• நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.
    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

நீ தந்த கனவு - 10

நிதனிபிரபு

Administrator
Staff member
அத்தியாயம் 10

இன்றைக்கு வவுனியாவிலிருந்து அகரனும் வருகிறான் என்பதில், நால்வருக்குமான நிச்சய மோதிரங்களை எடுக்கப் போகலாம் என்று அகரனும் எல்லாளனும் முடிவு செய்திருந்தனர். அதற்காக வீடு வந்து தயாரானான் எல்லாளன்.

அவனுக்கான சிற்றுண்டியையும் தேநீரையும் கொண்டுவந்து கொடுத்த சியாமளாவின் முகம் நன்றாக இல்லை.

அதைக் கவனித்துவிட்டு, “என்னம்மா?” என்று வினவினான் தமையன்.

உடனேயே எதையும் சொல்லவில்லை அவள். மனத்தில் இருப்பதைக் கேட்பதா வேண்டாமா என்கிற கலக்கமும் குழப்பமுமாக அவனைப் பார்த்தாள்.

“யோசிக்காமச் சொல்லு. என்ன?” விடாமல் ஊக்கினான் தமையன்.

“உங்களுக்கு இந்த நிச்சயத்தில விருப்பம்தானா அண்ணா?” குழப்பத்திற்கும் தடுமாற்றத்துக்கும் மத்தியில் கேட்டுமுடித்தாள்.

இளம் வயதிலேயே வயதை மீறிய பிரச்சனைகளைச் சந்தித்து, அளவுக்கதிகமான பொறுப்புகளையும் கடமைகளையும் ஏற்றுக்கொண்டதாலோ என்னவோ, அன்னை தந்தையரோடே அவனுடைய இலகு சுபாவமும் காணாமல் போயிருந்தது. எனினும் சின்ன சிரிப்பு, சிறு சிறு கேலிகளுக்கெல்லாம் பஞ்சம் இராது.

அப்படியானவனின் முகத்தில் திருமண நிச்சயம் நடக்கப் போவதற்கான எந்த மலர்ச்சியும் இல்லை. ஆதினியின் மீது ஈர்ப்போ, அவளோடு பேசுவதற்கு ஆர்வமோ காட்டவும் இல்லை.

அவன் கையாளும் வழக்குகளில் ஒன்றைப் போன்றே நடக்கப் போகிற நிச்சயத்தையும் கையாள்கிறானோ, தனக்காகத்தான் இதற்குச் சம்மதித்தானோ என்கிற கேள்விகள் அவளுக்குள் எழுந்துகொண்டே இருந்தன. அதை, காலம் கடந்துவிட முதல் கேட்டால்தானே பிரயோசனம்?

அவன் பார்வையில் மெல்லிய ஆச்சரியம் படர்ந்தது.

“திடீரெண்டு என்னத்துக்கு இந்தக் கேள்வி?” என்று திருப்பிக் கேட்டான்.

“திடீரெண்டு இல்லை அண்ணா. கொஞ்ச நாளா இது மட்டும்தான் மண்டைக்க ஓடிக்கொண்டே இருக்கு.”

“அதுதான் ஏன்?”

“உங்களுக்கு விருப்பம் இருக்கிற மாதிரி எனக்குத் தெரியவே இல்லயே.” கவலையோடு சொன்னாள்.

“விருப்பம் இல்லாமையா ஓம் எண்டு சொன்னனான்?”

“பாத்தா அப்பிடித் தெரியேல்லையே அண்ணா.” கேட்ட கேள்விக்கு நேரடியாகப் பதில் சொல்லாமல் அவன் கேள்விகளாகக் கேட்பதிலேயே அவள் சந்தேகம் வலுத்துப்போயிற்று.

“நான் என்ன சின்ன பிள்ளையாம்மா? எனக்கு நிச்சயம், எனக்கு நிச்சயம் எண்டு துள்ளிக்கொண்டு திரிய?” சிறு சிரிப்புடன் வினவினான் அவன்.

“அண்டைக்கும் கரும்பு தின்னக் கூலியா எண்டு மறைமுகமாத்தான் பதில் சொன்னனீங்க. இப்பவும் அப்பிடித்தான். எனக்கு அவளைப் பிடிச்சிருக்கு எண்டு நேரடியாச் சொல்லுறீங்களே இல்ல. அண்டைக்கு ரெண்டு கலியாணமும் நடந்தா என்ர அண்ணா என்னோடயே இருப்பார், காலத்துக்கும் எல்லாரும் ஒரே வீட்டிலேயே இருக்கலாம் எண்டுறது மட்டும்தான் பெருசாத் தெரிஞ்சது. இப்ப யோசிக்க யோசிக்க, உங்களுக்குக் கொஞ்சமும் பொருத்தம் இல்லாத ஒருத்திய, எனக்காகவும் மாமா மறைமுகமா வற்புறுத்தினதாலயும் ஓம் எண்டு சொல்லிட்டீங்களோ எண்டு கவலையா இருக்கு. நானும் உங்களுக்குப் பிடிச்சிருக்கா, விருப்பமா எண்டு கேக்கேல்ல. அவள் உங்களுக்குப் பொருத்தமா எண்டு யோசிக்கவும் இல்ல. எவ்வளவு சுயநலம் பிடிச்சவளா இருந்திருக்கிறன் எண்டு பாருங்களன்.” என்றவளுக்கு மேலே பேச வரமாட்டேன் என்றது.

அவளுக்கென்று ஒவ்வொன்றையும் பார்த்து பார்த்துச் செய்யும் தமையனுக்கான வாழ்க்கையை மெத்தனமாக அணுகிவிட்டாளே!

“என்ர சந்தோசத்துக்காக உங்களப் பலிகடா ஆக்கிட்டேனா அண்ணா?” கலங்கிவிட்ட விழிகளோடு கேட்டவளை, “உனக்கு என்ன விசராம்மா? முதல், இதென்ன பலிகடா அது இது எண்டு கத பேச்சு?” என்று அதட்டினான் தமையன்.

இப்போதும், ஆதினியை அப்படிச் சொல்லாதே என்று அவன் சொல்லவில்லை. இப்படிக் கதைத்துப் பழகாதே என்கிறான். அவள் கலக்கம் கூடிப்போனது. ஆதினி மீது அவனுக்குப் பெரிய ஈடுபாடு இல்லை என்பதும் தெள்ளத் தெளிவானது.

அதில், “சும்மா சும்மா அதட்டாதீங்க அண்ணா. எனக்கு யோசிக்க யோசிக்க விசராக்குது. அண்டைக்கு மருந்துக்கும் பயப்பிடாம எப்பிடித் துவக்கத் தூக்கிக்கொண்டு வந்தாள்? அப்பிடியான அவளோட வாழுறது கஷ்டம். அவள் ஒரு அடங்காப்பிடாரி, அகங்காரம் பிடிச்சவள். அதுதான் சீதனம் வேணும் எண்டு சொல்லி மாமா உங்கட தலைல அவளைக் கட்டிட்டார். நான்தான் அறிவில்லாம வாயை மூடிக்கொண்டு இருந்திட்டன் எண்டா, நீங்களும் ஏன் அண்ணா ஓம் எண்டு சொன்னனீங்க? விருப்பம் இல்லை எண்டு சொல்லியிருக்கலாம். மாமா பிழையா நினைச்சிருக்க மாட்டார். இப்பவும் ஒண்டும் லேட் ஆகேல்ல. இந்த நிச்சயம் வேண்டாம் எண்டு இவரிட்டச் சொல்லுங்கோ. பிடிக்காதவளக் கட்டிக் காலம் முழுக்கச் சிரமப்படுறதுக்கு அது எவ்வளவோ நல்லம் எல்லா.” என்றாள் கவலையும் கலக்கமுமாக.

அதற்கு மாறாக அவளின் பேச்சு எல்லாளனுக்கு அதிர்ச்சியையே கொடுத்தது. அவன் தங்கையா என்று திகைத்தான்.

அதில், “எவ்வளவு பெரிய வார்த்தை எல்லாம் கதைக்கிறாய் நீ? முதல், அங்கிள் அப்பிடியான ஆளா? எங்களுக்கும் சேத்துத்தான் இத அவர் யோசிச்சிருப்பாரா இருக்கும். அதை விளங்கிக்கொள்ளாம… எல்லாத்தையும் விட, நீயும் ஒரு பொம்பிளைப் பிள்ளை. அப்பிடி இருக்கேக்க அவளைப் பற்றி இப்பிடியெல்லாம் கதைக்காத. அதைவிட, ஓம் இல்லை எண்டு மாறி மாறிச் சொல்ல இது சின்ன பிள்ளை விளையாட்டு இல்ல. கலியாணம். ஒருக்காச் சொன்னாச் சொன்னதுதான்! நானும் யோசிக்காம ஓம் எண்டு சொல்லேல்ல. அதால இதைப் பற்றி இனி ஒண்டும் கதைக்காத!” என்று கண்டித்தான்.

அவளுக்கு அவன் கடிந்துகொண்டதை விட, சொல்லிவிட்ட சம்மதத்திற்காக இந்த வாழ்க்கையை ஏற்க நினைக்கிறானோ என்பதுதான் முதன்மையாக நின்றது.

“எனக்கும் இப்பிடி எல்லாம் கதைக்க விருப்பம் இல்ல அண்ணா. ஆனா, உண்மைய உடைச்சுக் கதைக்கிறதுதானே நல்லது? இங்க சிக்குப்பட்டு இருக்கிறது என்ர அண்ணான்ர எதிர்கால வாழ்க்கை. என்னால நாகரீகம் நாசூக்கு எல்லாம் பாக்கேலாது. எங்களுக்கு என்ன அம்மா, அப்பா, சொந்த பந்தம் எண்டு ஆரும் இருக்கினமா இதெல்லாம் பாத்துச் செய்து வைக்கிறதுக்கு?”
 

நிதனிபிரபு

Administrator
Staff member
அவனுக்கும் அது தெரியாமல் இல்லையே! “உனக்கு நான் இருக்கிறன்மா.” என்றான் தணிந்த குரலில்.

“உங்களுக்கு?”

அவன் பதிலற்று நின்றான்.

“இதுதான் அண்ணா பயமா இருக்கு. நாளைக்கு அவளோட ஒரு பிரச்சினை வந்தாலும் நீங்க என்னட்டையோ இவரிட்டயோ சொல்லப் போறேல்ல. அப்பவும் எங்களுக்காகப் பொறுத்து, சமாளிச்சுத்தான் போவீங்க. ஏன் அப்பிடி ஒரு வாழ்க்கை வாழ வேணும் எண்டுதான் கேக்கிறன். இவ்வளவு காலமும் எனக்காகவும் அம்மா அப்பான்ர சாவுக்கு நியாயம் கிடைக்க வேணும் எண்டும் நீங்க ஓடினது காணும். மிச்ச வாழ்க்கையயாவது நீங்க சந்தோசமா, நிம்மதியா வாழோணும். அதுக்குப் பொறுப்பான, பக்குவமான ஒருத்தி உங்களுக்கு மனுசியா வரோணும் அண்ணா.”

இத்தனை நாள்களும் எல்லோர் முன்னும் வைத்துச் சம்மதம் சொல்லியாயிற்றே, இனிப் போய் வேண்டாம் என்று சொன்னால் மாமா என்ன நினைப்பார், இனி என்ன செய்வது என்று தனக்குள்ளேயே வைத்துக் குமைந்தவள், இன்றைக்கும் விட்டால் இனி முடியாது என்னும் அளவுக்கு வந்துவிட்டதால், தன் கவலைகளையும் பயங்களையும் அவனிடம் கொட்டினாள்.

இந்தளவுக்கெல்லாம் யோசித்துத் தனக்குள்ளேயே உழன்றிருக்கிறாள் என்பதை எல்லாளன் எதிர்பார்க்கவில்லை. அவனுக்குத் தன் வாழ்க்கையைப் பற்றியோ, ஆதினியைப் பற்றியோ இவ்வளவில் யோசிக்க நேரம் இருந்ததும் இல்லை; நேரமெடுத்து யோசித்ததும் இல்லை.

இன்றைக்கு அவள் சொன்னதையெல்லாம் கேட்டபோது, அவளின் பயம் புரிந்த அதே வேளை, சின்ன சிரிப்பும் உண்டாயிற்று.

“நீ பயப்பிடுற மாதிரியெல்லாம் ஒண்டும் நடக்காதம்மா. வீணாக் கண்டதையும் யோசிக்காத. நானும் சந்தோசமாத்தான் வாழுவன்.” என்றான் கனிந்த குரலில்.

ஆக மொத்தத்தில் அவளின் தமையன் இந்த நிச்சயத்திலிருந்து பின்வாங்கப் போவதில்லை. இது அவள் எதிர்பார்த்ததுதான். சொன்ன சொல் தவறுகிறவன் அவன் அல்லனே!

“சரி அண்ணா. நீங்க அவளையே கட்டுங்க. நானும் இனி இப்பிடியெல்லாம் கதைக்கேல்ல. ஆனா, அதுக்கு முதல் அவள் மாறோணும். பொறுப்பா இருக்கப் பழகோணும். இல்லாம, உங்கட வாழ்க்கை நிம்மதியா இருக்காது. அதுக்கான வேலையையாவது நாங்க பாக்கோணும். மாமாவும் இவரும் பாசத்தில கண்ண மூடிக்கொண்டு இருப்பினம். நாங்களும் வாய மூடிக்கொண்டிருந்தா எல்லாரின்ர நிம்மதியும் சந்தோசமும் போயிடும். அதால அவளைப் பற்றி நான் இவரோட கதைக்கப் போறன்.” ஒரு முடிவுடன் சொல்லிவிட்டு, அவர்கள் அருந்தி முடித்த கோப்பைகளை எடுத்துக்கொண்டு சமையலறைக்கு நடந்தாள்.

அவள் சொல்வது போல் ஆதினி கொஞ்சம் பொறுப்பாக மாறினால் அவனுக்கும் ஒரு பிடிப்பு வருமோ என்று தோன்றிற்று. இது வரையில் அப்படி எதுவும் அவனுக்குள் நிகழவில்லையே! ஒரு நெடிய மூச்சு ஒன்று அவனிடமிருந்து வெளியேறியது.

இதையெல்லாம் அவர்கள் அறியாமல், அவர்கள் வீட்டு வாசலில் நின்று கேட்டுவிட்ட ஆதினி, சுக்குநூறாக நொருங்கிப் போனாள். ஆத்திரமா அழுகையா என்று தெரியவில்லை, தொண்டையை அடைத்துக்கொண்டு வந்தது. தன்னைச் சமாளித்துக்கொண்டு வந்தது போலவே சத்தமில்லாமல் வெளியேறினாள்.

இத்தனை நாள்களும் அன்றைய எல்லாளனின் கடுமையில் மொத்தமாக வாடிப்போயிருந்தாள். வெளியில் செல்லாமல் நண்பர்களோடு நேரம் செலவழிக்கவும் பிடிக்காமல் வீட்டுக்குள்ளேயே அடைந்து கிடந்தாள். காண்டீபன் அழைத்தானே போவோமா என்று நினைத்தாலும் மனம் வரமாட்டேன் என்றது.

இப்படி, தன் இயல்பைத் தொலைத்து, தனக்குள்ளேயே வைத்து மருகும் அவளை அவளுக்கே பிடிக்கவில்லை. சும்மா இருந்தவளிடம் உன் எதிர்காலம் அவன்தான் என்று சொல்லி, அவள் மனத்தை அவன் புறமாகப் படர வைத்த தந்தை மீது கோபம் வந்தது.

இல்லையானால் இந்த வலியெல்லாம் அவளுக்கு வந்திராதே. எப்போதும் போல, அவனையும் அவன் செயலையும் தூக்கி எறிந்துவிட்டுப் போயிருப்பாளே.

இப்படித் தனக்குள்ளேயே குமைந்துகொண்டு இருக்கையில்தான், வீட்டுத் தொலைபேசிக்கு அழைத்து, இன்றைக்கு மோதிரம் வாங்கச் செல்வதற்குத் தயாராக இருக்கும்படி அகரன் சொன்னான்.

அப்போதுதான் அவள் கைப்பேசி இன்னும் எல்லாளனிடமே இருப்பது நினைவிற்கு வந்தது. அது அவளின் கோபத்தை இன்னுமே விசிறிவிட, அன்றைக்கு அவன் நடந்து கொண்டதற்கும் சேர்த்து இன்றைக்குக் கொடுத்துவிட்டு வருகிறேன் என்றுதான் புறப்பட்டு வந்திருந்தாள்.

வந்தவளுக்குக் கிடைத்ததோ மிகப் பெரிய அடி!

அவளின் கெட்ட நேரமா, அல்லது, அவர்களின் கெட்ட நேரமா ஸ்கூட்டியை வெளியே நிறுத்தியதில், அவள் வந்ததை அவர்களும் அறியாமல் போயிருந்தார்கள்.

விருப்பம் இல்லை என்றால் மறுத்திருக்கலாமே. அதை விட்டுவிட்டு என்னென்ன வார்த்தைப் பிரயோகங்கள்? போதாக்குறைக்கு அவளைப் பற்றி அவள் தமையனிடம் பேசப் போகிறாளாம்!

நன்றாகப் பேசட்டும்! பேசிவிட்டு வாங்கிக் கட்டட்டும்! மனம் கருவிக்கொண்டது. அவளின் அண்ணா அவளை எங்கும் விட்டுக்கொடுக்கமாட்டானே!

வந்தது போலவே திரும்பிவிட்டவளுக்கு ஸ்கூட்டியை செலுத்தவே முடியவில்லை. எப்படி வீடு வந்து சேர்ந்தாள் என்றும் தெரியாது.

இனி அவனிடம் இருக்கும் கைப்பேசியை தொடவே கூடாது என்கிற வைராக்கியத்தோடு, வருகிற வழியில் கடைக்குச் சென்று, புது ஃபோனும் சிம்மும் வாங்கிக்கொண்டாள். தந்தை, அவள் பெயரில் வங்கியில் வைப்புச் செய்திருந்த பணமும், எப்போதும் கூடவே இருக்கும் வங்கி அட்டையும் அதற்கு உதவிற்று.

சற்று நேரத்தில் அவர்களும் வருவார்கள் என்று தெரியுமாதலால், ஸ்கூட்டியை கொண்டுவந்து வீட்டின் பின்னால் நிறுத்திவிட்டு அறைக்கு வந்து சேர்ந்தாள். அதற்காகவே காத்திருந்தது போன்று அவ்வளவு நேரமாக அடக்கி வைத்திருந்த கண்ணீர் கரையுடைத்துக்கொண்டு வழிந்தது.

சற்று நேரத்தில் கீழே அகரன் வந்துவிட்ட அரவம் கேட்டது. கூடவே அவர்களும். அவள் இருக்கிற மனநிலைக்கு யாரையும் எதிர்கொள்ள விருப்பமில்லை. அதுவும், தமையனின் முகத்தைப் பார்த்தாலே உடைந்துவிடுவாள்.

அதைவிட, இனியும் அவர்களோடு சென்று, நிச்சய மோதிரம் எடுக்கத்தான் வேண்டுமா என்கிற கேள்வியும் வந்து நின்றது.

‘அண்ணா சொறி, எனக்கு வரேலாமப் போயிற்று. நீங்க மட்டும் போயிற்று வாங்கோ.’ வாங்கிய புதுக் கைப்பேசியிலிருந்து குறுஞ்செய்தி ஒன்றை அனுப்பிவிட்டு, வேகமாக மொட்டை மாடிக்குச் சென்று நின்றுகொண்டாள்.

மனம் மட்டும் சற்று முன் கேட்டவற்றை ஜீரணித்துக்கொள்ள முடியாமல் துடித்துக்கொண்டிருந்தது.
 

Goms

Active member
எல்லாளா, என்னடா இப்படி இருக்க? வாழ்க்கை வேறு, வழக்கு வேறு. பாரு துரு துருன்னு ஓடி ஆடின பொண்ணு இப்படி துவண்டுப் போச்சு🥺
 

Google Typing

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.

Top Bottom