• நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.
    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

நினைவெல்லாம் நீயாகிட வந்தேன் - 2

நிதனிபிரபு

Administrator
Staff member
அத்தியாயம் 2


இவனைக் கண்டதும் அதிர்ந்துபோய் அப்படியே நின்றுவிட்டாள் யாஸ்மின்.

அவளையே பார்த்து, “உள்ள வரலாமா?” என்று கேட்டான் விக்ரம்.

“வாவா… உள்ளுக்கு வா விக்கி!” மலர்ந்த முகத்தோடு வரவேற்றாள் யாஸ்மின்.

“எப்படி இருக்கிற விக்கி? என்ன திடீரென்று வந்திருக்கிறாய்? டெனிஷ் எப்படி இருக்கிறான்?” என்று அவள் கேள்விகளை அடுக்க, அன்றிலிருந்து இன்றுவரை இயல்பு மாறாமல் படபடக்கும் அவளை அவன் விழிகள் ஆராய்ந்தன.

தோளைத் தொட்டுக்கொண்டிருந்த முடியை ஆண்களைப் போன்று வெட்டி விட்டிருந்தாள். கன்ன உச்சி பிரித்து இழுத்திருந்தவளின் முடி, ஒற்றைப் பக்கப் புருவத்தில் வந்து மோத, அதை நளினமாக ஒதுக்கிவிட்டு, “என்ன குடிக்கிறாய் விக்கி? கபே தரவா?” என்று அவனை அறிந்தவளாகக் கேட்டாள்.

“ம். கொண்டுவா!”

அவள் சமையலறைக்குள் சென்றதும் வீட்டை ஆராய்ந்தான். பெரிய வசதி இல்லை என்பது பார்த்தாலே தெரிந்தது. ஒரு குட்டி ஹோல். தமிழ் எழுத்து ‘ட’ ஷேப்பில் அமைந்த சிறு சோபா. அதுவும் பழையது. அதற்கு முன்னால் சின்னதாக ஒரு டிவி. அவ்வளவுதான்.

சொல்லாமல் கொள்ளாமலே அவள் ஆசைப்பட்டு வாங்கிய அவர்கள் வீட்டு சோபாவும், ஒரு பக்கச் சுவரையே பிடித்திருந்த தொலைக்காட்சியும் மனக்கண்ணில் வந்தன.

அவள் கொண்டுவந்த கபேயை அருந்தியபடி, “எப்படி இருக்கிறாய்?” என்று விசாரித்தான்.

“நானும் டிம்மும் நல்ல சந்தோசமா இருக்கிறம் விக்கி. எங்களுக்கு ஒரு மகள் இருக்கிறாள். சாராவுக்கு ஒரு வயசுதான். அதால வீட்டுலேயே இருந்து அவளைப் பாக்கிறன்.”

உற்சாகப்பந்தாய் அவள் சொல்லும்போதே, “மம்மா…” என்றபடி கண்ணைக் கசக்கிக்கொண்டு எழுந்து வந்தாள் ஒரு குட்டி தேவதை.

தேவதையேதான்!

இவனைக் கண்டதும் விழிகளை உருட்டிப் பார்த்தாள். இவனும் அவளையே பார்க்க, உருண்டைக் கண்களில் குழப்பமும் பயமும் தோன்ற ரோஜா இதழ்கள் பிதுங்கத் தொடங்கின.

“சாரா, இங்கே வா!” என்று அழைத்தாள் யாஸ்மின்.

ஓடிப்போய்த் தாயின் மடியில் அமர்ந்துகொண்டாள் குழந்தை. அவனால் அந்தக் குழந்தையிடமிருந்து விழிகளை அகற்றவே முடியவில்லை. டெனிஷை சிறு வயதில் பார்த்தது போலவேயிருந்தாள்.

“நீ சந்தோசமாக இருக்கிறாயா யாஸ்… யாஸ்மின்?” என்றவனின் விழிகள், அவர்களின் வசதிக்குறைவைச் சுட்டுவது போல அந்த வீட்டைச் சுற்றிச் சுழன்றன.

அதைக் கவனித்துவிட்டுப் புன்னகைத்தாள் யாஸ்மின். “சந்தோசம் எண்டு நீ எத நினைக்கிறாய் விக்கி? வீட்டில இருக்கிற பொருளையும் காசையுமா? அது தப்பு விக்கி. சந்தோசமும் மகிழ்ச்சியும் மனதிலதான் இருக்கு. அப்படிப் பாத்தா நானும் டிம்மும் நல்ல சந்தோசமா இருக்கிறம். என்னை விட்டுட்டு ஒரு நாள் இருக்கமாட்டான் அவன். வருவாய் கொஞ்சம் குறைவுதான். அதுக்கென்ன? என்றைக்குமே காசுக்கு நான் ஆசைப்பட்டது இல்லையே. நானும் வேலைக்குப் போனா இன்னும் நல்லா வாழலாம்தான். ஆனா, சாராவுக்கு மூண்டு வயசாகி, அவள் கிண்டர்கார்டனுக்குப் போன பிறகுதான் வேலைக்குப் போவன். காசு எப்பவும் உழைக்கலாம். ஆனா, சாரா வளந்த பிறகு அவளின்ர சின்ன வயசுச் சந்தோசத்த எங்களால அனுபவிக்க முடியுமா சொல்லு? அத மாதிரித்தான் இளமையும். இருக்கேக்க சந்தோசமா வாழோணும். அத இழந்து கிடைக்கிற எதிலையும் நிறைவும் இல்ல, திருப்தியும் இல்ல.”

“இந்த சாரா மாதிரித்தானே டெனிஷும்?” அவள் சொல்லி முடிக்க முதலே சட்டெனப் பற்றிக்கொண்ட சூட்டோடு கேட்டுவிட்டான் விக்ரம்.

இந்தக் கேள்வியால் இனி எதுவும் மாறிவிடப் போவதில்லைதான். ஆனாலும் பொறுக்க முடியவில்லை. பேச்சற்றுப் போனாள் யாஸ்மின். முகம் கன்றிச் சிவக்க மடியிலிருந்த மகளைத் தன்னோடு அணைத்துக்கொண்டு இவன் முகம் பாராமல் அமர்ந்திருந்தாள்.

என்றைக்குமே மகனுக்கு ஒரு தாயாக அவள் இழைத்த அநீதியை அவளால் நியாயப்படுத்தவே முடியாது என்பதை அவனறிவான்! ஆனால், அவனுக்கும் அவளுக்குமான வாழ்வில், இன்று அவன் உணர்ந்ததை அன்று அவள் உணர்ந்திருக்கிறாள். அன்று அவளைத் தனிமையில் அவன் வாட விட்டிருக்கிறான். என் மனைவியை நெஞ்சில் சுமக்கிறேன், அவளை உயிராக நேசிக்கிறேன் என்று அவனாக அவனுக்குள் ஒரு கற்பிதம் வைத்திருந்திருக்கிறானே தவிர, அவளின் நிலையை உணர மறந்து விட்டிருந்தான்.

“நீ சொல்றது ஒருவிதத்தில சரிதான் யாஸ். இத அண்டைக்கு நான் யோசிக்க மறந்திட்டன். என்னவோ உன்னையும் டெனிஷையும் நல்லா வச்சிருக்கோணும் எண்டு நினைச்சன். அதுக்குக் காசு வேணும். அப்ப எல்லாம் என்ர மனதில நிறையக் கற்பனை. உன்னையும் அவனையும் கூட்டிக்கொண்டு இந்த உலகத்தையே சுத்தோணும். யாரும் வாழாத வாழ்க்கையை உனக்குத் தரோணும் எண்டு நிறைய. புறவாழ்க்கையப் பற்றி யோசிச்ச நான் மனத யோசிக்க மறந்துதான் போனன்.” என்றான் அவன்.

அவள் விழிகள் லேசாகக் கலங்கின. “நீ நல்லவன் விக்கி. என்னை விளங்கிக்கொள்ளுவாய் எண்டு நினைச்சன். அதேமாதிரி விளங்கிக்கொண்டாய்.” தழுதழுத்துச் சொன்னாள்.

“ஆனா ஒண்ட மறந்திட்ட நீ. உன்னக் காதலிச்சுக் கைப்பிடிக்கேக்க நீ சாதாரண விக்கிதான். அந்த விக்கிய, ஏழ்மையிலும் அன்பை மட்டுமே அள்ளியள்ளிக் கொட்டின அந்த விக்கியத்தான் நான் உயிராகக் காதலிச்சனான். அதுக்குப் பிறகு நீ காசுக்குப் பின்னால ஓடத் தொடங்கிட்தாய். இளைப்பாற மட்டுந்தான் என்னட்ட வந்தாய். எனக்கோ நீ பக்கத்தில இருந்து, உன் அன்ப மட்டுமே தரோணும் போல இருந்தது. எண்டைக்குமே காசு பணத்துக்கு நான் ஆசைப்பட்டதில்ல. கையிலிருக்கிற காச வச்சு வீட்டை வாங்கலாம். காரை வாங்கலாம். சந்தோசத்தை? உன்ர அன்ப, உன்னோட கழிக்க ஆசைப்படுற ஒவ்வொரு நிமிசத்த எதக் குடுத்து வாங்க?”

அன்று கேட்க மறுத்ததை இன்றாவது கேட்கிறானே என்கிற நிம்மதி அவளிடம்! மனதில் இருந்தது எல்லாம் கொட்டினாள்.

ஆனால், அவன் முகத்தில் உணர்ச்சிகளே இல்லை.

எங்கோ வெறித்துக்கொண்டு, “உன்ர மனதை நீயாவது சொல்லியிருக்கலாம் யாஸ். வேறொரு வாழ்க்கையத் தேடமுதல் உன்ர விருப்பத்த, ஆசைய, ஏக்கத்த என்னட்ட ஏன் சொல்லேல்ல? சாராவப் பற்றி இண்டைக்கு இவ்வளவு யோசிக்கிறவள் அண்டைக்கு டெனிஷ் பற்றி ஏன் யோசிக்கேல்ல?” என்று கேட்டான் அவன்.

பதிலின்றித் தலை குனிந்து அமர்ந்திருந்தாள் யாஸ்மின். கணவன் அவர்களுக்காகத்தான் கஷ்டப்படுகிறான் என்று தெரிந்து, மனதின் ஆசைகளையும் இளமையின் தேவைகளையும் அடக்கிக்கொண்டுதான் அவளும் வாழ்ந்தாள். அந்த நேரத்தில்தான் டிம்மின் நட்பு அவளுக்குக் கிடைத்தது.

அவன் என்னவோ சாதாரண நண்பனாகத்தான் அறிமுகமானான். நாட்கள் செல்லச் செல்ல, அவனது அன்பும், நிதானமும், பழகும் விதமும் அவளைக் கவர்ந்து அவள் அறியாமலேயே மனதில் அவன் வந்திருந்தான். அதை அவள் உணர்ந்தபோதோ அவன் முற்றிலுமாக அவள் மனதை ஆக்கரமித்திருந்தான்.

பிறகு எங்கே கணவனிடம் அதைப் பற்றிக் கதைப்பது? அவன்தான் மனதுக்குள் வந்து விட்டிருந்தானே!

ஏற்கனவே நொந்துபோய் இருக்கிறவனிடம் இதை எப்படிச் சொல்வது?

அவள் அமைதியாக இருக்க புதியவனை வேடிக்கை பார்த்து முடித்துவிட்ட சாரா, வீட்டுக்குப் பின்னால் விளையாடப் போனாள். கபே கப்பை எடுத்துக்கொண்டு தானும் அவளோடு நடந்தான் விக்ரம்.

அங்கேயே அமர்ந்திருந்தால் இன்னும் கேள்விகளால் அவளைச் சுட்டுப் பொசுக்கிவிடுவோமோ என்று அஞ்சினான். அந்தளவுக்கு மனம் கொந்தளித்துக் கொண்டிருந்தது!

சின்னத் தோட்டம் வைத்திருந்தார்கள். நான்கு தக்காளி, நான்கு கத்தரி, கொஞ்சமாகக் காரட், மிளகாய்க் கன்று கூட ஒன்று நின்றது. அதை அவன் பார்க்கவும், “உன்னோட இருக்கேக்க பழகினது. எப்பயாவது மிளகா சாப்பிடுவன்.” என்றாள் அவனோடு கூட வந்த யாஸ்மின்.

இலகுவாக அவள் கதைக்க முயற்சிக்கிறாள் என்று விளங்க, “நீ எப்படிச் சாப்பிடுவாய் எண்டு எனக்குத் தெரியாதா? ஒரு மிளகாய நாளா வெட்டி, அத நாலு நாளுக்கு வச்சு சாப்பிடுவாய்.” என்று சொல்லிச் சிரித்தான் விக்ரம்.

“விக்கி! கேலி செய்யாத! நீ சாதாரணமாக நாளு மிளகாயை ஒரே நேரத்தில உள்ள தள்ளுவாய். நான் டிம்மிட்ட கூடச் சொல்லியிருக்கிறன். அவன் வாயப் பிளந்தான்.” என்று சொல்லிச் சிரித்தாள் அவள்.

அந்த நாட்கள் மனக்கண்ணில் ஓட உள்ளே வலி எழுந்தது அவனுக்கு.

அவன் மிளகாயைச் சாப்பிடுவதைப் பார்த்து, “இது அவ்வளவு ருசியாவா இருக்கும் விக்கி?” என்று கேட்டவளின் வாய்க்குள் அன்று அவன் ஒரு மிளகாயைத் திணித்ததும், விவகாரம் தெரியாமல் அவள் அதைச் சப்பியதும், உறைப்புத் தாங்காமல் அவள் பட்ட பாடும், அதைத் தடுக்க அவன் வழங்கிய இதழ் முத்தமும் என்று அவன் நினைவுகள் அந்த நாட்களுக்கு ஓடின. மனமோ இழந்துவிட்ட சொர்க்கத்தை மீட்க வழியின்றிப் போனதில் துடித்துத் துவண்டது.

அன்று மட்டுமல்ல, அடுத்து வந்த வாரம் முழுவதுமே அவள் வயிற்று வலியால் துவண்டதும், அவளைத் தன் குழந்தையைப் போல் தாங்கிப் பேணியதும், காதலில் அவள் உருகியதும் என்று எத்தனை அழகான நாட்கள்!
 

நிதனிபிரபு

Administrator
Staff member
அப்படி அவனோடு வாழ்ந்தவள் எப்படி இன்னொருவனை மனதில் நினைத்தாள்? ஆசையாகப் பெற்ற பிள்ளையை எப்படி மறந்தாள்? என்னதான் தனிமை கொடுமை என்றாலும் அவளின் செயலில் ஏதாவது நியாயம் இருக்கிறதா?

கேள்வி நெஞ்சில் எழ அவளைத் திரும்பிப் பார்த்தான். சேமித்து வைத்திருந்த மழை நீரை அவர்களின் குட்டித் தோட்டத்துக்கு அள்ளி ஊற்றிக்கொண்டிருந்தாள் யாஸ்மின். அவளுக்குப் பின்னால் தானும் தோட்டத்துக்கு நீர் விடுகிறேன் என்கிற பெயரில் தன்னை நனைத்துக் கொண்டிருந்தாள் சாரா.

இவன் பார்க்கவும், “என்ன பாக்கிறாய்?” என்று கேட்டாள் யாஸ்மின்.

மனதில் இருப்பதைச் சொல்ல முடியாமல், “இது சொந்த வீடா யாஸ்? தோட்டம் எல்லாம் வச்சிருக்கிறாய்.” என்று விசாரித்தான்.

“இல்ல. வாடகை வீடுதான். ஆனால், உரிமையாளர் நல்ல மனுசன். அதால சொந்த வீடு மாதிரித்தான் எங்களுக்கு.”

“வாழ்க்கை எப்படிப் போகுது யாஸ்? நான் ஏதாவது உதவி செய்யவா? எது எண்டாலும் யோசிக்காம கேளு! கட்டாயம் செய்றன்.”

அவள் புருவங்களைச் சுருக்கவும், “பிழையாக் கேக்கேல்ல யாஸ். என்னட்ட தேவைக்கு அதிகமாகவே இருக்கு. அது உனக்குத் தேவைப்பட்டா எனக்கு அதுல சந்தோசம். அதால மட்டும்தான் கேக்கிறன்.” என்றான் அவன்.

“எனக்கு உன்னத் தெரியாதா விக்கி? ஆனா, மெய்யாகவே தேவை எண்டு எதுவுமே இல்லை. என்னில உயிரையே வச்சிருக்கிற அன்பான கணவன், அழகான குட்டி சாரா, சின்ன வீடு, போதுமான சம்பாத்தியம், போதாக்குறைக்கு நம் மகன் டெனிஷ். இதவிட வேற என்ன வேணும் சொல்லு?”

அவளையே பார்த்தான் விக்ரம்.

என்னைத் தெரியும், என் மனதைத் தெரியும், என் எண்ணங்களைத் தெரியும். இப்படி என்னைப் பற்றி எல்லாவற்றையும் தெரிந்து வைத்திருந்தவள் ஏனடி என்னை விட்டுப் போனாய் என்று கத்த வேண்டும் போலிருந்தது.

அடக்கிக்கொண்டான்!

அவள் கட்டாயப்படுத்தித் தந்த மதிய உணவையும் முடித்துக்கொண்டு அவன் விடைபெற்றபோது, மனதில் எந்தளவு தூரத்துக்கு வலி இருந்ததோ அந்தளவு தூரத்துக்கு நிறைவாகவும் உணர்ந்தான்!

அவன் நேசித்த பெண், அவளாவது சந்தோமாக வாழ்கிறாளே!
சாராவோ அதற்கிடையில் அவனோடு நன்றாக ஒட்டிவிட்டிருந்தாள். தன் மகனைப் போன்ற சாயலில், தான் நேசித்த பெண்ணின் வடிவில் இருந்த குழந்தையைக் கையிலிருந்து இறக்கவே முடியவில்லை அவனால்.

அவனது முன்னாள் மனைவியின் இந்நாள் கணவனின் குழந்தை என்று தெரிந்தாலும் முடியவில்லை. பாசம் உள்ளே பொங்கிற்று!

“இவள எனக்கே எனக்கென்று தந்துவிடேன் யாஸ். என்னால் இவள விட்டுவிட்டுப் போக முடியும் போலத் தெரியேல்ல.” என்றான் கைகளில் இருந்தவளை இறக்க மனமற்று.

யாஸ்மினின் கண்களிலிருந்து பொலபொலவென்று கண்ணீர் கொட்டியது. “டெனிஷை பிரிஞ்சு இருக்கிறதையே என்னால இண்டைக்கு வரைக்கும் தாங்க முடியேல்ல விக்கி. என்ன இருந்தாலும் உனக்கு நான் செய்தது பெரிய துரோகம். இதுல அவனையும் உன்னட்ட இருந்து பிரிச்சா நீ தாங்கமாட்டாய் எண்டுதான் அவன உன்னட்டையே விட்டுட்டு வந்தேன். இவளையும் தந்துவிட்டு என்னை என்ன செய்யச் சொல்றாய் விக்கி?” என்று அவள் கேட்டபோது, அவன் கண்களும் பனித்துவிட்டன.

சட்டென்று அங்கிருந்து நகர்ந்து வீதிக்கு வந்தான். சாரா வீதியை வேடிக்கை பார்க்க, அவன் நெஞ்சமோ பூகம்பத்தின் பிறப்பிடமாகிப் போனது.

அழகாக அவன் பார்த்துப் பார்த்துக் கட்டிய குருவிக்கூடு சிதைந்தே போயிற்று! இனி சீரமைக்கவே முடியாது!

தன் உணர்வுகளை அடக்கிக்கொள்ளப் பெரும் சிரமப்பட்டான் விக்ரம்.

தாயைத் தேடியோ என்னவோ அவன் தோளுக்குப் பின்னால் பார்க்க முற்பட்ட சாராவின் செப்பு இதழ்கள் அதன்பாட்டுக்கு இவன் கன்னத்தை உரசிச் செல்ல, சிலிர்த்துப்போய்த் திரும்பி, பனித்த விழிகளால் அந்தக் குட்டியைப் பார்த்தான்.

அவள் தாயைத் தேடுவது கண்ணில் பட்டது. உண்மை உறைக்க, நிகழ்காலமும் நினைவுக்கு வந்தது.

மனம் கனத்தாலும் யாஸ்மினின் சந்தோசமான வாழ்க்கை ஒருவித நிறைவைத்தான் கொடுத்தது அவனுக்கு.

சாராவை அவளிடம் கொடுத்துவிட்டு விடைபெற்றான்.

“விக்கி…” தயக்கத்தோடு அழைத்தாள் யாஸ்மின்.

கதவைத் திறந்து காருக்குள் ஏறப் போனவன் நின்று பார்த்தான்.

“இன்னொரு திருமணத்தைப் பற்றி யோசிக்கலாமே.” மெல்லச் சொன்னாள்.

அவளையே பார்த்தான் விக்ரம். நெடிய மூச்சொன்றை இழுத்துவிட்டான். பின், “யோசிக்கிறன்.” என்றுவிட்டுக் காரிலேறிச் சென்றான்.

நாட்கள் அதன்பாட்டுக்கு நகர்ந்தன.

அவ்வப்போது இன்னோர் திருமணம்பற்றி யோசனை வரும். யாரை என்று நினைத்ததும் யாஸ்மினின் முகம் மட்டுமே மனக்கண்ணில் மின்னும். சில நேரங்களில் நான் இவ்வளவு ஆழத்துக்கு அவளை நேசித்திருக்கக் கூடாதோ என்றும் நினைத்துக்கொள்வான்.

அன்று அசோக், “ஒரு இடத்துக்குப் போவம் வா.” என்று இவனை இழுத்துக்கொண்டு வந்திருந்தான்.

அது ஒரு சிவப்பு விளக்குப் பகுதி!

அந்த இடத்தைப் பார்த்ததும், “என்னடா இங்க வந்திருக்கிற?“ என்று கேட்டான் விக்ரம்.

“இங்கதான்! நீ போய்ட்டு வாடா.”

நண்பனை வியப்போடு திரும்பிப் பார்த்தான். “நான் நல்லவனா இருக்கிறதுல உனக்கு என்னடா கஷ்டம்?” இலகுவாகவே கேட்டான்.

அவனோ தீவிரமாக இருந்தான். “இங்கே வாறவே எல்லாரும் கெட்ட மனுசர் இல்ல விக்கி. நீயும் எண்டைக்குமே நல்லவன்தான். அதால எதப்பற்றியும் யோசிக்காம போ.”

அதுவரை இருந்த இலகுத்தன்மை அகன்றது.

“திடீரெண்டு ஏன்டா இந்த முடிவுக்கு வந்த?”

“நீ படுற கஷ்டத்த பாத்துத்தான்! நானும் ஒரு ஆம்பிள. உன்ர கஷ்டம் எனக்கு விளங்காதா? போ மச்சான்.” என்றான் அவன் தோளில் தட்டி.

“என்னடா என் நிலை?”

“தனியா இருக்கிறியேடா. மனுசி எண்டு ஒருத்தி இல்ல. அண்டைக்கு எடுத்து ஃபோன்ல கத்தினாயே. பிறகும் என்னடா?”

“உண்மைதான். பக்கத்துல ஒருத்தி இருந்தா எவ்வளவோ நல்லம் எண்டு இப்பவும் நினைக்கிறன்தான். அது வெறும் உடம்பு தேவைக்கு மட்டுமில்ல. அதுவும் தேவைதான். அதவிட முக்கியமாக மனதுக்குத்தான்டா ஒரு துணை தேவ. என்னோட கதைக்க, என்னோட சேர்ந்து சிரிக்க, என்னோட சேர்ந்து ஒரு கப் கஃபே குடிக்க, என்னோட சேர்ந்து நடக்க, இரவில தூங்கும்போது அருகில் துணையாக உறங்க, எனக்குச் சமைத்துத் தர, என்னோட சேர்ந்து சாப்பிட, என்னோட சண்டை பிடிக்க, எனக்கு எதையாவது வாங்கித்தா எண்டு அடம்பிடிக்க, அவளுக்காக எண்டு ஒண்டை நான் செய்ய எண்டு இப்படிப் பலதுக்காக எனக்கு ஒரு துணை வேணும்தான். ஆனா, இதுக்காக மட்டும் ஒரு பொம்பிளைட்ட வாறது… ப்ச் அது கேவலமடா! அந்தக் கேவலத்தை என்னைச் செய்யச் சொல்றியா?” சின்னக் கோபம் எட்டிப் பார்த்தது அவன் பேச்சில்.

“லூசன் மாதிரி பேசாத! உன்ன நானே அப்படிச் சொல்லுவனா? நீ சொல்ற மாதிரி ஒருத்தி எண்டா அது மனுசியாத்தான் இருக்கவேணும். நல்லவளா ஒருத்திய நானே பார்க்கிறன். அது பிறகு. இப்ப நீ இங்க போய்ட்டு வா.” என்றான் அசோக்.

“நோ மச்சான். இங்க வாறதா இருந்தா எண்டைக்கு யாஸ்மின் என்னை விட்டுப் போகக் காரணம் என்ன எண்டு உணர்ந்தேனோ, எண்டைக்கு எனக்கு ஒரு துணை வேணும் என்று யோசிச்சனோ அண்டைக்கு வந்திருப்பேன்டா.”

எதற்கும் வளைந்து கொடுக்காத நண்பனை முறைத்தான் அசோக்.

“எல்லாத்திலையும் பிடிவாதம்! ஆரம்பத்தில யாஸ்மினத்தான் கட்டுவன் எண்டு பிடிவாதம். பிறகு வாழ்க்கையில முன்னேற வேணும் எண்டு பிடிவாதம். இப்ப இதுக்கும் பிடிவாதம். இந்தப் பிடிவாதத்தால எவ்வளவு பெற்றியோ அதேயளவு இழந்தும் இருக்கிறாய்.” சலித்துக்கொண்டான் அசோக்.

அவன் பேச்சில் இருந்த உண்மையில் ஒன்றும் சொல்லவில்லை விக்ரம். ஆனால், அந்தப் பிடிவாதம்தான் விக்ரம். அதுதான் அவன் இயல்பு. ஒன்றையே பற்றி அதிலேயே நின்று வென்று காட்டுகிறவன்! அந்த இயல்பை மாற்ற முடியாதே!

“உன்ன இப்பிடியே விட்டா சரியா வராது. உனக்குப் பொம்பிள பாக்க நாங்க நாளைக்கே இலங்கைக்குப் போறம்!” என்றான் முடிவாக.

நேரெதிரே பார்வையைப் பதித்துச் சற்று யோசித்தான் விக்ரம். பிறகு, “நாளைக்குக் கஷ்டம். வேலையெல்லாம் கொஞ்சம் ஒதுக்கிக்கொண்டு போகலாம்.” என்றான்.

அந்தப் பதிலை அவனிடமிருந்து சற்றும் எதிர் பாராததில், “ஹேய்! சூப்பர் மச்சி.” என்று சந்தோசப்பட்டான் அசோக்.

“வாறவளும் என்ன விட்டுட்டுப் போகாம இருந்தா சரிதான்.” என்று சின்னச் சிரிப்போடு சொன்னான் விக்ரம்.

விரக்தி கலந்த அந்தச் சிரிப்பில் இருந்த வேதனையை உணர்ந்தான் அசோக். அவனுக்கு ஒரு நல்லதைச் செய்தே ஆக வேண்டும் என்கிற உறுதியோடு நண்பனின் தோளில் நம்பிக்கையோடு தட்டிக் கொடுத்தான்!



 

Goms

Active member
யாஸ்மினைப்போல ஒரு சுயநலவாதி யாரும் இருக்க முடியாது.

விக்ரமுக்கு நல்ல மனைவியும், முக்கியமாக டெனிஷுக்கு நல்ல அம்மாவும் விரைவில் கிடைக்கட்டும்.
 

Google Typing

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.

Top Bottom