• நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.
    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

இதயத் துடிப்பாய்க் காதல் - 9

நிதனிபிரபு

Administrator
Staff member
அத்தியாயம்-9

அன்று மாலை, பள்ளிக்கூட வாசலில் சூர்யாவுக்காக காத்திருந்தாள் லட்சனா. சற்று நேரத்திலேயே அவளருகில் காரைக் கொண்டுவந்து அவன் நிறுத்தவும் புன்னகையோடு அதில் ஏறியபடி, “எங்கே போகிறோம் சூர்யா…?” என்று கேட்டாள்.

கருப்புநிற ஜீன்சும் வெள்ளையும் சிவப்பும் கோடுபோட்ட ‘டாப்’உம் அணிந்து கண்ணுக்குக் குளிர்ச்சியாக இருந்தவளை ரசித்துக்கொண்டே, “காதலிக்க…” என்றான் சூர்யா.

அதைச் சொல்லும்போதே அவன் முகம் புன்னகையில் விரிய அவளுக்கும் சிரிப்பு வந்தது.

“இந்தப் பேச்சை விடவே மாட்டீர்களா…?”

“ஏன் விடவேண்டும்?” என்று அவன் வம்பை வளர்க்க,

“கடவுளே…! தெரியாத்தனமாக உங்களிடம் வாயை விட்டுவிட்டு நான் படும் பாடு இருக்கே…!” என்று சலுகையோடு சலித்துக்கொண்டாள் அவள்.

அவளைத் திரும்பிப் பார்த்தவனின் விழிகள் குறும்பில் மின்னியது. அந்தப் பார்வையின் அர்த்தத்தைப் புரிந்துகொள்ள முடியாதபோதும் வில்லங்கமாக ஏதோ ஒன்றைச் சொல்லப்போகிறான் என்று தோன்ற, “என்ன…?” என்று கேட்டாள்.

“இல்லை.. உன் வாயை என்னிடம் விட்டுவிட்டதாக சொல்கிறாயே..” என்று அவன் நகைப்போடு இழுக்க, “உங்களை…!” என்றவள் சிவந்துவிட்ட முகத்தை எங்கே மறைப்பது என்று தெரியாமல் தடுமாறி, “என்னவெல்லாம் சொல்கிறீர்கள். சுத்த மோசம் நீங்கள்..!”என்றபடி அவன் தோளில் அடிக்க, அப்போதும் அடக்கமாட்டாமல் நகைத்தான் சூர்யா.

“சிரிக்காதீர்கள் சூர்யா…” என்று சொன்னவளுக்குமே சிரிப்பு வந்துவிட அந்தக் காரில் சிறிது நேரத்திற்கு அவர்கள் இருவரினதும் சிரிப்புச் சத்தம் மட்டுமே கேட்டது.

“விளையாடாமல் சொல்லுங்கள் சூர்யா! நாம் இப்போது எங்கே போகிறோம்..?”

“உன்னுடைய இந்த சோடாபுட்டிக் கண்ணாடியை தூக்கிவிட்டு லென்ஸ் வைப்போமா?” அவளின் கேள்விக்கு பதில் சொல்லாமல் கேட்டான் சூர்யா.

“ஏன், கண்ணாடி எனக்கு நன்றாக இல்லையா?” சாதரணமாகத்தான் கேட்க நினைத்தாள். ஆனாலும் அவளையும் மீறி முகம் வாடியது. கண்ணாடியில் தான் அழகில்லையோ, அவனுக்குத் தன்னைப் பிடிக்கவில்லையோ என்று தோன்றியதும் நெஞ்சில் வலியொன்று எழுந்தது.

“அழகாய் இல்லாத என்னை எதற்குக் காதலிக்கிறீர்கள்..?” அவனின் பதிலைக் கேட்கும் பொறுமையைக் கூட இழந்து படபடத்தாள்.

“இப்படிப் படபடக்கிறாயே.. பொறுமையே இல்லையா உனக்கு..?” என்று கடிந்தவன், “நீ அழகில்லை என்று எந்த மடையன் சொன்னது…?” என்று பதில்கேள்வி கேட்டான்.

“உண்மையாகவா? நான் அழகா? என்னைப் பிடிக்குமா உங்களுக்கு…?” முகம் மலர அடுக்கடுக்காய் கேள்வி கேட்டவளை விசித்திரமாகப் பார்த்தான் அவன்.

“பிடிக்காமல் தான், உன்னை நினைத்துத் தலையணைக்கு முத்தம் கொடுக்கிறேனாக்கும்.”

முகத்தில் நாணத்தின் சாயல் தோன்றியபோதும், “பிறகு எதற்கு லென்ஸ் வைக்கச் சொல்கிறீர்கள்..?” என்று கேட்டாள் அவள்.

“எனக்கு கண்ணாடி தொந்தரவாக இருக்கிறது…”

“தொந்தரவா..?” புரியாமல் அவள் அவனைப் பார்த்துப் புருவங்களைச் சுருக்கினாள்.

காரை ஓட்டியபடி அவள் பக்கமாகச் சரிந்துகொண்டே, “பார்.. நான் உன்னை முத்தமிட நெருங்கினால், ஏதோ சீனச்சுவர் போல் அது எனக்குத் தடையாக இருக்கிறது..” என்றான் கண்ணடித்து.

அவனின் செய்கையில் புன்னகை வந்தபோதும், தன்னை நெருங்கியவனை இரு கைகளையும் நீட்டித் தடுத்துத் தள்ளியவள், “கார் ஓடும்போது இது என்ன விளையாட்டுச் சூர்யா…? ஒழுங்காகக் காரை ஓட்டுங்கள்…” என்றாள் பதற்றம் தொற்றிக்கொள்ள.

“இல்லை.. உனக்குச் செயல்முறையில் விளக்கம் தரலாம் என்று பார்த்தேன்.” என்றவன் அவள் முறைக்கவும், “சரி சரி விடு. லென்ஸ் உனக்குக் கண்ணாடியை விட வசதி..” என்றான் விளையாட்டை விட்டுவிட்டு.

“ம்ம்ம்.. அக்காவும் சொன்னார்கள் தான். நான்தான் லென்ஸை கண்ணுக்குள் வைக்கும் போது வலிக்குமே என்று பயந்து விட்டுவிட்டேன்.”

“வலிக்காது லட்டு. எதற்கும் முதலில் நாம் வைத்துப்பார்க்கலாம். வலித்தால் விட்டுவிடலாம்..” என்றான் மென்மையாக.

அப்போதும் அவள் அரைமனதாக, “ம்ம்…” என்று இழுக்க,

“உனக்கு விருப்பம் இல்லையென்றால் வேண்டாம்…” என்றான் அவன்.

சாலையில் பார்வையை பதித்து காரோட்டிக் கொண்டிருந்தவனின் முகத்தைப் பார்த்தவளுக்கு இன்னும் காதல் பொங்கியது. ஏதோ ஒருவிதத்தில் அவள் கண்ணாடி அணிவதை அவன் ரசிக்கவில்லை. ஆனால் அவளுக்கு அவ்வளவாக விருப்பத்தைக் காணோம் என்றதும் விட்டுக்கொடுக்கிறான். ஆனால் அவன் ரசிக்கத்தானே அவள்! இது புரியவில்லையா அவனுக்கு!

‘உனக்கு லென்ஸ் தான் அழகாக இருக்கும். மாற்று..’ என்றால் மாற்றிவிட்டுப் போகிறாள். அவனுக்காக அவள் எதுவும் செய்வாளே! அப்படியிருக்க இதைச் செய்ய மாட்டாளா..

“நாம் போகலாம் சூர்யா..” என்றாள் லட்சனா.

அவன் அவளைக் கேள்வியாகப் பார்க்க, “உங்களுக்குப் பிடித்தமாதிரி இருக்கத்தான் எனக்குப் பிடிகிறது.” என்றவள், அவன் தோளில் உரிமையோடு சாய்ந்துகொண்டாள்.

“உனக்குப் பிடிக்காமல் செய்ய..” என்றவனை சொல்லிமுடிக்க விடாது,

“போகலாம் சூர்யா…!” என்று மீண்டும் அவள் அழுத்திச் சொல்லவும், “உனக்கு நன்றாக இருக்கும் லட்டு…” என்றான் அவன் முகம் மலர.

மூக்குக் கண்ணாடி மற்றும் லென்ஸ் போன்றவற்றுக்கான பரிசோதனைகளைச் செய்யும் கடைக்கு அவளை அழைத்துச் சென்றான் சூர்யா.

அவளின் கண்களையும் கண்ணாடியையும் பரிசோதித்து, அவளுக்குப் பொருத்தமான லென்ஸ் எடுத்துவர அங்கே பணிபுரியும் பெண் உள்ளே சென்றுவிட, சனாவோ சூர்யாவின் கையை இறுகப் பற்றினாள்.

‘இதெற்கெல்லாம் பயப்படுவாயா?’ என்று கேலிசெய்ய வாயெடுத்தவன், அவளின் முகத்தில் இருந்த கலக்கத்தைப் பார்த்து நிஜமாகவே பயப்படுகிறாள் என்பதைப் புரிந்துகொண்டான்.

“இதில் பயப்பட ஒன்றுமே இல்லை லட்டு. கண் ஆபரேஷனையே இப்போதெல்லாம் மிக இலகுவாகச் செய்கிறார்கள். இது சும்மா கண்ணுக்குள் வைப்பதுதான்.” அவளைத் தன் தோளோடு சேர்த்து அணைத்துக் கொண்டே சொன்னான்.

“அப்படி வலித்தால் சொல்லு நாம் மறுத்துவிடலாம். சரியா?” என்றான் மீண்டும்.

“ம்ம்..” என்று அவள் தலையாட்டவும், அங்கே பணிபுரிபவள் ‘லென்ஸ்’ உடன் வரவும் சரியாக இருந்தது.

“லென்ஸ் வைப்பது மிக இலகுவானது. நான் கூட வைத்திருக்கிறேன். இதைப் பழகிவிட்டாய் என்றால் பிறகு உனக்குக் கண்ணாடி பிடிக்காமல் போய்விடும்…” என்று விளக்கிய அந்தப் பெண்,

“இங்கே பார்…” என்று தன்னுடைய கண்களில் இருந்து லென்ஸை மிக இலகுவாக எடுத்துக் காட்டிவிட்டு மீண்டும் பொருத்திக் கொள்ளவும் சனாவுக்கு வியப்பாக இருந்தது.

“இப்போது உனக்கு வைத்துப் பார்க்கலாமா..?” என்று அவள் கேட்க, சரியென்பதாக தலையை அசைத்தவளுக்கு இருந்த தயக்கம் பெரும்பாலும் அகன்றிருந்தது.

எப்படி லென்ஸை விழிகளுக்குள் வைக்கவேண்டும் என்று அவள் காட்டிக்கொடுக்க, புரியாதவற்றை சூர்யா விளக்க, மனதில் மெல்லிய பயரேகைகள் ஓட, அதைத் தன் ஒருபக்கக் கருவிழிக்குள் மெல்ல மெல்லப் பொருத்தினாள் சனா.

லென்ஸை உள்வாங்கிய விழி கலங்கினாலும் சிறிது நேரத்தில் பழைய படிக்குத் திரும்ப பார்வை மிகத் தெளிவாகத் தெரிந்தது.

முகம் ஒளிர, “இப்போது எனக்கு ஒன்றும் செய்யவில்லை சூர்யா. ” என்றாள் மகிழ்ச்சியுடன்.

மற்றக் கண்ணுக்கும் லென்ஸை வைக்கையில் முதலில் இருந்த பயம் நீங்கியிருந்தது அவளுக்கு.

“இதை மூன்று வாரங்கள் பாவி. அப்போது தலைவலி, கண்களில் சிவப்பு அல்லது எரிச்சல், கண்ணில் நீர் வடிதல் இப்படி ஏதாவது மாற்றம் தெரிந்தால் வா. அப்படி எதுவும் இல்லை என்றால் மூன்று வாரங்கள் கழித்து வா.” என்றவளிடம் தங்களுடைய சிறு சிறு சந்தேகங்களையும் கேட்டுத் தெளிவு படுத்திக்கொண்டவர்கள் அங்கிருந்து வெளியேறினார்கள்.

காரில் ஏறியதும் அவன் கையோடு தன் கையைக் கோர்த்து, அவன் தோளில் சாய்ந்து, “இப்போது எவ்வளவு நன்றாக இருக்கிறது தெரியுமா? நீங்கள் வற்புறுத்தியிருக்கா விட்டால் நான் வைத்திருக்கமாட்டேன். என்னை இங்கு கூட்டி வந்ததற்கு நன்றி சூர்யா..!” என்றாள் மகிழ்ச்சியோடு.
 

நிதனிபிரபு

Administrator
Staff member
“இனி இப்படி எதற்காவது எனக்கு நன்றி சொன்னாயானால் அடிதான் வாங்குவாய்.” என்றான் மிரட்டலாக.

“நன்றி சொல்லத் தோன்றினால் சொல்லத்தானே வேண்டும்..” முத்துச்சிரிப்பை முகத்தில் சிந்தியபடி சொன்னவளை அவன் விழிகள் விழுங்கியது.

லென்ஸ் வைக்கையில் கலங்கியதால் சற்றே சிவந்திருந்த விழிகளும், கண்ணாடி இல்லாததால் எடுப்பாகத் தெரிந்த நாசியும், ஈரம் சொட்டும் இதழ்களின் சிரிப்பிலும் தன்னைத் தொலைத்தான் அவன்.

“அப்படியா.. எனக்கும் இப்போது உன்னை முத்தமிடத் தோன்றுகிறது.” என்றபடி அவளை இழுத்து தன்மடியில் போட்டவன், அவள் முகத்தைக் கைகளில் ஏந்தி, அவளின் நீண்ட பெரிய விழிகளில் தன் உதடுகளைப் பதித்தான்.

சூடாய்ப் பதிந்த அவன் இதழ்களின் வேகத்தைத் தாங்க முடியாது விழிமூடியவள் மெய்மறந்து மயங்கிப்போனாள்.

அவளின் உதடுகளோ, “வேண்டாம் சூர்யா.” என்று மனதை மறைத்துப் பொய் பேசியது.

அசைந்த இதழ்களினால் அவை இருக்குமிடத்தைக் கண்டுகொண்டவனின் இதழ்கள் தன் இணையை நோக்கி வேகமாகச் சென்றது. சென்ற வேகத்திலேயே சந்தித்துக்கொண்ட இதழ்களுக்குப் பிரிவைப் பிடிக்காமல் போய்விட்டது போலும், பல நொடித்துளிகள் பிணைந்தே கிடந்தது!

மூச்சுக்காற்றுக்கு அவள் தடுமாறுவதை உணர்ந்தே அவளிடமிருந்து தன்னிதழ்களைப் பிரித்தெடுத்தான் சூர்யா.

“இனியும் எதற்காவது நன்றி சொன்னாயானால், இதுதான் தண்டனை.” என்றான், ஏதோ அதற்காகத்தான் அவளை முத்தமிட்டது போன்று!

பட்டென்று கண்களைத் திறந்தவள் அவனை முறைக்க, அவனோ ஒற்றைப் புருவத்தை உயர்த்தி என்னெவென்பதாகக் கேட்டான். அந்த ஆளுமையான பார்வையை ரசித்தவளின் முகத்தை நோக்கி அவன் மீண்டும் குனிய, அவனைப் பிடித்துத் தள்ளியவள் தன்னிருக்கைகுப் பாய்ந்தாள்.

நெஞ்சம் படபடக்க, கைகால்கள் நடுங்க வெட்கம் பிடுங்கித் தின்றது அவளை.

அவளின் நிலையைப் பார்க்கையில் அவனுக்குச் சிரிப்புப் பொத்துக்கொண்டு வந்தது. சிரிப்பவனை முறைக்க முயன்றும் முடியாமல் போகவே, சூடாகிவிட்ட கன்னங்களை அவனுக்கு காட்ட வெட்கி முகத்தைத் திருப்பிக்கொண்டாள் லட்சனா.

“ஏன் உன் காதுமடல் இப்படிச் சிவந்திருக்கிறது லட்டு..?” வம்புச் சிரிப்புடன் கேட்டான்.

“இப்படி.. இப்படி எல்லாம் செய்யாதீர்கள் சூர்யா…” என்றாள் முணுமுணுப்பாக. அதற்கு மேல் அவளுக்கு குரல் எழும்பவில்லை.

“எப்படியெல்லாம்..?” உல்லாசம் மறையாமல் கேட்டான் அவன்.

கேட்கும் கேள்வியைப் பார். வாய்விட்டுச் சொல்லமாட்டேன் என்கிற தைரியத்தில் விளையாடுகிறான்.

“நான் எதைச் சொல்கிறேன் என்று உங்களுக்கு தெரியாதா..?” கோபமாகக் கேட்க முயன்றாள்.

“புரிகிறது. ஆனால்.. அதிலே என்ன தப்பு?”

“கல்யாணத்துக்கு முதல் நாம் இப்படி நடப்பது தப்பில்லையா சூர்யா?” இப்போது அவளுக்கு மெய்யாகவே கோபம் வந்தது. பின்னே, செய்வதையும் செய்துவிட்டு அதில் தப்பில்லை என்று வேறு வாதிடுகிறானே.

“நிச்சயமாகத் தப்பே இல்லை. இதுமட்டுமல்ல, எதுவுமே…!” என்றான் அவன், அந்த ‘எதுவுமே’யில் அழுத்தம் கொடுத்து. அவன் வளர்ந்த விதம் அதைச் சரியென்றே சொன்னது. அவளோ அவன் சொன்னதைக் கேட்டு வாயடைத்து நின்றாள்.

எதுவுமே தப்பில்லையாமே.. என்ன சொல்கிறான் இவன்? இந்த நாட்டில் பிறந்து வளர்ந்ததாலேயே இவன் வெள்ளைக்காரனைப் போல் நடக்க முடியுமா? எங்கு வாழ்ந்தாலும் தமிழன் தமிழன் தானே! நமக்கென்று ஒரு கலாச்சாரம், கட்டுப்பாடு, வாழும் வழிமுறைகள் என்று நம் முன்னோர் வகுத்ததெல்லாம் எதற்காக?

“திருமணம், தாலி, சடங்குகள் எல்லாம் எதற்காக இருக்கிறது? நம் வீடுகளில் பெரியவர்கள் இருப்பது எதற்காக?” கோபத்தில் மூச்சிரைக்கக் கேட்டவளை வித்தியாசமாகப் பார்த்தான் அவன்.

“நீ சொல்வதற்கும் இப்போது நடந்ததற்கும் என்ன சம்மந்தம்..?”

இவன் என்ன விளையாடுகிறானா என்று நினைத்தபடி அவள் பார்க்க, அவன் முகத்தில் விளையாட்டுத்தனமோ குறும்போ மருந்துக்கும் இல்லை. நிஜமாகவே புரியாமல்தான் கேட்கிறான் என்பது தெரிய, இதைக் கூடச் சொல்லிக்கொடுக்காமல் இவன் வீட்டில் இவனை எப்படி வளர்த்தார்கள் என்று கோபம் வந்தது அவளுக்கு.

“பெரியவர்களின் சம்மதத்துடன் திருமணம் நடந்தபிறகுதான் நாம் இப்படி இருக்கவேண்டும். அதுவரை இது தப்பே..!” என்றாள் அவள் கொஞ்சம் கடுப்பேறிய குரலில்.

“ஒரு விஷயத்தை திரும்பத் திரும்பப் பேசுவது எனக்குப் பிடிப்பதில்லை லட்சனா!” என்று அழுத்திச் சொன்னவன், அவளைப் பார்த்தே தொடர்ந்தான்.

“திருமணம் வேண்டாம் என்றோ அல்லது பெரியவர்களின் சம்மதம் வேண்டாம் என்றோ நான் சொல்லவில்லை. உன் வீட்டாரோடு பேசவா என்றால் அதற்கும் வேண்டாம் என்றது நீதான்! ஆக, திருமணத்தை இப்போதைக்கு மறுப்பவள் நீதான். நானல்ல! ” என்றவனின் குரலில் என்ன இருந்தது? சலிப்பா? கோபமா? அல்லது இரண்டுமா…

“இப்படி எல்லாவற்றையும் மறுத்துவிட்டு, அழகாய் மனத்தைக் கவரும் உன்னைத் தொடவும் வேண்டாம் என்றால், என்னால் முடியாது!” என்றான் திட்டவட்டமாக.

“செய்வது தவறென்று தெரிந்தால் நிச்சயம் மாற்றிக்கொள்வேன். ஆனால் என் வருங்கால மனைவியை அணைப்பதும் முத்தமிடுவதும் எனக்குத் தவறாகப் படவில்லை…” என்றான் தொடர்ந்து அழுத்தமான குரலில்.

அவள் அழகி என்பதாலும் அவனின் வருங்கால மனைவி என்பதாலும் எதுவும் செய்யலாமா? இதைக் கேட்டால் ஆம் என்பான். அதுவும் அவளை வாயடைக்கச் செய்யும் விதமாக ஒரு விளக்கத்தையும் சொல்லி.

அதற்காக அவன் செய்கைகளுக்கு அவள் இடம் கொடுக்க முடியாதே!

“உங்களுக்குத் தப்பாக இல்லாமல் இருக்கலாம். ஆனால் எனக்கு இது பிடிக்கவில்லை. அதனால் இப்படிச் செய்யாதீர்கள்.” என்றாள் பிடிவாதக் குரலில்.

“உனக்குப் பிடிக்கவில்லை என்பதை நம்புவதற்கு இல்லை. உன்னுடைய ஒத்துழைப்பும் இருந்தது..:” என்றான் அவன் வெட்ட வெளிச்சமாக. அவளுக்கோ முகம் கன்றிச் சிவந்தது.

“நானொன்றும் பொம்மையில்லை! உணர்வுகள் உள்ள ஒரு சாதாரணப் பெண்தான்.. ஆனால்.. நீங்கள் நெருங்காமல் இருந்தால் போதும்…” என்றாள் குன்றிவிட்ட குரலில்.

“உன்னைப்போல நானும் உணர்வுகள் உள்ள சாதாரண மனிதன்தான். எனக்கு முத்தமிடத் தோன்றினால், வேறு யாரையுமா முத்தமிட முடியும்? உன்னைத்தானே முத்தமிட முடியும்! அதனால் என்னால் இதைத் தவிர்க்க முடியாது!” என்றான் அவனும் உறுதியான குரலில்.

பதில் சொல்ல முடியாமல் கலங்கிய விழிகளோடு அவள் அவனைப் பார்க்க, “இப்போது எதற்கு இந்த அழுகை..?” என்று பொறுமையிழந்த குரலில் கேட்டான் அவன்.

“மிரட்டுகிறீர்களா..?” குரலடைக்க அவள் கேட்க,

“மிரட்டுகிறேனா…?” என்று, அவன் அதையே திரும்பக் கேட்டான்.

“நான்.. நான் சம்மதிக்காவிட்டால் வேறு யாரிடமும் போவேன் என்று..” அதற்கு மேல் பேசமுடியாமல் அவள் திக்க, என்ன சொல்கிறாள் என்பதாக புருவங்கள் சுருங்க அவளைப் பார்த்தவனுக்கு, அவள் சொன்னது புரிய முகம் இறுகியது.

“எதைச் சொல்ல நினைத்தாலும் அதை நேரடியாகச் சொல்வதுதான் என் இயல்பு. நீ சொல்வது போல் மிரட்டுவது, மறைமுகமாகப் பேசுவது இதெல்லாம் எனக்கு வராத விஷயங்கள்! இத்தனை நாள் பழக்கத்தில் இதைக்கூட நீ புரிந்துகொள்ளவில்லையா?” என்று கேட்டவனின் விழிகள் இப்போது சாலையை வெறித்தது.

கைகள் இரண்டும் நகராத காரின் ஸ்டேரிங்கைப் பிடித்திருக்க, அவன் முகமோ கல்லாக இறுகியிருந்தது. மூச்சடைத்தது போலும், கார்க்கதவின் ஜன்னலை இறக்கிவிட்டு முகத்தை காற்றுப் படும்விதமாகத் திருப்பிக்கொண்டான்.

அது அவளைப் பாதித்தது. அப்படி என்ன தவறாகச் சொன்னோம் என்று யோசித்தவளுக்கு ஒன்றுமே பிடிபடவில்லை. ஆனாலும் அவன் முக இறுக்கத்தை அவளால் தாங்க முடியவில்லை.

இதற்கு அவன் என்ன வேண்டுமானாலும் செய்துகொள்ளட்டும் என்று பேசாமல் இருந்திருக்கலாமோ என்று கூடத் தோன்றியது. அவளே அவனுக்குத்தான். அவன் இல்லையென்றால் அவளும் இல்லை. அவளுக்கு வேறு எதுவும் தேவையும் இல்லை. அப்படி இருந்தும் ஏன் இப்படிச் சொன்னோம் என்றிருந்தது இப்போது.

எதையாவது சொல்லி அவனைச் சமாதானப்படுத்துவோம் என்று நினைத்தபடி அவன் புறமாக அவள் திரும்ப, “உன்னிடமிருந்து விலகியிருக்க முடிந்தவரை முயற்சிக்கிறேன்…” என்றான் அவன் இறுக்கமான குரலில்.

“சூர்யா.. அது.. நான்…”

“நாம் இதைப்பற்றி இதற்குமேல் பேசவேண்டாம்…!” என்றான் அவன் முடிவாக.

சுருக்கென்று தைத்தது அவளுக்கு. விலகியிருக்கச் சொன்னது அவள்தான்! ஆனால், அவன் விலகலை வார்த்தைகளில் கூட ஏற்கமுடியாமல் நின்றபோதும் அவள்தான்!

தொடரும்...
 

Goms

Active member
இந்த விசயத்தில் இருவரும் முட்டிக் கொண்டு தான் இருக்கிறார்கள் 🤩🤩😍😍
 

Google Typing

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.

Top Bottom