• நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.
    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

இதயத் துடிப்பாய்க் காதல் - 17

நிதனிபிரபு

Administrator
Staff member
அத்தியாயம்-17


அவர்கள் வீட்டின் பால்கனியில் இருந்த சாய்கதிரையில் அமர்ந்து, கைபேசியில் அவளைப் பார்த்துச் சிரித்துக்கொண்டிருந்த சூர்யாவை, விழிகளால் விழுங்கிக் கொண்டிருந்தாள் லட்சனா.

சற்று முன்னர்தான் அவனோடு கதைத்தாள். அதுவும் அன்றைய நாளில் ஐந்தாவது தடவையாக.

காலையிலேயே எழுந்துவிட்டீர்களா என்று கேட்க, முதல் அழைப்பு. காலைச்சாப்பாடு சாப்பிட்டீர்களா என்று கேட்க அடுத்த அழைப்பு. என்ன செய்துகொண்டு இருக்கிறீர்கள் என்று அடுத்தது. வேலைக்குப் போகவில்லையா என்று அடுத்தது. சற்று முன் சும்மா என்று ஒன்று.

ஏதோ ஒன்றைச் சாட்டி எடுப்பவள், என்னவென்றே இல்லாது அவனோடு கதை அளந்துவிட்டுத்தான் வைத்தாள். அப்படி வைத்தபிறகு அடுத்து அவள் செய்யும் வேலை, கைபேசியில் இருக்கும் அவன் போட்டோவோடு கதைப்பது.

“மகா கள்ளன்டா நீ. இப்போது ஆசையாகப் பார்ப்பதுபோல் உன்னை நேராக என்னால் பார்க்கவே முடிவதில்லை. அப்படி இந்தக் கண்ணில் என்னதான் வைத்திருக்கிறாயோ… அப்படியே என்னைச் சுண்டி இழுக்கிறது.” என்றவள் அவன் கன்னத்தைக் கிள்ளித் தன் உதட்டில் ஒற்றிக்கொண்டாள். அவன் கண்களுக்கு நேரடியாகவே ஒரு முத்தம். அந்தக் கைபேசி பாவம்! வாயிருந்திருக்க, கதறிக் கண்ணீர் விட்டிருக்கும்!

“இதையெல்லாம் நேரே செய்யத்தான் விருப்பம். அதற்கு எங்கே நீ விடுகிறாய். நான் ஆரம்பித்தால் நீ முடித்துவைக்கிறாயே, அவசரத்துக்குப் பிறந்தவனே…” மீண்டும் செல்லமாக அவனைச் சீராட்டிக்கொண்டாள்.

வீட்டில் யாருமில்லாத தனிமையும், அவன் அருகிலில்லாத இனிமையும் இதையெல்லாம் வாய்விட்டுச் சொல்லும் துணிவை அவளுக்குக் கொடுத்தது.

அவனைப் பார்க்கப்பார்க்க, அவள் இதழ்களில் இளம் புன்னகை நெளிந்தது. மலர்ந்த முகமும், விழிகளில் கனவுமாக இருந்தவளின் எண்ணங்கள் முழுவதிலும் சூர்யாவே நிறைந்திருந்தான்.

இப்போதெல்லாம் அவள் உள்ளமெல்லாம் உள்ள உணர்வு காதல்… காதல்.. காதல் மட்டுமே!

அந்தளவுக்கு அவன் காதல் அவளை மயிலிறகாய் வருடிக்கொடுத்தது!

ஜெயனைப் பற்றி சூர்யாவிடம் சொல்லவேண்டுமே என்றிருந்த தவிப்பு மறைந்திருந்தது. பெற்றவர்களின் இழப்பைப் பற்றி அவனிடம் சொல்லியதில் மனம் பெரும் ஆறுதல் அடைந்திருந்தது.

போதாக்குறைக்கு அன்று சூர்யாவின் தாத்தா பாட்டியின் வீட்டுக்குச் சென்றபோது, அவர்களின் சம்மதமும் கிடைத்துவிட்டதை அறிந்துகொண்டதில், அவளின் காதல் அசுரனைக் கைப்பிடிக்க அவளுக்குத் தடை எதுவுமில்லை என்று எண்ணியெண்ணி அவள் உள்ளம் களித்தது.

இன்னும் மிகுதியாய் இருப்பது ஒரேயொரு பிரச்சினை. அது ஜெயன்!

அவனிடம் தங்கள் காதலைப் பற்றிச் சொல்லி, அவன் விலகிவிட்டால், அக்கா அத்தானும் ஒன்றும் சொல்ல மாட்டார்கள். அதுவும் நடக்கும் என்று அவள் உள் மனது நம்பியது.

காரணம், அவள் அறிந்தவரையில் ஜெயன் நல்லவன். மிக மிக நல்லவன்! அவளைப் புரிந்துகொள்வான்.

அவன் பாவமே என்று தோன்றினாலும், காதலின்றி ஒருவனுடன் எதிர்கால வாழ்க்கையை அமைக்கமுடியாதே. அவனுக்கும் அவனையே நினைத்து உருகும் ஒருத்தி வராமலா போய்விடுவாள்.

இன்னாருக்கு இன்னார் என்று இறைவன் நிச்சயித்திருப்பான் தானே! ஜெயனுக்குச் சொந்தமான அந்த ‘இன்னார்’ வெகுவிரைவில் அவன் வாழ்வில் வரவேண்டும் என்றும் வேண்டிக்கொண்டாள்.

அடுத்தநொடியே, அவளுக்குச் சொந்தமான ‘இன்னாரை’ நோக்கி அவள் உள்ளம் பாய்ந்தது.

இப்போதெல்லாம் அவளால் அவனை விட்டுவிட்டு இருக்கவே முடிவதில்லை. ‘எங்காவது சந்திக்கலாம் வா’ என்று அவன் அழைத்த காலம் மலையேறி, ‘இன்று எங்கு பார்க்கலாம் சூர்யா’ என்று அவள் கேட்கும் காலம் வந்திருந்தது.

‘டிரைவிங்’ குக்கு படிப்பதே பெருஞ் சிரமமாக இருந்தது. அந்தளவுக்கு அவன் நினைவுகள் அவளை ஆட்டிப்படைத்தன. பெரும் கஷ்டப்பட்டுப் படித்துத்தான் அந்தப் பரீட்சையை எழுதி சித்தியடைந்திருந்தாள்.

இரண்டு நாட்களுக்கு முன்னர் அவன் தோளில் தன்னை மறந்து தொங்கியபடி, “சூர்யா, எழுத்துப் பரீட்சையில் நான் பாசாகிவிட்டேன்…” என்று அவள் துள்ளலோடு சொன்னபோது, அவளை அணைத்து, “வாவ்..! எனக்குத் தெரியும். என் லட்டு பாசாகிவிடுவாள்..” என்று அவன் தன் மகிழ்ச்சியைத் தெரிவித்தபோது, அவள் அடைந்த ஆனந்தத்துக்கு அளவே இல்லை.

பாசானபோது உண்டான பரவசத்தை விட, அவன் ‘என் லட்டு’என்றபோது உண்டான பரவசம் அதிகமாக இருந்தது.

நேற்று அவளின் அக்கா, “முதன் முதலாக கார் ஓடப்போகிறாய். துணைக்கு நான் வரவா..” என்று கேட்டபோது, “வேண்டாம்க்கா. நான் மட்டுமே போகிறேன்..” என்றவள், “முதன் முதலாக கார் ஓடப்போகிறேன். எனக்குப் பயமாக இருக்கிறது சூர்யா.…” என்றாள் அவனிடம்.

“வா, நானும் வருகிறேன் உன்னோடு…” என்றவன், காரில் ஓட்டுனரின் இருக்கையில் அவளும், அருகில் அவளுக்குப் பழக்கும் மாஸ்டரும் அமர்ந்திருக்க, பின்னிருக்கையில் அமர்ந்து, “உன்னால் முடியும். பயப்படாமல் ஓட்டு..” என்றபோது, எதையும் சாதிக்க என்னால் இயலும் என்கிற பலம் உண்டானது.

ஆக மொத்தத்தில் அவளின் சக்தியாக, அவன் இருந்தான்!

அன்று அவளுக்கு வேலையும் இல்லை, டொச் வகுப்பும் இல்லை. வீட்டில் அக்கா குடும்பமும் இல்லை.

தூரத்து உறவினர்களின் மகளுக்குத் திருமணம் என்று அவர்கள் பெர்லின் சென்றுவிட்டார்கள். அவளையும் அழைத்தார்கள் தான். மூன்று நாட்கள் அங்கு தங்கவேண்டும் என்றதும், வேலை, டொச் வகுப்பு, கார் ஓட்டம் என்று எதையெதையோ சாக்குச் சொல்லி அவர்களோடு செல்லாமல் நின்றுவிட்டாள். உண்மைக் காரணம் அவையல்ல என்று அவளுக்கு மட்டும் தானே தெரியும்.

அவனைப் பாராமல் மூன்று நாட்களென்ன, மூன்று நிமிடம் கூட அவளால் இருக்க முடியாது!

பெற்றவர்களின் இழப்புக்கூட முன்னர் போன்று இப்போதெல்லாம் அவளைப் பெரிதாகத் தாக்குவதில்லை. அனைத்துச் சொந்தமாக, அவளையே நேசிக்கும் ஒருவன் கிடைத்துவிட்டதில், அம்மா, அப்பா, அண்ணா என்று அனைவரையும் அவனில் கண்டாள்.

அவனுக்கு அழைப்போமா வேண்டாமா.. இப்போது என்ன செய்துகொண்டிருப்பான்.. என்று எண்ணங்கள் ஓட, மனதின் ஆவலை அடக்க முடியாது, மீண்டும் அவனுக்கு அழைத்தாள்.

“ஹலோ..” அந்த ஹலோவே அவனருகில் யாரோ இருக்கிறார்கள் என்பதை அவளுக்கு உணர்த்தியது. இல்லாவிட்டால் ஆரம்பமே “லட்டு” வாகத்தானே இருக்கும்!

“ஹாய் சூர்யா, பக்கத்தில் யாராவது .இருக்கிறார்களா..?” என்று ரகசியக் குரலில் கேட்டாள்.

“ம்…” என்றவன், இருந்த இடத்தில் இருந்து எழுந்து செல்கிறான் என்று புரிந்தது அவளுக்கு.

“இப்போது திரும்ப எதற்கு எடுத்தாய் லட்டு..?” என்றவனின் குரலில் என்ன இருந்தது. சலிப்பு?!

“தனியாக வந்துவிட்டீர்களா சூர்யா? எனக்கு இங்கே நேரமே போகமாட்டேன் என்கிறது. நாம் எங்காவது போகலாமா?” என்று ஆர்வத்தோடு கேட்டாள்.

“இதைக் காலையில் கதைக்கும்போது சொல்லியிருக்கலாமே நீ. நான் அம்மாவோடு கடைக்கு வருவதாகச் சொல்லிவிட்டேன். இனி உன்னோடு வர இயலாது…” என்றான் அவன்.

“அச்சோ சூர்யா. காலையில் எனக்கு இந்த எண்ணம் வரவில்லை. இப்போதுதான் வந்தது. இன்று எனக்கு ஒரு வேலையும் இல்லை. பொழுது நகரவே மாட்டேன் என்கிறது. ப்ளீஸ்.. ப்ளீஸ்.. உங்கள் அம்மாவிடம் எதையாவது சொல்லிச் சமாளித்துவிட்டு வாருங்களேன்..” என்றாள் கெஞ்சலாக.

அதற்கு அவன் என்னவோ சொல்ல வரவும், “மாட்டேன் என்று சொல்லிவிடாதீர்கள் சூர்யா. அம்மாவோடு பிறகும் போகலாம் தானே. எனக்கு இந்த மூன்று நாட்களுக்குத்தான் இந்தச் சுதந்திரம். இந்த மூன்று நாட்களையும் எனக்காக ஒதுக்குங்கள் சூர்யா…” என்றாள் மீண்டும் வேண்டுதலாக.

அவனுக்கு அவளின் பேச்சில் முறுவல் தோன்றியது. “சரி, வர முடியுமா என்று பார்க்கிறேன்..” என்றான் இலகுவான குரலில்.

“அதென்ன பார்ப்பது. நீங்கள் கண்டிப்பாக வந்தே ஆகவேண்டும். இல்லாவிட்டால் நான் வந்து, உங்கள் அம்மாவிடம் நேரடியாக சொல்லிவிட்டே உங்களை இழுத்துக்கொண்டு வருவேன்..” என்றாள் தைரியமாக.

“அட! எதற்கெடுத்தாலும், அவர்கள் என்ன நினைப்பார்கள் இவர்கள் என்ன நினைப்பார்கள் என்று பயப்படும் உனக்கு இந்தத் துணிச்சல் எங்கிருந்து வந்தது..?” நகையோடு அவன் கேட்க,

“எல்லாம் உங்கள் அன்பு தந்த சக்திதான் சூர்யா. நீங்கள் இல்லாவிட்டால் என்னால் வாழவே முடியாது…”சாதரணமாக ஆரம்பித்தவளின் குரல் முடிக்கையில் நெகிழ்ந்து குழைந்தது.

“இன்று உனக்கு என்னவோ நடந்துவிட்டது..” என்றவனை அவன் தாய், “சூர்யா..!” என்று கூப்பிடும் குரல் கேட்க, “நீ வை லட்டு. அம்மாவோடு கதைத்துவிட்டு உனக்கு அழைக்கிறேன்...” என்றுவிட்டு கைபேசியை அணைத்தான் அவன்.

அப்போதும், “கட்டாயம் வரவேண்டும் சூர்யா…” என்று சொல்ல மறக்கவில்லை அவள்.

அவன் எப்படியும் வருவான் என்று நினைத்து மகிழ்ந்தவள், அவனுக்குப் பிடித்த இளம் நீலத்தில் ரோஜாக்கள் பூத்தது போல் அமைந்த சுடிதாரை எடுத்துவைத்துவிட்டு குளிக்கச் சென்றாள்.

மின்னலெனக் குளித்து, நேரமெடுத்துத் தன்னை அலங்கரித்து, அழகிய ஓவியமாக அவனுக்காகக் காத்திருந்தாள். இதற்குள் பல தடவைகள் அவன் அழைக்கிறானா என்று கைபேசியைப் பார்க்கவும் தவறவில்லை.

அவன் வருகிறானா என்று ஜன்னலால் பார்ப்பதும், அவன் கார் நிற்கிறதா என்று வீட்டுக் கதவைத் திறந்து பார்ப்பதும், பால்கனியால் எட்டிப் பின்பக்கமாக அவன் கார் தென்படுகிறதா என்று பார்ப்பதுமாக அந்த வீட்டுக்குள்ளேயே அங்கேயும் இங்கேயும் நடந்துகொண்டிருந்தாள் லட்சனா.

அவனைக் காணவில்லை என்றதும், மீண்டும் அவனுக்கு அழைத்தாள்.

முதல் இரண்டு தடவைகள் அவன் எடுக்கவில்லை. அப்போதும் விடாது மீண்டும் அழைத்தாள்.

இப்போது எடுத்தவன், “எடுக்காவிட்டால் ஏதோ முக்கியமான வேலை என்று புரிந்துகொள்ள மாட்டாயா நீ?” என்றான் சுள்ளென்று.
 

நிதனிபிரபு

Administrator
Staff member
“வருகிறேன் என்றவர் இன்னும் வரவில்லையே என்று அழைத்தேன் சூர்யா…” அளவு கடந்த அன்பை அவன் மேல் வைத்துவிட்டதில் அவனின் சுடு பேச்சு அவளைத் தாக்கவில்லை போலும்! அவள் குரல் சாதரணமாகவே இருந்தது.

“நானெங்கே வருகிறேன் என்றேன். அம்மாவோடு கதைத்துவிட்டுச் சொல்கிறேன் என்றுதானே சொன்னேன். இன்று வரமுடியுமா என்று தெரியவில்லை...” என்றவனை இடைமறித்தாள் அவள்.

“என்ன சூர்யா இப்படிச் சொல்கிறீர்கள். நீங்கள் வருவீர்கள் என்று நான் தயாராகியும் விட்டேன். ப்ளீஸ் சூர்யா, வாருங்கள். எனக்கு உங்களைப் பார்க்கவேண்டும் போல் இருக்கிறது..”

“இதென்ன எப்போது பார்த்தாலும் அடம் பிடிக்கிறாய் நீ. வர முடிந்தால் வரமாட்டேனா. ஏதோ வருடக் கணக்காக பார்க்காததுபோல் சொல்கிறாயே. நேற்று மாலை முழுவதும் உன்னோடுதானே இருந்தேன். இங்கேயானால் அம்மா, இப்போதெல்லாம் நான் வீட்டிலேயே இருப்பதில்லை என்கிறார்கள்…”என்றான் அவன் எரிச்சலோடு.

தன் வீட்டில் சொல்லும்வரை உங்கள் அம்மா அப்பாவிடம் நம்மைப்பற்றி சொல்லவேண்டாம் என்று அவள்தான் அவனை தடுத்திருந்தாள். உன் அப்பாவோடு கதைக்கப்போகிறேன் என்ற தாத்தாவையும் வேறுவழியின்றி அவன் தடுத்ததில், அவனின் அம்மா அப்பாவுக்கு அவன் காதல் விஷயம் தெரியாது.

அதனால்தான் இப்போதெல்லாம் நீ அதிகமாக வெளியே சுற்றுகிறாய் என்று அவன் தாய் சத்தம் போட்டபோதும் அவனால் வாயைத் திறக்கமுடியவில்லை. அது அவனுக்குப் பழக்கம் இல்லாத ஒன்று. அதுவேறு சினமாக மனதில் இருந்ததில், இப்போது அவளின் செயலில் சட்டென்று எரிச்சல் வந்துவிட்டது அவனுக்கு.

இப்போதெல்லாம் அவள் அவனை ஆட்டிவைப்பது போன்று உணர்ந்தான். மெல்ல மெல்ல தன் சுதந்திரம் பறிபோவது போல் இருந்தது அவனுக்கு.

அவன் குரலில் எதை உணர்ந்தாளோ, “அப்போ வரமாட்டீர்களா சூர்யா..?” என்று, ஏமாற்றம் நிறைந்த குரலில் தொண்டை அடைக்கக் கேட்டாள்.

இப்போது மாட்டேன் என்று உறுதியாக மறுக்க மறுத்தது அவன் மனம். என்ன செய்வது என்றே விளங்காமல் நின்றான். இதுகூட அவன் அறிந்திராத நிலை.

வீட்டில் அம்மா அப்பா, அண்ணா அண்ணி, தாத்தா பாட்டி என்று ஒன்றுகூடி இருக்கிறார்கள். தாத்தா பாட்டியைத் தவிர மற்றவர்கள் எல்லோரும் வேலைக்குச் செல்லும் அவர்கள் குடும்பத்தில், இப்படி எல்லோரும் ஒன்றாகக் கூடும் நாள் எளிதாக அமைவதில்லை. இன்று அமைந்திருந்தது.

இப்போது போய் ‘நான் வெளியே போகப்போகிறேன்’ என்றாள் யாருமே ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். அதைவிட கணைபோல் பாயும், எங்கே, ஏன், எதற்கு என்ற கேள்விகளுக்கு பொய்யாகப் பதில் சொல்வதும் அவனுக்குச் சிரமம்.

என்ன செய்வதென்றே தெரியவில்லை.

அவனிடம் பதில் இல்லாமல் போகவே, “சரி சூர்யா. பரவாயில்லை. நான் வைக்கிறேன்..” என்றாள் அவள் சோர்ந்த குரலில்.

அவளின் சோர்வு மனதைத் தாக்கியபோதும், என்ன சொல்வது என்று தெரியாமல் முதலில், “ம்..ம்..” கொட்டியவன், பிறகு என்ன நினைத்தானோ, “நீ வை, வர முடியுமா என்று பார்கிறேன். அதற்காக திரும்பவும் எடுத்துத் தொல்லை செய்யாதே..” என்றுவிட்டு வைத்தான்.

பெற்றவர்களுக்கு நடந்ததைச் சொல்லிக் கதறிய அன்று, ‘என் மனதுக்கு நெருக்கமானவர்கள் எல்லோரும் என்னை விட்டுப் பிரிந்துவிட்டார்கள். நீங்களும் எனக்குக் கிடைத்திருக்கா விட்டால் என்ன ஆகியிருப்பேன் என்றே தெரியாது சூர்யா’ என்று அவள் அழுதபோது, அவன் மனமும் அவள்பால் கரைந்துதான் போனது.

அதனால், அவனால் முன்னர் போல சிலவிசயங்களில் நான் இப்படித்தான் என்று உறுதியாக நிற்க முடிந்ததில்லை. அதற்காக அவளின் இழுப்புக்கு இழுபடவும் முடியவில்லை.

தன் சுயவிருப்பத்துக்கு நடக்கவும் முடியாமல், அவளின் விருப்பத்துக்கு முற்றாக இணங்கவும் முடியாமல், திண்டாடினான்.

அவன் தலை முடியை வேறு, “இந்த செம்பட்டை நிறம் உங்களுக்கு நன்றாகவே இல்லை சூர்யா…” என்று அவனை இருக்க நிற்க விடாமல் அடம் பிடித்து, சலூன் அழைத்துச்சென்றவள், அந்த நிறத்தை மறைக்க கருப்பு நிற டை அடிக்க வைத்தாள்.

“இப்போதுதான் அழகாக இருக்கிறீர்கள்..” என்று அவனை ரசித்துக்கொண்டே அவள் சொன்னபோது, தன் முகத்தைப் பார்த்தவனுக்கு தான் அசிங்கமாக இருப்பதுபோல் தோன்றியது.

மீசை வேறு வளர்ந்து, உதட்டுக்கு மேலே என்னவோ ஊர்வது போன்ற ஒருவித அசௌகரியத்தை கொடுத்தது. அவள் காட்டும் அன்பில் நனையும் அதேவேளை, அவனைத் திக்குமுக்காடவும் வைத்துக்கொண்டிருந்தாள் அவன் காதலி.

இங்கே லட்சனாவுக்கோ, வரமுடியுமா என்று பார்க்கிறேன் என்று அவன் சொன்னதில், சுணங்கிவிட்ட முகத்தோடு நகத்தைக் கடித்துக்கொண்டிருந்தாள்.

சொன்னதைச் செய்கிறவன் என்பதால், அவன் வருவான் என்கிற நம்பிக்கை போய்விட, உடையை மாற்றவும் பிடிக்காமல், எதுவுமே செய்யத் தோன்றாமல், சோபாவில் ஒருபக்கமாகச் சரிந்து கைகள் இரண்டையும் கன்னத்துக்கு அடியில் கொடுத்துப் படுத்துக்கொண்டாள். காரணமின்றிக் கன்னத்தில் கண்ணீர் இறங்கியது.

அதைக் கண்டதும், ஏன் இப்படிப் பலகீனப் பட்டு நிற்கிறோம் என்று அதுவேறு இன்னும் அழுகை வந்தது.. எதற்கெடுத்தாலும் அழுகை என்று அவனும் பலமுறை அவளைக் கடிந்துவிட்டான். அவன் விசயத்தில், அவளால் அந்தக் கண்ணீரை அடக்க முடிந்ததே இல்லை.

வழிந்த கண்ணீரைத் துடைக்கத் தோன்றாமல் கிடந்தவளின் புத்தி, ‘அவனுக்கு என்ன வேலையோ.. இல்லாவிட்டால் நிச்சயம் வந்திருப்பான்..’ என்று உரைத்தாலும், மனம் முரண்டிக்கொண்டே இருந்தது.

எதையெதையோ நினைத்தபடி கிடந்தவளுக்கு, குளித்ததாலோ என்னவோ தூக்கம் கண்ணைச் சுழற்ற தன்னை அறியாமலேயே அப்படியே உறங்கிப்போனாள்.

எங்கேயோ ஏதோ மணியடிக்கும் ஓசை கேட்டபோதும், கண்ணைத் திறக்க விருப்பம் இன்றி அப்படியே கிடந்தாள். சற்று நேரத்தில் மீண்டும் அதே சத்தம் கேட்க, இது எங்கள் வீட்டு அழைப்புமணியே என்று தோன்ற, வேகமாக எழுந்துசென்று ஜன்னல் வழியாக யார் என்று பார்த்தாள்.

பார்த்த நொடியில் அவள் முகம் பூத்தது. உள்ளம் மலர, “சூர்யா..!” என்று கூவிக்கொண்டே ஓடிவந்து வேகமாகக் கதவைத் திறந்தாள்.

“வாங்க.. வாங்க.. உள்ளே வாங்க சூர்யா…” என்று உற்சாகமாக வரவேற்றவள், அவன் கையைப் பிடித்து இழுத்துக்கொண்டு உள்ளே சென்றாள். சோர்ந்திருந்த அவள் உள்ளம், எதிர்பாராமல் அவனைக் கண்டதும் தாம் தூம் என்று துள்ளியது!

அவளின் இழுவைக்கு இசைந்துகொண்டே, “ஹே.. இதென்ன இவ்வளவு சந்தோசமாக வரவேற்கிறாய்…?” என்று கேட்டான் புன்னகையோடு.

அவள் படுத்திருந்த சோபாவிலேயே அவனை இருத்தியவள், அவனோடு உரசிக்கொண்டு அமர்ந்தாள். அதைப்பார்த்தவனுக்கு இன்னும் சிரிப்பு.

பின்னே, கிட்ட வராதே என்று அவனுக்குச் சட்டம் போட்டவள், அவனை ஒட்டிக்கொண்டு அமர்ந்தாள், வேறு என்னதான் வரும்? ஆனால் ஒன்று புரிந்தது அவனுக்கு. அவனை எல்லை மீறாதே என்பவள், என்றுமே அவனிடமிருந்து தள்ளி நின்றதே இல்லை.

அவன் அணைப்பே சொர்க்கம் என்பதாக அமைதி கொள்பவள் அவள். அவனோ அனைத்தையும் மீற நினைப்பவன். அதனால்தான் அவனுக்கு அந்த உத்தரவு. அதைப் புரிந்துகொண்டவனின் முகத்தில் புன்னகை விரிந்தது.

“முதன் முதலில் எங்கள் வீட்டுக்கு வந்திருக்கிறீர்கள் சூர்யா. என்ன தரட்டும் குடிக்க..? சாப்பிட எதுவும் கேட்டுவிடாதீர்கள். நான் சமைக்கவில்லை..” அவனின் எண்ணப்போக்குத் தெரியாமல் அவள் உற்சாகமாகக் கேட்டாள்.

“இன்னும் சாப்பிடவில்லையா? என்ன லட்டு நீ? வா, ரெஸ்டாரென்ட் போகலாம்..” என்று அவளைக் கடிந்தபடி அவன் எழ, மீண்டும் அவன் கையைப் பிடித்துத் தன்னருகிலேயே அமர்த்திக்கொண்டவள்,

“போகலாம் சூர்யா. அதற்கு முதலில் நீங்கள் ஏதாவது குடிக்கவேண்டும்..” என்றாள்.

“சரி. இருப்பதைக் கொண்டுவா.” என்று அவன் சொன்னதும், துள்ளிக்கொண்டு உள்ளே சென்றவள், கையில் குளிர்பானத்துடன் விரைந்து வந்தாள்.

அவனிடம் அதைக் கொடுத்தவள், அவன் அவர்கள் வீட்டை பார்ப்பதைக் கண்டு, “வாருங்கள். என் அறையைக் காட்டுகிறேன்…” என்றாள்.

குளிர்பானத்தை ஒரே மூச்சில் அருந்தி முடித்து, க்ளாசை மேசையில் வைத்தவனை தன் அறைக்குக் கூட்டிச்சென்றாள் லட்சனா.

உள்ளே சென்றதும், “அவர்கள் தான் என் அம்மா, அப்பா, அண்ணா சூர்யா…” என்று அவர்களின் படங்களைக் கையால் காட்டிச் சொன்னவளின் குரலில் மறைக்க முயன்ற வேதனை மறைந்திருந்தது.

அதை உணர்ந்தாலும் காட்டிக்கொள்ளாது, அவளைத் தன் கை வளைவுக்குள் வாகாக இழுத்துக்கொண்டான். அவர்களைப் பார்த்தவனின் விழிகள், தொடர்ந்து அந்த அறையை வலம் வந்தது.

அங்கிருந்த ஒற்றைப் படுக்கைக் கட்டிலைக் கண்டதும், கண்களைச் சிமிட்டி, “கச்சேரியை ஆரம்பிக்கலாமா..?” என்று கேட்டான் குறும்புடன்.

“கச்சேரியா..?” விளங்காது அவனை விழி உயர்த்திப் பார்த்தவளிடம் கண்ணால் கட்டிலைக் காட்டினான் சூர்யா, அவனுக்கே சொந்தமான மாயப் புன்னகையுடன்.

“சூர்யா..!” பொய்க் கோபம் காட்டி அவனை முறைத்தவளின் விழிகளும் சிரித்தது. அவள் முகமோ செஞ்சாந்தைப் பூசிக்கொள்ள மறக்கவில்லை!
 

Goms

Active member
பார்த்துமா லட்டு, உன் தொல்லை தாங்க முடியாம ஓடிட போறான் 😜😜
 

Google Typing

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.

Top Bottom