அத்தியாயம் 2
அந்தத் தனியார் நிறுவனத்தை விட்டு வெளியே வந்த நிகேதனுக்கு மனம் கொதித்துக் கொண்டிருந்தது. சுழல் நாற்காலியில் அமர்ந்திருந்தவனின் கழுத்தை நெரிக்குமளவுக்கு ஆத்திரம் வந்தபோதிலும் அடக்கிக்கொண்டு வந்துவிட்டான்.
எலக்ட்ரிக்கல் இன்ஜினியர் தேவை என்கிற அவர்களின் விளம்பரம் பார்த்துத்தான் விண்ணப்பித்தான். நேர்முகத் தேர்வுக்கு அழைத்திருந்தார்கள். பெரிய மீனைப்போட்டு இருக்கிற அத்தனை மீன்களையும் பிடிக்கிற கதையாக, அவனுடைய தகுதிக்குச் சம்மந்தமே இல்லாத வேலை பார்க்கிறாயா என்கிறார்கள்! பிறகு எதற்கு மாடாகப் படித்து, என் தகுதி இதுதான் என்று வளர்த்துக்கொள்ள வேண்டும்? எதையாவது படித்துவிட்டு எதையாவது வேலையாகப் பார்த்துவிட்டுப் போகலாமே.
பட்டம் வாங்கிவிட்டால் போதும், நல்ல வேலை கிடைக்கும், முன்னேறிவிடலாம் என்று ஆழமாய் நம்பினானே. அதனால் தானே அண்ணா வீட்டில் அத்தனை அநியாயங்களையும் தாங்கிக்கொண்டு பொறுமையாக இருந்து படித்து முடித்தான்.
இப்போதோ எந்தப் பக்கம் திரும்பினாலும் ஏமாற்றம் ஏமாற்றம் ஏமாற்றம் மட்டுமே. இதற்குப் படிப்பு வராமலேயே இருந்திருக்கலாம். படிப்பு வரவில்லை, அதனால் நல்ல வேலையும் அமையவில்லை என்றாவது மனத்தைத் தேற்றியிருப்பான். தகுதி இருந்தும் வாய்ப்பு மறுக்கப் படுகிறது என்றால் இனியும் என்ன செய்வது? செய்வதறியாது மன்னார் கடற்கரையில் வந்து விழுந்தான்.
இனி வரிசையாக அழைப்புகள் வரும். அறிவுரைகள் மூட்டை மூட்டையாக வரும். நினைத்து முடிக்க முதலே கொழும்பிலிருந்து அழைத்தார் அவனுடைய அண்ணா, சகாதேவன். எடுக்காமல் இருந்துவிடத்தான் ஆசை. பிறகு அதற்கும் ஆயிரத்தெட்டுக் கேள்விகள் வருமே.
“இந்த வேலையாவது கிடச்சதோ?” கேட்ட தொனியிலேயே கிடைத்திருக்காது என்கிற நம்பிக்கை தெரிந்தது.
ஒன்றும் சொல்லவில்லை நிகேதன். அவருக்கு ஏற்கனவே தெரிந்த பதிலை எதற்கு அவனும் ஒருமுறை சொல்வான்?
“இதுக்குத்தான் சொன்னனான், பேசாம கொழும்புக்கே வா எண்டு. கேட்டாத்தானே? இன்னும் எத்தினை நாளைக்கு உன்னையும் சேர்த்து நானே பாக்கோணும் எண்டு நினைக்கிறாய்? கிடைக்கிற வேலைல நீ நிலைக்கமாட்ட. நீ தேடுற வேலை உனக்குக் கிடைக்கவே கிடைக்காது. என்ன மனுசனடா நீ. ஒரு தங்கச்சி இருக்கே, அவளுக்குத் திருமணம் செய்து வைக்கவேணும் எண்டுற யோசனை இல்ல. வயசான அம்மா இருக்கிறாவே அவவப் பாக்கோணும் எண்டுற நினைப்பு இல்ல. கொஞ்சமாவது பொறுப்பா நடக்க மாட்டியா?” தன் சொல்வன்மையைக் காட்டி அவனைச் சில்லு சில்லாகச் சிதைத்தார் கூடப்பிறந்தவர்.
“அவர் ஏன் பொறுப்பா இருக்கவேணும்? அதுதான் எல்லாம் செய்ய நீங்க இருக்கிறீங்களே. பிறகென்ன?” அண்ணி மாலினியின் குரலும் கேட்டது. மிகுதிக் காலத்துக்கான தாய் தங்கையின் பொறுப்பும் தன் கணவரின் தலையில்தான் விழப்போகிறது என்று காய்கிறார் என்று நிகேதனுக்குப் புரியாமல் இல்லை. இருந்தும் வாயை இறுக்கி மூடிக்கொண்டு அமர்ந்திருந்தான். ‘நான் பாப்பன். நீங்க யோசிக்காதீங்க!’ என்று ரோசப்பட்டுச் சொல்லுகிற வாய்ச்சொல்லுக்கு மதிப்பில்லையே!
“இங்க வந்தா வேலையெல்லே செய்யவேணும். பிறகு எப்பிடி வருவார் உங்கட தம்பி? உழைச்சுப்போட நீங்க இருக்கிறீங்க. சமைச்சுப்போட மாமி இருக்கிறா. தோய்ச்சுப்போட தங்கச்சி இருக்கிறாள். அந்தச் சுகத்தையெல்லாம் விட்டுட்டு மாடா உழைக்க அவர் என்ன உங்களை மாதிரி மூளை இல்லாதவரே. நீங்கதான், இன்னும் அம்மா, தம்பி, தங்கச்சி எண்டு சாகுறீங்க!” எரிகிற அடுப்பில் நன்றாகவே எண்ணெயையை ஊற்றிக்கொண்டிருந்தார், மாலினி.
‘ஏன், உங்களுக்கு வீட்டு வேலைக்கு ஆள் தேவைப்படுதா?’ சூடாகக் கேட்டுவிடத் துடித்த நாவை அதைவிட வேகமாக அடக்கிக்கொண்டான். அப்படி எதையாவது கேட்டுவிட்டால் அவனுடைய இன்றைய நாள் அல்ல இந்த மாதமே பாழாகிப் போய்விடும். சொல்லிச் சொல்லியே ஏனடா வாயைத் திறந்தோம் என்று நினைக்க வைத்துவிடுவார்.
“கொஞ்ச நேரம் பேசாம இரு மாலினி!” என்று அவரை அடக்கிவிட்டு, “என்னடா வாறியா? மாமாவோட கதைக்கவா?” என்று பொறுமையை இழுத்துப் பிடித்துக்கொண்டு கேட்டார், சகாதேவன்.
“இன்னும் ரெண்டுமூண்டு இன்டர்வியூ இருக்கு. முடியட்டும் சொல்லுறன்!” பிடிகொடுக்காமல் சொன்னான் நிகேதன்.
“பிறகு என்ன, அடுத்த ஒரு மாதத்துக்குச் சாட்டுச் சொல்லியாச்சு. இப்பிடியே போகட்டும்! எனக்கு விடிவு சாவிலும் இல்ல. நல்ல குடும்பத்துக்க வந்து விழுந்திருக்கிறன்!” மாலினியின் வார்த்தைகளோடு அந்தத் தொலைத்தொடர்பு அறுந்துபோயிற்று!
மிகுந்த அவமானம் நெஞ்சைக் கொல்ல, அப்படியே கண்களை மூடிக்கொண்டு கடற்கரை மணலில் சாய்ந்துகொண்டான். கொழும்பில் வேலை கிடைத்திருக்கிறது என்று போன சகாதேவன், கம்பனி முதலாளியின் மகளைக் காதலித்துத் திருமணமும் செய்துகொண்டார். குடும்பப் பொறுப்பு அவர் கையில் என்பதில் அவரின் விருப்பமே முடிவானது.
மாலினிக்கும் தன்னால் தான் அவர்களின் குடும்பமே வாழ்கிறது என்கிற எண்ணம் நிறையவே உண்டு. சகாதேவனும் மனைவியின் முன்னே வாயில்லாப் பூச்சிதான். வீட்டின் எஜமானி மனைவி என்றால் வேலைக்கு எஜமானன் மாமனாராயிற்றே! அவரின் முழுக்குடுமியும் அவர்களின் கையிலிருந்தது.
அடுத்த அழைப்பு அன்னையிடம் இருந்து வந்தது.
“போனவிசயம் என்னவாம் தம்பி?”
“என்ன என்னவாம்? அவேன்ர பாக்டரில பத்தோட பதினோராவது ஆளா வேலைக்கு வரட்டாம். மாதம் பதினெட்டாயிரம் சம்பளம் தருவீனமாம். இதுக்கு எதுக்கு நான் படிக்க? பட்டம் வாங்கியிருக்க? வேணாம் எண்டுபோட்டு வந்திட்டன்!”
சற்றுநேரம் அந்தப்பக்கம் சத்தமேயில்லை.
“ஓம் எண்டு சொல்லியிருக்கலாமே? வேலையே இல்லாம இருக்கிறதுக்கு இது எவ்வளவோ பரவாயில்லையே நிகேதா. இந்த வேலையைச் செய்துகொண்டே நீ ஆசைப்படுற மாதிரி வேலை தேடியிருக்கலாம்.”
“ஏன், உங்கட மகனுக்கு வேலைக்குப் போக, சம்பாதிக்க விருப்பமில்லை எண்டு நீங்களும் நினைக்கிறீங்களோ?” குரலில் கூர்மையுடன் கேட்டான் அவன்.
“நான் என்ன நினைக்கிறன் எண்டுறது முக்கியமில்லை. உனக்கு ஒரு வேலை வேணும். அதுதான் முக்கியம். உன்ர அண்ணி எடுத்துக் கத்திப்போட்டு வச்சவள். அதுதான் சொன்னனான். அவனும் பாவம். எவ்வளவு நாளைக்குத்தான் தன்ர குடும்பத்தையும் பாத்து எங்களையும் பாப்பான். நீ தலையெடுத்த பிறகும் அவனுக்குச் சுமை எண்டால் அவளும் கத்துவாள் தானே. என்னவோ யோசிச்சு நட!” மனம் விட்டுப்போன குரலில் சொல்லிவிட்டு வைத்துவிட்டார், அமராவதி.
மறைமுகமாக அவர் சொல்ல வந்ததும் பொறுப்பில்லாதவன் என்றுதான். வந்த ஆத்திரத்துக்கு ஓங்கி நிலத்தில் குத்தினான்! எல்லோரினதும் வாயை அடைக்கமுடியாத இயலாமை ஆத்திரமாக வெடித்தது!
அண்ணா பக்கபலமாக இருக்கிறார் என்பதில் தகுதியான வேலையிலேயே சேர்ந்துவிட வேண்டுமென்கிற எண்ணம் அவனுக்கு உண்டுதான். அது சுயநலமில்லை. வேலை கிடைத்துவிட்டால், அவர் செய்த உதவிகளுக்குப் பிரதி உபகாரம் செய்துவிடுவான்! அதிலும் உறுதியாகத்தான் இருக்கிறான்!
அப்பா இல்லை. அண்ணாதான் எல்லாம். உயர்தரம் முடித்தபோது கொழும்புப் பல்கலையில் தான் இடம் கிடைத்தது. எல்லோருக்கும் மிகுந்த மகிழ்ச்சி! அவனுக்கும்தான்! அண்ணா வீட்டிலேயே தங்கிப் படிக்கலாமே. ஆரம்பம் நன்றாகத்தான் போய்க்கொண்டிருந்தது. நாளாக நாளாக, எல்லாம் மாறிப்போயிற்று!
மாலினிக்கு ஒருமுறை உடல் சரியில்லாமல் போனபோது, பாவம் அண்ணி என்று வீட்டினை மொப் பண்ணிக் கொடுத்தான் நிகேதன். அன்றிலிருந்து அது அவன் வேலையாகிப் போயிற்று! காலையில் காய்கறி வாங்குவது, வீட்டுச் சாமான்கள் வாங்கிப் போடுவது, பிள்ளைகளைப் பார்த்துக்கொள்வது, பரீட்சை நேரங்களில் கூட அவர்களைக் கவனிக்கவேண்டி வருவது, அவன் அயர்ன் செய்துகொண்டு இருக்கையில் தமையனின், பிள்ளைகளின் உடைகளையும் கொண்டுவந்து கொடுப்பது என்று அந்த வீட்டுக்குச் சம்பளமில்லா வேலையாளாகிப்போனான்.
நானும் ஒரு முழுமையான ஆண்பிள்ளை என்று தன்னம்பிக்கை தழைத்தோங்கும் அந்த இருபது இருபத்தியொரு வயதில் மனதளவில் குறுகிப்போவான். மிகுந்த வெட்கமாயிருக்கும். ஒரு பெண்ணின் ஏவலைச் செய்கிறோமே என்றிருக்கும். என்னவோ முதுகெலும்பே அற்றவனாகிவிட்டதுபோல அந்த வீட்டுக்கே அடிமையாகிவிட்டதுபோல குமைந்துபோவான். ஒரு பிடி சோற்றைப் பசியறிந்து ருசியுணர்ந்து உண்ண முடிந்ததில்லை. இந்தச் சோற்றுக்காகத்தானே இந்தப் பாடெல்லாம் என்று மனம் துடிக்கும். என்ன செய்தாலும் இவன் இங்கிருந்து போகமாட்டான் என்று அறிந்துதான் அண்ணி நடந்துகொள்கிறார் என்று உணருகிற வேளைகளில் எல்லாமே வெறுத்துப் போகும்!
ஆனால், இந்த இயலாமைகளை எல்லாம் திறமைகளாக அவன் வெளிக்காட்டுமிடம் பல்கலைக்கழகம். அங்கே அவன் மிகச் சிறந்த மாணவன். விளையாட்டு வீரன். மாணவ ஒன்றியத் தலைவன்! இப்படி அவன் வகித்த பதவிகள் பல! பல்கலைக்கழகத்தின் நினைவு வந்ததுமே அவன் உதடுகளில் அழகிய புன்னகை ஒன்று முளைத்துக் கொண்டது. கண்களை மூடிக்கொண்டான். இமைகள் முட்டும் தூரத்தில் வந்து நின்று கண்ணைச் சிமிட்டினாள் ஒருத்தி.
அவள் ஆரணி.
அவன் சிரிப்புப் பெரிதாயிற்று!
அவனுடைய ரவுடி ரங்கம்மா அவள்! அவன் செய்யவேண்டிய அத்தனை காரியங்களையும் அவள் செய்வாள்! காதலைச் சொன்னதும் அவள்தான். அவனிடமிருந்து சம்மதத்தைப் பெற்றுக்கொண்டதும் அவள்தான்!
அந்தத் தனியார் நிறுவனத்தை விட்டு வெளியே வந்த நிகேதனுக்கு மனம் கொதித்துக் கொண்டிருந்தது. சுழல் நாற்காலியில் அமர்ந்திருந்தவனின் கழுத்தை நெரிக்குமளவுக்கு ஆத்திரம் வந்தபோதிலும் அடக்கிக்கொண்டு வந்துவிட்டான்.
எலக்ட்ரிக்கல் இன்ஜினியர் தேவை என்கிற அவர்களின் விளம்பரம் பார்த்துத்தான் விண்ணப்பித்தான். நேர்முகத் தேர்வுக்கு அழைத்திருந்தார்கள். பெரிய மீனைப்போட்டு இருக்கிற அத்தனை மீன்களையும் பிடிக்கிற கதையாக, அவனுடைய தகுதிக்குச் சம்மந்தமே இல்லாத வேலை பார்க்கிறாயா என்கிறார்கள்! பிறகு எதற்கு மாடாகப் படித்து, என் தகுதி இதுதான் என்று வளர்த்துக்கொள்ள வேண்டும்? எதையாவது படித்துவிட்டு எதையாவது வேலையாகப் பார்த்துவிட்டுப் போகலாமே.
பட்டம் வாங்கிவிட்டால் போதும், நல்ல வேலை கிடைக்கும், முன்னேறிவிடலாம் என்று ஆழமாய் நம்பினானே. அதனால் தானே அண்ணா வீட்டில் அத்தனை அநியாயங்களையும் தாங்கிக்கொண்டு பொறுமையாக இருந்து படித்து முடித்தான்.
இப்போதோ எந்தப் பக்கம் திரும்பினாலும் ஏமாற்றம் ஏமாற்றம் ஏமாற்றம் மட்டுமே. இதற்குப் படிப்பு வராமலேயே இருந்திருக்கலாம். படிப்பு வரவில்லை, அதனால் நல்ல வேலையும் அமையவில்லை என்றாவது மனத்தைத் தேற்றியிருப்பான். தகுதி இருந்தும் வாய்ப்பு மறுக்கப் படுகிறது என்றால் இனியும் என்ன செய்வது? செய்வதறியாது மன்னார் கடற்கரையில் வந்து விழுந்தான்.
இனி வரிசையாக அழைப்புகள் வரும். அறிவுரைகள் மூட்டை மூட்டையாக வரும். நினைத்து முடிக்க முதலே கொழும்பிலிருந்து அழைத்தார் அவனுடைய அண்ணா, சகாதேவன். எடுக்காமல் இருந்துவிடத்தான் ஆசை. பிறகு அதற்கும் ஆயிரத்தெட்டுக் கேள்விகள் வருமே.
“இந்த வேலையாவது கிடச்சதோ?” கேட்ட தொனியிலேயே கிடைத்திருக்காது என்கிற நம்பிக்கை தெரிந்தது.
ஒன்றும் சொல்லவில்லை நிகேதன். அவருக்கு ஏற்கனவே தெரிந்த பதிலை எதற்கு அவனும் ஒருமுறை சொல்வான்?
“இதுக்குத்தான் சொன்னனான், பேசாம கொழும்புக்கே வா எண்டு. கேட்டாத்தானே? இன்னும் எத்தினை நாளைக்கு உன்னையும் சேர்த்து நானே பாக்கோணும் எண்டு நினைக்கிறாய்? கிடைக்கிற வேலைல நீ நிலைக்கமாட்ட. நீ தேடுற வேலை உனக்குக் கிடைக்கவே கிடைக்காது. என்ன மனுசனடா நீ. ஒரு தங்கச்சி இருக்கே, அவளுக்குத் திருமணம் செய்து வைக்கவேணும் எண்டுற யோசனை இல்ல. வயசான அம்மா இருக்கிறாவே அவவப் பாக்கோணும் எண்டுற நினைப்பு இல்ல. கொஞ்சமாவது பொறுப்பா நடக்க மாட்டியா?” தன் சொல்வன்மையைக் காட்டி அவனைச் சில்லு சில்லாகச் சிதைத்தார் கூடப்பிறந்தவர்.
“அவர் ஏன் பொறுப்பா இருக்கவேணும்? அதுதான் எல்லாம் செய்ய நீங்க இருக்கிறீங்களே. பிறகென்ன?” அண்ணி மாலினியின் குரலும் கேட்டது. மிகுதிக் காலத்துக்கான தாய் தங்கையின் பொறுப்பும் தன் கணவரின் தலையில்தான் விழப்போகிறது என்று காய்கிறார் என்று நிகேதனுக்குப் புரியாமல் இல்லை. இருந்தும் வாயை இறுக்கி மூடிக்கொண்டு அமர்ந்திருந்தான். ‘நான் பாப்பன். நீங்க யோசிக்காதீங்க!’ என்று ரோசப்பட்டுச் சொல்லுகிற வாய்ச்சொல்லுக்கு மதிப்பில்லையே!
“இங்க வந்தா வேலையெல்லே செய்யவேணும். பிறகு எப்பிடி வருவார் உங்கட தம்பி? உழைச்சுப்போட நீங்க இருக்கிறீங்க. சமைச்சுப்போட மாமி இருக்கிறா. தோய்ச்சுப்போட தங்கச்சி இருக்கிறாள். அந்தச் சுகத்தையெல்லாம் விட்டுட்டு மாடா உழைக்க அவர் என்ன உங்களை மாதிரி மூளை இல்லாதவரே. நீங்கதான், இன்னும் அம்மா, தம்பி, தங்கச்சி எண்டு சாகுறீங்க!” எரிகிற அடுப்பில் நன்றாகவே எண்ணெயையை ஊற்றிக்கொண்டிருந்தார், மாலினி.
‘ஏன், உங்களுக்கு வீட்டு வேலைக்கு ஆள் தேவைப்படுதா?’ சூடாகக் கேட்டுவிடத் துடித்த நாவை அதைவிட வேகமாக அடக்கிக்கொண்டான். அப்படி எதையாவது கேட்டுவிட்டால் அவனுடைய இன்றைய நாள் அல்ல இந்த மாதமே பாழாகிப் போய்விடும். சொல்லிச் சொல்லியே ஏனடா வாயைத் திறந்தோம் என்று நினைக்க வைத்துவிடுவார்.
“கொஞ்ச நேரம் பேசாம இரு மாலினி!” என்று அவரை அடக்கிவிட்டு, “என்னடா வாறியா? மாமாவோட கதைக்கவா?” என்று பொறுமையை இழுத்துப் பிடித்துக்கொண்டு கேட்டார், சகாதேவன்.
“இன்னும் ரெண்டுமூண்டு இன்டர்வியூ இருக்கு. முடியட்டும் சொல்லுறன்!” பிடிகொடுக்காமல் சொன்னான் நிகேதன்.
“பிறகு என்ன, அடுத்த ஒரு மாதத்துக்குச் சாட்டுச் சொல்லியாச்சு. இப்பிடியே போகட்டும்! எனக்கு விடிவு சாவிலும் இல்ல. நல்ல குடும்பத்துக்க வந்து விழுந்திருக்கிறன்!” மாலினியின் வார்த்தைகளோடு அந்தத் தொலைத்தொடர்பு அறுந்துபோயிற்று!
மிகுந்த அவமானம் நெஞ்சைக் கொல்ல, அப்படியே கண்களை மூடிக்கொண்டு கடற்கரை மணலில் சாய்ந்துகொண்டான். கொழும்பில் வேலை கிடைத்திருக்கிறது என்று போன சகாதேவன், கம்பனி முதலாளியின் மகளைக் காதலித்துத் திருமணமும் செய்துகொண்டார். குடும்பப் பொறுப்பு அவர் கையில் என்பதில் அவரின் விருப்பமே முடிவானது.
மாலினிக்கும் தன்னால் தான் அவர்களின் குடும்பமே வாழ்கிறது என்கிற எண்ணம் நிறையவே உண்டு. சகாதேவனும் மனைவியின் முன்னே வாயில்லாப் பூச்சிதான். வீட்டின் எஜமானி மனைவி என்றால் வேலைக்கு எஜமானன் மாமனாராயிற்றே! அவரின் முழுக்குடுமியும் அவர்களின் கையிலிருந்தது.
அடுத்த அழைப்பு அன்னையிடம் இருந்து வந்தது.
“போனவிசயம் என்னவாம் தம்பி?”
“என்ன என்னவாம்? அவேன்ர பாக்டரில பத்தோட பதினோராவது ஆளா வேலைக்கு வரட்டாம். மாதம் பதினெட்டாயிரம் சம்பளம் தருவீனமாம். இதுக்கு எதுக்கு நான் படிக்க? பட்டம் வாங்கியிருக்க? வேணாம் எண்டுபோட்டு வந்திட்டன்!”
சற்றுநேரம் அந்தப்பக்கம் சத்தமேயில்லை.
“ஓம் எண்டு சொல்லியிருக்கலாமே? வேலையே இல்லாம இருக்கிறதுக்கு இது எவ்வளவோ பரவாயில்லையே நிகேதா. இந்த வேலையைச் செய்துகொண்டே நீ ஆசைப்படுற மாதிரி வேலை தேடியிருக்கலாம்.”
“ஏன், உங்கட மகனுக்கு வேலைக்குப் போக, சம்பாதிக்க விருப்பமில்லை எண்டு நீங்களும் நினைக்கிறீங்களோ?” குரலில் கூர்மையுடன் கேட்டான் அவன்.
“நான் என்ன நினைக்கிறன் எண்டுறது முக்கியமில்லை. உனக்கு ஒரு வேலை வேணும். அதுதான் முக்கியம். உன்ர அண்ணி எடுத்துக் கத்திப்போட்டு வச்சவள். அதுதான் சொன்னனான். அவனும் பாவம். எவ்வளவு நாளைக்குத்தான் தன்ர குடும்பத்தையும் பாத்து எங்களையும் பாப்பான். நீ தலையெடுத்த பிறகும் அவனுக்குச் சுமை எண்டால் அவளும் கத்துவாள் தானே. என்னவோ யோசிச்சு நட!” மனம் விட்டுப்போன குரலில் சொல்லிவிட்டு வைத்துவிட்டார், அமராவதி.
மறைமுகமாக அவர் சொல்ல வந்ததும் பொறுப்பில்லாதவன் என்றுதான். வந்த ஆத்திரத்துக்கு ஓங்கி நிலத்தில் குத்தினான்! எல்லோரினதும் வாயை அடைக்கமுடியாத இயலாமை ஆத்திரமாக வெடித்தது!
அண்ணா பக்கபலமாக இருக்கிறார் என்பதில் தகுதியான வேலையிலேயே சேர்ந்துவிட வேண்டுமென்கிற எண்ணம் அவனுக்கு உண்டுதான். அது சுயநலமில்லை. வேலை கிடைத்துவிட்டால், அவர் செய்த உதவிகளுக்குப் பிரதி உபகாரம் செய்துவிடுவான்! அதிலும் உறுதியாகத்தான் இருக்கிறான்!
அப்பா இல்லை. அண்ணாதான் எல்லாம். உயர்தரம் முடித்தபோது கொழும்புப் பல்கலையில் தான் இடம் கிடைத்தது. எல்லோருக்கும் மிகுந்த மகிழ்ச்சி! அவனுக்கும்தான்! அண்ணா வீட்டிலேயே தங்கிப் படிக்கலாமே. ஆரம்பம் நன்றாகத்தான் போய்க்கொண்டிருந்தது. நாளாக நாளாக, எல்லாம் மாறிப்போயிற்று!
மாலினிக்கு ஒருமுறை உடல் சரியில்லாமல் போனபோது, பாவம் அண்ணி என்று வீட்டினை மொப் பண்ணிக் கொடுத்தான் நிகேதன். அன்றிலிருந்து அது அவன் வேலையாகிப் போயிற்று! காலையில் காய்கறி வாங்குவது, வீட்டுச் சாமான்கள் வாங்கிப் போடுவது, பிள்ளைகளைப் பார்த்துக்கொள்வது, பரீட்சை நேரங்களில் கூட அவர்களைக் கவனிக்கவேண்டி வருவது, அவன் அயர்ன் செய்துகொண்டு இருக்கையில் தமையனின், பிள்ளைகளின் உடைகளையும் கொண்டுவந்து கொடுப்பது என்று அந்த வீட்டுக்குச் சம்பளமில்லா வேலையாளாகிப்போனான்.
நானும் ஒரு முழுமையான ஆண்பிள்ளை என்று தன்னம்பிக்கை தழைத்தோங்கும் அந்த இருபது இருபத்தியொரு வயதில் மனதளவில் குறுகிப்போவான். மிகுந்த வெட்கமாயிருக்கும். ஒரு பெண்ணின் ஏவலைச் செய்கிறோமே என்றிருக்கும். என்னவோ முதுகெலும்பே அற்றவனாகிவிட்டதுபோல அந்த வீட்டுக்கே அடிமையாகிவிட்டதுபோல குமைந்துபோவான். ஒரு பிடி சோற்றைப் பசியறிந்து ருசியுணர்ந்து உண்ண முடிந்ததில்லை. இந்தச் சோற்றுக்காகத்தானே இந்தப் பாடெல்லாம் என்று மனம் துடிக்கும். என்ன செய்தாலும் இவன் இங்கிருந்து போகமாட்டான் என்று அறிந்துதான் அண்ணி நடந்துகொள்கிறார் என்று உணருகிற வேளைகளில் எல்லாமே வெறுத்துப் போகும்!
ஆனால், இந்த இயலாமைகளை எல்லாம் திறமைகளாக அவன் வெளிக்காட்டுமிடம் பல்கலைக்கழகம். அங்கே அவன் மிகச் சிறந்த மாணவன். விளையாட்டு வீரன். மாணவ ஒன்றியத் தலைவன்! இப்படி அவன் வகித்த பதவிகள் பல! பல்கலைக்கழகத்தின் நினைவு வந்ததுமே அவன் உதடுகளில் அழகிய புன்னகை ஒன்று முளைத்துக் கொண்டது. கண்களை மூடிக்கொண்டான். இமைகள் முட்டும் தூரத்தில் வந்து நின்று கண்ணைச் சிமிட்டினாள் ஒருத்தி.
அவள் ஆரணி.
அவன் சிரிப்புப் பெரிதாயிற்று!
அவனுடைய ரவுடி ரங்கம்மா அவள்! அவன் செய்யவேண்டிய அத்தனை காரியங்களையும் அவள் செய்வாள்! காதலைச் சொன்னதும் அவள்தான். அவனிடமிருந்து சம்மதத்தைப் பெற்றுக்கொண்டதும் அவள்தான்!