அலட்சியம் அவதானிப்பின்மை போன்ற காரணிகளால் நம்மை அறியாமலேயே பல தவறுகளைச் செய்துவிட்டுப் போகிறோம்.
அப்படித்தான் இங்கும். ஒரு கடையில், ஆட்கள் வந்து போவதால் கடைக்குள் மண் வந்துகொண்டே இருக்கிறது. அங்கு பணிபுரியும் அல்லது அந்தக் கடைச் சொந்தக்காரிக்கு மண்ணைக் கூட்டிக் கூட்டித் தள்ளியேப் பொறுமை போயிருக்க வேண்டும். எல்லோரும் மனிதர்கள் தானே? உள்ளுக்குள் வரும்போது கால்களைத் தட்டிவிட்டு வரவேண்டும் என்று சிந்திக்க வேண்டாமா? இதுவே அவர்களின் வீடாக இருந்தாலும் கால்களைத் தட்டாமல் செருப்பைக் கழற்றாமல் நுழைவார்களா என்ன?
இதை ஒவ்வொருவரிடமும் கேட்டுச் சண்டையா பிடிக்க முடியும்? எல்லோருக்கும் காட்சிப் பொருளாவது ஒன்று, வாடிக்கையாளரை இழந்து நட்டப்படுவது இரண்டு என்று எந்தப் பக்கத்திலும் அவருக்கே இழப்பாகிவிடும்.
என்ன செய்யலாம்?
சிந்தனையில் உருவாகிறது ஒரு யுக்தி.
தன் செருப்பினைக் கொண்டுவந்து கதவுக்கு வெளியே வைத்து விடுகிறார். அப்போது வருகிறவர்கள் உள்ளே நுழைய முதல் ஒருகணம் தயங்கிப் பின் தங்கள் செருப்புக்களையும் கழற்றிவிட்டு நுழைகிறார்கள். வெற்றி! அருமையான யுக்தி அல்லவா!
என்ன, தங்கள் செருப்போடு அவரின் செருப்பையும் சேர்த்துக் கொண்டு போகாத வரைக்கும் மகிழ்ச்சிதான்!
மிக எளிமையான கருவாக்கம். அதுவே சிறந்த படைப்பாக மாறி நம் மனதையும் தொடுகிறது!
தொடரி குறுந்திரையை யோசித்துப் பார்த்தால் சின்ன விசயம் தான். ஆனால் சுய சிந்தனையே இல்லாமல் நாம் செய்துவிட்டுப் போகிற தவறினை நெற்றியில் போன்றுரைக்கும் குறுந்திரை.
சாம்சங் கலக்சி எஸ் மூன்றினால் இயக்கப்பட்ட மிகச் சிறப்பான படைப்பு.
தரமான உற்பத்திகளுக்கு, இல்லாத வசதிகள் தடையாயிருக்கப் போவதில்லை என்பதைச் சொல்லும் குறுந்திரை.
ஒரு தும்புத்தடி, ஒரு தானியங்கிக் கதவு மற்றும் செருப்பணிந்த மனிதக் கால்களும், ஒரு சோடிச் செருப்புமே பிரதான பாத்திரங்கள்.
நீங்களும் பார்த்து மகிழ: