• நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.
    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

அவள் ஆரணி - 27

நிதனிபிரபு

Administrator
Staff member
அத்தியாயம் 27


ஆரணிக்கு மூன்று நாட்களும் செமினார் நன்றாகவே போனது. தவறவிடாமல் வந்தது மிகவும் நல்லதாகப் போயிற்று என்று நினைக்கிற அளவில் மிக மிகப் பிரயோசனமாகவே இருந்தது. காலை எட்டுக்கு ஆரம்பித்தால் பன்னிரண்டுக்கு முடியும். ஒரு மணி நேரம் இடைவேளை. மீண்டும் மத்தியானம் ஒன்றுக்கு ஆரம்பித்து மாலை ஐந்துக்கு முடியும். மூன்று நாட்களும் மின்னலாக விரைந்துவிட, இதோ செமினார் முடிந்த நொடியே புறப்பட்டுவிட்டாள்.

நொடி நேரத்தை வீணாகக் கடத்தவும் மனமில்லை. இந்த மூன்று நாட்களும் அவளுடைய நிக்கியைப் பார்க்காமல் இருந்ததே போதும் போதும் என்றாயிற்று. எல்லோரிடமும் விடைபெற்று, அறையின் திறப்பையும் கையளித்துவிட்டு ஹோட்டலை விட்டு வெளியே வந்தவளின் ஒவ்வொரு அசைவிலும் அவசரம். அந்தளவில் மனம் அவனைத் தேடியது. எவ்வளவு விரைவாகச் செயல்படுகிறாளோ அவ்வளவு விரைவாக அவனிடம் போய்விடுவாளே. வேக நடையில் தன் ட்ரொல்லியையும் இழுத்துக்கொண்டு வெளியே வந்து, ஆட்டோ ஏதும் கிடைக்குமா என்று விழிகளைச் சுழற்றியபோது கண்முன்னே நின்றிருந்த நிகேதனைக் கண்டதும் அப்படியே நின்றுவிட்டாள்.

வருவான் என்று நினைக்கவே இல்லை. முகம் பூவாக மலர்ந்துவிட அவனிடம் ஓடினாள்.

“நிக்கி..”



அவளின் முகம் பாராமல், “இது மட்டும் தானே.” என்றபடி அவளின் பெட்டியைத் தூக்கி பின்னால் வைத்தான் அவன்.

அவளின் முகம் அப்படியே வாடிப்போயிற்று. இன்னும் கோபம் தீரவில்லையா? வேதனையோடு அவனைப் பார்த்தாள்.

“ஏறு, நேரமாகுது!” யாருக்கோ சொல்வதுபோல் சொல்லிவிட்டு தன் இருக்கையில் ஏறி அமர்ந்து பெல்ட்டை மாட்டினான் அவன்.

“இவவா உங்கட வைஃப் தம்பி?” என்ற குரலில் தான் ஒரு வயதான கணவன் மனைவி வேனில் இருப்பதைக் கவனித்தாள் ஆரணி. ஹயர் வந்திருக்கிறான் என்று புரிந்தது. வேகமாகத் தன் முகத்தைச் சீர் படுத்தி, அவர்களைப் பார்த்து முறுவலித்துவிட்டுத் தானும் அவனருகில் ஏறிக்கொண்டாள்.

வீதியில் கவனத்தை வைத்து வாகனத்தைச் செலுத்திக்கொண்டிருந்தான் அவன். தூரத்தில் இருந்தபோது கூட அவனுடைய கோபத்தை ஏற்றுக்கொண்டவளுக்கு அருகில் இருந்து அவன் காட்டுகிற இந்த விலகல் மிகவுமே பாதித்தது.

அன்று, அவள் புறப்பட்டுவிட்டாள் என்று கோபத்துடன் அழைப்பைத் துண்டித்தவன் கொழும்பு வந்து இறங்கியதுமே அழைத்தான். இன்னுமே கோபமாக இருக்கப் போகிறான், என்ன சொல்லி சமாதானம் செய்யப் போகிறேன் என்று கலங்கிக்கொண்டு இருந்தவள் நிச்சயம் இதை எதிர்பார்க்கவில்லை. வியப்புடன் ஏற்று, “நிக்கி?” என்றதுமே, “போயிட்டியா?” என்றுதான் கேட்டான். வேறு பேசவில்லை.

“ம்ம் வந்து இறங்கிட்டன். ஹோட்டலுக்கு ஆட்டோ பிடிக்கப்போறன்.” அவனிடம் தெரிந்த விலகளில் அவள் குரல் உள்ளே போயிற்று.

“பிடி. நான் லைன்லையே இருக்கிறன்.” அதன் பிறகு அவனுடைய வாகனத்தில் ஒலிக்கும் பாட்டுத்தான் அவளுக்குக் கேட்டது. ஆட்டோ பிடித்து, ஹோட்டல் போயிறங்கி, அவள் செக்கின் செய்து, அறைக்குள் செல்கிறவரைக்கும் அவன் அழைப்பிலேயேதான் இருந்தான்.

“அறைக்க வந்திட்டன் நிக்கி.”

‘வசதியா இருக்கா? பாதுகாப்பான இடமா? பயமா இல்லையே? உன்னோட செமினாருக்கு வேற பெண்களும் வந்திருக்கினமா எண்டு பார்’ என்று அவளின் பாதுகாப்பை முழுமையாக அங்கிருந்தே கவனித்துக்கொண்டான். எல்லாம் திருப்தி என்றதும் கடைசியாக, “எதுக்கும், அந்த ஹோட்டல், செமினார் நடக்கிற ஹோல், செமினார் பற்றின அறிவிப்பு இருக்கும் எல்லா அது எல்லாத்தையும் எனக்குப் போட்டோ எடுத்து அனுப்பிவிடு.” என்றான்.

“ம்ம் சரி.”

“வேற என்ன? கவனமா இரு. அந்த ஹோட்டலிலேயே வாங்கிச் சாப்பிடு. பீச்சுக்கு போறன் பார்க்குக்குப் போறன் எண்டு வெளில எங்கயும் போகாத. நான் பின்னேரம் எடுக்கிறன்.” என்றுவிட்டு வைத்திருந்தான் அவன்.

பாதுகாக்கிறேன் என்கிற பெயரில் வீட்டுக்குள் அடைக்காமல் அவளைச் சுதந்திரமாக விட்டுப் பின்னிருந்து அவளின் பாதுகாப்பை உறுதி செய்கிறவனின் அக்கறை அவள் இதயத்தைத் தொட்டது. அவன் எப்போதுமே அப்படித்தானே.

அதன் பிறகும் காலையில், இடைவேளையின் போது, மாலையில் என்று அழைத்து விசாரித்துக்கொண்டான். ஆனால், எல்லாவற்றிலுமே ஒரு விலகல். மேலே அவளைப் பேச விடவுமில்லை. “நிக்கி! பிளீஸ் கொஞ்சம் நான் கதைக்கிறதை கேளன்.” என்று அவள் குரலடைக்கச் சொன்னபோதுகூட, “முதல் போன வேலைய முடிச்சுக்கொண்டு வா. அதுக்குத்தானே அவசரம் அவசரமா ட்ரெயின் பிடிச்சு போனனீ.” என்றுவிட்டான் அவன்.

இப்போதும் அதே விலகல். பிறகு எதற்கு அழைத்துக்கொண்டு போக வந்தானாம் என்று ஊடல் கொண்டது அவள் உள்ளம். ‘ஏனடா இப்பிடி என்னைப்போட்டு வதைக்கிறாய்?’ என்று அவன் சட்டையைப் பிடிக்க வழியில்லாமல் ஆட்கள் வேறு வாகனத்தினுள். இல்லையோ இன்றைக்கு அவனை ஒரு வழி செய்திருப்பாள்.

“என்ன பிள்ளை? ஏறினதில இருந்து ஒண்டுமே கதைக்காம வாறாய்.” என்றார் அந்த அம்மா.

“என்ர மனுசி கொஞ்சம் கூச்ச சுபாவம். பெருசா கதைக்க மாட்டாள்.” பார்வை வீதியிலே இருக்கப் பதில் சொன்னான், நிகேதன்.

இவ்வளவு நேரமாகத் திரும்பியும் பாராமல் இருந்துவிட்டு இப்போது மட்டும் எதற்காக அவளைப் பற்றிப் பேசுகிறானாம். அவனை முறைத்தாள், ஆரணி.

“ஓ.. பாத்தாலே தெரியுது. இந்தக் காலத்தில இப்பிடி அருமையான, அமைதியான பிள்ளை கிடைக்காது தம்பி. சந்தோசமா வச்சுக்கொள்ளும்.” என்றார் அவர்.

“ஓமோம். இந்தப் பீஸ் எங்க தேடினாலும் கிடைக்காது. எனக்கு எண்டே எக்ஸ்ட்ராவா செஞ்சு அனுப்பி இருக்கு.” என்றான் அவன் கடுப்புடன்.

அவளுக்கு இருந்த கோபம், ஊடல், உரசல் எல்லாம் போய்ச் சிரிப்பு வந்துவிடும் போலிருந்தது. இன்னுமே நன்றாக அவனை முறைத்தாள்.

“தம்பிக்கு பகிடி. அவரின்ர கதையை விட்டுட்டு நீ சொல்லு பிள்ளை, உனக்கு என்ன பெயரம்மா?”

“ஆரணி ஆன்ட்டி.” என்று திரும்பிப் பார்த்துச் சொன்னாள். அவரின் அருகில் அமர்ந்திருந்த அவரின் கணவரைப் பார்த்து முறுவலித்தாள். அதுவே போதுமாக இருந்தது அந்த அம்மாவுக்கு. என்ன செய்கிறாள்? ஏன் தனியாகக் கொழும்பு வந்தாள் என்று அவளின் வாழ்க்கையையே பிடுங்கியிருந்தார்.

கூடவே, “ஒரு செத்த வீடம்மா. இவரின்ர மச்சானாரின்ர மாமா. தூரத்துச் சொந்தம் தான். எண்டாலும் கேள்விப்பட்ட பிறகு வராம இருக்கிறது சரியில்லை எல்லோ. அதுதான் ஒரு எட்டு வந்திட்டுத் திரும்புறோம்.” என்று, அவள் கேட்காத விபரத்தையும் தந்தார்.

“எங்களுக்கு ரெண்டு மகன்மார் மட்டும் தான். மூத்தவன் சுவிஸ். சின்னவன் பிரான்ஸ். பிள்ளை குட்டி எண்டு இருக்கிறாங்கள். வருசத்தில ஒருக்கா மூண்டு மாதத்துக்கு ரெண்டு பிள்ளைகளிட்டயும் போயிட்டு வருவம். மற்றும்படி இங்கதான். அங்கிளுக்கு நடக்கேலாது. கால் வீங்கிடும். அதால தூர பயணம் எண்டா வாகனம் தான் பிடிக்கிறது. இவ்வளவு நாளும் ராமன் எண்டு, எங்கட வீட்டுக்குப் பக்கத்திலேயே ஒரு தம்பி இருக்கிறார். அவரைத்தான் பிடிக்கிறனாங்க. அவர் வேற ஒரு ஹயர்ல நிக்கிறாராம் எண்டு உன்ர மனுசனை அவர்தான் பிடிச்சு விட்டவர். இளம் பெடியா இருக்கிறார். வாகனத்தை எப்பிடி ஓட்டுவாரோ தெரியாது எண்டு பயந்துகொண்டுதான் ஏறினாங்க. ஆனா, நிகேதன் நிதானமா அளவான வேகத்தில் கூட்டிக்கொண்டு வந்தவராச்சி. நேரா நேரத்துக்குச் சாப்பாட்டுக்கு, பாத்ரூமுக்கு எண்டு ஒண்டும் மறக்க இல்ல. நல்ல பிள்ளை..” என்று சிலாகித்து நற்சான்று வழங்கினார், அவர்.
 

நிதனிபிரபு

Administrator
Staff member
அவரின் நல்ல பிள்ளையில் அவளுக்குச் சிரிப்பு வரும் போலிருந்தது. இந்த நல்ல பிள்ளையைப் பற்றி அவளுக்குத்தானே தெரியும். நிகேதனை ஒருமுறை நன்றாகப் பார்த்தாள். மீசைக்கடியில் இருந்த அவன் உதடுகளின் அசைவு அவனும் அந்த நல்ல பிள்ளையில் சிரிக்கிறான் என்று விளங்கியது. ஆனால், அவன் நல்ல பிள்ளை என்று அவளுக்கும் தெரியப்போய்த்தானே துரத்தித் துரத்திக் காதல் சொல்லிக் கைப்பிடித்தாள். என்ன இப்போதெல்லாம் அந்த நல்ல பிள்ளைக்குக் கொஞ்சம் அதிகமாகக் கோபம் வருகிறது.

“மூண்டு வருசமா இதுதான் எங்கட தொழில் ஆன்ட்டி. நிறைய ஆக்சிடெண்ட்ஸ் நடக்கிறத பாக்கிறம் தானே. அதோட, நீங்க சொன்ன மாதிரி நிதானமா ஓடினாத்தானே திரும்பவும் நீங்க எங்களைக் கூப்பிடுவீங்க. அப்பிடியே எங்கட உயிரும் எங்களுக்கு முக்கியம் எல்லோ.” இப்படியே நகர்ந்தது பேச்சு.

என்னவோ மனதிலிருந்த பாரம் கூடச் சற்றே விலகிய உணர்வு. இன்னுமே இருவரும் நேரடியாகப் பேசிக்கொள்ளவில்லை தான். ஆனாலும் ஆறுதலாக உணர்ந்தனர். கோபம் மட்டுப்பட ஆரம்பித்திருந்தது.

“பசிக்குது நிக்கி. எங்கயாவது நிப்பாட்டு. சாப்பிட்டுப் போவம்.” என்று, அவர்களின் பேசாமையை முடிவுக்குக் கொண்டுவந்தாள் ஆரணி.

“இதென்ன பிள்ளை, மனுசனை வா போ எண்டு கதைக்கிற பழக்கம்?” என்றார் அந்த அம்மா பின்னுக்கு இருந்து.

“இந்த உலகத்தில இருக்கிற ஒட்டுமொத்த சொந்தமும் எனக்கு அவன்தான் ஆன்ட்டி. அப்பிடி இருக்கேக்க கதைக்கிறதில என்ன இருக்கு?” என்றாள் அவள்.

நிகேதனின் பார்வை ஒருமுறை அவளைத் தொட்டு மீண்டது.

“எண்டாலும்..” என்று ஆரம்பித்தவரை, “நீ கொஞ்சம் சும்மா இரப்பா. அதுகள் இந்தக்காலத்துப் பிள்ளைகள். அதுகளிட்ட போய் எங்கட காலத்து நடைமுறையைச் சொல்லிக்கொண்டு இருக்காத.” என்று அடக்கினார் அவரின் கணவர். இதற்குள் நிகேதன் ஒரு உணவகம் பார்த்து வேனை நிறுத்தி இருந்தான்.

ஆரணிக்கு நிறையப் பசித்தது. இந்த மூன்று நாட்களும் சாப்பிடாததைச் சேர்த்து வைத்துச் சாப்பிட்டாள். வாகனம் ஓடவேண்டும் என்பதில் இரண்டு ரோலும் பால் தேனீருடனும் நிறுத்திக்கொண்டான் நிகேதன். தன்னுடைய தட்டில் இருந்த இன்னொரு ரோலை எடுத்து அவளுக்கு வைத்தான்.

“எனக்குக் காணும் நீ சாப்பிடு.” என்றாள் அவள். அவன் ஒரு பார்வை பார்க்க, அதைப் பாதிபாதியாக்கி அவனுக்கு ஒரு பாதியைக் கொடுத்தாள்.

உணவை முடித்துக்கொண்டு அவர்கள் மீண்டும் புறப்பட்டபோது, உண்ட களையா இருளின் ஏகாந்தமா என்னவோ அந்த அம்மா கூட அதன் பிறகு பெரிதாகப் பேசவில்லை. அழகான அமைதி. இருண்ட பொழுது. அவ்வப்போது மாத்திரம் கடந்துபோன வாகனங்கள். நீண்ட நெடுஞ்சாலை. அதில் வாகனத்தின் விளக்குகள் மாத்திரம் ஒளியைப் பாய்ச்ச, மெல்லிசை மனதை நிறைக்க, அவனருகில் அமர்ந்து வருவதே போதுமாக இருந்தது ஆரணிக்கு.

பின்னால் இருந்தவர்கள் உறங்கிவிட்டது தெரிந்தது. வாகனம் சீரான வேகத்தில் சென்று கொண்டிருக்க, நிகேதனின் கரம் ஒன்று நீண்டு வந்து அவளின் விரல்களைப் பற்றியது. அவனைத் திரும்பிப் பார்த்தாள் ஆரணி. அவனும் அவளைத்தான் பார்த்தான். விழிகள் நான்கும் இரண்டரக் கலந்தன. வாகனம் ஓட்டுகிறான் என்கிற எச்சரிக்கை உணர்வில் அவள் விழிகள் விலகிற்று. அவன் விரல்கள் அவளின் விரல்களை அழுத்திக் கொடுத்தது. ஆரணியின் விழிகள் ததும்பத் துவங்கின. ஏன் அழுகிறாள் என்று அவளுக்கே தெரியவில்லை. அவனோடு சண்டை என்கிற ஒற்றைப் புள்ளியில் இந்த மூன்று நாட்களாக அலைக்கழிந்து போயிருந்த உள்ளம் தன் பாரத்தை அழுதே கரைக்கத் துடித்தது. அவனறியாமல் யன்னல் புறமாக முகத்தைத் திரும்பிக் கண்களைத் துடைத்துக்கொண்டாலும் வழியும் கண்ணீரை கட்டுப்படுத்தவே முடியவில்லை.

மீண்டும் வீதியோரம் நிறுத்தினான் நிகேதன்.

“என்ன தம்பி?” என்று, விழித்துக் கேட்டார் அந்த அங்கிள்.

“முகம் கழுவிக்கொண்டு வரப்போறன் அங்கிள். அஞ்சு நிமிசத்தில வெளிக்கிடலாம்.” என்றான் நிகேதன்.

“ஒரு அவசரமும் இல்ல. நீங்க நிதானமா வாங்கோ.” என்றுவிட்டு மீண்டும் தலையைச் சீட்டில் சாய்த்துக்கொண்டார் அவர்.

“இறங்கி வா!” என்றான் ஆரணியிடம். இருள் தம்மை மறைக்கும் தூரம் வந்ததும், “என்னடி பிரச்சனை உனக்கு?” என்று அதட்டினான்.

அவள் பேசாமல் நின்றாள். அவளை நெருங்கி, “ஆரா என்னைப்பார்!” என்றான். அவள் பார்க்க மறுத்தாள். அவன் உதட்டினில் மெல்லிய சிரிப்பு அரும்பியது. யாரும் தம்மைக் கவனிக்கிறார்களா என்று பார்த்தான். அந்த நடுச் சாமத்தில் தெரு நாய்கள் கூட அவர்களைக் கவனிக்கத் தயாராயில்லை.

“பாக்க மாட்ட.. அவ்வளவு கோபம்?” என்றபடி அவளை அணைத்தான். இவ்வளவு நேரமாக முறுக்கிக்கொண்டு நின்றுவிட்டு இப்போது மட்டும் என்னவாம் என்கிற கோபத்துடன் அவள் விலக முயன்றாள்.

“மூண்டு நாள் ஆச்சடி..” என்ற அவனின் கிசுகிசுப்பில் அப்படியே அடங்கியவளின் விழிகள் மீண்டும் உடைப்பெடுத்தது. அதைப் பார்த்து அவனுக்கு மீண்டும் கோபம் வந்தது. “அழாத ஆரா! விசர் வருது. இப்ப என்ன? செய்த பிழைக்குக் கால்ல விழாவா?” என்றான். அவளுக்கு அழுகை போய்ச் சிரிப்பு வந்தது. “விழு!” என்றாள் அவனின் அணைப்புக்குள் இருந்தபடியே.

“வீட்ட வா. விழுறன்!” கள்ளச் சிரிப்புடன் சொல்லிவிட்டு விலகப்போனவனை விடவில்லை ஆரணி. “கட்டிப்பிடி நிக்கி!” என்றாள் அவனை இறுக்கமாகக் கட்டிக்கொண்டு.

யாரும் பார்க்கச் சந்தர்ப்பம் இல்லை என்றாலும் விழிகளைச் சுழற்றியபடி, “பப்ளிக் பிளேஸ் ஆரா. உன்ன சமாதானம் செய்யக் கூட்டிக்கொண்டு வந்தா என்ன இது?” என்றான் அவன்.

“உன்ன என்ன அம்மா அப்பா விளையாட்டா விளையாட சொன்னான்? ஒரு கட்டிப்பிடி வைத்தியம் தானே?”

“உன்ன..” என்று முறைத்துவிட்டு ஒரு இறுக்கமான அணைப்போடு மின்னல் முத்தம் ஒன்றையும் அவளின் இதழ்களுக்கு வழங்கிவிட்டு, “வாடி!” என்று இழுத்துக்கொண்டு போனான்.

அதன்பிறகு ஆரணியின் அட்டகாசத்துக்கு அளவில்லாமல் போயிற்று. பல இடங்களில் அவனை முகம் கழுவ அவள் இறக்கினாள். கட்டிப்பிடி வைத்தியங்கள் காதலோடு இருளின் மறைவில் நடந்தேறின. ஒரு வழியாக அவர்களை இறக்கிவிட்டு வீடு வந்து சேர்ந்தனர். இரவு முழுக்க ஒரு துளி உறக்கமில்லை. ஆனாலும் இருவருக்கும் சோர்வு மருந்துக்கும் இல்லை. பயணக்களைத் தீர குளித்துவிட்டுப் படுக்கையில் விழுந்தவளை வேகமாக நெருங்கினான் நிகேதன்.

வழமையான எல்லைகளை இன்று அவன் தாண்ட முயலவும், “டேய்!” என்றாள் ஆரணி எச்சரிப்பாக.

அவன் அடங்க மறுத்தான். “கட்டிப்பிடி கட்டிப்பிடி எண்டு சும்மா இருந்தவன தூண்டிவிட்டுட்டு இப்ப என்ன?” என்று முறைத்தான்.

“இன்னும் கயலின்ர கலியாணம் முடியேல்ல.”

“இது நடந்தா அது நடக்காதோ?”

“அது முடிஞ்ச பிறகுதான்..”

“அதெல்லாம் முடியும் நீ பேசாம இரு. வந்திட்டா கத சொல்லிக்கொண்டு.” என்றவன் தன் விரதத்தை முடித்துக்கொள்வதில் முனைந்தான். இந்தச் சண்டையில் அலைபாய்ந்து போயிருந்த அவள் மனதும் ஆனந்தமாய் அவனுக்கு இணங்கிற்று.
 

Goms

Active member
அப்பாடி ஒரு வழியா சண்டை முடிவுக்கு வந்தது. சேரவும் சேர்ந்தாச்சு. Super 🤩 🥰 🥳 🥳
 

Google Typing

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.

Top Bottom