• நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.
    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

அவள் ஆரணி - 53

நிதனிபிரபு

Administrator
Staff member
அத்தியாயம் 53


அன்றைய ஹயர்களை முடித்துவிட்டு அவர்களின் வீட்டுக்கே சென்று சொல்லவேண்டும் என்று நிகேதன் எண்ணியிருக்க, சத்தியநாதனே அவனுக்கு அழைத்தார். தன்னை வந்து சந்திக்க முடியுமா என்று வினவினார்.

சம்மதித்துவிட்டு மாலை புறப்பட்டான், நிகேதன். இந்தமுறை அவன் சென்றபோது, “வாங்கோ தம்பி வாங்கோ!” என்று முகம் மலர வாசலுக்கே வந்து வரவேற்றார், யசோதா.

“பூவியும் ஆராவும் சுகமா இருக்கினமா? நான் வீடு தேடி வந்தும் இந்தப் பக்கம் வர இல்ல பாத்தீங்களா? அவளுக்கு அவ்வளவு திமிர்!” என்று, மருமகனிடமே மகளைப் பற்றிக் குறை சொன்னபடி, அவனுக்கு அருந்துவதற்குக் குளிர்பானம் கொண்டுவந்து கொடுத்தார். “மாமா மேலதான் நிக்கிறார். இப்ப வருவார். நீங்க குடிங்கோ.” என்றார் இன்முகத்தோடு.

அன்றைய வரவேற்புக்கும் இன்றைய வரவேற்புக்குமான வித்தியாசத்தில் அவன் மனமும் சற்றே சமன்பட்டது. அவருக்கு அவன் எதுவும் பேசவோ சொல்லவோ வேண்டிய அவசியம் இருக்கவில்லை போலும்.

“பூவிய பாத்திட்டு வந்ததில இருந்து ஒரே அவவின்ர நினைவாத்தான் இருக்கு. எங்க.. உங்கட மனுசி கொண்டுவந்து காட்டுறாள் இல்லையே.” என்று உரிமையோடு கோபப்பட்டார்.

அந்தப் பெண்மணி தன் பேத்தியின் அருகாமைக்காக மிகவுமே ஏங்குவது அவனுக்குப் புரிந்தது. அதில், பேசவந்த விடயம் குறித்துச் சற்றே தைரியம் வரப்பெற்றவனாக, “அதைப்பற்றியும் கதைக்கத்தான் வந்தனான் மாமி.” என்றான்.

“சொல்லுங்கோ. என்ன கதைக்க வேணும்?” என்று ஊக்கினார் அவர்.

சற்றுத் தயங்கிவிட்டு, “கொஞ்ச நாளைக்கு ஆரா பூவியோட வந்து இங்க உங்களோட இருக்கலாமா மாமி?” என்று வினவினான்.

அவரின் முகமெல்லாம் நொடியில் வெளிச்சமானது. “இது என்ன கேள்வி. நீங்க என்ன நினைக்கிறீங்களோ தெரியாது எண்டுதான் நானா கேக்க இல்ல. வந்து பாத்ததில இருந்து பேத்திதான் கண்ணுக்க நிக்கிறா. ஆரா.. ஆராவும் அண்டைக்கு இங்க இருந்து போனதில இருந்து இந்த வீடே பாழடைஞ்சு போச்சுது தம்பி. கொண்டுவந்து விடுங்கோ இனியாவது இந்த வீடு நிறையட்டும்.” என்றார் நெகிழ்ந்த குரலில்.

மெல்லிய குற்றவுணர்ச்சி தாக்க, “சொறி மாமி!” என்றான் அவன் மனதார.

“சேச்சே! என்ன இது? அதெல்லாம் ஒண்டும் இல்ல. விடுங்கோ.” என்று அவசரமாக மறுத்துவிட்டு, “ஆனா, ஆரா வருவாளா?” என்றார் மகளை அறிந்தவராக.

“உங்களுக்கு ஓம் தானே. நான் கூட்டிக்கொண்டு வாறன்.” என்று நம்பிக்கையளித்தான் அவன்.

“சந்தோசம் தம்பி. ஆனா.. திடீரெண்டு ஏன்?” என்றார் மெல்லிய குழப்பத்தோடு. கணவன் மனைவிக்குள் ஏதும் பிடுங்குப்பாடோ என்று ஓடியது அவருக்கு.

“அது மாமி, இனி எலக்சன் ஹயர் வருது. ஒரு மாதத்துக்கு மேல நான் கொழும்பிலேயே நிக்கவேண்டி வரும். அதோட..” என்று இழுத்தவன், சங்கடச் சிரிப்பு ஒன்றுடன், “பூவம்மாக்கு இன்னுமொரு தம்பியோ தங்கச்சியோ வரப்போகுது.” என்றான் அவர் விழிகளைப் பார்க்கச் சிரமப்பட்டபடி.

அதிர்ச்சியோடு பார்த்த யசோதா அவனுடைய முகச்சிவப்பில் அடக்கமாட்டாமல் நகைத்தார். அதேநேரம், அவனுடைய சங்கடமான நிலையை உணர்ந்து அதை முறுவலாக மாற்றியும் இருந்தார்.

“எவ்வளவு சந்தோசமான விசயத்த சொல்லி இருக்கிறீங்க. முதல் பிள்ளைக்குத்தான் வச்சுப் பாக்க எனக்குக் குடுத்து வைக்காம போயிட்டுது. இந்தப் பிள்ளைக்காவது நான் எல்லாம் செய்ய வேணும். அப்பதான் என்ர மனமும் ஆறும். நீங்க இண்டைக்கே கூட்டிக்கொண்டு வாங்கோ. குடும்பம் சேருற எல்லா நாளும் நல்ல நாள்தான்.” என்று ஆர்ப்பாட்டமாக அவர் சொல்லிக்கொண்டு இருக்கையிலேயே மாடியிலிருந்து இறங்கிவந்தார், சத்தியநாதன்.

இவனைக் கண்டுவிட்டு, “வாங்கோ நிகேதன். பாக்ட்ரீ வரைக்கும் போயிட்டு வரவேணும். அதுதான் கூப்பிட்டனான்.” என்றவரிடமும் மகிழ்ச்சி குறையாத குரலில் விடயத்தைப் பகிர்ந்துகொண்டார், யசோதா.

சத்யநாதனின் முகமும் மலர்ந்தது. தன் மகிழ்ச்சியைப் பகிர்கிறவராக, “சந்தோசம் தம்பி.” என்று அவனை ஒருமுறை அணைத்து விடுவித்தார். “பிறகு என்ன? இனி உன்ன கையில பிடிக்கேலாதே?” என்றார் மனைவியிடம்.

“பின்ன? என்ர பேத்தி வரப்போறா. மகள் வரப்போறா. இன்னுமொரு பேரனோ பேத்தியோவும் வரப்போகுது. எனக்கு ஆயிரம் வேலை இருக்கு. நீங்க மறக்காம குமரனை வரச் சொல்லுங்கோ சத்யா. பூவிக்கு அறை ரெடி பண்ணவேணும். ஆராக்கும் அறைய கீழ மாத்தினா நல்லம். பிள்ளைக்கு ஒரு ஊஞ்சல், வீட்டுக்கயே ஓடுற மாதிரி சைக்கிள் வாங்க வேணும்..” என்று படபடத்தார் அவர்.

அவரிடம் தெரிந்த ஆரணியின் சாயலில் நிகேதனுக்கு உதட்டினில் முறுவல் அரும்பிற்று.

கணவர் அந்த நேரம் சிற்றுண்டி எடுத்துக்கொள்வார் என்பதில் அவருக்கும் நிகேதனுக்கும் சேர்த்தே பரிமாறினார் யசோதா.

“வேலை எப்பிடி போகுது? ஒரு வேன வித்திட்டீங்க போல. சமாளிக்கக்கூடிய மாதிரி இருக்கா?” உணவுக்கிடையில் விசாரித்தார் சத்யநாதன்.

‘ஆக, அவனைப்பற்றிய தகவல்கள் அனைத்தும் அவரின் காதுக்குப் போய்க்கொண்டுதான் இருக்கிறது.’ என்று உள்ளே ஓடினாலும், “ஓம் மாமா. ரெண்டு வாகனத்துக்கு வந்த ஹயரையும் ஒரு வாகனத்தை வச்சுச் சமாளிக்கிறது கொஞ்சம் சிரமம் தான். ஆனா, சுகிர்தனும் இருக்கிறதால ஓகேயா போகுது.” என்றான் அவன்.

“அவசர அவசரமா வேன வித்துட்டு வீடு கட்ட ஆரம்பிச்சதுக்கு நான் தான் காரணமோ?”

மிக லாவகமாகக் கேள்வியை வீசிய மனிதரை உண்பதை நிறுத்திவிட்டுப் பார்த்தான் நிகேதன். “உங்களுக்கே பதில் தெரியும் மாமா. பிறகு ஏன் என்னைக் கேக்கிறீங்க?” என்றான் உதட்டினில் அரும்பிய மென் சிரிப்புடன்.

“ம்ஹூம்! அவ்வளவு ரோசமா?” என்றார் என்ன என்று பிரித்தறிய முடியாத பாவத்தில்.

“ரோசம் எண்டுறதைவிட, இது ஒருவிதமான தன்மான போராட்டம் மாமா. உங்களுக்குத் தெரியாதது இல்ல. நீங்க வேண்டாம், பொருத்தமில்லாதவன் எண்டு சொன்ன மருமகன் நான். நீங்க சொன்னதை உண்மையாக்கிற மாதிரி நான் இருக்கக் கூடாது தானே. நீங்க ரெண்டுபேரும் எண்டா ஆராக்கு உயிர். அதுவும் உங்களை அவள் தன்ர ஹீரோவாத்தான் பாத்தவள். இப்ப வரைக்கும் அப்பிடித்தான் பாக்கிறாள். அப்பிடி இருந்தும், எனக்காக உங்களோட சண்டை பிடிச்சுக்கொண்டு என்னட்ட வந்தவளுக்கு நானும் பதில் செய்யத்தானே மாமா வேணும். எண்டைக்காவது ஒருநாள் நீங்க எங்களை மன்னிக்கலாம். சேர்க்கலாம். அப்பிடி நடக்கிற அண்டைக்கு அவள் நிமிந்து நிக்க வேண்டாமா? அதை நான் செய்யாட்டி அவள் என்னை நம்பி வந்ததில என்ன அர்த்தம் இருக்கு சொல்லுங்கோ?” என்று அவன் அவரிடமே கேட்டபோது, உண்பதை நிறுத்திவிட்டு அவனைப் பார்த்தார் சத்யநாதன்.

‘எதற்கும் உங்களிடம் வந்து நின்றுவிட மாட்டேன் அப்பா’ என்று அன்று அவள் சொல்லிவிட்டுப் போனதைத்தான் இன்று அவன், ‘எதற்காகவும் உங்கள் முன்னால் அவளை நிறுத்திவிட மாட்டேன் மாமா’ என்கிறான். அவரின் மகள் தோற்றுப்போய்த் தன்முன்னால் வந்து நின்றுவிடக் கூடாது என்பதுதான் அவரின் விருப்பமும்.

வென்றவர் நம் உயிர் என்றால் தோற்பதும் வெற்றிதானே!

“நான் ஏதாவது பிழையா கதைச்சிட்டேனா மாமா?” அவரிடம் இருந்து பதில் இல்லாமல் போகவும் கேட்டான் நிகேதன்.

இல்லை என்பதுபோல் தலையை அசைத்துவிட்டு அவன் தோளில் தட்டிக்கொடுத்தார் சத்தியநாதன். “என்ர பிள்ளையின்ர தேர்வு பிழைக்க இல்ல நிகேதன்!” என்றவரின் குரலில் அவன் மீதான பாசமும் மரியாதையும் அப்பட்டமாகத் தெரிந்தது.
 

நிதனிபிரபு

Administrator
Staff member
உணவு முடிந்ததும், “இப்ப அவசர ஹயர் ஏதும் இருக்கா?” என்று கேட்டார்.

“இன்னும் ஒரு மணித்தியாலத்தில இருக்கு மாமா.” இதுவரையிலும் தன்னை ஏன் அவர் வரச்சொன்னார் என்று சொல்லவில்லையே என்கிற கேள்வியுடன் பதில் சொன்னான் அவன்.

“அப்ப வாங்கோ!” யசோதாவிடம் சொல்லிக்கொண்டு அவனையும் அழைத்துக்கொண்டு புறப்பட்டார், சத்தியநாதன்.

அவர்கள் இருவரும் பேசிக்கொண்டிருந்த பொழுதில் யசோதா இடையிடவில்லை. ஆனால், கவனித்துக்கொண்டிருந்தார். கணவருக்கு மருமகன் மீது மிகுந்த மதிப்பும் மரியாதையும் உண்டாகிவிட்டது என்பதை அவரின் செய்கையிலும் பேச்சிலும் புரிந்துகொண்டார். மனதுக்கு நிறைவாக இருந்தது. அவர்கள் இருவரும் சோடியாகப் புறப்பட்டுச் சென்ற காட்சி கண்ணையும் மனதையும் நிறைக்க, நெகிழ்ந்த நிலையில் பார்த்துக்கொண்டு நின்றவரின் விழிகள், கணவர் மருமகனின் வேனிலேயே ஏறவும் அப்படியே விரிந்து போயிற்று.

யசோதாவின் காரிலேயே கூட இலகுவில் ஏறமாட்டார். அப்படி ஏறினாலும் ட்ரைவர் சீட்டைப் பிடித்துக்கொள்வார். இன்றோ மருமகனின் வாகனத்தில், அவனருகில் அமர்ந்துகொண்டாரே. காலம் என்பது, போகிற போக்கில் யார் எவர் என்கிற வேறுபாடு இல்லாமல்தானே அனுபவங்களைக் கற்றுக் கொடுத்துவிட்டுப் போகிறது! கண்ணில் நீரும் உதட்டில் முறுவலுமாக அவர்கள் போவதையே பார்த்திருந்தார்.

அவருக்கே இந்த நிலை என்றால் நிகேதனை சொல்லவே தேவையில்லை. அவனும் இதைச் சற்றும் எதிர்பார்க்கவில்லை. அவரின் உயரம் அறிந்தவன். என்றோ ஒருநாள், தன் தகுதிக்கு கொஞ்சமும் பொருத்தமே இல்லாதவன் என்று அவனை உதறித் தள்ளியவர். இன்று அவனருகில் அமர்ந்து வருகிறார். வேகமாக ஜன்னல்களை உயர்த்திவிட்டு ஏஸியைப் போட்டுவிட்டான். மிதமான வேகத்தில் அலுங்காமல் குலுங்காமல் அவரை அழைத்துச் சென்றான்.

அதை கவனிக்காததுபோல் கவனித்துக்கொண்ட சத்தியநாதன் மீசை மறைவினில் ஒரு முறுவலை நெளியவிட்டார்.

அவர்கள் மீண்டும் சென்றது ஆரணி இண்டஸ்ட்ரீஸ்க்கு. அங்கே அவருடைய தொழிற்சாலையை முழுவதுமாகச் சுற்றிக்காட்டினார். போட், வள்ளம், ஓடங்கள், மீன் வலைகள் செய்வதுதான் அவர்களின் பிரதான தொழில். அதனோடு கூடவே இவற்றிற்கான உதிரிப்பாகங்கள் வாங்கி விற்பது. பழுதடைந்தவற்றைத் திருத்திக் கொடுப்பது என்று மன்னாருக்கு மாத்திரமல்ல இலங்கை முழுமைக்கும் செய்துகொண்டிருந்தார்.

அப்படியே, இந்தப்பக்கம் வந்தால் கருவாடு, மீன் டின்கள் தயாரிப்பு என்று சங்கிலித் தொடராய் இருந்தது அவரின் வியாபாரம். பார்க்கையிலே இந்த மனிதர் ஒற்றை ஆளாக இதையெல்லாம் எப்படிச் சமாளிக்கிறார் என்று வியந்துபோனான், நிகேதன்.

ஒவ்வொன்றையும் காட்டி, தேவையான விளக்கங்களைக் கொடுத்து என்று அவரிடம் தெரிந்த அந்த உற்சாகம் அவரை முற்றிலும் புதிதாகக் காட்டியது. எந்தளவுக்குத் தன் தொழிலை நேசிக்கிறார் என்றும் விளங்கிற்று. சொத்து சுகத்துக்குக் குறைவில்லை. மதிப்பு மரியாதைக்கும் குறைவில்லை. ஆனாலும், இந்த வயதிலும் இத்தனை சுறுசுறுப்பாக இயங்குகிற அவரைப் பார்த்தபோது, நானும் இன்னும் இருமடங்கு என் உழைப்பை போடவேண்டும் என்கிற உத்வேகம் பிறந்தது அவனுக்கு.

எல்லாவற்றையும் காட்டிவிட்டு, தன் அலுவலக அறைக்கு அழைத்துச் சென்றார். அங்கே, முதலில் அவன் கண்ணில் பட்டது அவனுடைய ஆரா. பள்ளிச் சீருடையில் தலை கலைந்திருக்க, கையில் கப்பை ஏந்தியபடி சிரித்துக்கொண்டு நின்றாள் அவள். தன்னை மறந்து ரசித்தான் நிகேதன்.

மருமகனின் பார்வை போன இடத்தைக் கண்டு தனக்குள் சிரித்துக்கொண்டார் சத்தியநாதன். “எல்லாம் பாத்தனீங்க தானே தம்பி. எனக்கும் வயது போகுது. இது எல்லாத்தையும் நீங்க பொறுப்பெடுத்தா எனக்கு கொஞ்சம் நிம்மதியா இருக்கும்.” என்றார் அவர்.

வெகு சாதுர்யமாக அவர் அவனுக்கு வலைவிரிக்கும் பாங்கில் அவனுக்குச் சிரிப்பு வந்தது.

அவன் என்ன நினைக்கிறான் என்பதை சத்யநாதனும் புரிந்துகொண்டார்.

“நாப்பத்தஞ்சு(45) வருச அனுபவம் தம்பி!” என்றார் சிரித்தபடி.

“எனக்கு விளங்குது மாமா. உங்கட எதிர்பார்ப்பிலயும் நியாயம் இருக்கு. ஆனா, இப்ப நீங்க எனக்குக் காட்டின மாதிரி, நானும் நாளைக்கு என்ர மருமகனுக்கோ மருமகளுக்கோ காட்டுறதுக்கு எனக்கு எண்டும் ஏதாவது வேணும் தானே? இதெல்லாம் என்ர மாமா சேர்த்து வச்சிருந்தவர். அதையெல்லாம் பக்குவமா பாதுகாத்து உங்களிட்ட தாறன் எண்டு சொன்னா நல்லாவா இருக்கும்?” என்று கேட்டான் அவன்.

அவரோ வாய்விட்டுச் சிரித்தார். மாமனுக்கும் மருமகனுக்கும் இடையில் நடந்துகொண்டிருக்கும் இந்த கண்ணுக்குத் தெரியாத போட்டி அவரை மிகவுமே ரசிக்க வைத்தது.

“அப்ப நான் இதையெல்லாம் வச்சு என்ன தம்பி செய்றது சொல்லுங்கோ? எனக்கும் என்ர பேரன் பேத்தியோட காலம் கழிக்கவேணும் எண்டு ஆசை இருக்காதா?” இலகு குரலிலேயே கேட்டார் அவர்.

நியாயமான எதிர்பார்ப்பு. அதனால் மனதிலிருந்து பேசினான் நிகேதன்.

“மாமா, உண்மையா உங்களிட்ட வந்திட கூடாது எண்டு எனக்கு எந்தக் கொள்கையும் இல்ல. வறட்டுப் பிடிவாதமும் இல்ல. ஆனா, நானே எனக்கான அடையாளத்தைத் தேடி, உங்களுக்கு முன்னால சுயமா நிமிந்து நிக்கவேணும் எண்டு ஆசைப்படுறது உண்மைதான். எனக்கு இனி என்ர டிராவல்ஸ் தான் மாமா உலகம். அதுல மேல மேல வரத்தான் விருப்பம். மினி கார்கள் வாங்கி டாக்சியா ஓடவிடவேணும். ஸ்கூல்ஸ்க்கு தனியா பஸ், கார்மெண்ட்ஸ்க்கு தனியா வேன்கள் வாங்கி விடவேணும். ஒன்லைனலையே புக் பண்ணுறமாதிரி கொண்டுவரவேணும். ஒன்லைனலையே பே பண்ணுற சிஸ்டம். அதுக்கு எண்டு ஒரு ஒபீஸ். இப்படி நிறைய ஐடியாஸ் இருக்கு. எல்லாம் ஆரா போட்ட பிளான் தான். அதை செயலாக்க வேணும். மன்னாருக்கு மட்டும் இல்ல முழு இலங்கைக்கும் தெரிஞ்ச ஒரு டிராவல்ஸ்ஸா வளக்க விருப்பம் மாமா.”

ஆக, அவன் தன் வளர்ச்சியை மட்டுப்படுத்தவில்லை. மேலும் மேலும் உயர நினைக்கிறான். அதுவும் பிடித்திருந்தது அவருக்கு.

“ஆனா, ஆரா சும்மாதான் இருக்கிறாள். அவளுக்கு நிர்வாக வேலை எல்லாம் தெரியும். அவளைக் கொண்டுவந்து போடுங்கோ. யோசிச்சுப் பாத்தா இது அவளுக்குத்தான் சேரவும் வேணும்.” என்று சொல்லும்போதே அவளின் ஆர்வம் இதில் இல்லை என்பது அவனுக்கு நினைவில் வந்தது.

“இப்ப பிள்ளை இருக்கிற நிலையில அது நல்லதா?”

உண்மைதான். அதன் பிறகும் இரண்டு குழந்தைகள். அவளின் நேரம் அவர்களுக்கு வேண்டும்.

“இப்பவே நீங்க முழுசா ஒதுங்கப்போறது இல்லை தானே மாமா. உங்களுக்கு என்ன வயசா போயிட்டுது. இப்போதைக்கு ஆரா வந்து உதவியா இருக்கட்டும். நீங்களும் இருங்கோ. கொஞ்சக் காலம் போகட்டும். பிறகு நான் வந்து பொறுப்பு எடுக்கிறன்.” என்றான் அவரின் முகம் பார்த்து.

சத்யநாதனுக்கு அதுவே போதுமாயிருந்தது. அவருக்கும் இன்றைக்கே அவன் வந்து பொறுப்பை எடுத்துக்கொள்ள வேண்டும் என்று இல்லை. அவருக்குப் பிறகு அவன் இருக்கிறான் என்கிற நம்பிக்கைதான் தேவையாக இருந்தது. அதை அவன் தந்திருந்தான்.
 

Goms

Active member
மாமனும், மருமகனும் தங்கள் வருங்காலத்தை பிளான் பண்ணியாச்சு... சூப்பர்.....
 

Google Typing

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.

Top Bottom