அந்தக் காலை வேளைக்கே உரிய பரபரப்புடன் இயங்கிக் கொண்டு இருந்தது அழகி அச்சகம். பலர் அங்கு பத்திரிக்கை அடிப்பதற்கும் நிறுவன விளம்பர நோட்டிசுகள் அடிப்பதற்கும் வந்து போய்க் கொண்டிருந்தனர். ஒரு பெண் கணினியில் திருமணப் பத்திரிக்கை ஒன்றை தட்டச்சுச் செய்து கொண்டிருந்தாள்.
அப்போது உரத்த குரல் “சுமங்கலி, சுமங்கலி” என்று மெசின்களின் சப்தத்தைத் தாண்டி கேட்டது. அத்தனைக் கூச்சலிலும் ஏதோ நினைவோடு எழுத்துக்களை அழுத்திக்கொண்டு டைப் செய்து கொண்டிருந்தவளை, அருகில் இருந்த சக ஊழியரான பெண் கைகளால் உசுப்பி விட்டு, “சுமி! சார் கூப்பிடறாரு” என்று சொன்னதும் எழுந்து ஓடிய சுமங்கலி, சுதாரித்தபடி சற்று பதட்டத்துடன் வந்து ”சார்...” என, அவர் முன் நிற்க, வேலவன் சுருக்கிய புருவங்களோடு, “ஏம்மா கூப்பிட்ட உடனே வந்து நிக்கமாட்டியா? என்ன அவ்ளோ அலட்சியமா வேல பாக்கரிங்கன்னு தெரிய மாட்டேங்குது. மொதலாளிக்கே இந்த நெலமைனா, கஸ்டமருக்கு எப்படி இருக்கும்?” குத்தலாகப் பேச, “இல்ல சார்... ஒரு பத்திரிக்கை அடிச்சுகிட்டு இருந்தேன், சத்தத்துல கேட்கல...” என, வார்த்தைகளை மென்று விழுங்க, “எதுத்துப் பேசாதே!” என்று கோபத்தோடு கத்தியவர், “போ... இந்த இன்விடேஸனையும் அளவு வாங்கிட்டு, முடிச்சு வச்சிடு, சாயங்காலம் ப்ரூப் பாக்க அந்தக் கஸ்டமர் வருவாங்க” என்று கையில் இருந்த விபரங்களை அவளிடம் கொடுத்துவிட்டு, மெசின் பக்கமாக நகர்ந்தார்.
சக ஊழியரான பெண் சுதா, சுமங்கலிக்கு நல்ல சினேகிதி. இருவரும் ஒன்றாக வேலை செய்வதால் ஏற்பட்ட நட்பு இது. சுமங்கலி வேலைக்குப் புதிதாகச் சேர்ந்த பொழுது அவளுக்கு எல்லா வேலைகளையும் சுதாதான் கற்றுக்கொடுத்தாள். இன்று சுதாவுக்கே சொல்லிக்கொடுக்கும் அளவுக்குச் சுமி முன்னேறிவிட்டாள்.
சுமங்கலி கம்ப்யூட்டர் அருகில் தன்னிடம் இருந்த பேப்பரை வைத்துவிட்டு உட்கார, “என்ன சுமி சார் கிட்ட பெர்மிசன் வாங்கிட்டியா?” எனச் சிரித்தபடியே கேட்க, “இல்ல சுதா, சார் ரொம்பக் கோபமா இருக்கார் அப்புறமாக் கேக்கலாம்னு...” என்று இழுவை பாட, “சீக்கிரம் கேட்டுடுடி... இல்லாட்டி அதுக்கும் வேற கோபப்படுவார். சாயங்காலம் என்னைப் பொண்ணு பாக்க வராங்கன்னு சொல்லு, ஒண்ணும் சொல்ல மாட்டார்.” அக்கறையுடன் சுதா சொல்ல, “கேக்குறேன் டி, வேற என்ன பண்ண?” என்று சொல்லும் போதே அவள் முகத்தில் வெறுப்புடன் கூடியக் கவலைத் தென்பட்டது.
முதலாளி வேலவனின் குரலைக் கேட்டாலே எல்லோருக்கும் வேலையில் மொத்தக் கவனமும் திரும்பிவிடும். சுதா ஒருமுறை செய்த தவறுக்கு அவரிடம் திட்டு வாங்கியது நினைவிற்கு வந்தது. ஒரு முறை அவர் சுதாவைக் கூப்பிட்டு, “நம் ப்ரஷ்ஷின் பேர் என்ன?” என்று சிரித்துக்கொண்டே கேட்க, “அழகி அச்சகம் சார்” என அவளும் சிரித்துக்கொண்டே பதிலளிக்க, “அத இந்தப் பத்திரிகையிலும் போட்டா எவ்வளவு அழகா இருக்கும்?” என்று சொல்லும்போதே அவர் முகம் மாறியது.
“எத்தன முறை உனக்குச் சொல்றது எந்த வேல செஞ்சாலும் அதுல நம்ம ப்ரெஷ் பேர போடனும்னு” என்று ஆரம்பித்தவர், கோபம் தீர சுதாவைத் திட்டித் தீர்த்து விட்டார். அன்று முதல் சுதா அந்தத் தவறைச் செய்வதில்லை என்று சுமங்கலியிடம் சொல்லிக் கொண்டிருந்தாள்.
மதிய உணவு நேரம் ஆனதும் வேலவன் வீட்டுக்குக் கிளம்ப, சுமங்கலி அந்த நேரம் அவரிடம் சென்று பெர்மிசன் கேட்க, செய்ய வேண்டிய முக்கிய வேலையைச் சுதாவிடம் கொடுத்துவிட்டுச் செல்லும்படி உத்தரவிட்டார்.
சுமங்கலி மதிய உணவை முடித்துவிட்டு, தோழியிடம் முதலாளி சொன்னதைச் சொல்ல, “நான் பாத்துக்கறேன்டி..” என்ற சுதா கிண்டலாக, “பொண்ணு பாக்க வரும்போதும் மூஞ்சிய இப்படியே வச்சுக்காதே!” என்றாள் சேர்த்து.
சுமிக்கு அவள் தாயும் தந்தையும் நினைவுக்கு வந்தனர். அவளுடைய தந்தை உடல் நலக்குறைவால் காலமானார், அந்தத் துக்கத்திலேயே அவரது தாயும் இறந்து போனார். சுமி தற்போது தனது அக்கா வீட்டில் வசித்து வருகிறாள். அக்கா வீட்டில் இருக்கப் பிடிக்காமல் தான் திருமணதிற்குச் சம்மதித்ததாகத் தோழியிடம் கூறினாள்.
“ஏய்... உன் வயசுதான்டி எனக்கும் ஆகுது, ரெண்டு புள்ளைங்க ஆச்சு”
“வயசு ஆகிடுச்சுத் தான்... என்ன செய்ய? எனக்கும் வெக்கமா இருக்கு. முப்பது வயசாச்சு, அப்பா அம்மா இருக்கும் போதே கல்யாணம் பண்ண முடியாம போச்சு”
“அவங்களையே நெனச்சுக்கிட்டு இருந்தா, எல்லாம் சரியாகிடுமா? உன்னைப்பத்தி, உன் லைஃபை பத்தி யோசி சுமி’ எனத் தோழியாகப் பேச, “நான் எங்கயாவது போய்த் தனியாக வாழ்ந்துடுவேன், ஆனா அக்கா வருத்தப்படுவாளே... அக்காவோட கட்டாயத்தில தான் சம்மதிச்சேன்”