• நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.
    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

நினைவெல்லாம் நீயாகிட வந்தேன் - 11

நிதனிபிரபு

Administrator
Staff member
அத்தியாயம் 11

அன்று மதியம்போல், அசோக்கின் மாமி வீட்டில் யாமினி பிள்ளைகளை விட்டுவிட்டு அசோக்குடன் சென்று வீட்டை விக்ரம் பார்த்து வந்தான். மூன்றுமாடிக் கட்டிடத்தில் இரண்டாவது மாடியில் ஒரு அறை, ஹால், கிச்சன், பாத்ரூம் என்று கச்சிதமான வீடு. சின்னதாய் பால்கனி வேறு!

அங்கிருந்த பெரும்பாலானோர் இவளைப் போலவே, கணவன் வெளிநாட்டில் இருக்க அங்கே தங்கி இருந்தார்கள். பக்கத்திலும் குடிமனைகள். பாதுகாப்பான இடம். மிகத் திருப்தியாக இருந்தது. சற்றுத் தூரத்தில் கடற்கரை வேறு! சுற்று வட்டாரத்தைச் சுற்றி பார்த்தார்கள். கடைகள், சின்னதாகப் பார்க், கோவில் என்று எல்லாமே வசதியாகவும் இருந்தன.

வீட்டுக்காரரிடம் திறப்பை வாங்கி, கொண்டுவந்த பொருட்களை அந்த வீட்டில் இறக்கிவிட்டு, அன்றிரவு பிளைட் என்பதால் அசோக்கையும் டெனிஷையும் வழியனுப்ப எல்லோருமாகப் புறப்பட்டுச் சென்றனர்.

விமானநிலையத்தில், “பாப்ஸ் பாய்!” என்று எப்படி அவனை அணைத்து விடுவித்தானோ, அப்படியே, “யாம்ஸ் பாய்!” என்று அவளையும் அணைத்து விடைபெற்றான் டெனிஷ்.
சந்தனாவிடம் மட்டும், “ஹேய் பார்பி! கெதியா அங்க வா. உனக்கு அண்ணா ஒரு ரூம் ‘பார்பி ரூம்’ மாதிரியே ரெடி பண்ணி வைக்கிறன்.” என்று பெரிய மனிதனாகச் சொல்லிச் சென்றான்.

அவளைத் தங்கையாக ஏற்றவன் என்னை அன்னையாக ஏற்க வேண்டும் என்று மனதார வேண்டிக்கொண்டாள் யாமினி.
அசோக்கும் நண்பனை அணைத்து விடைபெற்று விட்டு, “சும்மா சும்மா எல்லாத்துக்கும் அதட்டுவான், நீ பயப்படாத. ஏதாவது சேட்டை விட்டான் எண்டா என்னட்ட சொல்லு. இவன ஒரு கை நான் பாக்கிறன்.” என்று பெரிதாக யாமினியிடம் அளந்தான்.

“நீ பாக்கிற நேரம் பார். இப்ப போடா! ப்ளைட் அங்க எடுக்கப் போறான்.” என்று அவனைப் பிடித்துத் தள்ளிவிட்டான் விக்ரம்.
அவர்கள் புறப்பட்டதும் இரவு உணவையும் கடையில் முடித்துக்கொண்டு வீட்டுக்குச் சென்றனர். யாமினிக்குள் ஒருவிதத் தடுமாற்றம்!

திருமணம் ஆனதிலிருந்து எல்லோருடனும் கூட இருந்துவிட்டு, இப்போது அவனும் அவளுமாக மட்டும் என்கையில்… மகள் கூடவே இருக்கிறாள்தான் என்றாலும் ஒருவிதமாகப் படபடப்பாக உணர்ந்தாள்.

அப்படி எதுவும் விக்ரமுக்கு இல்லை போலும். உடை மாற்றிக் கொண்டவன் உறக்கத்துக்கு அழுத மகளை, “நான் பாக்கிறன்.” என்று வாங்கிக்கொண்டு அறைக்குள் சென்றான்.
அதன் பிறகுதான் வீட்டை இன்னுமே நன்றாகச் சுற்றிப் பார்த்தாள் யாமினி.

“என்னென்ன வாங்கோணும் எண்டு லிஸ்ட் போட்டுவை, நாளைக்குப் போகலாம்.” என்று விக்ரம் சொல்லி இருந்தான்.
எனவே ஆறுமாதத்துக்குத் தேவையானதாக என்ன வாங்கலாம், அதை எங்கே வைக்கலாம் என்று வீட்டை ஆராய்ந்தாள். ஓரளவுக்குத் தனக்குத் தெரிந்தது, தேவை என்று பட்டவைகளைக் குறித்துக்கொண்டாள்.

‘எல்லாம் சரியா எண்டு அவரையும் கேட்டுட்டு வாங்கோணும்.’ இதை மனதில் குறித்துக்கொண்டாள்.

யாழ்ப்பாணத்திலிருந்து வெளிக்கிட்டதிலிருந்து ஒழுங்கான நித்திரை இல்லாததாலோ என்னவோ, அவள் கண்களையும் உறக்கம் மெல்லத் தழுவமுயல, போனவர்கள் என்ன செய்கிறார்கள் என்று மெல்லச் சென்று எட்டிப் பார்த்தாள்.

பார்த்தவளால் அவர்களிடமிருந்து விழிகளை அகற்றவே முடியவில்லை. முதுகுக்கு ஒரு தலையணையைக் கொடுத்துக் கால்களை நீட்டி விக்ரம் சாய்ந்து இருக்க, அவன் மடியில் சந்தனா இரு பக்கமும் கால்களைப் போட்டு, அவனைத் தன் பிஞ்சுக் கரங்களால் கட்டி அணைத்தபடி மார்பில் தலை சாய்த்து உறங்கி இருந்தாள். இவனும் அவளை இரு கைகளாலும் அணைத்தபடி கண் மூடிச் சாய்ந்திருந்தான்.
இமைக்கவும் மறந்து பார்த்தாள். ஒரு ராணியைப் போன்று மகள் துயிலும் அழகில் மனம் தொலைந்துபோனது!

அவளைக் கட்டிலில் போடுவோமோ என்று யோசித்தாலும் அந்த அழகிய கவிதையைக் கலைக்க மனம் வராமல் அவள் வெளியே செல்லத் திரும்பவும்தான் கண்டாள், விக்ரம் கண்களைத் திறந்து அவளையே பார்த்திருப்பதை.

இதயம் படபடக்கத் தொடங்கியது. இப்போதெல்லாம் அடிக்கடி இதுதான் நடக்கிறது. அவன் கண்களைச் சந்தித்தாலே இவளால் இயல்பாக இருக்க முடிவதில்லை.

அவள் வெளியே செல்லத் திரும்பவும், நேரத்தைத் திரும்பிப் பார்த்துவிட்டு, “நீயும் வந்து படு!” என்றான் அவன்.

மெல்ல நடந்து சென்று மற்றப் பக்கமாக அமர்ந்தாள். உள்ளுக்குள் சின்னதாய் நடுக்கம். பார்வை மகளிடம் சென்றது. அதைக் கண்டு அவனும் சந்தனாவைப் பார்த்தான். ஆழ்ந்த உறக்கம் நிம்மதியாக அவளைத் தழுவி இருந்தது. மென்மையான புன்னகை ஒன்று இதழ்களில் ஜனிக்க, மகளின் முடிக் கற்றைகளைக் கோதிவிட்டான் விக்ரம்.

“ரெண்டு நாளா அலைஞ்சதில களைச்சே போய்ட்டா!” என்றான் தன் செல்லம்மாவிடமிருந்து விழிகளை அகற்றாமல்.

“ம்ம், நேற்றும் ஏனோ ஒழுங்கா படுக்கேல்ல. சிணுங்கிக்கொண்டே இருந்தவள்.”

மகளைப் பற்றிய பேச்சு இருவருக்கும் இயல்பாகவே வந்தது. நடுவில் அவள் தலையணையை வைக்க, அவளைக் கிடத்தினான் விக்ரம்.

போர்வையை எடுத்து அவள் போர்த்திவிட, அவன் தன் தலையணையை ஒழுங்காக எடுத்துப் போட்டுவிட்டுச் சரிந்தான். அதன்பிறகுதான் மூச்சே வந்தது அவளுக்கு.
அவனறியாமல் மூச்சை இழுத்துவிட்டாள்.

“காட்டுமிராண்டி மாதிரி ஒரேயடியா பாஞ்சிருவன் எண்டு நினைச்சியோ?”

திடீரென வந்த குரலில் சற்றே திடுக்கிட்டுத்தான் போனாள் யாமினி. ‘ஐயோ, எத நினச்சாலும் கண்டு பிடிக்கிறாரே.’ என்று பரிதாபமாக அவள் பார்க்க, “கொஞ்ச நாள் போகட்டும். எல்லாம் தானா நடக்கும். நமக்கு ஒண்டும் இது புதுசு இல்லையே.” என்றான் அவளையே பார்த்தவாறு.

அதுவே போதுமாக இருந்தது யாமினிக்கு. மனதின் பதட்டம் அடங்க ஒரு பக்கமாகச் சரிந்து தலைக்குக் கைகளைக் கொடுத்தபடி படுத்தாள். சற்றுமுன் அவன் சொன்னதே காதில் எதிரொலித்துக் கொண்டிருந்தது!

சற்று நேரத்திலேயே யாமினி நன்றாக உறங்கி இருந்தாள். அவளிடமிருந்து வந்த சீரான சுவாசம் அதை உணர்த்திற்று. மீண்டும் தலையணையை முதுகுக்குக் கொடுத்தபடி எழுந்து கால்களை நீட்டிக்கொண்டு அமர்ந்தான் விக்ரம். உறக்கம் வருவேனா என்று நின்றது. அவர்கள் இருவரையும் திரும்பிப் பார்த்தான். இனி தங்களைப் பார்த்துக்கொள்ள அவன் இருக்கிறான் என்கிற நினைப்புடன் நிம்மதியாக உறங்குவது போலிருந்தது.

அதுவும் யாமினி யாரையும் தன் வாழ்வில் அனுமதித்து விடாமல் தனியாக இருந்தவள். அவனை நம்பித் தன்னையும் மகளையும் தந்திருக்கிறாள்.

அன்றொருநாள், ‘என்னைக் கைவிட்டாலும் பரவாயில்ல, சந்தனாவ கை விட்டுடாதிங்கோ.’ என்று அவள் அழுதது நினைவலைகளில் மிதந்து வந்து மனதைக் கசிய வைக்க, அவள்மீது தன் விழிகளை ஓட்டினான்.

மேலே சுழன்ற காற்றாடியின் பலனாகக் கேசச் சுருள்கள் பறந்தவண்ணம் இருக்க, கையை நீட்டி அவள் தலையை வருடிக் கொடுத்தான். ‘செல்லம்மாவை மட்டுமில்ல உன்னையும் நல்லா பாப்பன். உனக்குத் தெரியுமா, இனி இதுதான் வாழ்க்க எண்டு மரத்துப்போய் இருந்த எனக்குள்ள உயிர்ப்பா வந்தவள் நீ! வாழ்க்கைல திரும்பவும் ஒரு பிடிப்ப எனக்குத் தந்தவள். உன்னக் கலங்க விடுவனா நான்?’ மனதால் அவளிடம் கதைதான்.

அவனின் வருடலாலோ என்னவோ அவள் புரண்டு படுக்க, கையை எடுத்துக்கொண்டான். கண்கள் மட்டும் அவளிடமே இருந்தன. யாஸ்மின் கூட அவனருகில் தன்னை மறந்துதான் உறங்குவாள். அவன் அருகில் இல்லாமல் நிம்மதியான உறக்கம் வராது என்பாள் என்று எண்ணியதுமே கசந்த புன்னகை அவன் இதழ்களில் வழிந்தது. இன்றானால்… என்று எதையெதையோ எண்ணி தறிகெட்டு ஓடிய நினைவைத் தடுத்து அடக்கினான்.

அதோடு, கணவன் இல்லாமல் குழந்தைக்காகத் தன் இளமை, எதிர்காலம், சந்தோசம் என்று அத்தனையையும் ஒதுக்கி வைத்தவளோடு தன் சந்தோசத்துக்காக மகனின் எதிர்காலத்தைக் கூட அலட்சியம் செய்தவளை ஒப்பிடுவது மகா தவறாகவே பட்டது!

‘இனியும் கூடாது! அவளின் நினைவுகளை அடியோடு மறக்க வேண்டும்! என் மனைவி என்னருகில் இருக்கிறாள். என் மகன் என்னிடம்தான் இருக்கிறான். என் மகள் என்னோடு இருக்கிறாள். என் குடும்பம் இதுதான்!’ என்று எண்ணியவனின் விழிகள் இப்போது சந்தனாவிடம் சென்றன.

யாஸ்மினின் நினைவுகளால் கிளறிவிடப்பட்ட காயத்துக்கு மருந்தாக அப்பா என்றபடி தாவும் சின்னவளின் அணைப்பு வேண்டும் போலிருந்தது. சாய்ந்து படுத்துச் சந்தனாவை மெல்லத் தூக்கி தன் மார்பில் போட்டுக்கொண்டான்.
உண்மையிலேயே பெரும் மருந்தாகித்தான் போனாள் அவனுக்கு! அவளை வருடிக் கொடுத்தான். மனம் மெல்ல மெல்ல அமைதியின் வசம் செல்ல, அவனை உறக்கமும் வந்து தழுவியது!

அடுத்தநாள் நல்லபடியாக அங்குப் போய்ச் சேர்ந்துவிட்டதாக அசோக் அழைத்துச் சொன்னான். டெனியும் தகப்பனோடு கதைத்தது மாத்திரமல்லாமல், யாமினியிடம் போனை கொடுக்கச் சொல்லிக் கதைத்தது வேறு யாமினிக்குச் சந்தோசமாக இருந்தது. அதன்பிறகு தயாராகி மூவருமாகக் கடைக்குச் சென்று, வீட்டுக்குத் தேவையான பொருட்களைப் பார்த்து பார்த்து வாங்கினர்.

ஹாலுக்குப் பொருத்தமாய்ப் பிரம்பு நாற்காலி செட், அறைக்குச் சின்னதாய் ஒரு கப்போர்ட், கிச்சனுக்குத் தேவையான பொருட்கள் என்று கச்சிதமாய் அவள் தெரிவு செய்ததைப் பார்க்கையில் மனதுக்கு நிறைவாய் உணர்ந்தான் விக்ரம்.

அன்று மதிய உணவைக் கடையில் முடித்துவிட்டு வரும்போது, “போகேக்க காய்கறி வாங்கிக்கொண்டு போனா இரவுக்கு நானே சமைச்சிடுவன்.” என்றாள் அவள்.

சரியென்று சென்று அன்றைய இரவுக்காக ரொட்டிக்கு மாவும், தேங்காய், செத்தல் மிளகாய் என்று மரக்கறியோடு சேர்த்து வாங்கிக்கொண்டாள்.

வீடு வந்ததுமே, அதற்காகவே காத்திருந்தவன்போல் அசோக் அழைத்தான்.
 

நிதனிபிரபு

Administrator
Staff member
“என்னடா? ஒபீசுக்கு போனியா?”

“அதெல்லாம் போய்ப் பார்த்திட்டு வந்திட்டன். நீ முதல் ஃபேஸ்புக் பார்!” நக்கலாகச் சொல்லிவிட்டு வைத்துவிட்டான் அவன்.

‘என்ன இவன்… வேலையப் பற்றி ஒண்டும் சொல்லாம ஃபேஸ்புக் பாக்கச் சொல்றான்…’ யோசித்தபடி லாப்டாப்பில் முகப்புத்தகத்துக்குள் நுழைந்து, தன் சாவி கொண்டு திறந்தான்.

திறந்ததுமே வந்தது, “என்னுடைய மிகப் பெரிய கடமை சந்தோசமாக முடிந்தது!” என்கிற டெனிஸின் போஸ்டே!
முறுவல் அரும்ப பார்வையைக் கீழே ஓட்டினான்.
“என்ர பாப்ஸ் திருமணம்!” என்றதின் கீழே இவர்களின் திருமணப் புகைப்படம்!

அதுவும் சரியாக யாமினியின் கழுத்தில் இவன் தாலியைக் கட்டும்போது எடுத்தது!

அதைக்கண்டு ஒருகணம் இனிமையாக அதிர்ந்து, அடுத்தகணம் வாய்விட்டுச் சிரித்தான். கொஞ்சம் வெக்கமாகக் கூடப் போயிற்று!

யார் யாருக்குக் கல்யாணம் செய்து வைப்பது? வெள்ளை மனம் கொண்ட பிள்ளை அதைப் ஃபேஸ்புக்கில் வேறு போட்டுவிட்டான்!

புன்சிரிப்புடன் விழிகளை அந்தப் புகைப்படத்திலேயே நிறுத்திவைத்தான். அவனுக்கு நன்றாக நினைவிருக்கிறது, தாலியைக் கட்டுகையில் தலை குனிந்திருந்தாலும் ஆழ்கடல் போன்று அழகிய விழிகளை மட்டுமே உயர்த்தி அவள் அவனைப் பார்த்ததும், அந்த விழிகள் அவனிடம் வீசிய சாரலையும்!

அந்தச் சாரல் இப்போதும் நெஞ்சுக்குள் வீச, படத்தையே பார்த்திருந்தான். கையிலிருந்த மவுஸ் அவளின் முகத்தைச் சுற்றிச் சுற்றியே வட்டமடிக்க, சின்னதாகச் சிரித்துக்கொண்டான்.

படத்துக்குக் கீழே கொஞ்சம் சிரிக்கும் ஸ்மைலிகள், வாழ்த்துகளைச் சொல்லும் ஸ்மைலிகள், ஆணும் பெண்ணுமாய் நிற்கும் ஸ்மைலிகள் பரவிக் கிடக்க அதற்குப் பிறகு கண்ணை ஓட்டியவனின் முகம் உண்மையிலேயே சிவந்து போனது.

“பாப்ஸ், எனக்கு இன்னொரு தங்கை வேணும். கெதியா பெத்துக்குடு. அவளை நானே வளக்கோணும்.” என்று போட்டிருந்தான் அவன் மகன்.

“கடவுளே மானத்தை வாங்கிட்டானே.” என்றபடி தலையைக் கோதிக்கொடுத்தான் விக்ரம்! இதழ்களில் அடக்கமாட்டாத சிரிப்பு!

சமையலை முடித்து, சந்தனாவுக்கு உணவை ஊட்டி, உடம்பு கழுவி, வேறு உடை மாற்றிக்கொண்டு வந்த யாமினி, ‘யாரோட கதைக்கிறார்?’ என்பதாக அவனைப் பார்த்தாள்.

“அது இங்க!” என்றான் லாப்டப்பை காட்டி.

அவளும் அங்கே கண்ணை ஓட்ட, இவர்களின் திருமணப் படம்.
‘யார் போட்டது?’ என்று கிட்ட வந்து பார்த்தாள்.

டெனிஷ். அவன் மேலே எழுதியிருந்ததைப் படித்ததும் அவள் இதழ்களிலும் சின்னப் புன்னகை ஒட்டிக்கொண்டது. விக்ரமைத் திரும்பிப் பார்த்தாள்.

‘நான் நினச்சதுபோல அப்பாவும் மகனும் நல்ல க்ளோஸ்தான்.’ எண்ணிக்கொண்டே கீழே பார்வையை ஓட்டியவள் முகம் குப்பென்று சிவந்துபோனது.

வேகமாக அவனைத்தான் பார்த்தாள். அவன், சிவந்து கிடந்த இவள் முகத்தைக் கண்களில் சிரிப்போடு ரசித்துக்கொண்டிருந்தான்.

ஐயோ! வெட்கத்தில் சிரிப்புப் பொங்க அதை அடக்கிக்கொண்டு அங்கிருந்து ஓடியே போனாள் யாமினி.
இவனோ திரும்பி லாப்டாப்பை பார்த்தான். தலைகுனிந்து தாலியை வாங்கும் அவள் கண்ணில் பட்டாலும், முகம் முழுக்கச் சிரிப்பும் வெட்கமுமாக இப்போது ஓடியவள்தான் கண்ணுக்குள்ளேயே நின்றாள்.

யாமினியிடம் தன் மனம் மெல்ல மெல்ல இலயிப்பதை உணராமலில்லை விக்ரம். இப்படியே யாஸ்மினின் நினைவுகளும் தன்னை விட்டுத் தூரமாய்ப் போய்விட வேண்டும் என்று அவன் நினைக்கையில், அவர்கள் வீட்டுக் கோலிங் பெல் அழைத்தது!

போய்க் கதவைத் திறந்தான். மதியம் அவர்கள் வாங்கிய பொருட்கள் லாரியில் வந்திறங்கின. கொண்டுவந்தவர்களின் உதவியுடன் அனைத்தையும் ஒழுங்கு படுத்தி வைத்துவிட்டு, கேட்டதற்கு மேலே போட்டுக் கொடுக்கவும் அவர்களும் சந்தோசமாகவே வாங்கிக்கொண்டு சென்றனர்.

“இனி எல்லாத்தையும் எடுத்து வை.” என்றான் யாமினியிடம்.
அவளும் அதுவரை சூட்கேசுக்குள்ளேயே கிடந்த உடைகளை எடுத்து கப்போர்ட்டுக்குள் வைக்கவும், இவன் அசோக்குக்கு அழைத்தான்.

அவனிடம் வேலை விசயங்களைக் கேட்டுத் தெரிந்துவிட்டு வைத்தவனுக்கு விரைவிலேயே தான் அங்குப் போவதுதான் நல்லது என்று பட்டது.

‘அதுக்கு முதல் யாமினிய நாளைக்கு டொச் கிளாசுக்கு சேர்த்து விடவேணும். இவள் கிளாசுக்கு போனா செல்லம்மாவ என்ன செய்றது?’

அசோக்கின் மாமிக்கு அழைத்தான்.

“என்னப்பா வீடெல்லாம் வசதியா இருக்கா?” அவர் விசாரித்தார்.

“எல்லாம் நல்லாருக்கு அம்மா. பாதுகாப்பான இடம். தெரியாத ஊர்ல தனியா இருக்கப்போறா. இடம் எப்பிடியோ எண்டு பயந்தனான். ஆனா, மக்கள் புழங்குற இடமா பாத்துத் தந்திருக்கிறீங்க.” என்றான் நன்றியோடு.

“அதுக்கு என்னப்பா. சொந்தம் எண்டு இருக்கிறது இதுக்குத்தானே!” என்று பெருந்தன்மையோடு அவர் சொல்ல,
“இன்னுமொரு உதவி வேணுமே அம்மா.” என்று விசயத்தைச் சொன்னான்.

“அதுக்கு என்ன? எனக்கு நம்பிக்கையான ஒரு அம்மா இங்க இருக்கிறா. அவவ அனுப்பி வைக்கிறன்.” என்று அதற்கும் இலகுவாகத் தீர்வு சொன்னார் அவர்.

நன்றி சொல்லி இவன் அழைப்பைத் துண்டிக்க, “சந்து! அம்மாவ வேலை செய்ய விடு. அங்கால போ!” என்று யாமினி மகளோடு மல்லுக்கட்டுவது கேட்டது.

இதழ்களில் புன்னகை அரும்ப, “செல்லம்மா, என்ன செய்றீங்க?” என்று கேட்டுக்கொண்டே அறைக்கு நடந்தான்.

அங்கு அவன் மகளோ, சூட்கேசுக்குள் ஏறுவதும் இறங்குவதுமாக இருந்தாள். அதோடு உடைகளை எடுத்துத் தன் மேலே போட்டுக்கொள்வதும், தூக்கி எறிவதுமாகத் தாயை வேலை செய்யவிடாமல் செய்துகொண்டிருந்தாள்.

அவளின் சேட்டைகளை ரசித்துச் சிரித்தவாறே, "அம்மாக்கு ஹெல் பண்றாளா என்ர செல்லம்! நீங்க வாங்க நாங்க டிவி பாப்பம்." என்று அவளைத் தூக்கிக்கொண்டு ஹோலுக்குள் சென்று அமர்ந்துகொண்டான்.

வீட்டோடு இருந்த டிவியில் 'டெலிடபீஸ்' போட்டுவிட, அவனின் செல்லப் பெண்ணோ அவன் மடியில் இருந்தவாறே பார்த்திருந்தவள், சற்று நேரத்திலேயே உறங்கி இருந்தாள்.

"இதுக்குத்தான் அம்மாவப் போட்டு அந்தப் பாடு படுத்தினீங்களா செல்லம்." என்றவாறு அவளைத் தூக்கிக்கொண்டுபோய்க் கட்டிலில் கிடத்தினான்.

வெளியே செல்ல எழுந்தவன், திறந்திருந்த கப்போர்ட்டை அப்போதுதான் பார்த்தான். சீராக உடைகளை அவள் அடுக்கிக்கொண்டு இருந்தாலும், உடைகள் இருந்த தட்டுகளை விட வெறுமையாக இருந்த தட்டுகளே அதிகமாக இருந்தன.

அடுத்தநாள் காலையிலேயே மனைவி மகளைக் கூட்டிக்கொண்டு போய் உடைகள் எடுத்துக் கொடுத்தான். மகளுக்கு டையப்பர் வாங்கினான். செலவு என்று அவள் இவ்வளவு நாட்களும் துணிதான் பாவித்தாள். சந்தனாவுக்கோ டையப்பர் வெகு இலகுவாக இருக்க, அவளின் உற்சாகம் இன்னொரு படி மேலேறியது. வெயில் பட்டுத் தன் பெண் கறுத்துவிடக் கூடாது என்று குடையோடு கிண்டர் வண்டில் ஒன்று வாங்கினான்.

விதம் விதமான தொப்பிகள். கூலிங் கிளாஸ். விளையாட்டு கிட்சென் செட், பார்பி பொம்மைகள், அது இது என்று சந்தனா அதுவரை பார்த்தே அறியாத பொருட்களை எல்லாம் வாங்கினான்.

சில நேரங்களில் இவளுக்கே தோன்றிவிடும், எப்படி இவனால் இந்தளவு பாசத்தை வைக்க முடிகிறது என்று. அந்தளவுக்குச் சந்தனா செல்லப்பெண்ணாகிப் போனாள் அவனுக்கு. ஏன் சந்தனா என்றுகூட அவன் சொன்னது கிடையாது. செல்லம்மா தான். இல்லையோ செல்லம். அவளும் "ப்பா ப்பா." என்று இப்போதெல்லாம் எல்லாத்துக்கும் அப்பாதான். அம்மா என்று ஒருத்தி இருப்பதே நினைவில்லை.

பாலுக்கு அப்பா, சாப்பாட்டுக்கு அப்பா, உறங்க அப்பா, ஏன் விழித்ததும் அவள் தேடுவதும் அப்பாவைத்தான்! சில நேரங்களில் டயப்பர் மாத்துவது கூட அப்பாதான்!
இவள் தான் பதறிப்போய், “ஐயோ, இதெல்லாம் நீங்க ஏன் செய்றீங்க?” என்று வந்தாலும், “என்ர மகளுக்கு நான் செய்றன். நீ இதுல தலையிடாத” என்றுவிடுவான்.

அவளையும் விட்டு வைக்கவில்லை அவன். தோட்ட வேலையில் காய்ந்திருந்த கைகளை, கால்களைக் கண்டுவிட்டு மெனிக்கியூர் பெடிக்கியூர் என்று கூட்டிப் போனான்.

முகத்துக்கும் பேஷியல் அது இது என்று யாமினிக்கும் தான் என்னவோ புதிதாகப் பிறந்துவிட்ட உணர்வு. வறண்டு கிடந்த பாலைவனத்தில் சடசடவென்று பூக்களும் காய்களும் கனிகளும் காய்த்துவிட்டால் எப்படி இருக்கும்? அப்படியிருந்தாள் அவள்!

அப்படியே டொச் வகுப்புக்கும் சேர்த்துவிட்டான். சரளமாக அவன் டொச் பேசிச் சேர்த்துவிட்டதில் அவளுக்குச் சற்றே நிம்மதியும் கூட.

“எனக்கு ஒண்டும் தெரியாது. வடிவாச் சொல்லித் தரச் சொல்லிச் சொல்லுங்கோ.” என்று அவன் காதைக் கடித்தாள் யாமினி.

“தெரியாட்டித்தானே இங்க வருவீனம். தெரிஞ்சவே ஏன் வர?” விசமச் சிரிப்போடு சொன்னான் விக்ரம்.

‘என்ன சொன்னாலும் ஒரு நொள்ள சொல்லிடுவார். இவரோட மனுசர் படுற பாடு…’ என்று அவனை முறைத்தாள் அவள்.

“படிக்காட்டி திட்டக் கூடாது எண்டும் சொல்லுங்கோ. பிறகு நான் இங்க வரமாட்டன். நீங்கதான் வந்து எனக்காக டெஸ்ட் எழுதுவீங்க, சொல்லீட்டன்.” என்றாள் மிரட்டலாக.

அவள் பேச்சில் எழுந்த முறுவலோடு அவளைச் சுற்றிக் கையைப் போட்டபடி, “ஒழுங்கா படிக்காட்டி நாலு போட்டுப் படிக்க வைங்கோ. நான் ஏன் எண்டும் கேக்கமாட்டன்.” என்றான் ஆசிரியை பெண்மணியிடம்.

திடுக்கிட்டுப்போய் இவள் அவனை முறைக்க, அவரோ சிரித்துவிட்டு, “அப்படியெல்லாம் நாங்க நடக்கமாட்டோம். இதுவும் கஷ்டம் இல்லை மிசஸ் விக்ரம். ஆரம்ப அறிவு இருக்கா எண்டுதான் டெஸ்ட்டிலும் பாப்பீனம்.” என்றார் அவளிடம்.

அப்பாடி! அவ்வளவுதானா என்றிருந்தது யாமினிக்கு!
 

Google Typing

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.

Top Bottom