அவள் ஆரணி - 9

நிதனிபிரபு

Administrator
Staff member
அத்தியாயம் 9


அன்றும் அவனுக்கு முதலே கண்விழித்துவிட்டாள் ஆரணி. முகம் கழுவிக்கொண்டு வந்து சுவாமிப் படத்தின் முன்னே நின்றாள். உள்ளத்தின் ஆழத்திலிருந்து, “அவனுக்கு வேலை கிடைச்சிடவேணும்.” என்று உருக்கமாக வேண்டிக்கொண்டாள். சமையலறைக்குள் எட்டிப் பார்க்க, அமராவதி அம்மா ரொட்டி சுட்டுக் கொண்டிருப்பது தெரிந்தது. கயலினி கல்லூரிக்குத் தயாராகிக் கொண்டிருந்தாள்.

தேனீருக்குத் தண்ணீரைக் கொதிக்க வைத்தபடி, “உங்களுக்கும் தேத்தண்ணி ஊத்தவா மாமி?” என்றாள், இயல்பாக. முகம் கடுக்கக் காதிலேயே விழாதது போன்று தன் வேலையைப் பார்த்தார் அவர்.

“உனக்கும் வேணுமா கயல்?” அங்குவந்த கயலையும் கேட்டாள்.

ஒன்றும் சொல்லாமல் அவளை ஒரு பார்வை பார்த்துவிட்டு விரைந்து மறைந்தவளை அப்படியே ஒதுக்கினாள். மாமியாருக்கு ஒரு கப்பை வைத்துவிட்டு, தட்டு ஒன்றில் தனக்கும் அவனுக்கும் எடுத்து வைத்தாள். இன்னொரு தட்டில் அவனுக்கு ரொட்டிகளோடு தேங்காய்ச் சம்பலையும் எடுத்துக்கொண்டு அறைக்கு நடந்தாள்.

நேற்றுப்போல் மாமி எதையாவது சொல்லி, அவன் சாப்பிடாமல் குடிக்காமல் போவதைக் காட்டிலும் அறையில் வைத்தே அவனுக்குக் கொடுத்துவிட்டால் பசியில்லாமல் வேலை தேடுவான். அவளும் நிம்மதியாக இருப்பாள். அதோடு, அறைக்குள் அவனும் அவளுமாய் உண்ட இரவுப்பொழுது மனதுக்கு வெகு நெருக்கத்தையும் மகிழ்ச்சியையும் உருவாக்கி இருந்தது.

அவனும் கண் முழித்திருந்தான்.

“குட்மோர்னிங் மச்சி!”

ஒற்றைப் பார்வையில் அவளின் தோற்றத்தை உள்வாங்கிய நிகேதன், “நான் சொல்லமாட்டன் போ!” என்றபடி புரண்டு படுத்துத் தலையணையில் முகத்தைப் புதைத்துக்கொண்டான்.

“ஏனடா?” காலையிலேயே கணவனின் ஊடல் காதலைக் கூட்டிற்று. அவனருகிலேயே அமர்ந்து அவன் கேசத்தோடு விளையாடினாள் ஆரணி.

“இந்த நைட்டி நல்லாவே இல்லையடி! இரவில மட்டும் என்ர உடுப்பையே போடு!” என்றான் அவன், ஆவலோடு.

திருடனுக்குத் திருட்டுக்குணம்!

“வெக்கம் கெட்டவனே! எழும்படா!” திட்டிவிட்டு எழுந்தவளை இழுத்து விழுத்தி, தன்னோடு அழுத்திக் கண்ணால் சிரித்தான் அவன். “போடடி! பாக்கவே கிக்கா இருக்கும்.” என்றான் ஆசையாக.

அவன் கையில் கரைந்த மேனியை கட்டுப்படுத்த முயன்றபடி, “கையை எடு, நிக்கி!” என்றாள்.

“நீ போடுறன் எண்டு சொல்லு, நான் எடுக்கிறன்!”

“கள்ள ராஸ்கல்! கதைக்கிறது ஒண்டு. செய்றது ஒண்டு! எடுடா கைய!” அவன் கையிலேயே ஒரு அடியைப் போட்டுத் தள்ளி விட்டாள், அவள்.

“ஆசையா வந்தா.. ஆகத்தான்! போடி! கிட்ட வராத!” என்று முகம் திருப்பியவனின் கைகளை எடுத்துத் தன்னைச் சுற்றிப் போட்டுக்கொண்டாள். அப்போதும் அவன் முறுக்கிக்கொள்ள, “என்னடா ஆகத்தான் துள்ளுறாய்? பிறகு வீட்டை விட்டே போய்டுவன். மாமியும் சந்தோசப்படுவா! நீயும் நிம்மதியா இரு!” என்றாள் அவள்.

நொடியில் அவன் விழிகள் கோபத்தில் சிவந்தது. “அந்தளவுக்குத் தைரியம் இருக்கா உனக்கு? முடிஞ்சா போய்க் காட்டு! அடிச்சு முறிச்சு மூலைல போட்டுடுவன்.” என்றவனின் படபடப்பு அவளுக்குள் இனித்துக்கொண்டு இறங்க ஒரு வேகத்துடன் அவன் முகமெங்கும் முத்தமிட்டாள்.

அவளை விசித்திரமாகப் பார்த்தான் நிகேதன். திட்டியதற்கு இத்தனை முத்தமா?

அவனது பார்வையின் பொருள் அவளுக்குப் புரியாமல் போகுமா என்ன? போ போ என்ற அமராவதி அம்மாவின் பேச்சினால் உண்டான காயம், அவனது கோபத்தில் ஆறிப்போன கதை அவனுக்குத் தெரியாதே!

“இப்ப என்ன இரவில சாரமும் சட்டையும் போடவேணும். அவ்வளவுதானே? போடுறன்! இனியாவது முறைச்சுக்கொண்டு இருக்காம எழும்பு!” என்றவள் அழுத்தமாய் அவன் கன்னத்தில் உதடுகளைப் பதித்துவிட்டு எழுந்தாள்.

குளித்துவிட்டுத் தயாராகி வந்தவனைக் கண்டு ஆரணியின் மனம் மயங்கியது. சாதாரண ஜீன்ஸ் ஷர்ட் தான். ஆனால் வெகு நேர்த்தியாக அணிந்திருந்தான். கண்ணாடியின் முன்னே நின்று தலைவாரியவன் அவள் பார்வையை உணர்ந்து, “என்ன?” என்று புருவமுயர்த்திக் கேள்வி கேட்டான்.

“வீட்டை விட்டு வெளில வந்து உன்னைக் கட்டினத்துக்கு நீ பெறுமதியான ஆள்தான் மச்சி!” என்றாள், கண்ணைச் சிமிட்டி!

சிரித்தான் நிகேதன். “உன்னையெல்லாம் எப்பிடியடி என்ர மாமனார் சமாளிச்சவர்?”

“அச்சுப் பிசகாம அவரை மாதிரியே பிறந்து வந்த என்னை அவருக்குச் சமாளிக்கத் தெரியாதா, என்ன?”

இருவருமாகச் சேர்ந்து உணவை முடித்துக்கொண்டு வெளியே வந்தனர்.

“இண்டைக்காவது எங்கயாவது வேலைய வாங்கப்பார். என்னவோ அரசாங்க உத்தியோகத்துக்கு போறவன் மாதிரி விடிய வெளிக்கிட்டுப் போறது. பின்னேரம் வாறது.” காலையில் எழுந்ததில் இருந்தே வெளியே வராத மகன், அவனுக்கு அறையில் வைத்தே உணவைக் கொடுத்து, சந்தோசமாய்ச் சிரித்த முகமாய் அவனோடு வெளியே வந்த அவள் என்று இருவரையும் பார்க்க எரிச்சல் உண்டாயிற்று அமராவதி அம்மாவுக்கு.

அதுவரை இருந்த இதமான மனநிலை மாறிவிட, வெளியே போகிறவனை நிம்மதியாகப் போக விடவே மாட்டாரா என்கிற எரிச்சலில், “போகிறவன நிம்மதியா அனுப்பி வச்சாத்தான் அவனும் உற்சாகமா வேலை தேடுவான்.” என்றாள் ஆரணி பட்டென்று.

“விடு! அவா ஏன் அதைப்பற்றியெல்லாம் யோசிக்கப் போறா.” உணர்ச்சியற்ற குரலில் உரைத்தான் நிகேதன்.

“ஓமடா! நல்லா அவளுக்கு வால் பிடி. சும்மாவே உனக்கு மரியாதை மருந்துக்கும் இல்ல. இதுல நீயும் தூக்கி வச்சு ஆடு. கேக்கிற சனம் சிரிப்பாச் சிரிக்கப்போகுது. கண்டறியாத பொம்பிளையைப் பிடிச்சுக்கொண்டு வந்திருக்கிறாய்!” என்றார் அவர்.

நிகேதன் வாய் திறப்பதற்குள் முந்திக்கொண்டிருந்தாள் ஆரணி. “நீங்களும் உங்கட மகனை ஒழுங்கா வளக்கேல்ல மாமி. கட்டின மனுசியை டி போட்டுக் கதைக்கிறான். நான் அவனுக்கு மரியாதை குடுக்கோணும் எண்டால் அவனையும் எனக்கு மரியாதை தரச் சொல்லுங்க! நீங்க சொல்லுறதைக் கேட்டு அவன் எண்டைக்கு எனக்கு மரியாதை தாறானோ அண்டைக்கு அவனுக்கு நானும் குடுக்கிறன்.”

“திருப்பித் திருப்பிக் கதைக்காம வாயை மூடு!” பொறுக்க முடியாமல் எரிந்துவிழுந்தார் அமராவதி. “எங்க இருந்தடா பிடிச்சனி இந்த அடங்காப்பிடாரிய? ஒரு வார்த்தைக்கு ஆயிரம் வார்த்த பதில் செல்லுவாள். ச்சேய்!” வெறுப்புடன் மொழிந்துவிட்டு போனவரின் வார்த்தைகளில் காயப்பட்டுப் போனாள் ஆரணி. விழிகள் கலங்கிவிடும் போலாயிற்று. நிகேதனின் பார்வையைக் கூட எதிர்கொள்ள முடியாமல் தடுமாறினாள்.

ஆத்திரமும் இயலாமையும் பொங்க, “இதுக்குத் தானேடி வேண்டாம் வேண்டாம் எண்டு சொன்னனான். கேட்டியா? இப்ப நல்லா அனுபவி!” என்று சீறிவிட்டுப் போனான் அவன்.

தன்னைச் சமாளித்துக்கொள்ள முடியாமல் தோட்டத்துக்கு நடந்தாள் ஆரணி. எத்தனை மோசமான வார்த்தைகள்? இதெல்லாம் அவளுக்குப் பழக்கமில்லாதவை. ஜீரணித்துக்கொள்ள மிகவுமே போராடினாள். தோட்டம் முழுவதும் நடந்தாள். நடக்க நடக்க மனம் கொஞ்சம் சமநிலைக்கு வந்தது.

முதல்நாள் தோய்த்துப் போட்டிருந்த அவனுடைய ஆடைகளை எடுத்து அயர்ன் பண்ணி அழகாக அடுக்கி வைத்தாள். என்னவெல்லாம் வைத்திருக்கிறான் என்று அறையைப் புரட்டினாள். வேறு வேலை இல்லை என்றதும்,
அவர்களின் அறைக் கதவைத் திறந்ததும் வருகிற இடத்தில் பூவரசம் தடிகள் கொண்டு எல்லை அமைத்து டெரெஸ் உருவாக்கும் பணியை ஆரம்பித்தாள்.

பகல் சமையலுக்கு நேரமானது. சமைப்பதற்கு ஏதுவாக அங்கே பெரிதாக ஒன்றுமில்லை. தயக்கத்தை உதறி அமராவதியிடம் வந்து, “ஏதாவது வாங்கப் போகவேணும் எண்டால் சொல்லுங்கோ மாமி நான் வாங்கிக்கொண்டு வாறன்.” என்று மறைமுகமாகக் கேட்டுப் பார்த்தாள்.

“காசிருக்கா? இருந்தா கோழியிறைச்சி ஒரு கிலோவும், வேற மரக்கறியும் பாத்து வாங்கிக்கொண்டு வா!” என்றார் அவர் அவளுக்கு மேலாக.

காசைப்பற்றி கவலையே இல்லாமல் வாழ்ந்து பழகியவளை தாக்குவதற்கு அந்த ஒற்றைக் கேள்வியே போதுமாயிருந்தது. பேசாமல் சமையலறைக்கு நடந்தாள். பெரிதாக ஒன்றுமே இல்லை. அரிசி, தக்காளிப்பழம், இரண்டு மூன்று வெங்காயம், கொஞ்சம் பச்சை மிளகாய் இப்படித்தான் இருந்தது. மிஞ்சிப்போனால் இன்றும் இன்னும் இரண்டு நாட்களுக்கும் இழுத்துப் பிடிக்கலாம். பிறகு?

பின்னுக்கு இருக்கிற முருங்கை மரமும், கத்தரிக்காய் செடியும் தான் உதவிக்கு வரவேண்டும்.

இருந்த தக்காளியில் கொஞ்சத்தை நாளைக்கு என்று எடுத்து வைத்துவிட்டு உருளைக்கிழங்குக் குழம்பு வைத்தாள். கரட்டினை அரிந்து வெங்காயம் பச்சை மிளகாய் தக்காளிப்பழம் சின்னச் சின்னதாக வெட்டி சம்பல் போட்டுவைத்தாள். அவ்வளவுதான். செய்யும்போதே இதை எப்படி அவன் சாப்பிடுவான் என்றுதான் யோசனை ஓடிற்று. நேற்றும் மரக்கறி(காய்கறி). இன்றும் அதேதான். நாளை சமையல் திட்டமும் தக்காளிப்பழக் குழம்புதான். மச்சம்(கறி) இல்லாது அவளுக்கே உள்ளுக்குப் போகாது. ஆண்பிள்ளை அவனுக்கு இறங்குமா?
 

நிதனிபிரபு

Administrator
Staff member
இதைப்பற்றி அவள் நிகேதனிடம் ஒன்றுமே வாய்விடவில்லை. நாட்கள் நகர நகர இருப்பதை வைத்துச் சமாளித்தாள். என்ன கொடுத்தாலும் கேள்வியே இல்லாமல் சாப்பிடுகிற அவனுடைய இயல்பு வேறு அவளை வதைத்தது.

கல்லூரிக்குச் செல்லும் கயலினிக்காக காலையில் மட்டும் நேரத்துக்கே எழுந்து இருக்கிற மாவில் ரொட்டியோ புட்டோ இடியப்பமோ செய்துவிடுவார் அமராவதி. அதை அவனும் உண்டுவிட்டுப் போவதுபோல் பார்த்துக்கொள்வாள் ஆரணி. அவளுக்கே அவளை எண்ணி ஆச்சரியம். எப்படியெல்லாம் மாறிப்போனாள்? காலம் எப்படியெல்லாம் மாற்றிவிடுகிறது. இந்தப் பத்து நாட்களில் அவனுக்கு வேலை கிடைத்த பாடேயில்லை.

அன்று சமைப்பதற்கு ஒன்றுமே இல்லை என்கிற நிலை. அதை எண்ணியே இரவிரவாக அவளுக்கு உறக்கமில்லை. காலையிலும் நிகேதனுக்கு முதல் விழிப்பு வந்திருந்தது. சத்தமில்லாமல் அவனுடைய பெர்சினை எடுத்துப் பார்த்தபோது கண்கள் குளமாகிற்று. ஒன்றிரண்டு பத்திருபது ரூபாய் தாள்கள் மட்டுமே கசங்கிப்போய் மடிந்து கிடந்தது. கைகாவலுக்கு என்று செலவே செய்யாமல் வைத்திருக்கிறான் போலும்.

அப்படியே அமர்ந்துவிட்டாள்.

வேலைக்குத் தானும் முயற்சித்துப் பார்க்கலாமா என்கிற யோசனை இப்போதெல்லாம் வரத்தொடங்கியிருந்தது. அதை அவனிடம் கேட்கத் தயங்கினாள். இப்போதெல்லாம் அவனிடம் வெகு கவனமாகத்தான் கதைக்கவேண்டி இருந்தது. அந்தளவில் தனக்குள் நலிவடைந்து போயிருந்தான் நிகேதன்.

அவனுடைய உற்சாகம், பேச்சு, சிரிப்பு எல்லாமே குறைந்து குறைந்து நின்றே போயிற்று! அவளிடம் எதையுமே காட்டிக்கொள்வதில்லை. ஆனால், தனக்குள் வைத்துக் குமைகிறான் என்று அவளுக்கு விளங்காதா? திசை திருப்ப எவ்வளவு முயன்றாலும் ஆரணி தோற்றுத்தான் போவாள்.

அன்றும், கயலினியின் தயவால் காலையில் நிகேதனுக்கு உணவைக் கொடுத்து நல்லபடியாக அனுப்பி வைத்தாள். சமையலறையை ஒதுக்கினாள். வீட்டைத் தூசு தட்டிக் கூட்டினாள். கழுவிப்போட வேண்டிய உடைகளை அலசிக் காயப்போட்டாள். இனி? கொஞ்சம் கொஞ்சமாக அவளே உருவாக்கிய டெரெஸ்சில் நிகேதனைக் கொண்டு மரக் குற்றிகளால் அமைத்த பெஞ்சில் வந்து அமர்ந்துகொண்டாள். செய்வதற்கு வேலைகள் என்று எதுவுமில்லை. இன்னொரு ஜீவன் அருகிலே இருந்தும் பேச்சுத் துணைக்குக் கூட ஆளில்லா தனிமை. சும்மா இருப்பதே ஒருவித அழுத்தத்தை உண்டாக்கிற்று.

அமராவதியிடம் நிச்சயம் பணம் இருக்கும். ஆனாலும் அவள் வந்த நாளில் இருந்து வீட்டுக்கு ஒரு குண்டுமணி கூட வாங்கிப் போடவில்லை. ஏன் இப்படி? அவனை வேலைக்குப் போக வைத்தே ஆகவேண்டும் என்கிற பிடிவாதமா? அதில் தவறில்லை. ஆனால்..

கயலினி சைக்கிளை நிறுத்திவிட்டு வேகவேகமாக வீட்டுக்குள் நுழைவது தெரிந்தது. பசியோடு போகிறாளோ? எப்போதுமே வந்ததும் வராததுமாக உடைமாற்றிவிட்டுச் சாப்பிடுவதுதான் அவள் வழக்கம். இன்று? இருக்கிற மாவில் ரொட்டியாவது சுட்டுக் கொடுப்போம் என்று எழுந்து வந்தவளின் நடை அவர்களின் அறையின் முன்னே நின்றது!

ஏதோ வாசனை.. சாப்பாட்டு வாசனைதான்! இதுதானா இன்று கயலினி வேகவேகமாக வீட்டுக்குள் நுழைந்ததன் ரகசியம். கசந்த புன்னகை ஒன்று இதழோரம் வழிந்தது.

மீண்டும் பழைய இடத்திலேயே அமர்ந்துகொண்டாள். அவர்கள் வயிற்றை நிரப்பிக் கொண்டார்கள். அவன் வருவானே? அவனுக்கு என்ன கொடுப்பது? மகளுக்குக் கடையில் வாங்கிக் கொடுத்த மாமியார் மகனுக்கு என்ன செய்கிறார் என்று பார்ப்போமே? இன்று இதற்கு ஒரு முடிவு கட்டவேண்டும் என்கிற வீம்புடன் அமர்ந்துகொண்டாள்.

நிகேதனும் வந்தான். அவளின் வீம்பை முந்திக்கொண்டு அவனது பசிக்கும் வயிறு அவளைப் பந்தாடியது. குளித்துவிட்டு வந்து, “சாப்பிட என்ன இருக்கு ஆரா?” என்று கேட்டுக்கொண்டு சமையலறை நோக்கி நடந்தான் அவன்.

அப்படியே நின்றுவிட்டாள் ஆரணி. இன்று என்று பார்த்து வாய்விட்டுக் கேட்கிறானே. என்ன கொடுக்கப் போகிறாள்?
வெறும் பாத்திரங்களைப் பார்த்துவிட்டு ஏமாற்றத்தோடு திரும்பப் போகிறவனின் பசி நிறைந்த விழிகளைச் சந்திக்கும் தெம்பற்று கண்களை இறுக்கி மூடிக்கொண்டாள் ஆரணி.

வெறும் பாத்திரங்களைக் கண்டவன் அதிர்வோடு அவளைத் திரும்பிப் பார்த்தான். வீட்டின் நிலை மிகப் பயங்கரமாகத் தாக்கியது. அதைவிட அவள் நிற்கும் கோலம்..

வேகமாக அவளை நெருங்கி, “லூசு! விடு, நான் சாப்பிட்டன். சும்மாதான் கேட்டனான். நீ ஏதாவது சாப்பிட்டியா?” என்றான்.

வெறும் வயிறு பசியில் காந்த மறைத்துக்கொண்டு சமாளிக்கிறான். அவளால் அழுகையை அடக்கவே முடியவில்லை. வாயைக் கையால் பொத்திக்கொண்டு ஓடிப்போய்க் கட்டிலில் விழுந்தவளின் உடல் அழுகையில் குலுங்கியது!

தான் சிறப்பாக நடிக்கவில்லை என்று அவனுக்கும் புரிந்தது. இயலாமை கோவமாக உருவெடுக்க, “இதுக்குத்தானடி என்னைக் கட்டாத கட்டாத எண்டு சொன்னன். கேட்டியா? இதையெல்லாம் அனுபவிக்க வேணும் எண்டு உனக்கு என்ன தலையெழுத்தா?” என்று சீறினான்.

வேகமாக எழுந்து அவன் வாயை மூடினாள் ஆரணி.

“இப்படியெல்லாம் கதைக்காத நிக்கி. நாங்க பிரிஞ்சு போயிருந்தா எனக்கு நீயும் உனக்கு நானும் கிடைச்சிருக்க மாட்டோமேடா. அத நினை. எனக்கு நீ பக்கத்தில இருக்கிற வரைக்கும் இதெல்லாம் ஒரு விசயமே இல்ல. என்னை விட்டுட்டு மட்டும் போயிடாத நிக்கி. செத்துடுவன்.” என்றாள், அழுகையில் துடிக்கும் இதழ்களோடு!

அவளை இழுத்துத் தன் மார்போடு அணைத்துக்கொண்டான் நிகேதன். “நீ இல்லாம எனக்கு மட்டும் என்னடி வாழ்க்கை இருக்கு? உன்ன விட்டுட்டு நான் எங்க போக?” என்றவன் சற்று நேரத்து அமைதியின் பின், “கிடைக்கிற வேலைக்கே போகட்டா ஆரா?” என்றான் முகத்தை வேறுபுறம் திருப்பிக்கொண்டு.

மனம் கலங்கத் தன்னவனைப் பார்த்தாள் ஆரணி. படிப்பும் பட்டமும் பரமபதத்தின் நீண்ட ஏணியைப் போன்று தன்னைக் கொண்டுபோய் உச்சியில் நிறுத்திவிடும் என்று நம்பியவன். அது நடவாமல் தொடர் தோல்விகளும் ஏமாற்றமும் அவமானமும் மட்டுமே கிட்டுவதில் அவன் மெல்ல மெல்ல நொறுக்கிக்கொண்டிருப்பதைக் கண்ணீருடன் கண்டாள். இப்போதே அவனளவில் ஒன்றுமே இல்லாத வேலைகளுக்குத்தான் கேட்டுக்கொண்டு இருக்கிறான். இதைவிடவும் இறங்குவது என்றால்..

“நம்பிக்கையைத் தளர விடாத நிக்கி! படிச்ச படிப்புக்குக் கட்டாயம் வேலை கிடைக்குமடா. இப்ப என்ன சாப்பாட்டுக்கு காசில்லை, அவ்வளவுதானே. இந்தா இதைக் கொண்டுபோய் அடகுவை. இல்ல வித்திட்டு வா. நான் சமாளிப்பன்!” என்று, தாலிக்கொடியைக் கழற்றிக் கொடுத்தாள்.

அப்படியே அமர்ந்துவிட்டான் நிகேதன். அவளின் தந்தை போட்டுவிட்ட நகைகளை தாலிக்கொடியாக மாற்றியதையே இன்னும் அவனால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. சொந்தக் காசில் தாலிகூட கட்டமுடியாமல் போயிற்றே என்று குமைந்துகொண்டு இருக்கிறான். அப்படி இருக்கையில் அதையும் விற்றுச் சாப்பிடுவது என்றால்? அதையே வெறித்தான். தன்னை நம்பி வந்தவளுக்குக் குறைந்த பட்சமாக மூன்றுவேளை உணவு கூடக் கொடுக்க முடியவில்லை. அவளின் அப்பா இப்போது அவனைப் பார்த்தால், எவ்வளவு துச்சமாக நோக்குவார்?

“நீயும் என்னை வக்கில்லாதவன் எண்டு நினைச்சிட்டியாடி?” என்றான் விரக்தியோடு.

துடித்துப்போனாள் அவள். “நான் அப்பிடி நினைப்பனா நிக்கி? உனக்கு என்னைத் தெரியாதா?”

அதற்கு அவன் பதிலிறுக்கவில்லை. தன்னளவிலேயே சுயமதிப்பிழந்து தனக்குள் வெந்துகொண்டிருந்தான்.

“நாளைக்கு வா, அப்பாடா பிரென்ட் ஒருத்தரத் தெரியும். அவரின்ர கம்பனில வேலை கேப்பம். கட்டாயம் கிடைக்கும்.” என்றாள் அவள்.

“ப்ச்!” எல்லாமே கசந்து போயிற்று அவனுக்கு. சிபாரிசும் பணமும் தான் வேலைகளை வாங்கித்தரும் என்றால் எதற்குப் படிப்பு? அதைவிட, தன் அப்பாவை எதிர்த்துக்கொண்டு வந்தவள் அவரின் நண்பரிடம் போய் நிற்பதா? எந்தப் பக்கத்தாலும் அவனுடைய தன்மானமும் சுயகௌவரவமும் தான் அடிவாங்கியது!

அவனுடைய மறுப்பில் அவளுக்குச் சின்னதாகக் கோபம் வந்தது. “டேய் லூசா! இது சிபாரிசு இல்ல. அவரிட்ட நாங்க உதவிக்கும் போகேல்ல. உனக்கு இருக்கிற தகுதியை அவருக்குச் சொல்லப்போறம். அவரை நேரடியா சந்திக்க மட்டும் தான் நான். மற்றும்படி உன்ர தகுதிக்குத்தான் உனக்கு வேலை கிடைக்கும்.” என்று அவள் பெரிதாக விளக்கியபோதும், “பாப்பம்!” என்றுவிட்டு அவளின் தாலிக்கொடியோடு கடைக்கு நடந்தான் நிகேதன்.
 

Goms

Member
அச்சோ ரொம்ப சோதிக்காதீங்க nitha sis.
இப்போவே அழுகை ஸ்டார்ட் ஆயிடுச்சு. நெஞ்சம் கணத்துபோச்சு. 🥺😭
 

Google Typing

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.

Top Bottom