அத்தியாயம் 8
பொழுது மத்தியானத்தைத் தொட்டிருந்தது. நிகேதனுக்கு அழைத்தபோது, “வை ஆரா எடுக்கிறன்.” என்று அழைப்பைத் துண்டித்திருந்தான் அவன். நல்ல மனநிலையில் போகாதவனுக்கு மீண்டும் மீண்டும் எடுத்துத் தொந்தரவு செய்ய மனமில்லை. அமராவதி அம்மா பகல் சமையலை ஆரம்பிப்பதாகவும் தெரியவில்லை. வேண்டுமென்றே செய்கிறார் என்று புரிந்தது. அவன் வந்து, ‘பசிக்குது, சாப்பிட எதையாவது கொண்டுவா.’ என்றால் என்ன செய்வாள்?
போய்க் கேட்டால் என்ன சொல்லுவாரோ? நிகேதனின் பசிக்கும் வயிறு தயக்கத்தைப் பின்னுக்குத் தள்ள, அவரின் அறை வாசலில் போய் நின்றாள். கட்டிலில் படுத்திருந்தார் அவர்.
“மாமி சமைக்கேல்லையா? நிகேதன் பசியோட வரப்போறான்.” என்றாள் மெல்ல.
“அவ்வளவு அக்கறை இருந்தா நீயே போய்ச் சமை! சும்மா சும்மா கண்ணுக்கு முன்னால வந்து நிண்டு எரிச்சலை கிளப்பாத!” எரிந்து விழுந்துவிட்டு திரும்பிப் படுத்துக்கொண்டார் அவர்.
காலையில் கதைத்ததில் கொஞ்சமாவது இறங்கி வருவார் என்று எதிர்பார்த்த ஆரணி அவரின் இந்தக் கோபத்தில் ஏமாந்துபோனாள். “எனக்குச் சமைக்கத் தெரியாது மாமி!” தன்னைச் சமாளித்துக்கொண்டு சொன்னாள்.
“எவனையாவது பிடிக்க மட்டும் நல்லா தெரியும் போல!”
“மாமி போதும்! இப்ப என்ன, நான் சமைக்கவேணும். அவ்வளவுதானே! சமைக்கிறன்! நான் சமைக்கிறத சாப்பிடவேணும் எண்டு உங்கட தலைல எழுதி இருந்தா யார் என்ன செய்யேலும் சொல்லுங்கோ?” என்றுவிட்டு வந்தவளுக்கு எரிச்சல் தான் மிகுந்திருந்தது. ‘ஊரைச் சுத்துறது, வளச்சுப் போடுறது, ஆளைப் பிடிக்கிறது என்ன வார்த்தைகள்?’
‘என்ன பெரிய சமையல்! யு டியூபை தட்டினா எல்லாச் சாப்பாடும் வந்து கொட்டப்போது!’ தேவையில்லை என்கிறவரைதான் எதுவுமே தெரியாது. தேவை என்கிற கட்டம் வருகையில் தெரிய வந்துவிடும்.
அவளே யூ டியூபராக மாறிக்கொண்டாள்.
“முதலில் சமையலில் நீங்க செய்யவேண்டிய காரியம், என்ன சமைப்பது எண்டு முடிவு செய்யவேணும்!”
நாளாந்த வாழ்வின் மிகச் சிக்கலான கேள்வி எது என்று எந்தக் குடும்பப் பெண்ணைக் கேட்டாலும் கண்ணை மூடிக்கொண்டு சொல்லும் பதில், ‘இன்றைக்கு என்ன சமைப்பது?’ என்பதுதான். அந்தக் கேள்வியை முதலில் வைத்தாள் ஆரணி.
“நமக்குச் சோறு முக்கியம்! எனவே முதலில் அரிசியை எடுத்து வைக்கவும்!”
“அரிசி எங்க இருக்கு?” புதையல் புலப்படவே இல்லை.
“என்னைமாதிரியே உருப்படாம இருக்கிற உருட்டுக்கட்டைகளே, குறைஞ்சது உங்க வீட்டுல அரிசி எங்க இருக்கு எண்டாவது பாத்து வைங்க. காலம் நமக்கு எந்த டாஸ்க்க எந்த நேரத்தில தரும் எண்டு சொல்லவே ஏலாது!”
ஒருவழியாக அரிசியைக் கண்டு பிடித்தாள். முருங்கைக்காய் கண்ணுக்கு முன்னாலேயே காலை நீட்டிக்கொண்டு அமர்ந்திருந்தது. அதையே குழம்புக்கு எடுத்து வைத்தாள். உப்பு, மஞ்சள்தூள் எங்கே இருக்கிறது என்கிற தேடலில் கண்டுபிடித்த பருப்பையும் வெளியே எடுத்துவைத்தாள்.
எல்லாம் தயார். சமையலை எங்கிருந்து எடுத்து வைப்பது? அப்பா வீட்டுச் சொத்தாக அவளோடு கூடவே வந்த போனில் இலங்கைச் சமையல் என்று கொடுத்துத் தேடினாள்.
யாரோ ரோசிகஜனாம். சமையல் விற்பண்ணி என்று தன்னைத் தானே பீற்றிக்கொள்ளும் அவர் பல வீடியோக்களைப் பதிவேற்றியிருந்தார். சும்மா சொல்லக் கூடாது, லட்சத்தைத் தாண்டியிருந்தது பார்வையாளர்களின் எண்ணிக்கை. “அப்ப சுமாரா சமைப்பாவாத்தான் இருக்கும்!” நம்பிக்கையோடு அவரின் வீடியோக்களுக்குள் சென்று, ‘அரிசி உழை வைப்பது எப்படி?’ என்று கொடுத்துத் தேடினாள்.
உடனேயே கண்ணுக்கு முன்னால் வந்து நின்றார் ரோசிகஜன். மெல்லிய உடல்வாகு. வயதைக் காட்டிக்கொடுக்காத அளவான மேக்கப். பார்ப்பதற்கு நன்றாக இருந்தார். ‘அப்ப சமையலும் நல்லாருக்கும்!’ நம்பிக்கை பிறக்க, அவரின் வீடியோவைத் தட்டிவிட்டாள்.
“அன்பு நேயர்களே வணக்கம்! இன்று நாம்..” என்று அவர் ஆரம்பிக்க,
“வணக்கம் வணக்கம்! விசயத்துக்கு வாங்க!” என்றாள் ஆரணி.
“முதலில் அரிசியை ஒரு பாத்திரத்துக்குள் போடவும்.”
“பின்ன என்ன நிலத்திலையா போடுறது.”
“மிதமான தண்ணீரில் அரிசியை மூன்று நான்கு முறை நன்றாக அலசவும்!”
“ஏன், சூடான தண்ணில கழுவினா அரிசி குளிக்க மாட்டன் எண்டு அடம் பிடிக்குமா என்ன? அதென்ன மிதமான தண்ணி?” என்றபடி நான்கைந்துமுறை அலசிக்கொண்டாள்.
அவர் சொன்னதுபோலவே அளவாகத் தண்ணீரை வைத்து அடுப்பிலேற்றி அது கொதிக்கத் தொடங்கவும் அரிசியைப் போட்டாள். உப்பும் போட்டு, கொதித்துப் பொங்கி வரும்போதெல்லாம் அவர் சொன்னதுபோலவே கிளறிக் கிளறி விட, நன்றாகவே வெந்து வந்திருந்தது சோறு!
அதுவும் வெள்ளை வெளேர் என்று வெள்ளை முத்துக்களைப் போல ஒவ்வொரு சோறாக மின்ன, அவள் கண்களும் சந்தோசத்தில் மின்னியது! “ரோசிகஜன்! ஐ லைக் யூ!” என்று அவருக்கு ஒரு பறக்கும் முத்தத்தைப் பரிசளித்துவிட்டுத் துள்ளலோடு சோற்றினை ஒரு கரையாக இறக்கி வைத்தாள்.
அப்படியே அவர் காட்டிக் கொடுத்தது போலவே, சூடான எண்ணையில் கடுகை வெடிக்க விட்டு, பெருஞ்சீரகம், வெந்தயம், வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை எல்லாம் போட்டு வதக்கி, இஞ்சி உள்ளி போட்டுப் பிரட்டி, வெட்டி வைத்திருந்த தக்காளிப்பழம் போட்டு அதையும் வதக்கி, எண்ணை விடத் தொடங்கிய பொழுதில் உப்பும் மஞ்சளும் சேர்த்தாள்.
நார் எடுத்து ஒரு விரல் அளவுக்கு துண்டு துண்டுகளாக வெட்டி, இரண்டாக்கப் பிளந்து வைத்திருந்த முருங்கைக்காய்களை அதற்குள் போட்டுப் பிரட்டினாள். முருங்கைக்காய் ஓரளவுக்கு வதங்கி வரும்போது இரண்டு உருளைக்கிழங்குகளைத் துண்டுகளாக்கிப் போட்டு, மல்லி, செத்தல்மிளகாய், மஞ்சள்கட்டி, மிளகு, கறிவேப்பிலை என்று இன்னும் என்னென்னவோ எல்லாம் சேர்த்து அரைத்திருந்த யாழ்ப்பாணத்து மிளகாய்த் தூளினைப் போட்டுப் பிரட்டி, தேவையான அளவு நீர் வீட்டுக் கொதிக்க வைத்தாள். கறி பார்வைக்குக் குணமும் மணமுமாக நன்றாகவே இருக்க, அவளுக்குள் தானாகவே ஒரு துள்ளல் வந்து அமர்ந்துகொண்டது!
அவர் காட்டிக் கொடுத்தது போலவே பருப்பிலும் ஒரு பால்கறி வைத்து, அப்பளம் மிளகாய் பொறித்து, பாத்திரங்களை ஒதுக்கி என்று அவள் சமையலை முடித்தபோது மூன்று மணித்தியாலங்கள் கடந்திருந்தது. முற்றிலுமாகக் களைத்தே போயிருந்தாள். அடுப்பு நெருப்பு தன் வெம்மையால் அவளை எரித்தே விட்டிருந்தது. தேகமெல்லாம் வியர்வையில் குளித்திருந்தது. கையில் ஒருசில வீரத் தழும்புகளும் உண்டாயிற்று. ஆனாலும், அவளின் உற்சாகத்துக்குக் குறைவில்லை. தானே உருவாக்கிய ஒன்று மிக மிக நன்றாக வந்துவிட்டிருக்கிற சந்தோசம்.
“மாமி! சாப்பாடு ரெடி! சாப்பிட வாங்கோ!” உற்சாகமாய்க் குரல் கொடுத்தாள்.
சத்தமில்லாமல் போக சோற்றை மட்டும் போட்டு ஆற வைத்துவிட்டு அவரின் அறைக்கே சென்றாள்.
“மாமி, வாங்கோ சாப்பிட!”
“பசிச்சா எனக்குச் சாப்பிடத் தெரியும். நீ உன்ர வேலையைப் பார்!”
“அதெப்படி? முதல் முதல் சமைச்சிருக்கிறன். சாப்பிட்டு எப்பிடி இருக்கு எண்டு நீங்க ஒரு வார்த்தை சொல்லவேணாமா?”
சினத்துடன் அவளை முறைத்துவிட்டு எழுந்து வந்தார் அவர். உண்மையிலேயே அவள் சமைக்க எடுத்துக்கொண்ட மூன்று மணித்தியாலத்தில் அவருக்குப் பசியில் தலையே சுற்றுவது போலாயிற்று. ஆனாலும், எட்டியும் பாக்கக் கூடாது என்கிற வைராக்கியத்தோடு படுத்தே கிடந்தார். இதில், ‘ஏதாவது தெரியாது எண்டு கேட்டுக்கொண்டு வரட்டும், நல்லா குடுத்து அனுப்புறன்.’ என்றும் கருவிக்கொண்டார்.
ஒரு வார்த்தை கூட கேட்காமல் முழுமையாக அவரை ஏமாற்றி இருந்தாள் அவள்.
அவர் கையைக் கழுவிக்கொண்டு வருவதற்குள், போட்டுவைத்திருந்த சோற்றின்மீது முருங்கைக்காய் குழம்பு, பருப்பு வைத்து மிளகாய், அப்பளமும் வைத்துக் கொண்டுவந்து கையிலேயே கொடுத்தாள் ஆரணி.
“சாப்பிடுங்க மாமி!” ஒரு சில்வர் கப்பில் தண்ணீரும் கொண்டுவந்து வைத்தாள்.
சோற்றைக் குழைத்து வாயில் வைத்தவர், சற்றுநேரம் ஒன்றுமே சொல்லவில்லை. பின் மெல்ல மென்று விழுங்கினார்.
அதற்காகவே காத்திருந்தவள், “எப்பிடி இருக்கு மாமி? நல்லாருக்கா? என்ர முதல் சமையல். வீட்டுல கிச்சனுக்கு நான் போன நாளை விரல் விட்டு எண்ணலாம்.” என்று தன்பாட்டுக்கு வளவளத்தாள்.
ஒன்றுமே சொல்லாமல் சாப்பிட்டு முடித்து எழுந்துபோனார் அவர்.
“திமிர் உங்களுக்கு! ஓகே ஓகே! ஆரணின்ர மாமிக்கு இந்தளவுக்காவது திமிர் இல்லாட்டி எப்பிடி? நான் உங்களையும் லைக் பண்ணுறன் மாமி!” என்றுவிட்டு குளிக்கப் போனாள்.
பொழுது மத்தியானத்தைத் தொட்டிருந்தது. நிகேதனுக்கு அழைத்தபோது, “வை ஆரா எடுக்கிறன்.” என்று அழைப்பைத் துண்டித்திருந்தான் அவன். நல்ல மனநிலையில் போகாதவனுக்கு மீண்டும் மீண்டும் எடுத்துத் தொந்தரவு செய்ய மனமில்லை. அமராவதி அம்மா பகல் சமையலை ஆரம்பிப்பதாகவும் தெரியவில்லை. வேண்டுமென்றே செய்கிறார் என்று புரிந்தது. அவன் வந்து, ‘பசிக்குது, சாப்பிட எதையாவது கொண்டுவா.’ என்றால் என்ன செய்வாள்?
போய்க் கேட்டால் என்ன சொல்லுவாரோ? நிகேதனின் பசிக்கும் வயிறு தயக்கத்தைப் பின்னுக்குத் தள்ள, அவரின் அறை வாசலில் போய் நின்றாள். கட்டிலில் படுத்திருந்தார் அவர்.
“மாமி சமைக்கேல்லையா? நிகேதன் பசியோட வரப்போறான்.” என்றாள் மெல்ல.
“அவ்வளவு அக்கறை இருந்தா நீயே போய்ச் சமை! சும்மா சும்மா கண்ணுக்கு முன்னால வந்து நிண்டு எரிச்சலை கிளப்பாத!” எரிந்து விழுந்துவிட்டு திரும்பிப் படுத்துக்கொண்டார் அவர்.
காலையில் கதைத்ததில் கொஞ்சமாவது இறங்கி வருவார் என்று எதிர்பார்த்த ஆரணி அவரின் இந்தக் கோபத்தில் ஏமாந்துபோனாள். “எனக்குச் சமைக்கத் தெரியாது மாமி!” தன்னைச் சமாளித்துக்கொண்டு சொன்னாள்.
“எவனையாவது பிடிக்க மட்டும் நல்லா தெரியும் போல!”
“மாமி போதும்! இப்ப என்ன, நான் சமைக்கவேணும். அவ்வளவுதானே! சமைக்கிறன்! நான் சமைக்கிறத சாப்பிடவேணும் எண்டு உங்கட தலைல எழுதி இருந்தா யார் என்ன செய்யேலும் சொல்லுங்கோ?” என்றுவிட்டு வந்தவளுக்கு எரிச்சல் தான் மிகுந்திருந்தது. ‘ஊரைச் சுத்துறது, வளச்சுப் போடுறது, ஆளைப் பிடிக்கிறது என்ன வார்த்தைகள்?’
‘என்ன பெரிய சமையல்! யு டியூபை தட்டினா எல்லாச் சாப்பாடும் வந்து கொட்டப்போது!’ தேவையில்லை என்கிறவரைதான் எதுவுமே தெரியாது. தேவை என்கிற கட்டம் வருகையில் தெரிய வந்துவிடும்.
அவளே யூ டியூபராக மாறிக்கொண்டாள்.
“முதலில் சமையலில் நீங்க செய்யவேண்டிய காரியம், என்ன சமைப்பது எண்டு முடிவு செய்யவேணும்!”
நாளாந்த வாழ்வின் மிகச் சிக்கலான கேள்வி எது என்று எந்தக் குடும்பப் பெண்ணைக் கேட்டாலும் கண்ணை மூடிக்கொண்டு சொல்லும் பதில், ‘இன்றைக்கு என்ன சமைப்பது?’ என்பதுதான். அந்தக் கேள்வியை முதலில் வைத்தாள் ஆரணி.
“நமக்குச் சோறு முக்கியம்! எனவே முதலில் அரிசியை எடுத்து வைக்கவும்!”
“அரிசி எங்க இருக்கு?” புதையல் புலப்படவே இல்லை.
“என்னைமாதிரியே உருப்படாம இருக்கிற உருட்டுக்கட்டைகளே, குறைஞ்சது உங்க வீட்டுல அரிசி எங்க இருக்கு எண்டாவது பாத்து வைங்க. காலம் நமக்கு எந்த டாஸ்க்க எந்த நேரத்தில தரும் எண்டு சொல்லவே ஏலாது!”
ஒருவழியாக அரிசியைக் கண்டு பிடித்தாள். முருங்கைக்காய் கண்ணுக்கு முன்னாலேயே காலை நீட்டிக்கொண்டு அமர்ந்திருந்தது. அதையே குழம்புக்கு எடுத்து வைத்தாள். உப்பு, மஞ்சள்தூள் எங்கே இருக்கிறது என்கிற தேடலில் கண்டுபிடித்த பருப்பையும் வெளியே எடுத்துவைத்தாள்.
எல்லாம் தயார். சமையலை எங்கிருந்து எடுத்து வைப்பது? அப்பா வீட்டுச் சொத்தாக அவளோடு கூடவே வந்த போனில் இலங்கைச் சமையல் என்று கொடுத்துத் தேடினாள்.
யாரோ ரோசிகஜனாம். சமையல் விற்பண்ணி என்று தன்னைத் தானே பீற்றிக்கொள்ளும் அவர் பல வீடியோக்களைப் பதிவேற்றியிருந்தார். சும்மா சொல்லக் கூடாது, லட்சத்தைத் தாண்டியிருந்தது பார்வையாளர்களின் எண்ணிக்கை. “அப்ப சுமாரா சமைப்பாவாத்தான் இருக்கும்!” நம்பிக்கையோடு அவரின் வீடியோக்களுக்குள் சென்று, ‘அரிசி உழை வைப்பது எப்படி?’ என்று கொடுத்துத் தேடினாள்.
உடனேயே கண்ணுக்கு முன்னால் வந்து நின்றார் ரோசிகஜன். மெல்லிய உடல்வாகு. வயதைக் காட்டிக்கொடுக்காத அளவான மேக்கப். பார்ப்பதற்கு நன்றாக இருந்தார். ‘அப்ப சமையலும் நல்லாருக்கும்!’ நம்பிக்கை பிறக்க, அவரின் வீடியோவைத் தட்டிவிட்டாள்.
“அன்பு நேயர்களே வணக்கம்! இன்று நாம்..” என்று அவர் ஆரம்பிக்க,
“வணக்கம் வணக்கம்! விசயத்துக்கு வாங்க!” என்றாள் ஆரணி.
“முதலில் அரிசியை ஒரு பாத்திரத்துக்குள் போடவும்.”
“பின்ன என்ன நிலத்திலையா போடுறது.”
“மிதமான தண்ணீரில் அரிசியை மூன்று நான்கு முறை நன்றாக அலசவும்!”
“ஏன், சூடான தண்ணில கழுவினா அரிசி குளிக்க மாட்டன் எண்டு அடம் பிடிக்குமா என்ன? அதென்ன மிதமான தண்ணி?” என்றபடி நான்கைந்துமுறை அலசிக்கொண்டாள்.
அவர் சொன்னதுபோலவே அளவாகத் தண்ணீரை வைத்து அடுப்பிலேற்றி அது கொதிக்கத் தொடங்கவும் அரிசியைப் போட்டாள். உப்பும் போட்டு, கொதித்துப் பொங்கி வரும்போதெல்லாம் அவர் சொன்னதுபோலவே கிளறிக் கிளறி விட, நன்றாகவே வெந்து வந்திருந்தது சோறு!
அதுவும் வெள்ளை வெளேர் என்று வெள்ளை முத்துக்களைப் போல ஒவ்வொரு சோறாக மின்ன, அவள் கண்களும் சந்தோசத்தில் மின்னியது! “ரோசிகஜன்! ஐ லைக் யூ!” என்று அவருக்கு ஒரு பறக்கும் முத்தத்தைப் பரிசளித்துவிட்டுத் துள்ளலோடு சோற்றினை ஒரு கரையாக இறக்கி வைத்தாள்.
அப்படியே அவர் காட்டிக் கொடுத்தது போலவே, சூடான எண்ணையில் கடுகை வெடிக்க விட்டு, பெருஞ்சீரகம், வெந்தயம், வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை எல்லாம் போட்டு வதக்கி, இஞ்சி உள்ளி போட்டுப் பிரட்டி, வெட்டி வைத்திருந்த தக்காளிப்பழம் போட்டு அதையும் வதக்கி, எண்ணை விடத் தொடங்கிய பொழுதில் உப்பும் மஞ்சளும் சேர்த்தாள்.
நார் எடுத்து ஒரு விரல் அளவுக்கு துண்டு துண்டுகளாக வெட்டி, இரண்டாக்கப் பிளந்து வைத்திருந்த முருங்கைக்காய்களை அதற்குள் போட்டுப் பிரட்டினாள். முருங்கைக்காய் ஓரளவுக்கு வதங்கி வரும்போது இரண்டு உருளைக்கிழங்குகளைத் துண்டுகளாக்கிப் போட்டு, மல்லி, செத்தல்மிளகாய், மஞ்சள்கட்டி, மிளகு, கறிவேப்பிலை என்று இன்னும் என்னென்னவோ எல்லாம் சேர்த்து அரைத்திருந்த யாழ்ப்பாணத்து மிளகாய்த் தூளினைப் போட்டுப் பிரட்டி, தேவையான அளவு நீர் வீட்டுக் கொதிக்க வைத்தாள். கறி பார்வைக்குக் குணமும் மணமுமாக நன்றாகவே இருக்க, அவளுக்குள் தானாகவே ஒரு துள்ளல் வந்து அமர்ந்துகொண்டது!
அவர் காட்டிக் கொடுத்தது போலவே பருப்பிலும் ஒரு பால்கறி வைத்து, அப்பளம் மிளகாய் பொறித்து, பாத்திரங்களை ஒதுக்கி என்று அவள் சமையலை முடித்தபோது மூன்று மணித்தியாலங்கள் கடந்திருந்தது. முற்றிலுமாகக் களைத்தே போயிருந்தாள். அடுப்பு நெருப்பு தன் வெம்மையால் அவளை எரித்தே விட்டிருந்தது. தேகமெல்லாம் வியர்வையில் குளித்திருந்தது. கையில் ஒருசில வீரத் தழும்புகளும் உண்டாயிற்று. ஆனாலும், அவளின் உற்சாகத்துக்குக் குறைவில்லை. தானே உருவாக்கிய ஒன்று மிக மிக நன்றாக வந்துவிட்டிருக்கிற சந்தோசம்.
“மாமி! சாப்பாடு ரெடி! சாப்பிட வாங்கோ!” உற்சாகமாய்க் குரல் கொடுத்தாள்.
சத்தமில்லாமல் போக சோற்றை மட்டும் போட்டு ஆற வைத்துவிட்டு அவரின் அறைக்கே சென்றாள்.
“மாமி, வாங்கோ சாப்பிட!”
“பசிச்சா எனக்குச் சாப்பிடத் தெரியும். நீ உன்ர வேலையைப் பார்!”
“அதெப்படி? முதல் முதல் சமைச்சிருக்கிறன். சாப்பிட்டு எப்பிடி இருக்கு எண்டு நீங்க ஒரு வார்த்தை சொல்லவேணாமா?”
சினத்துடன் அவளை முறைத்துவிட்டு எழுந்து வந்தார் அவர். உண்மையிலேயே அவள் சமைக்க எடுத்துக்கொண்ட மூன்று மணித்தியாலத்தில் அவருக்குப் பசியில் தலையே சுற்றுவது போலாயிற்று. ஆனாலும், எட்டியும் பாக்கக் கூடாது என்கிற வைராக்கியத்தோடு படுத்தே கிடந்தார். இதில், ‘ஏதாவது தெரியாது எண்டு கேட்டுக்கொண்டு வரட்டும், நல்லா குடுத்து அனுப்புறன்.’ என்றும் கருவிக்கொண்டார்.
ஒரு வார்த்தை கூட கேட்காமல் முழுமையாக அவரை ஏமாற்றி இருந்தாள் அவள்.
அவர் கையைக் கழுவிக்கொண்டு வருவதற்குள், போட்டுவைத்திருந்த சோற்றின்மீது முருங்கைக்காய் குழம்பு, பருப்பு வைத்து மிளகாய், அப்பளமும் வைத்துக் கொண்டுவந்து கையிலேயே கொடுத்தாள் ஆரணி.
“சாப்பிடுங்க மாமி!” ஒரு சில்வர் கப்பில் தண்ணீரும் கொண்டுவந்து வைத்தாள்.
சோற்றைக் குழைத்து வாயில் வைத்தவர், சற்றுநேரம் ஒன்றுமே சொல்லவில்லை. பின் மெல்ல மென்று விழுங்கினார்.
அதற்காகவே காத்திருந்தவள், “எப்பிடி இருக்கு மாமி? நல்லாருக்கா? என்ர முதல் சமையல். வீட்டுல கிச்சனுக்கு நான் போன நாளை விரல் விட்டு எண்ணலாம்.” என்று தன்பாட்டுக்கு வளவளத்தாள்.
ஒன்றுமே சொல்லாமல் சாப்பிட்டு முடித்து எழுந்துபோனார் அவர்.
“திமிர் உங்களுக்கு! ஓகே ஓகே! ஆரணின்ர மாமிக்கு இந்தளவுக்காவது திமிர் இல்லாட்டி எப்பிடி? நான் உங்களையும் லைக் பண்ணுறன் மாமி!” என்றுவிட்டு குளிக்கப் போனாள்.