வணக்கம் அன்பு நெஞ்சங்களே!
“ஊர்கோலம் போவோமா” பகுதியில் இன்று நான் உங்களை அழைத்துச் செல்லப் போவது பிரான்ஸ் நாட்டின் சரித்திரப் பிரசித்தி பெற்றதும், அதிமுக்கியதுமான கோட்டை விஸில்க்கு.
Auvergne-Rhône-Alpes மாகாணத்தில், Isère மாவட்டத்தில், Vizille நகரத்தில், தென்கிழக்கு Grenobleக்கு 16km தூரத்தில், நெப்போலியன் வீதியில், நூறு ஹெக்டேயர்கள் பரப்பளவில் பரந்து விரிந்துள்ள பூங்கா ஒன்றில் கம்பீரமாய் உயர்ந்து நிற்கிறது இந்தக் கோட்டை.
(1815 இல், பேரரசன் நெப்போலியன் Elba தீவிலிருந்து பிரான்ஸ்க்குத் திரும்பிய போது Cannes இற்கு அருகில் வந்திறங்கினான். Rhône Valley ஆதிக்கத்தினரை தவிர்த்துச் செல்வதற்காக 2000 - 3000 படை வீரர்களோடு, Grenoble ஐ நோக்கி அவன் பயணம் செய்த பாதையே இந்த நெப்போலியன் வீதி. வீதி நெடுங்கிலும் இருக்கும் விஸில் உட்பட்ட அழகிய பிரதேசங்களின் இயற்கைக் காட்சிகள் அவன் மனதை ஆசுவாசப்படுத்தின என்றும் சொல்லப்படுவதுண்டு.)
François de Bonne (1543 - 1626) எனும் பிரபு 1594 ஆம் ஆண்டு விஸில் நிலத்தைக் கைப்பற்றினார். இவர் ஒரு Duke of Lesdiguires, Governor of Dauphine, Comrade in arms of Henry IV and last Constable of France ஆவார். 17ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்தில், சிறு நீர் வீழ்ச்சி உள்ளடங்கலாக, 800m நீளமான பெரிய வாய்க்காலோடு பெரியொரு மலர்த்தோட்டத்தோடும் சேர்த்து இந்தக்கோட்டையைக் கட்டியெழுப்பினார்.
பிரபுக்களின் அதிகாரத்தினை வெளிப்படுத்தும் இடமாக ஆரம்பத்திலிருந்த இந்தக் கோட்டை, ஜூலை 21,1788 அன்று Dauphine உடைய மூன்று ஆணைகளின் கூட்டம் jeu de paume அறையில் State Genral இன் ஆணையைப் பெறுவதற்காக நடாத்தப்பட்ட பின்னர், ஒரு புரட்சியின் ஆரம்பச்சின்னமாக (cradle of the Revolution) விளங்கியது.
பிரபுக்களின் வாசஸ்தலம் (17 ஆம் நூற்றாண்டு), Perier குடும்பம் (1782 - 1895), நாட்டின் ஜனாதிபதிகள் (1925 - 1960), கைகளில் இருந்து வந்த இந்தக் கோட்டை, 1983 ஆம் ஆண்டு பிரெஞ்சுப் புரட்சி அருங்காட்சியகமாக மாற்றியமைக்கப்பட்டுள்ளது. இங்கே 1989 ஆம் ஆண்டு, பிரெஞ்சுப் புரட்சியின் இரு நூற்றாண்டு (1789 - 1989) நிறைவைக் கொண்டாடினார்கள்.
(1789 ஆம் ஆண்டு நடந்த பிரெஞ்சுப் புரட்சியே, பிரான்ஸ் நாட்டை முடியாட்சியிலிருந்து குடியரசு நாடாக மாற்றியது என்பது குறிப்பிடத்தக்கது.)
பிரெஞ்சுப் புரட்சி காலத்தின் ஆண், பெண் மனனிலைகளையும், சமூக ஏற்றத் தாழ்வுகளையும், அரசியல் ஆட்சியமைப்புகளையும் இங்கிருக்கும் சித்திரங்களும் சிற்பங்களும் விளக்குகின்றன. பிரெஞ்சு மாகாணங்களினதும், அயலிலுள்ள ஐரோப்பிய நாடுகளின் கலைகள் மற்றும் சரித்திரங்களையும் நினைவுகூர வைக்கிறது. Barnave, Bailly, Mirabeau, and Robeespierre போன்ற பிரசித்திபெற்றவர்களின் உண்மைத் தன்மையான தோற்றங்களயும் அறிய வைக்கிறது இந்த அருங்காட்சியகம்.
அந்தக் காலகட்டத்து தேசிய வீரர்களின் வாள் போன்ற ஆயுதங்கள், போராட்டத்தின் போது பயன்படுத்திய கற்கள் போன்ற, மிக முக்கியம் வாய்ந்த தனித்தன்மையான பொருட்களும் இங்கே காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.
அருங்காட்சியகத்தை பார்வையிட்டு விட்டு வெளியே வந்தால் உங்களால் அந்த பூங்காவை விட்டு நகர முடியாது. அத்தகைய இயற்கை எழில் கொஞ்சும் பிரதேசம் அது.
அந்தச் சிறு நீர்வீழ்ச்சியும், அந்தக் கால்வாயில் நீந்தும் அன்னங்களும், ஆட்டி ஆட்டி நடக்கும் தாரா, வாத்துக்களும் பார்க்க பார்க்க மனதைக் கொள்ளை கொள்ளும்.
அதை விட அழகுறப் பராமரிக்கப்படும் அந்த மலர்த்தோட்டம் பற்றி சொல்லவே தேவையில்லை.
அளவாக வெட்டி விடப்பட்டிருக்கும் மரங்கள், செடி, கொடிகள் கூட எங்களை அந்த இடத்தை விட்டு அசைய விடாது.
பரந்து விரிந்த புற்தரைகள் ஓடி விளையாடவும், ஓங்கி உயர்ந்து நிழல் பரப்பும் மரங்கள் ஓய்வெடுக்க ஏதுவாகவும் காணப்படுகின்றன.
பிரான்சுக்கு சுற்றுலா செல்பவர்கள் தவறவிடாது சுற்றிப் பார்க்க வேண்டிய இடத்தில் இதுவும் ஒன்று.
அடுத்த தடவை வேறொரு இடத்துக்கு உங்களை அழைத்துச் செல்லும் வரை உங்களிடம் இருந்து விடைபெற்றுக் கொள்கிறேன்.
Attachments
-
89.8 KB Views: 0
Last edited by a moderator: