• நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.
    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

நினைவெல்லாம் நீயாகிட வந்தேன் - 17

நிதனிபிரபு

Administrator
Staff member
அத்தியாயம் 17

தன் வீட்டுக் கிட்சனில் பம்பரமாய்ச் சுழன்றுகொண்டிருந்தாள் யாமினி! நேரம் மதியம் பன்னிரண்டைத் தாண்டிக் கொண்டிருந்தது. நேற்றுக் காலை கதைத்தபோது, அன்று மதிய உணவுக்குத் தன் நண்பர் வீட்டுக்கு வந்துவிடுவார் என்று சொல்லியிருந்தான் விக்ரம்.

அவரின் நம்பர் அவளிடம் இல்லை. புறப்பட்டுவிட்டாரா என்று கேட்கலாம் என்று விக்ரமுக்கு அழைத்தால் அவனது செல்லோ உயிர்ப்புடனேயே இல்லை! நேற்றிரவும் கதைக்கவில்லை. வேலை அதிகமானால் கதைக்கமாட்டான் தான். என்றாலும் இங்கே அவள் அவதி அவதியாகச் சமைத்துக்கொண்டு இருக்கிறாள், எப்போது வருவார் என்று தெரிந்தால் கொஞ்சம் நிதானமாக வேலைகளைச் செய்யலாமே என்பது அவளுக்கு!

கணவனின் நண்பர். அவனது மரியாதை குறைந்துவிடாமல் அவள் கவனித்து அனுப்ப வேண்டாமா?

கூல்ட்ரிங் கரைத்துப் பிரிட்ஜ்ஜில் வைத்துவிட்டாள். முதல் நாளே ஐஸ் கட்டிகளுக்கு அதற்கான தட்டில் நீர் ஊற்றி பிரீசரில் வைத்து, அதுவும் கட்டியாகி இருந்தது. வனிலா ஐஸ் வேறு வாங்கி வைத்துவிட்டாள். மதிய உணவுக்குப் பிறகான மாலைப் பொழுதில், கூல்ட்ரிங்க்குள் போட்டுக் கொடுத்தால் இன்னும் நன்றாக இருக்குமே!

வடைக்கும் உளுந்து அடித்து வைத்துவிட்டாள். சுடச்சுட எண்ணையில் போட்டுக் கொடுப்பதுதான் வேலை!

மதிய உணவுக்கு, காரட், லீக்ஸ், பச்சைக் கடலை, வறுத்த கஜு, பிளம்ஸ் எல்லாம் போட்ட, கருவாப்பட்டை, கராம்பு ஏலக்காய் வாசத்தில் பசுமதி அரிசி ஒவ்வொரு சோறாக ஒட்டாமல் நின்று பிரைட்ரைஸ் உருவில் கமகமத்தது.

சந்திரன் மூலம் சொல்லிவைத்து அடித்த உயிர்கோழிக்கறி, அடுப்பில் முடியும் தறுவாயில் கொதித்துக் கொண்டிருந்தது. அதோடு, கத்தரிக்காய் பால்கறி, ஒரு கீரை, மெல்லிய புளிப்புக்கு மாங்காய் துருவல் சேர்த்த காரட் சம்பல், இதோடு அவித்த முட்டையும் கோழிக்கால் பொறியலும் என்று ஒரு விருந்தே செய்துகொண்டிருந்தாள் யாமினி.

ஆயாம்மா அவரின் மகன் வீட்டுக்குச் சென்றிருந்தபடியால் அவரும் இல்லை.

மகளை ஒருமுறை திரும்பிப் பார்த்தாள். டிவியில் மும்முரமாக மூழ்கி இருந்தாள். இன்றுமுழுக்க இவள் சமையலில் பிசி என்றால் அவள் டிவியில் பிசி. கூடாதுதான். என்றாலும் வேறு வழி இல்லையே! இல்லையோ இவளைச் சமைக்க விடவே மாட்டாள்.

மனதில் அது பட்டாலும், ‘நாளைக்கு ஆளை டிவி பக்கமே விடக் கூடாது!’ என்று முடிவு கட்டிக்கொண்டு வேலையைத் தொடர்ந்தாள்.

‘வாறவர நல்லா கவனிச்சு அனுப்போணும். என்ர மனுசனிட்ட எந்தக் குறையும் சொல்லக் கூடாது.’ என்று எண்ணியபடி அரிந்த காரட்டுக்குச் சாலட் சாஸினை கைகள் கலந்தாலும்,

‘இவர் நிண்டிருந்தா எவ்வளவு நல்லாருந்திருக்கும். என்ர கறி எண்டா ஒரு வெட்டு வெட்டுவார்.’ என்று எண்ணுகையில் மனதில் கவலையாயும் இருந்தது.

‘அங்கபோய் நல்லா சமைச்சு குடுக்கோணும். எங்கட சாப்பாட்டுக்கு ஏங்கிப்போய் இருக்கிறார்.’

விறுவிறு என்று வேலைகளை முடித்துப் பாவித்த பாத்திரங்களை எல்லாம் கழுவி வைத்தாள்.

காலையிலேயே வீட்டையெல்லாம் கூட்டித் துடைத்துவிட்டபடியால் கிச்சனை மட்டும் மீண்டுமொருமுறை கூட்டி மொப்பண்ணி விட்டாள்.

அதுவரை டிவியில் மூழ்கி இருந்த மகளைத் தூக்கிக்கொண்டுபோய் ஒருமுறை தண்ணீருக்குள் போட்டு எடுத்து, மஞ்சளில் சிவப்பு குட்டிக்குட்டி பூக்கள் போட்ட குடை போன்று விரிந்த பாவாடைக்குச் சிவப்பில் லேஸ் வைத்த கையில்லா சட்டையும் போட்டுவிட்டாள்.

தகப்பன் வாங்கிக் கொடுத்த செயின் அவள் கழுத்துக்குக் குடியேறியது. பாக்கிறவர்களின் கண்ணுக்கு எந்த விதத்திலும் கணவனின் தராதரம் குறைந்துவிடக் கூடாதல்லவா!

இரண்டு தென்னை மரங்களைத் தலையில் கட்டிவிட்டாள். முன் நெற்றியில் மட்டும் கொஞ்சமாய் முடிகளை நெற்றிக்கு வாரிவிட்டுக் கறுப்பில் பொட்டும் வைத்துவிட்டுப் பார்க்க, அச்சு அசல் பார்பி டாலாகவே தெரிந்தாள் பெண்!

‘இப்ப உன்ர அப்பா இருக்கோணும்! அவருண்ட செல்லம்மாவ கீழவே விடமாட்டார்’ என்று ஆசையோடு மகளைக் கொஞ்சிவிட்டு ஓடிப்போய்த் தானும் குளித்து ஒரு முழங்கால் வரையிலான பாவாடை சட்டையை அணிந்துகொண்டாள்.

அந்தப் பூக்கள் கொண்ட நெக்லஸ் அவள் கழுத்துக்குக் குடியேற, மகளின் உறக்கத்தைக் கெடுத்துவிடும் என்று கழட்டி வைத்திருந்த மணிகள் பொருத்திய கால் சலங்கையைக் கால்களுக்கு அணிந்துகொண்டாள். மிதமான அலங்காரத்தில் அவளும் தயார்!

எல்லா வேலையும் முடித்தாயிற்று! இனி வரவேண்டியவர் வருவது மட்டும் தான் நடக்கவேண்டியது!

மகளோடு சோபாவில் அமர்ந்து, விக்ரம் அழைத்திருக்கிறானா என்று தன் செல்லை எடுத்துப் பார்த்தாள். ம்ஹூம்! காணோம்!

அவளே மீண்டும் அழைத்தாள். இப்போது ரிங் போனது எடுக்கவில்லை.

‘என்னவோ கடும் வேலபோலதான் இருக்கு. இல்லாட்டி எடுக்காம இருக்கமாட்டார்.’ என்று எண்ணியபடி,

“அப்பா, சமையல் எல்லாம் முடிச்சிட்டன். ஒருக்கா அவர் எத்தனை மணிக்கு இங்க வருவார் எண்டு கேட்டுச் சொல்லுங்கோ.” என்று அவனுக்கு மெசேஜ் அனுப்பிவிட்டு அவனது பதிலுக்காகக் காத்திருந்தாள்.

பதில் வரவே இல்லை. சரி என்று மகளோடு சேர்ந்து அவளின் பொம்மைகளை வைத்து விளையாடிக்கொண்டிருக்க, வீட்டு அழைப்புமணி ஒலித்தது.

சட்டென்று பரபரப்பாகிப் போனாள் யாமினி.

வேகமாக வாசலுக்கு விரைந்து கதவைத் திறந்தாள்.

திறந்தவள் அடுத்தக் கணமே, “அப்…பா!!” என்றாள் ஆனந்தமாய் அதிர்ந்து!

விருந்தினரை எதிர்பார்த்து அவள் திறக்க, அங்கே புன்னகை முகமாய் ஒரு கையில் பயணப் பெட்டி சகிதம் நின்றிருந்தான் விக்ரம்!

‘நிற்பது அவன் தானா?’ இதயம் சந்தோசத்தில் எம்பி எம்பித் துடிக்கத் தொடங்க, அப்படியே சிலையாகி நின்றுவிட்டாள்!

“அவ்வளவு தூரத்துல இருந்து வந்தவன வா எண்டு கூப்பிட மாட்டியா?” அவளின் ஆனந்த அதிர்வை ரசித்தபடி கேட்டான் விக்ரம்.

“இப்படித் திடீர் எண்டு வந்து நிண்டா? எனக்கு நம்பவே முடியேல்ல.” என்று இவள் சொல்லிக்கொண்டிருக்க,

அங்கே சோபாவில் இருந்த சந்தனா, தகப்பனின் குரலைக் கேட்டதுமே முகம் பூவாய் மலர்ந்து மின்ன, “ப்பா… பா… ப்பா.” என்று ஆரவாரக் கூச்சலிட்டபடி ஓடிவந்தாள்.

இரண்டெட்டில் விரைந்து வந்து அவளை அப்படியே தூக்கிக் கொண்டான் விக்ரம்!

சின்னவளோ அவன் கழுத்தைக் கட்டிக்கொண்டு முகத்தோடு முகம் புதைத்துத் தன் சந்தோசத்தைக் காட்டினாள்.

“என்ர செல்லம்மாவ பாக்க அப்பா வந்திட்டேனே.” என்றவாறு, பெண்ணை அணைத்து முத்தமிட்டவனையே யாமினியின் விழிகள் வட்டமிட்டது!

மகளின் ஆர்ப்பரிப்புத்தான் இவள் மனதிலும்! அவள் செய்யும் அத்தனை அன்புப் பரிமாற்றங்களையும் தானும் செய்ய உள்ளம் உந்தியது!

தன் மீதே விழிகளைப் பதித்து அப்படியே நின்றவளை பார்த்தான் விக்ரம். கண்கள் நான்கும் கவ்விக்கொண்டன! விலகவேயில்லை! அவன் இதழ்களில் புன்னகை அரும்பியது. அவளை நெருங்கி, கன்னத்தில் தட்டி, “என்ன?” என்றான்.

ஒன்றுமில்லை என்று தலையசைத்தாள் புன்னகையோடு. கண்கள் மெலிதாகக் கலங்கிற்று! அவனை விட்டு விழிகளை அகற்றவே இல்லை!

மகளோடு சேர்த்து அவளையும் மெல்ல அணைத்தான்.

“என்னம்மா இது? சந்தோசப்படுவாய் எண்டு பாத்தா கண் கலங்கிற?” அவள் கேசத்தை ஒதுக்கியபடி அவன் கேட்க,

“இல்லையப்பா. இது சந்தோசத்துல வந்தது. ஆனா, இண்டைக்கு உங்கள பாப்பன் எண்டு கனவுலையும் நினைக்கேல்ல. சமைக்கேக்க கூடக் கவலையா இருந்தது. என்ர மனுசன் நிண்டா ஆசையா சாப்பிடுவாரே எண்டு.” என்றவள் அவன் கரங்களைப் பற்றினாள்.

அவளுக்கு அவனின் கதகதப்பை உணர்ந்து அவன் வந்து விட்டான்தான் என்பதை மனதால் உணரவேண்டி இருந்தது.

மனம் கனிய, மகளை விளையாட விட்டுவிட்டு மனைவியின் கன்னங்கள் இரண்டையும் பற்றி நெற்றியில் மென்மையாக இதழ்களைப் பதித்து மீட்டான் விக்ரம்!

“அதுதான் வந்திட்டேனே. பிறகென்ன?” என்றான் இதமாக.

“ம்ம்.” என்றபடி அவன் தோள் சாய்ந்துகொண்டாள் யாமினி. அவனும் ஒருகையால் அவளை அணைத்தபடி கன்னத்தை வருடிக்கொடுத்தான். அத்தனை பாரங்களும் கரைந்து நெஞ்சிலே இதம் படர்ந்தது!

“இரவு என்னோட கதைக்கேக்க கண்ணா கூடச் சொல்லேல்ல.” நிமிர்ந்து அவனைப் பார்த்துக் கேட்க,

“நான் தான் சொன்னனான் சொல்ல வேண்டாம் எண்டு.” என்றான் விக்ரம்.

“உங்கள! சொல்லி இருந்தா எயாபோட்டுக்கே வந்திருப்பன் தானே.” என்றாள் முறைப்போடு.

“சொல்லாம கொள்ளாம வந்தா என்ர மனுசி ஆசையா கவனிப்பாள் எண்டு பாத்தா… நீ முறைக்கிறாய்.” என்றான் சிரிப்போடு.

“முறைக்கிறேல்ல உங்களுக்கு முதுகுலேயே ரெண்டு போடோணும்.” என்றவள், “கண்ணாவையும் கூட்டிக்கொண்டு வந்திருக்கலாம் தானே. அவன் அங்க தனியா பாவம் எல்லோ.” என்றாள்.
 

நிதனிபிரபு

Administrator
Staff member
“நான் கூப்பிட்டனான். அவன் தான் வரமாட்டானாம். இங்க சரியான வெயிலாம்.”

“ம்ம். போனமுற இங்க நிக்கேக்க சரியா கஷ்டப்பட்டவன்தானே.” என்றவளுக்கு, அவன் இங்கு நின்றபோது இரவில் காற்றாடி வேலைசெய்தாலும் புழுக்கம் தாங்காமல் அவன் உறக்கமின்றித் தடுமாறியதும் விக்ரம் இரவிரவாக மகனுக்கு அருகே அமர்ந்து விசிறியதும், அடுத்தநாளே ஓடிப்போய் ஒரு ஏசி வாங்கி வந்ததும் நினைவில் வந்தது.

“சரி வாங்கோ சாப்பிட. பசியா இருக்கும்.” என்று அழைத்தாள்.

அவளுக்குத் தெரியும், அவள் கைச்சமையலைச் சாப்பிட என்றே வயிற்றை வெறுமையாகக் கொணர்ந்திருப்பான் என்று!

“செல்லம்மா சாப்பிட்டாவா?”

“இல்ல… வாறதா சொன்ன அண்ணா வரட்டும் எண்டு.” என்று சொல்லிக்கொண்டு வந்தவள் நின்று திரும்பி, “அது பொய்தானே?” என்று கேட்டாள்.

அவன் சிரிக்க, “அப்ப எப்பவோ ப்ளான் பண்ணீட்டீங்க இங்க வாறதுக்கு. எங்களிட்ட சொல்லேல என்ன? உங்கள என்ன செய்யலாம் சொல்லுங்கோ?” என்றாள் கோபமாக.

“என்ன வேணுமெண்டாலும் செய். இப்ப செல்லம்மாவுக்குச் சாப்பாட்ட கொண்டுவா.”

“நான் அவவுக்குக் குடுக்கிறன். நீங்க குளிச்சிட்டு வாங்கோ.” என்றபடி அவள் கிட்சனுக்குப் போக,

“நானே குடுக்கிறன். தா” என்றான் அவன்.

மகள் மீதான அவனின் ஏக்கமும் பாசமும் தெரிய, ஒன்றும் சொல்லாமல் மனம் நிறையப் போட்டுக் கொடுத்தாள்.

‘பிறகு நானும் அவரும் ஓண்டா சாப்பிடலாமே..’ ரகசியமாக எண்ணம் ஓடியது!

அவன் உணவைக் கொடுக்க அவளும் தகப்பனின் மடியில் இருந்தே வாங்கிக்கொண்டாள்.

அதன்பிறகும் சந்தனா தகப்பனின் மடியை விட்டு அகலவே இல்லை!

“செல்லம்மா இருக்கிறீங்களா. அப்பா ஓடிப்போய்க் குளிச்சிட்டு வாறன்?” என்று மனைவியிடம் பிள்ளையைக் கொடுத்துவிட்டு அவள் எடுத்து வைத்திருந்த பைஜாமா, துவாய் சகிதம் குளியலறைக்குள் புகுந்துகொண்டான் விக்ரம்.

அவன் குளித்து முடித்த சத்தம் கேட்கவும்,

“குட்டிம்மா பொம்மையோட இருந்து விளையாடுங்கோ. அம்மா அப்பாக்கு சாப்பாட்ட போட்டுக் குடுத்திட்டு வாறன். அப்பாக்கும் பசிக்கும் எல்லோ.” என்று மகளைச் சோபாவில் விட்டுவிட்டு அவள் போய்த் தேசிக்காயை(லெமன்) இரண்டாகப் பிளந்து கறிகளுக்குப் பார்த்துப் பார்த்துத் தேசிப்புளி பிழிந்து விட்டாள்.

கறிகளை ஒருமுறை கிளறிவிட்டு, தட்டில் இவள் சோற்றை இட, அங்கே இவள் மகளோ, “ப்பா… ப்பா!” என்று அவனை ஏலம் விட்டுக்கொண்டிருந்தாள்.

“இந்தா வாறன் செல்லம்.” என்று விக்ரம் சொல்வதும் கேட்டது.

இதழோரம் புன்னகை அரும்பிற்று யாமினிக்கு.

‘இனி இதுதான் நடக்கும்! அப்பாவ மகளும் மகள அப்பாவும் வால் பிடிச்சுக்கொண்டு திரிவீனம்.’

வேக வேகமாகக் குளித்து உடையை மாற்றிக்கொண்டு கதவைத் திறந்த விக்ரம், அவன் கொடுத்த பார்பியை அணைத்தபடி நிலத்தில் அமர்ந்திருந்து குளியலறைக் கதவிலேயே சாய்ந்து தனக்காகக் காத்திருந்த பெண்ணைக் கண்டு உருகியே போனான்.

இதில் அவன் கதவைத் திறந்ததில், அதை எதிர்பாராதவள் பின்னால் சரியவும் வேகமாகக் குனிந்து தூக்கிக் கொண்டான்.

“என்ர செல்லம் அப்பா இல்லாம ஏங்கிப் போனவளே..” என்று கேட்டபடி யாமினியை தேடி சமையலறைக்கு வந்தான்.

அவள் தட்டில் உணவிடுவதைக் கண்டுவிட்டு கறிகளை ஆராய்ந்தான்.

“பெரிய விருந்துதான் போல..”

“பின்ன? உங்கட பிரெண்ட் வாறார் எண்டா வடிவா கவனிக்க வேண்டாமா? சமைக்கேக்க எனக்குச் சரியான கவலை. பாத்து பாத்து செய்றன் சாப்பிட நீங்க இல்லையே எண்டு பாத்தா சொல்லாம கொள்ளாம வந்து நிக்குறீங்க.”

“அப்ப நான் திரும்பப் போயிட்டு சொல்லீட்டு இன்னொருக்கா வரட்டா?” என்று கேட்டபடி, மகளோடு கிச்சன் பலகையில் ஏறி அமர்ந்துகொண்டான் விக்ரம்.

“அவள தந்திட்டு நீங்க சாப்பிடுங்கோ.” என்று கைகளை நீட்ட, அவளோ இவளிடம் வர மறுத்தாள்.

“பாருங்கோவன் இவளின்ர சேட்டைய! இவ்வளவு நாளும் எல்லாத்துக்கும் நான் வேணும். உங்கள கண்டதும் என்னட்ட வரமாட்டாவாம்!” அவனிடம் செல்லமாக முறையிட்டாள்.

அவனோ தன் பெண்ணைச் சின்னச் சிரிப்போடு ரசித்துக்கொண்டிருந்தான். “குட்டி அப்பான்ர செல்லம், என்னம்மா?” என்றான் மகளிடம். அவளும் ஆமென்று தலையசைத்துத் தகப்பனைக் கட்டிக்கொண்டாள்.

“குட்டி வாங்கோ. அப்பா சாப்பிடட்டும்!” என்று கூப்பிட்டும் அவள் வர மறுக்க,

“விடு! அவள் இருக்கட்டும். எனக்கு இப்ப பசியில்ல.” என்றான் அவன்.

கண்களில் பசி தெரிந்தாலும் மகளுக்காக அதை மறைத்தவனிடம், “இனி ரெண்டுபேரும் நான் சொல்றத கேக்கமாட்டீங்க.” என்றுவிட்டு ஒரு ஸ்பூனை எடுத்து உணவைக் குழைத்து, அள்ளி, “ஆவெண்டுங்கோ.” என்றபடி அவன் வாய் அருகே கொண்டுபோனாள் யாமினி.

அவள் இப்படிச் செய்வாள் என்று கொஞ்சமும் எதிர்பாராத விக்ரம் யாமினியையே பார்த்தான்.

“சந்துவ விட நீங்க மோசமா இருப்பீங்க போல. ஆ காட்டுங்கோப்பா.”

அவளையே பார்த்தபடி விக்ரம் வாயைத் திறக்க, உணவை அவனுக்குக் கொடுத்தாள் யாமினி.

மகள் அவர்கள் இருவரையும் மாறி மாறிப் பார்க்க, “குட்டிக்கும் வேணுமா?” என்று கேட்டு ஒரு வாய் அவள் அருகே கொண்டு செல்ல, முகத்தைத் திருப்பிக்கொண்டு தகப்பனிடமிருந்து நழுவி ஓடினாள் சின்னவள்.

சின்னவளின் கள்ளத்தனத்தில் பெரியவர்கள் இருவரும் ரசித்துச் சிரித்தனர். “எங்கட பேச்சைக் கூடக் கேக்காதவள ஒருவாய் சோறு கேக்கவைக்குது.” என்றவள்,

“இந்தாங்கோ.” என்று தட்டை நீட்ட அவனோ அதை வாங்காமல் அவளையே பார்த்தான்.

“என்ன? இனியாவது பசியாற சாப்பிடுங்கோவன்.”

“நீயே தா!” என்றான் அவன்.

இதென்ன என்று பார்த்தாள் யாமினி.

பசியோடு இருக்கிறானே என்றுதான் அவள் கொடுத்ததே!

“ஏன் தரமாட்டியா?” என்று கேட்டவன் அவளை இரண்டு கைகளாலும் வளைத்துத் தனக்குள் கொண்டுவந்தான். கரங்கள் இரண்டையும் அவளின் பின்னால் கொண்டுபோய் ஒன்றோடு ஒன்றை கோர்த்துக்கொண்டான்.

அவனின் கைகளுக்குள் அவள்!

தேகமெல்லாம் சிலிர்ப்போடியது யாமினிக்கு!

அப்போதுதான் குளித்துவிட்டு பிரெஷ்சாக வந்தவனிடம் இருந்துவந்த வாசனை வேறு அவளைத் திக்குமுக்காட வைத்தது!

“சந்து வந்தாலும். விடுங்கோ!” என்று அவள் தடுமாற,

“செல்லம்மா இப்போதைக்கு வரமாட்டா. நீ சாப்பாட்ட தா.” என்றான் அவன்.

“இல்லாட்டியும் பரவாயில்ல. பிள்ளைகளுக்குத் தெரியோணும் அம்மாவும் அப்பாவும் ஒருத்தருக்கு ஒருத்தர் எவ்வளவு பாசமா இருக்கீனம் எண்டு.”

அதற்குமேல் ஒன்றுமே சொல்லாமல், அவனிடம் சொல்வதில் பிரயோசனமும் இல்லை என்று தெரிந்து உணவைக் கொடுக்க, “ம், சொல்லு! நானில்லாம இந்த மூண்டு மாதமும் எப்படிப் போச்சு?” என்று விசாரித்தான் விக்ரம்.

“ஏதோ போச்சு. பள்ளிக்கூடமும் பிள்ளையும் எண்டு.” தன் வேதனையை மறைத்துக்கொண்டு அவள் சொல்ல, சற்றுநேரம் அவளையே பார்த்தான் விக்ரம்.

அவன் கண்களைச் சந்தியாது உணவைக் கொடுத்தாள் யாமினி.

“கஷ்டமா இருந்ததா?” என்று மென்குரலில் அவன் கேட்கையிலேயே இவள் கண்கள் மெலிதாகக் கலங்கிற்று!

அதை மறைக்கும் சிரிப்போடு, “முதல் அப்படித்தான். பிறகு பழகீட்டுது.” என்றாள்.

“ம்ம்..” என்றபடி அவளின் முடிக்கற்றைகளைக் காதோரம் ஒதுக்கிவிட்டான் விக்ரம்.

கண்களில் நாணம் படர அவள் பார்க்க, “நீயும் சாப்பிடு!” என்றான் பாசத்தோடு.

“இல்ல. முதல் நீங்க சாப்பிடுங்கோ.” எனவும்,
ஸ்பூனை வாங்கி அவளுக்குத் தான் கொடுத்தான் விக்ரம்.

“இன்னும் கொஞ்ச நாள்தானே..” என்றான் ஆறுதலாக.

“இப்பவே உன்ன கூப்பிடுறதுக்குத் தேவையான வேலை எல்லாம் அங்க பாக்கத் தொடங்கீட்டன். நீ பாசானதும் அந்தச் செர்டிப்பிக்கேட்ட இங்க காட்டினதும் அங்க வரலாம்.” என்றான் ஆறுதலாக.

“படிப்பு எப்படிப் போகுது?” என்று கேட்டான்.

“நல்லா போகுது. எனக்கு இப்ப டொச் படிக்க விருப்பம்.” என்றாள் அவள்.

“ஓ.. அப்ப நான் கேட்டதுக்கும் உனக்குப் பதில் தெரியும்.”

“தெரிஞ்சா என்னவாம்?” என்றாள் அவள் சிரிப்போடு.

“வரவர நீயும் மோசமாத்தான் வாறாய்.” என்று என்னென்னவோ கதைத்தபடி அவர்களின் உணவு வேளை மிக அழகாகவே கழிந்தது.
 

Google Typing

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.

Top Bottom