You must have JavaScript enabled in order to use this order form. Please enable JavaScript and then reload this page in order to continue.

இதழ் 10

ரோசி கஜன்

Administrator
Staff member
என்னவளே!
1558512487946.png


முடிந்தால் என்னை மன்னித்து விடு
உன் மீது காதல்கொண்டது நிஜம்
உனக்கும் எனக்குமான
கல்யாணக் கனவுகளை
கற்பனையில் கண்டது நிஜம்.
நான் சுவாசிக்கும் மூச்சுக்காற்றில்
உன் ஜீவ அணுக்கள்
கலந்திருப்பதாக சொன்னது நிஜம்.
நீ ராகமானால் நான் தாளமாகி
உன் வாழ்க்கையை ஸ்பரிசிப்பேன்
எனச்சொன்னதும் நிஜம்- ஆனால்
எனக்கான கனவுகளைக் காணக்கூட
அருகதையற்றவன் நான் என்பதை
எப்படி உனக்குப் புரியவைப்பேன்.


அப்பா என்ற வார்த்தைக்கு
அடையாளமாய் மட்டுமே இருக்கும்
என் தந்தை,
சமையலறையைத்தவிர
வேறெதைப்பற்றியும்
சிந்திக்கத்தெரியாத என் தாய்,
எப்படியும் அண்ணன்
மணமேடையில்
அமரவைத்துவிடுவான் என
ஆதங்கத்தோடு காத்திருக்கும்
என் இரு தங்கைகள்,
அப்பா செய்யத்தவறியதை
அண்ணன் செய்துவிடுவான் என
ஏக்கத்தோடு எதிர்பார்க்கும்
என் அருமைத் தம்பி
இத்தனையையும் விட்டுவிட்டு
எப்படி உன் கரம்
பற்றிக்கொள்வேன்.
என்னை மன்னித்துவிடு
முடிந்தால் மறந்துவிடு.


குடும்பத்திற்காய் நான்
சுமக்க வேண்டிய சிலுவையை
யாரிடம் கொடுத்துவிடமுடியும்.
எனக்கான சிலுவையை
நான் தானே சுமக்க முடியும்.


என் உயிரானவளே!
நான் உன் நெற்றியில்
திலகமிடும்போது
கடல் ஆர்ப்பரிக்கும்,
வானம் பூத்தூவும்,
நட்சத்திரங்கள் கண்சிமிட்டும்,
என்றெல்லாம் சொன்னவன் நான்தான்.
என்னை மன்னித்துவிடு,
முடிந்தால் மறந்துவிடு.


என் வாரிசை நீ சுமக்கும்
ஈரைந்து மாதத்தில்
நான் ஐந்து மாதம் சுமப்பேன்
எனக்கூறியவன் நான் தான்.
என் உள்ளங்கைக்குள் ஓவியமாய்
உன்னை ஒளித்துவைப்பேன்
என்றவனும் நான் தான்.
நீயில்லா வாழ்க்கை
நீரில்லா காலமென்று
நித்தம் நித்தம் உன்னிடம்
உரைத்தவனும் நான் தான்.
என்னை மன்னித்துவிடு
முடிந்தால் மறந்துவிடு.


என்னவளே!
ஓடமுடியாத
ஒற்றைச்சக்கரம் நான்.
ஓசை எழுப்பமுடியாத
புல்லாங்குழல் நான்.
புரிந்துகொள், பிரிந்துவிடுவோம்,
மீண்டும் கேட்கிறேன்,
மன்னித்துவிடு,
முடிந்தால்


மறந்துவிடு என்னவளே!



* கோபிகை
 

ரோசி கஜன்

Administrator
Staff member
உன் கவிதையில்...!
1558512439223.png

அன்பினை வர்ணிக்கும்
அழகான வார்த்தைப் பின்னளாய்..
அணுஅணுவாய் வர்ணம் தீட்டிடும்
ஆத்மார்த்த காதலாய்..
தாய்மையின் வல்லமை
தாராளமாக உணர்த்திடும் அங்கமாய்..
நட்பும் நயவஞ்சகயும் பிரித்துரைக்கும்
நல்வினையாய்..
வார்த்தையில்லா மௌனத்தின்
வலியினை வார்த்திடும் ஆறுதலாய்..
வஞ்சிக்கப்படும் உள்ளத்தின்
வடுவினை வருடிடும் வரிகளாய்...
உணர்ச்சியுடன் உண்மையை
உறுதியாய்க் கூறிடும் ஆயுதமாய்...
உன் பேனா முனைகள் சிந்தும்
உன் எண்ணத்தின் வெளிப்பாடாய்..
நீ வடிக்கும் கவிதைகளில் கருவாய்
நீ அறியாமல் நானே என்றும்...


சமீரா

 

ரோசி கஜன்

Administrator
Staff member
காதல்

1558512678125.png

தொழிலின் மீது பற்றாய் இருப்பவன்

துளிர்க்கும் காதலை உதறித் தள்ளுவான்

தொழிலே கண்ணாய் கருமமாய் தினமும்

தொழிலை மட்டுமே உண்மையாய் நேசிப்பான்

எழிலில் மயங்கிக் காதல் கொள்பவன்

ஏழ்மை நிலையில் உண்மை அறிவான்

அழியும் பொருளில் ஆசை வைப்பவன்

அழுது அழுதே ஆவியை இழப்பான்!



உண்மைக் காதல் எதிலும் வரலாம்

உணர்வு மிகுந்து அன்பும் எழலாம்

கண்ணின் மணிபோல் உலகில் யாரும்

காதலை மதிப்பது மிகவும் குறைவாம்

எண்ணில் எழுத்தில் காதல் கொள்பவன்

என்றும் மகிழ்வாய் வாழ்ந்து சாகிறான்

எண்ணம் போலொரு வாழ்க்கை அமைய

எதையும் நன்றாய்ச் செய்தல் வேண்டும்!


காதல் என்பது காமம் ஆகாது
காலம் போயும் காதல் போகாது
காதலின்றி எதுவும் இல்லை- உண்மைக்
காதல் ஒருபொழுதும் அழிந்து சாகாது
பேதம் பார்ப்பது காதலில் இருந்தால்
பேதைமை அங்கே குடிகொள்ளும்- நல்ல
வேதம் சொல்வதைக் கேட்டு நடந்தால்
வெந்தனலிலும் காதல் கருகி வேகாது!

செந்தமிழ், ஆங்கிலம், தெலுங்கு, மலையாளம்,
சிங்களம் போன்ற பேதங்கள் எல்லாம்
முந்தைய காதலில் இருந்தது இல்லை!
மொழிகள் எல்லாம் காதலிற்குத் தடையில்லை
சிந்தையில் எழும் அறிவால் ஓங்கி
சீராய் அமைவதே உண்மைக் காதல்!
சிந்தனை செய்து உண்மை உணர்ந்து
தேனாம் காதலை உணர்ந்து செய்வோம்!



மோகனன்
 
Top Bottom