• நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.
    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

இதயத் துடிப்பாய்க் காதல் - 12

நிதனிபிரபு

Administrator
Staff member
அத்தியாயம்-12


அன்று அதிகாலை நன்றாகத் தூங்கிக்கொண்டிருந்த சூர்யாவின் கைபேசி சிணுங்கியது. எடுக்க மனமில்லாத போதும், அதன் ஓசை தூக்கத்தைக் கெடுக்கவே, கண்களைத் திறவாது கையை நீட்டி அருகிலிருந்த பேசியைத் தேடியெடுத்துக் காதுக்குக் கொடுத்து, தூக்கம் முற்றிலும் கலையாத குரலில், “ஹலோ..” என்றான்.

“ஹாய் சூர்யா.. கூற்றன் மோர்கன்..” என்றாள் சனா காலை நேரத்துக்கே உரிய உற்சாகக் குரலில்.

இப்போதெல்லாம் இது வழக்கமான ஒன்றாகி விட்டிருந்தது. அவன் எத்தனை மணிக்கு எழுவான், அதன் பிறகு என்ன செய்வான், எத்தனை மணிக்கு வேலைக்குச் செல்வான் என்பதெல்லாம் லட்சனாவுக்கு அத்துப்படி.

அது மட்டும் இல்லாமல் இப்போதெல்லாம் அவனின் அலாரமாக அவள் மாறிப்போனாள் என்பதுதான் உண்மை.

அவளின் காலை வணக்கத்துக்கு அவனிடம் பதில் இல்லாமல் போகவே, “சூர்யா…” என்று இதமாக அழைத்தாள்.

“ம்….”

“இன்னும் எழுந்துகொள்ளவில்லையா. எழுந்திருங்கள். வேலைக்கு நேரமாகிவிட்டது…”

“என்ன லட்டு நீ. இரவு உனக்கு நான் ‘தூங்கப்போகிறேன்’ என்று மெசேஜ் அனுப்பும் போதே பன்னிரண்டு மணியாகிவிட்டது. என்னை இன்னும் கொஞ்ச நேரம் தூங்கவிடேன்…” என்றான் அப்போதும் தூக்கம் கலையாத குரலில்.

“நீங்கள் இப்படித் தூங்கினால் பாட்டியை யார் கண் வைத்தியரிடம் கூட்டிச் செல்வது சூர்யா? வேலைக்குப் போக முதல் அங்கு போகவேண்டும் என்றீர்களே?” என்று அவன் செய்ய வேண்டியதை நினைவு படுத்தினாள்.

“ஹேய்.. ஆமாமில்லையா! நல்லகாலம்! நினைவுபடுத்தினாய் லட்டு. இல்லாவிட்டால் மறந்திருப்பேன்..” என்றவன் விழுந்தடித்துக்கொண்டு எழுகிறான் என்று அவன் பேச்சிலிருந்தே புரிந்தது.

“நீங்கள் மறந்தாலும் நான் மறக்கமாட்டேன் சூர்யா. இன்னும் நேரம் இருக்கிறது. அதனால் அவசரப்படாமல் வேலையைப் பாருங்கள்.” என்று இதமாகச் சொன்னவள், “நேற்று நான் சொன்னது நினைவிருக்கிறது தானே…?” என்று கேட்டாள்.

“ம்ம்.. ஆனால் முழுதாகச் சவரம் செய்தால் தான் என் முகத்தையே என்னால் பார்க்கமுடியும் லட்டு..” என்றான் அவள் எதைக் கேட்கிறாள் என்பதை உணர்ந்து.

“நீங்களாகவே ஏன் அப்படி நினைக்கிறீகள் சூர்யா. நான் சொல்கிறேன். உங்களுக்கு மீசை மிக நன்றாக இருக்கும். ஒரு தடவை வைத்துப் பாருங்களேன். பிடிக்காவிட்டால் எடுத்துவிடலாம்...”

“எனக்கு அது பழக்கமில்லையே. இதுவரை நான் மீசை வைத்தது இல்லை.” என்றவனிடம், “எதையும் பழகினால் தான் அது பழக்கத்துக்கு வரும் சூர்யா.” என்று விடாமல் வற்புறுத்தினாள்.

ஆண்களுக்கு அழகையும் கம்பீரத்தையும் கொடுப்பது மீசை என்பது அவளுடைய அசைக்கமுடியாத எண்ணம். அதனால் அவனை மீசையோடு பார்க்க ஆசைப்பட்டாள்.

அவனோ அது முகத்தில் இருக்கும் ஒரு அழுக்கு என்பவன். அதனாலேயே தினமும் சவரம் செய்வான்.

“ஒரு நாள் சவரம் செய்யாவிட்டாலே எனக்குக் கடிக்கும் லட்டு..”

“ஏதோ மீசையை வளர்த்துப் பின்னிக் கட்டச் சொன்னதுபோல் பெரும் எடுப்பு எடுக்கிறீர்களே. எனக்கு என் சூர்யாவை மீசையோடு பார்க்க விருப்பம். இதற்கு மேல் உங்கள் விருப்பம்..” என்றவள், “உங்களுக்கு நேரமாகிறது. அதனால் வைக்கிறேன்.” என்றுவிட்டு கைபேசியை வைத்தும் விட்டிருந்தாள்.

எதைச் சொன்னாலும் செய்யமாட்டேன் என்கிறானே என்று ஆதங்கமாக இருந்தது அவளுக்கு.

அப்போதும் வைத்தியரிடம் சென்றுவர ஆகும் நேரத்தை ஓரளவுக்குக் கணித்து, அது கடந்தபிறகு, ‘பாட்டியை வைத்தியரிடம் காட்டி விட்டீர்களா…?’ என்று அவனுக்கு மெசேஜ் அனுப்ப மறக்கவில்லை அவள்.

அழைப்பாக இருந்திருக்க வேண்டியது, அவன் மீது இருந்த கோபத்தில் மேசேஜாகச் சென்றது.

அவனிடமிருந்து பதிலில்லை என்றதும், ‘சூர்யா, எங்கே இருக்கிறீர்கள்..?’ என்கிற கேள்வியைத் தாங்கி அடுத்த மெசேஜ் பறந்தது.

ம்கூம்.. அதற்கும் பதில் இல்லை.

‘சூர்யா, வேலைக்குப் போகவில்லையா..?’ என்று அடுத்த மெசேஜ் சென்றது.

இப்படி அவள் அனுப்பிய பல மெசேஜ்களுக்கு பதில் வரவே இல்லை.
கோபமாக இருக்கிறானா அல்லது அவனுக்கு ஏதுமா என்று புரியாமல் குழம்பினாள். அவன் கோபிக்கும் அளவுக்கு ஒன்றும் நடக்கவில்லை. அப்படியானால் அவனுக்கு ஏதுமோ என்று நினைத்த மாத்திரத்தில் உள்ளம் நடுங்க, உடனேயே அவனுக்கு அழைத்தாள்.

அந்தப் புறம் அழைப்பு எடுக்கப்படவில்லை.

இப்போது அவனுக்கு வேலை நேரம். அப்படி வேலையில் இருந்தாலும் அவன் எடுப்பது இல்லைதான். வீதிகளை அமைக்கும் நிறுவனம் ஒன்றில் முக்கிய பதவியில் இருப்பவன். எட்டு மணித்தியால வேலைதான் என்றாலும், பெரும்பாலும் யாருடனாவது மீட்டிங்கில் இருப்பேன் என்று அவனே சொல்லியிருக்கிறான். அதனால் அவன் வேலை நேரங்களில் மெசேஜ் மட்டுமே அனுப்புவாள்.

இன்று இவ்வளவு நேரமும் அவனோடு பேசாததில் பயந்து, ‘வேலை நேரத்தில் எனக்கு அழைக்காதே..’ என்று அவன் சொன்னதையும் மறந்து மீண்டும் அழைத்தாள்.

அந்தப்பக்கம் எடுக்கப்பட்டதும், “சூர்யா, எங்கே இருக்கிறீர்கள்?” என்று பதட்டத்தோடு கேட்ட அவள் கேள்வியைக் கவனிக்காது, “அறிவில்லை உனக்கு? வேலை நேரத்தில் அழைக்காதே என்று எத்தனை தடவை சொல்லியிருக்கிறேன்.” என்றான் கடுங் கோபத்தோடு.

அவன் காட்டிய அந்தக் கடுமையில் தொண்டை அடைத்தது அவளுக்கு. “இல்லை.. நீங்கள் இவ்வளவு நேரமாக எடுக்கவில்லை என்றதும், உங்களுக்கு.. ஏதுமோ என்று பயந்துவிட்டேன். அதுதான்…” என்று அடைத்த குரலில் சொன்னாள்.

“எனக்கு என்ன? நான் நன்றாகத்தான் இருக்கிறேன். கண்ட நேரத்திலும் எடுக்காமல் இப்போது வை!” என்று சிடுசிடுத்தவன் அவளின் பதிலை எதிர்பாராது கைபேசியை வைத்தே விட்டிருந்தான்.

அவள் கண்கள் கலங்கியது. ஏன் இவ்வளவு கடுமை காட்டுகிறான். அவளின் பயத்தை அவனால் விளங்கிக் கொள்ள முடியவில்லையா. இனிமேல் அவனுக்கு நானாக எடுப்பதில்லை என்று நினைத்துக்கொண்டாள்.

உற்சாகமாக ஆரம்பித்த அன்றைய தினத்தை மனதில் பாரத்தோடு முற்பகல் வரை தன் அறைக்குள்ளேயே கழித்தாள். மதியம் அவளுக்கும் வேலை என்பதால், அங்கு போனாலாவது காலையில் நடந்ததை மறக்கலாம் என்று நினைத்தால், அதிலும் தோல்வியே கிட்டியது.

மனதின் உள்ளே மெல்லிய வேதனை ஒன்று அரித்துக்கொண்டே இருந்தது.

வேலை நேரத்தில் அழைத்தது என் பிழைதானே என்று தன்னையே சமாதானம் செய்தவளின் மனதோ, அவனுக்கு அழைத்துக் கதைப்போமா என்று தவிக்கத் தொடங்கியது.

‘இனி நானாக அவனுக்கு எடுப்பதில்லை..’ என்று எடுத்த முடிவு மறந்துவிட்டதா அல்லது அவனளவில் அவளது உறுதிகள் அனைத்தும் உறுதியற்றவையா?

ஏதோ ஒன்று! ஆனால் அவனோடு கதைக்காமல் அவளால் இருக்கமுடியாது என்பதுதான் உண்மை.

அவனுக்கு அழைக்கலாம் என்று பார்த்தால், அன்றென்று பார்த்து அவளுக்கும் வேலை அதிகமாக இருந்தது.

ஒரு வழியாக வேலை முடியும் நேரம் வரவும், ‘இதுவும் நல்லதுதான். அவனும் வேலை முடிந்து வீட்டுக்குப் போயிருப்பான். இனி எடுத்தாலும் திட்டமாட்டான்..’ என்று அவள் நினைத்துக் கொண்டிருக்கையில், “லஷி, அந்த மேசையில் இருப்பவருக்கு இரண்டு கப் கபே கொடுக்கிறாயா..?” என்றபடி வந்தாள் அவளோடு வேலை செய்யும் லிண்டா.

என் வேலை நேரம் முடிந்துவிட்டதே என்று நினைத்தாலும் மறுக்காமல் சரியென்றாள். லிண்டா அவளின் நல்ல தோழி என்பதாலும், மொழி புரியாது தடுமாறும் போதெல்லாம் அவளே இவளுக்கு உதவுபவள் என்பதாலும் ஒன்றும் சொல்லாமல் ‘கபே’ யை இரண்டு கப்புக்களில் எடுத்துக்கொண்டு சென்றாள்.

அங்கே அமர்ந்திருந்த சூர்யாவைக் கண்டதும், இதுவரை சோர்ந்திருந்த அவள் முகம் சட்டென்று பளீரிட்டது.

“சூர்யா, நீங்களா..?” என்று அவன் திட்டியதை மறந்து, தன்னைத் தேடி வந்துவிட்டான் என்பதில் முகம் மலர்ந்து அவனருகில் விரைந்தாள்.

புன்னகையோடு அவன் அவளையே பார்த்திருக்க, “இரண்டு கபே ஏன் சூர்யா…?” என்று கேட்டவளுக்கு, அவன் வேறு யாரோடும் வந்திருப்பானோ என்று தோன்ற உள்ளம் சோர்ந்தது.

“உனக்கும் எனக்கும்.” என்றான் அவன் இள முறுவலோடு. சோர்ந்த அவளது உள்ளம் மீண்டும் துள்ளியது.

அவன் சிந்தும் அந்தப் புன்னகையைக் கண்டுவிட்டால் அவள் மனம் கொள்ளும் ஆனந்தத்தை எப்போதும் போல் இப்போதும் உள்ளே வியந்தபடி, கப்புக்களை மேசையில் வைத்துவிட்டு அவனுக்கு நேரெதிரே அமர்ந்தாள்.
 

நிதனிபிரபு

Administrator
Staff member
அடிக்கடி என்றில்லாவிட்டாலும், எப்போதாவது அவள் வேலை முடியும் நேரங்களில் அவன் வருவதும், இருவரும் எதையாவது சலசலத்தபடி கபே அருந்துவதும் அவர்களுக்குள் நடப்பதுதான்.

ஆனால் அவளைக் கோபமாகத் திட்டிவிட்டு அவனாகவே தேடி வந்திருப்பது இதுதான் முதல் முறை என்பதால் அவளுக்கு மகிழ்ச்சியாக இருந்தது.

“பாட்டிக்கு என்னவாம் சூர்யா..?” அவனிடம் ஒரு கப்பை நீட்டியபடி கேட்டாள்.

“சம்மர் தானே. அதனால் பூக்களின் மகரந்தங்கள் தான் கண் கடிப்பதற்கு காரணமாம். மருந்து தந்திருக்கிறார்கள்..” என்றான் அவன்.

பிறகு ஏன் அவள் மெசேஜ் அனுப்பியபோதும், அழைத்தபோதும் அவன் எடுக்கவில்லை என்கிற கேள்வி மனதில் தோன்றினாலும் வாயைத் திறந்து கேட்கவில்லை. பின்னே, மறுபடியும் ஒரு பிரச்சினை ஆரம்பித்துவிட்டால் என்ன செய்வது.

ஒன்றும் பேசாது கபேயை அவள் அருந்த, “அங்கே வைத்தியரிடம் செல்கையில் கைபேசியின் சத்தத்தை நிறுத்தியிருந்தேன். பிறகு அதைக் கவனிக்கவில்லை லட்டு. வேலைக்குப் போனபிறகுதான் பார்த்தேன். உனக்கு பதில் அனுப்ப முடியாமல் வேலை இருந்தது. அதுதான் நீ எடுக்கவும் கோபமாக வேறு கத்திவிட்டேன். சாரி..” என்றான் அவன் அவள் முகத்தைப் பார்த்து.

அதுவரை அவள் மனதிலிருந்த தவிப்புக்கள், குமுறல்கள அனைத்தும் சட்டென்று மாயமாய் மறைந்தது.

“விடுங்கள் சூர்யா. என்னிடம் தானே கோபப் பட்டீர்கள். நானும்.. நீங்கள் ‘மெசேஜ்’ உம் அனுப்பவில்லை. கதைக்கவுமில்லை என்றதும் என்னவோ ஏதோ என்று பயந்துவிட்டேன். அதுதான் வேலை நேரம் என்று தெரிந்தும் அழைத்தேன். சாரி…” என்றாள் அவளும்.

“சரி விடு. இருவரும் மாறி மாறி மன்னிப்புக் கேட்டு என்ன செய்யப் போகிறோம். ஆனால் லட்டு, பிரச்சினை ஒன்று வந்து இருவரும் மன்னிப்புக் கேட்ட விஷயம் இது ஒன்றுதான் என்று நினைக்கிறேன்…” என்றான் அவன் புன்னகையோடு.

அதைக் கேட்டு அவளுக்கும் சிரிப்பு வந்தது. “உண்மைதான்…” என்றபடி அவனைப் பார்த்தவளின் விழிகள், அவன் முகத்தில் இருந்த மிக மெல்லிய மாற்றத்தைக் கண்டுகொண்டது.

“ஹேய் சூர்யா, நீங்கள் இன்று மீசையைச் சவரம் செய்யவில்லையா..?” என்று துள்ளலோடு கேட்டாள். அவளின் ஆசையை அவன் ஏற்றுக்கொண்டதில் அவளுக்குப் பெரும் சந்தோசமாக இருந்தது.

“சந்தேகமாக இருந்தால் நீயே கை வைத்துப்பார்..” என்றவன் மேசையில் இருந்த அவள் கையை எடுத்துத் தன் உதட்டுக்கு மேலே தடவினான்.

அங்கு மிக மெலிதாய் அரும்பியிருந்த மீசை, விரல்களில் தட்டுப் பட்டதாலா அல்லது அவன் செய்கையினாலா, அவள் கை மட்டுமல்ல மொத்த உடலுமே குறுகுறுத்தது.

“அச்சோ, என்ன சூர்யா இப்படிச் செய்கிறீர்கள்..?” என்று கூச்சத்தோடு கையை வேகமாக இழுத்துக் கொண்டாள் லட்சனா. அவனுக்கோ அவளைப் பார்க்கச் சிரிப்பு வந்தது.

“சந்தேகமாகக் கேட்டாய். அதுதான் உறுதிப் படுத்தினேன்..” என்றான் அவன் வெகு இலகுவாக.

இவனுக்கு எல்லாமே இலகுதான் என்று மனதில் நினைத்துக்கொண்டவள் அவன் முகத்தை நிமிர்ந்து பார்த்தாள். இப்போதே அவன் முகம் இன்னும் களையாக இருப்பதுபோல் தோன்றவே, அதை வாய்விட்டே சொன்னாள்.

“அப்போ இதற்கு முதல் நான் களையாக இல்லையா..?” என்று அவன் கேலிபோல் கேட்க, “நான் ‘இன்னும் களையாக’ என்று சொன்னேன் சூர்யா.” என்றாள் அவள்.

“என்னவோ போ! எனக்கு ஏதோ பாரம் சுமப்பதுபோல் இருக்கிறது லட்டு.”

“அது.. நீங்கள் இதுவரை மீசை வைத்ததில்லை தானே. அதுதான் அப்படி இருக்கிறது. போகப் போக பழகிவிடும்.” என்றவளுக்கு அன்றைய அவனின் செய்கைகள் அனைத்தும் பெரும் மகிழ்ச்சியைக் கொடுத்தது.

நல்ல மூடில் இருக்கிறவனிடம் ஜெயனைப் பற்றி சொல்லலாமா என்று அவள் யோசிக்கையிலேயே, “இன்று நல்ல வெயில். வருகிறாயா நீச்சல்குளத்துக்கு நீந்தப் போகலாம்..?” என்று கேட்டான் அவன்.

அவளுக்கும் நீந்த மிகவும் பிடிக்கும்தான். ஆனாலும் அவனோடு போவது நல்லதல்ல என்று மனதில் தோன்ற, “இல்லை சூர்யா. நான் வரவில்லை.…” என்றாள் மெல்ல.

புருவங்களை உயர்த்தி அவன் கேள்வியாகப் பார்க்க, “ப்ளீஸ் சூர்யா. புரிந்துகொள்ளுங்கள்..” என்றாள் கெஞ்சலாக.

அவளைச் சற்று நோக்கியவன், “உன் விருப்பம்..” என்று தோளைத் தூக்கிவிட்டு, மீதமிருந்த கபேயைப் பருகி முடித்தான்.

அவளும் பருகிவிட்டு கப்புக்களை உள்ளே கொண்டு சென்று வைத்தவள் லிண்டாவிடம் சொல்லிக்கொண்டு வர, இருவரும் வெளிய வந்தனர்.

“சூர்யா, உங்களிடம் ஒன்று சொல்லவேண்டும்…” நடந்துகொண்டே அவள் சொல்ல, “என்ன..?” என்று கேட்டான் அவன்.

அவளுக்கு எப்படி ஆரம்பிப்பது என்று குழப்பமாக இருந்தது. சொல்லாமலும் இருக்க முடியாது. காரணம், விசா கிடைத்துவிட்டதாக காலையில்தான் அழைத்துச் சொல்லியிருந்தான் ஜெயன்.

இனி எப்போது வேண்டுமானாலும் அவன் வந்துவிடலாம்.

அவளைத் திரும்பிப் பார்த்துவிட்டு, அவள் கையேடு தன் கையைக் கோர்த்து, “என்ன யோசனை லட்டு. எதுவானாலும் தயங்காது சொல்லு…” என்றான் இதமாக.

“அது… ஜெயன் வருகிறாராம் சூர்யா.” என்றாள் மொட்டையாக.

“முதலில் அவர் யார் என்று சொல்லு? அவர் வந்தால் நமக்கென்ன?”

“அது…” என்று மீண்டும் அவள் இழுக்க, “பொறு.” என்றவன், சாலையோரமாக இருந்த வாங்கிலைக் காட்டி, “வா. அங்கிருந்து கதைக்கலாம்..” என்று பிடித்திருந்த அவளின் கையை விடாமலேயே அழைத்துச் சென்றான்.

இருவரும் அமர்ந்ததும், “இப்போது சொல்லு…” என்றான் இதமாக.

“அத்தானுடைய தம்பி அவர். இங்கே வருகிறாராம்.”

“ஓ… சிவாண்ணாவின் தம்பியா? வரட்டும். அதனால் என்ன?”

இதுவரை அவன் முகத்தைப் பார்த்துக் கதைத்தவளுக்கு, இப்போது அது முடியவில்லை.

பார்வையைத் திருப்பி, “வந்து.. அவருக்கும்.. எனக்கும்.. திருமணம் செய்வதாக வீட்டில் முடிவு செய்திருந்தார்கள்..?” என்றாள் நெஞ்சு தடதடக்க.

அவனிடமிருந்து பதிலெதுவும் இல்லை என்றதும், தயக்கத்தோடு அவன் முகத்தைத் திரும்பிப் பார்த்தவள் பயந்து போனாள்.

அந்தளவுக்கு அவன் பார்வை அவளை எரித்தது. பார்வையிலேயே கோபத்தை இந்தளவுக்குக் காட்டமுடியுமா என்று தோன்றியது.

கல்லாக இறுகியிருந்த முகத்தைப் பயத்தோடு பார்த்தவள், “சூ..ர்யா..” என்றாள் தட்டுத் தடுமாறி.

“முடிவு செய்திருந்தார்கள் என்றால்..?” கடுமையான குரலில் அவன் கேட்க,

“அது.. அது.. மூன்று வருடத்துக்கு முதலே முடிவு செய்திருந்தார்கள்.”

“பிறகு எதற்கு என்னோடு சுத்துகிறாய்..:?”

அவன் கேள்வியின் அர்த்தம் புரிந்து துடித்துப்போனாள். “சூர்யா…!?” என்றவளின் குரல் தழுதழுத்தது. அவளைப் பார்த்து எப்படி அப்படிச் சொல்ல முடிந்தது அவனால்..?

மனம் கனக்க, அவன் அறியாத அவள் வாழ்க்கையின் முன் பகுதியை சொல்லத் தொடங்கினாள் லட்சனா.

தொடரும்...
 

Goms

Active member
லட்டு நீ இன்னைக்கு பூந்தி தான். சூர்யாவின் கோபம் உன்னை குதறிவிடும்😠😡😡

Waiting for flashback.....
 

Google Typing

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.

Top Bottom