• நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.
    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

அவள் ஆரணி - 30

நிதனிபிரபு

Administrator
Staff member
அத்தியாயம் 30

அந்த ஒரு மாதத்தையும் கடத்துவதற்குள் ஆரணி திணறிப்போனாள். கைபேசியில் கூடப் பேச முடியாத நிலை. எந்த நேரமும் பிரச்சாரமும் கோஷமும் சுற்றிவர ஆட்களும் இருந்ததில் மெசேஜ் மட்டுமே அனுப்பிக்கொள்ள முடிந்தது. எப்போதாவது சொட்டு நீர் பாசனம் போன்று சில நொடித்துளிகள் பேசிவிட்டு வைத்துவிடுவான்.

அவனைப் பாராமல் அவன் குரலைக் கேளாமல் அவனின் அண்மையை அனுபவிக்காமல் அரைவாசியாகிப் போனாள் ஆரணி. அவனுடைய பாசம், கோபம், அதட்டல், உருட்டல் எல்லாவற்றுக்குமே மனம் ஏங்கிப் போயிற்று.
செண்டருக்கு போய்வந்ததில் பகல் பொழுதுகள் எப்படியோ ஓடின. மாலையும் இரவும் தான் வாட்டியது. வார இறுதிகளில் கயலும் ராகவனும் வந்து போனார்கள். யார் வந்தால் என்ன? அவளுடன் பேச யாருமே தயாராக இல்லையே. ராகவன் மட்டும் அவ்வப்போது பேசுவான். அவனுக்கும், சனி ஞாயிறுகளில் மட்டுமே பார்க்கிற மனைவியோடு பொழுதை செலவழிக்கவே நேரம் சரியாக இருந்தது.

ஒருவழியாக ஒரு மாதம் முடிந்து வீடு வந்த நிகேதன் ஆரணியைப் பார்த்து அதிர்ந்து போனான். அன்னையிடம் இரண்டு வார்த்தைகள் பேசிவிட்டு அறைக்குள் வந்ததுமே, “என்னடி இது கோலம்? நான் என்ன வனவாசமா போனனான். ஒரு மாதத்துக்கு ஆள் பாதியாகிப்போய் இருக்கிறாய்?” என்று கடிந்துகொண்டான்.

“என்னைத் தனியா விட்டுட்டு போனவன் நீ. நீ கதைக்காத!” குரல் அடைக்க மொழிந்தவள் தன்னால் முடிந்தவரையில் அவனை இறுக்கமாகக் கட்டிக்கொண்டாள். முகமெங்கும் முத்தமிட்டாள். மார்பில் முகத்தை அழுத்திப் புதைத்தாள். அவள் விழிகளில் மெல்லிய நீர்ப்படலம். மூக்குநுனி அழுகையை அடக்கியதில் சிவந்து போயிற்று. அவன் கைகளும் அவளைத் தானாக வளைத்துக்கொள்ள, “என்ன ஆரா?” என்றான் ஆதுரமாக.

“உன்ன பாக்காம உன்னோட கதைக்காம விசர் வந்திட்டுது நிக்ஸ்.”

கனிவோடு சிரித்தான் அவன். “நான் மட்டும் சந்தோசமாவா இருந்தன்? காசுக்காகப் பல்லைக் கடிச்சுக்கொண்டு நிண்டுட்டு ஓடிவாறன்.” தானும் ஒருமுறை ஏக்கம் தீர அவளை இறுக்கி அணைத்து விடுவித்தான். அப்போதும் அவள் விலக மறுக்க, “அதுதான் வந்திட்டன் தானே. தள்ளு! குளிச்சிட்டு ஓடிவாறன். வேர்வை நாறுது!” என்றுவிட்டு கையோடு கொண்டுவந்திருந்த பையை எடுத்து அவளிடம் கொடுத்தாள்.

பிரித்துப் பார்த்தவள் விழிகளை விரித்தாள். “என்னடா இவ்வளவு இருக்கு?” அந்தளவில் தாராளமாகக் கொடுத்திருந்தார்கள்.

“இருக்காம? இதுக்குத்தானே உன்னையும் விட்டுட்டுப்போய் அந்தப்பாடு பட்டது. கவனமா எடுத்து வை. நாளைக்கு முதல் வேலையா வட்டிக்காரனுக்குக் கொண்டுபோய்க் குடுக்க வேணும்.” என்றான் உடைகளைக் களைந்துகொண்டே.

“இதையும் குடுத்தா முக்கால்வாசி முடிஞ்சிடும் என்னடா?”

“ம்ம். சுகிர்தன் இந்த ட்ரிப்ல அவன் உழைச்சதையும் தாறன் எண்டு சொன்னவன். அவனுக்கு அவன்ர கலியாணத்துக்குத் திருப்பித் தந்தா போதுமாம். இன்னொரு ஆறுமாதத்துக்கு வாகனங்கள் பெரிய பிரச்சனை தராம உழைச்சு தந்தா வட்டிப் பிரச்னையை முடிச்சிடலாம்.” என்றவனுக்கு மிகப்பெரிய ஆசுவாசம். பிறகும் கடன் இருக்கும் தான். அது ஆளையே அடித்து விழுங்கும் கடன் இல்லையே.

ஆரணிக்கும் சந்தோசமாக இருந்தது. ஆனால், ஆறுமாதம் என்பது இன்றைக்கு இருண்டு நாளை விடுகிற விடியல் அல்லவே. ஆ...று மாதங்கள். அந்த ஆறு மாதங்களும் மெல்ல மெல்ல கரையத் தொடங்கியது.

கயலுக்கு மாற்றல் கிடைத்து இங்கேயே வந்து சேர்ந்தாள். ராகவனுக்கும் அவளுக்கும் அமராவதி அம்மாவின் அறை கொடுக்கப்பட்டுவிட அவரின் வாசம் ஹால் என்றாகிப் போனது. எல்லோருக்குமே அது ஒருவித சிரமத்தைத்தான் உண்டாக்கிற்று. ஆனாலும் அந்தச் சின்ன வீட்டில் வேறு வழியும் இல்லை என்று பொறுத்தனர்.

அன்று, வழமை போன்று நிகேதனுக்கு அதிகாலை ட்ரிப் இருந்தது. நேரத்துக்கே எழுந்து டோஸ்ட்டை மெல்லிய சூட்டில் இரண்டு பக்கமும் வாட்டி, அதற்கு நுட்டெல்லா பூசி அவனுக்கும் அவளுக்குமாகத் தேநீரையும் சேர்த்து எடுத்துக்கொண்டு அறைக்கு வந்தாள், ஆரணி.

ரகசியக் குரலில் சிரிப்பும் கதைப்பும் சீண்டலுமாக வெகு அழகாகக் கழிந்துகொண்டிருந்தது அவர்களுக்கேயான அந்த நேரம். சற்று நேரத்தில் எழுந்து வந்து எட்டிப் பார்த்தார், அமராவதி. நிகேதனை ஒட்டிக்கொண்டு கட்டிலில் அமர்ந்திருந்த ஆரணிக்கு ஒரு மாதிரி ஆகிப்போயிற்று. காலைப்பொழுதில் கதவைப் பூட்டி வைப்பது அழகில்லை என்று அவள் சாற்றி வைத்தால் இப்படித் திறந்துகொண்டு வருவதா? நிகேதனை முறைத்துவிட்டு விலகி அமர்ந்தாள்.

“என்னம்மா?” என்றான் அவனும் சற்றுச் சூடான குரலில். அந்த என்னம்மாவில், ‘என்னம்மா இதெல்லாம்’ என்பது அடங்கிக்கிடந்தது.

அதை அலட்சியம் செய்து, “உன்ர மனுசி அங்கேயும் இங்கயும் ஓடித்திரிஞ்சா என்னெண்டு படுக்கிறது?” என்று கேட்டுக்கொண்டே உள்ளுக்கு வந்தார், அவர். ஆரணி கொதிநிலையின் உச்சத்துக்கே போய்க்கொண்டிருந்தாள். ஒரு வேகப்பார்வையால் அவளை ஆற்றுப்படுத்தினான், அவன்.

கண்ணாடி அணிந்திராததில் அருகில் வந்து என்ன சாப்பிடுகிறார்கள் என்று குனிந்து பார்த்துவிட்டு, “விடியகாலம இந்த இனிப்ப அவனுக்குக் குடுத்து சுகர் வரவைக்கப் போறியா நீ? என்னடா இது? அவள் நஞ்சை தந்தாலும் சாப்பிடுவியா?” என்றார் அதட்டல் குரலில்.

புருவங்களைச் சுளித்தான் நிகேதன். “என்ன கதை இது நஞ்சு அது இது எண்டு? நான் கேட்டுத்தான் அவள் கொண்டுவந்தவள். நீங்க போய்ப் படுங்கம்மா!” என்றான் எரிச்சலுடன்.

“நீ கேட்டா தருவாளா? உனக்கு இனிப்பு பிடிக்காதே. இதையெல்லாம் தந்து பழக்கி உன்னையும் கெடுத்திட்டாள் போல. மனுசன்ல அக்கறை இருந்தா கொஞ்சம் நேரத்துக்கு எழும்பி சமைச்சா என்னவாம்?”

ஆரணிக்கு அன்றைய நாளின் ஆரம்பமே கெட்டுப்போயிற்று. வந்த கோபத்தை அடக்கிக்கொண்டு அவருக்கு ஒன்றும் சொல்லாமல் விறு விறு என்று எழுந்து வெளியே வந்தாள். அவள் வாயை திறந்தால் நிச்சயம் அது சண்டையாக மாறும். அது கடைசியில் அவனுக்கும் அவளுக்குமான உரசலில் தான் போய்முடியும். அதைத் தவிர்த்துவிட்டாலும் மனம் புகைந்து தள்ளியது.

அதன் பிறகும் இதேதான் நடந்தது. “முழிப்பு வந்திட்டுது தம்பி!” என்று அவள் எழும்பும்போதே அவரும் எழுந்துகொண்டார்.

உண்மையாகவும் இருக்கலாம். ஹாலில் படுக்கிறவரை அவர்களின் நடமாட்டம் எழுப்பிவிடலாம். ஆனால், அவனுக்கும் அவளுக்கும் மட்டுமேயான தனிமைப் பொழுதை அவர் ஆக்கிரமித்துக் கொள்வது அவளுக்குப் பிடிக்கவில்லை. அவர் அறைக்கு வருவது அதைவிடப் பிடிக்கவில்லை. அதில் உணவை ஹாலுக்கே மாற்றினாள்.

அவனோடான தன் பொழுதுகள் வெகுவாக குறைந்துபோனதில் தன் நிம்மதியைத் தொலைக்கத் தொடங்கினாள், ஆரணி. நிகேதனுக்கும் மிகுந்த வருத்தம் தான். இது அமராவதியாகப் புரிந்து நடக்கவேண்டிய ஒன்று. அவரிடம் போய் இதைப்பற்றி அவன் பேசுவதே அழகற்ற செயல். அதில் அவனும் தனக்குள் இறுகினான்.

இப்படி அவர்களுக்கான தனிமை, அவர்களின் சந்தோசங்கள் எல்லாமே மெல்ல மெல்லப் பறிபோனது. இருவருக்குமே பகல்கள் வேலையில் கரைந்தன. வெளியே அமராவதி இருக்கிறார், எதுவும் கேட்டுவிடுமோ என்கிற பயத்தில் இனிமையான பேச்சும் சிரிப்பும் இல்லாமல் இயந்திரமாய் மாறிப்போன இரவுகள் கசந்து வழிந்தன. ஆரணியை ஒருவித எரிச்சல் தாக்கத் தொடங்கியது.

இது கயலுக்கு என்று கொடுத்த வீடு. அவளைப் போ என்று சொல்ல அவர்களுக்கு உரிமையில்லை. அவர்கள் தான் வேறு வீடு பார்க்க வேண்டியவர்கள். இதை எப்படி நிகேதனிடம் கேட்பது? அவன் கடன் கொடுப்பதில் ஓடிக்கொண்டு இருந்தான். வேறு வீடு என்றால் அதற்கு வாடகை கொடுக்க வேண்டும். தளபாடப் பொருட்கள் எல்லாமே புதிது வாங்கவேண்டும். எல்லாமே காசில் தங்கி இருந்தது. வேறு வழியில்லை. கடன் முடிகிற வரைக்கும் பல்லைக் கடித்துப் பொறுக்கத்தான் வேண்டும்.

அன்றைக்கு நிகேதன் வீடு வரும்போது ஆரணியின் முகம் வாடிப்போயிருந்தது. எல்லோரும் ஹாலில் இருந்ததில் என்ன என்று பார்வையாலேயே கேட்டான். அவள் ஒன்றுமில்லை என்று தலையை ஆட்டினாள். அவனுக்கு அவளைத் தெரியாதா? “என்னடி?” என்றான் தனியாகத் தள்ளிக்கொண்டுபோய்.

“பீரியட்ஸ் வந்திட்டுது.” என்றாள் கண்கள் கலங்க.

அவர்களின் தாம்பத்யம் ஆரம்பித்ததில் இருந்தே குழந்தையை வெகு ஆவலாக எதிர்பார்த்துக்கொண்டு இருக்கிறாள் அவள். அவனுக்கும் அந்த ஆவல் மிகுந்துதான் இருந்தது. பிந்திக்கொண்டே போவதில் அவன் காட்டிக்கொள்வதில்லை. இப்போதும் ஒரு ஏமாற்றம் மனத்தைக் கவ்வியது. இருந்தும் அதை மறைத்து, “அதுக்கு என்னத்துக்கு இவ்வளவு சோகம்? ஏலாம இருக்கா?” என்றான் அவளின் வயிற்றைத் தடவிவிட்டபடி.

“ப்ச்! அதெல்லாம் ஒண்டும் இல்ல. ரெண்டு நாள் லேட்டாகவும் சந்தோசமா இருந்தது.”

நம்பி ஏமாந்து இருக்கிறாள். இந்த வாரம் முழுவதும் அவனையும் நெருங்க விடவில்லை. அவனுக்கும் தெரியும். அவள் நெற்றியில் முத்தமிட்டு, “அப்ப ஐயான்ர காட்டுல இன்னும் மழைதான் எண்டுற?” என்று கேட்டுச் சிரித்தான் அவன்.

“போ நிக்கி! எனக்கு உண்மையாவே சரியான கவலையா இருக்கு. ஒரு மாதம் ரெண்டு மாதம் எண்டா பரவாயில்ல. ஆறுமாதம் தாண்டுது.” அவளின் விழிகள் தளும்பிப் போயிற்று. வீட்டுக்கு வந்து போகிறவர்கள், அறிந்தவர்கள், தெரிந்தவர்கள் கூட விசாரிக்கிற அளவுக்கு வந்தாயிற்றே.

தன் விளையாட்டை விட்டுவிட்டு அவளை முறைத்தான் அவன். “அடியேய் மொக்குச்சி! சும்மா கண்ண கசக்காத. இன்னும் கொஞ்சக் காலம் அனுபவிங்கடா எண்டு கடவுள் சொல்லுறார். உனக்கு அது விளங்க இல்லையா? அதெல்லாம் நடக்கிற நேரம் நடக்கட்டும். அதுவரைக்கும் சந்தோசமா இருப்பம்.” என்றான் அவளின் மூக்கோடு மூக்கை உரசியபடி.

“எங்க அனுபவிக்கிறது? கதைக்கவும் ஏலாது சிரிக்கவும் ஏலாது. என்னவோ எல்லாமே இயந்திரத்தனமா மாறின மாதிரி இருக்கு நிக்கி. வர வர எனக்கு ஒண்டுமே பிடிக்க இல்ல” என்றாள் குரல் அடைக்க.

அவன் நிலையும் அதேதான். என்ன செய்வது என்று தெரியாத நிலையில் பதிலற்று நின்றான். அவளோ, “எங்களுக்கு பேபி கிடைக்கும் தானே நிக்கி? எனக்கு உண்மையா பயமா இருக்கடா. என்ர அம்மா அப்பாவில இருந்து மாமி வரைக்கும் எல்லாருக்கும் என்னில கோவம். எல்லாரும் திட்டித் திட்டி எனக்கு..” எனும்போதே அவள் குரல் உடையவும் அவன் துடித்துப்போனான்.

“ஆராம்மா.. என்னடி நீ?” என்றபடி அவளை அணைத்துக்கொண்டான். “அது எப்பிடி எங்களுக்குக் கிடைக்காம போகுமாம்? கடவுள் அந்தளவுக்குப் பொல்லாதவர் இல்ல. கட்டாயம் உன்ன மாதிரி ஒரு பேபி என்னை மாதிரி ஒரு பேபி எண்டு அதெல்லாம் கிடைக்கும். நீ மனத போட்டு குழப்பாத.” என்று தேற்றினான். இப்படி உடைக்கிறவள் அல்லவே அவள். என்னாயிற்று? அவன் மனமும் கலங்கிப் போயிற்று. என்னென்னவோ சொல்லித் தேற்றினான்.

ஒரு ஞாயிற்றுக்கிழமை வெளியே போக ஆரணியைத் தயாராகச் சொன்னான் நிகேதன். அப்போது அவனிடம் வந்து நின்றாள் கயல்.
 

நிதனிபிரபு

Administrator
Staff member
“அண்ணா.. அது.. எங்களுக்கு உங்கட அறைய தாறீங்களா?”

நிகேதனுக்கு அவளின் கேள்வி புரியவில்லை. அவர்களின் அறைக்கு என்ன குறை? அப்போதுதான் குளித்துவிட்டு வந்த ஆரணியிடம் பார்வை சென்றுவர, தங்கையைத் திரும்பிக் கேள்வியாகப் பார்த்தான்.

“இல்ல.. இவருக்கு உங்கட அறை பிடிச்சிருக்காம். தோட்டத்துக்குப் போகக் கதவு இருக்கு. விருப்பமான நேரம் வெளிலயும் இருக்கலாம் எண்டு சொன்னவர். அதுதான்..” என்றாள் அவள்.

நிகேதன் ஆரணி இருவருக்குமே அதிர்ச்சிதான். என்ன சொல்வது என்று தெரியாமல் நிகேதன் நிற்க, “ஏய் கயல். அதெல்லாம் தரேலாது. நான் மெனக்கெட்டு டெரெஸ் எல்லாம் செய்து வச்சிருக்கிறன். அது எங்கட அறை.” என்று இலகுவாகவே மறுத்தாள், ஆரணி.

அவளுக்குப் பதில் சொல்லாது, “அண்ணா பிளீஸ்..” என்றாள் கயல். அதுவே ஆரணிக்குக் கோபத்தை உண்டாக்கிற்று. ஆனாலும் அடக்கிக்கொண்டு, “நான் இந்த வீட்டுக்கு வந்த நாளில இருந்து அந்த அறையில தான் இருக்கிறன். என்னால உங்கட அறைக்கு மாறேலாது கயல். நீயும் கொஞ்சம் என்னை விளங்கிக்கொள்ளு, பிளீஸ்!” என்றாள் ஆரணி.

மனதில் பாரமேற தன்னுடையவளைப் பார்த்தான், நிகேதன். அந்த அறையை அவளுக்கு எவ்வளவு பிடிக்கும் என்று அவனுக்கும் தெரியும். வீடு என்று அந்த வீட்டைச் சொன்னாலும் அவளின் வீடு அந்த அறை தான். ஆரணியும் சம்மதித்துவிடாதே என்று விழிகளால் அவனிடம் கெஞ்சிக்கொண்டிருந்தாள்.

அந்தப் பார்வையில் தமையன் மறுத்துவிடப் போகிறாரோ என்று பயந்துபோனாள், கயல்.

“அண்ணா பிளீஸ் அண்ணா. இவர் ஆசையா கேட்டவர். அதுதான்..” இப்படிக் கேட்கிற தங்கையிடம் எப்படி மறுப்பது என்று தெரியாமல் நின்றான், நிகேதன்.

“நிக்கி பிளீஸ். ஓம் எண்டு சொல்லாத. என்னால எங்கட அறையைக் குடுக்கேலாது.”

அவன் தங்கையைப் பார்த்தான். அவன் முகம் பாராமல், “எனக்கு வேணும் அண்ணா.” என்றாள் அவள்.

“இல்ல கயல்..”

“ஆரா பேசாம இரு! ரெண்டு நாள் டைம் தா. நான் மாறுறன்.” எதையும் காட்டிக்கொள்ளாத குரலில் சொல்லி விடயத்தை முடித்தான், நிகேதன்.

ஆரணி நிகேதனையே பார்த்தாள். அவ்வளவு கெஞ்சியும் சம்மதித்துவிட்டானே. கண்கள் மளுக்கென்று குளமாகிற்று. வேகமாக எழுந்து அவ்விடம் விட்டு அகன்றாள். அவள் பிறந்து வளர்ந்த வீட்டை விட்டு வெளியேறியபோது கூட இந்தளவுக்கு துயருறவில்லை. ஆனால் இன்றைக்கு.. நெஞ்சில் வலி குடைந்தது. உயிரும் உணர்வுமாக வாழ்ந்த அறையை விட்டுத் துரத்துகிறாள் ஒருத்தி. அதற்கு வாயை மூடி அடங்கிப் போகிறான் அவளின் நிகேதன்.

அந்த வலி கோபமாய் உருவெடுக்க ஆரம்பித்தது.

இது அவளின் வீடு. அதனால் தானே இந்த அதிகாரம். அவளின் வீட்டில் இவள் எங்கு இருந்தால் தான் என்ன? கண்ணுக்குத் தெரியாத ஆத்திரமும் அகங்காரமும் பொங்க, விறுவிறு என்று அறைக்குள் புகுந்து தன் உடைகளை எல்லாம் இழுத்து ஒரு பெட்டிக்குள் போடத்தொடங்கினாள்.

நிகேதனுக்கு அவளின் கோபம் புரிந்தது. அவளை எப்படிச் சமாதானம் செய்வது என்றுதான் தெரியவில்லை. “என்ன செய்றாய்?” என்று வினவினான்.

“ஏன் உனக்கு கண் இல்லையா?” என்று திருப்பிக் கேட்டுவிட்டு உடைகளை எடுத்துக் பெட்டிக்குள் வீசினாள்.

“இப்ப என்ன அவசரம்? இன்னும் ரெண்டு நாள் இருக்குத்தானே. நான் செய்றன் நீ விடு.” என்று தோள் தொட்டவனைப் பட்டென்று தட்டிவிட்டாள், ஆரணி.

“தொடாத நிக்கி!”

அவனுக்கும் பொறுமை பறந்தது. “என்னை என்னடி செய்யச் சொல்லுறாய்? நீயும் தானே இருந்தனி. நீ அவ்வளவு கெஞ்சியும் வேணும் எண்டு ஒற்றைக் கால்ல நிக்கிறவளிட்ட சின்னப்பிள்ளை மாதிரி என்னையும் சண்டை பிடிக்கச் சொல்லுறியா?” என்று கேட்டான் அவன்.

“அப்ப என்னை வேற வீட்டுக்குக் கூட்டிக்கொண்டு போ. என்னால அந்த அறையில இருக்கேலாது.” என்றாள் முடிவுபோல்.

அவன் அதிர்ந்து நின்றான். அவனுக்கும் அதுதான் ஓடியது. ஆனால் ஒரு சண்டையில் வெளியேறியதாக இருக்க வேண்டாம் என்று எண்ணினான். ராகவன் புதிதாக அவர்களின் வீட்டுக்கு வந்திருக்கிற வேளையில் இந்தச் சண்டைகள் கயலின் வாழ்வில் பாதிப்பை ஏற்படுத்துமோ என்று பயந்தான். முதலில் வீடு பார்க்க வேண்டும். பொருட்கள் வாங்க வேண்டும். அது ஒன்றும் நினைத்த நொடியில் நடக்கிற காரியம் அல்லவே. எல்லாவற்றையும் விட கோபத்தில் கொந்தளித்துக்கொண்டு நிற்கிறவளை ஆற்றுப்படுத்துவதே முதன்மையாகப் பட்டது.

“அத பிறகு பாப்பம். இப்ப வெளிக்கிடு. வெளில போயிட்டு வந்து செய்யலாம்.” என்றான் அவன் சமாதானக் குரலில்.

“நீயும் உன்ர தங்கச்சியும் செய்த வேலையிலேயே நான் நல்ல சந்தோசமாத்தான் இருக்கிறன். அதால வெளில போகவே தேவையில்லை. நீ வேலைய பார்!” எரிச்சலுடன் சிடுசிடுத்துவிட்டு போய் கயலினியின் அறையைப் படபடவென்று தட்டினாள்.

கதவைத் திறந்தவளிடம், “எனக்கு இண்டைக்கே இந்த அறை வேணும். கெதியா உன்ர சொத்து பத்து எல்லாத்தையும் எடுத்துக்கொண்டு வெளில வா!” என்றாள் உத்தரவாக.

பக்கத்து அறையில் நடந்ததை எல்லாம் கேட்டுக்கொண்டுதானே இருந்தாள். ஆரணியின் கோபத்தில் அவளுக்கு மெல்லிய பயம் உண்டாயிற்று. தேவையில்லாத வேலை பார்த்துவிட்டோமோ என்று இப்போதுதான் யோசித்தாள்.

“இவர் இல்ல அண்ணா..” என்று ஆரணிக்குப் பின்னால் நின்றிருந்த தமையனிடம் அவள் இழுக்க, “ஏய்! என்ன பாத்து கதையடி. அதென்ன நான் கேள்வி கேட்டா அங்க பதில்?” என்றாள் ஆரணி.

திடுக்கிட்டாள் கயலினி. முகமெல்லாம் சிவந்து கண்களில் கோபம் கொப்பளிக்க நின்றிருந்தவளைப் பார்க்க அவளின் பயம் இன்னுமே மிகுந்து போயிற்று. “அண்ணா..” அச்சத்துடன் தமையனை அழைத்தாள்.

மனைவி ஒரு பக்கம் கூடப்பிறந்தவள் மறுபக்கம் என்று நிற்க யாருக்காகப் பேசுவது என்று தெரியாமல் தடுமாறினான் நிகேதன்.

“ஆரா அமைதியா இரு! ராகவனும் வரட்டும் நாங்க இண்டைக்கே மாறுவம்.” என்று, அப்போதும் அவளைச் சமாதானப்படுத்த முயன்றான் அவன்.

“என்னத்துக்கு நான் அமைதியா இருக்கோணும்? எல்லாத்தையுமே உன்ர தங்கச்சிக்கு பாத்து பாத்து செய்தியே, இப்ப வரைக்கும் அவள் என்ன அண்ணி எண்டு சொன்னதே இல்ல. இப்ப சொல்லச் சொல்லு. நான் என்ன கேட்டாலும் உன்னட்ட பதில் சொல்லுறாள். அப்ப நான் ஆரு அவளுக்கு? இப்பவே அவள் என்ன அண்ணி எண்டு கூப்பிட வேணும். நீ அவளுக்கு ஒழுங்கான அண்ணன் எண்டா என்ர வாய அடைக்கிறத விட்டுட்டு அவளை சொல்லச் சொல்லு!”

அவனுக்கு முகம் சிவந்து போனது. தங்கையின் முன்னால் என்ன பேச்சு இது? கயலையும் முறைத்துவிட்டு, “வாடி முதல் அறைக்க!” என்று அவளை இழுத்துக்கொண்டு போனான். “என்னடி பிரச்சினை உனக்கு? ஒரு அறைய மாறச் சொன்னதுக்கு இந்தப் பாடா? சின்ன விசயத்த சும்மா பிரச்சினை ஆகாத ஆரா.”

அப்போதும் தன் தங்கையிடம் அதைப்பற்றிப் பேசாமல் தன்னை அடக்குகிறவனின் செய்கை அவளை இன்னுமே காயப்படுத்திவிட அப்படியே அமைதியானாள். விழிகளை இறுக்கி மூடித் தன்னைச் சமன்படுத்த முனைந்தாள். மனம் கொந்தளித்தது. வெடித்துச் சிதற முயன்றது. ஆனாலும் அடக்கினாள்!

அவளின் கோலம் நிகேதனின் நெஞ்சைப் பிசைந்தது. “ஆரா..” தவிப்புடன் அவளை நோக்கி ஓரடி எடுத்து வைத்தவனை கையை நீட்டித் தடுத்தாள். “சொறி! நான் தான் கொஞ்சம் கூடுதலா கோபப்பட்டுட்டன்!” என்றுவிட்டு அமைதியாகவே தன் பொருட்களை எல்லாம் வெளியே கொண்டுவந்து வைக்கத் தொடங்கினாள்.

அப்படியே நின்றுவிட்டான் நிகேதன். சுனாமியாகக் கொந்தளித்தவள் நொடியில் எப்படி இப்படி அமைதியானாள். அத்தனை கோபதாபங்களையும் தனக்குள் போட்டு அடக்கிக்கொண்டாளா? அவனுக்கு நெஞ்சுக்குள் என்னவோ செய்தது.

வேகமாக வெளியே வந்தான். “ராகவனை கூப்பிடு. இண்டைக்கே அறையை மாத்துவம்.” என்றவன் நிதானமாகக் கயலினியின் முகம் பார்த்தான்.

அவளின் பார்வை தானாக நிலம் நோக்கிற்று.

“அவளை அண்ணி எண்டு கூப்பிட விருப்பம் இல்லாட்டி இனி என்னையும் அண்ணா எண்டு சொல்லாத!” என்றுவிட்டு ஆரணியோடு சேர்ந்து பொருட்களை வெளியே கொண்டுவந்து வைக்கத் தொடங்கினான்.

அன்னை வீட்டுக்குச் சென்றுவிட்டு வீடு வந்த ராகவன் நடப்பதைக் கண்டு அதிர்ந்தான்.

“என்ன இதெல்லாம்?”

அவன் முகத்தில் தெரிந்த இறுக்கமே கயலினிக்குள் கலக்கத்தை உண்டாக்கிற்று. “நீங்கதானே அந்த அறை நல்லம் எண்டு சொன்னீங்க?” தயக்கத்துடன் சொன்னாள்.

“உனக்கு என்ன விசரா? சும்மா ஒரு கதைக்குச் சொன்னதைப்போய்ப் பெருசா எடுத்துக்கொண்டு..” என்று சினந்துவிட்டு வேகமாக நிகேதனிடம் ஓடினான்.

“நிகேதன் பிளீஸ், மாறவேண்டாம். அழகா பராமரிச்சு இருந்த டெரெச பாத்திட்டு ஒரு பேச்சுக்குத்தான் சொன்னனான். அத பிடிச்சுக்கொண்டு வந்து கயல் கேப்பாள் எண்டு நினைக்க இல்ல. ஆரணிக்கு இந்த அறையும் டெரசும் எவ்வளவு பிடிக்கும் எண்டு இங்க வந்த கொஞ்ச நாளிலேயே எனக்குத் தெரியும். பிளீஸ் மாறாதீங்க. எப்பவும் மாதிரியே இருப்போம்.” என்றான் மன்னிப்பு கோரும் குரலில்.

நிகேதன் வெறுமையாகப் புன்னகைத்தான். “இல்ல பரவாயில்ல ராகவன். கிட்டத்தட்ட எல்லாத்தையும் வெளில கொண்டு வந்தாச்சு. கட்டிலை மட்டும் தூக்கி போட்டா சரி. அதுக்குக் கொஞ்சம் ஹெல்ப் செய்ங்க, போதும்.” புதிதாக வந்த ராகவனுக்கே ஆரணிக்கு அந்த அறையை மிகவும் பிடிக்கும் என்பது தெரிந்திருகிறது. ஆனால் கயலுக்கு தெரியவில்லை எனும்போது யாரை நொந்து என்ன பயன்?

“ஆரணி சொறி..” ராகவனுக்கு பெரும் சங்கடம். தன்னால் இப்படி ஒரு பிரச்சனை உருவாகிவிட்டதே என்று எண்ணி வெட்கினான்.

“பரவாயில்ல விடுங்கோ.” என்று அவன் முகம் பாராமல் முடித்துக்கொண்டாள் ஆரணி.
 

Goms

Active member
கல்யாணம் வரை ஊமைகொட்டன் மாதிரி இருந்துட்டு இப்போ பிரச்சனையை ஆரம்பிக்கிறாளா கயல்? 🤔
நிக்கி நீ வீடு கட்ட வேண்டிய நேரம் வந்துட்டு. 😍😍
 

Google Typing

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.

Top Bottom