• நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.
    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

இதயத் துடிப்பாய்க் காதல் - 15

நிதனிபிரபு

Administrator
Staff member
அத்தியாயம்-15


கடந்த பல விடியல்களை உணராமலேயே வைத்தியசாலையில் உணர்வற்றுக் கிடந்தாள் லட்சனா. மாதம் ஒன்று கடந்துசெல்ல, பெரும்பாடு பட்டு அவள் உடலின் வெளிக்காயங்களை தேற்றினார்கள் வைத்தியர்கள்.

அதை மட்டும்தான் அவர்களால் செய்ய முடிந்தது. மனக்காயத்தை எந்த மருத்துவத்தை வைத்துத் தேற்றுவது? காலம் ஒன்றே மருந்தென்றார்கள். அந்த ஒரு மாதத்தில், தவிர்க்க முடியாத சமயங்கள் தவிர அவள் வாயே திறந்ததில்லை. திறக்க முடிந்ததில்லை!

‘அண்ணா’ என்கிற ஒரு சொல்லைத் தவிர்த்து வார்த்தைகளைக் கோர்த்து வசனமாக்க முடியவில்லை அவளால். அவர் உயிருடன் இல்லை என்று மூளை சொன்னபோதும், யாராவது அவரைக் காப்பாற்றி அதிர்ஷ்டவசமாக உயிருடன் இருந்துவிட மாட்டாரா என்று உள்ளம் கிடந்தது துடித்தது!

அதை வாய்விட்டுக் கேட்கும் துணிவின்றி ஊமையாகிப் போனாள். அவளைக் கண்ணும் கருத்துமாகப் பார்த்துக்கொண்ட சேதுராமன் குடும்பத்தினரும், தாம் எதையாவது சொல்லி, அது அவளை இன்னும் பாதித்துவிட்டால் என்கிற பயத்தில், வாயைத் திறந்து எதுவும் கதைக்கவில்லை.

அதோடு தங்கள் வீட்டுக்கு வருகையில் இப்படி ஆகிவிட்டதே என்று அதுவேறு அவர்களை இன்னும் வருத்தியது.

இனி அவள் உடம்புக்கு ஒன்றுமில்லை என்று வைத்தியர்கள் சொல்ல, தங்கள் வீட்டுக்கு அழைத்து வந்தார்கள் சேதுராமனும், ஜெயனும்.

பெற்றவர்களின் அல்லது கூடப் பிறந்தவனின் குரல் கேட்டுவிடாதா என்கிற கடைசித்துளி நம்பிக்கையை நெஞ்சில் சுமந்தபடி, அவர்கள் வீட்டுக்குள் காலடி எடுத்துவைத்தவளை, விறாந்தையில்(ஹாலில்) மேசை ஒன்றின் மேலே பூ மாலைகளைச் சுமந்தபடி, சட்டம் போட்ட பிரேமுக்குள் இருந்து சிரித்தபடி வரவேற்றார்கள், அவளின் பெற்றவர்களும் உடன் பிறந்தவனும்.

அதைப் பார்த்ததும், கைகால்கள் நடுங்க, உள்ளம் துடிக்க, உடல் முழுவதும் பதற, இது பொய்யாக இருக்கவேண்டும் என்று கடவுளை வேண்டிக்கொண்டே அந்தப் படங்களை உற்று உற்றுப் பார்த்தாள்.

எத்தனை தடவைகள் பார்த்தாலும் மாண்டவர் மீண்டு வரப்போவது இல்லையே! அவர்கள் இந்த உலகத்தில் இல்லை என்பதை அவளுக்கு தலையில் அடித்துச் சொன்னது அவர்களின் முன்னால் எரிந்துகொண்டிருந்த விளக்கு.

எரிந்துகொண்டிருந்த ஊதுவத்தி, அவர்களும் சாம்பலாகி விட்டார்கள் என்று அவள் மூளைக்கு அறைந்து சொன்னது!

கண்டிப்பிலேயே பாசத்தைக் காட்டும் அவள் அன்னை இவ்வுலகில் இல்லையா..? அன்பை மட்டுமே காட்டத் தெரிந்த அப்பாவை அவளால் இனிப் பார்க்கவே முடியாதா..? அண்ணா.. ஐயோ அண்ணா நீங்களும் என்னை விட்டுப் போய்விட்டீர்களா?

உயிர்போகும் தறுவாயிலும் அவளைக் காத்தவன் கிடந்த கோலம் கண்முன் ஆடியது!

“ஐயோ அண்ணா..! என்னை விட்டுவிட்டு எங்கே போனீர்கள்...” என்கிற கதறலோடு அந்த மேசையின் காலடியில் விழுந்தவள், இந்த ஒரு மாதமாய் மனதில் தவித்த தவிப்பை எல்லாம் கதறித் தீர்த்தாள்.

“என்னை இப்படித் தனியாக விட்டுவிட்டீர்களே.. இனி எப்படி நானிருப்பேன். எனக்கு என்ன தெரியும்… அப்பா, எங்கப்பா போனீங்க.. அம்மா வாங்கம்மா… நீங்கள் எல்லோரும் இல்லாமல் நான் என்ன செய்யப் போகிறேன். உங்களை எல்லாம் விட்டுவிட்டு இருக்கமுடியாது என்றுதானே கல்யாணமே வேண்டாம் என்றேன்.. இப்படி மொத்தமாக என்னை விட்டுட்டு போயிட்டீங்களே.. ஏன் இப்படிச் செய்தீர்கள்.. இனி எனக்கு யார் இருக்கிறார்கள்.. ஐயோ.. அம்மா…” என்று தலையில் அடித்துக் கதறியவளைப் பார்த்து அங்கு நின்ற மூவருக்குமே கண்கள் கலங்கியது.

ஜெயனுக்கோ ‘உனக்கு நானிருக்கிறேன்’ என்று கத்தவேண்டும் போலிருந்தது. அடக்கிக்கொண்டு இறுகிப்போய் நின்றான்.

அவள் படும் வேதனையைப் பார்க்க முடியாது, அவளருகில் விரைந்த அவனின் அம்மா மங்கை, அவளை அணைத்துத் தூக்கி, “அழாதம்மா… என்ன செய்வது, எல்லாம் விதி. நீ அழாதே, உன் உடம்பு மீண்டும் கெட்டுவிடும்..”என்றவரின் பேச்சுக்கள் அவள் காதில் விழுந்ததாய்த் தெரியவில்லை. தன் பாட்டுக்கு கதறித் துடித்தாள்.

“என்னால்தான்! எல்லாம் என்னால்தான். நான்தான் ஏதாவது குடிப்போம் என்று கேட்டேன்.. கடவுளே.. நானே எல்லோரையும் கொன்றுவிட்டேனே.. அண்ணா.. நான் என்ன செய்வேன் இனி..” என்று வேதனையோடு அரற்றியவளின் முதுகைத் ஆதரவாக தடவிக்கொண்டிருந்தவரின் விழிகளும் கலங்கியது.

“அழாதே சனா. நீ அழுதால் உன் அம்மா அப்பா தாங்குவார்களா? ம்..? நீ நல்ல பிள்ளைதானே.. அழாதே! உனக்கு நாங்கள் இருக்கிறோம்..” வார்த்தைகளாலும் அவளைத் தேற்ற முயன்றார் மங்கை.

அங்கே ஜெர்மனியில் சுலக்சனா வேறு அழுதுகொண்டிருக்கிறாள் என்று சிவபாலனும் சொன்னதில், இரு பெண்களினதும் நிலையை நினைத்து அந்தத் தாயுள்ளமும் கலங்கியது.

அழுதுகொண்டிருந்த சனாவின் உடல் தன் மேல் அழுந்துவதை உணர்ந்து, “ஜெயன்.. இங்கே பார் சனாவை..” என்றார் பதட்டத்தோடு.

விரைந்துவந்தவன் அவளைத் தாங்கிக்கொண்டான். “மயங்கிவிட்டாள் போல அம்மா…” என்றவனிடம், “மயங்கிவிட்டாளா? இதோ நான் உடனே வைத்தியரைக் கூப்பிடுகிறேன்..” என்று பதறிக்கொண்டே வீட்டுத் தொலைபேசி அருகே விரைந்த மங்கையைத் தடுத்தார் சேதுராமன்.

“வேண்டாம் மங்கை. பெற்றவர்களை படத்தில் பார்த்ததால் வந்த அதிர்ச்சியில் உண்டான மயக்கமாக இருக்கும்…” என்றார் கம்மிய குரலில். நட்போடு நல்லுறவு கொண்ட சம்மந்தி வீட்டினரை இழந்துவிட்ட துக்கம் அவர் குரலிலும் தெரிந்தது.

“இந்தப் பெண் இந்தப் பாடு படுகிறாளே.. கடவுளும் இப்படிச் செய்திருக்க வேண்டாம்.. அதுவும் எங்கள் வீட்டுக்கு வரும்போது இப்படி நடந்துவிட்டதே..” என்று புலம்பினார் மங்கை அழுதுகொண்டே.

“அம்மா, நீங்களும் அழாதீர்கள். பிறகு அவளை யார் தேற்றுவது..” என்று தாயைக் கடிந்தபடி சனாவை அறைக்குத் தூக்கிச் சென்றான் ஜெயன்.

“எனக்கே தாங்க முடியவில்லையேடா. இந்தப் பெண் எப்படித் தாங்குவாள். ” என்றபடி, அவர் கண்களைத் துடைத்துக் கொண்டார்.

சனாவைக் கட்டிலில் கிடத்திவிட்டு, “அப்பா, அந்த மாத்திரைகளைத் தாருங்கள்..” என்று அவர்களோடு அறைக்கு வந்த தகப்பனின் கையில் இருந்த பையை வாங்கி, “அதிர்ச்சியில் மயக்கத்தோடு தூக்கமும் வரும் என்று டாக்டர் சொன்னார். அதனால் இதை அவள் எழுந்தபிறகு கொடுங்கம்மா. அதற்கு முதல் வயிற்றுக்கு எதையாவது கொடுத்துவிடுங்கள். தூக்க மாத்திரையும் இருக்கிறது..” என்று தாயிடம் நீட்டினான் ஜெயபாலன்.

அவர் அதை வாங்கி வைக்கவும், “நன்றாகத் தூங்கட்டும். இப்போதைக்கு தூக்கம் தான் அவளுக்குப் பெரிய மருந்து. வாருங்கள் நாம் விறாந்தைக்குப் போகலாம்…” என்றுவிட்டு சேதுராமன் அறையை விட்டு வெளியேற, அவளுக்கு போர்த்திவிட்டு மங்கையும் வெளியேறினார்.

காற்று வருவதற்கு ஏதுவாக ஜன்னலைத் திறந்துவிட்ட ஜெயன், சற்று நேரம் வாடி வதங்கிக் கிடந்த சனாவின் முகத்தையே பார்த்திருந்தான்.

அவளை ஆவலோடு எதிர்பார்த்துத் தான் காத்திருந்தது என்ன, கண்ட கனவுகள் என்ன, இன்று நிலைமையே தலைகீழாக மாறிவிட்ட விதம் என்ன என்று நினைத்தவனுக்கு அவனை அறியாமலேயே பெருமூச்சொன்று வெளியேறியது. பின்னர் கதவை அரைவாசிக்குச் சாத்திவிட்டு அவனும் மனதில் பாரத்தோடு அவ்விடம் விட்டு அகன்றான்.

நாட்கள் மெல்ல மெல்ல நகர்ந்தது. மற்றொரு தாயாகவே மாறி அவளைத் தாங்கினார் மங்கை. சேதுராமனோ முடிந்தவரை அவளிடம் பொது விஷயங்கள் பற்றிப் பேச்சுக் கொடுத்து, அவள் வாயைத் திறக்கவைக்க முயன்று கொண்டிருந்தார். பலன் என்னவோ பூஜ்ஜியமாகவே இருந்தது.
 

நிதனிபிரபு

Administrator
Staff member
சில நாட்கள் இதையெல்லாம் வேடிக்கை பார்த்த ஜெயன், அவள் பொறுப்பை பெற்றவர்களின் அனுமதி இன்றியே தனதாக்கிக் கொண்டான்.

தேங்காயை மூலதனமாகக் கொண்டு உருவாக்கப்படும் தேங்காய்ப்பால், பால்பவுடர் போன்றவற்றைத் தயாரிக்கும் சேதுராமனின் சொந்தத் தொழிலில் தந்தைக்கு உதவியாக இருந்தவன், அன்றிலிருந்து முடிந்தவரை வேலை நேரத்தைச் சுருக்கிவிட்டு அவளோடு பொழுதைச் செலவழித்தான்.

“வா, வெளியே போய்வரலாம்…” என்று அவன் வற்புறுத்தியபோதும் மறுத்தவளை, மங்கைதான், “சும்மா வீட்டுக்குள்ளேயே இருப்பதற்கு எங்கயாவது போய்விட்டு வாம்மா…” என்று கட்டாயப்படுத்தி அனுப்பி வைத்தார். விருப்பம் இல்லாதபோதும், தவிர்க்க முடியாமல் சென்றாள் லட்சனா.

இலங்கையின் அழகை இன்னுமின்னும் கூட்டிக்காட்டும் “கோல்பேஸ்” கடற்கரைக்கு அழைத்துச் சென்றான்.

காற்று முகத்தில் மோத, பட்டம் விட்டபடி விளையாடித் திரிந்த குழந்தைகளையும், பயிற்ச்சிகள் எடுத்துக்கொண்டிருந்த திரளான ராணுவ வீரர்களையும், திரண்டு நின்று கடலை ரசிக்கும் மக்களையும் பார்த்தவளின் முகத்தில் தோன்றிய மெல்லிய தெளிவைக் கண்டவன் தினமும் அங்கே அழைத்து வந்தான்.

அவள் வீட்டுக்குள்ளேயே தனிமையில் முடங்குவதை முற்றிலுமாக தடுத்தான். எதையாவது சுவாரசியமாக பேசிக்கொண்டே இருந்தான். அவளோ அவனிடமிருந்து ஒதுங்கி ஒதுங்கிப் போனாள்.

அதை உணர்ந்தபோதும், நடந்த சோகத்தினால் ஒதுங்குகிறாள் என்று நினைத்தவன் அவளின் விலகலைப் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை.

அவனின் ஒவ்வொரு செயலிலும் அவள் மீதான அக்கறையும் நேசமுமே வெளிப்பட்டது. தன் அண்ணியின் தங்கை என்பதால் தன் மீது அக்கறை காட்டுகிறான் என்று நினைத்தாளே தவிர அவளும் அவன் நேசத்தை உணர்ந்துகொள்ளவில்லை. அவர்கள் வீட்டிலேயே இருந்துகொண்டு, தேடி வந்து கதைக்கும் அவனை ஒதுக்கவும் முடியாமல் பொறுத்துப் போனாள்.

எப்போதும் கடற்கரைக்கே அவர்கள் செல்வதைக் கவனித்துவிட்டு, “ஏன்டா எப்போது பார்த்தாலும் அங்கேயே போகிறாய். ஏதாவது கலை நிகழ்ச்சிக்கு அவளைக் கூட்டிக்கொண்டு போயேன்.” என்ற தாயிடம், “போய்ப் பார்த்தால் தானே தெரியும், அது கலை நிகழ்ச்சியா இல்லை கொலை நிகழ்ச்சியா என்று…” என்று சொன்னவனின் கேலியில் சனாவின் முகத்தில் மிகமிக மெல்லிய சிரிப்பொன்று அரும்பியது.

நிறைய நாட்களுக்குப் பிறகு சிரிக்கிறாள் என்று மனம் துள்ளியபோதும், அதை வெளியே காட்டிக்கொள்ளவில்லை அவன். முற்றிலுமாக அவளைப் பழையபடிக்கு மீட்கவேண்டும் என்கிற வெறிதான் இன்னும் அதிகரித்தது.

மனதை அரிக்கும் வேதனைகளை ஒதுக்குவதற்கு யோகா நல்லது என்று யாரோ சொல்ல, அதற்கும் அவளைச் சேர்த்துவிட்டான். தனியே செல்லத் தயங்கியவளோடு தானும் சேர்ந்து சென்றான்.

தன் நலன் அவன் பேணிய போதும், அத்தானின் தம்பி என்பதைத் தாண்டிய ஒரு எண்ணம் அவளில் எழவே இல்லை.

இரண்டு வருடங்கள் காற்றாய் மறைந்துபோக, கிட்டத்தட்ட அவளின் காவலனாக அவன் மாறியபோதும், அவன்பால் அவள் மனம் துளியளவும் சாயவில்லை.

அந்த நாட்களில் நடந்துவிட்ட இழப்புக்களைத் தாங்கி வாழக் கற்றுக்கொண்டாள். ஆனால் அது வெளித் தோற்றத்துக்கு மட்டுமே என்பது அவள் மட்டுமே உணர்ந்த ஒன்று!

மனதளவில் அவளால் பழையபடி மாறவே முடியவில்லை. ‘இனி எனக்கு யார் இருக்கிறார்கள்..’ என்கிற கேள்வி அவளைத் துண்டு துண்டாக உடைத்துக்கொண்டே இருந்தது.

அவளைக் காத்தபடி அவளைச் சுற்றி ஒரு குடும்பமே இருந்தபோதும், தன் குடும்பத்துக்காய் தவித்தது அவள் உள்ளம். ஏனோ ஜெயன் வீட்டோடு அவளால் முற்றிலுமாக ஒன்ற முடியவில்லை. ஜெயனிடமும் விலகல் இருந்துகொண்டே இருந்தது.

அவர்கள் வீட்டுக்கு வந்ததால் தான் இப்படி நடந்தது என்று நினைத்தாளா அல்லது இந்தத் திருமணம் வேண்டாம் என்று அசையாத பிடிவாதத்தோடு தான் இருந்திருக்க எல்லோரும் தப்பி இருப்பார்கள் என்று நினைத்தாளா, ஏதோ ஒன்று அந்த வீட்டில் இருந்து அவளைத் தள்ளியே வைத்தது மனதளவில்.

ஆனால் அதை அவளால் அவர்களிடம் காட்டமுடியவுமில்லை. காட்டிக்கொள்ளவுமில்லை!

ஜெயனை நல்ல நண்பனாக மட்டும் நினைத்தாள். அவ்வளவுதான் அவன் அவளுக்கு!

ஆனால், நட்பையும் தாண்டிப்போனது அவனின் அவள் மீதான எண்ணம்! அதைப் புரிந்துகொள்ளும் நிலையில் அவள் இல்லை.

இதற்கிடையில், அவளை ஜெர்மனிக்கு அழைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர் சிவா மற்றும் சுலோ தம்பதியினர்.

அதை அறிந்து ஏனோ விடுதலையாகவே உணர்ந்தாள்.

விசா கிடைத்து டிக்கெட் எடுத்து, பயணத்துக்கான நாள் நெருங்கியபோது அவள் முகத்தில் தோன்றிய மெல்லிய ஒளியில் நேசம் கொண்ட ஜெயனின் நெஞ்சம் துவண்டது.

‘என்னோடு இருக்கையில் இல்லாத மலர்ச்சி, என்னை விட்டுப் போகும்போது வருகிறதே..’ என்று சுணங்கிய மனதை, ‘அக்காவிடம் போகிறோம் என்கிற மகிழ்ச்சியில் இருக்கிறாள் போலும்..’ என்று அவனே தேற்றிக்கொண்டான்.

விமானநிலையத்தில் சேதுராமனிடமும் மங்கையிடமும், “போய்வருகிறேன் மாமா, மாமி..” என்று விடைபெற்றவளின் அருகே வந்து, “சந்தோசமாகப் போய்வா.. நானும் முடிந்தவரை விரைவாக அங்கு வந்துவிடுவேன்..” என்று தானும் விடைகொடுத்தான் ஜெயன்.

அவன் ஏன் அப்படிச் சொல்கிறான் என்று புரியாமலேயே தலையை ஆட்டினாள் லட்சனா. அவனுக்குத்தான் அவள் பிரிவை நினைக்கையில் பெரும் கஷ்டமாக இருந்தது.

கிட்டத்தட்ட இரண்டரை வருடங்களாக பெரும்பாலான பொழுதுகளைக் அவளோடு கழித்தவனுக்கு, இனி அவளின்றி எப்படி இருக்கப் போகிறோம் என்று நினைக்கவே நெஞ்சு கனத்தது.

வெகு விரைவாக நானும் ஜெர்மனி போகவேண்டும் என்று நினைத்துக்கொண்டான்.

அவனின் மனவோட்டங்களை அறியாத சனா, எல்லோருக்கும் பொதுவாக தலையை அசைத்துவிட்டு, விமான நிலையத்தில் செய்யவேண்டியவைகளைச் செய்து, விமானத்தில் ஏறி அமர்ந்தாள்.

பக்கத்தில் வெறுமையாக இருந்த இருக்கையைப் பார்த்ததும், அன்று ரயிலில் வருகையில் தன்னருகில் அமர்ந்திருந்த அம்மா, தனக்கு முன்னால் இருந்தபடி தன்னைச் சீண்டிய அண்ணா, மென்னகையோடு தங்களையே பாத்திருந்த அப்பா என்று எண்ணங்கள் ஓட சூடான கண்ணீர்த்துளிகள் இரண்டு அவள் மடியில் விழுந்து சிதறியது.

‘அண்ணா...’ என்று நெஞ்சம் பரிதவிக்க, பக்கத்து இருக்கையைத் தடவிப் பார்த்தவள், உள்ளத்து வலியைத் தாங்க முடியாது கண்களை இறுக மூடிக்கொண்டாள்.

‘ஏன்.. ஏன்.. ஏன் இப்படி நடந்தது?’ நெஞ்சம் விடைதெரியாக் கேள்விகளைச் சுமந்து துடிதுடித்தது. அன்று அவர்களைப் பிரிந்து ஜெர்மனிக்குப் போகமாட்டேன் என்று சொன்னவள், இன்று அவர்களை இழந்தல்லவா செல்கிறாள்!

இப்படி ஒரு பயணம் அமையும் என்று அவள் கனவிலும் நினைத்ததில்லையே.. இது எதனால்?

மனதில் போராட்டத்தோடு ‘பிரன்க்புவட்’ விமானநிலையம் வந்திறங்கியவளைக் கண்ணீரோடு கட்டிக்கொண்டாள் சுலக்சனா.

ஒருவரை ஒருவர் கட்டிக்கொண்டு அழுத சகோதரிகளை, ஏதேதோ சொல்லிச் சமாளித்து, வீட்டுக்கு அழைத்துவந்தார் சிவபாலன்.

அங்கும் நாட்கள் மெல்ல நகர, அவளால் அவர்களோடும் ஏனோ ஒன்றமுடியவில்லை.

தான் தனிமைப் பட்டு நிற்பதாகவே உணர்ந்தாள். வெறுமை ஒன்று அவளிடம் நிரந்தரமாக குடிகொண்டிருந்தது.

அக்காவாகட்டும் அத்தானாகட்டும், ஏன் சித்தி சித்தி என்று அவள் பின்னாலேயே திரியும் சைந்தவி ஆகட்டும், அவளை அவர்கள் குடும்பத்தில் ஒருத்தியாகப் பார்த்துக்கொண்டார்கள். ஆமாம்! அவளை அவர்களுள் ஒருத்தியாகத்தான் பார்த்தார்கள்.

ஆனால் அவள் வீட்டிலோ அவளுடைய அம்மா, அப்பா, அண்ணா மூவருக்குமே அவள் அல்லவா உயிர்! அவள் தானே அந்த வீட்டின் நாயகி! மொத்தக் குடும்பத்தின் செல்லப் பிள்ளையாக வாழ்ந்தவளுக்கு, இன்னொரு குடும்பத்தில், அது சொந்த அக்காவின் குடும்பமாக இருந்தாலும் கூட, அவர்களில் ஒருத்தியாகப் பொருந்த முடியவில்லை.

தன் உள்ளத்தோடு நெருங்கி உறவாடும் உறவொன்றுக்காய் ஏங்கிக் கிடந்தாள். தன்னையே உயிராக நினைத்துத் தாங்கும் இன்னோர் உயிருக்காய் அவள் உள்ளம் தவம் கிடந்தது. அதை யாரிடமும் வாய்விட்டுச் சொல்ல முடியாமல் மனதோடு மருகிக் கொண்டிருந்தாள்.

ஆனால், எந்தச் சந்தர்ப்பத்திலும் தன்னைக் கொண்டாடும் உறவாக ஜெயனை அவளால் நினைக்க முடிந்ததில்லை. ஏன், அந்தக் கோணத்திலேயே சிந்திக்க முடிந்ததும் இல்லை! சிந்தித்ததும் இல்லை!

அவனை நினைத்தால் அவளுக்குத் தோன்றுவது, ‘அத்தானின் தம்பி’, ‘நல்ல நண்பன்’ அவ்வளவே! அதோடு ஓரளவுக்கு தன்னைத் தேற்றிக்கொண்ட பிறகு, தான் இந்தளவுக்காவது மீண்டது அவனால் என்று புரிந்ததனால் உண்டான நன்றியுணர்ச்சி!

இப்படி மனதளவில் ஒடுங்கி, உறவுக்காய் ஏங்கி, அதை வெளியில் காட்டிக்கொள்ளாமல் வாழ்ந்தவளின் வாழ்க்கையில் சூரிய உதயமாய் வந்தவனே சூர்யபிரகாஷ்!

காதல், அது யார் மீது யாருக்கு எப்போது வருமென்று யாராலும் சொல்லமுடியுமா என்ன?

அவளை உயிராய் நினைக்கும் ஒருவன், கண்ணுக்கு முன்னால் எந்தக் குறையும் இன்றி இருந்தபோதும், அவளிடமிருந்து முற்றிலும் வேறுபட்ட குணாதிசயங்களை உடைய ஒருவனான சூர்யாவின் மேல் எதற்காக அவள் மனம் மையம் கொள்ள வேண்டும்?

அவனிடம் என்ன இருக்கிறது? அவனை ஏன் அவளுக்குப் பிடித்தது? அவனிடம் ஏன் இப்படி உயிராக இருக்கிறாள்? இப்படி எந்தக் கேள்விக்கும் அவளிடம் பதிலில்லை!

எந்தக் குறையும் இல்லாத ஜெயனைத் தவிர்த்து அவள் மனம் எதற்காக சூர்யாவிடம் வீழ்ந்தது. அவளே அறியாள்!

ஆனால்.. அவளின் உயிர் தேடும் உறவாய் அவள் கண்களுக்கு அவன்தான் தெரிந்தான்.

அவனே அவள் உயிர்! இந்த உலகத்தின் மொத்த உறவும் அவனே!

அவனும் அவன் காதலும் மட்டும்தான் அவள் வாழ்க்கை!

மொத்தத்தில் துடிக்கும் அவள் இதயத்தின் துடிப்பு அவனே!

அவன் இல்லையெனில் அது அடங்கிவிடும்!


அப்படி அவனையே தன் உலகமாக, வாழ்க்கையாக நினைக்கும் அவளைப் பார்த்து,”என்னோடு நீ எதற்கு சுத்துகிறாய்..?” என்று அவன் கேட்கலாமா என்று துடித்துப்போனாள் லட்சனா!

வேகமாகச் சுழன்ற நினைவுகளின் தாக்கத்திலும், அவன் வார்த்தைகளின் வீரியத்திலும் நெஞ்சம் கலங்கிவிட, கண்ணீர் வழியும் விழிகளால் அவனையே பாத்திருந்தாள் லட்சனா.


தொடரும்...
 

Goms

Active member
லட்சனாவின் இழப்பு பெரிது. அவள் உள் மனப் போராட்டம் மிக மிக பெரிதுதான்.
ஆனால் ஏன் ஜெயனின் மனதை புரிந்துகொள்ளவில்லை?? பாவம் ஜெயன்.
 

Google Typing

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.

Top Bottom