உங்கள் கருத்துக்களை இந்தத் திரியிலேயே பகிருங்கள்...
Super interestingபெற்றவரை இழந்து பரிதவித்து நின்றபொழுது, ஆறுதல் தேடி அலைந்த அவன் விழிகளைக் கண்டுவிட்டு அலட்சியமாக முகத்தைத் திருப்பிக் கொண்டவள்!
வெங்கடேசன் இறந்தபோது அவன் உயர்தரப் பரீட்சையை(ப்ளஸ் டூ) முடித்திருந்தான். வேதனையோடு நாட்கள் கடக்க, நல்ல பெறுபேற்றோடு பரீட்சையில் சித்தி அடைந்ததில் யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத்தில் இடமும் கிடைத்தது அவனுக்கு. அதுவும் அவனது அப்பாவைப் போலவே மருத்துவனாக ஆசைப்பட்டவனுக்கு மருத்துவ பீடமே கிடைத்தது இன்னும் மகிழ்ச்சி.
அந்தச் சந்தோசத்தில் ஓரளவுக்கு தந்தையின் இறப்பில் இருந்து மீண்டு, மகிழ்ச்சியோடே படிக்கச் சென்றான்.
அதன்பிறகு வந்த இரண்டு வருடங்கள் மிக நன்றாகத்தான் சென்றது. அவனுக்குப் பிடித்த படிப்பு, புதிய சூழல், புதிய நண்பர்கள் என்று அவன் நாட்கள் கடந்தன.
அப்போதெல்லாம் விடுமுறைக்கு வீட்டுக்கு வருபவன், அத்தைகளின் வீட்டுக்கோ சித்தப்பாவின் வீட்டுக்கோ போகலாம் என்றால், தாய் எதையாவது சொல்லித் தடுத்துவிடுவார். ஏன் என்கிற கேள்வி எழுந்தாலும், அதை அவன் ஆழமாக யோசித்தது இல்லை.
இரண்டாவது வருடக் கடைசியில், விடுமுறைக்கு வீட்டுக்கு வந்தவனின் வாழ்க்கை மீண்டும் ஒருமுறை தலைகீழாக மாறிற்று!
அன்று மாலை இராசமணி நித்தியுடன் கோவிலுக்குச் சென்றுவிட, தொலைகாட்சியைப் பார்த்துக்கொண்டிருந்தவனை வீட்டுத் தொலைபேசி தொல்லை செய்தது.
எடுத்துக் காதில் வைத்தவனின் தலையில், “தம்பி, அம்மாவிடம் வரும் திங்களுக்கு முதல் நகைகளுக்கு வட்டியைக் கட்டச் சொல்லுங்கள். இல்லாவிட்டால் எல்லாமே அறுதியாகிவிடும்..” என்று குண்டை இறக்கினார், அந்தப் பக்கம் பேசிய நகை அடகு வைக்கும் கடைக்காரர்.
என்ன நகை? என்ன வட்டி? என்று ஒன்றும் புரியாமல் குழம்பி நின்றவனின் பார்வையில், கோவிலால் வந்த தாயின் வெறும் கழுத்தும் கைகளும் அப்போதுதான் பட்டது.
அதோடு, இந்த நேரம் டியுஷன் சென்றிருக்க வேண்டிய தங்கை வீட்டில் இருப்பதும்!
அதன் பிறகே வீட்டையும், தாயையும் தங்கையையும் ஆராய்ந்தவனின் விழிகளில், வாடி வதங்கி நின்ற தாயின் முகம் முதல் வெறுமையாக இருந்த சமையலறை வரை பட்டது.
பட்ட நொடி உள்ளத்தால் துடித்துத்தான் போனான். இதை இவ்வளவு நாட்களாக கவனிக்காமல் விட்டோமே என்று மருகினான். அவனுக்காக அவர்கள் கஷ்டப் பட்டார்களா?
அம்மாவையும் தங்கையையும் இப்படிக் கஷ்டப்பட விட்டுவிட்டு அத்தைகளும் சித்தப்பாவும் என்ன செய்கிறார்கள் என்று கோபத்துடன் அவர்கள் வீட்டுக்குச் சென்றவனை, அங்கிருந்த ஒருவர் கூட வரவேற்காதது அடுத்த அதிர்ச்சியாக இருந்தது.
இவர்கள் எல்லாம் அவன் சொந்தம் தானா? முன்னர் பாசத்தை மட்டுமே கொட்டிய அந்த மனிதர்கள் தானா என்கிற பெரும் சந்தேகமே எழுந்தது.
அப்போதும், பெரும் சிரமப் பட்டுத் தனிமையில் சாதனாவைச் சந்தித்து, “என்ன சது, நீயாவது அம்மாவையும் நித்தியையும் பார்த்துக் கொள்ளக் கூடாதா..?” என்று மனத்தாங்கலோடு கேட்டான்.
வருங்காலத்தில் அவனது மனைவியாகப் போகிறவள் அல்லவா! அந்த உரிமையில் வந்திருந்தது அந்த மனத்தாங்கல்.
அலட்சியமாக அவனைப் பார்த்து, “அதென்ன நீயாவது என்று கேட்கிறீர்கள். நானென்ன உங்கள் வீட்டு வேலைக்காரியா?” என்று கேட்டாள் அவள்.
“விளையாடாதே சது. என் வருங்கால மனைவி நீதானே அம்மாவைக் கவனித்துக்கொள்ள வேண்டும்..”
“என்னது? நான் உங்கள் வருங்கால மனைவியா? கனவு காணாதீர்கள். என் அப்பா எனக்கு வெளிநாட்டு மாப்பிள்ளை பார்க்கப் போகிறார்..” என்றாள் எள்ளலும் பெருமையும் குரலில் மிதக்க.
அதைக் கேட்டவனுக்கு ஆத்திரம் ஆத்திரமாக வந்தது. “இவ்வளவு நாளும் என் பின்னால் சுற்றினாயே. அது எதற்கு? என்னிடம் இருந்த பணத்துக்காகவா?” என்று சீறினான்.
ஒரு நொடி அவள் முகம் கன்றியது. உடனேயே நிமிர்ந்து, “அப்போதெல்லாம் என்னைக் கட்ட மாட்டேன் என்று சொன்ன நீங்கள் இன்று வந்து வருங்கால மனைவி என்கிறீர்களே? என்னிடம் உள்ள பணத்துக்காகவா ரஞ்சன்?” என்று திமிராக அவன் கேட்ட கேள்வியையே திருப்பிக் கேட்டாள் அவள்.
ரஞ்சன்?
மச்சான் என்கிற சொற்பதம் காணாமல் போயிருந்தது. சொற்பதம் மட்டுமல்ல சொந்தமும் என்று தெளிவாகப் புரிந்து போயிற்று அவனுக்கு!
‘திரும்பவும் பணம் சம்பாதித்து உன்னையே கட்டிக் காட்டுகிறேன்டி!’ என்று மனதால் உறுதி பூண்டான். ஆத்திரத்தோடு முறைத்துப் பார்த்தவனிடம் ஏளனம் மிக்க வெட்டும் பார்வை ஒன்றை அலட்சியமாக வீசினாள் சாதனா.
கோபத்தில் கையை நீட்டி விடுவோமோ என்று பயந்து விறுவிறு என்று திரும்பி வந்துவிட்டான்.
அன்றோடு அவன் படிப்பும் நின்றுபோனது. கனவுகளும் மூட்டை கட்டப்பட்டு ஒரு மூலைக்குத் தள்ளப்பட்டது.
வேலை தேடியாகவேண்டிய கட்டாயம்! எங்கே என்ன வேலை தேடுவது? அதை எப்படித் தேடுவது என்று கூட அவனுக்குத் தெரியவில்லை.
வழி தெரியாது விழி பிதுங்கி நின்றவனுக்குப் போன இடமெல்லாம் கிட்டியது தோல்வியே!
படித்து முடித்தவனுக்கே வேலை கிடைப்பது குதிரைக் கொம்பாக இருக்க, படிப்பை இடையில் நிறுத்தியவனுக்கு?
அவர்களுக்குத் தெரிந்த ஒருவர், அவன் இப்போது வேலை செய்யும் ‘ரிபொக்’ செருப்புகள் விற்கும் கடைக்கு ஆட்கள் வேலைக்கு வேண்டுமாம், போகிறாயா? என்று கேட்டபோது, அவனுக்குக் கண்மண் தெரியாத கோபம்தான் வந்தது.
நான் என்ன அந்தளவுக்கு கேவலமானவனா? போயும் போயும் ஒரு செருப்புக் கடையில் வேலை செய்வதா? என்று ஆத்திரப் பட்டான்.
நாட்கள் இப்படியே கடக்க, நகைகள் எல்லாம் அடவு கடைக்காரனுக்கே சொந்தமாகிப் போக, இனி விற்றோ அடவு வைத்தோ சாப்பிடுவதற்கு ஒன்றும் இல்லை என்கிற நிலை.
வாழ்க்கையே வெறுத்தது. செத்துவிடலாமா என்று கூட யோசித்தான். அப்போது அவனருகில் வந்தமர்ந்த தங்கையைப் பார்த்ததும் கண்களில் நீர் துளிர்த்தது அவனுக்கு.
அவனும் இறந்துவிட்டால் தங்கைக்கும் தாய்க்கும் யார் துணை?
இல்லை! நான் அழக்கூடாது. வாழ்ந்து காட்டுகிறேன்! முன்னுக்கு வந்து காட்டுகிறேன்! என்று வைராக்கியமாக முடிவை எடுத்தான்.
‘நீ ஒரு மருத்துவனாகி ஏழைகளுக்கு உதவி செய்யவேண்டும்’ என்று சொல்லும் தந்தையின் கனவு என்னாவது என்று கேட்டது உள்ளம்.
ஏழைகளுக்குச் சேவை செய்ய யாரும் வருவார்கள். என் குடும்பத்தைப் பார்த்துக்கொள்ள நான் மட்டும்தானே இருக்கிறேன் என்று தனக்குத் தானே கூறிக்கொண்டான்.
அடுத்தநாளே அந்த மனிதரைத் தேடிச் சென்று செருப்புக் கடை வேலைக்குச் சம்மதித்தான்.
என்னதான் முடிவை எடுத்து விட்டாலும், கடை வாசல்படியை மிதிக்கையில் இப்படியே திரும்பி ஓடிவிட்டால் என்ன என்றுதான் தோன்றியது. அந்தளவுக்கு வலித்தது.
தூணாக நின்ற தந்தையின் இழப்பைப் பல மடங்காக அந்த நொடி உணர்ந்தவன் பல்லைக் கடித்துக்கொண்டு வேலைக்குச் சேர்ந்தான்.
ஓடிற்று! இதோ கண்ணை மூடித் திறக்க முதல் மூன்று வருடங்கள் மிக வேகமாக ஓடிற்று!
ஆனால், அவன் நினைத்தது போன்று முன்னுக்கு வரத்தான் முடியவில்லை.
காலை எட்டு மணிக்குத் தொடங்கும் வேலை இரவு எட்டு மணிக்கு முடியும் என்பது பேச்சாக இருந்தாலும்,அந்த முடிவு நேரம் ஒன்பது, பத்து, பதினொன்று ஏன் நடுச்சாமம் பன்னிரண்டு கூட ஆனதுண்டு.
ஒரே ஒரு ஆறுதல். நல்ல சம்பளம்! இவர்கள் இன்னும் ஐந்து செருப்புக் கடைகளுக்கு சொந்தக்காரர்களாக இருப்பதாலோ என்னவோ, வேலை செய்பவர்களுக்கு மனம் நோகாத அளவுக்கு இருந்தது அவர்கள் கொடுக்கும் சம்பளம்.
ஆனால், முன்னேறத் துடிக்கும் அவனுக்கு அது போதாதே!
வண்டியைக் கொண்டுவந்து கடைக்கு முன்னால் நிறுத்தியவனது மனம் என்றும்போல் இன்றும் கொந்தளித்த போதும், இன்று சற்று அதிகமாகவே சஞ்சலப் பட்டது.
சாதனாவை நீண்ட நாட்களுக்குப் பிறகு கண்டதனால் அப்படி இருக்கிறது போலும் என்று எண்ணிக்கொண்டே, உணவுப் பையுடன் கடைக்குள்ளே காலடி எடுத்துவைத்தான்.
“இதயரஞ்சன்! இங்கே வாருங்கள்!” சற்று அதிகாரமாக அழைத்தது ஒரு பெண்குரல்.
அந்த அதிகாரத் தொனியே ஒருவித எரிச்சலைக் கொடுத்தது என்றால், அவனது முழுப் பெயரைச் சொல்லி அழைத்தது சினத்தைக் கொடுத்தது.
அதையெல்லாம் முதலாளி வர்க்கத்திடம் தொழிலாளி வர்க்கம் காட்டவா முடியும்?
பொறுமையைக் இறுக்கிப்பிடித்தபடி அவன் திரும்பிப் பார்க்க, நான்கைந்து பெண்கள் புடைசூழ நின்றுகொண்டிருந்தாள் சித்ரயாழி!
தொடரும்:...........
நன்றி beula...nice
நன்றி ஹரிணி...Super start
super ka...
ஹாஹா... நன்றி sp....Read this story long time back
Waiting to read again
அழுத்தமான தொடக்கம்....அருமை அக்கா?
நன்றி சுதா..Super interesting
நன்றி தமிழ்..இந்த நாவலை மீண்டும் வாசிக்க வாய்ப்பு தந்ததற்கு நன்றி நிதானமாக.
Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.