இன்றய இளம் சமுதாயம் அதி தீவிரமாக வளர்ந்து வரும் தொழில் நுட்பத்தோடு இணைந்தே, தாமும் வளர்கின்றனர். அப்படியிருக்கையில், நம் கண்முன்னால் நம்மினத்தைச் சேர்ந்தவர் ஒருவர் பல கண்டுபிடிப்புகளுக்குச் சொந்தக்காரர் என்கையில் அதில் பெருமிதமும் மகிழ்வும் உருவாகாது போகுமா என்ன ?
அவ்வடிப்படையில், எம்நாட்டின் இளம் விஞ்ஞானி எனச் சுட்டப்படும் சம்மாந்துறையைச் சேர்ந்த சோமசுந்தரம் வினோஜ்குமார் பற்றி இப்பகுதியில் பகிர்வதில் செந்தூரம் பெருமை கொள்கிறது.
வாழ்வில் இன்றியமையாதது என்றால் நாம் எல்லோருமே கல்விக்கு முதலிடம் கொடுப்போம் என்பதில் ஐயமே இல்லை. அதையும் கடந்து பல மாணவர்கள் கண்டுபிடிப்பாளர்களாகவும் சாதனையாளர்களாகவும் தம்மை வெளிப்படுத்தி நிரூபிக்கிறார்கள் .
அவர்களின் அந்த முயற்சியில் தீவிரமாகவும் திடமாகவும் இருக்கையில் எதிர்ப்படும் தடைகள் எல்லாம் மிக அற்பமாகத் தோன்றி, அவற்றைக் கடந்து முன்னேறும் துணிவையும் பலத்தையும் தந்துவிடும்.
அப்படியே, கிழக்கிலங்கையில் மிகச் சாதாரண வசதிவாய்ப்புகள் அற்ற குடும்பப் பின்னனியில் பிறந்து வளர்ந்த வினோஜ்குமார், இன்று, தன் இலக்கில் முன்னேறிச் சென்று, நாட்டுக்குள் அறியப்பட்டது மட்டுமின்றி சர்வதேச அளவிலும் தன் கண்டுபிடிப்புகளோடு கால் பதித்துள்ளார்.
ஆரம்பக்கல்வியை சம்மாந்துறை கோரன்கட்டு தமிழ் மகா வித்தியாலயத்திலும், உயர்கல்வியை சம்மாந்துறை முஸ்லீம் மத்திய மகா வித்தியாலயத்திலும் பயின்று, யாழ் பல்கலையின் பொறியியல் பிரிவு மாணவனாக இருப்பவர், இன்றுவரை பல கண்டுபிடிப்புகளை மேற்கொண்டுள்ளார்.
சிறுவயதில் கைவினைப் பொருட்களை செய்வதில் ஆரம்பித்த இவரின் ஆராயும் குணம் அப்படியே வளர்ந்து பயன்தரும் பல கண்டுபிடிப்புகளுக்கு வித்திட்டுள்ளது. வாசிப்பில் நாட்டம் கொண்டவருக்கு உலகளாவிய ரீதியில் கண்டுபிடிப்பாளர்களாக அடையாளப்படுத்தப்பட்டவர்களின் வரலாறை அறியும் சந்தர்ப்பங்கள் கிடைக்க, தாமும் ஏன் அவ்வாறு ஆகமுடியாதெனும் ஆர்வம் அதிகரித்துள்ளது. எந்தவொரு விசயத்திலும் ஆர்வமும் முயற்சியும் இருந்தால் எதிர்ப்படும் தடைகள் தவிடு பொடியே !
அதுதான் இவர் வாழ்விலும் நிகழ்ந்துள்ளது.
ஆரம்ப காலங்களில் சின்ன சின்ன கண்டுபிடிப்புகளுக்கு அங்கிகாரம் கிடைக்காத போதும் சளைக்காதவருக்கு, முதல் முதல் 2012 ல் மெழுகுவர்த்தி மீழ் சுழற்றி இயந்திரம் கண்டு பிடித்த போது, இலங்கை புத்தாக்க ஆணையகம் மற்றும் பொறியியல் நிர்வாகம் என்பவற்றில் அங்கிகாரம் கிடைத்ததில் தேசிய மட்டத்தில் அறியப்பட்டுள்ளார்.
அதன் பின்னர்... பல கண்டுபிடிப்புகள் , அதன் பயனாக தேசிய மட்ட, சர்வதேச மட்ட விருதுகள் பல.
அவற்றுள், இலங்கையில் நடைபெற்ற மூன்றாவது தேசிய புத்தாக்குனர் விருது விழாவில், 3 தங்கம் 1 வெள்ளி 3 வெண்கலம் வென்று, முந்தைய சாதனையை முறியடித்துச் சாதனை படைத்ததையும், இவ்வாண்டின் ஆரம்பத்தில் தாய்லாந்தில் நடைபெற்ற அறிவியல் புலமை தொழில் நுட்பக்கண்காட்சியில், சர்வதேச வெண்கல விருது, சர்வதேச ஆக்கபூர்வமான கண்டுபிடிப்புகளுக்கான சிறப்பு விருது என இரு விருதுகளை வென்றதையும் குறிப்பிடலாம். 97 நாடுகளைச் சேர்ந்த 1800 பல்கலை கண்டுபிடிப்பாளர்களோடு போட்டியிட்டு இவ்விரு விருதுகளைத் தனதாக்கிய வினோஜ்குமார், மேலும்மேலும் பல ஆக்கப்பூர்வமான கடுபிடிப்புகளைச் செய்து உலகறியப்பட, செந்தூரத்தின் சார்பில் மனமார வாழ்த்துகிறோம்!