• நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.
    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

நீ தந்த கனவு - 11

நிதனிபிரபு

Administrator
Staff member
அத்தியாயம் 11

வவுனியாவிலிருந்து வந்த களைப்புப் போகக் குளித்துவிட்டு வந்த அகரன், அப்போதுதான் கைப்பேசியைப் பார்த்தான், அகரன். புது இலக்கத்திலிருந்து வந்திருந்த ஆதினியின் குறுந்தகவலைக் கண்டுவிட்டு, “டேய்! நீ இன்னும் அவளின்ர ஃபோன குடுக்கேல்லையா?” என்றான் எல்லாளனிடம்.

“அவள் கேக்கேல்லை. அதால நானும் குடுக்கேல்லை.” என்றான் அவன்.

“அதுதான் போல, புது நம்பர்ல இருந்து மெசேஜ் அனுப்பி இருக்கிறாள். அவள் பிஸியாம். எங்களை மட்டும் போய் வாங்கட்டுமாம்.”

எல்லாளனின் புருவங்கள் சுருங்கிற்று. இது அவள் இல்லை! நேராக வந்து, அவனோடு சண்டை பிடித்து, ஃபோனை வாங்கிக்கொண்டு போயிருக்க வேண்டும். இல்லையோ, அவன் பறித்த அடுத்த நாளே புதுக் கைப்பேசி வாங்கியிருப்பாள். அதை விட்டுவிட்டு இப்போது ஏன்?

“இண்டைக்கு மோதிரம் வாங்கப் போறம் எண்டு அவளுக்கும் தெரியும்தானே? பிறகும் எங்க போனவளாம்? எங்க நிக்கிறாள் எண்டு எடுத்துக் கேள். அவளையும் கூட்டிக்கொண்டே போவம்.” என்றான்.

அகரனுக்கும் தங்கையை விட்டுவிட்டுப் போக மனமில்லை. அதில், அவளின் புது நம்பருக்கு அழைத்தான். மேலே மொட்டை மாடியில் தாங்கொணா பாரத்தை நெஞ்சில் சுமந்தபடி செய்வதறியாது தடுமாறி நின்றவளுக்குத் தமையனின் அழைப்பைக் கண்டதும் விழிகள் கலங்கிற்று.

அனைத்தையும் அவனிடம் சொல்லி அழ வேண்டும் போலிருந்தது. அப்படிச் சொல்லி, சியாமளாவிடம் அவன் கோபித்துக் கொண்டால் என்னாவது?

இதுவரையில் நினைத்ததைச் செய்து, எண்ணியதைப் பேசி, மனத்துக்குப் பிடித்தது போல் மட்டுமே வாழ்ந்து பழகியவன் அவள். அதில் இப்படிப் பெரும் துன்பம் ஒன்றை நெஞ்சுக்குள் பூட்டி வைப்பது இயலாததாக இருந்தது. இனி என்னாகும்? அவள் என்ன செய்ய வேண்டும்?

அப்பாவிடம் சொல்வதா? இல்லை, அண்ணாவிடம் பேசுவதா? அல்லது, அவள் மனத்துக்குள்ளேயே போட்டு மூடுவதா? அது, அவளால் முடியுமா? இந்த நிச்சயம் இனியும் வேண்டும்தானா?
இப்படி நிறைய யோசனைகளும் குழப்பங்களும் அவளுக்கு.

இதற்குள் மூன்று தடவைகள் விடாமல் அழைத்து ஓய்ந்திருந்தான் அகரன். “ஆள் உண்மையாவே பிஸி போல. நாங்க போவம்!” அவர்கள் இருவரையும் அழைத்துக்கொண்டு புறப்பட்டான்.

கடைகளுக்குப் போவது என்றாலே முதல் ஆளாக நிற்கிறவளின் இன்றைய செய்கை எல்லாளனை மீண்டும் குழப்பத்தில் ஆழ்த்திற்று. அகரனிடமிருந்து அவள் நம்பரை வாங்கி, அவர்கள் போகப்போகிற நகைக்கடையின் பெயரை எழுதி, ‘அங்கதான் நிப்பம். கட்டாயம் நீ வாறாய்! நீ வராம நான் மோதிரம் வாங்க மாட்டன்!’ என்று அனுப்பிவிட்டான்.

அவன் அனுப்பிய குறுந்தகவலைத் திறந்து பார்க்க வேண்டிய அவசியம் இல்லாமல் கைப்பேசித் திரையிலேயே அது தெரிந்தது. பிடிக்காத திருமணம். அதற்கு ஒரு நிச்சய மோதிரம். இதில் அவள் வராமல் அவன் எடுக்க மாட்டானாம். அவள் உதட்டோரம் கசப்புடன் வளைந்தது.

அகரனும் சியாமளாவும் அவர்களுக்குப் பிடித்த மாதிரி மோதிரம் எடுத்து முடித்ததும், “நான் இன்னொரு நாளைக்கு அவளைக் கூட்டிக்கொண்டு வந்து எடுக்கிறனடா.” என்றுவிட்டான் எல்லாளன்.

அதைத் தங்கையின் மீதான அன்பாக எடுத்துக்கொண்ட அகரனுக்கும் அதில் முழுமையான உடன்பாடே! அதில், தன் அன்பளிப்பாக நண்பனுக்கும் தங்கைக்கும் ஒவ்வொரு மோதிரங்களை அவன் வாங்கிக்கொண்டான்.

மூவருமாக வெளியே வந்தபோது, எல்லாளனுக்கு அழைப்பு வந்தது. அதை எடுத்துப் பேசிவிட்டு, “வேற ஏதும் வாங்கோணுமா?” என்றான் தங்கையிடம்.

“இல்ல அண்ணா. ஏதும் சாப்பிடுறது எண்டாச் சாப்பிட்டுட்டு இனி வீட்டுக்குத்தான்.”

“சரி, அப்ப நீங்க வெளிக்கிடுங்க. ஐங்கரன் டியூஷன் செண்டர்ல என்னவோ பிரச்சினையாம். என்ன எண்டு பாத்துக்கொண்டு வாறன்!” என்றபடி பைக்கில் ஏறி அமர்ந்தவன், “டேய், எங்கயும் மினக்கெடுறேல்ல. நேரா வீட்டுக்குத்தான் போகோணும் சொல்லிட்டன். இனி எங்க வெளில சுத்துறது எண்டாலும் கலியாணத்துக்குப் பிறகுதான்!” என்றான் கண்டிப்புடன்.

“எங்களுக்கும் எல்லாம் தெரியும். போடா நீ!” என்று அவனைத் துரத்திவிட்டு, சியாமளாவோடு புறப்பட்டான் அகரன்.

இருவரும் உணவகம் ஒன்ருக்குப் போனார்கள். அவனுடன் தனிமையில் பேச வேண்டும் என்று காத்திருந்த சியாமளா, இந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக்கொண்டாள்.

*****

வீட்டுக்குள்ளேயே அடைந்திருந்த ஆதினி, என்னவோ யாருமற்று நிற்பது போன்று உணர்ந்தாள். முதன் முதலாக அன்னையின் இழப்புப் பெரிதாகத் தெரிந்தது. சோர்ந்துபோய்க் கட்டிலில் விழுந்தவள்அழுததாலோ என்னவோ உறங்கிப்போனாள்.

இருள் கவ்வ ஆரம்பிக்கும் பொழுதில்தான் எழுந்தாள். வெளியே மழை சோ என்று கொட்டிக்கொண்டிருந்தது. முகம் கழுவிக்கொண்டு கீழே வந்தாள்.

அங்கே, அகரனோடு சியாமளாவும் இருந்தாள். அவளைக் கண்டதும் அடங்கிக் கிடந்த ஆத்திரம் நூறு மடங்காக வீறுகொண்டு எழுந்தது. இங்கே உன்னால் சுண்டு விரலைக் கூட அசைக்க முடியாது என்று காட்ட நினைத்தாள்.

விறுவிறுவென்று தமையனின் முன்னே வந்து நின்று, “அண்ணா, எனக்கு ஐஸ்கிரீம் வேணும்!” என்றாள் பிடிவாதக் குரலில்.
 

நிதனிபிரபு

Administrator
Staff member
“வெளில மழை பெய்யுது ஆதினி. இப்ப என்னத்துக்கு ஐஸ்கிரீம்? வவுனியாவில இருந்து வந்ததுக்கு அவர் இன்னும் ஆறி இருக்கவே இல்ல.” உண்மையிலேயே அவன் மீது அக்கறை கொண்டு சொன்னாள் சியாமளா.

இவ்வளவு நேரமாக வெளியில் சுற்றுகையில் வராத அக்கறை இப்போது வந்துவிட்டதா என்கிற கொதிப்புடன், “நான் ஒண்டும் அண்ணாவை ஐஸ்கிரீம் செய்யச் சொல்லேல்ல. வாங்கிக்கொண்டு வரத்தான் சொல்லுறன். மழை எண்டா கார்ல போகலாம்.” என்று வெடுக்கென்று பதிலிறுத்துவிட்டு, “அண்ணா! சொன்னது கேக்கேல்லையா? எனக்கு இப்ப ஐஸ்கிரீம் வேணும்!” என்றாள் மீண்டும் அடமாக.

அவள் பேசிய விதம் ஒருவிதமாக முகத்தைச் சிறுக்கச் செய்தாலும், “எப்பிடியும் வீட்டில ஏதாவது ஐஸ் இருக்கும்தானே? இண்டைக்கு அதைச் சாப்பிடு. நாளைக்கு வேணுமெண்டால் வாங்கலாம்.” என்றாள் சியாமளா.

அதோடு ஆதினியின் பொறுமை பறந்து போனது. “ஹல்லோ என்ன? என்ர அண்ணாக்கு நீங்க வாயா? எனக்குக் கத சொல்லுறத விட்டுட்டு, நானும் அண்ணாவும் கதைக்கேக்க நடுவுக்க வாற பழக்கத்தை நீங்க முதல் நிப்பாட்டுங்க! விளங்கினதா?” என்றாள் பட்டென்று.

அப்படித் தன்னிடம் சீறுவாள் என்று எதிர்பாராத சியாமளாவின் முகம் கறுத்துப் போனது. கண்களும் கலங்கிவிட அமைதியாகவே இருக்கும் அகரனைப் பார்த்தாள்.

ஆதினிக்கும் தமையனிடம் தனக்குள்ள உரிமையை நிலை நாட்டியே ஆக வேண்டும் என்கிற பிடிவாதம் வலுத்தது. அதில், “எழும்பு அண்ணா! எனக்கு இப்ப, ‘மேக்னம் டபிள் கரமல்’ வேணும். அது வீட்டில இல்ல. போய் வாங்கிக்கொண்டு வா!” என்று அவன் கையைப் பிடித்து இழுத்தாள்.

அவன் அசையவில்லை. மாறாக, “ப்ச்! கைய விடு ஆதினி!” என்றான் முகத்தில் ஒருவிதச் சுளிப்புடன்.

ஆதினியின் உள்ளத்தில் பெரும் கலவரம். சியாமளாவிடம் தோற்று விடுவோமோ என்று பதறினாள். இல்லை! கூடாது! உடலும் உள்ளமும் கோபத்தில் நடுங்க, “இப்ப நீ கடைக்குப் போகப் போறியா இல்லையா? அவா வேண்டாம் எண்டு சொல்லுறா, நீயும் அசையாம இருக்கிறாய். இன்னும் கலியாணமே நடக்கேல்ல. அதுக்கிடைல அவவின்ர பேச்சுக்குத் தலையாட்ட வெளிக்கிட்டிட்டியோ?” என்று ஆங்காரமாக அவள் கேட்டு முடிக்க முதலே அவள் கன்னத்தில் பளார் என்று இறங்கியது, அகரனின் கரம்.

அப்படியே சுழன்று சோஃபாவில் விழுந்தாள் ஆதினி. கண்களில் பொறி பறந்தது. என்ன நடந்தது என்று புரிந்துகொள்வதற்கே அவளுக்குக் கொஞ்ச நேரம் எடுத்தது. அத்தனையும் இருட்டாகிவிட்ட உணர்வு. விழிகளை மூடி மூடித் திறந்தாள்.


அப்போதுதான் கன்னம் எரிவதே தெரிந்தது. அழக்கூட மறந்தவளாக, நம்ப முடியாத அதிர்ச்சியோடு தமையனைப் பார்த்தாள்.


“ஆரப் பாத்து என்ன கதைக்கிறாய்? அவள் உனக்கு அண்ணி. அப்பிடி அவளின்ர சொல்ல நான் கேட்டாத்தான் என்ன?” முகத்துக்கு நேரே வந்து சீறியவனின் சீற்றத்தில் ஆதினியின் தேகம் ஒரு முறை அதிர்ந்து அடங்கியது.

சொன்னதைச் செய்து விட்டாளே! அவன் அறைந்ததை விடவும் அதுதான் இன்னும் வலித்தது.

கண் முன்னே நிற்பவன் அவள் தமையன் அல்லன்! இவன் சியாமளாவின் வருங்காலக் கணவன். அவன் அறைந்ததை விடவும் அந்த உண்மைதான் அதிகமாகச் சுட்டது. தரையில் விழுந்து கிடந்தவளுக்கு எழுந்துகொள்ள வேண்டும் என்கிற உணர்வு கூட இல்லை.

இதை மருந்துக்கும் எதிர்பாராத சியாமளா ஓடி வந்து தடுப்பதற்குள் எல்லாம் நடந்து முடிந்திருந்தது. ஹோட்டலில் வைத்து ஆதினியைப் பற்றி அவள் பேசியதிலிருந்து அவன் மனநிலை சரியில்லை என்று தெரியும்தான். ஆனால், அடிக்குமளவிற்குப் போவான் என்று நினைக்கவேயில்லை.

“என்ன அகரன் நீங்க?” என்றபடி ஆதினியைத் தூக்கிவிட ஓடிப்போனாள்.

அப்போது தான் நடந்ததையே உணர்ந்தான் அகரன். உணர்ந்த கணம் திகைத்துப்போனான். “டேய் ஆதிக்குட்டி, அது அண்ணா என்னவோ கோவத்தில...” வேகமாக அவளை நெருங்கியவனிடமிருந்து அவனை விடவும் வேகமாக விலகி நின்றாள் ஆதினி.

அறை விழுந்த வேகத்தில் சேர்ந்துவிட்ட கண்ணீர் கண்களிலிருந்து வழிந்தது. ஆனாலும் அவள் அழவில்லை. என்னவோ அனைத்துமே சிதறு தேங்காயாகச் சிதறிப் போனது போலொரு உணர்வு! கண்களை அழுத்தித் துடைத்துக்கொண்டு எழுந்து நின்றாள்.

“உன்னட்டச் சொல்லி எனக்குப் பாடம் படிப்பிக்கிறன் எண்டு இவா இவவின்ர அண்ணாட்டச் சொன்னவா. நான் அதப் பெருசா எடுக்கவே இல்ல. அண்ணாட்டச் சொல்லுவியா, சொல்லிப்போட்டு நல்லா வாங்கிக்கட்டு எண்டுதான் நினைச்சனான். என்ர அண்ணா எங்கயும் என்னை விட்டுக் குடுக்க மாட்டான் எண்டு அவ்வளவு நம்பிக்கை. ஆனா நீ?” என்றவளின் முகத்தில் தன் நம்பிக்கை பரிதாபமாகத் தோற்றுப்போன வலியின் சாயல்.

“இல்ல. நீ என்ர அண்ணா இல்ல! நீ என்ர அண்ணாவே இல்ல!” என்றாள் விழிகளில் நீர் சேர!

துடித்துப்போனான் தமையன். இதெல்லாம் அவனுக்குத் தெரியாதே! அண்ணியின் இடத்துக்கு வரப்போகிறவள் தங்கையின் நல்லதற்குத்தான் சொல்கிறாள் என்று நம்பினானே! எல்லாமே அவளின் சதியா? பக்கத்தில் நின்றவளைத் திரும்பிப் பார்த்தவனின் விழிகள் வெறுப்பை உமிழ்ந்தன.

சியாமளாவுக்கு நெஞ்செல்லாம் நடுங்கியது. அவளும் தமையனும் கதைத்ததை ஆதினி கேட்டிருக்கிறாள் என்பதே பெரும் அதிர்ச்சி. சரியாக அந்த நேரம் பார்த்து இளந்திரையனும் வீட்டுக்குள் வர, அவளுக்குப் பதறியது.

வீட்டு நிலவரம் சரியில்லை என்பதை ஒற்றைப் பார்வையில் கண்டுகொண்டார் இளந்திரையன். அதுவும் மகளின் கோலம் என்னாயிற்றோ என்கிற பதட்டத்தை உண்டாக்க, “என்னம்மா? என்ன தம்பி பிரச்சினை?” என்றார் ஒன்றும் விளங்காமல்.

ஆதினியின் கோபம் அப்படியே அவர் புறம் திரும்பிற்று. “எல்லாமே உங்களாலதான் அப்பா!” என்றாள் ஆத்திரத்துடன்.

ஒன்றும் விளங்காமல் திகைத்து நின்றார் அவர்.

“ஏனப்பா, உங்களுக்கு நான் சுமையாப் போயிட்டனா? நான் அடங்காப்பிடாரியாம். அகங்காரம் பிடிச்சவளாம். என்னை எவனும் கட்டி வாழமாட்டானாம் எண்டு சொல்லுறா இவா. அப்பிடித்தான் நீங்களும் நினைக்கிறீங்களா? அதுதான் கழுத்தில கத்திய வைக்கிற மாதிரி அவரின்ர தங்கச்சின்ர வாழ்க்கையைக் காட்டி, என்னக் கட்டிக் குடுக்க நினைச்சனீங்களா? ஏனப்பா ஏன் இப்பிடிச் செய்தனீங்க? ஏன் என்னைக் கேவலப்படுத்தினனீங்க?”

தான் பெற்ற பெண்ணரசியின் கோபத்தைக் கண்டு அதிர்ந்துபோனார் இளந்திரையன். நடந்தவை தெரியாத போதும் ஊகிக்க முடிந்தது. மனம் கலங்க, “நான் எல்லாளனிட்ட கேட்டனான்மா. அவர் ஓம் எண்டு...” என்றவரைப் பேசவிடாமல், “என்னெண்டு கேட்டிங்க?” என்று வெடித்தாள் அவள்.

“என்ர மகளை உனக்குப் பிடிச்சிருக்கா எண்டு கேட்டீங்களா? இல்ல, என்ர மகளைக் கட்டினாத்தான் உன்ர தங்கச்சிய மருமகளா ஏற்பன் எண்டு சொல்லிக் கேட்டீங்களா? எப்பிடிக் கேட்டீங்க?”

மறைமுகமாக அவளை மணக்கும் நிலையில் அவனை அவர் நிறுத்தியது உண்மைதான். ஆனால், அதன் பின்னே மறைந்திருந்தது, நல்லவன் ஒருவனைத் தன் செல்லப் பெண்ணுக்குத் துணைவனாக்கிவிடும் வேகம் மட்டும்தானே!

“என்ன இருந்தாலும் இந்தச் சியாமளா குடுத்து வச்சவா. அவவின்ர சந்தோசத்துக்காகத் தன்ர வாழ்க்கையையே பலிக்கடாவாக்கிற அண்ணா, அவா ஒரு வார்த்த சொன்னதும் தங்கச்சியையே அடிக்கிற அளவுக்குப் பாசமான காதலன், மகள் மாதிரிப் பாக்கிற மாமா எண்டு அவாவச் சுத்தி இருக்கிறது முழுக்க அவாவத் தாங்கிற மனுசர். ஆனா நான்? இந்த வீட்டின்ர இளவரசி எண்டு சொல்லிச் சொல்லியே வேலைக்காரிய விட மோசமான நிலைல கொண்டுவந்து விட்டுட்டீங்க எல்லாரும். அம்மா இல்லாமப் போயிட்டா. அதுதானே எல்லாரும் என்னைப் போட்டு இந்தப் பாடு படுத்துறீங்க?” என்றவளின் பேச்சில் முற்றிலுமாக உடைந்துபோனார் இளந்திரையன்.

“என்ர பிள்ளைக்கு என்னடா செய்தனி?” தாங்க முடியாமல் மகனிடம் சீறினார்.

கலங்கிப்போன அகரன் மிடறு விழுங்கினான். “அப்பா... கோவத்தில அவசரப்பட்டு...” என்றவனைப் பேசவிடாமல் சியாமளாவின் முன்னே வந்து நின்றாள் ஆதினி.

“என்ன சொன்னனீங்க? என்னைக் கட்டி எவனும் வாழமாட்டானா? இப்ப நான் சொல்லுறன் உங்களுக்கு. அண்ணன் தங்கச்சிக்க சண்டையை மூட்டிவிட்டு, சந்தோசப்படுற உங்கள மாதிரிக் கேவலமான ஒருத்தின்ர அண்ணாவைக் கட்ட எனக்கு விருப்பம் இல்ல! நான் இந்த வீட்டின்ர இளவரசி. நீதிபதி இளந்திரையன்ர ஒரே மகள். என்னைக் கட்டுறதுக்கு உங்கட அண்ணாக்குத்தான் தகுதி இல்ல. நீங்க என்ன என்னை வேண்டாம் எண்டு சொல்லுறது? நான் சொல்லுறன், எனக்கு வேண்டாம் அவன். அவனுக்கு உங்கள மாதிரிக் குடும்பத்துக்க சண்டையை மூட்டி விடுற ஒருத்தியப் பாத்துக் கட்டி வைங்க. அதுதான் அவனுக்கும் பொருந்தும். உங்கட குடும்பத்துக்கும் பொருந்தும்!” என்றாள் ஆத்திரமும் ஆவேசமுமாக.

அவமானத்தில் முகம் கன்றிச் சிவந்துவிட, தலையை நிமிர்த்தும் தைரியமற்று நின்றிருந்தாள் சியாமளா.
 

Goms

Active member
கடவுளே .... சியாமளா இது உனக்குத் தேவையா??🤔
 
Top Bottom