• நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.
    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

நிலவே நீயென் சொந்தமடி - 2

நிதனிபிரபு

Administrator
Staff member
அத்தியாயம்- 2


வீட்டுக்கு வரும்போது வாடி வதங்கிப்போய் வந்தாள் கவின்நிலா. “என்னம்மா? ஏன் ஒருமாதிரி இருக்கிறாய்?” என்று விசாரித்தார் அன்னை மேகலா.

“லைட்டா தலை வலிக்குதம்மா.” சோர்வுடன் அமர்ந்தவளை தன் மடியில் ஏந்திக்கொண்டது சோபா.

“ஏன் பிள்ள? மழைல ஏதும் நனைந்தியா? இல்லையே.. இண்டைக்கு மழை பெய்யேல்லையே!” என்றபடி அவளருகில் வந்தமர்ந்து நெற்றியிலும் கழுத்திலும் கைவைத்துப் பார்த்தார். “காய்ச்சலும் இல்ல”

உடலில் அல்ல வருத்தம் மனதில் தான் என்று சொல்லவா முடியும்!

“விக்ஸ் கொஞ்சம் தேய்த்து விடவா?” மகளின் மனதை அறியாமல் மேகலா கேட்க,

“வேண்டாம்மா. கொஞ்சநேரம் இப்படியே படுத்திருக்கிறன்.” என்றவள் அவரின் இடுப்பைக் கட்டிக்கொண்டு தோளில் சாய்ந்துகொண்டாள்.

தாயின் வாசமும் தோளும் மனதுக்கு அமைதி சேர்ப்பது போலிருந்தது.

மேகலாவுக்கோ சிரிப்புத்தான் வந்தது. “இன்னும் குழந்தைப்பிள்ளை மாதிரி விக்ஸ் பூசப் பயம்! இதுல டாக்டருக்கு படிக்கப் போறாளாம்!”

அவள் இதழ்களிலும் புன்னகை. “டாக்டர் மற்ற ஆட்களுக்கு தானேம்மா மருந்து கொடுப்பார். தனக்கில்லையே. அதால பிரச்சினையில்ல.” என்றாள் அவளும் குறும்புடன்.

“உனக்கு வருத்தம் வந்தா?”

“நல்ல டாக்டரா பாத்துப் போறதுதான்.” அடக்கிய சிரிப்புடன் சொன்னாள் அவள்.

“நல்லா கதைக்க மட்டும் பழகி வச்சிருக்கிற. என்னைக் கொஞ்சம் விடு விக்ஸ் எடுத்துக்கொண்டு வாறன். கண்ணில படாம கொஞ்சமா பூசி விட்டா சுகமா இருக்கும்!” என்று எழ முயன்றவரை அவள் விடவேயில்லை.

இன்னுமே இறுக்கிக்கொள்ளவும், “என்னம்மா? விடேன்.” என்றார் அவர்.

“இப்படியே கொஞ்ச நேரம் பேசாம இருங்கம்மா. போதும்!” என்று தாயின் மடியிலேயே படுத்துக்கொண்டாள் அவள்.

கண்ணை மூடியதுமே கண்களுக்குள் வந்துநின்று உறுத்து விழித்தான் அவன். ‘அம்மாடி!’ படக்கென்று கண்களைத் திறந்துகொண்டாள். அதையெல்லாம் நினைக்கக் கூடாது என்றுதான் நினைக்கிறாள், மறக்கவிடாமல் கண்ணுக்குள் வந்துநின்று முறைப்பவனை என்ன செய்வது?

‘எவ்வளவு கோபம் தெரிஞ்சது அந்தக் கண்ணுல.. அம்மாடி!’ நடுங்கியது அவளுக்கு. மேகலாவின் இடுப்பை இன்னுமே இறுக்கிக்கொண்டாள்.

“இதுக்குத்தான் மச்சமில்லாம மட்டும் இரு பிள்ளை எண்டு சொன்னனான். கேட்டாத்தானே? விரதத்துக்கு ரெண்டு நேரம் சாப்பிடாம இருந்தா பலகீனமாத்தான் இருக்கும். அதாலதான் தலைவலியும் வந்திருக்கு.?” என்று கடிந்துகொண்டார் அவர்.

படிக்கிற பிள்ளை, அதுவும் ஏஎல் கடைசி வருடம் விஞ்ஞானப்பிரிவில் இருப்பவள் தங்கமாட்டாள் என்று சொன்னதை அவள் காதில் விழுத்தவே இல்லை என்கிற ஆதங்கம் அவருக்கு.

அவளோ ஒன்றுமே சொல்லாமல் தாய்மடியின் சுகத்தை அனுபவித்துக் கொண்டிருந்தாள். அவரும் இதமாக அவளின் தலையை வருடிக்கொடுத்தார்.

அவருக்கும் ஆணும் பெண்ணுமாய் இரண்டு செல்வங்கள்தான். மூத்தவன் கதிர்நிலவன்; வைத்தியன். மேற்படிப்புக்காக ரஷ்யா சென்றிருந்தான். தமையனின் வழியிலேயே அவளும். அப்படியும் சொல்ல முடியாது. விஞ்ஞானம், அது அவர்களின் இரத்தத்தில் ஊறியது.

“சாப்பிட்டுட்டு படேன்.” விரதத்தை முடித்தாலாவது கொஞ்சம் தெம்பாக இருப்பாள் என்பது அவருக்கு.

“ம்ம்..”

உண்மையிலேயே அவளுக்கு சாப்பிடவேண்டும் போலவே இல்லை. மனதும் வயிறும் செந்தூரனின் புண்ணியத்தில் மந்தித்துப் போயிருந்தது. அதைச் சொன்னால் அன்னை கோபப்படுவார் என்று அறிந்தவள், “போடுங்கம்மா வாறன்.” என்றுவிட்டு எழுந்து உடைமாற்றச் சென்றாள்.

இதமாக உணவு பரிமாறினார் மேகலா. அவரின் கைப்பக்குவம் எப்போதுமே மேலதிகமாக இரண்டு வாயை உண்ணவைக்கும் அளவில் அற்புதமாக இருக்கும். இன்றோ விரதத்தையாவது முடித்துவைப்போம் என்றால், அவன்தான் அங்கும் வந்து நின்று பயமுறுத்திக் கொண்டிருந்தான்.

விட்டால் அவளுக்கே அறைந்திருப்பான். இன்று அவள் தப்பியது பெரும் தப்புத்தான். எவ்வளவு ஆத்திரமா பூவை சுழற்றி எறிந்தான். அவளை உண்ணவிடாமல் நடந்த சம்பவமே சுற்றிச் சுற்றி வந்தது.

முடிந்தவரை கொஞ்சமாகக் கொரித்துவிட்டு முடியாமல் எழுந்துவிட்டாள்.

“என்ன நிலா?” ஒன்றும் விளங்காமல் கேட்டார் மேகலா.

“போதும்மா!”

“என்ன விளையாடுறியா நீ? நாள் முழுக்க வயித்துக்க ஒண்டுமில்ல. இதுல இனி நாளைக்கு இரவுதான் சாப்பாடு. முழுநாளும் சாப்பிடாம இருந்தா தொண்டைக்க இறங்காதுதான். கொஞ்சம் தண்ணிய குடிச்சிட்டு மெல்ல மெல்ல சாப்பிடு நிலா.” மனம் தாளாமல் சொன்னார்.

அவள் வேறு விரதம் முடித்தாயிற்று தானே என்று உணவுக்குப்பிறகு கண்டதையும் சாப்பிடுகிறவளும் அல்ல. எதையும் நேர்த்தியாகவும் நியாயமாகவும் நேர்மையாகவும் செய்கிற பெண்.

அதனால்தான் யாரோ ஒருவனின் நியாயமற்ற கோபத்தைக் கூட போகிறது என்று புறம் தள்ளமுடியாமல் தவித்தாள்.

“காணும்மா பசிக்கேல்ல.” சோர்வோடு சொல்லிவிட்டுச் சென்று கை கழுவியவளை இயலாமையோடு பார்த்தார் அவர்.

“படிக்கிற பிள்ளைக்கு என்னத்த காணும்? சொன்னாலும் கேக்கிறேல்ல. இதுல விசரி மாதிரி பிள்ளை பாவம் பசியோட வருவாள் எண்டு பாத்துப் பாத்து சமைச்சனான்.” தன்பாட்டுக்கு புலம்பினார் அவர்.

“கொஞ்சத்துல பால் கொண்டு வருவன். அத இத சொல்லாம குடிக்கோணும் சொல்லிப்போட்டன். இல்லாட்டி எனக்கு பொல்லாத கோபம் வந்துடும்!”

“அய்யோம்மா.! இனி எனக்கு ஒண்டும் வேண்டாம். நான் படுக்கப்போறன். மாமா கேட்டா சொல்லிவிடுங்கோ.” என்றபடி அறைக்குள் போகவும், மகளுக்கு உண்மையிலேயே முடியவில்லை என்று உணர்ந்துகொண்டார் மேகலா.

எந்தக் காரணத்துக்காகவும், ஏன் காய்ச்சல் என்றாலும் கூட ஒன்றுக்கு இரண்டாக பராசிட்டமோலை விழுங்கிவிட்டு படிக்கப் போகிறவள் அவள். இன்று அதைக்கூட செய்யவில்லை என்றால்?

நன்றாகப் படிக்கவேண்டும், டாக்டராகவேண்டும் என்பது அவளின் லட்சியம் என்பதைத் தாண்டி, கற்பது என்பது அவளுக்கு வாய்த்த கலை என்றுதான் சொல்லவேண்டும். படிப்பது அவ்வளவு பிடிக்கும். அவளின் பொழுதுபோக்கு, அவள் விரும்பிச் செய்யும் விஷயம், அவளுக்கு மிகப் பிடித்த ஒன்று எல்லாமே கற்பதுதான்.

அந்தளவுக்கு விரும்பிச் செய்வதைக்கூட அன்று செய்யாமல் போகிறாள் என்றால் உண்மையிலேயே அவளுக்கு நல்ல தலைவலிதான் என்று உணர்ந்துகொண்டார் மேகலா.

செய்துகொண்டிருந்த வேலையை அப்படியே விட்டுவிட்டு, விக்ஸை எடுத்துக்கொண்டு வேகமாக அவளின் அறைக்குள் சென்றார்.

“கொஞ்சநேரம் படுத்தாலே போதும். விக்ஸ் வேண்டாம்மா.” தாயின் கையில் கிடந்ததைக் கண்டுவிட்டு அப்போதும் அவள் சொல்ல,

“பேச்சு வாங்காம பேசாம கண்ண மூடு. நான் கண்ணுக்க படாம கொஞ்சமா தேய்ச்சு விடுறன்.” என்றவர், அவளருகில் அமர்ந்து தேய்த்தும் விட்டார்.

தாயின் விரல்களில் ஏதோ மாயாஜால வித்தை இருந்திருக்கவேண்டும். அவ்வளவு இதமாக இருக்கவே, கண்களை மூடிக்கொண்டாள் அவளும். “இண்டைக்கு விட்டத விடியக்காலம எழும்பிப் படிக்கிறன் எண்டு எழும்பி நிக்காம நல்லா நித்திரை கொண்டு எழும்பு. நாளைக்கு சேர்த்துப் படிக்கலாம் சரியா!” என்றார் அதட்டலும் கரிசனமுமாக.

அவள் இதழ்களில் குறும்புப் புன்னகை மலர்ந்தது. “படிக்கிற பிள்ளைய படிக்காத எண்டு சொல்ற டீச்சரை இண்டைக்குத்தான் பாக்கிறன்.”

“நானெல்லாம் என்ர ஸ்டுடென்ட்ஸ் மனமறிஞ்சு நடக்கிற டீச்சர்! உன்ர கௌரி மிஸ் மாதிரி இல்ல.” என்றார் அவரும்.

கௌரி அவரின் பள்ளிக்கால வகுப்புத் தோழி, அதோடு அவர்களது பாடசாலையின் சக ஆசிரியையும் கூட. அவர்தான் இவளின் வகுப்பாசிரியை. சற்றே கண்டிப்பானவர் என்றாலும் பாசமானவரும் கூட. அவர் என்றால் இவளுக்கு மிகவுமே பிடிக்கும் என்று தெரிந்து சீண்டினார் மேகலா.

அவர் எண்ணியதுபோலவே படக்கென்று கண்களைத் திறந்து முறைத்தாள் மகள். “உங்களுக்கு என்ர மிஸ்ஸ இழுக்காட்டி செமிக்காதே! அவா ஒண்டும் உங்களை மாதிரி சிரிப்பு மிஸ் இல்ல சீரியஸ் மிஸ். அதாலதான் உங்கட மகள் இவ்வளவு கெட்டிக்காரியா இருக்கிறாள்.” என்று அறிவித்தாள்.
 

நிதனிபிரபு

Administrator
Staff member
“ஓ..! அப்ப நீ படிச்சு கெட்டிக்காரி ஆகேல்ல. அவள்தான் நீ எழுதாத பேப்பருக்கு மார்க்ஸ் போட்டிருக்கிறாள்.”

“இதுல இருந்தே தெரியுது, நீங்க எப்படி உங்கட பிள்ளைகளுக்கு மார்க்ஸ் போடுறீங்க எண்டு. ஆனா, என்ர மிஸ் அப்படி இல்ல.” என்று அவள் சொல்ல,

“அப்ப போ! போய் உன்ர மிஸ்ஸையே கட்டிப்பிடி!” என்றபடி அவர் எழும்பினார்.

“அச்சச்சோ என்ர அம்மாக்கு கோபம் எல்லாம் வருதடாப்பா! சரிசரி விடுங்க! என்ன இருந்தாலும் என்ர அம்மா மாதிரி வராது! நீங்க வாங்கம்மா!” என்று அவரை இழுத்து இன்னுமே அவர் மடியில் வாகாகத் தலைவைத்துக் கொண்டாள்.

அவள் முகம் சற்றே தெளிந்திருக்க, “இப்ப பரவாயில்லையா?” என்று கேட்டார் மேகலா.

“ம்ம், பரவாயில்ல.” என்றவளுக்கு மெய்யாகவே பரவாயில்லாமல் தான் இருந்தது.

“சரி படு!” மகளுக்கு போர்த்திவிட்டுவிட்டுப் போனார் மேகலா.

அவர் கதவைச் சாத்தியதும் மெல்லக் கண்களை மூடிக்கொண்டாள்.

மீண்டும் அவன்தான் வந்தான். இந்தமுறை அவள் மிரளவில்லை. எதற்காக இத்தனை கோபம்? என்று யோசித்தாள்.

‘அவன் தந்த பூவை நான் வாங்கேல்ல என்றா?’

‘கோபம் வரும்தானே. அவனே விருப்பம் இல்லாம நிண்டிருப்பான். அதுதான் சசி சொன்னாளே, அவள் சரம் கட்டினதுக்கே கத்தினவன் எண்டு. இதுல ஒரு பொம்பிளை பிள்ளைக்கு கோயிலுக்கு வெளில காத்து நிண்டு பூவை குடு என்றால்.. எவ்வளவு கோவம் வரும். நான் வேற வாங்காம நிக்கவும்..’
இப்போது அவள் இதழ்களில் புன்னகை மலர்ந்தது.

அவள் வாங்காத போது அவனுக்கு எப்படி இருந்திருக்கும்?

‘எண்டாலும் இவ்வளவு கோபமா? அம்மாடி! நல்லகாலம் இவன் எல்லாம் எனக்கு அண்ணாவா பிறக்கேல்ல.’

அவளைத் தன் சொந்தமாக்குவதற்கு என்றே ஆண்மகனாய் பிறப்பெடுத்தவன் அவன் என்பதை அறியாமல் இப்படி எண்ணியபடி உறங்கிப்போனாள் அவள்.

மகள் உண்ணாத உணவுகளை பார்க்கையில் மேகலாவுக்கு கவலையாகத்தான் இருந்தது. ‘இந்த கௌரி விரதம் கெதியா முடிஞ்சா நல்லாருக்கும். சும்மாவே மெல்லிய உடம்பு. இந்த விரதத்தோட காத்து மாதிரி ஆகப்போறா.’ அவளை எண்ணி வருந்தியபடி உணவுப் பாத்திரங்களை எடுத்து வைத்து ஒதுக்கினார்.

ஹாலுக்கு வந்து நேரத்தை பார்க்கவும் அப்போதுதான் ஏழரை என்று காட்டியது. ‘அண்ணா வர நேரமிருக்கு!’ என்று எண்ணியவர் தன்னுடைய அலுவலக அறைக்குள் சென்று, அன்று மாணவர்களுக்கு வைத்த பரீட்சைப் பேப்பர்களை எடுத்துக்கொண்டு மேசையில் அமர்ந்தார்.

மகள் சொன்ன ‘சிரிப்பு மிஸ்’ நினைவலைகளில் மிதந்து வந்து சிரிப்பூட்டியது. உண்மையிலேயே அவர் அப்படித்தான். அவர் கண்டிப்புக் காட்டும் ஒருத்தி என்றால் அது கவின்நிலாதான். அவளும் அவர் பேச்சைக் கேட்கமாட்டாள். ஆக, அவர் ‘சிரிப்பு மிஸ்’ தான். அதன்பிறகான நேரம் அந்தப் பேப்பர்களிலேயே கழிந்தது அவருக்கு.

கார் வரும் சத்தம் கேட்கவும் எல்லாவற்றையும் ஒதுக்கிவிட்டு அவர் வெளியே வர, அவரின் தமையன் கனகரட்ணம் உள்ளே வரவும் சரியாக இருந்தது. ஐம்பதுகளை நெருங்கிக்கொண்டிருந்தாலும் கல்விச்செல்வம் கொடுத்த மிடுக்குடன் அசாத்தியமான உயரத்தில் இருந்தார். கட்டுக்குழையாத கம்பீரம்! விழிகளில் தெளிவும் தீர்க்கமும்! அதனோடு கூடவே கனிவும்! அந்த விழிகளை அலங்கரித்திருந்த பிரேம் அற்ற கண்ணாடி கூட அவரை இன்னுமே கம்பீரமாய் காட்டிற்று!

வந்ததும் வராததுமாக “எங்கயம்மா நிலா? இண்டைக்கு படிக்க வரேல்லையாம் எண்டு சுரேந்தர் சொன்னான்.” என்று கேட்டார்.

“தலைவலிக்குது எண்டு சாப்பிட்டு படுத்திட்டாள் அண்ணா. உங்களிட்ட சொல்லிவிடச் சொன்னவள்.”

“என்ன திடீர் எண்டு? இப்ப எல்லாருக்கும் வைரஸ் காய்ச்சல் பரவுதாம்.” என்றபடி உடனேயே மருமகளின் அறைக்குச் சென்று அவள் நெற்றியில் கைவைத்துப் பார்த்தார்.

பார்த்திருந்த மேகலாவின் இதழ்களில் புன்னகை. மருமகளுக்கு ஒன்று என்றதும் ஓடிப்போய் பார்க்கும் அவர் ஒன்றும் அத்தனை சாதாரணமானவர் அல்ல.

கனகரட்ணம் பரந்தாமன்!

யாழ் பல்கலைக்கழகத்தின் விஞ்ஞான பீடாதிபதி! பேராசிரியர்! வைத்தியர்!

யாழுக்கும் யாழ் பல்கலைக்கழகத்துக்கும் கிடைத்த மிகப்பெரிய சொத்து!

‘எதிர்கால வைத்தியன்’ ஆகவேண்டும் என்கிற கனவைச் சுமந்துவரும் எந்த மாணவனும் ஆசைப்படும் ஒரே விஷயம் ‘கே.பி’ சேரின் ஒரு விரிவுரையிலாவது இருந்துவிட வேண்டுமென்பது.

அவரின் மாணவன் என்று சொல்லிக்கொள்வதிலேயே அத்தனை பெருமை!

“கே.பியின் ஸ்டுடண்ட்டா?” என்று கேட்டதுமே கேட்டவரின் விழிகளில் ஒரு மரியாதையை தோற்றுவிக்கின்ற மனிதர்.

பல்கலையின் அத்தனை பெண்களின் கனவுநாயகனும் கூட!

கல்விக்கே தன்னை அர்ப்பணித்தவர். திருமணத்தை கல்விக்காகவே புறம்தள்ளியவர். எப்போதும் விரிவுரை, கருத்தரங்கு, மீட்டிங் என்று சுற்றிக்கொண்டே இருப்பார். யாழில் பிறக்கும் அத்தனை குழந்தைகளும் கல்விமானாய் சிறந்துவிளங்க வேண்டும் என்கிற பெரும் ஆசையை கொண்டவர். அப்படியானவரின் வாரிசு கவின்நிலா. தான் எட்டாத உயரங்களைக் கூட அவள் எட்டவேண்டும் என்பதுதான் அவரின் கனவு! லட்ச்சியம்! அதை இன்றுவரை அவளும் நிறைவேற்றிக்கொண்டுதான் வருகிறாள்.

எங்கு என்ன வேலையில் இருந்தாலும் அவரின் நினைவுகள் அனைத்தும் அவளின் கல்வியிலும், எதிர்கால வாழ்விலும், நலனிலும் மட்டுமே சுற்றிச் சுழலும்.

உள்ளதைச் சொல்லப்போனால், மேகலாவும் அவரின் கணவர் தயாபரனும் அவளைப் பெற்றது மட்டுமே! வளர்த்தது எல்லாம் அவர்தான்!

உடல் சுடவில்லை என்றதும் வெளியே வந்து, “விக்ஸ் பூச விட்டிருக்கிறாள் எண்டேக்க ஆளுக்கு நல்ல தலையிடி போலத்தான் கிடக்கு.” என்றார் கனகரட்ணம் சிரிப்போடு.

“அவள் எங்க விட்டது. நான்தான் விடாப்பிடியா நிண்டு பூசிவிட்டனான்.” என்று சிரித்துவிட்டு, “சாப்பாடு போடவாண்ணா? இல்ல தேத்தண்ணி ஏதும் குடிக்கப் போறீங்களா?” என்று விசாரித்தார்.

‘சாப்பாட்டைப் போடு’ என்றால் அவர் இனி வெளியே செல்லமாட்டார் என்று அர்த்தம். தேநீர் என்றால் வெளிவேலை இருக்கிறது என்று அர்த்தம்.

“அங்க ஸ்டடி ஹாலுக்கு ஒருக்கா போகோணும். தேத்தண்ணியே கொண்டுவா. கடிக்க எதுவுமிருந்தா அதையும் கொண்டுவா.” என்றவர், தொலைக்காட்ச்சியில் நியூஸ் சானலுக்குள் தன்னை நுழைத்துக்கொண்டார்.

சமையலறைக்கு சென்ற மேகலாவுக்கு தமையனை எண்ணி மனம் கனிந்தது. பக்கத்து வீடுதான் அவரின் வீடு. ஆனால், அவரின் வசிப்பிடம் இருப்பிடம் எல்லாமே தங்கை வீடுதான்.

அவர் வீடு இயங்குவதோ ‘ஸ்டடி ஹால்’ மற்றும் அவரின் அலுவலகமாக மட்டுமே. அங்கு ஏதாவது மீட்டிங், யாராவது கல்வித் பொறுப்பாளர்கள் வந்தால் தங்குவது இப்படி கல்வி சம்மந்தமாக ஏதாவது நடந்துகொண்டிருக்கும். அவர் படித்தகாலத்து புத்தகங்களில் இருந்து இன்றைய நவீன புத்தகங்கள் வரை அற்புதமான ‘லைப்ரரி’ ஒன்றைக்கூட அந்த வீட்டில் நிறுவி வைத்திருக்கிறார். விஞ்ஞான ஆய்வுகூடம் ஒன்றையும் நிறுவி இருந்தார்.

கவின்நிலாவின் அப்பா தயாபரன் இலங்கை வங்கியில் உயர்ந்த பதவியில் இருப்பவர். கொழும்பில் வேலை. வார இறுதிகளில் வந்து போவார். படித்த குடும்பம். செல்வாக்கான மனிதர்கள். காலம் காலமாய் கல்விச் செல்வத்தால் மட்டுமே புகழ் பெற்ற குடும்பம். அவர்களுக்கு என்று மதிப்பும் மரியாதையும் தனியாக உண்டு! அந்த வீட்டின் ஆணிவேர் கனகரட்ணம்.


அடுத்தநாள் காலையில் கண் விழிக்கையில் வழமைக்குத் திரும்பியிருந்தாள் கவின்நிலா. நிதானமாக எதையும் யோசித்துச் செயலாற்றும் பெண் அவள். எதிர்பாராமல் அவனது கோபத்துக்கு ஆளானதில் அதிர்ந்து போயிருந்தாலும் நிதானத்துக்கு வந்ததும் அவனது கோபத்தில் இருந்த நியாயத்தை விளங்கிக்கொண்டாள்.

‘என்னிலும் பிழை இல்லை. அந்த இடத்தில அவனிட்ட இருந்து பூ வாங்கி இருந்தா பாக்கிற யாரும் என்னை மட்டுமா பிழையா கதைப்பீனம். அவனையும் தானே. ஆனா, அவனிலையும் பிழை இல்லை. இந்த சசியால.. அவளும் பாவம். எனக்காக தமையனை கெஞ்சி மறிச்சு வச்சிருப்பாள். ஆக ஒருவரிலும் பிழை இல்ல’ என்று எண்ணியபடி சந்தோஷமாகவே பள்ளிக்கூடம் புறப்பட்டாள்.

சற்று நேரத்திலேயே அவளைப் பின்தொடரத் தொடங்கியிருந்தான் துஷ்யந்தன். சினம்தான் வந்தது.

இது இன்று நேற்றல்ல, அவள் ஏஎல் தொடங்கிய காலத்திலிருந்து நடப்பது. வாரத்தில் இரண்டு நாட்களாவது பின்னால் வருவான்.

சினப்பார்வை ஒன்றை வீசிவிட்டு அவள் வேகமாக சைக்கிளை மிதிக்க, தன் மோட்டார் வண்டியை அவளருகே கொண்டுவந்தான் அவன்.
 

நிதனிபிரபு

Administrator
Staff member
“ரெண்டுவருஷமா வாறன். ஒரு நல்ல பதிலா சொல்லு கவி.”

காதிலே விழுத்தாமல் அவள் செல்ல, “என்னட்ட என்ன குறை எண்டு சம்மதிக்கிறாய் இல்ல?” என்று விடாமல் கேட்டான்.

கதிர்நிலவனின் பேட்ச்மேட் இவன். அண்ணாவின் நண்பன் என்று காண்கிற நேரங்களில் சின்னப் புன்னகையை அவள் உதிர்ப்பது வழக்கம். ஆனால் அவனது எண்ணம் வேறு என்று உணரத் தொடங்கியதும் அதையும் நிறுத்திவிட்டாள். மூன்று மாதங்களாக பின்தொடர்ந்து, எனக்கு உன்னை பிடித்திருக்கிறது என்பதை உணர்த்திவிட்டு ஒருநாள் அவன் காதலை சொன்னபோது, “இல்லை! எனக்கு இதில விருப்பமில்லை.” என்று அவன் கண்களைப் பார்த்து நேராகச் சொல்லிவிட்டாள்.

பிறகு பிறகும் அவன் அவளையே சுற்றிக் கொண்டிருக்க, “இப்படிச் செய்து கேவலப் படுத்தாதீங்கோ. நீங்க என்ர அண்ணாவோட பிரெண்ட். அவ்வளவுதான் எனக்கு.” என்று தன்மையாகச் சொல்லியும் அவன் நிறுத்தவில்லை.

அதன்பிறகு அவனிடம் எதுவுமே அவள் கதைத்ததில்லை. செயலில் உணர்த்தியாயிற்று. வாய் வார்த்தையாலும் சொல்லியாயிற்று. இதற்கு மேலே நான் என் முடிவில் உறுதியாக இருந்தால் முயற்சி செய்து பார்த்துவிட்டு பின்வாங்கி விடுவான் என்று எண்ணிக்கொண்டுதான் இன்றுவரை பொறுமையோடு நடக்கிறாள்.

எத்தனையோ தடவை அண்ணாவிடம் சொல்லுவோமா என்று நினைத்தாலும், சொல்லியதில்லை. அவனது நெருங்கிய நண்பன் இவன். இப்படி என்று தெரிந்தால் எவ்வளவு கவலைப்படுவான்? அங்கிருப்பவனிடம் சொல்லி அவனுக்கும் கவலையை ஏன் கொடுப்பான்? நான் சரியாக இருந்தால் சரிதானே? என்று விட்டுவிட்டாள்.

மாமாவிடம் சொல்ல விருப்பமில்லை. அவருக்குப் பிடித்த பழைய மாணவர்களில் அவனும் ஒருவன். மருத்துவனாக இருக்கிறான். தன் மாணவர்கள் எதிலும் தவறுவதை அவரால் தாங்க முடிவதில்லை. அவனும் நான் காத்திருக்கிறேன் என்று அவளுக்கு உணர்த்துவானே தவிர அதைத்தாண்டிப் போவதில்லை என்பதால், மறுப்பை மட்டும் உறுதியாகக் காட்டுவதோடு நிறுத்திக்கொண்டாள்.

இன்றும் அப்படியே அவள் மறுப்பை மௌனத்தில் காட்டிக்கொண்டு போக, “பதில் சொல்லு கவி!” என்றான் சற்றே அழுத்தி.

என்றுமில்லாத அன்றைய அழுத்தத்தில் அதிர்ந்து அவனைத் திரும்பிப் பார்த்தாள். அவன் கண்களில் சின்ன வெற்றிக்குறி. உடனேயே அதை வளரவிடக்கூடாது என்று முடிவுகட்டி, “என்ன கதைக்கிறதா இருந்தாலும் மாமாவோட கதைங்கோ. அவரோட முடிவுதான் என்ர பதில்!” என்று அவள் சொல்ல, இப்போது அதிர்ந்துபோய் நின்றுவிட்டான் அவன்.

கே.பியிடம் போய் இதைக் கதைப்பதா? நினைவே படு பயங்கரமாய் தோன்றியது.






மாலை டியூஷனுக்கு தன் ஸ்கூட்டியில் சென்றுகொண்டிருந்தாள் கவின்நிலா. செந்தூரனின் கடையை நெருங்கும்போது என்றுமில்லாது அன்று அவளது கடைக்கண் பார்வை அவன் கடை வாசலை அலசியது. எப்போதும் அரட்டையடித்தபடி நிற்பவர்கள் நிற்கிறார்களா என்று கவனித்தாள்.

அவர்களும் நின்றிருந்தார்கள். என்னவோ சொன்ன நண்பனின் முதுகில் ஒரு அடியைப் போட்டுவிட்டு அவன் தோளைச் சுற்றிக் கையை போட்டுச் சிரித்தபடி திரும்பியவனின் முகம் இவளைக் கண்டதும் ஒருநொடி சிரிப்பைத் தொலைத்தது. அதைக் கண்டுவிட்டவளின் நெஞ்சு படபடவென்று அடித்துக்கொள்ளத் தொடங்கியது.

நேற்றுப்போலவே இன்றும் எதையாவது செய்துவிடுவானோ? தன் நடுக்கத்தைக் காட்டிவிடக்கூடாது என்று ஸ்கூட்டியை இறுகப்பற்றியபடி அவர்களைக் கடக்க முனைய, அவள் அவர்களைக் கடக்கப்போகும் அந்த நொடியில், “டேய் மச்சி! முதல் போய் லைசென்ஸ் எடுடா!” என்றான் சத்தமாக.

அந்தப்பக்கம் திரும்பிவிடக்கூடாது என்கிற கவனமெல்லாம் மறக்க, சட்டென்று திரும்பிப்பார்த்து முறைத்தாள் கவின்நிலா. ‘மானத்த வாங்கிட்டானே! எளியவன்!’ அடக்கப்பட்ட சிரிப்பில் அவள் உதடுகள் துடித்தன!

அவனோ கண்ணால் சிரித்துச் சீண்டினான்.

‘போடா!’ உதட்டசைவில் திட்டிவிட்டுக் கடந்தவளால் இதழ்களில் பூத்துவிட்ட சிரிப்பை அடக்கவே முடியவில்லை.

‘மானமே போச்சு! நேற்று நான் தடுமாறினத கவனிச்சிருக்கிறான். எவ்வளவு வெட்கக்கேடு!’

‘அவ்வளவு கோபத்திலையும் அத கவனிச்சிருக்கிறான்!’

இங்கே செந்தூரனின் உதடுகளிலும் புன்சிரிப்பு உறைந்துபோயிற்று! ‘போடா!’ என்று அவள் திட்டியதை அவன் உணராமலில்லை. ஆனாலும் சிரித்துக்கொண்டிருந்தான்.

“என்ன மச்சி? சிட்டுக்குருவி இந்தப்பக்கம் பாக்குது! நீயும் ஜாடையா என்னவோ சொல்லுறாய்? என்னடா நடக்குது? சம்திங் சம்திங்?” என்ற நண்பனிடம்,

“யாரு, நான்? அவளை? போடா டேய்!” என்றவனின் உதடுகளில் சிரிப்பு மட்டும் அடங்கவே இல்லை.


டியூஷனால் வந்து, படிக்கவேண்டும் என்று குறித்து வைத்தவைகளோடு ஸ்டடி ஹாலுக்குச் சென்றாள் கவின்நிலா.

ஹால் வாசலில் அவளைக் கண்டதும், கையசைத்து ஹாய் சொன்ன சுரேந்தர், அங்கேயே நில் என்று சைகையில் காட்டிவிட்டு எழுந்து வெளியே வந்தான்.

தானாகப் படிக்க ஆர்வம் கொண்டவர்களே அங்கே வருவதுண்டு. ஏதும் சந்தேகம் கேட்பதோ, கதைப்பதோ, சின்னதாக இடைவேளை எடுத்துக்கொள்வதோ எதுவாயினும் ஹாலுக்கு வெளியேதான். விரும்பி ஊக்கமெடுத்துப் படிப்பவர்கள் என்பதால் உள்ளே, சின்னச்சின்ன சில்மிஷம், விளையாட்டு, தேவையில்லாத அசைவுகள் என்று எதுவுமே இராது. அந்தச் சட்டத்தை யாருமே உருவாக்காதபோதும் தானாக உருவாகிப் போனது.

அவளும் வெளியேயே நிற்க, “நேற்றுத் தலைவலியாம் எண்டு டீன் சொன்னவர், இப்ப எப்படி இருக்கு?” என்று விசாரித்தான் சுரேந்தர்.

“இப்ப சுகம்.” என்றவள், “மாமா எங்க?” என்று கேட்டாள் விரிவுரை நடக்கும் ஹாலை எட்டிப் பார்த்தபடி. அங்கே மாணவர்களுக்கு ப்ராஜெக்ட்டரில் எதையோ விளக்கிக்கொண்டிருந்தார் அவர்.

“பெர்ஸ்ட் இயர் ஸ்டுடென்ட்ஸ்க்கு கிளாஸ் எடுக்கிறார்” என்று சொல்லிவிட்டு, “ஏதாவது டெஸ்ட் இருக்கா? ஹெல்ப் வேணுமெண்டா கேளுங்கோ. அன்றைக்கு பிஸிக்ஸ்ல ஒரு தியரி விளங்கேல்ல எண்டு சொன்னீங்க தானே. கிளியர் ஆகிட்டுதா?” என்று நினைவு வைத்துக் கேட்டான் அவன்.

கனகரட்ணத்தின் மிகவும் நம்பிக்கைக்குரிய மாணவர்களில் சுரேந்தரும் ஒருவன். அதுவும் இன்றைய காலகட்டத்தில் அவரின் அரைவாசிக்கும் மேலான பொறுப்புக்களை ஏற்று நடத்துபவன்.

“இல்ல. எனக்கு இன்னும் டவுட்ஸ் இருக்கு. கிளியர் பண்ணி விடுறீங்களா?” என்று அவளும் கேட்க, “வாங்கோ.” என்று அங்கே மரத்துக்கு கீழே இருந்த பெஞ்சில் இருவரும் இடைவெளி விட்டு அமர்ந்துகொள்ள அவளின் நோட்ஸ் வாங்கி விளங்கப்படுத்தத் தொடங்கினான் சுரேந்தர்.

சின்னச் சின்ன குறிப்புக்களோடு அவன் கொடுத்த விளக்கம் மிகவுமே உதவியாக இருந்தது அவளுக்கு.

“பிறகு? படிப்பெல்லாம் எப்படி போகுது?” விளங்கப்படுத்தி முடித்ததும் கேட்டான்.

“நல்லா போகுது.” என்றாள் அவள் புன்னகையோடு.

“வடிவா படிக்கோணும். நாங்க எல்லாரும் உங்களைத்தான் நம்பிக்கொண்டு இருக்கிறோம். எங்கட டீன்ர மருமகள் சும்மா இல்ல எண்டு நாங்க சொல்ற மாதிரி இருக்கோணும்.” எதிர்பார்ப்போடு சொன்னான் சுரேந்தர்.

கல்வியில் சிறந்துவிளங்கும் யாழ்ப்பாணம், கனகரட்ணம் பரந்தாமனைப் போன்ற மிகச் சிறந்த கல்வியாளர்களை தன்னகத்தே கொண்ட யாழ்ப்பாணம் கடந்த ஆறு வருடங்களாக விஞ்ஞானப்பிரிவில் தன் முதலிடத்தை மீண்டும் பிடிக்க முடியாமல் திணறிக் கொண்டிருந்தது. கதிர்நிலவன் முதலில் விட்டான். அதன் பிறகான இரண்டு வருட மாணவர்களும் இரண்டு, மூன்று என்றுதான் வந்தார்களே தவிர முதலிடத்தைப் பிடிக்கவே இல்லை. அதன்பிறகு எல்லோராலும் எதிர்பார்க்கப்பட்ட, ஏன் கே. பியால் கூட மிகவுமே நம்பிக்கையாக எதிர்பார்க்கப்பட்ட சுரேந்தர் கூட மூன்றாம் இடத்தத்தைத்தான் பெற்றிருந்தான். அதன் பிறகான இரண்டு வருடங்களும் கூட அப்படியேதான் ஆனது. இந்த வருடமோ அத்தனைபேரின் நம்பிக்கையின் நட்சத்திரமாக அவள் விளங்கினாள்.

“உங்களிட்ட ஒரு விஷயம் சொல்லோணும் எண்டு நிறைய நாளா காத்திருக்கிறன், அதுக்கு முதல் நீங்க பெர்ஸ்ட் ரேங்க் எடுக்கவேணும்.” என்று அவன் கண்களில் சிரிப்போடு சொல்ல,

“என்ன விஷயம் எண்டு சொல்லுங்கோ நான் பெர்ஸ்ட் ரேங்க் எடுத்துக் காட்டுறன்.” என்று அவள் எவ்வளவோ ஆர்வமாகக் கேட்டும் கண்ணால் சிரித்தானே தவிர சொல்லவேயில்லை.

“நானே கண்டுபிடிக்கிறன்!” என்று சவால் விட்டுவிட்டு படிக்கப் போனாள் அவள்.
 

Goms

Active member
ஒரே படிப்பாளி குடும்பமா இருக்கே 💞

துஷ்யந்தன்தான் வில்லனா?🤔
 
Top Bottom