எப்போதும் இணைந்து இயங்கும் கைவிரல்கள் ஐந்திற்கும் இடையில் ஒரு நாள் ஒரு போட்டி ஏற்பட்டது. தங்களில் யார் எல்லோரையும் விட உயர்ந்தவர் எனும் போட்டி...
"உங்கள் எல்லோரையும் விட நானே பெரியவன். நான் இல்லாமல் உங்கள் எவராலும் தனித்து இயங்க முடியாது. சாப்பிட, எழுத, என்று எந்த வேலை செய்வதற்கும் என்னைத் தவிர்த்து, உங்களால் எதுவுமே செய்ய முடி யாது." என்று கட்டை விரல் இறுமாப்புடன் சொல்லியது.
"நாங்கள் ஐந்து பேர் இருந்தாலும், எந்தப் பொருளையும் அது, இது, உது என்று சுட்டிக்காட்ட மனிதர்கள் என்னைத் தான் பயன் படுத்துகிறார்கள். எனவே, உங்கள் எல்லோரை யும் விட உயர்ந்தவன் நான் தான்" என்று சொல்லியது சுட்டுவிரல்.
"நீங்கள் என்ன தான் சொன்னாலும், உங்கள் எல்லோரையும் விட உயரமானவன் நான் தானே. எனவே, உங்கள் எல்லோரையும் விட நானே உயர்ந்தவன்" என்று சொல்லிப் பெருமை ப்பட்டுக் கொண்டது நடுவிரல்.
"நீங்கள் மூவரும் உங்களைப் பற்றி, நீங்களே பெருமை பேசிக்கொண்டு இருக்கிறீர்கள். ஆனா ல், மனிதர்கள் என்னைத்தானே விலையுயர்ந்த மோதிரங்களைப் போட்டு அழகுபடுத்து கிறார்கள். எனக்கு மோதிரவிரல் என்று பெயரும் வைத்துள்ளார்கள்" என்று கர்வத்துடன சொல்லியது.
சின்ன விரல் இவர்களது வாதங்களைக் கேட்டுக்கொண்டு அமைதியாக இருந்தது." உனது சிறப்பு என்ன? " என்று மற்றைய விரல்கள் சின்ன விரலிடம் கேட்டன. அதனால் எந்தப் பதிலும் சொல்ல முடியவில்லை." உனக்கென்று ஒரு சிறப்பும் இல்லை. உன்னால் யாருக்கும் பலனும் இல்லை. நீ எங்களோடு இருப்பதால் எங்கள் மதிப்புத் தான் குறையும்" என்று மற்றைய விரல்கள் கேலி செய்தன. சின்ன விரலுக்கு அழுகை வந்தது. ஆண்டவன், தன்னை யாருக்கும் பெறுமதி இல்லாதவனாக ஏன் படைத்தான் என்று வருந்தியது. தன் கவலையை ஆண்டவனிடம் சொல்லி அழுதது.
"உங்கள் ஐவரிலும் நீ தான் என் செல்லக் குழந்தை. அதனால் தான் உன்னை நான் சிறியவனாகப் படைத்திருக்கிறேன். ஆனாலும், மனிதர்கள் என்னைக் கைகூப்பி வழிபடும் போது எப்போதும் எனக்கு அருகில் நிற்கும் வாய்ப்பை வழங்கியிருக்கிறேன்" என்று சின்ன விரலுக்கு பதிலளித்தான் ஆண்டவன்.சின்ன விரல் அளவற்ற மகிழ்ச்சி அடைந்தது. தன் பிறப்பின் பயனை எண்ணித் தெளிந்தது.
இப்படித்தான் இந்த உலகையும் ஆண்டவன் படைத்துள்ளான். ஒவ்வொரு படைப்பிற்கும் ஒவ்வொரு அர்த்தம்; ஒவ்வொரு தேவை.
சிங்கங்களும் சிறுத்தைகளும் கம்பீரமாக உலாவுகின்ற காட்டில் தான் சிறு முயல்கள் விளையாடி மகிழ்கின்றன...அவற்றிற்கு உணவா கும் வரை.
மனிதர்களாகிய எங்களையும் கடவுள் இப்படித்தான்படைத்துள்ளார். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு இயல்பு.. ஒவ்வொரு சிறப்பு.. ஒவ்வொரு தேவை.. ஒவ்வொரு தனித்துவம்.. ஒவ்வொரு திறமை...
ஐந்து விரல்களும் ஒவ்வொரு விதமாக இருக்கும் போது தான் கை முழுமையடைகிறது. அது போல் தான் மனிதர்களும்... ஒருவரைப் போல இன்னொருவர் இருக்க முடியாது. இது உலக நியதி! இயற்கை விதி!
என்னை ஆண்டவன் ஏன் படைத்தான் என்றோ, இப்படி ஏன் படைத்தான் என்றோ, அவரைப் போல இவர் ஏன் இல்லை என்றோ, இவரைப் போல அவர் ஏன் இல்லை என்றோ யாரும் வருந்தத் தேவையில்லை... ஒவ்வொருவரும் தனித்தனிப் படைப்பு.
-முகிலன்