• நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.
    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

நினைவெல்லாம் நீயாகிட வந்தேன் - 8

நிதனிபிரபு

Administrator
Staff member
அத்தியாயம் 8


ஏதும் வைரசோ என்று அவள் பயப்பட அப்படி எதுவும் இல்லை என்று வைத்தியசாலையில் வைத்தியர் சொன்னதில் ஆறுதல் கொண்டாள் யாமினி. ஓரளவுக்குக் காய்ச்சல் இறங்கியதும் பயப்பட ஒன்றுமில்லை என்று அன்று மாலையே வீட்டுக்கு விட்டனர்.

சந்தனாவோ விக்ரமின் கையை விட்டு இறங்கவே இல்லை. யாமினி கண்களில் கசிவோடு அவர்களைப் பார்ப்பதோடு நிறுத்திக்கொண்டாள். தனக்கு என்ன வேண்டும் என்பதை மகள் தெளிவாகச் சொல்லிவிட்டது போலிருந்தது!

மருந்து மாத்திரைகளை வாங்கிக்கொண்டு வீடு வந்து சேர்ந்தனர். குழந்தைக்கு இளம் சூட்டில் உடம்பு துடைத்து, நெஞ்சு, முதுகு என்று ஆடிக்கலோன் தடவி, மருந்து கொடுத்து அவளை உறங்க வைக்கும் வரையிலும் அங்கேயே இருந்தான் விக்ரம்.

யாமினியால் அவனை நிமிர்ந்தே பார்க்க முடியவில்லை. ‘இங்க வராதீங்கோ, எங்கள எங்கட பாட்டுக்கு இருக்க விடுங்கோ, நீங்க எங்களுக்குத் தேவையில்லை.’ என்றுவிட்டு அவன் தோளில் சாய்ந்து அழுததும், அவன் துணையோடு அனைத்தையும் செய்ததும் அவளுக்குள்ளேயே பெரும் அதிர்வை உண்டாக்கி விட்டிருந்தது.

வைத்தியசாலையில் கூட அவளை அம்மா என்றும் தன்னை அப்பா என்றும் அவன் சொன்னது வேறு நினைவலைகளில் மிதந்து வந்து திகிலூட்டிக் கொண்டிருந்தது. அதோடு, அவள் சொன்ன எந்தச் சமாதானங்களும் எடுபடாமல் குழந்தை இரவிரவாக அழுததும், தான் மடியிலும் மார்பிலும் போட்டுச் செல்லம் கொஞ்சியும் அவள் அழுகையை நிறுத்தாததும், அவளுக்குள் அப்பாவாக அவன் எந்தளவு தூரத்துக்குப் பதிந்துவிட்டான் என்பதை உணர்த்தியே விட்டது.

தான் எடுக்கவேண்டிய முடிவு தன் கையில் இல்லை என்பதை நன்றாகவே உணர்ந்தாள்.

உறங்கிவிட்ட மகளின் அருகிலேயே அவள் இருக்க, இவனும் ஒரு மூச்சோடு எழுந்து அவளருகில் அமரப் போகவும், வேகமாக அங்கிருந்த கதிரையை இழுத்து அவனுக்காகப் போட்டாள்.

அதுவரை நேரமும் இருந்த இறுக்கமான சூழ்நிலை மாற, அவன் இதழ்களில் மென் முறுவல் மலர்ந்தது.

“ஏன், அண்டைக்கு மாதிரி நீ தூக்கிவிட மாட்டீயா?” என்று கேட்டுக்கொண்டே கதிரையில் அமர்ந்தான்.

அவனது காலடியில் அமர்ந்திருந்தவள் கலக்கத்தோடு நிமிர்ந்து பார்த்தாள்.

அந்தக் கண்களில் தெரிந்த துயர் அவனை என்னவோ செய்தது.

“சும்மா எல்லாத்துக்கும் பயந்து நடுங்கிறேல்ல யாமினி. இவ்வளவு நாளும் யாரும் இல்லாம தனியா இருந்து குழந்தைய நல்லா வளர்த்தவளுக்கு என்னைப் பாத்து என்ன பயம்?” சின்ன அதட்டல் விழுந்தது அவளுக்கு.

அவள் தலையைக் குனிந்துகொள்ளவும், “நிமிந்து என்னப்பார் யாமினி.” என்றான் விக்ரம்.

அவள் நிமிரவில்லை. ஏனோ அவனைப் பார்த்தால் அழுது விடுவோம் போலிருந்தது. கோர்த்திருந்த கரங்களிலேயே பார்வையைப் பதித்திருந்தாள்.

இது சரி வராது என்பதாகத் தலையை அசைத்துவிட்டு, “நீ கீழயும் நான் மேலயும் இருந்தா உன்ர முகத்த ஒழுங்கா பாக்க ஏலாது. நீயும் நிமிர மாட்ட.” என்றபடி அவள் முன்னால் தரையில் அவனும் அமர்ந்துகொண்டான்.

அவளின் ஒரு கையைப் பற்றினான். பற்றியிருந்த அவளின் புறங்கைக்கு மேலே மற்ற கையை வைத்து, மென்மையாக வருடிக் கொடுத்து, “என்னைப்பார் யாமினி.” என்றான்.

தயக்கத்துடன் அவள் பார்க்க, அந்தக் கண்களையே பார்த்து, “நான் சொல்றதக் கொஞ்சம் கேள். அதுக்குப் பிறகு உன்ர முடிவச் சொல்லு.” என்றான் தன்மையாக.

“இங்க வந்த நாள்ல இருந்து காருக்குப் பின்னால ஓடிவாற செல்லம்மாவ பாக்கப்பாக்க ஆசை எனக்கு. ஏனோ அவாவில என்னை அறியாமலேயே பாசம் வந்தது. அதுக்குக் காரணம் சாரா.”

யார் என்பதாக அவள் கண்ணால் கேட்க, “என்ர முதல் மனுசின்ர மகள்.” என்றான் அவன்.

சற்றே ஆச்சரியமாகப் போயிற்று அவளுக்கு. அவனை வேண்டாம் என்றுவிட்டுப் போனவளின் மகள் மீது பாசமா?

“அவள் அச்சு அசலா டெனிஷ் மாதிரியே இருப்பாள். அவளைச் சந்தனா நினைவு படுத்தினவா. சந்தனாவால தான் உன்னப்பற்றி விசாரிச்சனான். அப்பதான், சந்தனாவின்ர அப்பா இறந்திட்டதா நீ சொன்னதாவும், அத நம்பாததால இந்த ஊர் உன்னப் பிழையா பாக்கிறதையும் அசோக் சொன்னவன்.”

அதை அவன் சொன்னபோது அவள் முகம் வாடிப்போனது. ஆறுதலாகப் பற்றியிருந்த கரத்தை அழுத்திக் கொடுத்தான்.

“அதுக்குப் பிறகுதான் உன்னக் கவனிச்சனான். அப்பவும் கவனிக்கோணும் எண்டு கவனிக்கேல்ல. தானா கண்ணுல விழுந்ததுதான். உன்ர எந்த நடவடிக்கையும் நீ பிழையானவள் எண்டு எனக்குச் சொல்லேல. இன்னும் சொல்லப் போனா நீ உனக்குள்ள சுருங்கி சுருங்கி இருக்கிறதப் பார்க்க, எனக்கும் உனக்கும் ஏதோ ஒரு ஒற்றுமை இருக்கிற மாதிரித்தான் மனதுல பட்டது. அதாலதான் கல்யாணத்துக்குக் கேட்டனான்.”

“நீ மறுக்க மறுக்க, உன்ர மறுப்பு, அதுல இருந்த நியாயம், குழந்தைக்காக மட்டுமே யோசிச்சது, அது ஒண்டே குறிக்கோளா நிக்கிற உன்ர அந்தப் பாசம் இதெல்லாம்தான் நீதான் வேணும் எண்டு என்னை நினைக்க வச்சது. சந்தனா வேற அப்பா எண்டு பாசம் வச்சிருக்கிறா.” என்றவும் இவள் முகம் கன்றியது.

“அதுக்கு எதுக்கு நீ முகம் சுருங்கோணும்? அவா தானா என்னை அப்பிடி நினைச்சதுக்கு நீ என்ன செய்வாய்? எனக்கு என்னவோ எனக்கும் உனக்குமான முடிச்ச அவாதான் போட்டிருக்கிறா எண்டு விளங்குது. உன்னையும் என்னையும் விடு. இந்தக் குழந்தையை யோசி. டெனிஸும் இவவ மாதிரித்தான். வயதாலதான் அவன் வளர்ந்த பிள்ள. அவனுக்கும் உன்ன மாதிரி ஒரு பாசமான அம்மா கிடச்சா எவ்வளவு நல்லம். எனக்காக இல்லாட்டியும் இந்தப் பிள்ளைகளுக்காக நீ இந்தக் கல்யாணத்துக்குச் சம்மதிக்கக் கூடாதா?” என்று கேட்டான்.

சற்று நேரம் ஒன்றுமே சொல்லவில்லை அவள். பின் நிமிர்ந்து பார்த்து, “உங்களை நம்பலாமா?” என்று கேட்டாள். கேட்கும் போதே கண்களில் நீர் கோர்த்தது.

என்ன சொல்வது? தலையில் அடித்துச் சத்தியம் செய்வதா? மீற நினைப்பவனுக்குச் சத்தியம் எந்த மூலைக்கு? அவளாகத்தான் நம்ப வேண்டும். ஒன்றுமே சொல்லாமல் இருந்தான் விக்ரம்.

“எனக்கு என்ர வாழ்க்கைய விட இவளின்ர சந்தோசம்தான் முக்கியம். அவள் நல்லா இருக்கோணும். அவள நல்லா பாப்பீங்க எண்டு உங்கள நம்பி வாறன். ஏமாத்தி போடாதீங்கோ. என்னைக் கைவிட்டாலும் பரவாயில்லை. அவளைக் கைவிட்டுடாதீங்கோ.” என்றாள் கண்ணீரோடு.

அந்தக் கண்ணீர் அவன் நெஞ்சைப் பிசைய ஒருமுறை கண்களை மூடித் திறந்தான்.

பற்றிய கரத்தை விடாது, “உன்னையும் விடமாட்டன். அவவையும் விடமாட்டன். நீயா போக நினச்சா கூட விடமாட்டன். சாகும் வரைக்கும் நீயும் அவவும் என்ர சொந்தம்.” என்றான் உறுதியான குரலில்.

ஏனோ முகத்தில் செம்மை படர்ந்தது அவளுக்கு. தலையைக் குனிந்துகொண்டாள். அவன் முகத்தில் மென் முறுவல் அழகாய் அரும்பியது.

“அதே மாதிரி இந்த முடிவ எடுத்ததுக்காக ஒவ்வொரு நிமிசமும் சந்தோசப் படுற மாதிரித்தான் உன்னையும் வாழ வைப்பன்.” உறுதியான குரலில் சொன்னான்.

மளுக் என்று சூடான கண்ணீர் கன்னங்களில் இறங்கியது அவளுக்கு. ஒற்றை விரல் கொண்டு அந்தக் கண்ணீரைத் துடைத்துவிட்டான் விக்ரம்.

அவள் நெளிய, குறுகுறு என்று அவளையே பார்த்தான்.

‘என்ன இது? என்னையே பாக்கிறார்.’ அவள் தடுமாற, அவளைச் சோதித்தது போதும் என்று எண்ணியவனோ, “அப்ப கல்யாணத்துக்கு ஏற்பாடு செய்யவா?” என்று அவள் கரத்தை அழுத்திக் கேட்டான்.

தலை மட்டுமே சம்மதமாக ஆடியது.

“பெண்ணுக்குப் பேசத் தெரியுமா?”

‘என்னது?’ குழம்பிப்போய் அவள் நிமிர்ந்து பாக்க, “பெண் பாக்க மாப்பிள்ள வந்திருக்கிறன். கொஞ்சம் நிமிர்ந்து பாக்கிறது. அப்பதானே பிடிச்சிருக்கா இல்லையா எண்டு சொல்லலாம்.” என்று, கண்களில் குறும்பு மின்னச் சொன்னான் அவன்.

அவள் இதழ்களில் கூச்சத்துடன் கூடிய புன்னகை அரும்பிற்று.

“இயல்பா இரு யாமினி. எல்லாம் அதுபாட்டுக்குத் தானா நடக்கும். ஓகே?” என்றான் இதமாக.

அவளும் முகம் தெளிய தலையசைத்துப் புன்னகைத்தாள்.

“கல்யாணத்தக் கோவில்ல வைப்பம். அசோக் குடும்பம்தான் எனக்குத் தெரிஞ்சவே. உனக்கு யாருக்காவது சொல்லோணும் எண்டா சொல்லு.”

“இல்ல. எனக்கு யாரும் இல்ல.” என்றவள் அப்போதுதான் உணர்ந்தவளாய், “என்னைப்பற்றி உங்களுக்கு ஒண்டும் தெரியாதே…” என்றாள்.

“என்னைப் பற்றி மட்டும் உனக்கு என்ன தெரியும்?”
 

நிதனிபிரபு

Administrator
Staff member
‘அதானே! இதில் கல்யாணம் வரை வந்தாச்சு.’

அவள் குழம்ப, “எனக்கு முன்னால இருக்கிற நீதான் நீ. நீ இப்ப பாக்கிற நான்தான் நான். இப்போதைக்கு இது போதும். போகப் போக எல்லாம் தானாத் தெரிய வரும், சரியா. எல்லாத்துக்கும் முதல் எதைப் பற்றியும் கவலைப்படாம நீ நீயா இரு.” என்றுவிட்டுச் சென்றான் அவன்.

அப்படியே அமர்ந்திருந்தாள் யாமினி. அவன் பற்றியிருந்த கரத்தையே பார்த்திருந்தாள். மனதிலிருந்த பாரமெல்லாம் பஞ்சாகப் பறந்துவிட்ட ஒரு உணர்வு.

‘எல்லாம் இனி அவர் பாப்பார்.’ சொல்லிப்பார்க்கவே மனதில் அத்தனை இதமாய் இருந்தது.

‘இப்பிடி எனக்காக எல்லாம் பாத்து பாத்துச் செய்ய ஒரு ஆள் இருக்கிறார் எண்டுற நினைவே எவ்வளவு பெரிய தெம்பா இருக்கு.’ என்னவோ மலையையே புரட்டிவிடலாம் போல அவள் மனதிலும் உடலிலும் ஒரு பலம்.

காலையில் போட்டது போட்டபடி விட்டுவிட்டுப் போன வீடு என்னை வந்து ஒதுக்கு என்று அழைத்தாலும் ஒன்றுமே செய்யத் தோன்றாமல் மகள் அருகிலேயே படுத்துக்கொண்டாள். நினைவுகள் அவனிடமே சுற்றி சுற்றி நின்றது.

சற்று நேரத்திலேயே மலர்ந்த முகத்தோடு பரபரவென்று வந்தார் மரகதம் அம்மா. “கல்யாணத்துக்கு ஓம் எண்டு சொல்லீட்டியாம். எனக்கு இப்பதான் நிம்மதியா இருக்கு.” என்றவரைச் சங்கடத்தோடு பார்த்தாள் யாமினி.

அவரிடம் மறுத்துவிட்டு அவனிடம் சம்மதம் சொல்லி இருக்கிறாளே!

உறங்கிவிட்ட மகளுக்குப் போர்வையைப் போர்த்திவிட்டு, மெதுவாக எழும்பி வந்தவளையும் கூட்டிக்கொண்டு வந்து வெளி வாசலில் அமர்ந்துகொண்டார் அவர்.

“அவன் நல்ல பிள்ள. நீ ஒண்டுக்கும் யோசிக்காம கண்ணை மூடிக்கொண்டு கட்டு. உன்ன நல்லா வச்சிருப்பான்.” என்றார் தன்பாட்டுக்கு.

“உன்ர அம்மாவும் நானும் சின்னப் பிள்ளையளா இருந்த காலத்துல இருந்து பழகின பழக்கம். அதுக்குப் பிறகு நாட்டுப் பிரச்சனை அது இது எண்டு எவ்வளவோ நடந்து போச்சு. அதுக்குப் பிறகு நீயும் ஒதுங்கிட்ட. எனக்கும் யார் பக்கத்தில இருக்கீனம் சொல்லு? உன்னட்டக் கதைக்க வந்தாலும் நீ முகம் தரவே மாட்டாய். எத்தனையோ நாள் உன்னை நினச்சு நித்திரை இல்லாம இருந்திருக்கிறன். இண்டைக்குத்தான் நிம்மதியா இருக்கு!” என்று பல நாட்களாக இருந்த மனக்குமுறலை அன்று கொட்டினார்.

அவளுக்கும் அவரின் குணம் தெரியும். ஆனால், பாசம் கூடப் பல சமயங்களில் விலங்காகிவிடுமே!

“விக்ரமும் நல்ல பிள்ள. அந்த வெள்ளக்காரியக் காதலிச்சுக் கட்டி நல்ல வசதியா இருந்திருக்கிறான். அவள்தான் ஆரையோ பிடிச்சிக்கொண்டு போய்ட்டாளாம். இவன் கல்யாணமே வேணாம் எண்டு இருந்திருக்கிறான். எங்கட அசோக்தான் வலுக்கட்டாயமா இழுத்துக்கொண்டு வந்திருக்கிறான். நீ என்னைப் பற்றி என்ன நினைச்சாலும் சரிதான், ஆனா நீ எனக்குப் பெறாத மகள்தான்! நான் சொல்றன், எந்தக் கலக்கமும் இல்லாம சந்தோசமா அவனைக் கட்டு. காலம் முழுக்க நல்லா இருப்பாய்!”

மனதார வாழ்த்தியவரின் பேச்சில் உடைந்து, “சொறி ஆன்ட்டி!” என்றாள் கண்ணீரோடு.

“விடுவிடு! நல்லது நடக்கப்போற நேரத்துல அழாம கண்ணத்துடை. உன்ர மனதிலையும் என்னென்ன கவலைகளோ. அதையெல்லாம் மறந்திட்டு நடக்கப்போறத நினச்சுச் சந்தோசமா இரு.” என்றவர், அதன் பிறகு அவர்களின் கல்யாணப் பேச்சில் மிகவுமே உற்சாகமாகிப் போனார்.

அன்று யாமினி சமையலுக்குத் தயாராகிக் கொண்டிக்க, வந்தான் விக்ரம். ஒரு பையை அவளிடம் நீட்டி, “இதுல ஆட்டிறைச்சி இருக்கு. நல்ல காரசாரமா சமை! இண்டைக்கு ஒரு வெட்டு வேட்டோனும்.” என்றான் அவளிடம்!

அவன் சொன்ன விதத்தில் புன்னகை அரும்பியது அவளுக்கு. “நல்லா சமைக்காட்டி?” வேண்டுமென்றே கேட்டாள்.

“அதெல்லாம் நல்லாத்தான் சமைப்பாய். எனக்குத் தெரியும். வாசமே மூக்கைத் துளைக்கும்.” என்றான் அவனும் புன்சிரிப்புடன்.

“உறைப்புச் சாப்பிடுவீங்களா?”

வெளிநாட்டில் வாழ்ந்தவன் நம்மூர் காரம் சாப்பிடுவானோ என்றெண்ணி அவள் கேட்க, அந்தக் கேள்வி திடீரென யாஸ்மினை நினைவூட்டியது அவனுக்கு.

“அளவா போடு.” என்றவன், “செல்லம்மாவக் கூட்டிக்கொண்டு ஒரு ரவுண்ட் போயிட்டு வாறன்.” என்றபடி அங்கிருந்து சென்றான்.

மகளோடு காரில் ஏறியதுமே, அவளின் குதூகலத்தில் அவன் முகத்திலும் சந்தோசம். இதற்காகத்தானே அத்தனை நாட்களும் காருக்குப் பின்னால் ஓடி வந்தாள். அவள் அந்தப் பயணத்தை ஆசை தீர அனுபவிக்கும் வரையில் மிதமான வேகத்தில் காரைச் செலுத்திக்கொண்டே இருந்தான். ஒரு கட்டத்தில் ஜன்னலால் வந்து மோதிய காற்றுப் பாடிய தாலாட்டில் சந்தனா உறங்கிவிட்டிருந்தாள். ஒரு மரத்தின் நிழலின் கீழே கொண்டுபோய் வண்டியை நிறுத்தியவனை வந்து மீண்டும் பிடித்துக்கொண்டாள் யாஸ்மின்!

அவன் அவளைப் புரிந்துகொள்ளவில்லையா? அல்லது, அவள் அவனைப் புரிந்துகொள்ளவில்லையா? எந்த இடத்தில் தவறு நடந்தது? அவனளவில் அன்றைய நாட்களில் அவர்கள் இருவருக்குள்ளும் புரிதல் இல்லையா என்கிற கேள்வியே அபத்தமானது! அப்படியிருக்க அவள் மனம் திசை மாறிவிட்டதை அவன் எப்படி உணராமல் போனான்? மூளையையும் மனதையும் உருட்டிப் பிரட்டி யோசித்துப் பார்த்தான். விலகலைச் சற்றேனும் எந்த இடத்திலும் அவள் அவனுக்கு உணர்த்தியதாய் நினைவே இல்லை. இந்த யோசனையில், கண்டுபிடிப்பில் எந்தப் பலனும் இல்லைதான். ஆனாலும், நான் எங்கேயாவது தவறிவிட்டேனா என்கிற கேள்வி அவ்வப்போது நின்று அவனுக்குள் குடைந்தது.

அவனுடைய ‘டெனிஷ் மொபைல்’ லை இன்னுமே கொஞ்சம் விரிவாக்க எண்ணியவன், அதற்குமுதல், தானே நேரில் சென்று ஒருமுறை குறை நிறைகளைத் தெரிந்து வருவோம் என்று ஒரு மூன்று மாதம் ஐரோப்பா முழுவதும் சுற்றிக்கொண்டிருந்தான். அந்தப் பயணத்துக்குத் திட்டமிட்டதுமே, அவளோடும் மகனோடும் இரண்டு வாரங்களை வங்கரூகே (wnagerooge) எனும் தீவில் ஒன்றாகக் களித்தபிறகுதான் அவன் டூர் போனதே.

ஒரு மனைவி கணவனை விலகி இன்னொருவனைத் தேட அந்த மூன்று மாதப் பிரிவு போதுமா? மனம் கசந்து வழிந்தது!

‘ச்சே! வேண்டாம்! இத யோசிச்சு என்ன வரப்போகுது?’ தலையை உலுக்கி அந்த நினைவுகளிலிருந்து அவன் வெளியே வர, அவனது செல்லம்மாவும் கார் நின்றதாலோ என்னவோ மெல்லச் சிணுங்கினாள்.

“அப்பா கார நிப்பாட்டினதும் குட்டி எழும்பிட்டாங்களா?” அவன் குரல் கேட்டதுமே துள்ளித் தாவி வந்தாள் சின்னவள். அவளின் அந்தப் பாசமும் தனக்கான தேடலும் அவனுக்குள் பெரும் ஆறுதலைத் தந்தன. ஆசையாக அவள் நெற்றியில் இதழ்களைப் பதித்து எடுத்தான்.

“அம்மாட்டப் போவமா? குட்டிக்குப் பசிக்கப் போகுதே.” என்று அவன் கேட்கவும் அவளும், “ம்மா… போ… ப்பா… போ…” என்று மழலைத் தமிழ் பேசினாள்.

“சரிடா சரிடா. இப்பவே போவம். ” என்று மகளோடு வீட்டுக்குக் காரைச் செலுத்தியவன் இப்போது நிதானத்துக்கு வந்திருந்தான்!

அங்கே யாமினி சமையலை முடித்துவிட்டு இவர்களுக்காகக் காத்திருந்தாள்.

“ம்ம்! வாசமே பசியைக் கிளறுது! அதுக்கு முதல் செல்லம்மாவக் கவனி. அவவுக்கும் நல்ல பசி.” என்றபடி சந்தனாவை அவளிடம் நீட்டினான்.

அவளை வாங்கிக் கொண்டே, “நீங்களும் வாங்கோ, சாப்பாடு போடுறன். உங்களுக்கும் பசிதானே.” என்றவள், சமையல் முடித்து முகம் கழுவித் தலைவாரி இருந்தாள்.

“முதல் பிள்ளையப் பார். பிறகு நாங்க சாப்பிடுவம்.” என்றான் அவன்.

“அது… நான் குளிச்சிட்டுச் சாப்பிடுறன்.”

“அப்ப இப்ப குளிச்சிட்டு வா.” என்றவன் நினைவு வந்தவனாக, “நீ ஏன் இரவில மட்டும் குளிக்கிற?” என்று விசாரித்தான்.

“அது…” என்று அவள் தயங்கிவிட்டு, “பகல்ல குளிச்சா ஒரே சைக்கிள் திரும்ப திரும்ப இந்த ரோட்டால போய்ப் போய் வரும். ஏன் இப்படிச் சுத்துறீங்க எண்டு நான் போய்க் கேக்கவா முடியும்? அதப் பாத்திட்டு மறைப்புக் கட்டினான். எண்டாலும் மனம் வெறுத்துப்போச்சுது. அதான் இரவில குளிக்கிறது.” என்றாள் வெறுத்துப்போன குரலில்.

விக்ரமின் முகம் இறுகிப்போயிற்று! துணையற்று நிற்கும் நம் பெண்களுக்குத் துணையாக நிற்பதுதானே சக மனிதனின் மனிதாபிமானம்!

மனதில் அடைத்து வைத்திருந்ததுகளைக் கொட்டக் கிடைத்த சந்தர்ப்பமாக எண்ணினாளோ என்னவோ, “இந்த ஜன்னல்…” என்று அடைக்கப்பட்டிருந்த அறையின் ஜன்னலைக் காட்டிவிட்டு, “ஒருநாள் இரவு திடீரெண்டு முழிப்பு வந்து பாத்தா ஆரோ எட்டிப் பாத்துக்கொண்டு நிக்கிறான். உடம்பெல்லாம் நடுங்கிப் போச்சு. அதுக்குப் பிறகு நித்திரையே வரேல்ல. அடுத்தநாள் அந்த ஜன்னல அடச்ச பிறகுதான் நிம்மதி.” என்றாள் அவள்.

“இந்த வீட்ட மரகதம் ஆன்ட்டி வீட்டுக்குப் பக்கத்தில நான் கட்டினதுக்குக் காரணமே ஒரு துணைக்குத்தான். எனக்குத் துணையா இருங்கோ எண்டு கேக்க விருப்பம் இல்ல. சின்ன வயதில என்னோட நல்ல பாசம்தான். பிறகு நானே ஒதுங்கீட்டன். ஆனா, இங்க ஏதாவது பிரச்சினை, சத்தம் எண்டா அவவுக்கு கேக்கும் எல்லோ. என்ர வீட்டுக்கு யாரும் வந்து போனாலும் அவவுக்குத் தெரியவரும். நான் ஒண்டும் ஊர் நினைக்கிற மாதிரிக் கெட்டவள் இல்லை எண்டு அவவாவது விளங்கிக்கொள்ளட்டும்.” கண்ணீரோடு சொன்னவளை வார்த்தைகளற்றுப் பாத்திருந்தான் விக்ரம்.

உதவி தானாகக் கேட்கவில்லை. யாரிடமும் எனக்குக் காவலாக இரு என்று கேட்டுக் கடமைப்படவும் விரும்பவில்லை. ஆனால், ஆபத்து என்று வந்தால் அவர்களாகவே உதவக்கூடிய வழியில் தன்னை அனைத்துச் செயல்களிலும் வைத்திருந்திருக்கிறாள். அதே நேரம் நான் நல்லவள் என்று நிரூபிக்க முனையவுமில்லை. நீயாக என் நடத்தையைப் பார்த்து உணர்ந்துகொள் என்றும் நினைத்திருக்கிறாள். ஒரு பிரச்னையை அவள் கையாண்ட விதம் அவனை ஈர்த்தது.
 

Goms

Active member
இப்போ ஓரளவு தெளிவா பேசியது போல பேசி இருக்க வேண்டும். அவ கல்யாணத்துக்கு யோசிச்சாவது பதில் சொல்லியிருப்பா...

மரகதம் அம்மா சூப்பர்.

சீக்கிரம் கல்யாணத்தை வைங்க. 🥰🥰🥰
 

Google Typing

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.

Top Bottom