அவள் ஆரணி - 8

நிதனிபிரபு

Administrator
Staff member
அத்தியாயம் 8


பொழுது மத்தியானத்தைத் தொட்டிருந்தது. நிகேதனுக்கு அழைத்தபோது, “வை ஆரா எடுக்கிறன்.” என்று அழைப்பைத் துண்டித்திருந்தான் அவன். நல்ல மனநிலையில் போகாதவனுக்கு மீண்டும் மீண்டும் எடுத்துத் தொந்தரவு செய்ய மனமில்லை. அமராவதி அம்மா பகல் சமையலை ஆரம்பிப்பதாகவும் தெரியவில்லை. வேண்டுமென்றே செய்கிறார் என்று புரிந்தது. அவன் வந்து, ‘பசிக்குது, சாப்பிட எதையாவது கொண்டுவா.’ என்றால் என்ன செய்வாள்?

போய்க் கேட்டால் என்ன சொல்லுவாரோ? நிகேதனின் பசிக்கும் வயிறு தயக்கத்தைப் பின்னுக்குத் தள்ள, அவரின் அறை வாசலில் போய் நின்றாள். கட்டிலில் படுத்திருந்தார் அவர்.

“மாமி சமைக்கேல்லையா? நிகேதன் பசியோட வரப்போறான்.” என்றாள் மெல்ல.

“அவ்வளவு அக்கறை இருந்தா நீயே போய்ச் சமை! சும்மா சும்மா கண்ணுக்கு முன்னால வந்து நிண்டு எரிச்சலை கிளப்பாத!” எரிந்து விழுந்துவிட்டு திரும்பிப் படுத்துக்கொண்டார் அவர்.

காலையில் கதைத்ததில் கொஞ்சமாவது இறங்கி வருவார் என்று எதிர்பார்த்த ஆரணி அவரின் இந்தக் கோபத்தில் ஏமாந்துபோனாள். “எனக்குச் சமைக்கத் தெரியாது மாமி!” தன்னைச் சமாளித்துக்கொண்டு சொன்னாள்.

“எவனையாவது பிடிக்க மட்டும் நல்லா தெரியும் போல!”

“மாமி போதும்! இப்ப என்ன, நான் சமைக்கவேணும். அவ்வளவுதானே! சமைக்கிறன்! நான் சமைக்கிறத சாப்பிடவேணும் எண்டு உங்கட தலைல எழுதி இருந்தா யார் என்ன செய்யேலும் சொல்லுங்கோ?” என்றுவிட்டு வந்தவளுக்கு எரிச்சல் தான் மிகுந்திருந்தது. ‘ஊரைச் சுத்துறது, வளச்சுப் போடுறது, ஆளைப் பிடிக்கிறது என்ன வார்த்தைகள்?’

‘என்ன பெரிய சமையல்! யு டியூபை தட்டினா எல்லாச் சாப்பாடும் வந்து கொட்டப்போது!’ தேவையில்லை என்கிறவரைதான் எதுவுமே தெரியாது. தேவை என்கிற கட்டம் வருகையில் தெரிய வந்துவிடும்.

அவளே யூ டியூபராக மாறிக்கொண்டாள்.

“முதலில் சமையலில் நீங்க செய்யவேண்டிய காரியம், என்ன சமைப்பது எண்டு முடிவு செய்யவேணும்!”

நாளாந்த வாழ்வின் மிகச் சிக்கலான கேள்வி எது என்று எந்தக் குடும்பப் பெண்ணைக் கேட்டாலும் கண்ணை மூடிக்கொண்டு சொல்லும் பதில், ‘இன்றைக்கு என்ன சமைப்பது?’ என்பதுதான். அந்தக் கேள்வியை முதலில் வைத்தாள் ஆரணி.

“நமக்குச் சோறு முக்கியம்! எனவே முதலில் அரிசியை எடுத்து வைக்கவும்!”

“அரிசி எங்க இருக்கு?” புதையல் புலப்படவே இல்லை.

“என்னைமாதிரியே உருப்படாம இருக்கிற உருட்டுக்கட்டைகளே, குறைஞ்சது உங்க வீட்டுல அரிசி எங்க இருக்கு எண்டாவது பாத்து வைங்க. காலம் நமக்கு எந்த டாஸ்க்க எந்த நேரத்தில தரும் எண்டு சொல்லவே ஏலாது!”

ஒருவழியாக அரிசியைக் கண்டு பிடித்தாள். முருங்கைக்காய் கண்ணுக்கு முன்னாலேயே காலை நீட்டிக்கொண்டு அமர்ந்திருந்தது. அதையே குழம்புக்கு எடுத்து வைத்தாள். உப்பு, மஞ்சள்தூள் எங்கே இருக்கிறது என்கிற தேடலில் கண்டுபிடித்த பருப்பையும் வெளியே எடுத்துவைத்தாள்.

எல்லாம் தயார். சமையலை எங்கிருந்து எடுத்து வைப்பது? அப்பா வீட்டுச் சொத்தாக அவளோடு கூடவே வந்த போனில் இலங்கைச் சமையல் என்று கொடுத்துத் தேடினாள்.

யாரோ ரோசிகஜனாம். சமையல் விற்பண்ணி என்று தன்னைத் தானே பீற்றிக்கொள்ளும் அவர் பல வீடியோக்களைப் பதிவேற்றியிருந்தார். சும்மா சொல்லக் கூடாது, லட்சத்தைத் தாண்டியிருந்தது பார்வையாளர்களின் எண்ணிக்கை. “அப்ப சுமாரா சமைப்பாவாத்தான் இருக்கும்!” நம்பிக்கையோடு அவரின் வீடியோக்களுக்குள் சென்று, ‘அரிசி உழை வைப்பது எப்படி?’ என்று கொடுத்துத் தேடினாள்.

உடனேயே கண்ணுக்கு முன்னால் வந்து நின்றார் ரோசிகஜன். மெல்லிய உடல்வாகு. வயதைக் காட்டிக்கொடுக்காத அளவான மேக்கப். பார்ப்பதற்கு நன்றாக இருந்தார். ‘அப்ப சமையலும் நல்லாருக்கும்!’ நம்பிக்கை பிறக்க, அவரின் வீடியோவைத் தட்டிவிட்டாள்.

“அன்பு நேயர்களே வணக்கம்! இன்று நாம்..” என்று அவர் ஆரம்பிக்க,

“வணக்கம் வணக்கம்! விசயத்துக்கு வாங்க!” என்றாள் ஆரணி.

“முதலில் அரிசியை ஒரு பாத்திரத்துக்குள் போடவும்.”

“பின்ன என்ன நிலத்திலையா போடுறது.”

“மிதமான தண்ணீரில் அரிசியை மூன்று நான்கு முறை நன்றாக அலசவும்!”

“ஏன், சூடான தண்ணில கழுவினா அரிசி குளிக்க மாட்டன் எண்டு அடம் பிடிக்குமா என்ன? அதென்ன மிதமான தண்ணி?” என்றபடி நான்கைந்துமுறை அலசிக்கொண்டாள்.

அவர் சொன்னதுபோலவே அளவாகத் தண்ணீரை வைத்து அடுப்பிலேற்றி அது கொதிக்கத் தொடங்கவும் அரிசியைப் போட்டாள். உப்பும் போட்டு, கொதித்துப் பொங்கி வரும்போதெல்லாம் அவர் சொன்னதுபோலவே கிளறிக் கிளறி விட, நன்றாகவே வெந்து வந்திருந்தது சோறு!

அதுவும் வெள்ளை வெளேர் என்று வெள்ளை முத்துக்களைப் போல ஒவ்வொரு சோறாக மின்ன, அவள் கண்களும் சந்தோசத்தில் மின்னியது! “ரோசிகஜன்! ஐ லைக் யூ!” என்று அவருக்கு ஒரு பறக்கும் முத்தத்தைப் பரிசளித்துவிட்டுத் துள்ளலோடு சோற்றினை ஒரு கரையாக இறக்கி வைத்தாள்.

அப்படியே அவர் காட்டிக் கொடுத்தது போலவே, சூடான எண்ணையில் கடுகை வெடிக்க விட்டு, பெருஞ்சீரகம், வெந்தயம், வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை எல்லாம் போட்டு வதக்கி, இஞ்சி உள்ளி போட்டுப் பிரட்டி, வெட்டி வைத்திருந்த தக்காளிப்பழம் போட்டு அதையும் வதக்கி, எண்ணை விடத் தொடங்கிய பொழுதில் உப்பும் மஞ்சளும் சேர்த்தாள்.

நார் எடுத்து ஒரு விரல் அளவுக்கு துண்டு துண்டுகளாக வெட்டி, இரண்டாக்கப் பிளந்து வைத்திருந்த முருங்கைக்காய்களை அதற்குள் போட்டுப் பிரட்டினாள். முருங்கைக்காய் ஓரளவுக்கு வதங்கி வரும்போது இரண்டு உருளைக்கிழங்குகளைத் துண்டுகளாக்கிப் போட்டு, மல்லி, செத்தல்மிளகாய், மஞ்சள்கட்டி, மிளகு, கறிவேப்பிலை என்று இன்னும் என்னென்னவோ எல்லாம் சேர்த்து அரைத்திருந்த யாழ்ப்பாணத்து மிளகாய்த் தூளினைப் போட்டுப் பிரட்டி, தேவையான அளவு நீர் வீட்டுக் கொதிக்க வைத்தாள். கறி பார்வைக்குக் குணமும் மணமுமாக நன்றாகவே இருக்க, அவளுக்குள் தானாகவே ஒரு துள்ளல் வந்து அமர்ந்துகொண்டது!

அவர் காட்டிக் கொடுத்தது போலவே பருப்பிலும் ஒரு பால்கறி வைத்து, அப்பளம் மிளகாய் பொறித்து, பாத்திரங்களை ஒதுக்கி என்று அவள் சமையலை முடித்தபோது மூன்று மணித்தியாலங்கள் கடந்திருந்தது. முற்றிலுமாகக் களைத்தே போயிருந்தாள். அடுப்பு நெருப்பு தன் வெம்மையால் அவளை எரித்தே விட்டிருந்தது. தேகமெல்லாம் வியர்வையில் குளித்திருந்தது. கையில் ஒருசில வீரத் தழும்புகளும் உண்டாயிற்று. ஆனாலும், அவளின் உற்சாகத்துக்குக் குறைவில்லை. தானே உருவாக்கிய ஒன்று மிக மிக நன்றாக வந்துவிட்டிருக்கிற சந்தோசம்.

“மாமி! சாப்பாடு ரெடி! சாப்பிட வாங்கோ!” உற்சாகமாய்க் குரல் கொடுத்தாள்.

சத்தமில்லாமல் போக சோற்றை மட்டும் போட்டு ஆற வைத்துவிட்டு அவரின் அறைக்கே சென்றாள்.

“மாமி, வாங்கோ சாப்பிட!”

“பசிச்சா எனக்குச் சாப்பிடத் தெரியும். நீ உன்ர வேலையைப் பார்!”

“அதெப்படி? முதல் முதல் சமைச்சிருக்கிறன். சாப்பிட்டு எப்பிடி இருக்கு எண்டு நீங்க ஒரு வார்த்தை சொல்லவேணாமா?”

சினத்துடன் அவளை முறைத்துவிட்டு எழுந்து வந்தார் அவர். உண்மையிலேயே அவள் சமைக்க எடுத்துக்கொண்ட மூன்று மணித்தியாலத்தில் அவருக்குப் பசியில் தலையே சுற்றுவது போலாயிற்று. ஆனாலும், எட்டியும் பாக்கக் கூடாது என்கிற வைராக்கியத்தோடு படுத்தே கிடந்தார். இதில், ‘ஏதாவது தெரியாது எண்டு கேட்டுக்கொண்டு வரட்டும், நல்லா குடுத்து அனுப்புறன்.’ என்றும் கருவிக்கொண்டார்.

ஒரு வார்த்தை கூட கேட்காமல் முழுமையாக அவரை ஏமாற்றி இருந்தாள் அவள்.

அவர் கையைக் கழுவிக்கொண்டு வருவதற்குள், போட்டுவைத்திருந்த சோற்றின்மீது முருங்கைக்காய் குழம்பு, பருப்பு வைத்து மிளகாய், அப்பளமும் வைத்துக் கொண்டுவந்து கையிலேயே கொடுத்தாள் ஆரணி.

“சாப்பிடுங்க மாமி!” ஒரு சில்வர் கப்பில் தண்ணீரும் கொண்டுவந்து வைத்தாள்.

சோற்றைக் குழைத்து வாயில் வைத்தவர், சற்றுநேரம் ஒன்றுமே சொல்லவில்லை. பின் மெல்ல மென்று விழுங்கினார்.

அதற்காகவே காத்திருந்தவள், “எப்பிடி இருக்கு மாமி? நல்லாருக்கா? என்ர முதல் சமையல். வீட்டுல கிச்சனுக்கு நான் போன நாளை விரல் விட்டு எண்ணலாம்.” என்று தன்பாட்டுக்கு வளவளத்தாள்.

ஒன்றுமே சொல்லாமல் சாப்பிட்டு முடித்து எழுந்துபோனார் அவர்.

“திமிர் உங்களுக்கு! ஓகே ஓகே! ஆரணின்ர மாமிக்கு இந்தளவுக்காவது திமிர் இல்லாட்டி எப்பிடி? நான் உங்களையும் லைக் பண்ணுறன் மாமி!” என்றுவிட்டு குளிக்கப் போனாள்.
 

நிதனிபிரபு

Administrator
Staff member
கிணற்றையும் வாளியையும் பார்க்க மீண்டும் மலைப்பாயிருந்தது.

‘இதுல தண்ணிய அள்ளி.. குளிச்சு.. கடவுளே..’

‘நோ ஆரணி! இதெல்லாம் உனக்கான டாஸ்க்! புகுந்து விளையாடு! எதுலயும் நீ சோரக்கூடாது!’

மெல்ல மெல்லத் தண்ணீரை அள்ளி டாங்க்கில் நிரப்பத் தொடங்கினாள். சமையலைப்போல அறிந்துகொள்ளும் ஆர்வத்துடனோ சுவையாகச் சமைக்கவேண்டும் என்கிற விருப்புடனோ நீரை இறைக்க முடியவில்லை. தளிர் விரல்களும் கடினமான வேலை பார்த்தே பழகியிராத மென்மையான உள்ளங்கையும், ஏற்கனவே சமையலால் உண்டாகியிருந்த காயங்களும் எரிந்தது. முடியாமல் அப்படியே துவைக்கும் குந்தில் அமர்ந்துவிட்டாள்.

இன்று ஒரு நாளிலேயே சிவந்துவிட்ட விரல்களைப் பார்க்கப் பார்க்க துக்கம் பெருகியது. ஏனோ அவளை நோகவிடாமல் எதிலும் தரமும் தராதரமும் பார்த்துப் பார்த்து வளர்த்த அப்பா நினைவில் வந்தார்.

பிறப்பிலேயே செல்வந்தனாகப் பிறந்ததாலோ என்னவோ கௌரவம், தராதரம், அந்தஸ்து அனைத்தையுமே அதிகமாகப் பார்க்கும் மனிதர். பாசத்தைக்கூட அப்படித்தான் காட்டுவார். அப்படியானவருக்கு அவளின் செயல் மிகுந்த தலைகுனிவாகத்தான் இருக்கும்.

ஆனால், அவர் அவளுக்குச் செய்யப் பார்த்ததும் தவறுதானே. அவளின் விருப்பத்தைச் சொல்லியும் இன்னொருவனை நிச்சயித்ததில் என்ன நியாயம் இருக்கிறது? ஒரு பிடிவாதத்துடன் எழுந்து கை எரிய எரிய டாங்க்கினை நிரப்பினாள். நிகேதனின் சாரத்தைக் குளிப்பதற்கு ஏற்றவாறு கட்டிக்கொண்டு அணிந்திருந்த ஆடைகளைக் கழற்றி தோய்த்துக் காயப் போட்டுவிட்டு அள்ளி நன்றாக முழுகினாள். குளித்து முடிக்கும் தறுவாயிலேயே நித்திரை கண்ணைச் சுழற்றியது. நிகேதனின் உடைகளையே மீண்டும் அணிந்துகொண்டு கட்டிலில் விழுந்ததுதான் தெரியும்.

நிகேதன் எழுப்பியபோதுதான் கண்களைத் திறந்தாள். அவனைக் கண்டதுமே பாய்ந்து இறுக்கி அணைத்துக்கொண்டாள். அந்த அணைப்பே அன்று முழுக்க அவள் தன்னைத் தேடியதைச் சொல்ல, “தனிய இருக்க போரடிச்சதா?” என்று, அவள் முகத்தைக் கனிவுடன் நோக்கிக் கேட்டான், அவன்.

இல்லை என்று தலையை அசைத்துவிட்டு, “வேலை கிடைச்சதாடா?” என்றாள் ஆர்வத்தோடு.

முகம் வாட உதட்டைப் பிதுக்கினான் அவன்.

“விடு மச்சி எல்லாம் கிடைக்கும்!” கட்டிலில் இருந்து எழுந்து தன் முடியினை ஒரு பாண்டினுள் அடக்கியபடி சொன்னாள், அவள்.

அப்போதுதான் அவளின் ஆடைகளைக் கவனித்தான் நிகேதன். “நீயே அள்ளிக் குளிச்சியா?” என்றவன் வேகமாக அவளின் கைகளைப் பற்றி ஆராய்ந்தான். ஆங்காங்கே சிவந்திருந்ததைக் கவனித்துவிட்டு வேதனையுடன் நோக்கினான்.

“விடுடா! விடுடா! இதெல்லாம் வீரத் தழும்புகள்!” அவள் சொல்லும்போதே அவனுடைய உதடுகள் அவளின் உள்ளங்கையில் மென்மையாகப் பதிந்தன. மீண்டும் மீண்டும் பதிந்தன. “இப்போதைக்கு இதமட்டும் தான் என்னால சிக்கனமில்லாமத் தரமுடியும் ஆரா!” மென்மையாய் அவளை அணைத்துக்கொண்டு சொன்னான் அவன்.

“அடேய் விசரா! எனக்கும் இது மட்டும் தான்டா வேணும்!” கண்ணீர் பூக்கள் மின்னச் சிரித்தாள் அவன் காதலி!

அவளின் நெற்றியில் இதழ் பதித்துவிட்டு, அருகிலிருந்த பையினை எடுத்துக் கொடுத்தான். “நைட்டி மட்டும் தான். உள்ளுடுப்புக்கு நாளைக்கு நீயும் வா. போய் வாங்குவம்.”

“இப்ப என்னத்துக்கடா?” அவளுக்கு அத்தியாவசியம் என்றாலும், இருக்கிற காசையும் செலவு செய்துவிட்டு என்ன செய்யப் போகிறான் என்கிற யோசனை அவளுக்கு.

“விடு! சமாளிக்கலாம்.” அவளுக்கான மாற்றுடைகளைத் தாய் தங்கையிடம் கேட்க இப்போது அவனுக்குமே விருப்பமில்லை. கோபதாபம் வேறு சக பெண்ணின் மீதான மனிதாபிமானம் வேறல்லவா. வெறும் கையோடு வந்தவள் மாற்றுடைக்கு என்ன செய்வாள் என்று அவர்கள் யோசிக்கவே இல்லையே.

அவன் குளித்துவிட்டு வந்தபோது இதமான சூட்டில் உணவு தயாராயிருந்தது. “நீ சாப்பிட்டியா?” தரையில் அமர்ந்தபடியே கேட்டான் நிகேதன்.

“இன்னுமில்ல. நீ சாப்பிடு முதல்!” அவனுக்கு அருகிலேயே அமர்ந்து, சாப்பிட்டுப் பார்த்து அவன் சொல்லப்போகும் வார்த்தைகளுக்காக பெரும் ஆவலுடன் காத்திருந்தாள்.

அவன் ஒருவாய் அள்ளும்போதே, “இண்டைக்காவது வேலை கிடைச்சுதா? கிடைச்சிருக்காதே!” என்று, அபஸ்வரமாய் ஒலித்தது அமராவதியின் குரல்.

சடுதியில் சினம் பொங்கிற்று ஆரணிக்கு. “முதல் அவனை நிம்மதியா சாப்பிட விடுங்க! அப்பதான் வேலை கிடைச்சாலும் அதைச் செய்றதுக்கு உடம்பில தெம்பிருக்கும்.” என்றாள் வெடுக்கென்று.

“சாப்பிடுறது ஊரான் வீட்டு காசுல. இதுக்க ரோசம் வேற வருதாம்!” என்றுவிட்டுப் போனார் அவர்.

சோற்றைத் தாங்கிய கை தாங்கியபடியே நிற்க இறுகிப்போய் அமர்ந்திருந்தான் நிகேதன். நெஞ்சு துடிக்க, “நீ சாப்பிடு நிக்கி!” என்றாள் ஆரணி இதமான குரலில்.

அள்ளிய சோற்றைத் தட்டிலேயே போட்டுவிட்டு, பேசாமல் எழுந்து கையைக் கழுவிக்கொண்டு அறைக்கு நடந்தான் நிகேதன். பரிதவிப்புடன் தட்டைத் தூக்கிக்கொண்டு அவன் பின்னால் ஓடினாள் ஆரணி. “இப்பிடி எத்தனை நாளைக்குப் பட்டினி கிடப்ப நிக்ஸ்? வேலை கிடைக்கிற வரைக்குமா? ரோசப்பட்டு ஆகிறதுக்கு ஒண்டும் இல்லயடா. சாப்பிடு!” அவன் கையில் தட்டைப் பிடிவாதமாக வைத்தாள்.

“உனக்குக் கட்டாயம் வேலை கிடைக்கும்! நாங்க நல்லாருப்பம். இந்த நிலை மாறும். அதுவரைக்கும் பொறுத்துப்போவம் நிக்கி.” எப்படியாவது அவனைத் தேற்றிச் சாப்பிட வைத்துவிட வேண்டும் என்பதில் அவள் குறியாக இருப்பது புரிந்தது. அன்னையின் பேச்சு அவனுக்கே இந்தளவுக்கு வலிக்கிறது என்றால் அவளுக்கு? காட்டிக்கொள்ளாமல் அவனைத் தேற்றுகிறாள்.

ஒரு பெருமூச்சுடன், “நீயும் போட்டுக்கொண்டு வா.” என்றபடி ஒரு பிடியை அள்ளி வாயில் வைத்தவன் அடுத்தக் கணமே, “என்னடி சாப்பாடு இது? ஆரு சமைச்சது?” என்றான் முகத்தைச் சுளித்துக்கொண்டு.

“ஏன்டா? நல்லா இல்லையா? நான் தான் சமைச்சனான்.” அவளின் முகம் சுருங்கிப் போயிற்று.

“உன்னை ஆர் சமைக்கச் சொன்னது?” சட்டென்று மூண்ட கோபத்தோடு சிடுசிடுத்தான் அவன்.

“சமைச்சா என்ன? அதவிடு. நல்லாவே இல்லையா?” என்றாள் மீண்டும். அவளை இழுத்து அருகில் அமர்த்தினான் அவன்.“அம்மா சொன்னவாவா?” அவள் முகம் பார்த்து மென்மையாகக் கேட்டான்.

“ஏன்? நானா ஆசைப்பட்டுச் சமைக்கக்கூடாதா?” அவள் சொல்ல மறுத்தபோதும் என்ன நடந்திருக்கும் என்று அவனால் ஊகிக்க முடிந்தது. “என்ர மனுசி முதல் முதல் சமைச்சது. நல்லாருக்கோ இல்லையோ, எனக்கு அது தேவாமிர்தம் தான்!” மனம் கனியச் சொன்னவன் அவளுக்கும் ஊட்டிவிட்டான்.

வாங்கிச் சாப்பிட்டவளின் முகமும் படு கண்ராவியாக மாறிப்போயிற்று! “என்னடா இவ்வளவு கேவலமா சமைச்சு வச்சிருக்கிறன்?”

இளநகை அரும்பிற்று அவன் முகத்தில். “நீ சொல்லுற அளவுக்கெல்லாம் மோசமில்லை. முருங்கைக்காய் நல்லா அவிஞ்சிருக்கு. கரையேல்ல. பருப்பும் நல்லா வந்திருக்கு. உப்பு உறைப்ப மட்டும் அளவா போட்டா சரி.” என்றான் சிரிப்புடன்.

“டேஸ்ட் பாக்கேக்க நல்லா இருந்த மாதிரித்தான்டா இருந்தது.” என்று சிணுங்கினாள் அவள்.

“பழகப் பழக சரியா வரும், விடு! நாங்க இருக்கிற நிலைமைக்கு சுவையான சாப்பாடா முக்கியம்?” அவளுக்கும் கொடுத்துத் தானும் உண்டு முடித்தான் அவன்.

“தெரிஞ்ச இடமெல்லாம் கேட்டுட்டு வந்திருக்கிறன் ஆரா. சொல்லுறன் எண்டுதான் சொல்லி இருக்கீனம். நாளைக்கு எங்கேபோய்க் கேக்கிறது எண்டே தெரியேல்லடி.” இரவின் மடியில் தன் மார்பில் சரிந்திருந்தவளின் கன்னம் வருடியபடி சொன்னான் நிகேதன்.

“கிடைக்கும். கவலைப்படாத. என்ன எங்கட அவசரத்துக்கு உடனடியா கிடைக்குதில்ல. மனதை சோர விடாத. கொஞ்ச காலத்துக்குக் கஷ்டம் தான். அதைத் தாண்டிட்டா பிறகு எல்லாம் ஓகே ஆயிடும். சரியா!” தன் கவலையை மறைத்துக்கொண்டு அவனுக்கு ஆறுதல் சொன்னாள் அவள்.

“ஒரே நாள்ல வாழ்க்கையே தலைகீழா மாறிப்போன மாதிரி இருக்கா?” மெல்லக் கேட்டான்.

அவளால் உடனே ஒன்றும் சொல்ல முடியவில்லை. அந்த ஒருகண அமைதி அவனை வதைத்தது. “இவனை ஏன்டா கட்டினன் எண்டு நினைக்கிறியா?” கேட்டு முடிக்க முதலே, “விசரன் மாதிரி கதைக்காத. சமைக்க உண்மையாவே எனக்குப் பிடிச்சிருந்தது. இனியும் விருப்பமாத்தான் சமைப்பன். ஆனா..” என்றவள் தயங்கிப் பின் தொடர்ந்தாள். “தண்ணி அள்ளிக் குளிக்கேக்கதான் அழுகை வந்தது. அதுவும் போகப் போகப் பழகிடும்!” என்றாள் சிரித்துக்கொண்டு.

மீண்டும் அவள் கரங்களைப் பற்றி மென்மையாக வருடி, முத்தமிட்டான். “இனி நான் வெளில போகமுதல் டாங்க்கை நிரப்பி விட்டுட்டுப் போறன். நீ குளிக்கிற நேரம் குளி.” என்றவன் நாள் முழுக்க அலைந்த களைப்பில் அவளை அணைத்தபடியே உறங்கிப் போனான்.

மாலை நன்றாகவே உறங்கி எழுந்த ஆரணி விழித்தே கிடந்தாள்.
 

Google Typing

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.

Top Bottom