இதயத் துடிப்பாய்க் காதல் - 28(இறுதி அத்தியாயம்)

நிதனிபிரபு

Administrator
Staff member
அத்தியாயம்-28


ஆண்கள் எல்லோரும் ஹாலில் அமர்ந்திருக்க, தொலைக்காட்சியில் செய்தி போய்க்கொண்டிருந்தது. உலக நிலவரத்தில் எல்லோரின் கவனமும் சென்றுவிட, சிவபாலனுக்கு அதில் ஏனோ ஒன்றமுடியவில்லை.

தொலைக்காட்சியில் இருந்து பார்வையைத் திருப்பியவரின் விழிகளில் சூர்யாவும் ஜெயனும் சிரித்துப் பேசிக்கொண்டிருப்பது விழுந்தது.

எந்தக் கவலையும் இன்றி, சூர்யாவிடம் எதையோ சொல்லிச் சிரித்துக்கொண்டிருந்த ஜெயனைப் பார்த்தவருக்கு, ஆச்சர்யமாக இருந்தது.

அவரின் பார்வையை உணர்ந்து திரும்பிப் பார்த்தவனிடம், கண்ணைக் காட்டிவிட்டு எழுந்து சென்றார் சிவபாலன்.

அருகில் இருந்த சூர்யாவிடம், “இரு வருகிறேன்..” என்று சொல்லிவிட்டு எழுந்த ஜெயன், தமையனைத் தேடி அவர் அறைக்குச் சென்றான்.

“என்ன அண்ணா..?” என்று கேட்டவனிடம், “உனக்குக் கவலையாக இல்லையாடா?” என்று அவன் தோளில் கைவைத்துக் கேட்டார்.

அந்தக் கேள்விக்கு உடனடியாக அவனால் பதில் சொல்ல முடியவில்லை. நொடிகள் அமைதியில் கழிய, “நான் வந்த அன்றே எனக்கு இது தெரியும் அண்ணா. அதனால், இதற்கு என்னைத் தயார் படுத்திக் கொண்டேன்.” என்றான் அவன்.

அதைக் கேட்ட சிவபாலனுக்கு பெரும் கவலையாக இருந்தது. தன் விருப்பம் நடக்காது என்று தெரிந்ததும், தன்னைத் தானே தேற்றிக் கொண்டிருக்கிறான்.

“சனாவுக்கு ஏன்டா உன்னைப் பிடிக்கால் போய்விட்டது? உனக்கு என்ன குறை..?” என்று அவர் கேட்டபோது, அவனுக்குச் சிரிப்புத்தான் வந்தது.

“யாருக்கு யாரைப் பிடிக்கும் என்று நம்மால் சொல்ல முடியுமா அண்ணா? அவள் என்னை விரும்பவில்லை என்றால், என்னில் குறை என்று அர்த்தமா?” என்று தெளிவாகக் கேட்டான்.

“ஆனால், நீ அவளை..” என்றவரை, அவன் மேலே பேச விடவில்லை.

“அண்ணா, இன்னொருவனுக்கு மனைவியாகப் போகிறவளைப் பற்றி நாம் இப்படிக் கதைப்பது தப்புண்ணா. “ என்றான்.

“சரிடா. அவளைப் பற்றிக் கதைக்கவில்லை. ஆனால், இனி உன் நிலை?” ஒரு அண்ணனாகக் கேட்டார் அவர்.

“என் நிலைக்கு என்னண்ணா?” என்று சாதரணமாக அவன் கேட்க,

“புரியாத மாதிரிப் பேசாதே. உனக்கு திருமணம் நடக்க வேண்டாமா? நான் இன்றே அம்மாவுக்கு எடுத்துச் சொல்லப் போகிறேன். உடனேயே நல்லதொரு பெண்ணாக பார்க்கச் சொல்லி..” என்றவரை மீண்டும் இடைமறித்தான் ஜெயன்.

“இல்லை அண்ணா. எனக்கு யாரும் பெண் பார்க்க வேண்டாம்..” என்றான் அவன் உறுதியான குரலில்.

பதறிப் போனார் சிவபாலன். “விசராடா உனக்கு? சனா இல்லை என்றால் என்ன? உனக்கென்று பிறந்தவள், உன் மேல் அதிகமாக அன்பைக் காட்டும் ஒரு பெண் நிச்சயமாக உனக்குக் கிடைப்பாள்..” என்றார் அவர் அவசரமாக.

தமையனின் பதட்டத்தைப் பார்த்து ஜெயனுக்குச் சிரிப்பு வந்தது. புன்னகையோடு, “அதைத்தான் நானும் சொல்ல வந்தேன். என்னையே உயிராக நேசித்து, எனக்காக உருகும் ஒரு பெண்தான் எனக்கு வேண்டும். அவளை நானாகக் கண்டு, திகட்டத் திகட்டக் காதலித்துக் கல்யாணம் செய்ய ஆசைப்படுகிறேன் அண்ணா..” என்றான் அவன் தெளிவாக.

சிவபாலனுக்கு அப்போதுதான் அப்பாடி என்றிருந்தது. பின்னே, காதல் தோல்வியில், இப்படியே இருந்துவிடுகிறேன்.. அது இது என்று அவன் எதையும் சொல்லிவிடுவானோ என்று அவர் தவித்தது அவருக்குத்தானே தெரியும்.

மனதில் இருந்த பாரம் அகன்றுவிட, வேகமாகத் தம்பியை தழுவிக் கொண்டவர், “நிச்சயமாக உனக்கு நல்ல பெண் கிடைப்பாள். நீ மிக மிக சந்தோசமாக வாழ்வாய்...” என்றார் நெகிழ்ந்துவிட்ட குரலில்.

அவரை அந்த சூழ்நிலையில் இருந்து வெளியே கொண்டுவர நினைத்தவன், “அதைப்பற்றி நீங்கள் கவலைப்பட வேண்டாம் அண்ணா.” என்றவன், இரண்டடி அவரை விட்டுப் பின்னால் நகர்ந்து, “அதுவும் உங்களையும் அண்ணியையும் விட, நாங்கள் நன்றாக இருப்போம்..” என்று குறும்போடு அவன் சொல்ல, “உன்னை!” என்றபடி விளையாட்டாகக் கையை ஓங்கினார் சிவபாலன்.

அந்த அடியிலிருந்து தப்பித்து வெளியே ஓடியவனின் முகத்தில் இருந்த சிரிப்பைப் பார்த்தவருக்கும் சிரிப்பு வந்துவிட, மனம் விட்டுச் சிரித்தார்.





அறைக்குள் இருந்த சனாவுக்கு, ஒருவித அமைதி கிட்டியிருந்தது.

முதலில் சூர்யாவை விரும்புவதை எப்படிச் சொல்வது என்று பயந்துகொண்டிருந்தாள். அவன் பிரிவைச் சொன்னபிறகோ ஜெயனுடனான திருமணத்தைப் பற்றி அக்கா அத்தான் கதைத்தால் என்ன காரணத்தைச் சொல்லி மறுப்பது என்று குழம்பிக்கொண்டிருந்தாள். சூர்யாவை விரும்பியதை சொல்லவும் முடியாது. சொன்னால், அதுதான் நடந்து முடிந்துவிட்டதே என்பார்கள்.

இன்று அந்தப் பிரச்சினைக்கு ஒரு முடிவு வந்துவிட்டிருந்தது.

அதேபோல, நடக்காது என்று வேதனையோடு நினைத்திருந்த, சூர்யாவுக்கும் அவளுக்குமான திருமணமும் நடக்கப் போகிறது. அவன் மீது அவளுக்கிருந்த கோபம் இன்னும் அப்படியேதான் இருக்கிறது என்றாலும், அவனைத் தவிர வேறு யாரையும் அவளால் மணக்க முடியாதே!

இன்றும், அன்று அவன் சொன்னவைகளை நினைக்கையில் வலியொன்று தாக்குவதையும் தவிர்க்க முடியவில்லை அவளால்.

அதை நினைக்கக் கூடாது என்று நினைத்தாலும், அது முடியாமல் அவள் தவித்துக்கொண்டிருந்த போது, அறைக் கதவை இலேசாகத் தட்டிவிட்டு, “லச்சு..” என்று அழைத்தபடி உள்ளே வந்தார் பாட்டி.

அவர் வந்ததை உணராமல், ஏதோ சிந்தனையில் இருந்தவளைப் பார்த்தவருக்கு, திருமணம் நடக்கப் போகும் பெண்ணின் மலர்ச்சி அவள் முகத்தில் இல்லையே என்று வருத்தமாக இருந்தது.

அருகில் வந்து அவள் தோளில் அவர் கையை வைக்கவும், திகைத்து நிமிர்ந்தவள், பாட்டி நிற்பதை அப்போதுதான் கண்டு, சட்டென்று எழுந்து முகத்தை மலர்ச்சியாக வைத்துக்கொள்ள முயன்றபடி, “வாருங்கள் பாட்டி..” என்று அழைத்தாள்.

அவளருகிலேயே கட்டிலில் அமர்ந்தவர், அவளையும் தன்னருகே அமர்த்திக் கொண்டார். அவளைப் பார்த்து, “சூர்யா மேல் உள்ள கோபம் இன்னும் போகவில்லையா உனக்கு?” என்று கேட்டார்.

அவரைத் திரும்பிப் பார்த்தவளுக்கு, இவருக்கு எப்படித் தெரியும் என்று யோசனை உள்ளே ஓடியபோதும், “அப்படி.. அப்படி எதுவும் இல்லை..” என்றாள் மழுப்பலாக.

அவள் மழுப்புவதை உணர்ந்து, “எனக்கு எல்லாம் தெரியும் லச்சு..” என்றார் அவர்.

“என்ன தெரியும் பாட்டி?” என்று அப்போதும் அவள் தயங்க,

“எல்லாம் தெரியும். எல்லாம் என்றால், உயிரை விடுவதற்காக அசட்டுத் தனமாக நீ காருக்கு முன்னால் பாய்ந்தாயே.. அதுவரை..” என்றவர், “என்ன துன்பம் வந்தாலும் அந்த முடிவை நீ எடுக்கலாமா லச்சும்மா. எதையும் எதிர்த்து நின்று போராடுவதை விட்டுவிட்டு இப்படியா செய்வாய்..” என்று கடிந்தார்.

தான் செய்த செயலை எண்ணி வெட்கித் தலை குனிந்தவள், “இனி அப்படி நடந்துகொள்ள மாட்டேன்..” என்று பணிந்தாள்.

“ஆனால் உங்களுக்கு எப்படித் தெரியும்?” என்று கேட்டாள்.

“சூர்யாதான் சொன்னான். அவனுக்கு ஜெயன் சொன்னானாம்..”

“ஓ…” என்றவளுக்கு, நேற்று அவர்கள் இருவரும் தனியே பேசிக்கொண்டது நினைவுக்கு வந்தது.

நான் தற்கொலைக்கு முயன்றேன் என்றதும்தான் எல்லோரையும் கூட்டிக்கொண்டு வந்திருக்கிறான். அதுதானே பார்த்தேன். இல்லாவிட்டால் அவனாவது வருவதாவது என்று விரக்தியோடு எண்ணியது அவள் உள்ளம்.

“எப்போது சொன்னார் பாட்டி?” என்று உணர்வுகளைக் காட்டாத குரலில் கேட்க முயன்றாள்.

“இலங்கையில் இருக்கும் போதே, நீங்கள் இருவரும் பிரிந்துவிட்டதாகவும், அதற்குக் காரணம் தான்தான் என்றான். என்ன நடந்தது என்று நான் துருவித் துருவிக் கேட்டபோதுதான் நடந்ததைச் சொல்லி, என்னால் அவள் இல்லாமல் இருக்க முடியாது பாட்டி என்றான். சரி இங்கு வந்ததும் உன்னைப் பெண் கேட்டு வரலாம் என்றுதான் நினைத்துக் கொண்டிருந்தோம். திடீரென்று நேற்றிரவு வந்து, நாளைக்கே சனா வீட்டுக்குப் போகவேண்டும் பாட்டி என்று அடம் பிடித்தான். காரணத்தைச் சொல்லவே மறுத்துவிட்டான். பிறகு உன் தாத்தாதான், அப்படி என்ன அவசரம் என்று அதட்டிக் கேட்டதும் தான் ஜெயன் சொன்னதைச் சொன்னான். அதைச் சொல்லும் பொது, அவன் முகத்தில் இருந்த கவலை, பரிதவிப்பைப் பார்த்து எங்களுக்குக் கலங்கிவிட்டது லச்சும்மா. எங்கள் பேரன் அப்படித் தவித்து நாங்கள் பார்த்ததே இல்லை..” என்று அவர் சொன்னபோது, அதைக் கேட்டிருந்தவளும் கலங்கித்தான் போனாள்.

அந்தக் கலக்கத்திலும், மனதில் ஒருவித சந்தோசம். அவன் அவளின் தற்கொலை முயற்சியைக் கேள்விப்பட்டு, இரக்கத்தில் அவளைத் தேடி வரவில்லை. அதேபோல அவளிடம் அவன் சொன்னவை அனைத்தும் உண்மை. ஆனாலும்.. அன்று அவன் பேசியவை? மீண்டும் அதே இடத்தில் வந்து நின்றது, அவளின் அலைபாயும் மனது!

அவளின் அமைதியைப் பார்த்துவிட்டு, “என்னம்மா யோசிக்கிறாய்..?” என்று கேட்டார் பாட்டி.

அவரிடம் ஒன்றும் சொல்ல முடியாமல், “ஒன்றும் இல்லை பாட்டி..” என்றாள் மீண்டும்.

“பொய் சொல்லக் கூடாது கண்ணம்மா.” என்றபடி, அவள் தலையை இதமாக வருடியவர், “இன்னும் உன் கோபம் போகவில்லை. அப்படித்தானே?” என்று கேட்டார்.

பொய் சொல்ல முடியாமல் அவள் அமைதி காக்க, “இந்தப் பாட்டிக்காகவாவது என் பேரனை மன்னிக்க மாட்டாயா? நீயும் அவனும் சந்தோசமாக வாழவேண்டும் என்பதுதான் இந்தப் பாட்டியின் தாத்தாவினதும் ஆசை. அதை நிறைவேற்ற மாட்டாயா?” என்று அவர் கேட்டபோது,

“பாட்டி..” என்றவளின் குரல் அழுகையில் வெடிக்க, உரிமையோடு அவர் தோளில் சாய்ந்துகொண்டாள். விழிகள் கண்ணீரைச் சொரிந்தது. ஏன் அழுகிறாள் என்று அவளுக்கே புரியவில்லை. அவளை, அவள் மனதே எதிரியாக நின்று வதைத்தது.

“அழக்கூடாது..” என்று அவள் கன்னங்களைத் துடைத்து விட்டவர், “இந்தத் திருமணத்தில் உனக்கு விருப்பம் இல்லையா?” என்று, பதில் தெரிந்த கேள்வியைக் கேட்டார்.

திகைத்து நிமிர்ந்தவள், “ஐயோ பாட்டி. அப்படியெல்லாம் இல்லை.” என்றாள் அவசரமாக.

புன்னகையோடு, “பின்னே?” என்று கேட்டார் பாட்டி.

வேதனையில் முகம் கசங்க, “பயமாயிருகிறது பாட்டி.” என்றாள் வலி நிறைந்த குரலில்.

“ஏன்மா..?” என்று அவர் இதமாகக் கேட்க,

“அவர் மேல் இருக்கும் அன்பில் சாப்பிட்டீர்களா? குடித்தீர்களா? எங்கே நிற்கிறீர்கள்? என்ன செய்கிறீர்கள்? என்று நான் கேட்டால், அது அவருக்கு மூச்சு முட்டுவது போல் இருக்குமோ? அடிமைப் படுத்துவது மாதிரி இருக்குமோ என்று பயமாக இருக்கிறது பாட்டி. முதல் போன்று என்னால் உண்மையான அன்போடு பழகமுடியுமா தெரியவில்லை. இனியும் அவருக்கு ஒரு போன் பண்ணவோ அல்லது மேசேஜாவது அனுப்பவோ முடியும்போல் தோன்றவில்லை. ” என்றவளின் பேச்சில் இடைபுகாது, முழுவதும் வெளியே வரட்டும் என்று கேட்டுக்கொண்டிருந்தார் பாட்டி.

“இவருக்கு அது பிடிக்குமா இது பிடிக்குமா என்று எத்தனை நாளைக்குப் பாட்டி என்னால் பார்த்துப் பார்த்துச் செய்ய முடியும்? உண்மையான அக்கறையோடு எதையாவது செய்யுங்கள் என்று என்னால் இனி எப்படி உரிமையோடு கேட்க முடியும்? அதை அவர் எப்படி நினைப்பாரோ? இனியும் என்னை விட்டுவிட்டுப் போய்விடுவாரோ என்று உள்ளே பயந்துகொண்டே இருக்க முடியுமா பாட்டி. இந்தப் பிரிவையே என்னால் தாங்கமுடியவில்லை. இதில் பிள்ளை குட்டி என்றானபிறகு விவாகரத்து என்று வந்தால்.. நினைக்கவே பயமாக இருக்கிறது பாட்டி.” என்று தன் உள்ளத்துப் பயம் அனைத்தையும் கொட்டினாள் சனா.
 

நிதனிபிரபு

Administrator
Staff member
அவளின் தலையை வருடுவதை நிறுத்தாது, “உன் பயம் நியாயமானதுதான் லச்சும்மா. ஆனால் நீ ஒன்றையும் யோசிக்க வேண்டும். எதுவுமே அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு என்பார்கள். அப்படி அளவுக்கு அதிகமாக அவனை அதைச் செய் இதைச் செய் என்று நீ வற்புறுத்தியதும், தன்னுடைய வேலையைத் தானே செய்து, தன்னுடைய முடிவை தானே எடுத்துப் பழகியவனுக்கு, திடீரென்று உன்னுடைய ஆக்கிரமிப்பை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அதனால்தான் அவன் பிரிவைச் சொல்லியிருக்கிறான்..” என்றவரின் பேச்சில் மூச்சடைத்தது அவளுக்கு.

ஜெயனும் இதையே தான் சொன்னான். அப்போதே மனதில் மெல்லிய உறுத்தலாக இருந்த விஷயம், இப்போது பாட்டி சொல்வதைக் கேட்கையில், அவள்தான் பிழை விட்டிருக்கிறாளோ என்று அவளுக்கே தோன்றத் தொடங்கியது.

“அவன் இந்த நாட்டில் பிறந்து வளர்ந்தவன். இங்கே மூன்று வயதிலேயே சுயமாக எதையும் செய்யவேண்டும் என்பார்கள். அந்தச் சின்ன வயதில் இருந்தே, அவர்களுக்குப் பிடித்ததையே செய்து, அவர்கள் முடிவை அவர்களே எடுத்துப் பழகியவர்கள். அம்மா அப்பா கூட ஒரு அளவைத் தாண்டி அவர்களின் விருப்பங்களில் தலையிட முடியாது. அதேபோல அவர்களின் நல்லது கெட்டது அவர்களுக்கே தெரியும்.” என்றவர் தொடர்ந்தார்.

“அதற்காக, நீ அவன்மீது அக்கறை காட்டுவதைத் தவறு என்றே சொல்லவில்லை. அதுதான் சரியும் கூட! ஆனால் அதை மெல்ல மெல்லச் செய்யவேண்டும். இவ்வளவு காலமும் வேலியற்று வாழ்ந்தவனுக்கு திடீரென்று வேலியைப் போட்டால் மூச்சு முட்டுவது போலத்தான் இருக்கும். அப்படித் தோன்றி, உன்னை வேண்டாம் என்றுவிட்டுப் போனவன், அப்படியே போகவில்லையே! நீதான் வேண்டும் என்று மீண்டும் உன்னைத்தானே தேடி வந்திருக்கிறான். எதையும் இலகுவாக எடுத்துக்கொண்டு வாழும் இந்தக் கலாச்சாரத்தில் வாழ்ந்து பழகி இருந்தாலும், அவன்தானே உன்னைத் தேடி வந்திருக்கிறான். நீ அவனைத் தேடி வரவில்லையே!” என்றவரின் பேச்சு அவளுக்குப் பெரும் அடியாக இருந்தது.

உண்மைதானே! என்ன துடித்தாலும் அவனிடம் திரும்பிப் போகும் எண்ணம் அவளுக்கு இருக்கவில்லையே!

“யோசித்துப் பார் கண்ணம்மா.. அவனுக்குப் பிடிக்கும் என்று முடியைக் குட்டையாக வெட்டச் சொன்னால் நீ வெட்டுவாயா? அல்லது குட்டைப் பாவாடை போடு என்றால் போடுவாயா? அவனுக்காக என்று நீ செய்தாலும், உன் மனதுக்கு அது பிடிக்காமல்தானே இருக்கும். அப்படி எத்தனை விசயங்களை அவனுக்காக என்று பொறுத்துப் போவாய்? ஒரு கட்டத்தில் வெடிக்க மாட்டாயா?” என்று அவர் பொட்டில் அறைந்தது போல் கேட்டபோது, அவள் செய்த தவறுகள் அனைத்தும் உறைத்தது.

உண்மைதானே! அன்று அவன் சொல்லி லென்ஸ் வைத்துக்கொண்டால் என்றால், அவளுக்கும் அது பிடித்திருந்தது. அதுவே இன்று பாட்டி சொல்வது போல அவனுக்குப் பிடிகிறது என்பதற்காக இதையெல்லாம் அவள் செய்வாளா? நிச்சயமாக இல்லை!

இப்படித்தானே அவனுக்கும் பழக்கம் இல்லாத ஒன்றைச் செய்கையில் இருந்திருக்கும். ஆனாலும் அவளுக்காகச் செய்வானே. அதையும் எவ்வளவு அடம் பிடித்து அவனைச் செய்ய வைத்திருப்பாள். இப்போது நினைக்கையில் உள்ளம் குன்றியது அவளுக்கு.

அவள் அடம் பிடித்த போதெல்லாம் அவன் சினம் காட்டியிருக்கிறான் தான். சிடுசிடுத்திருக்கிறான் தான். ஆனால் அவள்தான் அதை உணர்ந்து கொள்ளாமல் இருந்திருக்கிறாள்.

பொறுத்துப் பொறுத்துப் பார்த்தவன், முடியாமல் போனதில் வெடித்திருகிறான்.
ஆக, அவளால்தான் அந்தப் பிரிவு என்கிற முடிவுக்கு அவன் வந்திருக்கிறான்.

நடந்த தவறுகளின் ஆணிவேராக அவளின் செயல்கள் இருந்திருக்கிறது. இதில் அவள் அவனைப் போட்டுப் படுத்தியிருக்கிறாள்.

தன்னை நினைத்தே வெட்கியவளின் விழிகளில், கண்ணீர் மீண்டும் வழியத் தொடங்க, “எல்லாவற்றுக்கும் அழுகையா லச்சு..?” என்று அதட்டிய பாட்டிக்கும் உள்ளம் நெகிழ்ந்தது.

“இல்லைப் பாட்டி. இனி அழவில்லை.. நான் அழுதால் சூர்யாவுக்குப் பிடிக்காது..” என்றபடி, கண்ணை அவள் துடைத்துக் கொள்ளவும், அவளின் அறைக்கதவு மீண்டும் தட்டப்படவும் சரியாக இருந்தது.

யாராக இருக்கும் என்று இருவரும் பார்க்க, கதவைத் திறந்துகொண்டு வந்தவன் சூர்யா. சனாவின் முகம் மலர்ந்தது என்றால், பாட்டியின் முகத்தில் குறும்புப் புன்னகை ஒன்று மலர்ந்தது.

“பெண்கள் கதைத்துக் கொண்டிருக்கும் இடத்தில் உனக்கு என்னடா அலுவல்?” என்று, எடுப்பாகக் கேட்டார் பாட்டி.

“எனக்கு மனைவியாகப் போகிறவளிடம் உங்களுக்கு என்ன பேச்சு? அவளோடு நான்தான் கதைக்க வேண்டும். நீங்கள் உங்கள் கணவரிடம் ஓடுங்கள்..” என்றான், சனாவையே பார்த்தபடி அவன்.

“இந்த வயதில் என்னால் ஓட முடியுமாடா..?” என்று, அப்போதும் இருந்த இடத்தில் இருந்து அசையாது அவர் கேட்க, “இப்போது நீங்களாகப் போகவில்லை என்றால், உங்களைத் தூக்கிக் கொண்டுபோய் வெளியே விட்டுவிடுவேன்..” என்றான் அவன், அசராது.

அவன் பேச்சைக் கேட்டுச் சனாவுக்குச் சிரிப்பு வந்தது. “பார்த்தாயா லச்சு. என்னையே இந்த மிரட்டு மிரட்டுகிறான். அவனிடம் சொல்லி வை. நான் பொல்லாதவள் என்று..” என்றவர் கட்டிலில் இருந்து எழுந்தபடி, “உனக்காகத்தான் நான் இப்போது போகிறேன்..” என்றவர், அவனைப் பார்த்துப் பொய்யாக ஒரு முறைப்பைச் சிந்திவிட்டு சென்றார்.

சென்றவர் கதவை மூடிக்கொண்டு சென்றுவிட, சனாவுக்குள் ஒருவித பதட்டம் புகுந்துகொண்டது. தவறு செய்துவிட்டோமே, அவனை வருத்தி விட்டோமே என்று குற்ற உணர்ச்சில் உள்ளம் குன்ற கட்டிலில் இருந்து எழுந்தவள், தலையைக் குனிந்துகொண்டாள்.

அப்படியே எவ்வளவு நேரம் கடந்ததோ, அவனிடம் இருந்து ஒருவித சத்தத்தையும் காணோமே என்று எண்ணியபடி அவள் நிமிர்ந்து பார்க்க, அவளின் பார்வைக்காக காத்திருந்தவன் போல், கைகள் இரண்டையும் விரித்து அழைத்தவனின் விழிகளில் இருந்த வேண்டுதலில், அனைத்தையும் மறந்து ஓடிச்சென்றவள் அவன் கைகளுக்குள் புகுந்துகொண்டாள்.

தனக்குள் புகுந்துகொண்டவளை, புதையலைக் காப்பவன் போல் வேகமாக அணைத்துக் கொண்டவனின் அணைப்பு இறுகிக்கொண்டே போனது. அவளும் அந்த அணைப்புக்குள் அடங்கி நிற்க, “என்னை மன்னித்துவிடு லட்டு..” என்றான், கம்மிவிட்ட குரலில்.

அதைக் கேட்டவளின் உள்ளம் உருகியது. அவள் செய்த பிழைக்கு அவன் மன்னிப்புக் கேட்பதா?

“நீங்கள் தான் என்னை மன்னிக்கவேண்டும் சூர்யா..” என்றாள் தழுதழுத்த குரலில்.

சட்டென்று அணைப்பில் இருந்து அவளைப் பிரித்தவன், அவள் தோள்களைப் பற்றி, “நீ என்ன பிழை செய்தாய்? செய்தது எல்லாம் நான். என்னால்தானே நீ அன்று.. அன்று..” என்று பரிதவித்தவன், “என்ன நடந்தாலும் நீ அப்படிச் செய்யலாமா?” என்று கோபப்பட்டான்.

அடுத்த நொடியே, அவளை இறுக்கி அணைத்துக்கொண்டே, “ஆனால் நீ அப்படிச் செய்வாய் என்று நான் நினைக்கவே இல்லை லட்டு.. ஜெயன் சொன்னபோது நம்பவே முடியவில்லை என்னால். இனிமேல் அப்படியான முட்டாள் வேலைகள் பார்க்காதே! உனக்கு மட்டும் ஏதும் நடந்திருக்க, நான் பைத்தியமாகத்தான் அலைந்திருப்பேன்..” என்றான் நடுங்கிய குரலில்.

அதைத் தாங்க முடியாமல், “அச்சோ சூர்யா இப்படியெல்லாம் கதைக்காதீர்கள்..” என்று அவள் பதற, “இதற்கே உனக்கு இப்படிப் பதறுகிறதே. நீ அப்படிச் செய்தாய் என்று தெரிந்தபோது, நான் என்ன பாடு பட்டிருப்பேன்.. நேற்றிரவு என்னால் தூங்கவே முடியவில்லை.” என்றான் அவன் வேதனையோடு.

அவன் கன்னத்தை இதமாகத் தடவிக் கொடுத்தவள், “என்னை மன்னித்துவிடுங்கள் சூர்யா. இனி எப்போதும் அப்படி நடக்கமாட்டேன்.” என்றவள், தொடர்ந்தாள்.

“அன்று நீங்கள் பிரிவைச் சொன்னதும், எனக்கு வாழ்க்கையே வெறுத்துவிட்டது சூர்யா. என்ன செய்வது என்றே தெரியவில்லை. ஆனால், நானும் அப்படிச் செய்யவேண்டும் என்று நினைக்கவில்லை. வீதியைக் கடப்பதற்காக நின்றபொழுது, கார் வரவும், ஒரு வேகத்தில் பாய்ந்துவிட்டேன்..” என்றாள், குன்றளோடு.

“அதற்குக் காரணம் நான்தானே..” என்றான் அவன் வேதனையோடு.

அவன் வேதனைப் படுவதைப் பொறுக்க முடியாமல், “அசடு மாதிரிப் பேசாதீர்கள் சூர்யா.” என்று கோபப்பட்டாள் சனா. “நீங்களா என்னைக் காருக்கு முன்னால் பாய் என்று சொன்னீர்கள்? புத்தி இல்லாது நான் செய்ததற்கு நீங்கள் எப்படிப் பொறுப்பாவீர்கள்?” என்று, அவனுக்காக அவள் வாதாடினாள்.

அதைப் புரிந்துகொண்டவனுக்கு இன்னும் வலித்தது. “பார்.. இப்போது கூட நீ என்னைத் தேற்றுகிறாய். அப்படியான உன் அன்பைத்தான் நான் உதறினேன்..” என்றான் அவன்.

“அப்படிச் சொல்லாதீர்கள் சூர்யா. அன்பைக் காட்டுகிறேன் என்கிற பெயரில் நான்தான் முழுப் பிழையும் செய்தேன். உங்களை வருத்தி, வாட்டி.. எல்லாவற்றிற்கும் அடம்பிடித்து..” என்றவளுக்கு நெஞ்சுக்குள் அடைத்தது.

கண்கள் கலங்க, தலையை இடமும் வலமுமாக ஆட்டி, “இனி அப்படியெல்லாம் நடந்துகொள்ளமாட்டேன். உங்களை வருத்த மாட்டேன். எனக்கு நீங்கள்தான் வேண்டும். நீங்கள் இல்லாமல் என்னால் வாழமுடியாது சூர்யா..” என்றவள், ஆவேசம் வந்தவளாக அவன் முகத்தைக் கையில் ஏந்தி, முகம் முழுவதும் முத்தமிட்டாள்.

அவள் தோள்களில் இருந்த அவன் கைகளின் அழுத்தம் அதிகரித்துக்கொண்டே செல்வதை உணர்ந்து, முத்தமிடுவதை நிறுத்திவிட்டு அவள் கேள்வியாக அவனைப் பார்க்க, “என்னை மிகவும் சோதிக்கிறாயே லட்டு…” என்றான், சின்னச் சிரிப்போடு.

புரியாமல் விழித்தவளுக்கு, அவன் விரல்களின் அழுத்தமும், பார்வையில் இருந்த தாகமும் அனைத்தையும் உணர்த்திவிட, “சூர்யா..” என்று சிணுங்கியவள், வெட்கத்தில் சிவந்த முகத்தை மறைக்க, அவனுக்குள்ளேயே புதைந்தாள்.

அவளை அணைத்துக்கொண்ட அவனும் அப்படியே நின்றான். இருவருக்குமே அந்த நிலை இதமாக, சுகமாக ஒருவித போதையைக் கொடுத்தது.

“உங்கள் கைகளுக்குள் இப்படி இருக்கிறேன் என்பதை என்னால் நம்பவே முடியவில்லை சூர்யா.” என்றாள் லட்சனா, அவன் மார்பில் இருந்த தலையை உயர்த்தி.

நேசம் பொங்க, அவளைக் குனிந்து பார்த்தவனின் விழிகளில் குறும்பு மின்னியது. நீண்ட நாட்களுக்குப் பிறகு அவனை அப்படிப் பார்த்தவளுக்கு, அவன் முகத்தில் இருந்து விழிகளை அகற்றவே முடியவில்லை.

அவளையே பார்த்தபடி, செவ்வானமாய் சிவந்திருந்த அவள் கன்னத்தைப் பற்கள் படாமல் மெல்லக் கடித்தவன், “இப்போது நம்புகிறாயா?” என்று மோகனச் சிரிப்போடு கேட்டான்.

அந்தச் சிரிப்பில் மயங்கி நின்றவளைப் பார்த்தவனின் பார்வை மெல்ல மெல்ல மாற, அதை உணர்ந்தவளின் விழிகளில் நாணம் நாட்டியமாட, அந்த அழகை ரசித்தவனின் நாடி நரம்புகள் அத்தனையும் அவள் வேண்டும் என்றது.

வெட்கத்தில் எழிலாய் நெளிந்த அவளின் இதழ்களின் அமுதைப் பருகிட வேகம் கொண்டவன், வேட்கையுடன் குனிந்தான். நடக்கப்போவதை ஆவலுடன் எதிர்பார்த்தவளும், அவன் கொடுத்த ஆழ்ந்த முத்தத்தில் சித்தம் கலங்கி நின்றாள்.

அவன் கைகளுக்குள் நெகிழ்ந்து, இதழ்களுக்குள் புதைந்து, அவனுக்குள் கரைந்துகொண்டிருந்தவள், மூச்சுக் காற்றுக்காய்த் திணறியபோதே, அவளை விடுவித்தான் அவள் காதலன்!

செவ்வானமாய்ச் சிவந்த முகத்தோடு, மூச்சினை வேகவேகமாக இழுத்துவிடுபவளைப் பார்த்து, கண்ணைச் சிமிட்டிக் கள்ளச் சிரிப்புச் சிரித்தான் அந்தக் கள்வன்.

அந்தச் சிரிப்பில் வெட்கம் வந்தபோதும், “சூர்யா…” என்றபடி மலர்ந்து சிரித்தவள், தன் இதயத்தின் துடிப்பாய்க் கலந்துவிட்டவனின் காதலில் கரைந்து, மீண்டும் அவனுக்குள்ளேயே புதைந்துகொண்டாள் சுகமாக!


முற்றும்


2012, 2013 என்று நினைக்கிறேன், அந்தக் காலப்பகுதியில் எழுதிய என்னுடைய மூன்றாவது நாவல் இது. எழுதப்பழகிய கதைகளில் ஒன்று என்று சொல்லலாம்.
 

Chanmaa

Active member
அருமையான கதை ladys wings தளத்தில் படித்த கதை அருமையான பதிவு
 

Sumathi siva

Active member
Wow awesome.whether it’s first story or your third story l don’t have patience to wait till you put ud.immediately I will start learning remaining uds which I stored in my library and complete it.
 

Goms

Member
Super story nitha sis.
காதல் என்பது அடுத்தவரை அவரவர் நிறை குறைகளோடு ஏற்றுக்கொள்வது அல்லது புரிந்து கொள்வது. மிகவும் அருமையான நாவல்.

இது உங்கள் மூன்றாவது கதை தான் என்றால் நம்ப முடியவில்லை.
அப்போதே மனித மனங்களின் உணர்வுகளை துல்லியமாக படம் பிடித்து காட்டுவதை உங்கள் எழுத்தின் பாணியாக வரித்துக்கொண்டீர்கள் போலும். அது இன்று வரை மாறவில்லை.
 
Top Bottom