அவள் ஆரணி - 23

நிதனிபிரபு

Administrator
Staff member
அத்தியாயம் 23


மகளுக்கு மாப்பிள்ளை என்றதும் சுகிர்தன் தான் அமராவதி அம்மாவின் நினைவுக்கு வந்து நின்றான். வாட்டசாட்டமான ஆண்பிள்ளை. முக்கியமாகக் கடுமையான உழைப்பாளி. பொறுப்புகளை எல்லாம் முடித்துவிட்டான். பெற்றோர் வயதானவர்கள் என்றாலும் சோலி சுரட்டு இல்லாதவர்கள். சுகிர்தனுக்குத் திருமணம் ஆகிறவரைக்கும் தான் அவர்களும் அவனோடு இருப்பார்கள். ஆனதும் சின்ன மகளோடு போய்விடுவார்கள் என்பதில் மகளுக்கு எல்லா வகையிலும் பொருத்தம் என்று தோன்றவே நிகேதனிடம் அதைப்பற்றிப் பேசினார் அமராவதி.

அதுவரை அப்படி ஒரு எண்ணம் இல்லாதபோதும் அன்னை சொன்னபோது, “ஓம் என்னம்மா. இத நான் யோசிக்கவே இல்ல. கேட்டுப் பாக்கலாம்.” என்றான் அவனும்.

“அவருக்குக் கயல் சரியா வராது நிக்கி.” என்று இடையில் புகுந்தாள் ஆரணி.

“அதென்ன அவனுக்கு அவள் சரிவர மாட்டாள்?”

“அவர் ஓடி உழைக்கிறவர். நேரம் காலம் பாக்கமாட்டார். இவளுக்குச் சொகுசா வாழவேணும். பொருந்தாது.”

அமராவதி அம்மாவுக்குப் பற்றிக்கொண்டு வந்தது. “அதுதானே பாத்தன். என்னடா ஆரம்பிச்சு இவளவு நேரமாயிட்டுதே இன்னும் ஒண்டும் குறுக்கால வர இல்லையே எண்டு. வந்திட்டாள். இனி உன்ர தங்கச்சிக்கு ஒரு நல்லது நடந்த மாதிரித்தான். இங்க பார் தம்பி. இவளின்ர கதையை விட்டுட்டு நீ அவேன்ர வீட்டில கதை. அவனைக் கட்டினா உன்ர தங்கச்சி இங்க பக்கத்திலேயே சந்தோசமா இருப்பாள்.”

கயலுக்கு அவன் பொருத்தமில்லை என்று சொல்லியிருந்தாலாவது பரவாயில்லை. அவனுக்கு மகளைப் பொருத்தமில்லை என்றுவிட்டாளே. மனது பொறுக்கவில்லை அவருக்கு.

“உண்மைதானே ஆரா.” அவனுக்கும் அவள் அப்படிச் சொன்னது அவ்வளவாகப் பிடிக்கவில்லை. ‘என்ர தங்கச்சிக்கு என்ன குறை?’ என்று இயல்பான கோபம் எழுந்தது.

“நீ கயலுக்கு அண்ணா மட்டும் இல்ல. அவருக்கு நல்ல நண்பனும். கயலுக்கு அவர் நல்ல மாப்பிள்ளை தான். ஆனா அவருக்குக் கயல் பொருத்தமா எண்டு யோசி. என்னைக் கேட்டா கயலுக்குப் பொருத்தமா டீச்சிங் லைன் இல்ல ஏதாவது ஜொப் பாக்கிற ஆள்தான் நல்லம் எண்டு சொல்லுவன். அவளும் அதைத்தான் விரும்புவாள். ரெண்டுபேரும் ஒரே துறை எண்டால் ஒரே மாதிரி லீவு, வீட்டில இருக்கிற நேரம் எல்லாம் பொருந்தும். அவளும் லைப்பை என்ஜோய் செய்து வாழுவாள்.” என்றாள் ஆரணி.

நிகேதனுக்கு அவள் சொல்வதும் சரி போல்தான் தோன்றிற்று. ஆனாலும் மனதின் சுணக்கம் அகலவில்லை. அன்னையின் முகமும் கடுத்திருப்பதைக் கவனித்துவிட்டு, “நீங்க முதல் இதைப்பற்றிக் கயலிட்ட மேலோட்டமா கேட்டுப் பாருங்கோ. அவளுக்கு ஓகே எண்டால் அவனையும் கேக்கலாம். ஆர் என்ன சொன்னாலும் அவே ரெண்டுபேருக்கும் விருப்பம் எண்டா சரிதானே.” என்று முடித்துக்கொண்டான்.

இரவு படுக்கையிலும் விலகளைக் காட்டியவனைத் தன் புறமாகத் திருப்பி, “கயலுக்குக் கலியாணம் முடிஞ்சா மட்டும் காணும் எண்டு நினைக்கிறியா இல்ல அந்தக் காலியாண வாழ்க்கை காலத்துக்கும் சந்தோசமா இருக்கவேணும் எண்டு நினைக்கிறியா?” என்று கோபத்துடன் கேட்டாள், ஆரணி.

என்ன சொல்ல வருகிறாய் என்று பார்த்தான் அவன்.

“அவரும் எங்களை மாதிரி இராப்பகலா கஷ்டப்பட்டு உழைச்சுத்தான் ஒரு நிலைக்கு வந்திருக்கிறார். அவருக்கு வருகிறவள் ஆறுதலும் சந்தோசமும் தாறவளா இருக்கவேணும். ஒத்தாசையா அவரை விளங்கி நடக்கவேணும். அந்தப் பக்குவம் எங்கட கயலுக்கு இல்ல. அவளுக்கு உடம்பு நோகாம உழைக்கத்தான் விருப்பம். டிரைவர், வாகனம் ஒட்டுறதை எல்லாம் தரக்குறைவா நினைக்கிறவள். அது எப்பிடியும் பிரச்சனையில தான் கொண்டுவந்து விடும். அதாலதான் வேண்டாம் எண்டு சொன்னனான். அது விளங்காம அம்மாவும் மகனுமா சேர்ந்து என்னை என்னவோ வில்லி மாதிரி பாக்கிறீங்க.” என்றுவிட்டு திரும்பிப் படுத்துக்கொண்டாள், அவள்.

தான் என்ன சொல்கிறோம் என்பதை விளங்கிக்கொள்ளாமல் சும்மா தங்கையைக் குறை சொல்வதாக அவன் நினைப்பது அவளுக்கும் மெல்லிய மனச் சிணுக்கத்தை உண்டாக்கிற்று.

அமராவதிக்கு மிகுந்த கோபம். இந்த இரண்டு வருடத்தில் சுகிர்தனின் சகோதரி குடும்பங்கள் உட்பட மொத்தக் குடும்பமும் இவர்களுக்கு நல்ல பழக்கம். ஆக, அவரின் கையைத் தாண்டிப் போகாது என்கிற நம்பிக்கையில் தன்னைக் கட்டுப்படுத்திக்கொண்டார். அடுத்தநாள் பள்ளிக்கூடம் போய்விட்டு வந்து அழைத்த கயலினியிடம் ஆரணியின் பேச்சைக் கோபத்துடன் கொட்டித் தீர்த்தார்.

“அவளுக்கு இருக்கிற வாய் இருக்கே.. படிச்சு டீச்சரா இருக்கிற நீ அவனுக்குப் பொருத்தமில்லையாம். எப்பிடி கதைக்கிறாள் எண்டு பார்.” என்றவரை மேலே பேசவிடாமல் எரிச்சலுடன் இடையில் புகுந்தாள் அவள்.

“உங்களுக்குக் கொஞ்சமாவது அறிவிருக்காம்மா? அவா சொன்னதில என்ன பிழை. நான் ஒரு டீச்சர். நாளைக்கு இன்னும் படிச்சு மேல வருவன். அப்பிடியான எனக்கு ஒரு டிரைவர் மனுசனா வாறதா? என்னோட பழகிற ஆக்களிட்ட என்ர மனுசன் டிரைவர் எண்டு சொல்லுறதை நினைச்சாலே கேவலமா இருக்கு. எனக்கு அவன் வேண்டாம். படிச்சு நல்ல உத்தியோகத்தில இருக்கிறவனா பாருங்க.” சுள்ளென்று சொன்னாள் அவள்.

ஆரணி சொன்னது போலவே மகளும் சொல்கிறாளே என்று
திகைத்துப்போனார் அமராவதி. என்றாலும் அவனை நழுவ விட மனமில்லை.

“அடி பிள்ளை, நீதான் யோசிக்காம கதைக்கிறாய். அவன் டிரைவர் இல்ல ரெண்டு வேனுக்குச் சொந்தக்காரன். அப்பிடி அவன் டிரைவரா இருக்கிறது பிடிக்காட்டி கட்டின பிறகு ஆட்களை வேலைக்கு வச்சு ஓடச்சொல்லு. உன்ர அண்ணிய பாக்கேல்லையா நீ? ஏறினா வேன் இறங்கினா வேன் எண்டு இருக்கிறாள். கிண்டர் கார்டன் வேல விசயமா படிக்கிறதுக்குப் போனமாதம் கொழும்புக்கு போன நேரமும் உன்ர அண்ணா லீவு போட்டுக் கூட்டிக்கொண்டு போனவன். அப்பிடி அவனும் உன்ன பாப்பான். அதோட அவனைக் கட்டினா உனக்குப் பொறுப்பும் இல்ல. தாய் தகப்பனை பாக்கத் தேவை இல்ல. இங்கயே நீ காலத்துக்கும் நிம்மதியா இருக்கலாம். அவன் ஒரு குடி, சிகரெட் இல்ல. மாடு மாதிரி உழைச்சு உன்ன ராணி மாதிரி வச்சிருப்பான். உத்தியோகம் பாக்கிற மாப்பிள்ளை எண்டா காலத்துக்கும் நீயும் வேலைக்குப்போய்த்தான் வாழவேணும்.” என்று அவளுக்கு விளங்கவைக்க முயன்றார் அவர்.

அவளுக்கு எரிச்சல் தான் வந்தது. “நீங்களும் உங்கட விளக்கமும்! என்ன வசதி இருந்தாலும் அவன் டிரைவர் எண்டுறது மாறாது. அண்ணாவாவது படிச்சிட்டுத்தான் டிரைவரா இருக்கிறார். அவன் பள்ளிக்கூடத்தோட சரி. அப்பிடியானவன் எனக்கு வேண்டாம். அவ்வளவுதான்!” என்றுவிட்டு அழைப்பைத் துண்டித்திருந்தாள் கயலினி.

மனம் கேளாமல் மீண்டும் அழைத்து அவளுக்கு விளங்க வைக்க முயன்றார் அமராவதி. அவள் தன் முடிவிலிருந்து மாறவே இல்லை. இளம் பெண்ணாக அவளின் எதிர்பார்ப்பு அதுவாக இருக்கையில் ஒரு அளவுக்கு மேலே அவராலும் வற்புறுத்த முடியாமல் போயிற்று. “இந்தக் காலத்து பிள்ளைகளை விளங்கிக்கொள்ளவே ஏலாம கிடக்கு.” என்று முனகிவிட்டு அவரும் விட்டுவிட்டார்.

அன்று மாலை வீடு வந்த நிகேதன், “என்னவாம் அம்மா கயல்?” என்று விசாரித்தான்.

“அவளுக்கு விருப்பம் இல்லையாம்..” ஆரணியும் அங்கேயே இருந்ததில் அவருக்குக் குரலே எழும்பவில்லை.

“ஏன் எண்டு சொன்னவளா?”

“டிரைவர் வேண்டாமாம். படிச்சு உத்தியோகத்தில இருக்கிறவன் தான் வேணுமாம்.” அன்னையின் பேச்சைக் கேட்டு நிகேதனுக்குமே ஆச்சரியமாயிற்று. ஆரணி தங்கையை மிகச் சரியாகத்தான் கணித்திருக்கிறாள் என்று விளங்க அவளைப் பார்த்தான்.

“மாட்டுக்கு மாடு சொன்னா கேக்காதாம். மணி கட்டின மாடு சொல்ல வேணுமாம்.” அவனுக்கு மட்டும் கேட்குமாறு முணுமுணுத்துவிட்டுப் போனாள் அவள்.

‘இவள் இப்ப ஆர மாடு எண்டு சொல்லிப்போட்டு போறாள்...’ எவ்வளவு முயன்றும் முடியாமல் மெல்லிய சிரிப்பு அரும்பிற்று நிகேதனுக்கு.

 
Top Bottom