• நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.
    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

இதயத் துடிப்பாய்க் காதல் - 8

நிதனிபிரபு

Administrator
Staff member
அத்தியாயம்-8

அன்றைய நாளின் அழகான விடியலை கதிரவன் உருவாக்கும் பொழுதே கண்விழித்து விட்டாள் லட்சனா. விழித்துக்கொண்டது விழிகள் மட்டுமல்ல! அவளின் காதல் நெஞ்சமுமே!

உள்ளமெல்லாம் ஆனந்தக் கூத்தாட, இதழ்களில் புன்னகையைப் பூசிக்கொண்டே கட்டிலில் புரண்டவள் அருகிலிருந்த தன்னுடைய கைபேசியை எட்டி எடுத்து நேரத்தைப் பார்க்க, காலை ஆறு மணியை இன்னும் எட்டவில்லை என்றது அது.

உடனேயே சூர்யா எழுந்திருப்பானா என்று அவளின் எண்ணம் அவனை நோக்கிப் பாய்ந்தது.

அப்படியே அவன் எழாவிட்டால் என்ன, நாமே எழுப்பிவிட்டால் ஆயிற்று என்று எண்ணியபடி, நெஞ்சில் கல்வெட்டாய்ப் பதிந்துபோன அவன் இலக்கங்களை வேகமாகத் தட்டினாள்.

அங்கே ஆழ்ந்த துயிலில் இருந்தவன், அலாரம் அடிக்க முதலே அழைப்பது யார் என்று யோசித்தபடி கைபேசியை சோம்பலோடு எடுத்துப் பார்க்க, ‘லட்டு’ என்று மின்னியது.

“ஹாய் லட்டு! கூற்றன் மோர்கன்!” என்றான் தூக்கம் முற்றிலும் கலையாத கரகரத்த குரலில். செவிகளில் பாய்ந்த அந்தக் குரலே அவளை என்னவோ செய்ய, உடல் சிலிர்த்தது.

“என்னது…? லட்டா?” அவன் கூறிய காலை வணக்கத்துக்குப் பதில் வணக்கம் கூடச் சொல்ல மறந்து, மகிழ்ச்சியில் குழைந்தது அவள் குரல்.

“ஆமாம்! என்னுடைய லட்டு!” என்றான் ஆசையோடு.

“சூர்யா…!” உள்ளம் நெகிழ்ந்திருந்ததில் பேச வார்த்தைகளற்று அவன் பெயரையே வார்த்தையாக்கினாள் அவள். நெஞ்சில் ஒருவித பரவசம். இதுவரை அவளை யாருமே இப்படி அழைத்ததில்லை, அவளின் அண்ணா உட்பட!

“ஆமாம்! இந்தப் பக்கம் உன் சூர்யா. அந்தப் பக்கம் யாரோ?” என்றவனின் குரலில் தூக்கம் விடுபட்டுக் குறும்பு சேர்ந்திருந்தது.

“ம்.. அதுவா.. இந்தப்பக்கம் திருமதி சூர்யபிரகாஷ்…” இப்போது அவளுக்கும் அவன் குறும்பு தொற்றியிருந்தது. அதைக் கேட்டவன் மகிழ்ச்சி பொங்க வாய்விட்டுச் சிரித்தான்.

“என் திருமதி என் வீட்டில்தானே இருக்கவேண்டும். அதனால் என் வீட்டுக்கு வந்துவிடு!” என்றான் அவன் கொஞ்சலாய்.

அவன் வீட்டில், அவன் திருமதியாக வாழும் நாட்களை எண்ணியதுமே அவள் விழிகள் கனவில் மிதந்தன. அவன் சொன்னதுபோல இப்போதே அவனிடம் சென்றுவிட்டால் எவ்வளவு சந்தோசமாக இருக்கும். உள்ளம் ஏங்கியபோதும், இப்போது அவளால் அவன் திருமதியாக முடியாதே!

தன் ஏக்கத்தை மறைத்து, “அதற்கு காலநேரம் வரட்டும். உங்கள் திருமதி உங்களிடமே வருவாள்.” என்றாள், அந்தப் பொன்னான தருணத்தின் நினைவுகளைச் சுமந்தபடி.

“காலமாவது நேரமாவது. அதெல்லாம் ஒன்றுமில்லை. நீ சரியென்று ஒருவார்த்தை சொல். நான் இன்றே தாத்தாவை உங்கள் வீட்டுக்கு வந்து கதைக்கச் சொல்கிறேன்.” என்றான் அவன் தீவிரமான குரலில்.

“சூர்யா.. இப்போதே திருமணத்திற்கு என்ன அவசரம்? கொஞ்ச நாட்கள் நாம் காதலர்களாக இருக்கலாமே.” என்றவள், “இப்போது என்ன செய்துகொண்டு இருக்கிறீர்கள்..?” என்று பேச்சை மாற்றினாள்.

ஒரு வாக்குவாதத்தை ஆரம்பித்து இருக்கும் நல்ல மனநிலையைக் கெடுத்துக்கொள்ள விரும்பவில்லை அவள்.

“என்ன செய்வேன்? கட்டிலில் படுத்திருக்கிறேன். உன்னை நினைத்துத் தலையணையை அணைத்துக்கொண்டு! அதற்கு முத்தம் வேறு கொடுத்துக்கொண்டு.” அந்தக் குரலே அவளை என்னவோ செய்தது!

அவளுக்குப் பதிலாக தலையணையா? அதற்கு முத்தம் வேறா? அந்தத் தலையணையாக அவள் மாறக்கூடாதா? நெஞ்சம் ஏங்கியது.

“அச்சோ.. என்னதிது? தலையணைக்கு யாராவது முத்தம் கொடுப்பார்களா..?” என்று மனதை மறைத்துக் கேட்டாள் சனா.

“யார் தலையணைக்கு கொடுத்தது. நான் உனக்குத்தான் கொடுத்தேன். கிடைத்ததா..?” ஆழ்ந்த குரலில் அவன் கேட்க, அவளுக்கு அந்த நொடியே அவன் கைகளுக்குள் அடங்கிட மாட்டோமா என்றிருந்தது.

மனதின் எண்ணங்களை எல்லாம் வெளியே சொல்லிவிட முடிகிறதா என்ன? தன் மனதின் ஆசைகளை மறைத்துக்கொண்டு சாதரணமாக கதைக்க முயன்றாள்.

“விடியற்காலையில் பேசும் பேச்சா இது…?” அவள் என்னவோ அதை கோபமாகத்தான் கேட்க நினைத்தாள். ஆனால் குரலோ குழைந்து, சிணுங்கி முணுமுணுப்பாக வந்தது.

அவளின் முணுமுணுப்பு அவன் காதில் தெளிவாக விழ, அவன் முகத்தில் புன்னகை அரும்பியது.

“சிவனே என்று தூங்கிக் கொண்டிருந்தவனை எழுப்பியது யார்? ஆசையாகப் பேசியது யார்? செய்வதையெல்லாம் நீ செய்துவிட்டு பிழையை என் மேல் போடுகிறாயா?” என்று அவளிடமே பிழை கண்டான் அவளின் பொல்லாத காதலன்!

எந்தப் பக்கம் பேச்சைத் திருப்பினாலும் மூச்சடைக்க வைக்கிறானே என்றிருந்தது அவளுக்கு.

“காலையில் விழித்ததுமே உங்கள் நினைவுதான் வந்தது. அதுதான் அழைத்தேன். அது தப்பா?” என்றவளுக்கு, இனியும் பேச்சை மாற்றும் விதம் தெரியவில்லை. அல்லது அவன் காதல் பேச்சுக்களில் உறைந்துவிட்ட மூளையால் சிந்திக்க முடியவில்லை என்று சொன்னால் பொருத்தமாக இருக்குமோ..

“நீ அழைத்ததும் எனக்கும் நீயும் உன் அருகாமையும் வேண்டும்போல் இருந்தது. அது தப்பா..?” என்றான் அவனும் சிரிப்புடன்.

“ஐயோ சாமி! எதுவுமே தப்பில்லைப்பா. என்னை விட்டுவிடுங்கள்! இதுக்குமேல் என்னால் உங்களோடு மல்லுக்கட்ட முடியாது.” என்று அவனிடமே சரணடைந்தாள் அவன் காதலி!

அதைக்கேட்டுப் பெரிதாகச் சிரித்தவன், “அது! அந்தப் பயம் இருக்கட்டும்!” என்றான் பொய் மிரட்டலாக.

“நான் என்ன செய்யட்டும்? கனவிலும் நினைவிலும் நீங்கள்தான் வருகிறீர்கள். இரவு முழுக்க நான் தூங்கவே இல்லை தெரியுமா! கண் விழித்ததும் உங்களைத்தான் மனம் தேடுகிறது. உங்கள் குரலைக் கேட்டே ஆகவேண்டும் என்கிற ஆசையில்தான் அழைத்தேன்...” என்றாள் சலுகையுடன் அவள்.

“இதற்குத்தான் சொல்கிறேன். வா நாம் உடனே திருமணம் செய்துகொள்ளலாம்!” கிடைத்த சந்தர்ப்பத்தைத் தவறவிடாமல் கேட்டான் அவன்.

“போங்கள் சூர்யா. இப்போதே திருமணம் வேண்டாம். கொஞ்ச நாள் போகட்டும். நானும் கொஞ்சம் மொழியைப் படிக்கவேண்டும். அதோடு ‘டிரைவிங்’ உம் பழகவேண்டும்…”

“அதற்கும் திருமணத்திற்கும் எந்தச் சம்மந்தமும் இல்லை. திருமணத்திற்குப் பிறகும் அதைச் செய்யலாம். ஆனாலும்… ஓகே! உன் விருப்பம் போல் கொஞ்ச நாட்கள் போகட்டும். ஒரு மூன்றுமாதம்?” என்று இலகு குரலிலேயே விட்டுக் கொடுத்தான் அவன்.

“மூன்று மாதம் பாத்துக்கொண்டிருக்க ஓடிவிடும் சூர்யா. ஒரு.. ஒரு வருடம் போகட்டுமே..”

“முடியாது!” என்று உறுதியாக மறுத்தவன், “வேண்டுமானால் ஒரு ஆறுமாதம் பொறுக்கிறேன்!” என்றான்.

சொல்வதைக் கேட்க மாட்டேன் என்கிறானே என்று மனம் சிணுங்க அமைதியாக இருந்தாள் அவள். அவனும் பிடிவாதத்தில் குறைந்தவன் அல்லவே. அமைதியாகவே இருந்தான்.

தொடர்ந்த அமைதியைத் தாளமுடியாமல், “சூர்யா…?” என்று அழைத்தாள் லட்சனா.

கைபேசி அணைக்கபடாதபோதும் அவன் பேசவில்லை.
 

நிதனிபிரபு

Administrator
Staff member
“சரி. நீங்கள் சொன்னதுபோலவே ஆறுமாதத்தில் வீட்டில் பேசலாம்…” என்று அவள்தான் இறங்கி வந்தாள்.

“இது நல்ல பிள்ளைக்கு அழகு! உன் விருப்பத்தையும் மதிக்க வேண்டும் என்பதற்காக மட்டுமே இதற்குக் கூடச் சம்மதிக்கிறேன்..”என்றான் அவன்.

“உங்களிடம் வந்துவிடவேண்டும் என்று எனக்கு மட்டும் ஆசையில்லையா சூர்யா? ஆனால் எல்லோரிடமும் சொல்லி, அவர்களின் சம்மதத்துடன் நம் திருமணம் நடந்துதான் நான் உங்களிடம் வரவேண்டும். எனக்கு சொந்தமென்று இருப்பது அக்கா, அத்தான், அவர் குடும்பமும்தான். அவர்களை என்னால் என்றுமே உதற முடியாது சூர்யா.” நயமாகவே தன் நிலையை அவனுக்குப் புரியவைத்தாள்.

“உன்னையென்ன அவர்களை விட்டுவிட்டு ஓடியா வரச்சொன்னேன். உன் சொந்தங்களை உதறச் சொல்லியும் நான் சொல்லவில்லையே! அல்லது என்னைத் திருமணம் செய்தால் அவர்களை உதறவேண்டி வரும் என்கிறாயா? அப்படி என்ன குறை கண்டாய் என்னிடம்?” சற்று சூடாகவே இருந்தது அவன் கேள்விகள்.

‘அவர்களை உதற முடியாது..’ என்று அவள் சொன்னதில் அவனுக்குக் கோபம் உண்டாகியிருந்தது.

“ஐயோ சூர்யா! அப்படி எல்லாம் இல்லை. உங்களிடம் குறை இருப்பதாக நான் சொல்வேனா…?” என்றவளுக்கு, அவளைப் புரிந்து கொள்கிறான் இல்லையே என்கிற ஆற்றாமையில் குரல் அடைத்தது.

“நானாக என் வீட்டில் சொல்லாமல் தாத்தா வந்து நம் காதலைப் பற்றிச் சொன்னால், ‘எங்களிடம் இதைப் பற்றி இவள் ஒரு வார்த்தை சொல்லவில்லையே. அந்தளவுக்கு வேற்றாளாக நாம் போய்விட்டோமா.’ என்று அவர்கள் வேதனைப் படமாட்டார்களா சூர்யா? முதலில் நம்மைப் பற்றி நான் அவர்களிடம் பேசுகிறேன். அதன்பிறகு தாத்தா வந்து திருமணத்தைப் பற்றிக் கதைக்கட்டும். நான் வீட்டில் சொல்வதற்கு எனக்கு கொஞ்சம் டைம் தாருங்கள் என்றுதானே கேட்கிறேன்…” என்றாள் அவள்.

“நமக்கு ஒருவரை ஒருவர் பிடித்திருக்கிறது. அதை வீட்டில் சொல்வதற்கு எதற்கு டைம் கேட்கிறாய்…?” என்று புரியாத குரலில் கேட்டான் அவன்.

இதற்கு மேலும் என்ன சொல்லி அவனுக்குப் புரிய வைப்பது என்று தெரியவில்லை அவளுக்கு. ஜெயனைப் பற்றி இப்போது சொன்னால் இன்னும் என்னென்ன சொல்வானோ என்று எண்ணியவள், அதைச் சொல்லாது, “சூர்யா, ஆறுமாதம் பொறுக்கலாம் என்று நீங்கள் ஏற்கனவே ஒத்துக்கொண்டுவிட்டீர்கள்..” என்று அவனுக்கு நினைவு படுத்தினாள்.

“ம்ம்.. ஒத்துக்கொண்டேன் தான். ஆனால் அந்தக் காலமும் எதற்கு என்பதுதான் என் கேள்வி. சரி, விடு! உன் விருப்பம் போலவே இருக்கட்டும்.” என்று ஒருவழியாக மலையிறங்கினான் அவன்.

‘அப்பாடி…!’ என்றிருந்தது அவளுக்கு.

“இன்று மதியத்துக்குப் பிறகு எங்காவது வெளியே போகலாம், வா.…” அந்தப் பேச்சை அத்துடன் முடித்தவன் அவளை வெளியே அழைத்தான்.

“இன்றுமா…?” என்று அவள் இழுக்க,

“இப்போதுதானே இன்னும் ஆறு மாதத்திற்கு காதல் செய்வோம் என்றாய். தொலைபேசியில் காதல் செய்ய உன் காதலனுக்குத் தெரியாது! அதனால் இன்று என்னுடன் வருகிறாய்…” என்று அவளின் பேச்சை வைத்தே அவளை மடக்கினான் அவன்.

“கடவுளே…! சூர்யா…” செல்லமாக அவள் அலுக்க,

“மூன்றுமணிக்கு பள்ளிக்கூட வீதிக்கு வருகிறாய்! அதுவும் காதல் செய்வதற்கு என் காதலியாக!” என்றவனின் குரலில் நகைப்பு நன்றாகவே இருந்தது.

“உங்களை…!” என்று அவள் பல்லைக் கடிக்க அவனோ பெரிதாக நகைத்தான். அதைக் கேட்டவளின் முகத்திலும் புன்னகை அரும்பியது.

கைபேசியை அணைத்தபின்னர் அவனைப்போலவே தானும் ஒரு தலையணையைத் தன்னோடு சேர்த்தணைத்தவள், “ஆனாலும் இவ்வளவு பிடிவாதம் உங்களுக்கு ஆகாது சூர்யா…” என்றாள் வாய்விட்டே!

தலையணையோடு பேசும் தன் நிலையை நினைத்துச் சிரித்துக்கொண்டவளின் உள்ளத்தில் தன்னை நினைத்தே ஆச்சரியமாக இருந்தது.

எப்படி இப்படி மாறிப்போனோம்? காதல் என்கிற பெயரில் அவன் அவள் நெஞ்சில் விதைத்த அன்புக்கு இவ்வளவு சக்தியா? ஆச்சரியமாக இருந்தது அவளுக்கு.

அவன் இல்லாத நாட்களையோ, அவனின் நினைவுகள் இல்லாத நிமிடங்களையோ அவளால் நினைத்துக் கூடப் பார்க்க முடியவில்லை.
அவன் மட்டுமே அவள் உலகமாக மாறிப்போனதே!

அவர்கள் பிறந்து வளர்ந்த தேசங்கள் வேறாகிப் போனாலும், பழக்கவழக்கங்கள் மாறாக இருந்தாலும் மனதில் தோன்றிய நேசம் அவர்களை இணைத்துவிட்டதே! இதன் பெயர்தான் காதலா?

அவர்கள் பார்த்துக்கொண்டது சில முறைதான். ஆனாலும் நெஞ்சங்கள் இரண்டும் இடமாறிக்கொண்டது. அது போதாது என்று காதலையும் உடனேயே பரிமாறிக்கொண்டார்கள். இதில் திருமணமும் உடனேயே என்று அவன் கேட்டதை நினைத்ததும் அவள் முகம் வெட்கத்திலும் ஆசையிலும் மலர்ந்தது.

திருமண ஆசை அவளுக்கும் இருந்தாலும் நிதானிப்பது நல்லது என்றே தோன்றியது. அதைவிட அவனின் வேகத்தைப் பார்க்கையிலும் ஏனோ பயமாக இருந்தது.

முக்கியமாக அக்கா அத்தானிடம் அவர்களின் காதலைச் சொல்லவேண்டும். அடுத்ததாக ஜெயபாலன்.

அவனையும் அவளையும் இணைக்க அக்காவும் அத்தானும் விரும்புவதை அவள் அறிவாள். அதைவிட ஜெயபாலனின் ஆசை என்னவென்பதையும் அறிவாளே!

அவர்கள் எல்லோரிடமும் தன் காதலை சொல்லி, ஜெயபாலனின் மனம் நோகாதபடிக்கு அவனுக்கும் இதைப் புரியவைத்ததன் பிறகல்லவா அவர்கள் இணைய முடியும்.

இதுவரை இருந்த உல்லாசம் மறைய நெஞ்சில் பாரமேறியது. இதையெல்லாம் எப்படி அக்காவுக்கும் அத்தானுக்கும் புரியவைக்கப் போகிறாள்? எப்போது அவளது சூர்யாவை கைப்பிடிக்கப் போகிறாள்.

அக்காவிடம் இதைப் பற்றி பேசுவதை நினைத்தாலே பெரும் தயக்கமாக இருந்தது. ஆனாலும் பேசித்தானே ஆகவேண்டும்!


தொடரும்
 

Google Typing

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.

Top Bottom