• நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.
    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

இதழ் 2

ரோசி கஜன்

Administrator
Staff member


மரங்கள் – அகத்தியா


1543006845302.png




கடவுளிடம் வரங்கள் கேட்கவில்லை...

கரங்கள் தான் கேட்கின்றன!


மரம் என்று,

எழுதும் போது கூட

அதில் கால்கள் இல்லை!

இருந்திருந்தால்?

மனித மிருகங்கள்,

காடுகளுள் நுழையும் போதெல்லாம்

மரங்கள்,

வெளிநடப்புச் செய்திருக்கும்!



மனிதர்களிற்கு,

கண்தானம் செய்வதற்குப் பதில்

இனி மரங்களுக்குக்

கண் தானம் செய்யுங்கள்!

மனிதர்கள் காடுகளுள் நுழைகிறார்களா?

என்று

மரங்கள்

கண்காணித்துக் கொள்வதற்காக!



மரங்கள்,

தன் கிளைகளை

சிறகுகளென நினைத்து

அசைத்துக் கொண்டிருக்கின்றது...

மனிதர்களாகிய நாம் தான்,

விறகுகளிற்காக,

சிறகுகளை,

வெட்டி முறிக்கிறோம்.


1543006909094.png


மரங்களுக்கென,

செயற்கையாய்

ஒரு செவி பொருத்துங்கள்...

மனித சத்தம் கேட்டால்

ஓடி, ஒளிந்து கொள்வதற்காய்!





வாயில்லா ஜீவனின் பட்டியலில்

மரங்களையும் சேர்க்கச் சொல்கிறேன்...

வாய் மட்டும் இருந்திருந்தால்

வெட்டும் போதெல்லாம்

மனிதர்களை

மரங்கள் திட்டித் தீர்த்திருக்கும்

பச்சை பச்சையாய்...



காற்றில்

மரங்கள் அசையும் போதெல்லாம்

அதன் ஈரக்கொலை

நடுங்குவதாகவே நினைத்துக் கொள்கிறேன்



பிடுங்கித் தின்று பிழைப்பு நடத்தும்

நமக்கெங்கே தெரியப் போகிறது

மரங்கள்...

உதிர்ந்த தன் சருகுகளையே

உரமா(ணவா)க்கிக் கொள்ளுமென...



யார் யாருக்கோ

என்றோ நிழல் தந்த

ஒரு மரத்தின் எலும்புக் கூடுதான்

நம் வீட்டின்

யன்னல்களும் கதவுகளும்...
 

ரோசி கஜன்

Administrator
Staff member
புதிதாய் ஓர் பிரவசம் ! – கயூரி புவிராசா


1543007412821.png

பகலின் கடைசிச் சொட்டை
அருந்தி விட்டுச் செல்லும்
பகலவனோடு இவள்
முப்பதாவது வயதும்

சாய்ந்து விட்டது
திருமணச் சந்தையில்
விலைபோகா மங்கையிவள்...

ஒருவேளை,
பொன் கொழிக்கும் வீட்டில்
செல்ல மகளாய்ப் பிறந்திருந்தால்
பூங்குயில் காதலின் கீதம்
சொன்ன போது தடைபோடாதிருந்தால்
மாமாவும் சித்தப்பாவும் வெளிநாட்டில்
இருந்திருந்தால்

இவள் முதிர்கன்னியாகாதிருக்கச்

சந்தர்ப்பம் உண்டு

தந்தை கூட

கசப்பு மருந்தை குடித்தது போல
முகத்தை சுழிக்கிறார்.
"உன்னோட படிச்சதுகள் எல்லாம்
கையில ஒண்டு

இடுப்பில ஒண்டோட திரியுதுகள்"
சலித்துக்கொண்டாள் அம்மா.

ஏக்கங்கள் அலைபோல் ஆர்ப்பரிக்க
தலையணைப் பஞ்சுகள் பொருமின,
விழிநீரின் கனந்தாளாமல்!

கல்லூரிக் காலத்தில் விரட்டி விரட்டி
கடிதம் தந்தவன் கூட மனக்கண்ணில்
பரிதாபமாய் சிரிக்கிறான்.
தந்தையின் பார்வைக்குப் பயந்து
அவனை மறுத்தது தவறோ!!
மனம் கேள்விக்கணை தொடுக்கிறது
இலக்கற்ற இரவுகளை வெறித்தபடி
கனவுகளும் மக்கிவிட்டன.

இறுதியில்,
முடிவெடுத்துக் கொண்டாள்...
நாளை பரீட்சை அல்லவா?
ஆசிரியைப் பணிக்காய் மட்டும்
தன்னை
அர்ப்பணித்து விடுவோம்
என்று!
 

ரோசி கஜன்

Administrator
Staff member
அவள் மட்டுமே அறிவாள் - நர்மதா சுப்ரமணியம்




1543007523590.png


அழகியலாய் மட்டுமே

அதை நோக்கும் கண்கள்

அதனுள்ளிருக்கும் துன்பம்

அவள் மட்டுமே அறிவாள்!



குழந்தைக்காய்

குழந்தைக்கு அட்சயமாய்

அதை வைத்தான் இறைவன்

என்றெனவே உலகமறியும்!

அதனுள்ளிருக்கும் துன்பம்

அவள் மட்டுமே அறிவாள்!



உடலிலுள்ள தெம்பெல்லாம்

வடித்தெடுத்து வீரியமற்று திராணியற்று

நகரவும் இயலாது படுத்திருப்பாள்

குழந்தை பிரசவித்த நேரம்...

அதையும் பொருட்படுத்தாது

அள்ள அள்ள குறையாத அமிர்தமாய்

பால் பொழியும் அவளின் மார்பகங்கள்!

அதனுள்ளிருக்கும் துன்பம்

அவள் மட்டுமே அறிவாள்!



வளரும் குழந்தை

பாலருந்தும் ஆர்வத்தில்

மார்புக் காம்பை கடித்து வைக்க

புண்ணாய் ரணமாய்

காந்தும் அவ்வலியிலும்

கண்ணில் கண்ணீர்

ஆறாய் ஓடியப் போதும்

பசியால் அழும்

பிள்ளையின் அழுகுரல்

காணச் சகிக்காது

தன் வலி பொறுத்து

பிள்ளைப் பசி தீர்ப்பாளவள்!

அதனுள்ளிருக்கும் துன்பம்

அவள் மட்டுமே அறிவாள்!



குழந்தை ஒவ்வாமையால்

ஒரு நாள் பாலருந்தாமல் போனாலும்,

தன் பணி நிமித்தமாய்

பிள்ளைக்குப் பாலூட்டுவதை

நிறுத்தும் போதும்

அதனுள்ளிருக்கும் துன்பம்

அவள் மட்டுமே அறிவாள்!



பிள்ளை அருந்தாத பால்

மார்பில் கட்டிக்கொண்டு

உயிர்போகும் வலியளிக்க

மாரடைக்காமலே

மாரடைப்பின் வலியை

மூச்சுத்திணறலின் கொடூரத்தை

உணர்வாளவள்!

அதனுள்ளிருக்கும் துன்பம்

அவள் மட்டுமே அறிவாள்!



தன் பிள்ளை கருவுருவாகிய

நேரம் முதல் பிரசவிக்கும் வரை

தன் ஒவ்வோர் உறுப்பின்

உயிர்வலி உணர்வாளவள்!

அதனுள்ளிருக்கும் துன்பம்

அவள் மட்டுமே அறிவாள்!



இன்பமாய் சுகமாய்

இவ்வலியனைத்தையும் ஏற்பவள்

இவற்றைத் தாண்டிய பெரும்வலியாய்

அருவருப்பாய் உணர்வாளவள்

கொடியவர்களின் தீப்பார்வையில்...



அழகியலில் மறைந்துள்ள

கொல்லும் வலியை

அவள் மட்டுமே அறிவாள்!



கொடியவர்களின் வக்கிரப்பார்வையால்

வரமும் சாபமாய் மாறும் விந்தையை

அவள் மட்டுமே அறிவாள்!
 

Google Typing

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.

Top Bottom