இந்த விளையாட்டு ஜப்பான் நாட்டில் ஆரம்பித்து, பின்னாட்களில், ஐரோப்பா, அமெரிக்கா என்று பரவி, இன்று உலகளவிலும் புகழ்பெற்ற, எண்களைக்கொண்டு விளையாடும் புதிர் விளையாட்டாக மாறியுள்ளது.
இன்ன வயதினர்தான் என்றில்லாமல் இலக்கங்களை இனங்காணத் தெரிந்த எல்லா வயதினரும் விளையாடக்கூடிய விளையாட்டாகும். இதற்கு கணித அறிவு தேவையில்லை. மேலே குறிப்பிட்டது போன்று இலக்கங்களை இனங்காணத் தெரிந்தாலே போதுமானதாகும்.
மாணவர்களுக்கு, மனதை ஒருமைப்படுத்தவும், பொறுமையாய் அமர்ந்திருந்து ஒன்றைப் பற்றியே சிந்திக்கவும் பழக்கப்படுத்துவதுடன், விடாமுயற்சியையும் வளர்ந்துவிடும் ஒரு விளையாட்டாக இது கருதப்படுகிறது.
குழந்தைகளுக்கு, இதன் புதிரை விடுவித்ததும் மனதில் ஒரு சந்தோசம், உற்சாகத்தைக் கொடுக்கிறது. அதுவே, இன்னுமின்னும் அவர்களை ஊக்குவிக்கிறது. பெண்களுக்கு, வயதானவர்களுக்கு இது ஒரு சவாலாகவும், வேடிக்கையான விளையாட்டாகவும் அமைகிறது. ஆக மொத்தத்தில் அனைத்துத் தரப்பினரையும் கவரும் இவ்விளையாட்டு, மூளைக்கு மிகுந்த வேலையைக் கொடுக்கிறது என்பது மிகையல்ல.
இந்த விளையாட்டை எப்படி விளையாடுவது அல்லது அதன் விதிமுறைகள் பற்றிப் பார்க்கலாம்.
ஒரு கட்டத்தில், 9 சிறு கட்டங்கள் இருக்கும். அதுபோல 9 கட்டங்கள் சேர்ந்து ஒரு பெரிய கட்டமாக இருக்கும். 9×9 (அதாவது, மொத்தம் 81 கட்டங்கள் இருக்கும்) கட்டங்கள் இருக்கும். இதில் ஒவ்வொரு கட்டங்களிலும் ஒன்றிலிருந்து ஒன்பது வரை எண்களை நிரப்ப வேண்டும். ஒரு முறை வந்த எண் மறுமுறை வரக்கூடாது. அதைப்போலவே மொத்த கட்டங்களிலும் எல்லா எண்களும் வர வேண்டும்.
எப்போது பார்த்தாலும் வேலை, நேரமின்மை, அமைதியின்மை என்று அல்லாடும் நாம் கொஞ்சம் மனதை ரிலாக்ஸ் செய்ய இந்த விளையாட்டினை விளையாடிப் பார்க்கலாம். நீங்களும் ஒரு முறை விளையாடிப்பாருங்கள்!
இதன் புதிரைத் தீர்ப்பதன் மூலம், தர்க்க ரீதியான அறிவு பல மடங்கு பெருகுகிறது என்பது அறிவியல் மூலம் நிரூபிக்கப்பட்டிருக்கிறது.
விளையாடும் முறை
1. ஒவ்வொறு அறையிலும் 1 முதல் 9 வரை உள்ள எண்களை ஒரு முறை மட்டுமே எழுத வேண்டும்.
2.ஒவ்வொரு கிடைமட்ட(Row) வரிசையிலும் 1 முதல் 9 வரையுள்ள எண்கள் ஒரு முறை மட்டுமே வர வேண்டும்
3. ஒவ்வொரு நெடு(column) வரிசையிலும் 1 முதல் 9 வரையுள்ள எண்கள் ஒரு முறை மட்டுமே வர வேண்டும்
சுடோக்கு புதிரை தீர்க்கப்பழகுங்கள்; வாழ்கையில், தீர்க்கமான முடிவை எடுக்கும் தர்க்க அறிவைப் பெற்று உயருங்கள் .