• நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.
    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

அவள் ஆரணி - 41

நிதனிபிரபு

Administrator
Staff member
அத்தியாயம் 41


எப்போதும்போலக் காலையில் நான்கு மணிக்கு எழுந்து ஹயருக்குத் தயாரானான் நிகேதன். கூடவே எழுந்து அவனுக்கான தேநீரை ஊற்றிக் கொண்டுவந்து கொடுத்தாள், ஆரணி. நேற்றைய சண்டையின் நீட்சியாய் இருவரிடமும் பெருத்த மௌனம்.

இவர்களின் நடமாட்டத்தில் உறக்கம் கலைந்த பூவினி சிணுங்கவும் அறைக்குச் சென்று அருகில்படுத்துத் தட்டிக்கொடுத்தாள். அவள் உறங்கியதும், மெல்ல எழுந்து வெளியே வந்து அறையின் கதவை இவள் சாற்றவும், அவன் வீட்டைவிட்டு வெளியே செல்லவும் சரியாக இருந்தது.

ஒன்றும் செய்யத் தோன்றாமல் போகிறவனையே பார்த்தாள். அவனுக்கான தேநீர் அவள் வைத்த இடத்திலேயே குளிர்ந்திருந்தது. சாப்பிடவும் இல்லை. சத்தமே இல்லாமல் தன் கோபத்தைக் காட்டிவிட்டுப் போகிறவனின் செய்கை, அவளை மீண்டும் காயப்படுத்திற்று.

இதன் மூலம் என்ன சொல்ல வருகிறான்? அவன் செய்தது தவறு இல்லை என்றா? உறங்கி எழுந்ததில் சற்றே அமைதியடைந்திருந்த மனது மீண்டும் கலங்கிப் போயிற்று. மனமும் உடலும் சோர சோபாவில் சென்று தன் உடலைச் சரித்தாள்.

மறைத்தது அவன். அது மிகப்பெரிய அதிர்ச்சியையும் வேதனையையும் உண்டாக்கியபோதும் எதையும் பேசாமல் தவிர்க்கத்தான் முயன்றாள். அப்போதும் கூப்பிட்டு வைத்து விளக்கம் என்கிற பெயரில் சமாளிக்கப் பார்த்ததும் அவன்தான்.

ஆனால், மறைத்தாயா என்கிற ஒற்றைக் கேள்விக்கு இவ்வளவு பெரிய எதிர்வினையா? ஏன் எதற்கு என்று சொல்லத்தெரியாத ஒருவிதக் கலக்கம் அவளுக்குள் உண்டாயிற்று.

சகாதேவன் குடும்பத்தைப் பகல் சாப்பாட்டுக்கு அழைத்திருந்தார்கள். கூடவே, கயல் குடும்பமும் அமராவதி அம்மாவும் வருவார்கள் என்பதில் பூவினி எழுவதற்கு முதல் பாத்திரங்களைக் கழுவி தேவையான பொருட்களை எடுத்து வைத்து என்று பார்க்க முடிந்த வேலைகளைப் பார்க்க ஆரம்பித்தாள்.

பூவினி எழுந்ததும் உடம்பு துடைத்து, பசியாற்றி, உடைமாற்றி என்று அவளைக் கவனித்தாள். பார்வதி அம்மாவிடம் அவளைக் கொடுத்துவிட்டு, சகாதேவனின் மகன்களுக்கு அவள் செய்கிற பிரியாணி பிடிக்கும் என்பதில் அதற்கான ஆயத்தங்களில் ஈடுபட்டாள்.

“ஏனம்மா, முகம் வாடிப்போய் இருக்கிறாய்?” இந்தக் கொஞ்சக் காலத்தில் பெற்ற அன்னையைப்போலவே மாறிவிட்ட பார்வதி பரிவுடன் விசாரித்தார்.

“ஒண்டும் இல்லை அம்மா. நிக்கியோட குட்டிச் சண்டை.” சிறு சிரிப்புடன் சாதாரணம்போல் சொல்லிவிட்டு சீனி போடாத பால் தேநீரை, தரையில் அமர்ந்து இருந்த அவரிடம் கொண்டுவந்து கொடுத்தாள்.

“உனக்கும் கொண்டுவா ஆச்சி.” என்றவரின் பேச்சுக்குக் கட்டுப்பட்டுத் தனக்கும் எடுத்துக்கொண்டு வந்து தரையில் அமர்ந்தாள். பூவினி அவர்கள் இருவருக்கும் நடுவில் ஒரு விரிப்பில் படுத்திருந்து விளையாடிக்கொண்டு இருந்தாள். மௌனமாகவே தேநீரைப் பருகினர்.

மனதை அலைக்கழிக்கும் கலக்கத்தை அவரிடம் சொல்லி ஆறினால் நன்றாக இருக்கும் போலிருந்தது. அப்படி, அவனைப் பற்றி அவரிடம் சொல்லவும் பிடிக்கவில்லை. ஆனால், அவரின் பரிவு மிகுந்த பார்வை அவளில் இருப்பதை உணர்ந்தவளுக்கு நெஞ்சுக்குள் அடைத்துக்கொண்டு வந்தது.

“மனுசன் மனுசி எண்டா சண்டை வாறதும், சமாதானம் ஆகிறதும் வழமை தானம்மா. நீயும் தம்பில நல்ல பாசம்; தம்பிக்கும் நீ எண்டா உயிர். மிச்சம் எல்லாம் சும்மா அலையடிக்கிற மாதிரி அப்பப்ப வந்திட்டு போற விசயங்கள். பெருசா எடுத்து முகம் வாடக் கூடாது.” என்ன நடந்தது என்று கேட்காமலேயே அவளைத் தேற்றியவரைப் பார்த்து விழிகள் கலங்க முறுவலித்தாள், ஆரணி.

உண்மைதானே, சரியோ பிழையோ எப்போதோ நடந்து முடிந்த ஒன்றுக்காக, கோபத்தை இழுத்துப்பிடிப்பதால் என்ன ஆகப்போகிறது?

தத்தளித்துக்கொண்டிருந்த ஓடம் ஒன்று கரை சேர்ந்ததுபோல், அதுவரை நேரமும் அமைதியற்று அலைப்புற்றுக்கொண்டிருந்த அவள் மனதும் அமைதியாயிற்று.

இருண்டு கிடந்த மனதுக்குள் வெளிச்சம் ஊடுருவியதில், “எனக்காகவே இங்க இருந்தீங்களாம்மா?” என்று வினவினாள்.

உண்மையிலேயே அவளுக்கு அப்படித்தான் பலமுறை தோன்றி இருக்கிறது. கற்பகாலத்தின்போது, பச்சை உடம்பாய் பிள்ளை பெற்று வந்தபோது, குழந்தை வளர்ப்பின்போது என்று எல்லாப் பொழுதுகளிலும் அவர்தான் அவளை வழிநடத்தி இருக்கிறார். இன்னுமே வழிநடத்திக்கொண்டு இருக்கிறார்.

சிறு சிரிப்புடன் தேநீரைப் பருகினார், பார்வதி. அவளுக்காக அவர் இருந்தாரா இல்லை அவருக்காக அவர்கள் இங்கே குடி வந்தார்களா என்று அந்த ஆண்டவனுக்கு மட்டுமே வெளிச்சம். இல்லாமல், கணவரும் போனபிறகு பிள்ளைகள் எல்லோரும் வெளிநாட்டில் வசிக்கையில், வயதுபோன காலத்தில் தனி ஒருத்தியாக உயிரற்ற இந்த வீடுகளை மாத்திரம் பராமரித்துக்கொண்டு, ஏன் வாழ்கிறோம் என்றே தெரியாமல் நாட்களைக் கடத்தியவருக்கு, பெரும் வரம் தான் இந்த இளம் குடும்பம். அதுவும் பூவினி பிறந்தபிறகு அவரின் நாட்களே அழகாயிற்று.

நேரமாவதை உணர்ந்து பிரியாணிக்கான வேலைகளை ஆரம்பித்தாள். நேரம் பதினொன்று ஆனதும் பூவினி சினுங்க அவளுக்குப் பசியாற்றி, உறங்க வைத்துவிட்டு இவள் வந்தபோது பார்வதி அம்மாவும் இருந்த இடத்திலேயே சரிந்து ஒரு குட்டி உறக்கத்தைப் போட்டு முடித்திருந்தார். மீண்டும் மிகுதி வேலைகளை இருவருமாகப் பார்த்தனர்.

பகலை நெருங்கும்போது ராகுலையும் அமராவதி அம்மாவையும் அழைத்துக்கொண்டு சகாதேவன் மாலினி, பிள்ளைகள் சகிதம் வந்து சேர்ந்தார். கயலும் ராகவனும் கல்லூரி முடிந்து நேரே இங்கே வருவதாகச் சொல்லியிருந்தனர்.

முகம் மலர வரவேற்று, உபசரித்து அவர்களை அமரவைத்தாள் ஆரணி. பார்வதி அம்மாவுடன் அவர்கள் பேசிக்கொண்டு இருக்க, “சமையல் முடிஞ்சுது. ஒரு பத்து நிமிசத்தில சாப்பிடலாம் அண்ணா.” என்றுவிட்டு, ஓடிப்போய் அவித்த முட்டைகளைத் தோள் உரித்து ஒரு பாத்திரத்தில் இட்டாள்.

“ஒரு காலம் சமையலே தெரியாது. ஆனா இண்டைக்கு ரோட்டுக்கே வாசம் வருது ஆரணி.” என்றபடி குசினிக்குள் வந்தார் மாலினி.

அவரின் பேச்சில் இருந்த உண்மையில் ஆரணி சிரித்தாள். “எப்பவும் ஒரே மாதிரி இருக்கேலுமா அக்கா. எல்லாத்தையும் பழகத்தானே வேணும்.” இலகுவாகப் பேசியபடி இருவருமாக எல்லாவற்றையும் கொண்டுபோய் உணவு மேசையில் வைத்தனர்.

“அங்க நல்ல ஹோட்டல் வழிய வாங்கிக் குடுத்தாலும் ஆரணி சித்தின்ர பிரியாணிதான் டேஸ்ட்டாம் எண்டு ரெண்டுபேரும் சொல்லுவாங்கள். அப்பிடி என்ன போட்டு சமைக்கிறீர் எண்டு தெரியேல்ல. ஆனா நல்லாருக்கு.” இப்போதும் கரண்டி ஒன்றினால் ஒரு வாய் எடுத்துச் சுவை பார்த்துவிட்டுச் சொன்னார் மாலினி.

“வேணும் எண்டா சொல்லுங்கோ நான் ரெசிபி தாறன். ரோசி கஜனின்ர யூ டியூப் சேனல் பத்துத்தான் எல்லாம் பழகினான்.” இருவருமாகச் சேர்ந்து உணவு, உண்ணும் தட்டுகள் எல்லாவற்றையும் கொண்டுவந்து மேசையில் வைத்தனர். எல்லோருக்கும் உணவு பரிமாறினாள் ஆரணி.

அமராவதியின் கையில் இருந்த ராகுலைத் தான் வாங்கிக்கொண்டு அவரையும் சாப்பிட விட்டார் பார்வதி.

“நீங்க?”

“நானும் ஆரணியும் கொஞ்சத்துக்கு முதல்தான் டீ குடிச்சனாங்க. எனக்கு இப்ப பசி இல்ல. நீங்க சாப்பிடுங்கோ.” என்றார் பார்வதி. புதியவர் என்று இல்லாமல் அவருடன் சேர்ந்துகொண்டான் ராகுலன்.

“நல்ல சுவையா இருக்கம்மா.” என்று பாராட்டியபடி இரண்டு மடங்கு உண்டார் சகாதேவன். “நிகேதன் வாறன் எண்டு சொன்னான், இன்னும் ஆள காணேல்ல?”

விழிகள் தானாகச் சுவர் மணிக்கூட்டுக்குச் சென்றுவர, “இப்பதான் ஸ்கூல் ஹயர் முடிஞ்சிருக்கும் அண்ணா. இனித்தான் வருவான்.” என்று பதிலளித்தாள் ஆரணி.

அதற்குள் பூவினி எழுந்து சிணுங்குவது கேட்டது.

“பூவாச்சி எழும்பிட்டிங்களோ?” என்று கேட்டபடி அறைக்குள் விரைந்து மகளைத் தூக்கிக்கொண்டு வந்தாள். வீட்டில் இருந்த ஆட்களைக் கண்டு சற்றே மிரண்டு அவள் சிணுங்கவும் அதற்குள் சாப்பிட்டு முடித்திருந்த அமராவதி அவளை வாங்கினார்.

சின்னவளோ அவரிடம் நிற்கமாட்டேன் என்று சிணுங்கி பார்வதி அம்மாவிடம் போக நின்றாள். இருவரும் பிள்ளைகளை மாற்றிக்கொண்டனர்.

அதைக் கவனித்துவிட்டு, “என்ன மாமி இது? சொந்த அப்பம்மாட்ட சேராம பக்கத்துவீட்டு அம்மம்மாவோட சேருறா உங்கட பேத்தி.” என்றார் மாலினி சிரிப்புடன்.

அமராவதிக்கு மெலிதாக முகம் கறுத்தது. அதைக் கவனித்துவிட்டு, “நான் பக்கத்திலேயே இருக்கிறன் தானே. ஒவ்வொரு நாளும் இங்க வருவன். அதுதானம்மா. மற்றும்படி ரெத்த உருத்து(ரெத்த சொந்தம்) அவதானே. ரெண்டு நாள் நிண்டா செல்லம் பழகிடுவா.” என்றார் பார்வதி, பூவினிக்கு விளையாட்டுக் காட்டியபடி.

“ம்ம் பரவாயில்ல. ஆரணிக்கு அம்மா மாதிரி இருக்கிறீங்க. அதனாலதான் ஆரணியும் தனியா இருந்தாலும் சமாளிக்கிறா.”

“வேற வழி?” என்றார் அமராவதி.
 

நிதனிபிரபு

Administrator
Staff member
மாலினி சொன்னதுபோல் அன்றிலிருந்து இன்றுவரை எதற்காகவும் ஆரணி அவரிடம் வந்து நின்றதே இல்லை. அது அவருக்கு மிகப்பெரிய அடியே. அதில், “பெத்த தாய் தகப்பன் பக்கத்தில இருந்தும் திரும்பியும் பாக்காம இருந்தா இப்பிடித்தான் நடக்கும். அயலட்டையில இருக்கிற மனுசரைத்தான் நம்பி இருக்கோணும். கேட்டா ஊருக்கையே வசதியான மனுசராம். ஆனா மகளுக்குச் சொத்து சுகம் ஒண்டும் குடுக்கேல்ல. கூட வச்சுப் பாக்கவும் இல்ல.” என்றார் சட்டென்று.

அங்கிருந்த யாருமே இதை எதிர்பார்க்கவில்லை. ஆரணிக்கு எல்லோரையும் வைத்துக்கொண்டு இதென்ன பேச்சு என்று சினம் வந்தது. பார்வதி அம்மாவின் பார்வை அவளைக் கட்டுப்படுத்தியது. அதற்குப் பணிந்து ஆரணியும் காதில் விழாதவள் போல் இருக்க, அமராவதிக்கு ஆரம்பித்துவிட்ட பேச்சை விட மனமில்லை.

“அண்டைக்கு இவளின்ர தாய்க்காரி துள்ளின துள்ள நீங்க பாக்க மாட்டீங்க பார்வதி அம்மா. என்னவோ என்ர மகன் இவளைக் கட்டி நாசமாக்கின மாதிரி ஒரு நகை இல்லையாம், சந்தோசமா வாழ இல்லையாம் எண்டு ஆயிரம் குறை குற்றம். அவ்வளவு பாசம் இருக்கிற மனுசர் குடுக்க வேண்டியதைக் குடுத்து குறையில்லாம வாழ வச்சிருக்க வேணும். இல்லையோ ஒட்டும் இல்ல உறவும் இல்லை எண்டு வெட்டி விட்டிருக்க வேணும். சும்மா என்ர பிள்ளையைக் குறை சொன்னா சரியா?” என்றார் திடீரென்று உருக்கொண்டவர் போன்று.

“அம்மா, இப்ப என்னத்துக்கு இதையெல்லாம் தேவையில்லாம கதைக்கிறீங்க?” என்ற சகாதேவனையோ, “விடுங்கோ அம்மா. அவே பொம்பிளை பிள்ளைய பெத்த தாய் தகப்பன். பாசத்தில் கூடக்குறைய கதைக்கிறதை எல்லாம் நாங்க பெருசா எடுக்க வேண்டாம்.” என்று சமாளித்த பார்வதி அம்மாவையோ அவர் பொருட்படுத்துவதாக இல்லை.

கிடைத்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி எப்படியாவது மகனுக்குச் சீதனம் வாங்கிக் கொடுத்துவிட வேண்டும் என்பதில் குறியாக இருந்தார்.

“அண்டைக்கு நடந்ததை நீ பாக்கேல்லை தம்பி. அதுதான் உனக்கு நான் சொல்லுறது விளங்க இல்ல. பேத்தியும் பிறந்தாச்சு. இனியாவது செய்யவேண்டியதை செய்றது தானே முறை; மரியாதை. இவள் போடுற உடுப்பில இருந்து, நாங்க இருக்கிற இந்த சோபா தொடங்கி இப்ப வாங்கிப்போட்டு இருக்கிற காணி வரைக்கும் என்ர மகன்ர உழைப்பு. அவன் இன்னும் எவ்வளவு காலத்துக்குக் கஷ்டப்பட்டு உழைக்கிறது? இப்பதான் ஒரு காணியே வாங்கிப்போட்டு இருக்கிறான். அதுல ஒரு வீடு கட்டி முடிக்கிறதுக்கிடையில அவனுக்கு வயசே போயிடும். பிறகு எப்ப அவன் வாழுறது?” என்று மகனிடம் சொல்வதுபோல் ஆரணியைச் சாடினார் அவர்.

“இதை எல்லாம் யோசிக்க வேண்டியது நிகேதன். நீங்க சாப்பிட வந்த இடத்தில தேவை இல்லாம கதைக்காம பேசாம இருங்க!” என்று அதட்டினார் சகாதேவன். மாலினிக்கும் அவர் பேச்சுப் பிடிக்கவில்லை. நிகேதன் தலையெடுக்கிறவரை பூனையாக இருந்தவர் இன்றைக்கு ஆளே மாறி நிற்பதைக் கண்டு உள்ளூர திகைப்பாய்த்தான் இருந்தது.

“அப்பிடி எப்பிடித் தம்பி இருக்கிறது? நான் பெத்தவள் எல்லா. நீங்க சந்தோசமா இருந்தா தானே எனக்கும் நிம்மதி. இவளாவது போய்க் கேக்கலாம் தானே. அதெல்லாம் செய்ய மாட்டாள். என்ர பிள்ளைய மட்டும் நல்லா மாடாக்குவாள்.”

அதோடு ஆரணிக்கு இருந்த பொறுமை எல்லாம் ஓடிப்போயிருந்தது. “இத மட்டும் ஏன் மாமி என்னட்ட சொல்லுறீங்க? கயல் அறை கட்டுறதுக்கு நிக்கிய மட்டும் கூப்பிட்டு காசு கேட்ட மாதிரி இதையும் அவனைத் தனியா கூப்பிட்டு கேட்கலாமே.” என்று கேட்டாள்.

“என்ன கதைக்கிறாய்? என்ர மகனோட நான் கதைக்கிறதுக்கு நாலுபேர கூப்பிட்டு வச்சுக்கொண்டா கதைக்க வேணும்?”

“நீங்க நிக்கிட்ட கதைச்சது பிழை இல்ல. ஆனா எனக்குத் தெரியாம ஒளிச்சு மறைச்சுக் காசு கேட்டதுதான் பிழை.” என்றதுமே அமராவதி கொதித்து எழுந்துவிட்டார்.

“பாத்தியா தம்பி, உனக்கு முன்னாலேயே என்ன கதைக்கிறாள் எண்டு. ஒளிச்சேனாம் மறைச்சேனாம். அவன் வந்த இடத்தில கேட்டனான். தெரிஞ்சா இவள் விடமாட்டாள் எண்டு அவன் சொல்லாம விட்டிருக்கிறான் போல. இவள் ஒழுங்கா இருந்தா அவன் ஏன் சொல்லாம இருக்கப்போறான். கடைசில என்னில பழியைப் போடுறாள்.”

சகாதேவனுக்குத் தாயை என்ன செய்வது என்று தெரியாது தலையை வலித்தது.

“பேசாம இருங்க அம்மா. தேவையில்லாம கதைக்காதீங்க எண்டு சொல்லியும் கேக்காம கதைச்சு பேச்ச வளத்துப்போட்டு.. என்ன இது? அவனும் இல்லாத நேரத்தில..”
அவருக்கும் ஆரணிக்குத் தெரியாமல் அவர் நிகேதனிடம் பேசியது பிடிக்கவில்லை.

ஆரணி அதற்குமேல் ஒன்றுமே கதைக்கவில்லை. ‘தெரிஞ்சா இவள் விடமாட்டாள் எண்டு அவன் சொல்லாம விட்டிருக்கிறான் போல.’ என்றவரின் வார்த்தைகளில் அவள் உள்ளம் அடிபட்டுப் போனது.

அவன் மறைத்தது அவருக்குத் தெரிந்திருக்காது. ஒரு ஊகத்தில் தான் சொல்லுகிறார் என்று புரிந்தது. ஆனால், அதுதானே உண்மையும். அவன் அவளிடம் சொல்லவே இல்லை தானே.

அந்த நேரம் சரியாக வீட்டுக்குள் வந்தான் நிகேதன்.

அவனைக் கண்டதும் அமராவதிக்குக் கண்ணீர் பொல பொல என்று ஊற்றியது.

“என்னம்மா?” என்றான் ஒன்றும் புரியாமல்.

“ஒண்டுமில்ல. நீ போய்ச் சாப்பிடு!” என்ற சகாதேவனை முந்திக்கொண்டு, “போதுமடா. இனி நீ எனக்கோ உன்ர தங்கச்சிக்கோ ஒரு சதமும் தந்துபோடாத. அவளுக்குத் தெரியாம நான் உன்னட்ட ஒளிச்சு மறைச்சு காசு வாங்கினேனாம் எண்டு சொல்லுறாள். இந்த வயதில இப்பிடி ஒரு பேச்சு கேக்கவேணும் எண்டு எனக்கு எழுதி இருக்கு போல. கடவுளே..” என்று அவர் அழவும் நிகேதனின் முகம் இறுகிப் போயிற்று.

ஆரணி கலங்கிப்போனாள். நேற்றைய சண்டையே இன்றைக்கு வேறு வடிவத்தில் வந்து நிற்கிறதே. “நிக்கி..” தன்னை விளக்கிவிடும் நோக்கத்தில் அழைத்தாள்.

விசுக்கென்று திரும்பியவனின் விழிகளில் தெறித்த கோபத்தில் அப்படியே நின்றாள். வாயில் விரலை வைத்து, ‘வாயை மூடு!’ என்றான் அவன். விழிகள் அதிர்வில் விரிய அப்படியே நின்றாள் ஆரணி.

அமராவதியிடம் திரும்பி, “அம்மா இங்க பாருங்க, நான் உங்கட மகன். கயல் என்ர தங்கச்சி. நீங்க என்னட்ட கேக்கிறதையோ நான் அவளுக்குக் குடுக்கிறதையோ இங்க யாரும் குறுக்குக் கேள்வி கேக்கேலாது. விளங்கினதா? சும்மா கண்ணைக் கசக்காம பேசாம இருங்க!” என்றான் அழுத்தம் திருத்தமாய்.

இது அவருக்கான பதில் அல்ல. அவளுக்கானது! விரிந்த விழிகளில் நீர் சேர அவனையே பார்த்தாள் ஆரணி.
 

Goms

Active member
அமராவதி வாய்க்கு ஏதாவது வியாதி வந்து பேச முடியாமப் போனா நல்லது...😡😡
 

Google Typing

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.

Top Bottom