இதயத் துடிப்பாய்க் காதல் - 27

நிதனிபிரபு

Administrator
Staff member
அத்தியாயம்-27


காருக்குள் அமர்ந்திருந்த இரு ஆண்களின் பார்வையும் சனாவையே தொடர்ந்தது. ஒருவனின் பார்வை காதலுடன் என்றால், மற்றவனின் பார்வை சிந்தனையோடு தொடர்ந்தது. அவளும் இவர்களை ஒருதடவை திரும்பிப் பார்த்துவிட்டு, வீட்டுக் கதவைத் திறந்துகொண்டு உள்ளே சென்றாள்.

அவள் பார்வையிலிருந்து மறைந்ததும், ஜெயனின் புறம் திரும்பி, “எங்களைப் பற்றி உங்களுக்கு ஏற்கனவே தெரியுமா?” என்று கேட்டான் சூர்யா.

அவன் எதைக் குறித்துக் கேட்கிறான் என்று புரிந்தபோதும், “உங்களைப் பற்றி என்றால்..?” என்று கேட்டான் ஜெயன்.

“நானும் சனாவும் ஒருவரை ஒருவர் விரும்புவது உனக்கு.. சாரி உங்களுக்குத் தெரியுமா?” என்று கேட்டான் சூர்யா. தொடர்ந்து, “முதலில் நாமிருவரும் இந்த ‘ங்க’வை விட்டுவிடுவோம். கிட்டத்தட்ட இருவருக்கும் ஒரே வயதாகத்தான் இருக்கும்..” என்றான்.

இவன் இப்போது என்னிடம் அனுமதி கேட்கிறானா அல்லது அறிவிக்கிறானா என்கிற சந்தேகம் எழுந்தது ஜெயனுக்கு. அதைக் காட்டிக்கொள்ளாமல், சம்மதமாகத் தலையை அசைத்து, “ம்.. தெரியும்.” என்றான் சுருக்கமாக.

“உன்னிடம் சொல்வதற்குத் தயங்கிக் கொண்டிருந்தவள், எப்படிச் சொன்னாள்?” என்று சிறு வியப்போடு சூர்யா கேட்க, அவள் சொன்ன சூழ்நிலை கண்ணிலாட, உண்டான எரிச்சலில், “வாயால்தான்..” என்றான் ஜெயன் இடக்காக. அவனுக்கு ஏனோ ஒரு புது நபரோடு பழகும் இலகுத் தன்மையோடு சூர்யாவோடு பழக முடியவில்லை.

அந்த இடக்கைச் சாதரணமாக எடுத்த சூர்யா, “மற்றவர்கள் என்ன மூக்காலா சொல்வார்கள்?” என்று விளையாட்டாகப் பதில் சொன்னான்.

“நானும் உன்னோடு அதைப் பற்றிக் கதைக்கத்தான், சனாவை அனுப்பினேன். பெரியவர்கள் அவளை உனக்கு நிச்சயித்து இருந்தார்கள் என்று சொன்னாள். ஆனால் அவளுக்கு உன்னிடம் அப்படியான விருப்பம் எதுவும் இல்லை ஜெயன்.” என்று சூர்யா சொன்னபோது, எவ்வளவுதான் மனதைத் தேற்றி வைத்திருந்தபோதும் ஜெயனுக்கு வலித்தது.

“அவளைப் பொறுத்தவரை, நீ நல்லதொரு நண்பன். நம்மைப் பற்றி நீ இங்கு வந்ததும் சொல்வதாகச் சொன்னாள். அதேபோல சொல்லியும் இருக்கிறாள். அதற்கு முதலே அவள் உன்னிடம் சொல்லாமல் விட்டதற்கு, அவளை மன்னித்துவிடு. அவளுக்காக நான் மன்னிப்புக் கேட்கிறேன்.” என்றான் சூர்யா.
அதைக் கேட்டபோது, மெல்லிய பொறாமை உணர்வொன்று ஜெயனைத் தாக்கியது. அவளுக்காக இவன் மன்னிப்புக் கேட்பதும், தனிமையில் சூர்யாவை எவ்வளவு திட்டினாலும், தன் முன்னால் விட்டுக் கொடுக்காமல் நடந்த சனாவின் செயலும், பிரிவொன்று வந்திருந்த போதிலும் அவர்களுக்குள் இருக்கும் நெருக்கத்தையே உணர்த்தியது!

“எதற்கும் கொஞ்சம் தயங்கும் குணம் அவளுக்கு. அதோடு பெற்றவர்களையும் இழந்தது அவள் மனதுக்கு பெரும் அடி. இதில் நான் வேறு..” என்ற சூர்யா, “இனி அவளை மிக மிக சந்தோசமாக வைத்திருக்கவேண்டும்.” என்றான், தனக்குத் தானே சொல்வது போல்.

உண்மையான காதலனாக, அக்கறையோடு அவன் பேசியது இவனுக்கு கோபத்தைக் கிளப்பியது. இவ்வளவு அக்கறை இருக்கிறவன் தான் அன்று விட்டுவிட்டுப் போனானா? சனாவுக்கு நல்ல வாழ்க்கை அமைந்து அவள் நன்றாக வாழவேண்டும் என்கிற விருப்பம் நிறையவே இருந்தாலும், ஜெயனால் சூர்யாவை முழுதாக மன்னிக்க முடியவில்லை.

லட்சனாவின் காதலனாக சூர்யாவை ஏற்றுக் கொள்ள முடிந்தபோதும், அவள் பட்ட கஷ்டத்துக்கு அவனே காரணம் என்று நினைத்தவனுக்கு கோபம் உள்ளுக்குள்ளே கனன்றுகொண்டே இருந்ததில், “அதுதான், போதும் போதும் என்கிற அளவுக்கு அவளை அழ வைத்துவிட்டாயே..!” என்றான், மனதில் இருந்த ஆத்திரம் குரலில் தொனிக்க.

தான் செய்தது பிழை என்பதை உணர்ந்திருந்த சூர்யாவுக்கு, அவன் பேச்சு கோபத்தை வரவழைக்கவில்லை.

ஒரு நெடிய மூச்சினை இழுத்து விட்டுவிட்டு, “ம்.. அவளையும் வருத்தி, என்னையும் வருத்தி நான் செய்த முட்டாள் வேலை அது..” என்றான், குரலில் நிஜமான வருத்தம் தொனிக்க.

அதை உணரமுடிந்தாலும், அன்று சனாவின் நிலையை எண்ணியதும் ஜெயனின் முகம் இறுகியது. “எது.. நீ அவளைக் காதலித்ததைச் சொல்கிறாயா?” என்று கேட்டவனின் குரலில், குத்தலும் கோபமும் சரிசமமாய்க் கலந்திருந்தது.

ஜெயனின் பேச்சில் இருந்த பேதத்தை அப்போதுதான் உணர்ந்தவனுக்கு, தொடக்கத்தில் இருந்தே அவன் குத்தலும் கோபமுமாகவே தான் கதைக்கிறான் என்பது புரிந்தது. சட்டென்று திரும்பி ஜெயனைப் பார்த்தான். ஜெயனும் தளராது அந்தப் பார்வையைத் தாங்கி நின்றான்.

“உனக்கு என்ன கோபம் என்னிடம்? சனாவை நான் விரும்புவதாலா?” என்று புருவங்கள் சுருங்கக் கேட்டான் சூர்யா.

“அதுசரி! எப்போதும் முட்டாள் தனமாக ஒரு முடிவை எடுப்பதில் நீ வல்லவனாச்சே!” என்றான் ஜெயன், அப்போதும் குறையாத ஏளனத்தோடு.

“அப்போ உனக்கு என்மீது கோபம் இல்லை என்கிறாயா?”

“நிச்சயமாக இருக்கிறது!”

சூர்யாவுக்குத் தெரிந்து, ஜெயனுக்கும் அவனுக்கும் இடையில் சனாவை அவன் விரும்புவதைத் தவிர வேறு எந்தப் பிரச்சினையுமே இல்லை. அதனால் கோபம் இல்லை என்றும் ஜெயன் சொல்லிவிட்டான். பிறகு வேறு எதனால் கோபமாக இருக்கிறான் என்பதை அவனால் கண்டுபிடிக்க முடியவில்லை.

“நீ சொல்வதன் அர்த்தம் புரியவில்லை” என்றான் சூர்யா.

“ஏன் புரியாமல்? நீ சனாவைக் காதலித்த அழகைச் சொல்கிறேன்..” என்றான் ஜெயன் அலட்சியமாக.

தாடை இறுக, “ஜெயன்!” என்று அதட்டினான் சூர்யா எச்சரிக்கும் விதமாக. எந்த அலட்டலும் இன்றி அவனையே பார்த்தான் ஜெயன்.

ஒருமுறை கண்களை இறுக மூடித்திறந்தான் சூர்யா. “எதற்கு இப்படி எல்லாம் கதைக்கிறாய் ஜெயன்? என் காதலில் என்ன குறை கண்டாய்?” என்று, முடிந்தவரை நிதானமாகக் கேட்டான்.

“உனக்குப் பிடிக்கும் வரை காதலிப்பதும், பிடிக்கவில்லை என்றதும் பிரிவைச் சொல்வதும் குறையில்லாமல் வேறென்ன?”

“எல்லாம் தெரிந்தவன் போல் பேசாதே!” என்றவன் தொடர்ந்தான்.

“வாழ்க்கையை பிராக்டிக்கலாக பார்த்துப் பழகியவன் நான். உள்ளத்தில் அன்பு இருந்தாலும், அந்த அன்பு மட்டுமே குடும்பம் நடத்தப் போதாது. இருவருக்குள்ளும் புரிந்துணர்வு வேண்டும். அது எங்களுக்குள் இல்லாத மாதிரிப் பட்டது. எதிலும் முரண்பாடு. அதனால்தான் பிரிவைச் சொன்னேன். முதலில் கஷ்டமாக இருந்தாலும் போகப் போகச் சரியாகிவிடும் என்று நினைத்துத்தான், அவளை மிகவும் பிடித்திருந்தும் பிரிந்து சென்றேன். ஆனால்.. பிரிந்தபிறகுதான், அவள் இல்லாமல் எனக்கு ஒன்றுமே இல்லை என்பது புரிந்தது.” என்ற சூர்யாவைத் திரும்பிப் பார்த்தான் ஜெயன்.

“எல்லாம் சரிதான். ஆனால், நீ ஒன்றை மறந்துவிட்டாய். இந்த மூன்று மாதங்களில் அவளுக்கு வேறு ஒருவரோடு திருமணம் நடந்திருந்தால் என்ன செய்திருப்பாய்..?” என்று நிதானமாகக் கேட்டான் ஜெயன்.

அந்தக் கேள்வியில் இருந்த உண்மை சூர்யாவைச் சுட்டது. அந்தக் கோணத்தில் சிந்தித்தே இராதவன் அதிர்ந்துபோய் ஜெயனைப் பார்த்தான்.

அதுவும் சில நொடிகள் தான். “இல்லை! நிச்சயமாக இல்லை! என் லட்டு என்னைத் தவிர இன்னொருவனை நிச்சயமாக் ஏற்றுக்கொள்ள மாட்டாள்!” என்றான் உறுதியான குரலில். ஜெயனுடனான திருமணத்துக்கு அவனே வாழ்த்துச் சொல்லிவிட்டுப் பிரிந்தபோதும், அவனை நினைத்தே வாழ்ந்து கொண்டிருப்பவள் என்று எண்ணியவனின் உள்ளம் கர்வம் கொண்டது.

“சரி. நீ சொல்வது போல அவளால் இன்னொரு திருமணம் செய்யமுடியாது என்றே இருக்கட்டும். ஆனால், உன் பிரிவைத் தாங்க முடியாமல் அவள் வேறு ஏதும் முடிவு எடுத்திருந்தால் என்ன செய்திருப்பாய்?” என்று கேட்டான் ஜெயன்.

அந்தக் கேள்வியின் பொருள் புரியாமல், “வேறு முடிவு என்றால்.. எதைச் சொல்கிறாய்..?” என்று கேட்டான் சூர்யா.

அவன் முகத்தையே ஊன்றிப் பார்த்தபடி, “உயிரை விடத் துணிந்திருந்தால்…” என்றவனைச் சொல்லி முடிக்க விடாது, “வாயை மூடு முட்டாள்!” என்று, தன் கட்டுப்பாட்டை இழந்து உறுமினான் சூர்யா.

எந்த மாற்றமும் இன்றி, சூர்யாவையே பாத்திருந்தான் ஜெயன்.

அடக்கப்பட்ட ஆத்திரத்தோடு, “சனா அப்படியெல்லாம் செய்யமாட்டாள். எனக்குத் தெரியும்..” என்றான் சூர்யா இறுகிய குரலில்.

“நீ அவளைப் புரிந்துகொண்ட லட்சணம் நன்றாக இருக்கிறது..” இளக்காரமாகச் சொன்னான் ஜெயன்.

“நான் நன்றாகத்தான் அவளைப் புரிந்து வைத்திருக்கிறேன். நீ உளறுவதை நிறுத்து!” கடினப்பட்ட குரலில் சொன்னான் சூர்யா.

ஏளனமாக உதடு வளைய, “உண்மை உளறலாகப் படுகிறதோ?” என்று கேட்டான் ஜெயன்.

சூர்யாவுக்கு அதைப் புரிந்துகொள்ளவே சில நொடிகள் தேவைப் பட்டது. “என்ன உண்மை? அப்படி எதுவும் இருக்காது..” என்றவனின் குரல் அவனையும் மீறி நடுங்கியது.

அவள் உயிருடன்தான் இப்போது இருக்கிறாள் என்பதே அவனுக்கு மறந்துபோனது. ஜெயன் சொல்வதை நம்பவும் முடியாமல், நம்பாமல் இருக்கவும் முடியாமல், தவிப்போடு ஜெயனைப் பார்த்தான்.

அவன் விழிகளில் பரிதவிப்பு, வேதனை, வலி என்று அத்தனை உணர்வுகளும் போட்டி போட்டுக்கொண்டு குவிந்தன. அதைப் பார்த்த ஜெயனுக்கே ஒருமாதிரி ஆகிப்போனது.

“அவளைப் பற்றி யோசியாது, நீ உனக்குச் சரி என்று பட்டதைச் சொல்லிவிட்டுப் போய்விட்டாய். அவளோ உன் பிரிவைத் தாங்க முடியாமல், நீ சொன்னவைகளை நம்ப முடியாமல் வாழ்க்கையே வேண்டாம் என்று விரக்தியில் முடிவெடுத்து, காருக்கு முன்னால் பாய்ந்துவிட்டாள்.” என்று ஒருவித மரத்த குரலில் சொன்னான்.

அதைக் கேட்டுக்கொண்டிருந்தவனின் உடல் இறுகியது. இறுகிய தாடையும், அழுந்திய உதடுகளுமாக தன்னைக் கட்டுப்படுத்த முடியாமல் போராடிக்கொண்டிருந்தான் சூர்யா.

“கொழும்பில் பெற்றவர்களை இழந்து, பித்துப் பிடித்தவள் போல் கிடந்தவளை மனுஷியாக்கி இங்கே அனுப்பி வைத்தேன். நீயானால் காதல் என்கிற பெயரில் மீண்டும் அவள் உயிரைப் பறிக்கப் பார்த்தாய்!” என்று கொதித்தவன், “காதலித்தவளின் மனதைப் புரிந்து கொள்ளாமல், காதல் என்கிற பெயரில் எதைக் கிழித்தாய் நீ?” என்று சீறினான். எவ்வளவு முயன்றும் அவனால் தன் கோபத்தைக் குறைக்க முடியவில்லை.

ஜெயனின் பேச்சால் இப்போது சூர்யாவுக்குக் கோபம் வரவே இல்லை.
மனதைப் பிளந்து கொண்டிருந்த வலியில், காருக்குள்ளே மூச்சடைப்பது போன்று இருக்கவே, காரைத் திறந்துகொண்டு இறங்கியவனின் இதயமோ தன் ஜோடிப்புறா அனுபவித்த வேதனைகளை எண்ணி வெந்துகொண்டிருந்தது.

அவன் மேல் அவள் வைத்திருக்கும் அளவற்ற அன்பை அறிவான்தான். ஆனால், அந்த அன்பே அவளின் உயிரையே பறிக்கும் அளவுக்குத் தூண்டும் என்று அவன் கனவிலும் நினைத்ததில்லை.

எவ்வளவு பெரிய பிழையைச் செய்துவிட்டான். தப்பித்தவறி அவளுக்கு ஏதாவது நடந்திருந்தால்… நினைக்கவே முடியவில்லை. நெஞ்சு நடுங்கியது. அவன் கைகள் தடுமாற்றத்தோடு ஜீன்ஸ் பாக்கெட்டில் சிகரெட் பெட்டியைத் தேடி அலைந்தது.

வேகமாக எடுத்தவன் ஒன்றைத் தீமூட்டி உதட்டில் வைத்தான். இருளை வெறித்தபடி புகைத்து முடித்தவன் இன்னொன்றையும் எடுத்து, முன்னதிலேயே தீமூட்டினான். அதுவும் மிக வேகமாகச் சாம்பலாகிக் கொண்டிருந்தது.

தானும் காரிலிருந்து இறங்கி அதுவரை அவனையே பாத்திருந்த ஜெயனுக்கு, சூர்யாவின் இந்தத் துடிப்பு அவனே எதிர்பாராதது! அவன் மீது ஒருவித பரிதாபம் கூடத் தோன்றியது.

அவன் பதட்டத்தைக் குறைக்க எண்ணி, “நீ மட்டும் புகைக்கிறாயே? எனக்கு ஒன்று தரமாட்டாயா? அந்தளவுக்குக் கஞ்சனா நீ..?” என்று இலகுவாகப் பேச முயன்றான் ஜெயன்.

புகையை இழுத்து விட்டபடியே அவனைத் திரும்பிப் பார்த்தவனின் மற்றக் கை தன் பாட்டுக்கு சிகரெட் பெட்டியை ஜெயன் பக்கமாக நீட்டியது.
 

நிதனிபிரபு

Administrator
Staff member
அந்தப் பெட்டியிலிருந்து ஒன்றை எடுப்பதற்காக ஜெயன் கையை நீட்ட, சிகரெட் பெட்டியை மீண்டும் இழுத்துக்கொண்ட சூர்யா, “இல்லை. தரமாட்டேன்.” என்றான் ஜெயனிடம்.

அந்தச் செயல் சிறுபிள்ளைத் தனமாகப் பட, “ஏன்?” என்று கேட்ட ஜெயனின் குரலில் வியப்பிருந்தது.

“சனாவுக்குப் பிடிக்காது..”

“எனக்குத் தருவது அவளுக்குப் பிடிக்காதா?” என்று கேட்டவனின் குரலில் இன்னும் வியப்பிருந்தது.

“ம்.. ஒருநாள் சிவாண்ணாவுக்கு சிகரெட் கொடுத்தேன் என்று என்னைத் திட்டிவிட்டாள்.”

அதைக் கேட்டதும் ஜெயனுக்குச் சிரிப்பாக இருந்தது. காதல் ஒரு மனிதரை எப்படியெல்லாம் ஆட்டுவிக்கிறது என்று நினைத்தவன், “சரி. ஆனால் இப்போது அவள்தான் இங்கில்லையே..” என்றான்.

“அவள் இல்லாவிட்டாலும், அவளுக்குப் பிடிக்காததைச் செய்ய எனக்கு விருப்பம் இல்லை..” என்றான் சூர்யா.

“ஓ..” என்று அளவுக்கு அதிகமாகவே இழுத்தவன், “நீ புகைப்பது மட்டும் அவளுக்கு மிக மிகப் பிடிக்குமோ..?” என்று கேட்டான் கேலியாக.

அப்போதுதான் அதையே உணர்ந்தவன் போல் எரிந்துகொண்டிருந்த சிகரெட்டை ஒருதடவை பார்த்துவிட்டு, அதைச் சுண்டி எறிந்தான் சூர்யா.

ஜெயன் புறமாகத் திரும்பி, “சரி. நீ கிளம்பு. நாளை சந்திக்கலாம்..” என்றுவிட்டுக் காரில் ஏறத் தொடங்கியவன், திரும்ப வேகமாக ஜெயனுக்கு அருகே வந்து, அவனை ஆரத் தழுவிக்கொண்டான்.

அந்தத் தழுவலில் இருந்த இறுக்கத்தில் ஆச்சர்யத்தோடு ஜெயன் சூர்யாவைப் பார்க்க, “மிக்க நன்றிடா..” என்றான் உணர்ச்சி வசப்பட்ட குரலில்.

உரிமையாக அவன் போட்ட அந்த ‘டா’வில் தன் மனதில் உண்டான ஒருவித நட்புணர்வை உணர்ந்தபடி, “எதற்கு?” என்று கேட்டான் ஜெயன்.

“எல்லாவற்றுக்கும்…” என்று பொதுவாகச் சொன்னவன், “பாய்டா..!” என்றுவிட்டுக் காரில் ஏறினான்.

எல்லாவற்றிலும் அவன் காட்டும் வேகத்தை நினைத்து, மெல்லிய முறுவல் ஒன்று மலர்ந்தது ஜெயனின் முகத்தில். இதுவரை சூர்யாவின் மேல் இருந்த கோபம் கூட காணாமல் போனதுபோல் உணர்ந்தான். தான் அமர்ந்திருந்த பக்கத்தின் கதவைத் திறந்து, குனிந்து, “மெதுவாக ஓட்டு.. இருட்டு வேறு.” என்றான்.

“ம்ம்..” என்றபடி எடுத்தவனின் காரோ, ஜெயன் சொன்னதற்கு மாறாக வேகமாக அவன் கண்ணை விட்டு மறைந்தது.

…….



அடுத்த நாள் மாலை வேலை முடிந்து வீட்டுக்கு வந்துகொண்டிருந்தாள் சனா. முதல் நாள் நடந்தவைகளை நினைத்து அன்று முழுவதுமே மனம் சஞ்சலப் பட்டுக்கொண்டிருந்தது அவளுக்கு.

அந்த சஞ்சலம் கொடுத்த சோர்வோடு வீட்டுக் கதவைத் திறந்துகொண்டு உள்ளே வந்தவள், அங்கிருந்தவர்களைப் பார்த்து அப்படியே அதிர்ந்து நின்றுவிட்டாள்.

காரணம், அங்கே சூர்யாவின் தாத்தா பாட்டி முதல், அப்பா அம்மா, அண்ணா அண்ணி என்று சைந்து வரை அவனது மொத்தக் குடும்பமுமே வீற்றிருந்தது. அவர்களோடு சிவபாலன் மற்றும் ஜெயபாலனும் அமர்ந்திருந்தார்கள்.

‘கடவுளே.. சொன்னதுபோல் வந்துவிட்டானே. எல்லாவற்றையும் சொல்லிவிட்டானா.. ஐயோ அக்கா அத்தான் என்ன நினைப்பார்கள்...’ என்று உள்ளம் நடுங்க, அவள் விழிகள் வேகமாக சிவபாலனையும் சுலோவையும் தேடிச் சுழன்றது.

சுழன்ற விழிகள் சிவபாலனைக் கண்டதும் பயத்தோடு அவரைப் பார்க்க, அவரோ இலகுவாகப் புன்னகைத்து, “என்ன சனா, அப்படியே நிற்கிறாய். தாத்தா பாட்டியை உனக்கு முதலே தெரியும் தானே..” என்றவரின் பேச்சு, அவர்களை வா என்று சொல் என்று மறைமுகமாக உணர்த்தியது.

இன்னும் ஒன்றும் சொல்லவில்லை போலும் என்று ஒரு நொடி ஆறுதலடைந்த அவள் மனது, சொல்லத்தானே எல்லோரையும் கூட்டிக்கொண்டு வந்திருக்கிறான் என்று நினைத்தவுடன் மீண்டும் பயத்தில் நடுங்கத் தொடங்கியது.
ஆனாலும் சிரமப்பட்டு, “வா..வாருங்கள்..” என்றவளுக்கு, அந்த ஒரு சொல்லைச் சொல்லவே பெரும் கஷ்டமாக இருந்தது.

“எப்படி இருக்கிறாய் லச்சும்மா?” என்று கேட்ட பாட்டியின் பாசமான குரலைக் கேட்டுக் கூட அவளுக்கு உதறியது.

உள்ளே அடைத்துவிட்ட குரலை வெகு சிரமப்பட்டு வெளியே கொண்டுவந்து, “நான்.. நான் நன்றாக இருக்கிறேன் பாட்டி.…” என்றாள் தடுமாற்றத்தோடு.

மற்றவர்களின் பார்வை அவளை ஆராய்கிறதோ? துளைக்கிறதோ? அங்கே நிற்க முடியாமல் தடுமாறினாள்.

அதற்குள் அவளை நெருங்கிவிட்ட பாட்டி, நெகிழ்ந்துவிட்ட குரலில், “என் கண்ணே..” என்றழைத்து, பனித்துவிட்ட கண்களால் பாசத்தோடு நோக்கி, கைகளால் அவள் கன்னங்களைத் தாங்கி, அவள் உச்சியில் இதழ் பதித்தார். ஏனோ அவளுக்கும் கண்ணைக் கரித்தது.

“சோர்வாகத் தெரிகிறாயே. போ.. போய் முகம் கழுவிக்கொண்டு வா.” என்று அவளின் நிலை அறிந்தோ என்னவோ பாட்டி சொல்ல, விட்டால் போதும் என்று உள்ளே விரைந்தாள் சனா.

தன்னுடைய அறைக்குள் புகுந்தவளுக்கு, இதயம் படபடவென்று அடிக்கத் தொடங்கியது. அந்தக் குளிரிலும் நெற்றியில் வியர்வைத் துளிகள் அரும்பியது.

அக்காவைக் காணவில்லையே என்று எண்ணியவள், நெஞ்சு படபடக்க, சமையலறைக்கு விரைந்தாள். அங்கே குளிருக்கு இதமாக தேநீர் தயாரித்துக் கொண்டிருந்தாள் சுலோ. இவளைக் கண்டதும், “வந்துவிட்டாயா சனா..” என்றவள், தலையசைத்து அவளை அருகே அழைத்தாள்.

கைகால்கள் உதற அருகே சென்றவளின் காதருகே குனிந்து, “மொத்தக் குடும்பமுமே சொல்லாமல் கொள்ளாமல் வந்திருக்கிறார்கள். என்னவென்றே தெரியவில்லை..” என்று ரகசியம் பேசினாள்.

அது தெரிந்தால் என்ன நினைப்பார்களோ என்று நெஞ்சு பதற, “அக்கா.. அது..” என்று இழுத்தவளிடம், “நீ போய் முகத்தை நன்றாகக் கழுவி, நல்ல உடுப்பாக ஒன்றைப் போட்டுக்கொண்டு வா. போ.. அதற்குள் நான் இந்தக் கேக்கையும் வெட்டி தேநீரையும் ஊற்றி முடிக்கிறேன்..” என்று தங்கையை ஏவினாள் சுலோ.

அதற்கு மேல் எதையும் சொல்லத் தைரியம் இன்றி அறைக்குச் சென்றவள், தமக்கை சொன்னது போலவே முகம் கழுவி, எதை அணிவது என்று தடுமாறி, பகட்டாகவும் இல்லாமல் வெகு சாதரணமாகவும் தோன்றாமல் இருக்க, கரும் பச்சை நிறத்தில் வெள்ளைப் புள்ளிகள் போட்ட முழு நீளப் பாவாடையும், அதற்குத் தோதாத ‘வி’ வடிவக் கழுத்தில் கரும் பச்சை நிறத்தில் பட்டிபோன்று தைத்திருந்த, வெள்ளை நிறத்தில் ஆன முழுக்கை ‘ப்ளவுஸ்’ உம் அணிந்துகொண்டாள்.

தலைவாரிப் பொட்டு இட்டுக் கொண்டவளுக்கு வெளியே செல்லவே கால்கள் எழவில்லை. ஆனாலும் அக்கா காத்திருப்பாள் என்பதால், ஒருவித பயம் மனதை ஆட்ட மீண்டும் சமையலறைக்குச் சென்றாள்.

அவளை மேலிருந்து கீழாக அளவிட்ட சுலோவுக்குத் திருப்தியாக இருந்தது. “இந்தா இதை நீ பிடி..” என்று தேநீர் தட்டை தங்கையிடம் கொடுத்துவிட்டு, கேக் தட்டுடன் முன்னறைக்கு அவள் நடக்க, பலியாடு போன்று பின்னே நடந்தாள் சனா.

“எல்லோரும் .எடுத்துக்கொள்ளுங்கள்..” என்றபடி சுலோ கேக்கைக் கொடுக்க, இவள் ஒவ்வொருவருக்கும் தேநீரை நீட்டினாள். கப்பை எடுக்கையில் எல்லோரும் அவளைப் பார்த்துப் புன்னகைத்ததில் ஓரளவுக்கு ஆறுதலாக உணர்ந்தாள்.

சூர்யாவுக்கு நீட்டுகையில், அவன் முகத்தைப் பார்க்கக் கூடாது என்று எவ்வளவு முயன்றும் முடியாமல், விழிகள் அவனைப் பார்த்துவிட, அவனது ஒரு கை கப்பை எடுத்துக்கொண்டிருந்தாலும், உதடுகள் “ஷூல்டிகுங்(சாரி)” என்று மெதுவாக அசைந்தது, மற்றவர்களுக்குத் தெரியாத வகையில்.

ஏன் மன்னிப்புக் கேட்கிறான் என்று புரியவில்லை அவளுக்கு!

அதுவும் அவன் விழிகளில் இருந்த பரிதவிப்பும் யாசிப்பும் என்னவோ செய்ய, குழப்பமும் கேள்வியுமாக அவனைப் பார்த்தாள். அதற்கு மேல் ஒன்றும் செய்ய இயலாது, அவனிடமிருந்து நகர்ந்து, அவனுக்கு அருகில் இருந்த ஜெயனுக்கும் கொடுத்துவிட்டு, வெறும் தட்டை மேசையில் வைத்தவள் அங்கிருந்து அகன்றாள்.

மனமோ குழம்பித் தவித்தது. ஒருவித பதட்டம், பயம், படபடப்பு என்று உள்ளே என்னவோ செய்தது. அக்கா அத்தானை நினைக்கையில் அழுகை வரும்போல் இருந்தது.

தன்னறைக்குள் சென்றவள், வாசலுக்கு அருகேயே, அவர்கள் பேசினால் தனக்குக் கேட்கும் வகையில் நின்றுகொண்டாள்.

“உன் தம்பிக்கு விசா எல்லாம் கிடைத்துவிட்டதா சிவா?” என்று சூர்யாவின் அப்பா, தேநீரைப் பருகிக் கொண்டே பேச்சை ஆரம்பித்தார்.

“ஆமாம் அண்ணா. ஒரு வருட விசா தந்திருக்கிறார்கள். வேலைக்கும் போகிறான்..” என்றார் சிவபாலன்.

“பிறகு என்ன.. அம்மா அப்பாவையும் இருவருமாகச் சேர்ந்து கூப்பிட்டு விட்டீர்கள் என்றால், எல்லோரும் ஒன்றாக இருக்கலாம்..” என்றார் தாத்தா வைரவேலன்.

“அப்படித்தான் எங்கள் எண்ணமும் தாத்தா. அவர்களைக் கூப்பிட இன்னுமொரு ஆறுமாதம் பிடிக்கும் என்று நினைக்கிறேன். அதனால்தான் ஜெயனின் திருமணமும் தள்ளிக்கொண்டே போகிறது..” என்றவர், “மூன்றரை வருடங்களுக்கு முதலே நடந்திருக்க வேண்டியது..” என்பதையும் சேர்த்துச் சொன்னார்.

உள்ளே அதைக் கேட்டுக் கொண்டிருந்த சனாவுக்கு உதறல் எடுத்தது என்றால், சூர்யாவோ தாத்தாவோடு கண்ணால் எதையோ பேசினான்.

“நாங்களும் திருமண விஷயம் கதைக்கத்தான் வந்திருக்கிறோம்.” என்றார் வைரவேலன்.

‘அதற்கு எதற்கு எங்கள் வீட்டுக்கு வந்திருகிறார்கள்..’ என்கிற கேள்வி மனதில் தோன்றினாலும், அதை வாய்விட்டுக் கேட்பது நாகரிகம் இல்லை என்பதால், கேள்வியாக அவரை நோக்கினார் சிவபாலன்.

“உன் மச்சாளை(மனைவியின் தங்கை-நாத்தனார்) எங்கள் சூர்யாவுக்குப் பெண் கேட்டு வந்திருக்கிறோம்..” என்று விசயத்தைப் போட்டு உடைத்தார் தாத்தா.

கணவன் அருகில் அமர்ந்திருந்த சுலோ, “என்னது?” என்று அதிர்ந்துபோய் எழுந்தே விட்டாள். அவள் இதைச் சற்றுமே எதிர்பார்க்கவில்லை.

சிவபாலனுக்குமே அது அதிர்ச்சிதான் என்றாலும், நொடியில் தன்னைச் சமாளித்துக் கொண்டவர், மனைவியின் கையைப் பிடித்து மீண்டும் அவளை இருத்திக்கொண்டே, “நீங்கள் சொன்னதை எதிர்பாராததால் அதிர்ந்துவிட்டாள்..” என்றார் மற்றவர்களைப் பார்த்து.

இதைக் கேட்டுக்கொண்டிருந்த சனாவுக்கு வெளிப்படையாகவே கைகால்கள் நடுங்கியது. சிவபாலனின் குடும்பத்தில், தாத்தா சொன்னதைக் கேட்டு எந்தவித அதிர்ச்சியும் ஆச்சரியமும் அடையாமல் இருந்த ஒருவன் என்றால், அது ஜெயன் மட்டுமே!

அவனுமே சூர்யாவின் வேகத்தைப் பார்த்து உள்ளுக்குள் மீண்டும் வியந்துகொண்டான்.

“நாங்களும் சொல்லாமல் வந்தது பிழைதான் சிவா. ஆனால் எங்கே..” என்ற தாத்தாவின் பார்வை பேரனைத் தொட்டு மீண்டது.

தாத்தாவின் கேள்விக்குப் பதில் சொல்லும் விதமாக, “அது பரவாயில்லை தாத்தா. ஆனால், சனாவை ஜெயனுக்கு என்று எங்கள் வீட்டுப் பெரியவர்கள் ஏற்கனவே முடிவு செய்துவிட்டார்கள்.” என்றார் சிவபாலன்.

“சரிதானப்பா. ஆனால், லட்சனாவுக்கு சூர்யாவைத் தானே பிடித்திருகிறது..” என்றார் வைரவேலன்.

“இல்லை தாத்தா. நீங்கள் எதையோ பிழையாக புரிந்துகொண்டு கதைக்கிறீர்கள்..” என்றாள் சுலோ அவசரமாக.

அவளுக்கு என்னவோ வைரவேலனின் பேச்சு ஜெயனை அவமானப் படுத்துவது போன்று தோன்றியது. அவளின் அன்புக் கணவனின் தம்பியை ஒருவர் ஒன்று சொல்வதை அவளால் தாங்கிக்கொள்ள முடியவில்லை.
 

நிதனிபிரபு

Administrator
Staff member
“சுலோக்கா, நானும் சனாவும் ஒருவரை ஒருவர் விரும்புகிறோம். இதை அவளே உங்களிடம் சொல்வதாகத்தான் சொன்னாள். நான்தான் அவசரப்பட்டு எல்லோரையும் கூட்டிக்கொண்டு வந்தேன்..” என்று இப்போது இடைபுகுந்தான் சூர்யா. அப்போதும் எல்லோர் முன்னிலையிலும் தன் காதலைச் சொன்னவன், சனாவையும் விட்டுக் கொடுக்கவில்லை.

அதிர்ச்சியாக ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்ட சிவபாலனும் சுலோவும், ஒரே நேரத்தில் ஜெயனை திரும்பிப் பார்த்தனர்.

அவனும் அவர்களைத்தான் பாத்திருந்தான். அவனிடம் தெரிந்த நிதானம் அவர்களைக் குழப்பியது.

என்ன சொல்வது என்றே தெரியாமல் அவர்கள் திகைக்க, “சின்னப்பிள்ளைகள் ஒருவரை ஒருவர் விரும்புகிறார்கள். பெரியவர்கள் நாம் அவர்களைச் சேர்த்துவைப்போமே சிவா..” என்றார் தாத்தா.

“அதில்லை தாத்தா. என் தம்பிக்கு..” என்று சிவபாலன் ஆரம்பிக்க, “அண்ணா.. சனாவை சூர்யாவுக்கே கட்டிக்கொடுக்கலாம்..” என்று இப்போது இடைபுகுந்தான் ஜெயன்.

“என்னடா நீ..” என்ற தமையனைப் பேசவிடாது, “என்னோடு கொஞ்சம் உள்ளே வாருங்கள் அண்ணா..” என்றபடி, இருக்கையில் இருந்து எழுந்துகொண்டான் ஜெயன்.

வந்திருப்பவர்களை விட்டுவிட்டு எப்படி உள்ளே போவது என்று சிவபாலன் தயங்க, “நீ போய்க் கதைத்துவிட்டு வா சிவா. நாங்கள் இருக்கிறோம்.” என்றார் தாத்தா.

சிவபாலன் எழுந்துகொள்ள, “அண்ணி, நீங்களும் வாருங்கள்..” என்றான் ஜெயன்.

மூவருமாக ஜெயனின் அறைக்குள் சென்றதும், கதவை அடைத்த சுலோ, “என்ன ஜெயன் நீ? அவர்கள் தான் என்னென்னவோ சொல்கிறார்கள் என்றால் நீயும் உளறுகிறாய்..” என்றாள் கோபத்தோடு. இன்னும் அவளால் எதையுமே நம்ப முடியவில்லை.

“இல்லை அண்ணி. நான் எதையும் உளறவில்லை. சூர்யாவும் சனாவும் விரும்புவது உண்மை.” என்று ஜெயன் சொன்னபோது, “நம் சனாவா? இருக்காது ஜெயன். அப்படி ஏதும் என்றால் என்னிடம் சொல்லியிருப்பாளே..” என்றாள், சுலோ மீண்டும், அதை நம்பமுடியாமல்.

“அவள் சொல்வதாகத்தான் இருந்தாள் அண்ணி. அதற்குள் இவர்கள் வந்துவிட்டார்கள்.” என்றான் ஜெயன் சமாளிப்பாக.

“ஆனால், அவளின் சம்மதமும் கேட்டுத் தானேடா உனக்கு நிச்சயித்தார்கள்..” என்றார் சிவபாலன். அவருக்குமே இந்த விஷயத்தை நம்புவது சற்றுச் சிரமமாக இருந்தது.

“நிச்சயித்தால் என்ன அண்ணா. ஒவ்வொருவரின் மனமும் நிச்சயிக்க வேண்டாமா எனக்கு அவன்தான். அல்லது அவள்தான் என்று. சனாவின் மனது சூர்யாவை தன்னவனாக நிச்சயித்திருகிறது.” என்றான் ஜெயன், எந்த உணர்ச்சியும் இல்லாத குரலில்.

அதை உள்வாங்கிக் கொள்ள அந்தக் கணவன் மனைவி இருவருக்குமே சற்று நேரம் தேவைப் பட்டது போலும். அமைதியாக சில நொடிகள் கழிய, ஜெயனின் புறம் திரும்பிய சிவபாலனின் விழிகள் கூர்மையோடு அவனில் நிலைத்தது.

“உன் முடிவு என்ன ஜெயன்?” என்று கேட்டவரின் பார்வை, விழி வழியே அவன் இதயத்தையே அலசியது.

அந்தப் பார்வையை எதிர்கொள்ள முடியாமல், முகத்தைத் திருப்பியபடி, “இப்போது என் முடிவு முக்கியம் இல்லை அண்ணா..” என்றான் ஜெயன்.

“உன் முடிவுதான்டா முக்கியம்!” என்றார் அவர் அழுத்தமாக.

மீண்டும் ஒரு சிறு அமைதி. “ஒருவரை ஒருவர் விரும்பும் இருவர் இணைவதுதான் அண்ணா முறை.” என்றான் ஜெயன் விருப்பு வெறுப்பு அற்ற குரலில்.

“நீ அவளை விரும்பவில்லையா?” கூர்மையோடு அவர் கேட்க, “அண்ணா, ப்ளீஸ். இப்போது எதற்கு தேவை இல்லாததுகளைப் பேசுகிறீர்கள். காதலிப்பவர்களைச் சேர்த்து வையுங்கள்.” என்றான் அவன்.

“என்னடா நீ…” என்றார் சிவபாலன் சலித்த குரலில். அவரால் இதை ஏற்றுக்கொள்ளவும் முடியவில்லை. மறுக்கவும் முடியவில்லை.

பிடிக்காமல் திருமணம் செய்யமுடியாது. அந்த வகையில் அவர்களுக்குச் சம்மதம் சொல்ல நினைத்தாலும், சனாவையே தன் வருங்கால மனைவியாக நினைத்த தன் தம்பியின் நிலை என்ன என்று நினைக்கையில் அந்த சம்மதத்தை வழங்கவும் பிடிக்கவில்லை.

சுலோவோ என்ன செய்வது என்று தெரியாமல் நின்றாள். தங்கையின் மனதுக்கு பிடித்த மாதிரி வாழ்க்கை அமையவேண்டும் என்பதுதான் அவளது விருப்பமும்! ஆனால், அந்தத் தங்கைக்குப் பிடித்தவன் அவர்கள் எதிர்பார்த்த நபராக இல்லாமல் போனதில் மனம் சுணங்கியது.

“இந்தச் சனா இப்படிச் செய்வாள் என்று நான் நினைக்கவே இல்லை…” என்றாள் கலங்கிய குரலில்.

“விடு சுலோ. நினைப்பது மட்டுமே எப்போதும் நடந்து விடுவதில்லை.” என்று மனைவியைத் தட்டிக் கொடுத்தார் சிவபாலன்.

“ஆனால் அவள் என்னிடம் இதைப் பற்றி ஒன்றுமே சொல்லவே இல்லையே..” என்றவளின் விழிகள் கலங்கியது. தாயைப்போல் அவளைப் பார்த்துக் கொள்கிறோம் என்று நினைத்து மகிழ்ந்ததெல்லாம் பொய்யா? அவளும் அப்படி நினைத்திருக்க, இதை என்னிடம் அல்லவா முதலில் சொல்லியிருப்பாள் என்று துடித்தது அவள் உள்ளம்.

“எப்படிச் சொல்வாள் அண்ணி. நீங்கள் அவளின் அக்கா என்றாலும் என் அண்ணாவின் மனைவி அல்லவா. அத்தானின் தம்பியை எனக்குப் பிடிக்கவில்லை என்று சொல்ல முடியுமா? ஆனால், நான் வந்ததும் என்னிடம் சொல்லிவிட்டாளே. பிறகு என்ன அண்ணி?” என்று ஜெயன் சமாதானம் சொல்லிக்கொண்டிருக்க, அவர்கள் முன் வந்து நின்றாள் சனா.

தலை குனிந்து கைகளை ஒன்றோடு ஒன்று கோர்த்தபடி நின்றவளின் கைகள் நடுங்கியது. அவள் அழுகிறாள் என்பதை நிலத்தில் விழுந்துகொண்டிருந்த கண்ணீர்த் துளிகள் காட்டிக் கொடுத்தது.

சிவபாலனின் முன்னே போய் நின்றவள், யாருமே எதிர்பாரா வகையில் அவர் காலடியில் விழுந்து, “என்னை மன்னித்துக் கொள்ளுங்கள் அத்தான். எனக்கே தெரியாமல் நான் சூர்யாவை விரும்பிவிட்டேன். அதை உங்களிடம் சொல்ல எனக்குப் பயமாக இருந்தது.. நான் செய்தது பிழைதான். ஆனால்.. ஆனால்..” அதற்கு மேல் என்ன சொல்வது என்று தெரியாமல், மீண்டும், “என்னை மன்னித்துவிடுங்கள் அத்தான்.” என்றவளின் விழிகளில் இருந்து கண்ணீர் ஆறாக வழிந்தது.

ஜெயனுக்கே மனதைப் பிசைந்தது என்றால், சுலோ அழவே தொடங்கியிருந்தாள்.

அவளின் முகம் பாராத வரை ஒருவித கோபம் சிவபாலனின் மனதில் இருந்தது தான். அவளைப் பார்த்ததும், அதுவும் அவள் அழுவதைப் பார்த்ததுமே அந்தக் கோபம் மறைந்துவிட்டது என்றால், அவள் காலில் விழாவும் பதறியே போனார்.

“இதென்ன சனா.. எழுந்திரு.” என்றபடி, அவளின் தோள்களைப் பற்றி எழுப்பியவர், “என்னிடம் உனக்கு என்ன பயம்? அத்தான் எனக்கு இதுதான் வேண்டும் என்று எதையும் என்னிடம் உரிமையாகக் கேட்க வேண்டாமா? எனக்கு நம் சைந்துவும் நீயும் ஒன்றுதானே..” என்றவரின் விரல்கள் பாசத்தோடு அவள் கண்ணீரைத் துடைத்தன.

பெறாமலே மகவாகிப் போனவள் மீது பாசம் இல்லாமல் இருக்குமா என்ன?

அதில் உள்ளம் மகிழ, “அத்தான்..” என்று விசித்தவள், கண்களில் கண்ணீரோடு இதழ்களில் புன்னகையுமாக அருகில் வந்த தமக்கையின் தோளில் சாய்ந்துகொண்டாள் உரிமையோடு.

சட்டென்று நிமிர்ந்து தமக்கையைப் பார்த்து, “சாரிக்கா..” என்றவளின் விழிகள் கலங்க, சுலோவுக்கு மீண்டும் அழுகை வந்தது. அவளுக்கும் தங்கை மீது கோபம் இருந்ததுதான். ஆனால் இப்போது அதன் அடையாளம் கொஞ்சமும் இல்லை.

“நீ என்னிடம் சொல்லியிருக்கலாம்..” என்றவள், சனாவின் விழிகள் கலங்குவதைக் கண்டதும், “சரி விடு…” என்றபடி, தங்கையின் தலையைப் பரிவோடு தடவிக் கொடுத்தாள்.

அந்த சூழ்நிலையை மாற்ற, “சரி சரி. அக்காவும் தங்கையும் பாசப் பயிரை பிறகு வளர்க்கலாம். இப்போது வாருங்கள் அங்கே போவோம். அவர்கள் நமக்காக் காத்திருக்கிறார்கள்..” என்றான் ஜெயன்.

அவன் குரலைக் கேட்டு அவன் புறமாகத் திரும்பிய சனா மீண்டும், “சாரி..” என்றாள், குற்ற உணர்வோடு.

ஜெயன் அவளை முறைத்தான். “இன்னும் யாரிடமெல்லாம் சாரி சொல்லப் போகிறாய்? அதுவும் என்னிடம் எத்தனை தடவைதான் சொல்வாய்..” என்று கடிந்தான்.

அவள் அமைதியாக நிற்க, “வாருங்கள் அண்ணா. விட்டால் இவள் இந்தச் சாரியைப் பாட்டாகவே பாடுவாள்..” என்று தமையனை அழைத்தான்.

அவனை ஒரு கூறிய பார்வையால் அளந்துவிட்டு, “வா..” என்றபடி ஓரடி நடந்தவர் நின்று, “இருவரும் முகத்தைக் கழுவுங்கள்.. அழுதது தெரிகிறது.” என்று, சகோதரிகளைப் பார்த்துச் சொல்லிவிட்டுச் சென்றார். அவரோடு ஜெயனும் முன்னறைக்குச் சென்றான்.

சுலோவும் சனாவும் முகம் கழுவிவிட்டு ஹாலுக்குச் சென்றபோது, அங்கிருந்த சந்தோசமான மனநிலையே சிவபாலன் தன் சம்மதத்தைச் சொல்லிவிட்டார் என்று தெரிந்தது.

தயக்கத்தோடு சுலோவின் பின்னால் சனா பதுங்கிக் கொள்ள, அதைப் பார்த்துவிட்டு எழுந்துவந்த சூர்யாவின் தாய் மங்கை, அவளின் கையைப் பிடித்தபடி, “எதற்குத் தயங்குகிறாய். இனி நாங்கள் உன் சொந்தம். வா…” என்றபடி அழைத்துச் சென்று தன்னருகில் அமர்த்திக் கொண்டார்.

யாரையுமே நிமிர்ந்து பார்க்காமல், பார்க்க முடியாமல் குனிந்த தலை நிமிராது அமர்ந்திருந்தாள் லட்சனா. சூர்யாவின் பார்வையோ ஒருவித எதிர்பார்ப்புடன் அடிக்கடி அவளைத் தழுவி மீண்டது.

சூர்யாவின் தந்தையோடு எதையோ கதைத்துக்கொண்டிருந்த சிவபாலன், மனைவியைக் கண்டுவிட்டு, “இரவுக்கு எல்லோருக்கும் சேர்த்துச் சமை..” என்றவர், சூர்யாவின் குடும்பத்தாரைப் பொதுவாகப் பார்த்து, “இரவுச் சாப்பாட்டைச் சாப்பிட்டு விட்டுத்தான் போகவேண்டும்..” என்றார் உபச்சாரமாக.

“அதற்கு என்ன சிவா. சந்தோசமாகச் சாப்பிடுகிறோம்…” என்றார் தாத்தா, பிகு எதுவும் இல்லாமல்.

சுலோ சமையலைக் கவனிக்கச் செல்ல, அவளோடு சூர்யாவின் அண்ணி சுமித்திரவும் உள்ளே சென்றுவிட, மற்றவர்கள் ஏதேதோ பேச்சில் சுவாரசியமாக மூழ்கிவிட, சனா அங்கிருந்து நழுவித் தன்னறைக்குள் புகுந்துகொண்டாள்.
 

Goms

Active member
உயிரை விட பார்த்தாள் என்று கேள்வி பட்டவுடன் வேகம் வந்துடுச்சாக்கும்??😍

ஆனாலும் ஜெயன் மனது யாருக்கும் வராது. 💖
 

Goms

Active member
உயிரை விட பார்த்தாள் என்று கேள்வி பட்டவுடன் வேகம் வந்துடுச்சாக்கும்??😍

ஆனாலும் ஜெயன் மனது யாருக்கும் வராது. 💖
 
Top Bottom