நீ நம்பி வந்ததும் அடுத்த ஒருமணி நேரத்துல நான் முன்னேறிக் காட்ட? நான் இருக்கிறன் தான்! உனக்காக.. எண்டைக்கும்! ஆனா, அந்த நான் வெட்டியா இருக்கிறன். வீட்டுக்குச் சுமையா இருக்கிறன். காதலுக்குக் காசு தேவையில்ல. ஆனா கல்யாணத்துக்கு? காசு இல்லாம அந்தக் கல்யாணமே நடக்காது! என்னடி நீ?” தலையைப் பிடித்துக்கொண்டான் நிகேதன். அவனுக்கு என்ன செய்வது என்றே விளங்கவில்லை.

அவனை நம்பி வந்த அவளும் பாவம் தான். வந்தவளை வா வாழ்ந்து பார்ப்போம் என்று சொல்லமுடியாத நிலையிலிருக்கும் அவன் நிலையும் பரிதாபம் தான். என்ன செய்யப் போகிறான்? எதிர்பாராமல், திட்டமிடாமல், முன்னாயத்தங்கள் எதுவுமில்லாமல் திருமணம் என்கிற ஒன்றுக்குள் சட்டென்று புகுந்துவிட அது என்ன விளையாட்டா?

“இண்டைக்குப் போன வேலையையும் வேணாம் எண்டு சொல்லிப்போட்டன்.” இவள் இப்படிச் செய்வாள் என்று தெரிந்திருக்க அந்த வேலையையாவது ஏற்றுக்கொண்டிருக்கலாம். அவனுக்கு எந்தக் கோணத்தில் சிந்தித்துப் பார்த்தாலும் இன்றைய நிலையில் திருமணம் என்பது மருந்துக்கும் உசிதமற்ற காரியமாகவே பட்டது.

“கல்யாணம் இப்ப சரியாவே வராது ஆரா. அவசரத்துல எடுக்கிற முடிவு இல்ல இது. நீ திரும்பி வீட்டையே போ! அதுதான் சரி!”

அதிர்ந்துபோய்ப் பார்த்தாள் அவள். அப்பாவின் முன்னே மீண்டும் போய் நிற்பதா? அவளால் அதை நினைத்துக்கூடப் பார்க்கமுடியவில்லை.

“உன்ன நம்பி வந்தனான். ஆனா நீ இப்பிடிச் சொல்லுவாய் எண்டு கனவிலையும் நினைக்கேல்ல. சரி போறன்! வீட்டையில்ல. இந்தக் கடலுக்கையே போறன்! உனக்குச் சுமையா இருக்கவும் வேணாம். மானம் கெட்டுத் திரும்ப அப்பாவுக்கு முன்னால போய் நிக்கவும் வேணாம்!” முகம் சிவக்கச் சொன்னவள் விருட்டென்று எழுந்துவிட்டாள்.

“அடிதான்டி வாங்கப் போறாய்!” கோபத்தோடு அவன் பிடித்து இழுத்த இழுவையில் அவனருகிலேயே வந்து விழுந்தாள் ஆரணி!

“என்ன இருந்தாலும், வா வாழ்ந்து பாப்பம் எண்டு சொல்லேல்லையேடா நீ!” அவன் தந்த ஏமாற்றத்தைத் தாங்கிக்கொள்ள அவளால் முடியவில்லை.

அவனோ மறுப்பாகத் தலையசைத்தான். “உனக்கு விளங்கேல்ல! நிறையக் கஷ்டப்படப்போறம். நிறைய அவமானப்படப் போறம். எத்தனைபேரின்ர பல்லுக்குப் பதமாகப் போறோமோ தெரியாது. அதையெல்லாம் நீ தாங்க மாட்டாய்!” என்றான் கவலையோடு.

“பரவாயில்லையடா. நீ பக்கத்தில இருக்கிற வரைக்கும் எதையும் நான் தாங்குவன். எதிர்நீச்சல் போட்டுத்தான் பாப்பமே!” நம்பிக்கையோடு சொன்னாள் ஆரணி.

அப்போதும் அவன் முகம் தெளியவில்லை என்றதும் வேதனையாயிற்று! அவன் தாடையைப் பற்றித் தன்புறமாகத் திருப்பினாள்.

“எதையும் நான் தாங்குவன் நிக்ஸ். சமாளிச்சுப் போவன். ஆனா, பக்கத்தில துணையா நீ இருக்கோணுமடா! நீயில்லாத ஒரு வாழ்க்கை என்ன தந்தாலும் அது எனக்கு வேண்டாம். இன்னொருத்தனை துணையா என்னால நினைச்சுக்கூடிப் பாக்க முடியேல்ல நிக்ஸ். உனக்கு விளங்குதா?” விழிகளோடு விழிகளைக் கலந்து கேட்டபோது நெஞ்சம் கசிய அவளை அணைத்துக்கொண்டான் நிகேதன்.

“நீயில்லாம நான் மட்டும் வாழுவன் எண்டு நினச்சியா? சரி விடு! வாழ்க்கை நமக்கு என்ன வச்சிருக்கு எண்டு வாழ்ந்துதான் பாப்பமே!” உதட்டினில் பூத்துவிட்ட சிரிப்புடன் கண்ணைச் சிமிட்டியபடி சொன்னான் அவன்.

ஆரணியின் முகம் பூவாய் மலர்ந்துபோயிற்று.
 

Google Typing

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.

Top Bottom