• நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.
    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

இதயத் துடிப்பாய்க் காதல் - 11

நிதனிபிரபு

Administrator
Staff member
அத்தியாயம்-11


வீட்டுக் கதவைத் திறக்கும் சத்தம் கேட்கவும், புஸில் விளையாடிக்கொண்டிருந்த சைந்தவி நிமிர்ந்து பார்த்தாள்.

சனாவைக் கண்டதும், “இவ்வளவு நேரமும் எங்கே போனீர்கள் சித்தி? இந்தத் துண்டு எங்கே வரும் என்றே தெரியவில்லை. உங்களிடம் கேட்கலாம் என்று பார்த்தால் உங்களையும் காணவில்லை… ” என்றபடி புஸிலில் ஒரு துண்டைப் பொருத்தப் போனவள், சட்டென்று நிமிர்ந்து சனாவைப் பார்த்தாள்.

அந்தச் சின்னப் பெண்ணின் பார்வையே சனாவுக்குள் ஒரு தடுமாற்றத்தை உண்டு பண்ணியது. கேள்விகள் ஆரம்பமாகப் போகிறது என்று நினைத்து முடிக்க முதலே, “உங்களிடம் என்னவோ வித்தியாசம் தெரிகிறதே சித்தி.. என்னது…? கண்டுபிடித்துவிட்டேன்! கண்ணாடி.. எங்கே சித்தி உங்கள் கண்ணாடி..? ஏன் போடவில்லை? உடைந்துவிட்டதா…?” என்று கேள்விகளை அடுக்கினாள் சின்னவள்.

“இல்லையே.. என் கண்ணாடி உடையவில்லையே. இங்கே பார்…” இலகுவாகப் பேச முயன்றபடி, தன்னுடைய கைப்பைக்குள் இருந்த கண்ணாடியை வெளியே எடுத்துக் காட்டினாள் சனா.

“பிறகு எப்படி நடந்து வந்தீர்கள்? கண்ணாடி இல்லாமலேயே கண் தெரியத் தொடங்கிவிட்டதா…?” ஏதோ கண்ணாடி இல்லாவிட்டால் அவளுக்குக் கண்ணே தெரியாது என்கிற தொனியில் கேட்டவளின் கேள்வியில் சனாவுக்குச் சிரிப்பு வந்தது.

“ஆமாம்.. சித்திக்குத் திடீரென்று கண் தெரியத் தொடங்கிவிட்டது…” என்றாள் புன்னகையோடு.

“அம்மா… இங்கே வாருங்கள். சித்திக்கு கண்ணாடி இல்லாமலேயே கண் தெரிகிறதாம்…!” என்று கூவினாள் சைந்து.

“எதற்கு இந்தக் கத்துக் கத்துகிறாய் சைந்து…” என்றபடி அறையில் இருந்து வெளியே வந்தாள் சுலக்சனா.

சனாவையும் அங்கே கண்டவள், “அதுதான் சித்தி வந்துவிட்டாளே. அவளிடமே கேட்கவேண்டியது தானே அந்தப் புஸில் துண்டு எங்கே வரும் என்று. உனக்கும் உன் சித்திக்கும் தான் அது சரி. என்னை விடு.” என்று மகள் இதுவரை அவளைப் போட்டுப் படுத்திய பாட்டில் சற்றே சினத்தோடு சொன்னவள், அப்போதுதான் சனாவிடம் இருந்த மாற்றத்தைக் கவனித்தாள்.

“உன் கண்ணாடிக்கு என்ன ஆயிற்று சனா? போடாமல் இருக்கமாட்டாயே..” என்று கேட்டாள் சுலோ.

“அது.. அக்கா…” என்று தொடங்கிய சனாவை முந்திக்கொண்டு, “சித்திக்குக் கண்ணாடி இல்லாமலேயே கண் தெரிகிறதாம் அம்மா. இதைச் சொல்லத்தான் உங்களைக் கூப்பிட்டேன்.” என்றாள் சைந்து.

“நீ என்னைக் கூப்பிடவில்லை, கத்தினாய்.” என்று மகளைக் கடிந்தவள், “கண்ணாடியைப் போடாமல் ஏன் கையில் வைத்திருக்கிறாய்..?” தங்கையின் கையிலிருந்த கண்ணாடியைக் கண்டுவிட்டுக் கேட்டாள்.

“அதக்கா.. கண்ணுக்கு லென்ஸ் வைத்திருக்கிறேன்..” தயக்கத்தோடு மெல்லிய குரலில் சொன்னாள்.

“ஓ.. அதுதானா. ஆனால்.. எப்படி, எப்போது வைத்தாய்..? வைக்கப்போவதாக என்னிடம் நீ சொல்லவே இல்லையே?”

“நானும் வைப்பதாக இருக்கவில்லை அக்கா. அங்கே ‘ஸ்டட்(டவுன்)’ டில் அந்தக் கடையைப் பார்த்ததும் வைத்துப் பார்க்கலாமே என்று தோன்றியது.. அதுதான்… வைத்தேன்.” வரும் வழியில் அக்காவிடம் எப்படிச் சொல்வது என்று யோசித்து வைத்ததுதான். ஆனாலும் பொய் சொல்கிறோமே என்று அவள் குரல் தாறுமாறாகத் தடுமாறியது.

“சரிதான். ஆனால் நீயாக எப்படிக் கதைத்தாய்…?” தங்கையின் டொச் ஆற்றலைப் பற்றி அறிந்தவள் தானே. அதனால் கேட்டாள்.

இந்தக் கேள்விக்குத்தான் அவள் பயந்துகொண்டே இருந்தது. இதைத்தொடர்ந்து வரப்போகும் கேள்விகள் எப்படி இருக்குமோ?

“அதக்கா… அந்தக் கடையடியில் நான் நின்றபோது சூர்யா வந்தார். அவரோடுதான் போனேன்... அவர்தான்.. கதைத்தார்…” தமக்கையின் முகத்தை அவளால் பார்க்கமுடியவில்லை. விழிகள் தாழ்ந்தது. நெற்றியில் வியர்வைத் துளிகள் அரும்பியது. நெஞ்சில் நடுக்கம்…

“ஓ…” என்று இழுத்த சுலக்சனாவின் விழிகள் தங்கையின் விழிகளைக் கூர்ந்தது.

“சூர்யா… அவன் எதற்கு வந்தான் அங்கே…?”

“அது எனக்குத் தெரியாதுக்கா. நான் நிற்பதைப் பார்த்துவிட்டு, ஏன் நிற்கிறாய் என்று கேட்டார். லென்ஸ் வைக்க விருப்பம், ஆனால் பயமாக இருக்கிறது என்றேன். அதற்கு அவர்தான், ‘பயமில்லை. வா.. நான் கதைக்கிறேன்..’ என்று கூட்டிச்சென்றார்…” என்றாள் தமக்கையின் முகம் பாராது.

“ஆனால் நான் கேட்டபோது விருப்பம் இல்லை என்றாயே…” தங்கை சூர்யாவைக் காதலிக்கிறாளோ என்கிற கோணத்திலேயே சுலக்சனா சிந்திக்கவில்லை. ஏனெனில், அவளுக்காக ஜெயன் இருக்கிறான் என்பதை சனா உட்பட அவர்கள் குடும்பத்தில் இருக்கும் அனைவருக்குமே தெரியும். அதுவும் மூன்று வருடங்களுக்கு முதலே முடிவான விஷயம் அது. ஆனாலும் ஏதோ ஒன்று அவள் மனதை நெருடியது. அதனால் தூண்டித்துருவிக் கேட்டாள்.

“இப்போதும்.. பெரிதாக விருப்பம் இல்லைதான். நீங்கள் சொன்னீர்களே, அதனால் வைத்துப் பார்க்கலாமே என்று நினைத்துத்தான் வைத்தேன்.” சொல்வது முற்றிலும் பொய் என்று அறிந்தே சொன்னவளின் உள்ளம் கூசியது.

“என்னிடம் நீ சொல்லியிருக்க நான் கூட்டிப் போயிருப்பேனே. ஏன் சூர்யாவோடு சென்றாய்..?”

“அது.. அது.. அவரோடு நான் போவதாக இருக்கவில்லை அக்கா. ஏன், இன்று லென்ஸ் வைப்பதாகவுமே இருக்கவில்லை. அவர்தான் வற்புறுத்திக் கூட்டிச்சென்றார்..” உண்மையையும் கலந்து பொய்யுரைத்தாள்.

“ம்.. நீ என்னிடம் சொல்லியிருக்கலாம்.. சரி விடு!” என்றவள், “அவன் வற்புறுத்தியதும் நல்லதுதான். உன் முகம் இப்போது இன்னும் நன்றாக இருக்கிறது.” என்றாள் தொடர்ந்து.

சுலக்சனாவுக்கு சூர்யாவைப் பற்றியும் தெரியும் என்பதால், அவனோடு சென்றதைப் பற்றி அதற்கு மேல் எதுவும் கேட்கத் தோன்றவில்லை அவளுக்கு.

அவள் யோசிக்காமல் விட்ட ஒரு விடயம், அவர்கள் இருவருக்குள்ளும் என்ன உறவு என்பதுதான். அப்படி அவள் யோசிக்காததற்கு ஜெயன் ஒரு காரணம் என்றாள், அன்று பிறந்தநாள் விழாவில் வைத்து சூர்யாவின் தாத்தா சொன்ன, ‘சூர்யாவுக்கு ஒரு பெண்ணைப் பார்த்தாயிற்று’ என்பதும் மற்றொரு காரணமாக இருந்தது.

“கண்களில் எரிவு மாதிரி.. அப்படி ஏதும் வித்தியாசம் தெரிகிறதா..?” என்று கேட்டாள்.

தமக்கையின் அன்பிலும், தன் மீது அவள் வைத்திருக்கும் நம்பிக்கையிலும் குன்றிப்போனாள் சனா.

“அப்படி எதுவும் இல்லைக்கா..” என்றாள் குரலடைக்க.

“இனி அப்படி ஏதும் மாற்றம் தெரிந்தாலும் சொல்லு..” என்றவளுக்கு, மகள் புஸிலோடு இன்னும் போராடுவதைப் பார்க்கச் சிரிப்பு வந்தது.

“இவளுக்குச் கொஞ்சம் உதவி செய் சனா. என்னைப்போட்டு படுத்தி எடுத்துவிட்டாள்..” என்றாள் சனாவிடம்.

“போங்கம்மா உங்களுக்கு ஒன்றும் தெரியாது. நான் எப்படியாவது இதைப் பொருத்தித் திபியிடம் காட்டவேண்டும். அவள், தனக்கும் தன் சித்தாப்பாவுக்கும் தான் எல்லாம் தெரியும் என்று பெருமை பேசுகிறாள்…” என்றாள் சைந்து தன் வேலையிலேயே கவனமாக.

சுலக்சனாவிடம் பொய் சொன்னோமே என்று குன்றியிருந்த அந்த நேரத்திலும் சைந்து சொன்ன, ‘திபியின் சித்தப்பா’ என்ற சொல்லிலேயே சனாவின் உள்ளம் இனிதாக மலர்ந்தது.

“பாருங்கள் அக்கா இந்தப் பெரிய மனுஷியின் பேச்சை…” என்று தமக்கையிடம் சொல்லியபடி சைந்துவின் தலைமுடியை கலைத்துவிட்டவளின் குரலில் துள்ளல் இருந்தது. அந்தத் துள்ளல் அக்கா மகளின் பேச்சாளா அல்லது அவள் சொன்ன ‘சித்தப்பா’ வாளா என்பதை அவள் மட்டுமே அறிவாள்.

“ம்ம்.. எல்லாம் அவள் அப்பா கொடுக்கும் செல்லம். போதாக்குறைக்கு நீ வேறு…” என்று செல்லமாக மகளைக் சீராட்டியபடி உள்ளே சென்றாள் சுலோ.

“இது இங்கே வரவேண்டும் சைந்து. அதை அங்கே வை..” என்று அவளுக்குக் காட்டிக்கொடுத்தவள், “செய்துகொண்டிரு. சித்தி உடை மாற்றிக்கொண்டு வருகிறேன்…” என்றுவிட்டு தன்னுடைய அறைக்குச் சென்றாள்.

உள்ளே சென்று கதவை அடைத்தவள், கைபேசியில் சூர்யாவுக்கு அழைத்தாள்.

“ஹேய் லட்டு! இப்போதானே போனாய்.. அதற்குள் அழைக்கிறாய். என்னை விட்டு உன்னால் கொஞ்ச நேரமும் இருக்க முடியவில்லையா…?” அவள் கொடுத்த முத்தத்தின் மோகம் முற்றிலும் தீராத குரலில் கேட்டான் அவன்.

அக்காவிடம் பொய் சொன்னோமே என்கிற குற்ற உணர்வில் இருந்தவளுக்கு அவன் பேச்சு கோபத்தைக் கிளப்ப, “சூர்யா! உங்களை..” என்று கடுப்பானவளிடம், “என்னை.. ம்.. சொல்லுசொல்லு! என்னை என்ன செய்யப் போகிறாய் லட்டு? திரும்பவும் முத்தமிடப் போகிறாயா? எனக்குச் சம்மதம். ஆனால் முத்தமிட வேண்டிய இடம் மட்டும் வேறு..” என்றான் உல்லாசமாக.

“இந்தப் பேச்சை முதலில் நிற்பாட்டுங்கள் சூர்யா!” என்றாள் கோபத்தில்.


அவள் குரலில் இருந்த பேதத்தை உணர்ந்து, “இப்போது என்ன..?” என்று கேட்டவனிடம் மெல்லிய சலிப்பிருந்தது.

“அக்கா லென்ஸ் வைத்ததைப் பற்றிக் கேட்டார்கள்..” என்றவளின் குரல் ‘அதை வைக்கச் சொன்னது நீதான்’ என்று அவனைக் குற்றம் சாட்டியது.

“அதற்கு என்ன இப்போது?” சுருக்கமாகக் கேட்டவனுக்கு எரிச்சல் வர ஆரம்பித்திருந்தது.

“என்ன சூர்யா இப்படிக் கேட்கிறீர்கள்?”

“வேறு எப்படிக் கேட்க? அதையும் நீயே சொல்லு, அப்படியே கேட்கிறேன்…”

“ப்ச்! விளையாடாதீர்கள். எனக்கு எவ்வளவு சங்கடமாக இருந்தது தெரியுமா…?”

“சங்கடமா? ஏன்?” அவனுக்குச் சத்தியமாகப் புரியவில்லை.

“பின்னே.. பொய் சொன்னால் சங்கடமாக இராதா..?”

“பொய் சொன்னாயா..? எதற்கு? என்ன பொய் சொன்னாய்..?” என்றவன் அவள் என்னவோ சொல்ல வரவும், “முதலில் இப்படித் துண்டு துண்டாக சொல்வதை விட்டுவிட்டு, என்ன நடந்தது என்பதைச் சொல்லு…” என்றான் பொறுமை இழந்த குரலில்.

“உங்களோடு வந்து லென்ஸ் வைத்ததற்கு அக்காவிடம் என்ன காரணம் சொல்ல முடியும் சூர்யா? ‘அவர் என் காதலன், அதனால் அவரோடு போனேன்’ என்றா..?” அவன் வாயை அடைத்துவிடும் இடக்கோடு கேட்டாள் லட்சனா.

“அப்படிச் சொல்வதில் எந்தத் தவறும் இல்லை. அதோடு சொல்ல மறுப்பவளும் நீதான். இதிலே எனக்குப் புரியாதது என்னவென்றால், நீ சொன்ன பொய்க்கும் எனக்கும் என்ன சம்மந்தம் என்பதுதான்.” என்று அவன் கேட்க, அவளுக்கோ தன் தலையை எங்காவது சுவரில் முட்டிக்கொண்டால் என்ன என்று தோன்றியது.

பின்னே, அவன் குணம் தெரிந்தும், இப்படி ஏதாவது குண்டக்க மண்டக்க சொல்வான் என்று அனுபவ ரீதியாக அறிந்திருந்தும் அவனிடம் ஏறுப்பட்டது அவள் தவறுதானே.

“ஐயோ சாமி! உங்களுக்கும் இதுக்கும் எந்தச் சம்மந்தமும் இல்லை. நான் மட்டும்தான் காரணம். தெரியாமல் கேட்டுவிட்டேன். விட்டுவிடுங்கள். என்னால் முடியவில்லை சூர்யா…” கோபமாக ஆரம்பித்தவளின் குரல் முடிக்கையில் ஓய்ந்திருந்தது.
 

நிதனிபிரபு

Administrator
Staff member
அவனால் அவள் மனதைப் புரிந்துகொள்ளவே முடியவில்லையா என்று நினைத்தவளுக்கு வேதனையாக இருந்தது. அக்காவிடம் பொய் சொன்னோமே என்று குன்றிப்போனவள், ஆறுதல் தேடித்தான் அவனுக்கு அழைத்தது. இந்த விஷயத்தை அவனிடம் மட்டும்தானே அவளால் சொல்லவும் முடியும்.

என்ன, அவள் மீதே அவளுக்கிருந்த கோபத்தை அவனிடம் காட்டினாள். அதுதான் அவள் செய்த பிழை! அதற்காக எப்போது பார்த்தாலும் அவளையே குற்றம் சாட்ட வேண்டுமா? ஆறுதல் சொல்லாவிட்டாலும் பரவாயில்லை, அனுசரணையாகத் தன்னும் அவன் எதுவும் பேசவில்லையே!

அவனின் ஆதரவும் தனக்கில்லை என்று நினைத்தவளுக்கு சுயவிரக்கத்தில் தொண்டை அடைத்தது.

அவளின் ஓய்ந்த குரலில் எதை உணர்ந்தானோ, “லட்டு…?!” என்று மிக மிக மென்மையாக அழைத்தான் சூர்யா.

“ம்ம்…”

“இதெல்லாம் பெரிய விசயமே இல்லை லட்டு. காதல் என்கிற பெயரில் அடுத்தவரின் இதயத்தையே திருடுகிறோமாம். திருட்டோடு ஒப்பிடுகையில் பொய் சொல்வது சின்ன விஷயம் தான். அதோடு காதலில் பொய் சொல்வதற்கு அனுமதி உண்டு.” என்று புதுவித நியாயம் சொன்னான் அவளின் அடாவடிக் காதலன். அதைக் கேட்டவளுக்கு கவலை அகன்று சிரிப்பு வந்தது.

“சூர்யா! உங்களை என்ன செய்தால் தகும்…” என்றவள் இயல்பு நிலைக்கு மீண்டிருந்தாள். இதை வேண்டித்தானே அவள் அவனை அழைத்தது.

“அதை நானும் முதலே சொல்லிவிட்டேன்…” என்றான் அவனும் மலர்ந்த புன்னகையோடு.

“சித்தி.. இவ்வளவு நேரம் உள்ளே இருந்து என்ன செய்கிறீர்கள்..?” என்று சைந்துவின் குரல் கேட்கவும், “ஐயோ சூர்யா.. சைந்து வருகிறாள். வைக்கிறேன். நாளை பார்க்கலாம். பாய்!” என்றவள் அவன் பதிலுக்காகக் கூடக் காத்திராமல் கைபேசியை அணைத்தாள்.

“இதோ வருகிறேன் சைந்து..” என்று சைந்துவுக்கு குரல் கொடுத்துவிட்டு, வேகவேகமாக உடையை மாற்றிக்கொண்டு அறையை விட்டு வெளியே சென்றாள்.



சூர்யாவுடனான சந்திப்புக்களும், சின்னச்சின்ன கருத்து மோதல்களும், அதன் பின்னான சமாளிப்புக்களும் என்று இனிதாகவே லட்சனாவின் நாட்கள் நகர்ந்தது.

மனதுக்குள் டிரைவிங் பழகப் போவதைப் பற்றி அக்கா அத்தானிடம் எப்படிச் சொல்வது என்கிற சிந்தனை ஓடிக்கொண்டே இருந்தது. ஆனாலும், மறந்தும் அதைச் சூர்யாவிடம் சொல்லவில்லை. சொன்னால் என்ன சொல்வான் என்று அவளுக்குத் தெரியாதா என்ன?

டிரைவிங் பழகுவதற்கான வகுப்புக்களுக்குப் போகவில்லையா என்று அவ்வப்போது கேட்ட சூர்யாவிடம், தமிழில் கொஞ்சம் படித்துவிட்டுப் போகிறேனே என்று சமாளித்தாள்.

அன்று வேலைக்கும் போய்விட்டு சூர்யாவோடும் நேரத்தைக் கழித்துவிட்டு வந்தவள், எப்படியாவது அக்கா அத்தானிடம் டிரைவிங் பழகுவது பற்றி இன்று சொல்லியே ஆகவேண்டும் என்கிற நிலையில் இருந்தாள்.

காரணம், அன்று சூர்யாவுக்கும் அவளுக்கும் மீண்டும் வாக்குவாதம் வந்திருந்தது.

எப்போதும் போல், “எப்போது வகுப்புக்கு போகப் போகிறாய்..?” என்று அவன் கேட்க, “கொஞ்ச நாட்கள் போகட்டும்.” என்று அவள் சொல்ல, அவனுக்கு கோபம் வந்துவிட்டது.

“என்ன, என் பணத்தில் பழகுவதில்லை என்று முடிவேதும் எடுத்திருக்கிறாயா?’” என்று கேட்டான் அவன்.

மனதில் இருப்பதைச் சொல்ல முடியாமல், “அடுத்த வாரத்தில் இருந்து போகிறேன்..” என்று சொல்லிவிட்டாள்.

இனி அவன் விடவும் மாட்டான். அதோடு பணத்தைக் கட்டிப் பதிந்துவிட்டுப் படிக்கப் போகாமல் இருந்தால் கட்டிய பணமும் கிடைக்காது என்கிற நிலை. ஆக, வீட்டில் சொல்லியே ஆகவேண்டும். என்ன செய்யலாம் என்று யோசித்துக் கொண்டிருந்தவளுக்கு, சிவபாலன் சாதரணமாக ஆரம்பித்த பேச்சு பேருதவி செய்தது.

“ஜெயன் இங்கே வரும்போது, அவனிடம் அங்கு எடுத்த டிரைவிங் ‘லைசென்ஸ்’ஐக் கொண்டு வரச் சொல்ல வேண்டும் சுலோ. அவனோடு கதைக்கும்போது எனக்கு நியாபகப் படுத்து. இல்லாவிட்டால் நான் மறந்துவிடுவேன். அதைக் காட்டினால், இங்கு மற்றவர்கள் போல் முதலில் இருந்து பழகத் தேவை இல்லை. எழுத்துப் பரீட்சை எழுதிவிட்டு, நேரடியாக ஓடிக் காட்டினால் போதும்..” என்றார் சிவபாலன் மாலைத் தேநீர் அருந்தியபடி.

“ம்ம்.. எப்படியும் அவன் வர இன்னும் ஒரு மாதம் செல்லும் தானே. நீங்கள் மறந்தாலும் நான் அவனிடம் சொல்லிவிடுகிறேன்..” என்றாள் சுலோ.

இதைக் கேட்டிருந்த சனா, “அத்தான், நானும் டிரைவிங் பழகட்டுமா..?” என்று மெல்லக் கேட்டாள்.

“இதென்ன கேள்வி சனா. கட்டாயம் நீயும் பழகத்தான் வேண்டும். இந்த நாட்டில் லைசென்ஸ் இல்லாமல் வாழ்வது கஷ்டம். நீ கொஞ்சம் மொழியைப் பழகியதும் பழகச் சொல்லலாம் என்று நினைத்தேன். ஜெயனுக்கு அங்கேயே டிரைவிங் லைசென்ஸ் இருப்பதால் பெரிதாகப் படிக்கவேண்டிய அவசியம் வராது..” என்றார் அவர்.

“அத்தான், அந்தக் கேள்விகள் தமிழிலும் இருக்கிறது. அதனால் டொச் நன்றாகத் தெரியவேண்டும் என்று கட்டாயமில்லை.” ஆர்வத்தில் வாயை விட்டாள் சனா.

“ஓ.. எனக்கு இந்த விஷயம் தெரியாதே..” என்றவர் அவளிடம் திரும்பி, “உனக்கெப்படித் தெரியும்..?” என்று கேட்டார்.

பதில் சொல்ல முடியாமல் திரு திரு என்று முழித்தாள் சனா. தமக்கையிடம் இலகுவாகப் பொய்யைச் சொல்ல முடிந்தவளுக்கு அவரிடம் அது முடியவில்லை. பெரும் சிரமப்பட்டாள்.

அவர்கள் தன் பதிலுக்காகக் காத்திருப்பதை உணர்ந்து, “அன்று.. அன்று லென்ஸ் வைக்கப் போன அன்று சூர்யா சொன்னார். அது.. அது.. ஏதோ இணையத்தில் தேடியபோது பார்த்தாராம்..” என்றாள் திக்கித் திணறி. நானே இணையத்தில் பார்த்தேன் என்று சொல்லியிருக்கலாம்தான். முடிந்தவரை உண்மையைச் சொல்ல நினைத்தாள்.

“ஓ.. தமிழில் இருப்பது நல்லதுதான். அப்படியானால் உனக்கும் பதிந்துவிட்டால் நீயும் பழகிவிடுவாய்.” என்றார் அவர்.

அவரிடம் ஏற்கனவே பதிந்துவிட்டேன் என்பதை எப்படிச் சொல்வது?

“அத்தான், நானாகப் பதியவா..?” எழும்பாத குரலில், உள்ளம் நடுங்க மெல்லக் கேட்டாள்.

“அப்படி என்றால்… புரியவில்லை சனா..”

“இல்லை.. இப்போது நான் கொஞ்சம் டொச் கதைப்பேன் தானே.. அதுதான் நானாகவே போய்ப் பதியவா என்று கேட்டேன்…”

“அட..! பார் சுலோ, நம் சனாவுக்கு அந்தளவுக்கு டொச் தெரியுமாம்…” என்று அவர் கேலி பேச,

“என் தங்கையும் என்னைப் போலக் கெட்டிகாரியாக்கும். உங்களுக்கு எப்போது பார்த்தாலும் அவளைக் கேலி செய்வதுதான் வேலை. உங்கள் தம்பியும் வருவான் தானே. அவன் என்ன செய்கிறான் என்று நானும் பார்கிறேன்.” என்று கணவரிடம் தங்கையை விட்டுக் கொடுக்காது சொன்னாள் சுலோ.

குன்றிப் போனாள் சனா. அவளை எவ்வளவு நம்புகிறார்கள். அந்த நம்பிக்கைக்கு அவள் தகுதியற்றவள் ஆகிவிட்டாளே. அவள் செய்யும் பித்தலாட்டங்கள் எல்லாம் தெரியும் நிலை வந்தால் அவளைப் பற்றி என்ன நினைப்பார்கள். அதைவிட, எவ்வளவு வேதனைப் படுவார்கள். அதுவும் அத்தான் என்ன நினைப்பார் என்று நினைத்துப் பார்க்கவே அவளுக்கு உடலும் உள்ளமும் நடுங்கியது.

சூர்யா சொன்னான் என்று அன்று பதிந்துவிட்டு வந்தது எவ்வளவு பெரிய தவறு என்று இப்போது புரிந்தது. காதலனுக்கும் அவன் உணர்வுகளுக்கும் மதிப்புக் கொடுத்த நீ உன் வீட்டினரைப் பற்றி யோசிக்க மறந்தாயே என்று அவள் உள்ளமே அவளைக் குத்தியது.

கண்கள் கலங்கியது. பெரும்பாடு பட்டுத் தன்னை அடக்கிக் கொண்டு அமர்ந்திருந்தாள்.

“ஆனால் சனா, எதற்கும் நீ அத்தானோடு போ. எதையாவது பிழையாகச் செய்துவிட்டாய் என்றால் என்ன செய்வாய்…” என்ற சுலோவை மறித்தார் சிவபாலன்.

“தைரியமாக இருப்பவளை நீ பயப்படுத்தாதே சுலோ. மொழியை எழுதிப் படிப்பதை விட, பலரோடு பலதையும் வாய்விட்டுக் கதைத்தால் தான் வேகமாகப் பழகமுடியும். அதனால் நீயே போய்ப் பதி சனா.” என்று தவித்துக்கொண்டிருந்தவளின் மனதில் பாலை வார்த்தார் அவர்.

இனி நாளை மறுநாள் வேலை முடிந்து வந்து பதிந்துவிட்டேன் என்று சொன்னால் இந்தப் பிரச்சினை முடிந்தது என்று எண்ணம் ஓடியது.

பதிந்த துண்டைக் காட்டு என்றால் என்ன சொல்வது என்று யோசனை ஓட, அதற்கும் எதையாவது சொல்லிச் சமாளிக்கவேண்டும் என்று நினைத்துக் கொண்டாள்.

ஒரு பக்கம் இந்தப் பிரச்சினைக்கு வழி கிடைத்துவிட்டது என்று நிம்மதியாக உணர்ந்தாலும், அதற்காக எவ்வளவு பொய்கள், எவ்வளவு சமாளிப்புக்கள் என்று நினைக்க மனம் கனத்தது. எல்லாம் இந்தக் காதல் படுத்தும் பாடு!

இது கேட்பார்கள், அது கேட்பார்கள், பயப்படாமல் கதை, பிழையாகக் கதைத்தாலும் பரவாயில்லை என்று ஒவ்வொரு சின்ன விசயத்தையும் தவறவிடாது, சிவபாலன் சொல்லச் சொல்ல அவள் உள்ளுக்குள் குன்றிக்கொண்டே போனாள்.

“பணம் அக்காவிடம் வாங்கிக்கொள்..” என்றபோதும், அவளால் ஒன்றுமே சொல்ல முடியவில்லை.

வாயைத் திறந்து எதையும் கதைக்க முடியாமல் தலையை மட்டுமே ஆட்டி எல்லாவற்றிற்கும் சரி என்றாள் லட்சனா.

தொடரும்...
 

Goms

Active member
அம்மாடி, நல்லா தேறி விட்டாய் சனா 😄
அடுக்கடுக்காய் எத்தனை பொய்கள்🤔🤔
 

Google Typing

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.

Top Bottom