• நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.
    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

அவள் ஆரணி - 26

நிதனிபிரபு

Administrator
Staff member
அத்தியாயம் 26


உறக்கம் கலையும்போதே ஆரணிக்குத் தலை விண் விண் என்று வலித்தது. நெற்றிப்பொட்டை அழுத்தி அழுத்தி விட்டபிறகுதான் விழிகளை மெல்லத் திறக்க முடிந்தது. அருகில் நிகேதன் உறங்கிக்கொண்டு இருந்தான். ‘எப்போது வந்தான்?’ அழைப்பிதழ் கொடுக்கப்போனவர்கள் இரவு வந்து, உணவை முடித்துக்கொண்டு புறப்பட்டபோதும் அவன் வரவில்லை. ஹயராக வவுனியா சென்று இருந்தான். அவனிடம் சகாதேவன் கைபேசியில்தான் விடைபெற்றுக்கொண்டார். அதன்பிறகும் அவள் கடைசியாகப் பன்னிரண்டு அரைக்கு நேரம் பார்த்த நினைவு.

உறக்கத்தில் கூட விலகிப் படுத்திருந்தவனின் கோபம் புரிந்தபோது, நெஞ்சில் வேதனை எழுந்தது. திருமண வீட்டில் வெறும் கழுத்துடன் நிற்கப்போகிறோம் என்கிற சிந்தனை அவளுக்கே வரவில்லை. ஆனால், அவனுக்கு வந்திருக்கிறது. மற்றவர்கள் அவளைக் குறைத்து மதிப்பிட்டுவிடக்கூடாது என்று நினைத்திருக்கிறான். கூடவே அவளுடைய விருப்பத்தையும் நிறைவேற்றி இருக்கிறான்.

அமராவதி சொன்னதுபோல பல லட்சங்களில் பணம் செலவாகியிருக்கும். இதனால் இன்னுமே நெருக்கடிக்கு ஆளாகுவான். கடன்காரனாக நிச்சயம் மாறுவான். இருந்தும் எதைப்பற்றியும் யோசிக்காமல் அவளுக்காக அதைச் செய்திருக்கிறான். அந்த அன்பை உணராமல், அமராவதி கண்டதையும் பேசினார் என்பதற்காக அவள் பேசியதும், கொடியைக் கழற்றப்போனதும் தவறுதானே. அதை அணிவிக்கையில் எவ்வளவு ஆசையாக அணிவித்தான். அதைப்போய் ‘கழுத்த நெரிக்குது, நெஞ்ச அறுக்குது.’ என்று அவள் சொன்னபோது எப்படித் துடித்திருப்பான்?

விழிகள் கலங்கிப் போயிற்று அவளுக்கு. அமராவதியின் மீது கோபம் கொண்டவள் அவனை யோசிக்க மறந்துபோனாள். கடவுளே.. மீண்டும் நெற்றிப்பொட்டை அழுத்திவிட்டாள். தலை வெடிக்கும் போல் இருந்தது. விழிகளை இறுக்கி மூடித் திறந்தபோது அவன் விழித்து, அவளைத்தான் பார்த்துக்கொண்டு இருந்தான்.

ஆரணியின் நெஞ்சு படபடக்கத் தொடங்கிற்று. அவனையே பார்த்திருக்க அவன் எழுந்து கிணற்றடிக்கு நடந்தான். அவளின் முகம் அப்படியே சுருங்கிப் போயிற்று. இந்த மௌனக் கோபம் அவளைக் கூறு போட்டது. சமாதான முயற்சியாக வேகமாக எழுந்து, முகம் கழுவி, தலையை வாரிக்கொண்டு ஓடிப்போய் அவனுக்குத் தேநீர் போட்டாள். அதற்குள் அவன் குளித்துவிட்டு வந்தான்.

“தேத்தண்ணி?” அறைக்கே கொண்டுபோய் அவனிடம் நீட்டினாள்.

“வச்சிட்டுப் போ!” முகம் பாராமல் பதில் சொன்னவனின் செய்கையில் முகம் வாடிவிட, “ஆறமுதல் குடி.” என்றுவிட்டு மீண்டும் ஓடிப்போய் வேக வேகமாகப் புட்டு அவித்து, சம்பல் அரைத்து, மிளகாயைப் பொறித்து எடுத்தாள்.

புட்டும் சம்பலும் என்றால் அவனுக்கு மிகுந்த விருப்பம். அதுவும் முதல்நாள் வைத்த மீன் கறியும் உடன் புட்டும் என்றால் உயிரையே கொடுப்பேன் என்பான். அவள் கேலி செய்தாலும், ‘அந்தச் சிவனே புட்டுக்கு மண் சுமந்தவராம். நான் எல்லாம் எந்த மூலைக்கு..’ என்றுவிட்டு இன்னும் இரண்டுவாய் அதிகமாகச் சாப்பிடுவான்.

அவன் தயாராகி வெளியே வர, “சமையல் முடிஞ்சுது. சாப்பிட்டு போ நிக்கி.” என்று அழைத்தாள்.

ஒன்றும் சொல்லாமல் வந்து அமர்ந்தான் அவன். போட்டுக் கொடுத்துத் தானும் அமர்ந்து சாப்பிட்டாள். உணவு உள்ளே இறங்குவேனா என்று அடம் பிடித்தது. அவனுக்குப் பிடித்த பிட்டு. கோபம் கொஞ்சமாவது குறைந்திருக்குமா என்று ஆவலோடு பார்த்தாள். அவனோ தட்டில் பார்வையைப் பதித்துச் சாப்பிட்டுக்கொண்டு இருந்தான். மீண்டும் அவளுக்குக் கண்ணைக் கரித்துக்கொண்டு வந்தது. பேசாமல் இருந்து இப்படி வதைக்கிறானே. அதற்குமேல் அங்கே இருந்தால் அவனுக்கு முன்னாலேயே அழுதுவிடுவோம் என்று தெரிந்து எழுந்துகொண்டாள், ஆரணி.

அவன் உணவை முடித்துக்கொண்டு புறப்படுவது தெரிந்தது. போய்வருகிறேன் என்று சொல்லவே இல்லையே. அவ்வளவு கோபமா? மெல்லிய அதிர்வுடன் நிகேதனையே பார்த்தாள். கதவருகில் தொங்கிக்கொண்டிருந்த வேன் திறப்பினை எடுத்துக்கொண்டு செருப்பையும் மாட்டிக்கொண்டு அவன் வெளியேறுவது தெரிந்தது.

அவளுடைய நிக்கி அவளைப் புறக்கணிக்கிறான்! நெஞ்சை அடைத்த துக்கத்தை நெஞ்சுக்குள்ளேயே விழுங்கிக்கொண்டு ஓடிப்போய்க் கேட்டை திறந்து வைத்துக்கொண்டு நின்றாள். எப்போதும் அவளருகில் நிறுத்தி, ஒரு, “வரட்டா?” வோடு முகம் முழுக்க மின்னும் சிரிப்புடன் உதடுகளைக் குவித்து அவன் தந்துவிட்டுப் போகிற முத்தத்துக்காக அவள் காத்திருக்க, அவன் அவளைக் கடந்து வீதியில் இறங்கி மறைந்தே போனான்.

சற்றுநேரம் அசையக்கூட முடியாமல் போயிற்று அவளுக்கு. நேரமாவதை உணர்ந்து ஒரு மாத்திரையை விழுங்கிக்கொண்டு செண்டருக்குப் புறப்பட்டாள்.

வாசலிலேயே வைத்து அவளைப் பிடித்தார் அபிராமி. “நேற்றே மெசேஜ் அனுப்பினான். ஏன் ஒரு பதிலும் போடேல்ல ஆரணி?”

“என்ன மெசேஜ் மிஸ்?” குழப்பத்துடன் வேகமாகத் தன் ஃபோனை எடுத்துப் பார்த்தாள்.

அடுத்தகட்ட பயிற்சி கொழும்பில் மூன்று நாட்கள் நடப்பதாகவும், அதில் கலந்துகொள்ளப் போகிறாயா என்றும் கேட்டிருந்தார் அவர். அவள் முறையான பயிற்சியோடு இங்கே பணிபுரிய வரவில்லை. பிறகு பிறகு அந்த வேலையில் உண்டான ஈடுபாட்டில் அவளே கற்றுக்கொள்ள ஆர்வம் காட்டியபோது, இப்படியான பயிற்சிகளுக்கு அவளை அனுப்பிவைத்தார் அபிராமி.

“கலியாண வேலை பிஸில பாக்கேல்லை போல. ஆனா, நீர் போகாம விடமாட்டீர் எண்டு எனக்குத் தெரியும் தானே. அதால நானே உம்மை லிஸ்ட்ல சேர்த்திட்டன் ஆரணி. எனக்கும் கடைசி நேரம் தான் நியூஸ் வந்தது. அதால இண்டைக்கே வெளிக்கிடவேணும். நாளைக்கு விடிய அங்க கிளாஸ் இருக்கு. இந்த முறை ஜெர்மனில இருந்து வந்து பயிற்சி தருகினம். நீங்க தங்கப்போற ஹோட்டல்ல தான் செமினாரும் நடக்கப்போகுது. பில் நான் கட்டிட்டேன். பிறகு உமக்கு அந்த மெயில் அனுப்பி விடுறன். நீர் என்ர எக்கவுண்டுக்கு காச டிரான்ஸ்பர் செய்துவிடும்.” என்றுவிட்டுப் போனார் அவர்.

இதெல்லாம் அவள் பயிற்சிக்குப் போகிற ஒவ்வொரு முறையும் நடப்பதுதான். ஆனால், அவன் கோபமாக இருக்கிறபோது அவளுக்குப் போக மனமேயில்லை.

“இந்த முறை போகாம விட்டா என்ன மிஸ்?” அவரைத் தேடிச் சென்று தயக்கத்துடன் வினவினாள்.

அவள் இப்படிக் கேட்பாள் என்று எதிர்பாராதவருக்கு மெல்லிய திகைப்புத்தான். “போகாம விட்டா பே பண்ணின காசு திரும்பி வராது ஆரணி. ஆனா ஏன் போகாம விட? கலியாண வேலை இருக்கு என்ன. ஆனா மூண்டு நாள் தானே. சமாளிக்க மாட்டீரா? இப்பிடி ஒரு சான்ஸ் திரும்ப எப்ப கிடைக்கும் எண்டு தெரியாது. இவ்வளவு காலமும் இலங்கை ஆக்கள் தான் பயிற்சி தந்தது. இந்த முறை.. சொன்னேனே ஜேர்மன் குரூப் எண்டு. போனா நிறையப் படிக்கலாம். உமக்கும் இதே மாதிரி ஒரு செண்டர் ஆரம்பிக்க விருப்பம் இருக்கு எண்டு எனக்குத் தெரியும். நிச்சயமா அதுக்கு இந்த செமினார் பெரிய ஹெல்ப்ப இருக்கும். என்ன சிரமம் எண்டாலும் தயவுசெய்து போயிட்டு வாரும்.” என்று கட்டாயப்படுத்திச் சொல்லிவிட்டுப் போனார் அவர்.

அவரே இவ்வளவு சொல்கிறார் என்றால் நிச்சயம் இது முக்கியமான செமினாராகத்தான் இருக்கும் என்று ஆரணிக்குப் புரிந்தது. இப்போது அவளுக்கும் தவறவிட மனமில்லை. வெளியே வந்து நிகேதனுக்கு அழைத்தாள்.

எடுக்கவில்லை. ஹயரில் இருந்தால் எடுக்கமாட்டான் தான். வாகனம் ஓடுகிறபோது வாகன ஓட்டிகள் கைபேசியில் பேசினால் விபத்துக்களை உண்டாக்கி தம் உயிருக்கே உலை வைத்துவிடுவார்களோ என்று வருகிறவர்கள் விரும்புவதில்லை என்பதால் எடுக்கமாட்டான். கூடவே ஆரணிக்கும் அதில் விருப்பமில்லை. அவனும் அதைச் செய்ய மாட்டான். எனவே பேச வேண்டுமானால் ஒரு மெஸேஜையோ இப்படி ஒரு மிஸ்கோலையோ கொடுத்துவிடுவாள். நேரம் அமைகிறபோது அவன் அழைப்பான்.

இன்று இரண்டு மணி நேரங்கள் கழிந்தும் அவன் திருப்பி அழைக்கவில்லை என்றதும் மனதில் பாரத்துடன் மீண்டும் அழைத்தாள். அரை மணித்தியாலம் கழித்து மீண்டும். ஏன் இவ்வளவு கோபம்? அவள் பேசியது பிழைதான்.
 

நிதனிபிரபு

Administrator
Staff member
தாலிக்கொடியை கழற்ற முனைந்ததும் பிழைத்தான். அதற்கென்று இப்படித் தண்டிப்பானா? அதற்குமேல் முடியாமல் அரைநாள் விடுமுறையைப் பெற்றுக்கொண்டு வீட்டுக்குப் புறப்பட்டாள்.

அமராவதியிடம் சொல்லியாயிற்று. பெட்டியை அடுக்கியாயிற்று. அவள் குளித்துத் தயாரும் ஆகியாயிற்று. ஆனாலும் நிகேதன் திருப்பி எடுக்கவேயில்லை. கண்ணோரம் கரிக்க ஆரம்பித்தது. வாட்ஸ் அப்பில், “ஹாய் நிக்கி, நான் இண்டைக்கே கொழும்புக்கு போகவேணும். நாளையில இருந்து மூண்டு நாளுக்கு எனக்குக் கிளாஸ் இருக்காம். மிஸ் நேற்றே மெசேஜ் போட்டு இருக்கிறா. நான் கவனிக்க இல்ல. அதைச் சொல்லத்தான் உனக்கு எடுத்தனான். நீ எடுக்க இல்ல..” எனும்போதே அவளுக்குக் குரல் உடைய ஆரம்பிக்க, பேசுவதை நிறுத்திவிட்டு அதை அனுப்பினாள்.

மீண்டும் தன்னைத் தேற்றிக்கொண்டு, “நாளைக்கு விடியவே கிளாஸ் தொடங்குது. ஹோட்டலும் அவேயே(அவர்களே) அரேஞ் செய்திருக்கினம். மிஸ் அனுப்பின மெயிலை உனக்கும் போவேர்ட்(forward) செய்து இருக்கிறன். நான் ஈவ்னிங் ட்ரெயின் எடுக்கப் போறன். வேற என்ன.. கவனமா இரு. சொறி நான் நேற்று கதைச்சதுக்கு..” என்றுவிட்டு அனுப்பி விட்டவளுக்கு, ‘நீ வா. போக முதல் உன்ன பாக்கோணும் மாதிரி இருக்கு..’ என்பதைச் சொல்லமுடியாமல் இதழ்கள் நடுங்கிற்று.

மனம் கேளாமல் ரெயில்வேயில் நின்று மீண்டும் அழைத்தாள். வேகமாக அழைப்பை ஏற்று, “இப்ப என்ன வேணும் ஆரா உனக்கு? கதைக்கிறதை எல்லாம் யோசிக்காம கதைக்கிறது. பிறகு மனுசன இருக்க நிக்க விடாம திருப்பித் திருப்பி எடுத்துக்கொண்டே இருப்பியா? வை ஃபோனை!” என்று கத்திவிட்டு அழைப்பைத் துண்டித்தான் அவன்.

விழிகள் மளுக்கென்று நிறைந்து வழிந்துவிட ரெயில்வே பிளாட்போமில் இருந்த வாங்கிலில் அமர்ந்துவிட்டாள் ஆரணி. கண்ணீர் துடைக்கத் துடைக்கப் பெருகியது. அழக்கூடாது. நான் அழக்கூடாது என்று கண்களைத் துடைத்தாலும் கண்ணீர் நிற்பேனா என்றது.

நடுங்கும் இதழைப் பற்றியபடி விழிகளை இறுக்கி மூடித் தன்னைச் சமாளிக்க முயன்றாள். அவனுடைய கடுமையை அவள் தாங்கமாட்டாள் என்று அவனுக்குத் தெரியும். தெரிந்தும் தண்டிக்கிறான் என்றால் தண்டிக்கட்டுமே. அவளின் கண்ணீர் நின்றுபோயிற்று. முகத்தைத் துடைத்துக்கொண்டாள்.
புகையிரதம் புறப்பட நேரம் இருந்ததில் அப்படியே அமர்ந்திருந்தாள்.

கதவை அறைந்து சாற்றிவிட்டு வேனில் இருந்து இறங்கி நின்றான் நிகேதன். மூச்சை இழுத்துவிட்டான். இரண்டு கைகளும் தலையைக் கோதி சீர் செய்தது. உண்மையிலேயே இன்றைக்கு அவனுக்கு ஓய்வே இல்லை. இரவும் போதிய உறக்கமில்லை. காலையில் ஆரம்பித்ததில் இருந்து ஒரே ஓட்டம். பணச்சிக்கல், அன்னையின் பேச்சு, அவளின் பேச்சு எல்லாமே தலைக்குள் நின்று அவனை விசரனாகவே மாற்றிக்கொண்டிருந்தது. வெயிலுக்கு வீதியில் கவனம் வைத்து வைத்துக் கண் நெருப்பாக எரிந்தது. அவளும் திரும்பத் திரும்ப அழைக்க, இருந்த கோபம், சினம், எரிச்சல் எல்லாவற்றையும் அவளிடம் கொட்டியிருந்தான். அதன் பிறகுதான் கொஞ்சம் நிதானத்துக்கு வந்தான்.

இப்போதோ அவளை எண்ணி மனது பரிதவித்தது. அழுகிறாளோ? காலைச் சுற்றும் நாய்க்குட்டியாகக் காலையில் தன்னையே சுற்றிச் சுற்றி வந்தவள் கண்ணுக்குள் வந்து நின்றாள். தன் முகத்தையே பார்த்துக் கோபமாக இருக்கிறானா இல்லையா என்று அவள் அளந்தது இப்போது மென் சிரிப்பை வரவழைத்தது. ‘கதைக்கிறதை எல்லாம் கதைக்கிறது. பிறகு பாவி மாதிரி நடிக்கிறது. இவளை..’

‘என்னவோ மெசேஜும் அனுப்பி இருந்தாளே..’ ஃபோனை எடுத்துக் கேட்டதும் திகைத்துப்போனான். வேகமாக அவளுக்கு அழைத்தான்.

நிக்ஸ் என்று ஒளிர்ந்த பெயரிலேயே அவள் விழிகள் தளும்பிற்று. இதழ்கள் துடிக்க அழைப்பை ஏற்றுக் காதில் வைத்தாள்.

“ஆரா..”

அவளுக்குக் கண்ணீர் கரகரவென்று ஓடிற்று. மற்றக் கையால் துடைத்துக்கொண்டாள்.

“ஆரா, எங்க நிக்கிறாய்?” அவன் குரலில் மிகுந்த அவசரம்.

“ஸ்டேஷன்ல..”

கலங்கித் தெரிந்த குரலில், “அழுதியா?” என்றான் பரிதவிப்புடன்.

அவள் உதட்டைக் கடித்துத் தன் அழுகையை அடக்கினாள்.

“ஆரா.. கதைக்க மாட்டியா? அது நான் ட்ரிப்ல இருந்தன். அதுல ஃபோன் பாக்கேல்லை.” அவனுக்குப் பேச்சே வரமாட்டேன் என்றது.

கண்களைத் துடைத்து, அடைத்த தொண்டையை விழுங்கிச் சீர் செய்துகொண்டு, “இதுல என்ன இருக்கு நிக்கி. நீ உன்ர வேலைய பார். நான் ரெயில்வே வந்திட்டன். அது சொல்லத்தான் எடுத்தனான். பாய்.” என்றவள் அவசரமாக அழைப்பைத் துண்டித்தாள். மேலே பேச முடியவில்லை. அழுகை வந்தது.

அடுத்த நொடியே திரும்பவும் அழைத்தான் அவன்.

“ப்ச்! ட்ரைவ் பண்ணிக்கொண்டு இருந்ததில எடுக்கேல்ல எண்டு சொல்லுறன் தானே. பிறகும் என்ன உனக்கு அவ்வளவு கோபம்? நீ ட்ரெயின்ல போக வேண்டாம். நில்லு நான் கொண்டுபோய் விடுறன்.” என்றான் அவன் அவசரமாக.

“இல்ல. நீ வேலைய பார். எனக்காக மெனக்கெட வேண்டாம். நான் ட்ரெயின்லையே போறன்.”

அவனுக்குச் சுள் என்று ஏறியது. “ஓமடி! உனக்காக மெனக்கெடாம ஊருக்காகத்தானே ஓடி ஓடி உழைக்கிறன். வந்திட்டா கத சொல்லிக்கொண்டு. திரும்பவும் கோபத்தை வர வைக்காம அங்கேயே நில்லு. இப்ப வாறன். என்ன பாக்காம நீ போறேல்ல சொல்லிட்டன்.” என்றபடி அவன் வாகனத்தை வேகமாக எடுப்பது இவளுக்குத் தெரிந்தது.

அவள் விழியோரம் கரித்தது. வேகமாக இமைகளைச் சிமிட்டி அடக்கினாள். “இல்ல.. ட்ரெயின் வெளிக்கிடப்போகுது. நான் போயிட்டு வாறன்.”

“நில்லடி எண்டு சொல்லுறன். ஆகத்தான் செருக்குக் காட்டுறாய். நான் கொண்டுபோய் விடுறன். போகாத பிளீஸ். எனக்கு உன்ன பாக்கோணும் ஆரா.” தவிப்புடன் சொல்லிவிட்டு வேகம் கூட்டினான், நிகேதன்.

அவள் நிற்கவில்லை. புறப்பட்டு இருந்தாள். அவனைப் பார்த்தால் நிச்சயம் பெரிதாக உடைந்துவிடுவோம் என்று புரிந்தது. அதை விரும்பவில்லை அவள். வேனை அவசரம் அவசரமாகப் பார்க் செய்துவிட்டு, ஓடிவந்து பார்த்தான் நிகேதன்.

அந்தப் பிளாட்போமே வெறுமையாகக் காட்சி தந்தது. அவ்வளவு சொல்லியும் கேட்காமல் போய்விட்டாளா? நம்ப முடியாத ஏமாற்றம் அவனைத் தாக்கிற்று. மனதில் ஹோ என்று பெரும் இரைச்சல். வேகமாகக் கைபேசியை எடுத்து அவளுக்கு அழைத்தான். அவள் அழைப்பை ஏற்றதும் அவன் பேசவே இல்லை. புகையிரதத்தின் தடக் தடக் ஓசை காதில் வந்து மோதி, மெய்யாகவே அவள் புறப்பட்டுவிட்டதைச் சொல்லிற்று. தான் சொன்னதையும் மீறிப் போயிருக்க மாட்டாள் என்கிற அவனுடைய நம்பிக்கை பொய்த்துப் போனது.

பேசாமல் அழைப்பைத் துண்டித்தான். அவன் விழிகள் வெறுமையுடன் அவள் போன திசையையே வெறித்தது. ஓடிப்போய் அந்த ட்ரெயினைப் பிடிக்க முடிந்தால்? என்னடி உனக்கு அவ்வளவு கோபம் என்று அவளை உலுக்க முடிந்தால்? அவள் மீது தவறில்லை. அவளின் வார்த்தைகளின் மீதுதான் அவனுக்குக் கோபம். அதைக் காட்டினால் இப்படித்தான் அவனைத் தவிக்க விட்டுவிட்டுப் போவாளா? அவ்வளவு சொல்லியும்!
 

Goms

Active member
முதல் முதலாக ஒரு நீண்ட நேரக்கோபம்.
யாரை குறை சொல்ல??😊
 

Google Typing

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.

Top Bottom