• நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.
    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

நினைவெல்லாம் நீயாகிட வந்தேன் - 15

நிதனிபிரபு

Administrator
Staff member
அத்தியாயம் 15


கொழும்பு நகரின் பிரபலமான அந்த ஆடையகத்தில் ஆண்களுக்கான பிரிவில் நின்றிருந்தாள் யாமினி. விக்ரமுக்காகக் கிட்டத்தட்ட அந்தத் தளத்தையே உருட்டிப் பிரட்டிவிட்டாள் என்றுதான் சொல்லவேண்டும்! பீச் கலரில் ஒரு முழுக்கை டி- ஷர்ட்டும் டார்க் பிரவுனில் ஜீன்ஸ்ஸும் எடுத்துவிட்டாள்.

இன்னும் இரண்டு டி- ஷர்ட்டுக்கள் எடுக்கலாம் என்றால் எங்கே ஒன்றையுமே அவனுக்குப் பொருத்தமாய்க் காணோம்!

மீண்டும் ஹாங்கரில் தொங்கிக்கொண்டிருந்த ஆடைகளை நோக்கி விழிகளைத் திருப்பினாள். அங்கே ஒன்று ஆரேஞ் மற்றும் வெள்ளையில் கோடு கோடுகளாய் காலர் வைத்த டி- ஷர்ட் கண்களைப் பறித்தது. மனக்கண்ணில் அவனுக்கு அணிவித்துப் பார்த்தாள். அவனுடைய நிறத்துக்கும் கட்டுக் குழையாத தேகத்துக்கும் அம்சமாய்ப் பொருந்தியது.

அதைப்போட்டுக்கொண்டு, ‘நல்லாருக்கா?’ என்று அவன் கேட்பது போலவே இருக்க, இதழ்களில் புன்னகை அரும்பியது!

அன்றைய மதிய நாளின் அவனின் சேட்டைகள் அப்படியே நினைவில் வர, ‘நல்லாத்தான் இருக்கு!’ என்று மனதில் சொல்லியபடி அதையும் எடுத்துக்கொண்டாள்.

அங்கே தொங்கிக் கொண்டிருந்த ஷர்ட்டுக்களைக் கண்டதும், ‘இங்க நிக்கேக்க எப்பவும் டி-ஷர்ட் தானே போட்டவர். அங்க ஆபீசுக்கு மட்டும் முழுக்கை ஷர்ட் போடுறவர். அரைக்கை ஷர்ட் நல்லாருக்காதா?’ சிந்தனை அதன்பாட்டுக்கு ஓட விழிகள் அவனுக்குப் பொருத்தமாய் ஒரு ஷர்ட்டை தேடிக் கண்டு பிடித்தது.

எடுத்து சற்றே தூர நீட்டிப் பார்த்தாள். ‘இதுவும் நல்லாருக்கும்.’

‘இதையெல்லாம் அவரிண்ட பிறந்தநாளுக்கு முதல் போய்க் கிடைக்கிறமாதிரி அனுப்பி வைக்கோணும்.’ ஆசையாக எண்ணியபடி அனைத்தையும் எடுத்துக்கொண்டாள்.

இன்னும் இரண்டு வாரங்கள் இருந்தது பிறந்தநாளுக்கு. ‘பெரும்பாலும் மூன்று நாட்களில் போய்விடும். இல்லையானாலும் ஒரு வாரத்தில் கிடைத்துவிடும்’ என்றிருந்தார்கள் போஸ்ட் ஆபீசில். எதற்கும் இருக்கட்டும் என்று ஒரு வாரத்துக்கு முதலே அனுப்ப ப்ளான் பண்ணியிருந்தாள் யாமினி. அதுவும் அவனுக்குத் தெரியாமல்!

திடீரென்று ஒருநாள் பார்சல் வந்தால் எப்படி இருக்கும்?!

அதன்பிறகு குழந்தைகளுக்கான தளத்துக்குச் சென்று மகளுக்கும், டீன் ஏஜ்ஜினருக்கான பகுதிக்குச் சென்று டெனிசுக்கும் உடைகளைத் தெரிவு செய்துகொண்டவள், பெண்களுக்கான பகுதிக்குச் சென்றாள்.

அங்கே அவளுக்காக முழு நீள பாவாடை சட்டை ஒன்றும் ஒரு சுடிதார் செட் ஒன்றும் எடுத்துக்கொண்டாள். போட்டுப்பார்த்தாள். மிகவுமே பிடித்துப் போயிற்று! தனக்கு மிகவுமே அழகாய் இருப்பதாய் மனம் சொல்ல சந்தோசமாயிருந்தது.

‘எனக்கு அழகாயிருக்கிறதா? பொருத்தமாய் இருக்கிறதா’ என்று மட்டுமே பார்த்து ஆடைகளைத் தேர்வு செய்வதில்தான் எத்தனை சுகம்?

என்ன விலை என்று யாருக்கும் தெரியாமல் பார்த்து, கையிலிருக்கும் பணத்தைச் சரியாகத்தான் எண்ணிக்கொண்டு வந்தோமா என்று பயந்து, இருக்கிற பணத்துக்குத் தகுந்ததாக உடைகளைத் தெரிவு செய்வதைப் போன்ற கொடுமை எதுவுமில்லை!

அப்படி எந்த யோசனைகளும் இல்லாமல் கணவனுக்கு, குழந்தைகளுக்கு, தனக்கு என்று தேர்வு செய்தது மனதுக்கு இதமாயிருந்தது!

இப்போதெல்லாம் அவள் அனுபவிக்கும் உணர்வு சந்தோசம் மட்டுமே! அவனைப் பிரிந்திருப்பது வேதனைதான். ஆனாலும், அந்தச் சோகத்திலும் ஒரு சுகமிருந்தது! மனதால் நொடிப்பொழுதும் அவனோடு கதைத்தபடி, வம்பளந்தபடி தனக்கும் அவனுக்குமான கனவுலகில் சஞ்சரிப்பது அத்தனை இன்பமாயிருந்தது!

என்ன வேலை செய்தாலும், படித்தாலும் மனதின் ஒரு ஓரத்தில் அவன் அழைக்கும் நேரத்துக்கு இன்னும் எவ்வளவு நேரம் இருக்கு என்று கணக்குப் பார்த்துக்கொண்டே கழிக்கும் நாட்களை அனுபவித்து வாழ்ந்தாள்.

அவன் அழைக்கையில் மனதில் துள்ளிக் குதிப்பதும், வைக்கவா என்று கேட்கையில் உள்ளே ஏங்கினாலும் சரி என்று சொல்வதும் கூடச் சுகமாகத்தான் இருந்தது.

இதோ.. இப்போதும் அவன் நினைவுகளோடே தேர்வு செய்த எல்லாவற்றுக்கும் பணத்தைச் செலுத்திவிட்டு, அருகிலிருந்த நகைக்கடையில் ஏற்கனவே ஆர்டர் கொடுத்திருந்த அவனுக்கான மோதிரத்தையும் வாங்கிக்கொண்டாள்.

அதில், ஆங்கில ‘வி’ என்ற எழுத்துக்குள் ‘வை’ என்கிற எழுத்து பிணைந்து கிடப்பது போன்று அமைக்கப் பட்டிருந்தது. அவர்கள் இருவர் பெயரினதும் முதல் எழுத்துத்தான் என்றாலும் அவளுக்கு என்னவோ அது ‘விக்ரமின் யாமினி’ என்று சொல்வது போலவே இருந்தது!

ஆமாம். அவள் ‘விக்ரமின் யாமினி’ தான்! மெல்ல அந்த எழுத்துக்களின் மீது தடவிக் கொடுத்தாள். அதுவும் ‘வை’யை தாங்கி நிற்கும் அந்த ‘வி’ அவனாகவே தெரிந்தான். அதிலேயே விழிகள் தங்கின! விரலால் மெல்ல வருடினாள். அவன் கன்னத்தை வருடும் சுகம்! அதைப் பார்க்கப் பார்க்க அவனை உடனேயே பார்த்துவிட வேண்டும் போலிருந்தது. தனக்குள் சிரித்துக்கொண்டாள்!

தன் மனம் அவனிடம் சாய்ந்துகொண்டிருப்பதை உணராமலில்லை அவள்! ஆனால், அதில் பெரிய ஆச்சரியமும் இல்லை அவளுக்கு! அவனைப் போன்ற அற்புதமான மனிதன் கணவனாக வாய்த்தபிறகு மனம் சாயாமல் இருந்தால் தான் அதிசயம்!

மிகவும் கவனமாகத் தன் ஹன்ட்பாக்கினுள் அதைப் பத்திரப்படுத்திக்கொண்டு சந்திரனின் ஆட்டோவிலேயே வீடு வந்து சேர்ந்தாள்.

வீட்டுக்கு வந்து இன்னொருமுறை வாங்கிய உடைகளை எல்லாம் திரும்பவும் எடுத்துப் பார்த்தாள். மிகவுமே பிடித்திருந்தது. ஜேர்மனுக்கு அனுப்ப வாங்கியவற்றைத் தனியாக எடுத்து வைத்தாள்.

மோதிரத்தையும் ஒரு ஆசையில் வாங்கிவிட்டாள் தான். ஆனால், அனுப்ப வெட்கமாக இருந்தது. தன்னோடு வைத்துக்கொண்டாள். என்றாவது ஒருநாள் ஆசையாக அவளே அவனுக்குப் போட்டுவிட வேண்டும்!

மத்தியானத்தில் உறங்குவதால் இரவு பத்தான போதும் அவளின் மகள் கொட்டக் கொட்ட விழித்திருந்தாள்.

மத்தியான நித்திரையை நிப்பாட்டலாம் என்றால் எங்கே.. அப்படி எதுவும் நடந்தால் சிணுங்கிச் சிணுங்கியே அன்றைய மாலைப் பொழுதை ஒருவழியாக்கிவிடுவாள்!

நேரம் பதினொன்றை நெருங்கியது. அப்போதும் ஒரு பொம்மையை வைத்து அதோடு என்னவோ கதைத்துக் கதைத்து விளையாடிக்கொண்டு இருந்தவளை மெல்ல கட்டிலுக்குக் கொண்டுசென்றாள்.

“குட்டிம்மா படுத்திருந்து விளையாடுவாவாம்..” என்று சொல்லி அவளைக் கட்டிலில் சரித்தாள்.

“இல்ல.. ம்மா..” என்று அவள் சிணுங்க ஆரம்பிக்க,

“இப்ப படுத்திருக்கிறது அப்பாவாம்..” அவளின் பொம்மையை அவள் மார்பில் போட்டு.. “இது அப்பான்ர செல்லம்மாவாம்.. இப்ப அப்பாவும் செல்லம்மாவும் படுக்கிறாங்களாம்.” என்றதும் அந்த வாண்டும் தன் தகப்பனைப் போலவே அந்தப் பொம்மையை மார்பில் தாங்கித் தட்டிக் கொடுத்தாள்.

தினமும் நடக்கும் காட்சிதான்! ஆனாலும் அன்பான கணவன் ஒருகணம் கண்முன்னே வந்து நின்றான்!

எந்தளவு தூரத்துக்குத் தகப்பனாக அவன் அந்தப் பிஞ்சு நெஞ்சுக்குள் நுழைந்திருந்தால் இப்படி அவனைப் போலவே செய்வாள்?

மனம் கசிய மகளின் நெற்றி முடிகளைப் பின்னே தள்ளி ஒரு முத்தத்தைப் பதித்துவிட்டு, தானும் அருகில் சரிந்து,

“ஹாய் கண்ணா! வீட்டுக்கு போயிட்டியா?” என்று டெனிக்கு மெசேஜ் தட்டிவிட்டாள்.

அவன் பார்த்துவிட்டான் என்று காட்டியது. ஆனாலும் பதில் வரவில்லை.

‘அப்ப இன்னும் வீட்டுக்கு போகேல்ல. என்ன சாட்டுச் சொல்லலாம் எண்டு யோசிக்கிறான். அச்சு அந்த மாயக்கண்ணனேதான்!’ இதழ்களில் பூத்த புன்னகையோடு அவள் நினைக்கையிலேயே,
 

நிதனிபிரபு

Administrator
Staff member
“இண்டைக்கு மாட்ச்..”

“அதான் லேட்..”

“இதோ.. போய்க்கொண்டே இருக்கிறன்.” என்று வேகவேகமாக மெசேஜ் வந்து விழுந்துகொண்டிருந்தது.

போதாக்குறைக்கு ‘நான் பாவம்’ என்பது போன்ற ஸ்மைலி ஒன்று சோகமாய் வந்து நின்று அவளைப் பார்த்துக் கெஞ்சியது!

என்னவோ அவனே தலையைச் சரித்து, அந்த நீல நிறக் கண்களால் கெஞ்சுவது போலவே இருக்க, பெறாமகனிடம் மனம் கரைந்துதான் போனது யாமினிக்கு!

“ஏழு மணிக்குள்ள வீட்டுல இருக்கோணும் எண்டு சொல்லி இருக்கிறேன் எல்லோ!” கண்டிப்போடு அனுப்பினாள்.

முகம் பாராமல் உரையாடுவதில் இது ஒரு வசதி!

மனதில் நஞ்சிருந்தாலும் நல்லவராய் வேசம் போடலாம். பாசம் இருந்தாலும் இலகுவாய் மறைக்கலாம். இல்லாத கோபத்தைக் கூட இருப்பதாய் காட்டலாம். இப்போது மருந்துக்கும் இல்லாத கண்டிப்பை எழுத்தில் காட்டி யாமினி கேட்கவில்லையா? அப்படி!

“இனி இல்ல யாம்ஸ். இந்தா வீட்ட வந்திட்டன்.” என்றவன் சட்டென்று அவர்களின் ஹாலில் நின்று ஒரு செல்பியைக் கிளுக்கி அனுப்பினான்.

“சாப்பிட்டியா?”

“ம்ம்.. பெர்கர் கிங் ல..”

லாங் சிக்கனின் படம் வந்தது.

‘இதுல என்ன இருக்கெண்டு சாப்பிடுறான். ஒரு சத்தும் இல்ல. வளர்ற பிள்ளைக்கு இது எந்த மூலைக்கு?’ தாயாய் மனம் தவிக்க,

“அப்பாவ சமைக்கச் சொல்லு கண்ணா.” என்று அனுப்பினாள்.

“பாப்ஸ்ஸா?”

உருண்டு பிரண்டு சிரிக்கும் ஸ்மைலி விழுந்து கிடந்து சிரித்தது. அவளுக்கும் சிரிப்பு மூட்டியது அது.

‘அப்பாவுக்கும் மகனுக்கும் இந்த வாய்க்கொழுப்புக்கு குறைவில்ல!’ மனதில் சுகமாய் அலுத்துக்கொண்டாள்.

“அவர் சமைக்கிறத யார் சாப்பிடறது?” என்று அனுப்பினான் அவன்.

‘நல்லா வாயாடுவார்.. சமைக்கத் தெரியாதா?’

பிரெஷ்சாகி வீட்டுடை மாற்றியதும் வைபரில் அழைத்தான் டெனிஷ். துள்ளிக்கொண்டுபோய் ஐபாடை ஆன் செய்தாள் சந்தனா.

“ண்ணா.. இந்தா.. ம்மா..” என்று மழலையில் சந்தோசக் கூச்சல் இட்டாள் அவள். கைகளால் வேறு ஐபேடில் தெரிந்தவனைத் தொட்டு என்னவோ நிறையக் கதைத்தாள்.

அவனும், “பார்பி இண்டைக்குக் கடைக்குப் போனீங்களா?” என்று கேட்க,

“ம்ம்.. போனா.. சட்ட.. சூசு” என்று சட்டை வாங்கியதை, ஜூஸ் குடித்ததை அவள் பாசையில் சொல்ல, தமையனும் தங்கையும் அவர்களுக்கான உலகுக்கே சென்றிருந்தனர்.

அவனும் என்னவோ நிறையக் கேட்டான். இவளும் என்னவெல்லாமோ சொன்னாள். வீடு முழுக்க ஐபாடை கொண்டு ஓடிஓடிக் கதைத்தாள். வாங்கிவந்த பைகளை வேறு இழுத்துக் காட்டினாள்.

பார்த்திருந்த யாமினியின் மனம் கரைந்தே போயிற்று! அவளுக்கும் மகளுக்கும் கிடைத்திருப்பது எத்தனை அற்புதமான உறவுகள்?

ஆரம்பத்தில் தினமும் இவள் அவனுக்கு அழைக்கையில் அவன் இலகுவாகக் கதைக்கக் கொஞ்சம் திணறுவதை யாமினி உணர்ந்திருந்தாள். ஆயினும், பெற்றவள் இல்லாமல் போனால் என்ன அம்மாவாக, அனைத்துமாக உனக்கு நானிருக்கிறேன் என்று தாய்ப்பாசத்தை அவனிடம் காட்ட அவள் தயங்கியதேயில்லை. இப்போதெல்லாம் அவனும் அவளின் அழைப்புக்கு, அவனின் பார்பியோடான கதையளப்புக்கு ஆவலாகவே இருக்குமளவுக்கு வந்திருந்தான்.

மகள் இன்று கதைத்து முடிக்கமாட்டாள் என்று அறிந்து, “குட்டிம்மா, அண்ணா நாளைக்குப் பள்ளிக்கூடம் போகவேணும். அண்ணாக்குக் குட்நைட் சொல்லீட்டு அம்மாட்ட தாங்கோ..” என்று சொல்ல,

அவளும் சமத்தாக ஒரு குட்நைட்டை தன் பாஷையில் சொல்லி, ஒரு முத்தத்தை வேறு ஐபாடிலேயே தமையனுக்குக் கொடுத்துவிட்டுத் தந்தாள்.

“இனி நீங்க படுங்கோ! அங்க பாருங்கோ உங்கட செல்லம்மாவுக்கு நித்திரை வந்திட்டுதாம்.” என்று கட்டிலில் கிடந்த பொம்மையைக் காட்டிச் சொல்ல, அவளும் உடனேயே அவளின் அப்பாவாக மாறி பொம்மையோடு சேர்ந்து தானும் உறங்கச் சென்றாள்.

“இன்றைக்கு ஸ்கூல் எப்படிப் போச்சு டெனிஷ்?”

அன்றைய நாளை பற்றி அவனிடம் விசாரித்தாள்.

“நல்லா போச்சு. வாற புதன் மாத்ஸ் டெஸ்ட் இருக்கு. லீட்டர் மில்லிலீட்டர்.. கிலோகிராம், கிராம், மில்லிகிராம் டெஸ்ட்டுக்கு வரும்.” என்றான் அவன்.

“ஓ.. அப்ப இப்பவே என்னென்ன படிக்கோணும் எண்டு ஒரு லிஸ்ட் எடு. அதுல உனக்கு எது கஷ்டம் எண்டு நீ நினைக்கிறியோ அத ரெட் பென்னால நோட் பண்ணு. என்னென்ன பயிற்சி செய்யோணும் எண்டும் புத்தகப் பேஜ் எல்லாம் ஒரு பேப்பர்ல எழுதி உன்ர படிக்கிற மேசைக்கு முன்னால ஒட்டு. வார புதனுக்கு இன்னும் நாலு நாள் இருக்குத்தானே. அப்ப நீ படிக்கோணும் எண்டு நினைக்கிறதை நாலு பகுதியா பிரிச்சு, ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு பகுதியா படி. படிச்சிட்டு படிச்சத பென்னால அந்த லிஸ்ட் ல மார்க் பண்ணிவிடு. அப்ப அடுத்தநாள் உனக்குத் தெரியும் என்ன படிக்கோணும் எண்டு. எது கஷ்டமானது எண்டு ரெட் பென்னால மார்க் பண்ணி வச்சியோ அத ஒவ்வொருநாளும் செய்துபார். படிக்கேக்க ஏதாவது விளங்காட்டி, அத நோட் பண்ணி அடுத்தநாள் போகேக்க உன்ர பிரெண்ட்ஸ் ட்ட கேள். இல்ல டீச்சரிட்ட கேள். இல்லாட்டி அப்பாட்டையாவது கேள். சொல்லித்தருவார்.” என்றாள்.

“வாவ்..!! சூப்பர் ஐடியாவா இருக்கே யாம்ஸ். நான் எப்பவும் டெஸ்ட்டுக்கு முதல் நாள் தான் கஷ்டப்பட்டுப் படிப்பன்.” என்றான் அவன்.

“அப்படி முதல்நாள் படிச்சால் ஏதாவது தெரியாம இருந்தா யாரிட்ட கேட்டு விளங்கிக்கொள்ளுவாய்? டைமும் இருக்காது. கொஞ்சம் கொஞ்சமா படிச்சா ஈசியா விளங்கும், கஷ்டமாவும் இருக்காது. பயப்படாம போய் எழுதலாம்.”

அன்னையாய் கனிவாகச் சொல்லிக் கொடுத்தவளிடம், “தேங்க்ஸ் யாம்ஸ்!” என்றான் டெனிஷ் மெல்ல.

“ஹேய் கண்ணா! அம்மாட்ட யாராவது தேங்க்ஸ் சொல்வாங்களா? ம்? இன்னும் கொஞ்ச நாள்தானே. பிறகு அம்மா அங்க வந்திடுவன் தானே. அதுக்குப் பிறகு என்ர மகன் ஒண்டுக்கும் யோசிக்கத் தேவையில்ல.” என்றாள் பாசத்தில் மனம் கனிய.

ஒன்றுமே சொல்லாமல் ஒருவிதமான அதிர்ச்சியோடு அவளையே பார்த்தான் டெனிஷ்.

அவனின் அப்பா என்றுமே கைப்பிடித்து வழிகாட்டுகிறவன் அல்ல. வாழ்க்கை என்பது நாமாகத் தேடிக் கற்பது என்பதில் அசையா நம்பிக்கை கொண்டவன்! ‘நீயே உன் வழியைக் கண்டுபிடித்துப் போ. எங்கு நீ சென்றாலும், விழுந்தால் தூக்கி விடவும் முன்னேறினால் கைதட்டி உற்சாகமூட்டவும் உன் பின்னால் அப்பா நானிருக்கிறேன், நடப்பது மட்டும் நீயே உன் காலால் நடக்கவேண்டும்!’ என்கிற அசையாத தைரியத்தை மகனுக்குக் கொடுத்து, துணையாக நிற்பவன்!

அம்மா என்கிற உறவு அவனுக்கு இல்லாமல் போனதாகத்தான் அவன் முடிவு செய்திருந்தான். ஆனால் இன்று? பாப்ஸின் மனைவியாக வந்த யாமினி, நான்தான் உன் அம்மா எனவும் சின்னமனம் குழம்பிப் போனது! ஏற்கமுடியாமல் தத்தளித்தது!

“என்ன கண்ணா?” அந்தப் பார்வையின் பொருள் விளங்காமல் கேட்டாள் யாமினி.

“இல்ல.. அது.. என்னென்ன படிக்கோணும் எண்டு யோசிச்சனான்..” என்றுமில்லாத தடுமாற்றம் அவனிடம்.

நேரத்தைத் திரும்பிப் பார்த்தாள். அங்கே இரவு எட்டாகிக் கொண்டிருந்தது.

“இனி நாளைக்கு யோசிக்கலாம். இப்ப பேசாம படு. அப்ப நான் வைக்கவா?”

“ம்ம்.. ஓகே யாம்ஸ்.”

“சரி கண்ணா. குட்நைட். ஒண்டுக்கும் யோசிக்காம சந்தோசமா படு, என்ன! இந்தமுறை டெஸ்ட் நல்லா எழுதலாம் சரியா.” என்று கனிவாகச் சொல்லிவிட்டு லைனை கட் பண்ணினாள்.

ஆனாலும் மனதில் ஏன் அப்படிப் பாத்தான் என்று ஓடிக்கொண்டே இருந்தது.
 

Goms

Active member
குட்டியைத் தங்கையாக ஏற்றுக்கொண்ட டெனிஷ், இன்னும் யாமினியை அம்மாவா ஏற்கத் தயங்குறானா?
 

Google Typing

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.

Top Bottom