• நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.
    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

இதயத் துடிப்பாய்க் காதல் - 6

நிதனிபிரபு

Administrator
Staff member
அத்தியாயம்-6

சூர்யாவின் கார் மிதமான வேகத்தில் சென்றுகொண்டிருந்தது. அவனருகில் அமர்ந்திருந்த சனாவுக்கு அவனோடு போய்க்கொண்டிருக்கிறோம் என்பதில் மகிழ்ச்சியாக இருந்தாலும், அதை அனுபவிக்க முடியாமல் மனப்பாரம் அழுத்தியது.

அருகில் இருந்தவனைத் திரும்பிப் பார்த்தாள். அடர்ந்த புருவங்கள் இரண்டும் ஒன்றோடு ஒன்று நெரித்துக்கொண்டு நிற்க, கூரான நாசி கூட அவனின் கோபத்தைக் காட்டியது. பார்வையை சாலையில் பதித்து காரை ஓட்டிக்கொண்டிருந்தவனின் முகத்தில் இருந்த இறுக்கத்தை எப்படிப் போக்குவது என்று அவளுக்குத் தெரியவில்லை.

இதில் அவள் செய்த பிழை எதுவுமில்லை என்று புத்திக்குத் தெரிந்தாலும் மனமோ அவனைச் சமாதானப்படுத்து என்று தூண்டிக்கொண்டே இருந்தது!

இதுதானே எல்லாப் பெண்களின் இயல்பும். அன்பு வைக்கும் வரை திடகாத்திரமான மனதோடு இருப்பவர்கள், வைத்துவிட்ட அன்பினாலேயே மனதளவில் பலவீனப்பட்டும் போகிறார்கள்!

சற்று முன்னர் அவன் அணைத்ததுக்கு அவள் கோபம் காட்டியதில் இருந்து இப்படியேதான் இருக்கிறான்.

மண்டபத்தில் அழுகையில் உள்ளம் துடிக்க அவனைப் பார்ப்பதும் கலங்கிய கண்களை யாருக்கும் தெரியாது துடைப்பதுமாக இருந்தவளிடம், “அவள்தான் என் தங்கை தாத்தா. சனா..! இங்கே வா!” என்றபடி சுலோவும், அவளுடன் தாத்தாவும் வருவது தெரிந்தது.

வயதில் பெரியவர் தன்னைத் தேடி வருவது அழகல்ல என்பதை உணர்ந்து, முகத்தில் புன்னகையை தவழவிட்டு, அவர்களிடம் விரைந்து, “சுகமாக இருக்கிறீர்களா தாத்தா…?” என்று பாசத்தோடு விசாரித்தாள்.

“எனக்கென்னம்மா. நான் நன்றாக இருக்கிறேன். உன் பெயர் லட்சனா என்று உன் அக்கா சொன்னாள். பெயரைப்போலவே லட்சணமாக இருக்கிறாய்.” என்றார் அவர், அவளின் தலையைப் பாசத்தோடு தடவி.

எழுபது வயதைத் தாண்டியபோதும் நரைத்த தலைமுடியோடும் அடர்ந்த மீசையோடும் கம்பீரம் குறையாது, செல்வாக்கான குடும்பத்தின் ஆணிவேர் நான் என்கிற பெருமை இல்லாது தன்னைத் தேடிவந்து கதைத்த வைரவேலன் தாத்தாவை அவளுக்கு மிகவும் பிடித்துப் போனது.

“பாட்டி எங்கே தாத்தா?” என்று உள்ளன்போடு கேட்டாள்.

“அங்கே பார், பெண்களோடு சேர்ந்து அரட்டையடிக்கத் தொடங்கி விட்டாள் என் வீட்டம்மா. இப்போதைக்கு வருவாள் போல் தெரியவில்லை. அதுதான் நான் மட்டும் உன்னைத் தேடிக்கொண்டு இங்கே வந்துவிட்டேன்.” என்றவர் அங்கு நின்ற சூர்யாவைப் பார்த்து,

“சூரி, இவள்தான் சுலோவின் தங்கை லட்சனாவாம். உனக்குத் தெரியுமா?” என்று, விழிகளில் குறும்பு மின்னக் கேட்டார்.

“ம்ம்!”

அப்போதுதான் சூர்யாவும் அங்கு நிற்பதைக் கண்ட சுலோ, “என்ன சூர்யா, எப்போதும் விழாக்களுக்கு நீ வரமாட்டாயே. இன்று என்ன அதிசயம் நடந்தது?” என்று கேட்டாள்.

மின்னலாய் அவன் பார்வை அவளிடம் பாய்ந்து அவளைப் பார்க்கத்தான் வந்திருக்கிறான் என்று உணர்த்த, அப்படி வந்தவனிடம் கோபப்பட்டது தப்போ? அவன் செய்தது தவறானாலும் அதை மெதுவாகச் சொல்லியிருக்க வேண்டுமோ என்று இப்போது தோன்றியது அவளுக்கு.

“அதுவாக்கா.. தாத்தா வரச்சொன்னார். அதுதான் வந்தேன். இப்போதானால் ஏன் வந்தோம் என்றிருக்கிறது. படத்துக்குப் போகலாமா என்று யோசிக்கிறேன்.” என்றான் அவன்.

சனாவுக்கோ எத்தனையோ நாட்களுக்குப் பிறகு அவனைக் கண்டும், அவனோடு கதைக்கமுடியாமல் போய்விடுமோ என்று தவிப்பாக இருந்தது.

“ஏன் சூர்யா அப்படிச் சொல்கிறாய்..?” என்று குழப்பத்தோடு சுலோ கேட்க,

“அவன் அப்படித்தான், விடும்மா. அவன் வயதை ஒத்தவர்கள் யாரும் இங்கே இல்லையல்லவா. அதோடு இங்கே எல்லோரும் திருமணமானவர்கள். அதுதான்! திருமணம் ஆகும்வரைதான் இந்த சுதந்திரம் எல்லாம். அதன்பிறகு இப்படி இருக்கமுடியாதே.” என்றார் தாத்தா அவனையே பார்த்தபடி.

“அப்படியானால் சூர்யாவுக்கும் விரைவாகக் கால்கட்டு போட்டுவிடுங்கள் தாத்தா.” என்று நகைத்தாள் சுலோ.

“ம்ம்.. விரைவில் போடத்தான் வேண்டும். இந்தப் பயலை இதுக்குமேல் விட்டு வைக்கவும் முடியாது. அவனும் திருமணத்துக்குத் தயாராகிவிட்டான்.” என்றார் அவர்.

சூர்யாவின் பார்வை வேகமாகத் தாத்தாவைச் சந்தித்து மீண்டது. சனாவோ கலங்கிப்போனாள்.

இவன் இப்போதுதானே காதலைச் சொன்னான். இவரானால் இப்படிச் சொல்கிறாரே. நான் தான் அவன் காதலைச் சொன்னதாகத் தவறாகப் புரிந்துகொண்டேனோ? அந்தக் கலக்கம் கண்களில் தெரிய சூர்யாவை நிமிர்ந்து பார்த்தாள்.

அவனும் அவளைத்தான் பார்த்துக் கொண்டிருந்தான். ஆனால் அவன் முகத்தில் அவளின் கலக்கத்துக்கான பதிலோ ஆறுதலோ எதுவுமில்லை.

“நல்ல விசயம்தானே தாத்தா. பெண்ணையும் பார்த்துவிட்டீர்களா?” என்று சுலோ விசாரிக்க,

“ம்.. பார்த்துவிட்டேன். இனி மெல்ல மெல்ல திருமணப் பேச்சை ஆரம்பிக்க வேண்டியதுதான்.” என்றவரின் பேச்சை, “நான் கிளம்புகிறேன் தாத்தா. படத்துக்குப் போய்விட்டு மூன்று மணித்தியாலங்களில் உங்களைக் கூட்டிப்போக வருகிறேன்.” என்ற சூர்யாவின் இறுக்கமான குரல் இடைமறித்தது.

“ஆகா…! சூர்யாவுக்குக் கூட கல்யாணப் பேச்சை எடுத்தால் வெட்கம் வருகிறதே தாத்தா. அதுதான் ஓடப்பார்க்கிறான்.” தன் தங்கையின் உள்ளம் நொருங்கிக்கொண்டு இருப்பதை அறியாமல் கேலி பேசிச் சிரித்தாள் சுலோ.

நெஞ்சின் வலி விழிகளில் தெரிய அவனைப் பார்த்தவளை முறைத்துவிட்டு, “சரி தாத்தா நான் வருகிறேன். சுலோக்கா வருகிறேன்.” என்ற சூர்யா, வாசலை நோக்கி நடக்கத் தொடங்கினான்.

“கொஞ்சம் பொறு சூரி.”

“என்ன தாத்தா..?” பொறுமையற்று வந்தது அவன் கேள்வி.

“லட்சனாவையும் கூட்டிக்கொண்டு போ. அவளுக்கும் இங்கே பேச்சுத் துணை யாருமில்லை. திருமணமான பெண்கள் கணவனைப் பற்றியும் பிள்ளைகளைப் பற்றியும் கதைப்பார்கள். இவள் இங்கே இருந்து அவர்களின் வாயைப் பார்ப்பதற்கு உன்னோடு வந்து ஒரு படத்தைப் பார்க்கட்டுமே.” என்றார் இயல்பாக.

“இல்லை.. இல்லை தாத்தா. நான் இங்கேயே அக்காவுடன் இருக்கிறேன்.” என்றாள் சனா அவசரமாக.

அவனுக்குத் திருமணம் என்பதிலேயே அவள் உள்ளம் உடைந்திருந்தது. இதில் அவனோடு சென்றால் காதல் கொண்ட நெஞ்சம் வெட்கத்தை விட்டு என்னைக் கல்யாணம் செய்துகொள்வீர்களா என்று கேட்டுவிடுவோமோ என்று பயந்தாள். அதனால் அவனோடு செல்வதைத் தவிர்க்கப் பார்த்தாள்.

ஆனால் வைரவேலன் தாத்தா விடுவதாக இல்லை.

“ஏனம்மா.. என் பேரனோடு படத்துக்குப் போவதால் என்ன நடந்துவிடும் என்று நினைக்கிறாய்..?” வயதில் மூத்தவர் அல்லவா, வெளிப்படையாகவே கேட்டார்.

“ஐயோ தாத்தா. அப்படி எதுவும் இல்லை.” என்றவளை மேலே கதைக்கவிடாது,

“ஏன் சுலோம்மா, அவனோடு உன் தங்கையை அனுப்ப மாட்டாயா? என் பேரன்மேல் உனக்கு நம்பிக்கை இல்லையா?” என்று கேட்டார் வைரவேலன் தாத்தா.
 

நிதனிபிரபு

Administrator
Staff member
சுலோவாலும் மறுக்க முடியவில்லை. அவர்களின் குடும்பத்தைப் பற்றி அந்த ஊரில் இருக்கும் அனைவருக்கும் தெரியும். ஒழுக்கத்தைப் பெரிதாக மதிப்பவர்கள். அதோடு ஒரு படத்துக்குப் போவதைக் குறுகிய மனவோட்டத்தில் பார்க்கும் இயல்பு அவளுக்கும் இல்லாததில், “அதெற்கென்ன தாத்தா. போய்விட்டு வரட்டும்.” என்றாள் சிரித்த முகமாகவே.

“பிறகு என்ன? உன் அக்காவே சம்மதித்து விட்டாள். போடாம்மா போ. போய் சந்தோசமா படம் பார்த்துவிட்டு வா…” என்று அனுப்பிவைத்தார்.

பின்னால் இவள் வருகிறாள் என்கிற எண்ணம் இல்லாது வேகநடை போட்டவனை மனம் வலிக்கப் பின்தொடர்ந்தாள் லட்சனா.

அவளுக்காக காரின் முன்பக்கக் கதவைத் திறந்துவிட்டபோதும் சரி, அவள் ஏறி சீட் பெல்ட் போடும்வரை காத்திருந்து காரை எடுத்தபோதிலும் சரி அவளோடு ஒரு வார்த்தை கதைக்கவில்லை அவன்.

இதோ.. அவனோடு அவள் சென்றுகொண்டிருக்கும் இந்த நிமிடம் வரை அவன் வாயைத் திறக்கவும் இல்லை! அவள் முகத்தைப் பார்க்கவும் இல்லை!

நெஞ்சம் கனக்கக் கார்க் கதவில் தலையை சாய்த்துக் கொண்டவளின் உள்ளம் குழம்பித்தவித்தது.

தாத்தா அவனுக்குத் திருமணம் என்றார். அப்படியானால் பெண் யார்? அவன் என்னிடம் தன் காதலைச் சொன்னானா அல்லது என் ஆசை கொண்ட மனதின் கற்பனையா அது? அப்படியே திருமணத்திற்குப் பெண் பார்க்கப்பட்டு இருந்தால், என்னுடனான அவனின் பழக்கத்தின் பெயர் என்ன? நட்பா…?

முத்தமிடுவது கூட நட்பில் சேர்த்தியா? இந்த நாட்டில் தான் எதற்கும் எல்லையே இல்லையே என்று சலித்தது அவள் மனது.

இங்கு பிறந்து வளர்ந்த ஒருவன் அப்படிச் சொல்வதற்கும் சந்தர்ப்பம் உண்டே! அப்படி எதையும் அவன் சொல்லிவிட்டால்? தாங்க முடியுமா? அவளால் நினைத்துப் பார்க்கவே முடியவில்லை.

நெஞ்சு கிடந்து அடித்தது. கைகால்களில் ஒரு நடுக்கம். கண்களில் இதோ இதோ என்று கண்ணீர் துளிர்த்தது.

காரணமேயின்றி அவன்மேல் காதல் கொண்டுவிட்ட அவளின் மனம், அவன் மனநிலை என்ன என்பதைப் புரிந்துகொள்ளப் பெரும்பாடு பட்டது.

முடிவு தெரியாமல் படும் அந்தப்பாட்டை அதற்கு மேலும் தாங்க முடியும்போல் தோன்றவில்லை அவளுக்கு. அவனின் முடிவைத் தெரிந்துகொண்டே ஆகவேண்டும் என்கிற உத்வேகம் அதிகரித்துக்கொண்டே சென்றது. ஒரு கட்டத்தில் ஒரு முடிவோடு அவன் புறமாகத் திரும்பினாள்.

அப்போதும் சாலையிலேயே பார்வையைப் பதித்திருந்தான் சூர்யா.

“உங்களுக்குப் பெண் பார்த்துவிட்டார்களா?” நினைத்ததை என்னவோ பிசிர் தட்டாமல் கேட்டுவிட்டாள் தான். ஆனால் பதில் வராமல் கடந்த அந்த நொடிகளைத்தான் கடக்கவே முடியவில்லை. நெஞ்சுக்குள் இருக்கும் இதயம் பந்தயக் குதிரையாய்க் கிடந்து அடித்துக்கொண்டது.

அவன் பதிலுக்காய் அவள் காத்திருக்க, அவனோ அவளைத் திரும்பி ஒரு பார்வை பார்த்துவிட்டு மீண்டும் பழையபடி சாலையில் பார்வையைப் பதித்தான்.

அவனையே பார்த்திருந்தவளுக்கு இதுவரை இருந்த பயம் போய் இப்போது ஒருவிதப் பிடிவாதம் தோன்றியது. தன் மனதிலிருக்கும் அத்தனை கேள்விக்கும் பதில் தெரிந்தே ஆகவேண்டும் என்கிற எண்ணம் ஆணித்தரமாய்த் தோன்றியது.

“நான் கேட்ட கேள்விக்கு நீங்கள் இன்னும் பதில் சொல்லவில்லை…?!” என்றவளின் குரலிலும் பிடிவாதம் தெரிந்தது.

காதே கேளாதவனைப் போல் காரைச் செலுத்திக்கொண்டிருந்தான் அவன். அவளுக்கோ இப்போது கோபமும் எட்டிப்பார்த்தது.

“சூர்யா! என்ன இது? இங்கே நான் விசரி மாதிரி கேள்வி கேட்டுக் கொண்டிருக்கிறேன். நீங்களானால் உங்கள் பாட்டுக்கு காரை ஓட்டிக்கொண்டு இருக்கிறீர்கள். முதலில் என் கேள்விக்குப் பதிலைச் சொல்லுங்கள்.” என்று சற்றுக் காட்டமாகவே கேட்டாள்.

முதன் முறையாக அவன் பெயரை உச்சரித்திருக்கிறோம் என்கிற உணர்வு கூட அவளுக்கில்லை! நிதானமாகக் காரைக் கொண்டுபோய் ஓரிடத்தில் நிறுத்தினான் அவன். அப்போதுதான் வெளிப்புறத்தை ஆராயந்தவளுக்கு தியேட்டரின் வாகனங்கள் நிறுத்துமிடத்தில் கார் வந்து நின்றிருப்பது புரிந்தது.

அவள் மனதில் போராடிக்கொண்டிருக்க, அவன் நிதானமாகத் தான் நினைத்த மாதிரிப் படம் பார்க்க வந்திருக்கிறான். கோபத்தோடு அவன் புறமாக திரும்ப அவனும் அவளையே பார்த்திருந்தான்.

அவன் பார்வையை தளராது எதிர்கொண்டு, “என் கேள்விக்குப் பதில் வேண்டும்..” என்று தைரியமாகவே கேட்டாள்.

“ஆமாம்! என் திருமணத்திற்குப் பெண் பார்த்துவிட்டார்கள் தான்! அதற்கென்ன இப்போது?” என்று, நீண்ட அமைதிக்குப் பிறகு வாயைத் திறந்தான் அவன்.

அவளுக்கு நெஞ்சில் இடியே இறங்கியது போலிருந்ததில், “என்னது?” என்றவளின் விழிகள் அவனை வெறிக்க, கண்ணீர் தன்பாட்டுக்குக் கன்னங்களில் வழியத் துவங்கியிருந்தது.

அதுவரை நேரமும் இருந்த நிதானம், நிமிர்வு, கோபம் எல்லாம் பறந்தோட, “நீங்கள் பொய்.. பொய்தானே சொல்கிறீர்கள்?” என்று உயிரைக் கையில் பிடித்தபடி உதடுகள் நடுங்கக் கேட்டாள்.

விழிகளை அகற்றாது அவளையே பார்த்தான் சூர்யா. கடந்தது நொடிப்பொழுதுதான். அடுத்தநொடி அவனின் இறுக்கமான கையணைப்புக்குள் கிடந்தாள் அவள் .

அது எப்படி நடந்தது என்பதை அவளறியாள்! ஆனால் அவன் அணைப்புக்குள் கிடப்பதே போதும் என்றாகிவிட, அப்படியே அவனுக்குள் அடங்கிப்போனாள். கண்மூடித் தன் கைவளைவில் கிடந்தவளின் கலைந்திருந்த நெற்றி முடிகளை விலக்கிவிட்டவனின் உதடுகள் அந்தப் பட்டு நெற்றியில் பதிந்தது.

“உன் மீது நான் மிகுந்த கோபத்தில் இருக்கிறேன்.” என்றவனின் உதடுகள் இப்போது அவள் கன்னத்துக்குத் தாவின.

கோபத்தில் இருப்பவனின் செயலா இது என்று யோதித்த மாத்திரத்தில் சிரிப்பு வந்துவிட, அவளின் செவ்விதழ்கள் புன்னகையில் விரிய, விழிகளோ அவனைப் பார்த்து நகைத்தன.

“என்ன சிரிப்பு? சேலையில் தேவதை மாதிரி அழகாய் இருக்கிறாயே என்று ஆசையாக அணைத்தவனைத் தள்ளி விட்டுவிட்டு இப்போது சிரிக்கிறாயா?” என்றவன், அவளின் மூக்குக் கண்ணாடியைக் கழட்டிவிட்டு, விழிகளின் மேல் தன் இதழ்களைப் பதித்தான்.

அவளுக்கு அவன் கேள்விக்குப் பதிலோ விளக்கமோ சொல்லத் தோன்றவில்லை. அதேபோல் அவனிடமிருந்து விலகவேண்டும் என்கிற எண்ணமும் வரவில்லை.

வெட்கத்தில் மலர்ந்த இதழ்களும், சிவந்துவிட்ட கன்னங்களுமாக அவன் நெஞ்சில் சாய்ந்து கிடந்தவளின் காதோரம் குனிந்து, “என்னை மணந்துகொள்கிறாயா லட்சனா?” என்று காதல் பொங்கக் கேட்டான் சூர்யா.

மூடியிருந்த அவள் விழிகள் சட்டென்று திறந்துகொள்ள, அந்த விழிகளில்தான் எத்தனை மகிழ்ச்சி! அவை ஆனந்தக் கண்ணீரைச் சிந்த, தன்னை மறந்து அவன் கழுத்தைக் கைகளால் சுற்றி வளைத்துத் தன்னோடு இறுக்கி, “நிச்சயமாக சூர்யா! நிச்சயமாக! உங்களை மட்டும்தான் என்னால் மணந்துகொள்ள முடியும்.” என்றவள், அவன் கன்னத்தில் தன் இதழ்களை ஆழப்பதித்தாள்.

 

Goms

Active member
Super 🤩 இரண்டு சைடும் green signal கிடைச்சாச்சு 🥰🥰

தாத்தா கிட்ட முன்னாடியே தன் மனதை சொல்லி விட்டானோ???🤩🤩
 

Google Typing

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.

Top Bottom