• நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.
    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

அவள் ஆரணி - 33

நிதனிபிரபு

Administrator
Staff member
அத்தியாயம் 33


அன்று, மாலை நான்கு மணிபோல் வீட்டுக்கு வந்தான் நிகேதன். அவன் விழிகள் யாருக்கும் சொல்லாமல் ஆரணியைத் தேடியது. அறை, கிணற்றடி, சமையலறை எங்கும் அவளைக் காணவில்லை. இந்த நேரத்துக்கு செண்டரில் இருந்து வந்திருப்பாள் என்று கணித்துத்தான் வந்தான். இன்னும் வீட்டுக்கு வராமல் என்ன செய்கிறாள்?

எப்போதும் காலையில் அவன் எழுகிற அரவத்துக்கே எழுந்து, அவன் தயாராவதற்குள் உணவு தயாரித்துவிடுவாள். இன்று, அவன் தயாராகியும் அவள் எழுந்துகொள்ளவில்லை என்றதும் அவனுக்கு எழுப்ப மனமில்லை.

அவளருகில் சென்று மெல்ல அமர்ந்தான். இரவிரவாக அழுத்திருக்கிறாள் என்பதற்கு அடையாளமாகக் கண்மடல்கள் வீங்கியிருந்தது. எப்போதும் அவன் மார்புக்குள் ஒண்டிக்கொள்கிறவள் நேற்று அவன் கோபத்தில் இருந்ததில் அநாதரவான குழந்தை ஒன்றினைப் போலத் தனக்குள்ளேயே சுருண்டிருந்தாள்.

ராகவனின் மேலிருந்த கோபத்தை அவளிடம் காட்டிவிட்டது புரிந்தது. அவளின் தலையை வருடிக்கொடுத்தான். தன்னையே உலகமாக நம்பி வாழும் அவளை நோகடித்துவிட்ட தன் முட்டாள் தனத்தை எண்ணி நொந்துகொண்டான்.

நிம்மதியான உறக்கமேனும் அவளுக்குக் கிட்டட்டும் என்கிற கரிசனையுடன் சத்தமிடாமல் எழுந்து வெளியே வந்து அறைக்கதவைச் சாற்றினான். அதற்குள் விழித்திருந்த அமராவதி, “சாப்பிடேல்லையா தம்பி? இன்னும் எழும்பாம உன்ர மனுசி என்ன செய்றாள்?” என்று வினவினார்.

“இரவு லேட்டா சாப்பிட்டது பசி இல்லை அம்மா. அவள் படுக்கட்டும். எழுப்பாதீங்க.” என்றுவிட்டு புறப்பட்டவனைத் தடுத்து நிறுத்திவிட்டு, ஒரு தேநீரை ஊற்றிக்கொண்டுவந்து கொடுத்தார், அவர்.

அதை அருந்திவிட்டுப் புறப்பட்டான் அவன்.

“நில்லன். அஞ்சு நிமிசத்தில சாப்பிட ஏதாவது செய்றன்.” என்றவரிடம் மறுத்துவிட்டு வாசலுக்கு நடந்தான். பின்னாலேயே அவரும் வந்தார்.

அவன் கேள்வியாகப் பார்க்க, “உன்னோட கதைக்கோணும் தம்பி.” என்றார்.

இவருமா என்று மனம் சலித்தது. அவர் சொல்ல முதலே ஆரணியைப் பற்றித்தான் என்பதும் தெரிந்து போயிற்று. உள்ளே ஒரு எரிச்சல் சுறு சுறு என்று எழுந்தாலும் ஒன்றும் சொல்லாமல் நின்றான்.

அவன் முகத்தைப் பார்த்தே அவனைப் படித்தார் அன்னை.

“உன்ர மனுசிய பற்றிச் சொன்னா உனக்குப் பிடிக்காது எண்டு தெரியும். அதாலதான் சொல்லிப் பிரயோசனம் இல்லை எண்டு இவ்வளவு காலமும் விட்டுட்டன். ஆனா இப்ப… என்னால சொல்லாம இருக்கேலாது. முந்தியாவது நாங்க மட்டும் தான் இருந்தோம். என்ர மகன எனக்கு முன்னாலேயே அவள் வாடா போடா எண்டு கதைச்சாலும் பல்லைக் கடிச்சு பொறுத்துபோனன். ஆனா இப்ப ராகவனும் இந்த வீட்டில இருக்கிறார். ராகவனுக்கு முன்னால அவள் உன்ன அப்பிடிக் கதைக்கிறது எனக்குப் பிடிக்கேல்ல. நாளைக்கு அந்தப் பெடியனும் உன்ன மதிக்காது. ஒரு பயம், மரியாதை இருக்காது. அது நல்லதில்லை. நேற்று நீ அவள அடக்காட்டி இன்னும் கதைச்சிருப்பாள். பிறகு எங்களைப் பற்றி ராகவன் என்ன நினைச்சிருக்கும். நீங்க தனியா இருக்கேக்க அவள் எப்பிடி எண்டாலும் கூப்பிடட்டும். ஆட்களுக்கு முன்னால மரியாதையா கதைக்கச் சொல்லு. இதையெல்லாம் என்னால அவளிட்ட போய்ச் சொல்லேலாது. சொன்னேன் எண்டு வை அதுக்கு ஆயிரம் பதில் சொல்லுவாள்.” என்றவரின் பேச்சில் அவனுக்குக் கோபம் வந்தது.

“உங்கட காலத்தில அப்பாவ பெயர் சொல்லிக் கூப்பிட்டு இருக்கிறீங்களாம்மா?”

அவர் மறுத்துத் தலையசைத்தார். “கயல் ராகவனை ரகு எண்டு கூப்பிடுறாள். அது சரியா?”

“என்ன விசர் கதை கதைக்கிறாய்? பெயர் சொல்லிக் கூப்பிடுறதும் டா போட்டுக் கதைக்கிறதும் உனக்கு ஒண்டா?” என்றார் அவர் எரிச்சலுடன்.

“எனக்கு ரெண்டும் ஒண்டுதான். இதெல்லாம் பாக்கிறவையின்ர பார்வையில இருக்கு. அவரவரின்ர மன விசாலத்தில இருக்கு.”

“அதுதானே. அவளைப்பற்றி ஒண்டு சொல்லி எண்டைக்கு நீ கேட்டிருக்கிறாய் இண்டைக்குக் கேக்க? எனக்குச் சுருங்கின மனதாவே இருக்கட்டும். எண்டைக்கோ ஒரு நாள் நீயே பட்டுத் தெளிவாய். அப்ப விளங்கும்! அவளை மாதிரியே உன்னையும் அடங்காபிடாரியா…” எனும்போதே, “அம்மா!” என்று அடக்கப்பட்ட ஆத்திரத்துடன் இரைந்தான் அவன்.

“அவள் என்ர மனுசி. என்ன கதைக்கிறதா இருந்தாலும் யோசிச்சு கதைங்க.” என்றுவிட்டு விறுவிறு என்று வெளியேறியவனுக்கு என்னவோ மனதெங்கும் ஒரே உளைச்சல்.

ஏன் எல்லோரும் அவளையே குறை சொல்கிறார்கள்? அவனுக்குப் புரியவே இல்லை. கொஞ்சம் படபட என்று பேசுவாளே தவிர மனதில் எதையும் வைத்திருக்கத் தெரியாது. கள்ளமில்லை. பொய் இல்லை. தன் அடாவடியில் கூட அன்பைக் கொட்டுகிறவள். அப்படியானவளைப்போய்.. இவர்களின் பேச்சைக் கேட்டு அவனும் கோபப்பட்டு ஆத்திரப்பட்டு அவளை அழவைத்து.. கடவுளே.

அன்று முழுக்க அவள் நினைவாகவே இருந்தது. தான் கோபப்பட்டபோது அடிவாங்கிய குழந்தையாக அவள் கலங்கி நின்ற காட்சியே அவனை வதைத்தது. ‘உனக்கும் ஓவராத்தான் கோவம் வருது நிகேதன். கொஞ்சம் அடக்கு!’ என்று தன்னைத் தானே திட்டியும் கொண்டான். இனியும் சமாளிக்க முடியாது என்று அவளைப் பார்க்க ஓடிவந்தால் அவள் இல்லை.

கைபேசியை எடுத்து அவளுக்கு அழைத்தான்.

“ஹலோ..” மெல்லிய தயக்கம் நிரம்பிய குரலே அவன் நெஞ்சைப் பிசைந்தது. அவன் என்று தெரிந்தாலே, “டேய் நிக்கி!” என்றுதான் கூவுவாள். இன்று யாரோவுக்குப்போல் ஹலோ என்கிறாள்.

“எங்க நிக்கிறாய் ஆரா?”

“இங்க செண்டரில..”

“இன்னும் அங்க நிண்டு என்ன செய்றாய்? ஏதும் பிரச்சனையா? இல்லத்தானே?” அவனுக்கு அந்த நிமிசமே அவளைப் பார்க்க வேண்டும் போலிருந்தது.

அவனுடைய அக்கறையில் அவள் விழிகளை சிமிட்டித் தன்னை அடக்கினாள். “இல்ல. ஆண்டுவிழா பற்றி அபிராமி மிஸ் கூப்பிட்டுக் கதைச்சுக்கொண்டு இருந்தவா. அதுதான்..”

“சரி கவனமா வா. நான் வீட்டுலதான் நிக்கிறன்.” என்றுவிட்டு வைத்தான். இருவருக்குமே மற்றவரின் நினைவுதான்.

அவளின் பேச்சில் விலகல் என்பதை விட மிகுந்த கவனம் தெரிந்தது. அனாவசியமாக ஒரு வார்த்தை வரவில்லை. ‘தயவு செய்து வாயத் திறக்காத’ என்றானே. அதைக் கடைப்பிடிக்கிறாளா அவனின் ஆரா?

மனம் தவித்துப்போக அவளின் வரவுக்காக ஹாலிலேயே வந்து அமர்ந்துகொண்டான். இப்படிப் பகல் பொழுதில் அவனை வீட்டில் காண்பது என்பது அரிதிலும் அரிது என்பதில், “என்ன அண்ணா வீட்டுல நிக்கிறீங்க?” என்று கேட்டாள் கயலினி.

“இண்டைக்கு மட்டக்களப்புக்கு போகவேணும். அதுதான் கொஞ்சம் ரெஸ்ட் எடுத்திட்டு வெளிக்கிடப்போறன்.” என்று பதில் அளித்துவிட்டு, அவள் வைத்தியரிடம் போய் வந்தாளா, அவர் என்ன சொன்னார் என்று அக்கறையாகக் கேட்டுத் தெரிந்துகொண்டான்.

“எத்தனை நாள் ட்ரிப் நிகேதன்? உடனேயே திரும்பி வாறது கஷ்டம் என்ன?” முதல் நாள் சறுக்கலை தானும் நேராக்க அவனோடு வந்திருந்து பேசிக்கொண்டிருந்தான், ராகவன்.

“நாலு நாள். ஒரு கலியாண வீட்டுக்கு ரெண்டு குடும்பம் சேர்ந்து வருகினம். அப்பிடியே மாமாங்கப் பிள்ளையார் கோவில், பீச் எல்லாம் பார்த்துக்கொண்டு வரவாம். இங்க திரும்பி வர அஞ்சு நாள் ஆகிடும்.” இப்படி இவர்கள் பேசிக்கொண்டு இருக்கையிலேயே ஆரணி வந்து சேர்ந்தாள்.
 

நிதனிபிரபு

Administrator
Staff member
அவளின் ஸ்கூட்டியின் சத்தம் கேட்டதுமே நிகேதனின் கவனம் வாசலுக்குப் பாய்ந்தது. வீட்டுக்குள் வந்துகொண்டிருந்தவளின் பூ முகம் வாடியிருக்க இன்னுமே கண் மடல்களின் தடிப்பு இலேசாகத் தெரிந்தது. அவளும் அவனைத்தான் பார்த்தாள். இருவரின் பார்வையும் ஒன்றுடன் ஒன்று கலந்தாலும் உணர்வுகளைப் பரிமாறிக்கொள்ளாமல் மறைத்தன. ராகவனைப் பார்த்து முறுவல் சிந்திவிட்டு அப்படியே ஹாலை கடந்து அறைக்குள் நுழைந்துகொண்டாள்.

நிகேதனுக்கு இருப்புக் கொள்ளவில்லை. எழுந்து உள்ளே செல்ல மனம் உந்தியது. ராகவனும் இருக்கையில் போகமுடியாமல் அங்கேயே அமர்ந்திருந்தான். “உங்கட மற்ற வேன அந்த ட்ரைவர் பெடியன் தான் வச்சிருக்கிறவனா?” என்று கேட்டுக்கொண்டிருந்தான் ராகவன்.

“ம்.. இங்க நிப்பாட்ட இடமும் இல்லத்தானே. அதைவிட ஒவ்வொரு நாளும் அவன் இங்க கொண்டுவந்து விட்டுட்டு பிறகு திரும்ப வந்து எடுக்க வேணும். அது ரெண்டு வேல. அவனே வச்சிருந்தா எங்க போகவேணும் எண்டு சொன்னா நேரத்துக்கே போவான்.” வாய் பதில் சொன்னாலும் ஆரணி குளிக்கக் கிணற்றடிக்கு நடப்பது தெரிந்தது. இது தெரிந்துதான் டேங்கில் தண்ணீர் நிரப்பிவிட்டான்.

அவள் குளித்துவிட்டு வந்து சாப்பிட்டாள். ஒரு வழியாக ராகவனும், “எனக்குக் கொஞ்சம் பேப்பர் கரெக்ஷன் இருக்கு நிகேதன். அத பாக்கப் போறன்.” என்றுவிட்டு எழுந்துகொண்டான்.

‘அப்பாடி… இப்பயாவது விட்டானே..’ யாரும் அறியாமல் மூச்சை இழுத்துவிட்டு அறைக்குள் புகுந்துகொண்டான். வருவாள் பேசுவோம் என்று அவன் காத்திருக்க அவளோ சமையலறையைக் கிண்டிக்கொண்டிருந்தாள்.

‘இவள் ஒருத்தி.. தனியா மாட்டுறாளே இல்ல..’ இனி ஐந்து நாட்களுக்குப் பார்க்க முடியாது. சண்டை வேறு. மனம் வெகுவாகவே அவளின் அண்மையை நாடியது. அவளை சமாதானம் செய்ய உந்தியது. அவளோ அவனைப் புரிந்துகொள்ள மாட்டேன் என்று அடம் பிடித்துக்கொண்டு நிற்கிறாள். கோபத்துடன் வந்து மீண்டும் ஹாலில் அமர்ந்துகொண்டான்.

“எத்தனை மணிக்கு தம்பி வெளிக்கிடுறாய்?” சோபாவில் சாய்ந்திருந்த அமராவதி மகனிடம் விசாரித்தார். ஆரணியிடம் பார்வை ஒருமுறை சென்று வர, “எட்டு மணிபோல வெளிக்கிட்டா காணும் அம்மா. திரும்பி வர ஒரு கிழமை(வாரம்) ஆகும்.” என்றான். அப்போதாவது அவள் அறைக்கு வருவாள் என்று பார்க்க அவள் அசையவே இல்லை. அவன் பல்லைக் கடித்தான்.

அங்கே அவள் அங்கிருந்த அவகாடோ பழங்களை வெட்டி சீனியும் பாலும் சேர்த்து ஜூஸாக்கி கொஞ்சமே கொஞ்சம் ஏலக்காய் பவுடர் தூவி, பெரிய கப் ஒன்றில் நிரப்பி எடுத்துக்கொண்டு வந்து கயலினிக்குக் கொடுத்தாள்.

அதைக் கவனித்துவிட்டு, “இன்னும் இருந்தா அவனுக்கும் குடு.” என்றார் அமராவதி.

“எனக்கு என்னத்துக்கு? சாப்பிட்டதே இன்னும் செமிக்க இல்ல.” என்றான் அவன். கவனம் மட்டும் அவளிலேயே இருந்தது.

“நல்ல கனிஞ்ச பழம் தம்பி. குடி! இந்தப் பக்கம் லேசுல கிடைக்காது. சொல்லிவச்சு வாங்கினான்.”

எந்தக் கதையும் இல்லை. சற்று நேரத்திலேயே ஒரு தட்டில் மூன்று கிளாஸ்களைக் கொண்டுவந்து ராகவனுக்கானதை கயலிடம் கொடுத்துவிட்டு அவருக்கும் அவனுக்கும் நீட்டினாள் அவள். கிளாஸ் எடுக்கும்போது அவள் முகம் பார்த்தான். எந்த உணர்வுமே இல்லை. கல் போன்று இருந்தது.

எந்த நிமிடமும் என்ன நினைக்கிறாளோ அதை அப்படியே கொட்டுகிற அருவி அவள். அப்படிச் சலசலவென்று பாயும் அருவிக்குப் பெரிய பூட்டாகப் பூட்டி அடைத்துவைத்தால் எப்படி இருக்கும்?

“உனக்கு?” நெஞ்சு அடைக்கக் கேட்டான்.

அவள் ஒன்றும் சொல்லாமல் போக, “இன்னொரு கிளாஸ் கொண்டுவா, எனக்கு இது கூட.” என்றான் மீண்டும்.

“அவள் எந்தநேரமும் கிட்சனுக்குத்தானே நிக்கிறாள். வேணும் எண்டால் குடிப்பாள். நீ குடி.” என்றார் அமராவதி.

“கிச்சனுக்க நிண்டா? கண்ட நேரமும் சாப்பிடுற பழக்கம் அவளுக்கு இல்ல.” என்றவன் தானே எழுந்துபோய் ஒரு கிளாஸ் எடுத்துத் தன்னுடையதில் பாதியை வார்த்து அவளுக்கு நீட்டினான்.

“குடி!”

ஜூஸ் தயாரித்த பாத்திரங்களைக் கழுவிக்கொண்டு இருந்தவள் ஒன்றுமே சொல்லவில்லை. வேகமாகக் கையைக் கழுவி அருகிலிருந்த துண்டில் துடைத்துக்கொண்டு வேகமாக வாங்கி ஒரே மூச்சில் வாய்க்குள் ஊற்றிவிட்டு அந்தக் கிளாஸையும் சேர்த்துக் கழுவத் தொடங்கினாள்.

அதிர்ந்து நின்றான் அவன். மறுத்தால் அவன் பிடி என்பான். வற்புறுத்துவான். ‘எதற்கு உன்னோடு ஒரு வாக்குவாதம். நான் குடிக்கோணும். அவ்வளவுதானே. தா! குடிக்கிறேன்’ என்பது போலிருந்தது அவளது செய்கை.

“இரவுக்கு இடியப்பம் சாப்பிட்டா நல்லாருக்கும் என்னம்மா? இறால் தலை போட்டு சொதியும் சம்பலும் நினைக்கவே வாயூருது.” என்று தாயிடம் கேட்டுக்கொண்டே டிவியின் முன்னே போயிருந்தாள், கயலினி.

சட்டென்று தண்ணீரை கொதிக்க வைத்துவிட்டு, மாவை எடுத்துப் பாத்திரத்தில் இட்டுவிட்டு, இடியப்பத் தட்டுகளை மேலிருந்த கப்பபோர்ட்டில் இருந்து எடுத்தாள், ஆரணி.

மாலை உணவுக்கு ஓடர் அவளுக்குக் கொடுக்கப்பட்டிருக்கிறது என்பதையே அவன் அப்போதுதான் உணர்ந்தான். கொடுத்த விதம்?

சுர் என்று ஏறியது. ‘அண்ணி, இண்டைக்கு இடியப்பம் அவிப்பமா?’ என்று கேட்டால் என்னவாம்? கோபத்துடன் அவன் விறாந்தைக்குப் போக முனைய, “ஒரு நிமிசம்!” என்று தடுத்தாள் அவள்.

யாரையோ யாரோ அழைப்பது போல் என்ன இது என்று புருவம் சுழித்துப் பார்த்தான் அவன்.

“ஏதோ ஒண்ட(ஒன்றை) சமைக்கத்தான் போறன். அத அவளுக்குப் பிடிச்சதா சமைச்சிட்டுப் போறன். அத கேக்கப்போய் உன்ர வீட்டுச் சந்தோசத்தை, உன்ர நிம்மதிய எனக்காகக் கெடுக்காத. திரும்பவும் என்னால ஒரு சண்டை இங்க வரவேண்டாம்.” என்று அவன் கண்களைப் பார்த்து சொல்லிவிட்டு திரும்பி வேலையைப் பார்த்தாள், ஆரணி.

சட்டென்று சமாளிக்கமுடியாமல் நிலைகுலைந்துபோனான் நிகேதன். என்ன சொல்கிறாள்? அவனுடைய வீடாமா? அவனுடைய சந்தோசமாமா? அப்போ அவள்?

அவ்வளவு நேரமும் அந்தச் சண்டையை அவன் சாதாரணமாகத்தான் கடக்க நினைத்தான். இவ்வளவு காலமும் நடந்ததைப்போல இதுவும் ஒன்று என்று எண்ணினான். அப்படி இல்லை என்று ஆரணி காட்டினாள். நிகேதனுக்கு மிகுந்த திகைப்பு.

கூடவே அவன் வீட்டினர் நடந்துகொள்ளும் முறை? கயல் தாய்மை உற்றிருக்கிறாள் தான். அதற்கென்று சும்மாவே இருந்து வேலை ஏவிக்கொண்டே இருப்பதா? வேலைக் கள்ளிக்குப் பிள்ளை சாட்டாம். அவனுடைய தங்கைக்கு வயிற்றிலேயே இருக்கும் குழந்தை சாட்டோ? என்னதான் தலை சுற்றல், வாந்தி இருந்தாலும் கல்லூரி சென்று வருகிறாள் தானே. இங்கே ஒருத்தி செய்ய இருக்கிறாள் என்றதும் சோம்பி இருந்து அனுபவிக்கச் சொல்லுகிறதோ? மனம் கொதித்துப் போயிற்று.

ஆரணி சொன்னதுபோல இதைக் கேட்டுக்கொண்டுபோய் இன்னொரு பிரச்சனையாக மாற்றாமல் சத்தமே இல்லாமல் அதற்குத் தீர்வு கண்டான் நிகேதன்.
 

Jeeona

Member
Enaku kayal ah pidikave illa anni endu kopida matta ana idiyappam raal sothi nu order mattum poduva 😏😏😏 enna akalo
 

Goms

Active member
கயல் ஒரு சமயம் திருந்தற மாதிரி இருந்தது. ஆனால் வர வர ரொம்ப படுத்துகிறாள் ஆராவை. 🥺
நிக்கி, ஆரா சண்டை லேசில் முடியாதோ??🤔
 

Google Typing

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.

Top Bottom