• நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.
    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

நினைவெல்லாம் நீயாகிட வந்தேன் - 26

நிதனிபிரபு

Administrator
Staff member
அத்தியாயம் 26

கணவனின் வருகைக்காகக் கண்மூடிச் சாய்ந்திருந்த யாமினி, கண்களைத் திறந்து பார்த்தாள்.

டெனிஷ் என்றதும், “கண்ணா!” என்றாள் ஆசையாக. மதியம் கோபத்தோடு போனவன் தன்னிடம் வந்துவிட்டதால் மலர்ந்தாலும், “உனக்கும் அம்மாட காய்ச்சல் வந்திடும், தள்ளி இரு.” என்றாள் அவசரமாக.

அவனோ அதைக் காதிலேயே விழுத்தாமல் இன்னும் அவளை இறுக்கிக் கொள்ளவும், தாய் நெஞ்சு துடித்துப்போனது.

“என்ன கண்ணா.. என்ன செய்யுது பிள்ளைக்கு?” அவனுக்கும் சந்தனா கொடுத்துவிட்டாளோ என்று அவனின் நெற்றியில் கழுத்தில் கைவைத்துப் பார்த்தவாறு அவள் கேட்க, “உங்கள கட்டிப்பிடிச்சுக்கொண்டு படுக்கவாம்மா?” என்றான் அவன்.

ஸ்தம்பித்துப் போனாள் யாமினி. அம்மா என்றா சொன்னான்? தெய்வமே அம்மா என்றா சொன்னான்? நம்பவே முயாமல் சட்டென்று விக்ரமைத்தான் நிமிர்ந்து பார்த்தாள்.

அவனும் அவளைத்தான் பார்த்துக்கொண்டிருந்தான்.

அவன் அந்த அம்மாவைக் கேட்கிறான் என்று நினைக்க இந்த அம்மாவை அல்லவோ கேட்டிருக்கிறான். இது அவனுக்கும் சற்று அதிர்ச்சிதான். ஆனந்த அதிர்ச்சி!

யாமினியிடம் பதில் வராமல் போனதில் சின்னவனின் முகம் வாடிப் போனது. “பரவால்லம்மா.. நீங்க படுங்க..” என்றபடி அவன் இறங்கப் போக,

“ஹேய் கண்ணா..! அம்மாட்ட வாடா..” எனும்போதே உடைந்து விம்மிவிட்டாள் அவள்.

“என்னம்மா?” என்று அண்ணாந்து பார்த்து அவன் கேட்க,

“என்ர செல்லம்!! அம்மாட மடில படுக்கக் கேக்கவும் வேணுமா?” என்று வாரி அணைத்துக்கொண்டாள் அவனை.

“டங்க்க மம்மா!” என்றபடி அவன் தலை சாய்த்துக்கொள்ள, வார்த்தைக்கு வார்த்தை அவன் சொன்ன அம்மாவில், பீறிட்டுக் கொண்டு வந்தது அழுகை. இதழ்களை அழுந்த மூடி அடக்கினாள் யாமினி.

அவள் கொண்ட விரதமில்லையா அது!

அவளின் நிலையை முற்றாக உணர்ந்துகொண்டான் விக்ரம்.

அழாத என்று கண்ணால் அவன் அதட்ட, முடியாமல் விழிகளை இறுக்க மூடிக்கொண்டாள். தன்னைத் தாயாகவே ஏற்றுக்கொண்டானே! இத்தனை நாட்களாக நடந்துவிடாதா என்று ஏங்கிய ஒன்றல்லவா நடந்தேறியிருக்கிறது!

தாயின் மடி தந்த சுகமோ அல்லது அவளின் விரல்கள் கேசத்தை வருடிக் கொடுத்ததால் வந்த சுகமோ, அல்லது அன்றைய நாளின் ஏக்கம் தீர்ந்துபோனதில் உண்டான சந்தோஷமோ என்னவோ.. விரைவிலேயே உறங்கிப்போனான் டெனிஷ்.

மெல்ல அவனைத் தலையணையில் கிடத்திவிட்டு எழுந்து பாசத்தோடு நெற்றியில் தன் இதழ்களைப் பதித்து மீட்டாள். பெட்ஷீட்டினை எடுத்து போர்த்திவிட்டு அவள் ஓடியது அவர்களின் விண்டர் கார்டனுக்கு.

அவளை ஏமாற்றாமல் அங்கே காத்திருந்தான் விக்ரம். இவள் வருவதைக் கண்டதும் மலர்ந்த புன்னகையோடு அவளை நோக்கிக் கைகளை விரித்தான்!

ஓடிப்போய் அவன் கைகளுக்குள் புகுந்துகொண்டாள் யாமினி.

விம்மி வெடித்துக்கொண்டு வந்தது அழுகை.

“என்னம்மா இது?” அவன் முதுகை தடவிக் கொடுக்க,

“இல்லையப்பா.. என்ர பிள்ள என்ன அம்மா எண்டு கூப்பிடவே மாட்டானோ.. கடைசி வரைக்கும் யாம்ஸா தான் இருக்கபோறேனோ எண்டு பயந்தே போனன். அவன்தான் என்ர மூத்த பிள்ளை. நான் தான் அவனுக்கு அம்மா. எண்டாலும், அம்மா எண்டு கூப்பிடோணும்.. அத நான் காதால கேட்டுடோணும்.. கடவுளே எனக்கு அந்தப் பாக்கியத்த தா எண்டுதான் ஒவ்வொரு நாளும் கும்பிட்டனான். என்ர பிள்ள என்ன ஏமாத்தேல்ல. எனக்கு இது போதும்.”
இத்தனை நாள் ஏக்கம் சற்றும் எதிர்பாரா நேரத்தில் நிறைவேறிப் போனதில், மனதில் இருந்த அழுத்தம் வெடித்துக்கொண்டு அழுகையாக வெளியேற அடக்கமாட்டாமல் அழுதாள்.

வரிக்கு வரி ‘என்ர பிள்ள என்ர பிள்ள’ என்று அவள் சொந்தம் கொண்டாடுவதிலேயே அவளின் இத்தனைநாள் தவிப்பு வெளிப்பட்டுவிட நெகிழ்ந்துபோனான் விக்ரம்.

“சரிம்மா. சந்தோசமான விசயம் தானே நடந்தது. அதுக்கேன் இப்படி அழுற? ஏற்கனவே காய்ச்சல். அழுது இன்னும் கூட்டப் போறியா?” சற்றே அழுத்தி கேட்க,

“இது, என்ர பிள்ள என்ன அம்மா எண்டு கூப்பிட்ட சந்தோசத்துல வந்தது.. ஒண்டும் நடக்காது!” என்றாள் ரோசத்தோடு கண்களைத் துடைத்தபடி.

கண்கள் மின்ன, “அவன் மட்டும் அம்மா எண்டு கூப்பிட்டா போதுமா?” என்று கேட்டான் விக்ரம்.

ஒருநொடி குழம்பி கேள்வியாக நோக்கியவள் அடுத்தக் கணமே கண்களில் குறும்பு மின்ன, “இப்படிக் கதைச்சுக்கொண்டே இருந்தீங்க எண்டா அவன் மட்டும் தான் அம்மா எண்டு கூப்பிடுவான்.” என்றவள், அவன் விழிகளில் தெறித்த வியப்பைக் கண்டு கலீர் என்று அடக்கமாட்டாமல் நகைத்தாள்.

உண்மையிலேயே இதை விக்ரம் எதிர்பார்க்கவில்லைதான்! அவள் வெட்கப்படுவாள்.. அல்ல அவன் கையில் ஒரு அடியைப் போடுவாள் என்று நினைக்கத் திருப்பி அடிக்கிறாளே.. அதுவும் அவனின் வார்த்தைகளாலேயே!

மறைமுகமாக அவள் தந்த சம்மதத்தில் சந்தோசித்து, “ஹேய் யாம்ஸ்!! உண்மையாத்தான் சொல்றியா?” என்று ஆசையும் பரபரப்புமாக அவன் கேட்க, “அச்சோ..!” என்றபடி மீண்டும் அவனுக்குள் புதைய முனைய விடவேயில்லை விக்ரம்.

அவள் முகமெங்கும் தன் சந்தோச முத்தத்ததை ஆசையாசையாகப் பதித்தான்.

அவள் முகத்தைக் கரங்களில் ஏந்தி, “வேற.. வேற குழப்பம் தயக்கம் எதுவும் இல்லையே?” என்றான் சின்ன ஆராய்ச்சிப் பார்வையோடு.

“வேற என்ன குழப்பம்? தயக்கம்?” கண்களில் குழப்பத்தோடு அவள் கேட்க, அவனிடமும் சின்னக் குழப்பம் தான்!

சட்டென்று அதை ஒதுக்கி, “ஒண்டுமில்ல எண்டா சரிதான்.” என்றான் அவன் இப்போது பளீர் சிரிப்போடு.

“என்னப்பா? சொல்றத விளங்குற மாதிரி சொல்லுங்கோவன்.” என்று அவள் சிணுங்க,

ஆசையாக அவளைத் தன் கைவளைவுக்குள் கொணர்ந்து, “இல்ல.. திடீரெண்டு என்னில என்ன பாசம்?” என்றான் அவன் சலுகையோடு.

“திடீரெண்டு எல்லாம் ஒண்டுமில்ல. தம்பிதான் காரணம். அவனுக்கு இது எங்கட குடும்பம், என்ர அப்பா, என்ர அம்மா, என்ர தங்கச்சி எண்டுற எண்ணம் வராம எப்படியப்பா நாங்க சந்தோசமா இருக்கிறது?” கன்னங்களில் நாணப்பூக்கள் பூக்கச் சொன்னாள் அவள்.

அந்தப் பூக்களின் மேலே தன் இதழ்களை ஒற்றி எடுத்து, “அவன் அம்மா எண்டு கூப்பிடாமலே விட்டிருந்தா?” என்று கேட்டான்.

“கட்டாயம் கூப்பிடுவான்! அவன் உங்கட மகனப்பா. பாசம் வைக்கத்தான் தெரியும்.” நெஞ்சம் பாசத்தில் தழும்பச் சொன்னாள் யாமினி.

“ஓ..! அதுக்காக மட்டும்தான் மேடம் என்ன தள்ளி வச்சீங்களா?” என்று அவன் மீண்டும் கேட்க,

“நான் எங்க தள்ளி வச்சனான்? நீங்கதான் கிட்ட வரவேயில்ல.” என்றாள் அவள்.

‘அடிப்பாவி..!’ பேசுவது அவளா என்று அவன் பார்க்க, கலகலவென்று சிரித்தாள் யாமினி.

“கிட்டவந்த நேரமெல்லாம் தள்ளித்தள்ளி விட்டு ஓடிட்டு.. என்னமாதிரி கதையை மாத்துற நீ?” சந்தோசத்தோடு அவளை அவன் அணைக்க,

“இல்லையப்பா.. என்ன அம்மாவா பாக்கிறான் இல்லையே எண்டுற வேதனை மனதுக்க அரிச்சுக்கொண்டே இருந்தது. நானும் நீங்களும் சேருறது மட்டும்தான் வாழ்க்கையா? அதோட, எங்கள்ல உயிரையே வச்சிருக்கிற உங்களுக்கு முழுமையான சந்தோசத்தை நான் தரோணும் எண்டுதான் ஆசைப்பட்டனான். அதுதான்..” என்றபடி சுகமாக அவன் மார்பில் சாய்ந்துகொண்டாள் யாமினி.

வார்த்தைகளில் வடிக்க முடியாத இதம் இருவருக்குள்ளும் பரவ அப்படியே அதை அனுபவித்தனர்.

“அப்பா, தம்பியும் பிள்ளையும் அங்க..” அவனது மார்புச் சூட்டின் சுகத்தை அனுபவித்துக்கொண்டே அவள் நினைவூட்ட,

“சரி, வா..” என்று அவள் கரம்பற்றி அழைத்துச் சென்றான் விக்ரம்.

அறைக்குச் சென்றதும் பிள்ளைகள் இருவரையும் நடுவில் போட்டு இவர்கள் இருவரும் கரையில் படுத்துக்கொண்டனர். மனம் நிறைந்து கிடந்தது இருவருக்குமே!

என்றாலும் விக்ரமின் மனதின் ஓரத்தில், ‘தம்பிக்காகத்தான் விலகியிருந்தேன்..’ என்று அவள் சொன்னது ஓடிக்கொண்டே இருந்தது. எது எப்படியானாலும் அவள் மனதில் வேறு எந்தச் சலனங்களோ, தடைகளோ இல்லை என்பதை முற்றிலுமாக உணர்ந்திருந்தான்.


அடுத்தநாள் காலை, எழுந்து குளித்துவிட்டு வந்தவளைப் பின்னிருந்து கட்டிக்கொண்டான் விக்ரம். ஆனந்தமாய்ச் சிறைப்பட்டவள், சுகமாக அவன் நெஞ்சில் சாய்ந்துகொண்டாள்.

அவளின் உச்சியில் தன் உதடுகளைப் பதித்துவிட்டு, “ஹேய் பெண்டாட்டி! காய்ச்சல் எப்படி இருக்கு?” என்று விசாரித்தான் விக்ரம்.
 

நிதனிபிரபு

Administrator
Staff member
அவனின் கைவளைவுக்குள்ளேயே திரும்பி அவனைப் பார்த்து, “காய்ச்சலா? எனக்கு அந்த நினைப்பே இல்ல!” என்றாள் உதடு பிதுக்கி.

பட்டென்று அந்த உதட்டின் மேலே தன் உதடுகளை ஒற்றி எடுத்தான் விக்ரம்!

வெட்கிப்போய்ப் பார்வையை அவள் தாழ்த்த, “அப்ப இந்தப் புருசனை நினைச்சாளாமா என்ர பெண்டாட்டி?” என்று கிறக்கமாகக் கேட்டான் அவன்.

வெட்கம் வந்து அவளுக்குள் அலைமோதினாலும், கண்களில் குறும்பு மின்ன, “இல்லையே..!”என்றாள் அடக்கப்பட்ட சிரிப்போடு.

“உன்ன..” என்று முறைத்தான் அவன்.

“வரவர உனக்குச் சேட்டை கூடிப்போச்சு!” என்று மிக நெருக்கமாக அவளைக் கொணர்ந்து, “உண்மைய சொல்லு, என்னை நினைச்சியா இல்லையா?” என்று கோபம்போல் அவன் கேட்க, சிரிப்புத்தான் வந்தது அவளுக்கு.

“இல்ல இல்ல இல்..” என்று வேண்டுமென்றே சொல்லிக்கொண்டு வந்தவளின் இதழ்களை அழுத்தமாக மூடின விக்ரமின் இதழ்கள். ஒருகணம் அதிர்ந்து விரிந்த விழிகள் மெல்ல மெல்ல மயங்கி கிறங்கின!

உயிர் தீண்டலில் உருகி நின்றவள் மேனிக்குள், தன் விருப்பம்போல் விளையாடின அவன் விரல்கள். தாங்கமாட்டாமல் அவன் கைகளிலேயே அவள் துவண்டபோதுதான் சுயம் வரப்பெற்றான் விக்ரம். அவளை வம்பிழுக்க எண்ணி அவன் ஆரம்பித்த விளையாட்டில் அவனே தொலைந்து போனதை எண்ணிச் சிரித்துக்கொண்டவன், அவளை ஆசையோடு அணைத்துக்கொண்டான்.

“யாம்ஸ்..!” என்றான் மெல்ல.

“ம்..” சுகமான மயக்கத்தில் இன்னிசை அவள் பாட, அவனின் அணைப்பு மீண்டும் இறுகிப்போயிற்று! விட்டால் தன்னால் வேலைக்கே போகமுடியாமல் போகும் என்று உணர்ந்தவன், “மிச்சம் மிகுதியெல்லாம் இரவுக்கு..” என்றான் சிரிப்போடு.

வெட்கம் தாங்காமல் அங்கிருந்து ஓடியே போனாள் யாமினி!

சந்தோசமாக வேலைக்குத் தயாராகினான் விக்ரம். முதல் நாள் விட்ட வேலைகளையும் சேர்த்து முடித்தாக வேண்டும்! இதில் டெனிஷுக்கு வேறு இன்று மாலை நடக்கும் கேர்மஸ்ஸு க்குக் கூட்டிக்கொண்டு போவதாகச் சொல்லியிருக்கிறான்.

இதழோரம் பூத்துக்கிடந்த வெட்கச் சிரிப்போடு காலை உணவை தயாரிக்கத் தொடங்கினாள் யாமினி. கணவனின் சேட்டைகளும் சீண்டல்களும் நினைவுகளில் நீங்காமல் நின்று அவளைச் சீண்டிக்கொண்டே இருந்தன.

அப்போது வெகு ஆசையாக அவளின் இடுப்பைக் கட்டிக்கொண்டது இரு இளைய கரங்கள்.

“கண்ணா!” மனம் துள்ள திரும்பித் தானும் அவனை அணைத்துக்கொண்டாள்.

“என்னய்யா?” பாசத்தில் கனிந்துபோய்க் கேட்டவளிடம், “சாரிம்மா..!” என்றான் அவன் தலைசரித்து. அந்தக் கருவண்டு விழிகளில் தெரிந்த யாசிப்பில் உருகியே போனாள் தாய்.

“என்னத்துக்காம் இந்த மன்னிப்பு?” ஆசையாசையாக அவன் கேசத்தைக் கோதிவிட்டபடி கேட்டாள்.

“அது.. நேற்று நீங்க கூப்பிட்டும் நான் கேக்காம போனேன்தானே, அதுக்கு.”

“அது பரவாயில்ல. ஆனா ஏன்?”

“அது… எனக்கு உங்கள்ள சரியான கோபம். ஒவ்வொரு நாளும் என்ன கூப்பிட வாற அம்மா நேற்று வரேல்ல எண்டு.. ”

மனம் கனிந்துபோனது அவளுக்கு.

“அம்மாக்கு காய்ச்சல் எல்லோ. அதாலதான் வரேல்ல.” என்று அவள் சமாதானம் சொல்ல,

“அது முதல் எனக்குத் தெரியாது தானேம்மா. மழையும் பெய்ய நீங்க குடையோட வருவீங்க எண்டு பாத்துக்கொண்டு நிண்டனான். நீங்க வரேல்ல என்ற கோபத்துல வரேக்க… வரேக்க அவவக் கண்டனான்.” என்றவனின் பேச்சுத் திக்கியது.

“எவவ?” என்று விசாரித்தாள் யாமினி.

“அது.. அவாதான்.. என்ர.. அது அப்பாண்ட.. அவா.. யாஸ்மின். அவா காரை நிப்பாட்டி என்னோட வந்து கதைச்சவா. நான் கதைக்காம வந்திட்டன். அவாதான் என்ர மம்மாவாம். ‘இல்ல. என்ர அம்மா வீட்டுல இருக்கிறா..’ எண்டு சொல்லீட்டு நான் ஓடி வந்திட்டன். நீங்க வந்திருந்தா நான் அவவ கண்டிருக்க மாட்டன் தானே..” என்றவனின் முகம் அப்போதும் வாடிப்போனது.

சட்டெனத் தன் பிள்ளையை அள்ளி அணைத்துக்கொண்டாள் யாமினி. என்றோ அவனுக்குத் தான் தாயாக மாறிவிட்டோம் என்கிற எண்ணமே தித்திப்பாக அவளுக்குள் இறங்கிற்று! அதை அவனாக உணர்ந்துகொள்ள இந்த நிகழ்வு அமைந்திருக்கிறது.

ஆனால், இந்தப் பிஞ்சு வயதிலேயே பெற்றவளைக் கண்டு மனம் நொந்து அறைக்குள் முடங்கும் நிலையை என் செல்வத்துக்குக் கொடுத்துவிட்டானே அந்த ஆண்டவன் என்று நெஞ்சால் அழுதாள்.

“அவாவும் அம்மா தானப்பு..” என்று ஆறுதலுக்கு இவள் சொல்ல, “இல்ல! என்ர அம்மா நீங்க மட்டும்தான்!” என்றான் அவன் அழுத்தி! “எனக்கு அவவ விருப்பமில்லை!” என்றவனின் முகத்தில் ஒருவித வெறுப்பு.

யாமினிக்கு ஒருகணம் என்ன சொல்வது என்றே தெரியவில்லை. இந்தளவுக்கு வெறுப்பு உருவாக எந்தளவுக்கு அவன் நொந்திருப்பான்?அவளுக்கே அழுகை வரும்போலிருக்க, வயிற்றோடு மகனை அணைத்துக்கொண்டாள். இந்த நிலையில் இந்தப் பிஞ்சை வைத்துவிட்டாளே அந்தப் பெற்றவள்!

என்ன சொல்வது.. பிள்ளையின் மனம் சமாதானம் ஆவதுபோல், அவனுக்கு விளங்கும் வகையில் எதை எப்படிச் சொல்வாள்? தவிப்போடு நிமிர அங்கே வாசலில் விக்ரம் நின்றிருந்தான்.

அவன் கண்களிலும் வேதனை! என்னிடம் கூடச் சொல்லாமல் இத்தனை நாளாய் தனக்குள்ளேயே வைத்திருந்திருக்கிறானே என்கிற வலி! இதை அறியாமல் போனோமே என்கிற துயர்.

நேற்று ஏன் தன்னிடம் இதையெல்லாம் சொல்லவில்லை என்பதும் விளங்கிற்று. தன்னைப் பெற்றவளைப் பற்றிக் கதைத்து அப்பாவின் மனதை நோகடிக்கக் கூடாது என்று எண்ணியிருக்கிறான். எத்தனை அன்பான பிள்ளை. அவன் மருகுவதா? என்னவாவது செய் என்று கண்களால் அவளிடம் வேண்டினான் விக்ரம்!

நெஞ்சு தவிக்க, ‘கவலைப்படாதீங்கப்பா.. நான் இருக்கிறன்.’ என்றாள் அவளும் கண்களாலேயே!

அதை ஏற்று அங்கிருந்து ஹாலுக்கு நடந்த விக்ரமுக்கு, தன்னிடம் இல்லாத நெருக்கம் தாயிடம் டெனிஷுக்கு வந்துவிட்டதை எண்ணிச் சற்றே நிம்மதியாயிருந்தது. இனி என்னவென்றாலும் தன்னிடம் சொல்லாவிட்டாலும் அவளிடம் சொல்வானே!

எல்லா வேதனையிலிருந்தும் யாமினி மகனை மீட்டுவிடுவாள்! அவனை மீட்கவில்லையா?! அதுபோல்!

விக்ரம் அகன்றதும், “சரி கண்ணா! உங்கட அம்மா வீட்டுல இருக்கிறா எண்டு நீங்க சொல்லிட்டு வந்திட்டீங்க தானே, பிறகு எதுக்குக் கோபம்?” என்று இதமாகக் கேட்டாள்.

“அது.. எனக்கு ஏன் எண்டு தெரியா.. முந்தி அசோக் மாமா வீட்ட எல்லாம் போகேக்க எனக்கும் அம்மா வேணும் மாதிரி இருக்கும். அப்ப எல்லாம் வராதவா இப்ப அம்மா எண்டு சொல்லுறா.. எனக்குத்தான் அம்மா வந்திட்டாவே. ஆனா நான் அம்மா எண்டு சொன்னா உங்களுக்குப் பிடிக்குமா எண்டு பயமா இருந்தது. நடந்தத உங்களிட்ட சொல்லோணும் மாதிரியும் இருந்தது.. சொல்ல பயம்மாவும் இருந்தது.. அதுதான் கோவம் கோவமா வந்தது..” என்று அவன் சொல்ல, வெடித்த விம்மலை அடக்கிக்கொண்டு பிள்ளையைக் கட்டிக்கொண்டாள் யாமினி.

நான் தான் உன் தாய் என்று செயலில் உணர்த்தியும், வார்த்தைக்கு வார்த்தை சொல்லியும், அவன் மனதில் அம்மாவாக அவள் மாறிய பின்னும் கூட ‘அம்மா’ என்று கூப்பிட்டுவிட முடியாமல் தடுமாறியிருக்கிறான். கடவுளே..! இந்தப் பிஞ்சு நெஞ்சில் எத்தனை குழப்பங்கள், கேள்விகள், பயங்கள்!

தாங்கமாட்டாமல், “என்னய்யா நீ. என்னட்ட சொல்ல உனக்கு என்ன பயம்? நான் தான் உன்ர அம்மா. நான் மட்டும்தான்! விளங்குதா? அவா உன்ன பெத்தவா மட்டும் தான். சரியா. இனி என்ன எண்டாலும் என்னட்ட சொல்லோணும். ஒன்றுக்கும் யோசிக்கக் கூடாது. சொல்லுவ தானே?” என்றாள் உணர்ச்சிவசப்பட்டு ஒரு வேகத்தோடு.

“சரிம்மா! இனி நான் எல்லாம் சொல்லுவன். நீங்க அழாதீங்க. ” என்று அவளின் கண்ணீரை துடைத்துவிட்டான் அவன்.

உருகிப்போனாள் யாமினி!

“அது மட்டுமில்ல, நாங்களும் அவேயும் ஒரே இடத்திலதான் இருக்கிறம். இனியும் எப்பயாவது அவவ நீ பாக்கவேண்டி வரும். அப்ப எல்லாம் இப்படித்தான் ஓடி வருவியா? கேக்கிற கேள்விக்குப் பதில சொல்லிட்டு வரோணும். சரியா? எப்பவும் உனக்குத் துணையா அம்மாவும் அப்பாவும் இருக்கிறம். அத மறக்கக்கூடாது! எங்கட ஆம்பிளைப்பிள்ள தைரியமானவன் எண்டு நாங்க நினைச்சுக்கொண்டு இருக்கிறம். அது உண்மைதானே?” என்று சிரிப்போடு அவள் தலை சரித்துக் கேட்க,

“அம்மா!” என்று சிரித்தவன், “அப்பாவை விட எனக்குத் தைரியம் கூடத் தெரியுமா?!” என்றான் அவளிடம் பெருமையாக.

“அது என்னவோ உண்மைதான்..!” என்றவள் கலகலத்துச் சிரிக்க, அவளோடு அவளின் மகனும் சேர்ந்துகொள்ள, அவர்களின் சிரிப்புச் சத்தம் சந்தோசமாய் விக்ரமின் செவிகளில் சென்று சேர்ந்தது.

அதுவரை மனதிலிருந்த அலைக்கழிப்புக்கள் அடங்க அவன் இதழ்களிலும் சந்தோசப் புன்னகை.

சந்தனா எப்படி விக்ரமின் மொத்தப் பலவீனமாக இருக்கிறாளோ அப்படி முழுப் பலமாக யாமினி இருந்தாள்!
 

Goms

Active member
சந்தோஷம். மகிழ்ச்சி. ஆனந்தம்.....

யாமினியோடு நாங்களும் மகிழ்ச்சி வெள்ளத்தில்...🤩🤩🤩🤩🤩
 

kamalnila

New member
Hi அக்கா உங்கட கதையில எல்லாம் என்ன அழ வச்சி பாக்குறதே வேலையா உங்களுக்கு 😌😌😌
 
Top Bottom