கடந்த வியாழக்கிழமை (19-09-2019) அன்று தமிழக அரசின் தொல்லியல் துறை வெளியிட்ட கீழடி- 4 ஆய்வின் முடிவுகளானவை வெறும் தமிழ்-இந்திய வரலாற்றினை மட்டுமன்றி, தென்னாசிய வரலாற்றினையும் சேர்த்தே மாற்றி எழுதவேண்டிய ஒரு தேவையினை ஏற்படுத்தியுள்ளன.
இந்த ஆய்வு முடிவுகளில் சில ஏற்கனவே ஊடக மட்டங்களில் பேசப்பட்டு வந்த செய்திகள்தான் என்றபோதும், அவை அறிவியல் சான்றுகளுடன் அரசினால் அதிகாரபூர்வமாக வெளியிடப்பட்டது முதன்மையானதே.
ஏறக்குறைய 45 ஆண்டுகளிற்கு முன்னர் சிவகங்கை மாவட்டத்தில் ஒரு மாணவனால் கண்டெடுக்கப்பட்ட ஒரு தொல் பொருள் ஒரு ஆசிரியரின் (பாலசுப்பிரமணியம் ) கவனத்தினைப் பெற்றதிலிருந்து கீழடி ஆய்விற்கான விதை போடப்பட்டது.
பின்னர், நடுவண் அரசினால் 2014 ம் ஆண்டிலிருந்து மூன்று கட்ட ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன. அதில் முதலிரு கட்டங்கள் அமர்நாத் ராமகிருசுணனால் சிறப்பாகவே மேற்கொள்ளப்பட்டிருந்தன. அவ்வாய்வில் கண்டெடுக்கப்பட்ட பொருட்களின் காலக்கணிப்பினைச் செய்வதில் நடுவண் அரசானது வேண்டுமென்றே பல குழறுபடிகளைச் செய்தது. முதலில் கண்துடைப்பிற்காக வெறும் இரு பொருட்களை மட்டுமே ஆய்விற்கு அனுப்பியது. அதுவும் கீழ் மட்டங்களில் கிடைத்த பொருட்களை தெரிவு செய்யாமல் (எப்பொழுதும் தொல்லியல் மேடுகளில் கீழ் மட்டத்திலேயே மிகப் பழைய காலப் பொருட்கள் கிடைக்கும்), வேண்டுமென்றே இடை மட்டங்களில் தெரிவு செய்யப்பட்ட பொருட்களையே ஆய்விற்கு அனுப்பியது. அதன் பின்னரும் ஆய்வு முடிவுகளை வெளிப்படுத்தத் தயங்கியே வந்தது.
நாடாளுமன்றத்தில் நா.உ (MP ) கனிமொழி கேள்வி எழுப்பிய பின்னரே ஆய்வு முடிவினை வெளியிட்டது. அதில் அப்போதே கீழடித் தொல் பொருட்கள் பொ.மு 2ம் நூற்றாண்டைச் (BCE 2nd cent) சேர்ந்ததவை எனக் கண்டறியப்பட்டது. இதன் பின்னர் சிறப்பாகச் செயற்பட்ட அமர்நாத் ராமகிருசுணன் வேண்டுமென்றே இடமாற்றப்பட்டு, சிறீராம் என்பவரின் தலைமையில் 3 ம் கட்ட ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
இந்த `சிறீராம் ` என்பவர் தனது பெயரிற்கேற்ப `பொலோ ஜெய் ஸ்ரீராம்` எனக் கூச்சலிடும் குழுவின் தாளத்திற்கேற்பவே ஆடினார். உண்மையில் முதலிரு கட்ட ஆய்வுகள் சுட்டிய பாதையில் தொடராமல், அதற்கு எதிர்த்திசையிலேயே வெறும் எட்டு குழிகளை மட்டுமே தோண்டி, அங்கு குறிப்பிடும்படி எதுவுமேயில்லை எனக்கூறி ஆய்வினை நிறுத்திக்கொண்டார்.
நடுவண் தொல்லியல் துறையானது இதே காலப்பகுதியில் குசராத், உத்திரப்பிரதேசப் பகுதிகளில் மேற்கொண்ட தொல்லியல் ஆய்வுகளிற்குக் கொடுத்த முதன்மையினை கீழடிக்கு இறுதிவரைக் கொடுக்கவேயில்லை.
இந்த நிலையிலேயே தமிழ்நாடு அரசின் தொல்லியல்துறை நான்காம் கட்ட ஆய்வினை மேற்கொண்டிருந்தது. இப்போது ஐந்தாம் கட்ட ஆய்வும் முடிவுறும் வேளையிலுள்ளபோதும், வியாழன் அன்று வெளியானது நான்காம் கட்ட ஆய்வின் அறிவியல் சான்றுகளுடனான அதிகாரபூர்வ முடிவுகளேயாகும். இதுவே பல அதிர்வுகளை ஏற்படுத்தியுள்ளது.
ஆய்வில்_தெரியவந்தவை:
நான்காம் கட்ட ஆய்வு முடிவுகளை தமிழக அரசின் தொல்லியல் துறையானது `கீழடி -தமிழ்ப் பண்பாட்டின் வேர்களைத் தேடி` என்ற தலைப்பிலான ஒரு நூலாகவே வெளியிட்டுள்ளது. இவ்வாய்வில் கீழடியில் கண்டெடுக்கப்பட்ட தொல் பொருட்களை அமெரிக்க ஃப்ளோரிடாவில் உள்ள பீட்டா அனலிடிகல் ஆய்வுகூடத்திற்கு அனுப்பி AMS (Accelerated mass spectometry) முறையில் மேற்கொள்ளப்பட்ட கரிமச் சோதனை முடிவுகளை அடிப்படையாகக் கொண்டு அவற்றின் காலம் பொ.மு 6ம் நூற்றாண்டு (BCE 6th cent) எனக் கண்டுள்ளார்கள். மேலும் ஆய்வு முடிவானது பின்வரும் வழிகளில் முதன்மை பெறுகின்றது.
- சங்ககால_பின்நோக்கிய_காலவரையறை - சங்க காலமானது பொ.மு ஆறாம் நூற்றாண்டுவரைப் (BCE 6th cent) பின்நோக்கிச் சென்றுள்ளது. எனவே இனிச் சங்ககாலம் என்பது பொ.மு 600 (BCE 600) இலிருந்தே தொடங்கும்.
- தமிழர்களின்_நகர_நாகரிக_காலம் - இதுவும் முதலில் கூறிய காலத்திற்கே (BCE 600) செல்லும். மேலும் இக் காலப்பகுதியிலேயே சிந்துவெளி நாகரிகத்திலும் இரண்டாம் நகர உருவாக்கப்பட்டிருந்த காலம் என்பதும் குறிப்பிடத்தக்கது.
- தமிழி_எழுத்தின்_காலமும் BCE 6ம் நூற்றாண்டே - இங்கு கிடைத்த பானை ஓடுகளிலுள்ள எழுத்துகளது காலமும் பொ.மு 6ம் நூற்றாண்டு (BCE 600) என சான்றுப்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் இந்தியாவில் முதலில் எழுத்துகளைப் பயன்படுத்தியோர் தமிழர்களே என்பதும், அசோகரின் பிராமி எழுத்துகளை விட தமிழி 300 ஆண்டுகள் பழமையானவை என்பதும் சான்றுபடுத்தப்பட்டுவிட்டது.
- எழுத்துகளின்_பரவலான_பயன்பாடு - எழுத்துகள் சிலரால் மட்டுமல்லாமல் பரவலாகப் பயன்படுத்தப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது. கீழடி அகழாய்வில் 1001 ஓடுகள் இத்தகைய எழுத்து வரி வடிவங்களுடன் கிடைத்துள்ளன. தமிழ்நாடு அரசு மேற்கொண்ட அகழ்வாய்வில் மட்டுமே 56 தமிழி எழுத்துகளைக் கொண்ட பானையோடுகள் கிடைத்துள்ளன. இந்த எழுத்துகள் பெரும்பாலும் பானைகளின் கழுத்துப் பகுதியில் எழுதப்பட்டுள்ளன. பானையில் கிடைக்கும் எழுத்துகள் பெரும்பாலும் பானை செய்வோரால் சுடுவதற்கு முன்பாக ஈர நிலையில் எழுதப்படும். கீழடியில் பானைகள் சுடப்பட்டு, உலர்ந்த பிறகு எழுதப்பட்ட எழுத்துகள் கிடைத்துள்ளன. அவற்றின் எழுத்தமைதி (கையெழுத்து) ஒரே மாதிரியாக இல்லை. ஆகவே வெவ்வேறு ஆட்கள் இவற்றை எழுதியுள்ளமை தெரியவந்துள்ளது. இதனால் எழுத்துகளின் பரவலான பயன்பாடு தெரியவந்துள்ளது.
- சிந்துவெளி_நாகரிக எழுத்திற்கும்-தமிழிற்குமிடையேயான தொடர்பு - பொதுவாக மனிதனின் படிமலர்ச்சி பற்றிப் பேசும்போது `விடுபட்ட இணைப்பு` {Missing link in human evolution } ஒன்று பற்றிப் பேசப்படும். அதுபோன்றே, எழுத்துகளின் படிமலர்ச்சியிலும் சிந்துவெளி வரி வடிவத்திற்கும், தமிழிற்குமிடையே ஒரு விடுபட்ட தொடர்பு இருப்பதாகக் கருதுவார்கள். அதற்கான வெளிச்சம் இப்போது கிடைத்துள்ளது.
- வேளாண்மை - திமிலுள்ள காளை, பசு, எருமை, வெள்ளாடு போன்றவற்றின் எலும்புகள் மக்கள் வாழ்விடங்களில் கிடைத்ததன் மூலம் அவ் விலங்குகளை வேளாண்மைக்குப் பயன்படுத்தியிருப்பதனை அறியமுடிகின்றது. இதன்மூலம் சங்ககால சமூகம் வேளாண்மையினை முதன்மைத் தொழிலாகவும், கால்நடை வளர்ப்பினையும் ஒரு துணைத் தொழிலாகவும் கொண்டிருக்கலாம் எனக் கருதப்படுகின்றது. மேலும் தானியங்களைச் சேமித்து வைக்கப் பயன்படுத்தப்படும் பானைகளும் கிடைத்துள்ளன.
- கைத்தொழில் - முதன்மையான கைத்தொழிலாகப் பானை வனைவு காணப்படுகின்றது. பானைகளைப் பொருத்தவரையில் தண்ணீர் சேமித்து வைக்கவும், சமையலுக்கும் பயன்படுத்தப்பட்டுள்ளன. இந்தப் பானையோடுகள் இத்தாலியிலுள்ள பைசா பல்கலைக்கழகத்திற்கு (Universita Di Pisa) அனுப்பிச் சோதனைசெய்யப்பட்டதில், உள்ளூர் மண் பயன்படுத்தப்பட்டுள்ளமையும், தனித்த பானை வனைவு நுட்பம் பயன்படுத்தப்பட்டமையும் தெரியவந்துள்ளது. மேலும், கருப்பு சிவப்பு நிற பானையோடுகளிலிருந்து பானை செய்வதற்கு இரும்புத்தாதுப் பொருளான கேமடைட் – Hematite (சிவப்பு நிறக் காரணம்), கரியினையும் (கருப்பு நிறக் காரணம்) பயன்படுத்தி 1100 பாகை செ வெப்பநிலையில் சுட்டுப் பானைகளை உருவாக்கியுள்ளார்கள். மேலும், பைசா பல்கலைக்கழக அறிக்கையில் 4 நூற்றாண்டுகளாக (BCE6th cent - BCE 2nd cent) இத்தகைய நுட்பத்தினைப் பயன்படுத்தியுள்ளமையும் தெரியவந்துள்ளது.